Samacheer NotesTnpsc

சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் Notes 8th Social Science Lesson 17 Notes in Tamil

8th Social Science Lesson 17 Notes in Tamil

17. சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

  • நமது நாகரிகம் முழுவதும் வேகத்தினையும் இணைப்பினையும் தரக்கூடிய பிரம்மாண்டமான கட்டமைப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது.
  • மனிதனின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் சாலையும் ஒன்று.
  • இன்றைய உலகத்தில் போக்குவரத்தானது ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாத ஒரு அங்கமாக உள்ளது. சாலைகள் தூரத்தைக் குறைக்கின்றன.
  • ஆனால் அதே வேளையில் சாலை விபத்துக்களால் லட்சக்கணக்கான மக்கள் காயமடைவதுடன் அதிக உயிர் இழப்புகளையும் ஏற்படுத்துகின்றன.
  • சாலைப் பாதுகாப்பு என்பது முதன்மையாக சாலையில் பயணிக்கும் அனைவரின் பாதுகாப்பையும் பாதுகாப்பு வழங்குவதையும் முதன்மையாகக் குறிக்கிறது.

சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம்

  • ஒவ்வொரு நாளும், சாலையில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் அடிக்கடி நிகழும் அசம்பாவிதங்கள் பற்றி தினமும் செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன.
  • சாலை விபத்துக்கள் படுகாயங்களுக்கும் இறப்பிற்கும் வழிவகுக்கும் வருந்தத்தக்க நிகழ்வுகளை ஏற்படுத்துகின்றன.
  • இந்த இறப்புகள் மற்றும் படுகாயங்கள் குறிப்பிடத்தக்க சமூக மற்றும் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்துகின்றன.
  • பிரச்சனை சாலைகளால் அல்ல. அது நம் கவனக்குறைவால் தான். அதனால் தான் இதுபோன்ற விபரீதம் ஏற்படுகின்றது.
  • உயிரிழப்பால் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடுகிறது. இப்பிரச்சனைக்கு காரணம் மெதுவாக நகரும் வாகனங்கள் மற்றும் அதிவேக வாகனங்களை கொண்ட பலவகைப்பட்ட சிக்கலான போக்குவரத்து ஆகும்.

விபத்துகளின் நேரடி விளைவுகள்:

உயிரிழப்பு, படுகாயம், உடமைகளுக்கு சேதம் ஆகியனவாகும்.

சாலை விபத்துகளுக்கான காரணங்கள்

அதிக வேகம் – அதிக வேகம் அதிக ஆபத்து. பெரும்பாலான உயிரிழப்பு விபத்துக்கள் அதிக வேகத்தினால் தான் ஏற்படுகின்றது. வேகத்தின் அதிகரிப்பானது விபத்து மற்றும் விபத்தினால் ஏற்படும் காயத்தின் தீவிரத்தினை அதிகரிக்கிறது. ஒரு வாகனத்தின் பின்னால் மிக நெருக்கமாக பின்தொடர்தல் (Tailgating) என்பது சட்டவிரோதம் மற்றும் ஆபத்தான பழக்கமும் ஆகும்.

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல் – மது அருந்துவது கவனத்தைக் குறைக்கும். அதன் காரணமாக வரும் மயக்கத்தினால் பார்வை தடைபடுகின்றது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் போது விபத்துக்கள் ஏற்படுகிறது. மது அருந்தியதை கண்டறிய சீரற்ற சுவச பரிசோதனை (Random breath test) செய்யப்படுகிறது.

வாகன ஓட்டிகளின் கவனச் சிதறல் – கவனச் சிதறல் என்பது வாகனத்தின் வெளியிலிருந்தோ உள்ளிருந்தோ ஏற்படக்கூடும். வாகனம் ஓட்டும் போது செல்லிடப்பேசியில் பேசுவது பெரிய கவனச்சிதறலாக இந்நாட்களில் உள்ளது.

செல்லிடப்பேசியில் பேசும் செயலே மனித மூளையின் செயல்பாட்டின் பெரும் பகுதியை ஆக்கிரமிக்கிறது. சிறு பகுதி மட்டுமே வாகனம் செலுத்தும் செயலினை கையாளுகிறது. கவனக் குறைவு, வேறொன்றை சிந்திப்பது (பகல்கனவு) வாகனம் ஓட்டும்போது கண்ணாடியை சரிசெய்தல், வாகனத்தில் உள்ள ஒலி சாதனம், சாலையில் நடமாடும் விலங்குகள், பதாகைகள் மற்றும் விளம்பர பலகைகள் ஆகியவை கவனச் சிதறல்களுக்கான வேறு சில காரணங்கள் ஆகும்.

சிவப்பு விளக்கில் நில்லாமை – சிவப்பு விளக்கில் நிற்காமல் செல்வதன் முக்கிய நோக்கம் நேரத்தை மிச்சப்படுத்த நினைப்பதே ஆகும். போக்குவரத்து சமிக்ஞைகளை (சைகை) முறையாக கடைபிடிக்கும் போது நேரம் சேமிக்கப்படுவதாகவும் பயணிகள் தாங்கள் சேர வேண்டிய இடத்தை பாதுகாப்புடனும் உரியநேரத்தில் சென்றடைவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்புக் கருவிகளை தவிர்த்தல் – நான்கு சக்கர வாகனங்களில் இருக்கைப் பட்டை (seat belt) அணிவதும் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் (helmets) அணிவதும் சட்டமாக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டும் விபத்துக்களின் போது ஏற்படும் காயங்களின் தீவிரத்தை குறைக்கின்றன.

பல்வேறு காரணிகள்

அ. ஓட்டுநர்கள் – அதிக வேகத்தில் செலுத்துதல், கண்மூடித்தனமாக ஓட்டுதல், விதிகளை மீறுதல், குறியீடுகளை புரிந்து கொள்ள தவறுதல், களைப்பு, சோர்வு மற்றும் மது அருந்துதல் போன்றவை.

ஆ. பாதசாரிகள் – கவனமின்மை, கல்வியறிவின்மை, தவறான இடங்களில் சாலையைக் கடப்பது, சாலையில் நடப்பது மற்றும் போக்குவரத்து விதிகளை கவனிக்காமல் சாலையின் குறுக்காக செல்பவர்.

இ. பயணிகள் – வாகனத்திற்கு வெளியே உடலின் பகுதிகளை நீட்டுவது, ஓட்டுநர்களுடன் பேசுவது, படிக்கட்டுகளில் பயணம் செய்வது, ஓடும் பேருந்தில் ஏறுவது போன்றவை.

ஈ. வாகனங்கள் – தடுத்து நிறுத்தும் கருவி (brake) மற்றும் வாகனத் திசை திருப்பி (Steering) பழுதடைவது, சக்கரத்தில் உள்ள டயர் (ரப்பர்) வெடித்தல், போதுமான வெளிச்சம் தராத முகப்பு விளக்குகள், அதிகப்படியான மற்றும் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும்படி சுமை ஏற்றுதல்.

உ. சாலைகளின் தரம் – பழுதடைந்த சாலைகள், குழிகளான சாலைகள், நெடுஞ்சாலைகளை இணைக்கும் அரிக்கப்பட்ட ஊரகச்சாலைகள், சட்டத்திற்கு புறம்பான வேகத்தடைகள் மற்றும் திருப்பங்கள்.

ஊ. வானிலை – மூடுபனி, பனி, கனமழை, காற்று, புயல் மற்றும் ஆலங்கட்டி மழை.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

  • எப்பொழுதும் இடதுபுறமாகவே செல்வது:

வாகனம் ஓட்டும் போது சாலையின் இடப்பக்கமாக செல்வதுடன் எதிர் திசையில் வரும் வாகனங்களுக்கு வழிவிடுதல் வேண்டும்.

  • வளைவுகளிலும் திருப்பங்களிலும் வேகம் குறைத்தல்:

வளைவுகளில் கவனமாகவும் மெதுவாகவும் செல்வது நினைவில் கொள்ளவேண்டிய மிக முக்கியமான ஒன்றாகும்.

  • தலைக்கவசம் அணிவது: இரு சக்கர வண்டியில் ஏறுவதற்கு முன் தலைக்கவசம் அணிவதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
  • வேகவரம்பை ஒருபோது மீறக்கூடாது:

வேகத்திற்கான வரம்பு அப்பகுதியின் போக்குவரத்து நிலையுடன் தொடர்புடையது. எனவே குறிப்பிடப்பட்டுள்ள வேகவரம்பின் படியே செல்ல வேண்டும்.

  • சரியான இடைவெளிவிட்டு பின் தொடரவும்:

முன் செல்லும் வாகனத்திலிருந்து போதுமான இடைவெளியை நாம் கடைபிடிக்காததால் மோதல்கள் ஏற்படுகின்றன. எனவே கனரக வாகனங்களிலிருந்து ஒரு பாதுகாப்பான இடைவெளியை விட்டு பின் செல்ல வேண்டும். பின்புறம் நோக்கு கண்ணாடியில் தெரியாத இடமான பார்வை மறைவு இடத்தில் (blind spot) இருந்து விலகி இருக்கவும்.

  • நெடுஞ்சாலைகளில் சாலையின் ஓரமாக வாகனங்கள் நிறுத்துவதைத் தவிர்த்து வாகனம் நிறுத்துவதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். பழுதுகளை சரிசெய்யும் போது வாகனங்களின் நிறுத்த விளக்குகளையும் முக்கோண எச்சரிக்கை பலகைகளையும் பயன்படுத்த வேண்டும்.
  • சாலை குறியீடுகளைப் பின்பற்றுதல்:

சாலை குறியீடுகள் பெரும்பாலும் படங்களாக இருப்பதால் புரிந்து கொள்வது கடினம் அல்ல.

  • இதர பாதுகாப்பு குறிப்புகள்:

மது அருந்திவிட்டு ஒருபோதும் வாகனம் ஓட்டுதல் கூடாது. வாகனம் ஓட்டும் பொழுது ஒருபோதும் செல்லிடப்பேசியைப் பயன்படுத்தக் கூடாது. அதிக சத்தம் நிறைந்த இசைனைக் கேட்பதை தவிர்க்கவும், சாலையில் பாதை தடத்தை (Lane) மாற்றுவதற்கு முன்பு கண்ணாடி வழியே பின்னால் ஏதேனும் வாகனங்கள் வருகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். வாகனம் ஓட்டும்போது எப்போதும் அமைதியாக இருக்க வேண்டும். பாதசாரிகளையும் பிற ஓட்டுனர்களையும் திட்டுதல் அல்லது சத்தமிடுதல் கூடாது.

  • பாதசாரிகளுக்காக: பாதசாரிகள் கடக்கும் பாதையில் (வரிக்கோடு) மட்டுமே சாலையை கடக்க வேண்டும். போக்குவரத்து சமிக்ஞைகளில் செலவிடும் இரண்டு நிமிட நேரம் உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் மதிப்புள்ளதாகும். சிவப்பு மற்றும் மஞ்சள் விளக்கு ஒளிரும்போது சாலையைக் கடக்கக்கூடாது. சாலையின் நடுவில் நடப்பதைத் தவிர்த்து சாலையின் ஓரத்தில் நடக்கவும்.

மத்தியில் உள்ள இடைவிடப்பட்ட வெள்ளைக் கோடு :

இது சாலையின் அடிப்படைக் குறியீடு ஆகும். இக்குறியீடு உள்ள இடத்தில் சாலையில் தடம் (Lane) மாறலாம், வாகனங்களை முந்தி செல்லலாம் அல்லது பாதுகாப்பாக இருக்கும் பட்சத்தில் U- திருப்பத்தில் திரும்பலாம்.

தொடர்ச்சியான வெள்ளைக்கோடு:

இவை முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் காணப்படும். வாகனங்களை முந்தவோ, தடம் மாறவோ, அனுமதியில்லை என்பதை குறிக்கின்றது. இடதுபுறம் மட்டுமே வாகனங்கள் தொடர்ந்து செல்ல வேண்டும்.

தொடர்ச்சியான ஒரு மஞ்சள் கோடு:

வெளிச்சம் (visibility) குறைவான பகுதிகளில் உள்ள சாலைகளில் பயன்படுத்தப்படுகின்றது. வாகனங்களை முந்திச் செல்லலாம் மற்றும் இடதுபுறம் மட்டுமே வாகனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

இரண்டு தொடர்ச்சியான மஞ்சள் கோடுகள்:

ஆபத்தான மற்றும் இருவழி போக்குவரத்து உள்ள சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது தடம் மாறுவதை கண்டிப்பாக தடைசெய்கிறது. மேலும் நாம் நமது தடத்திற்குள்ளாக வாகனங்களை முந்திச் செல்லலாம்.

நிறுத்தக் கோடு:

பாதசாரிகள் கடக்கும் கோட்டிற்கு முன்பாக குறியிடப்பட்டிருக்கும். அவை போக்குவரத்து சமிக்ஞைகளில் வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டிய பகுதியைக் குறிக்கின்றது.

தொடர்ச்சியான மற்றும் இடைவிடப்பட்ட கோடுகள்:

இடைவிடப்பட்ட கோட்டின் பக்கமாக ஓட்டும்போது பிற வாகனங்களை முந்திச்செல்லலாம். ஆனால் தொடர்ச்சியான கோட்டின் பக்கமாக செல்லும் போது பிற வாகனங்களை முந்திச்செல்லக் கூடாது.

108 அவசரகால சேவை:

இது ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவம் (மருத்துவ ஊர்தி), காவல் மற்றும் தீயணைப்பு சேவைகள் ஆகியவற்றை அளிக்கும் ஒரு அவசரகால சேவையாகும். சாலையில் யாரேனும் பாதிக்கப்பட்டதைக் கண்டால் பதற்றப்படவேண்டாம். உதவிக்கு 108 என்ற எண்ணினையும் சாலை விபத்துகளுக்கு 103 என்ற எண்ணினையும் அழைக்கவும்.

கட்டாயக் குறியீடுகள்

போக்குவரத்து குறியீடுகளின் முதல் வகை கட்டாயக் குறியீடுகள் ஆகும். கட்டாய குறியீடுகளை மீறுவது சாலை மற்றும் போக்குவரத்து துறையினால் சட்டப்படி தண்டிக்கப்பட கூடிய குற்றமாகும்.

எச்சரிக்கை குறியீடுகள்

சாலை வழி மற்றும் போக்குவரத்து துறையால் மொத்தம் 40 போக்குவரத்து எச்சரிக்கை குறியீடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. எச்சரிக்கை குறியீடுகளின் முக்கியப் செயல்பாடு சூழ்நிலைக்கேற்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாகும்.

தகவல் குறியீடுகள்

இக்குறியீடுகள் தகவல் பலகைகள் வழியாக ஓட்டுநர்களுக்கு தகவல் அளிக்கின்றன.

போக்குவரத்து குறியீடுகள்

  • போக்குவரத்து குறியீடுகள் போக்குவரத்தினை முறைப்படுத்தவும் ஆபத்துக்களை எச்சரிக்கை செய்யவும் வழிகாட்டுவதற்கும் சாலையை உபயோகிப்பவர்களுக்காக வைக்கப்பட்டிருக்கின்றன.
  • போக்குவரத்து குறியீடுகள் பற்றி புரிந்து கொள்வதும் அதைப்பற்றிய முறையான அறிவும் அவசியம்.
  • ஓட்டுநர் உரிமம் பெற விரும்பும் ஒருவர் போக்குவரத்து குறியீடுகள் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டியதை அரசி கட்டாயமாக்கியுள்ளது.
  • போக்குவரத்து குறியீடுகள் வாகனத்தில் உள்ள ஓட்டுநர், பயணிகளுக்கு சாலையில் ஏற்படும் விரும்பத்தகாத ஆபத்துக்களை தடுக்கின்றது.

மூன்று வகையான போக்குவரத்து குறியீடுகள் உள்ளன.

கட்டாயக் குறியீடுகள்:

கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிடும் குறியீடுகள் ஆகும். அவை பொதுவாக வட்ட வடிவில் இருக்கும்.

எச்சரிக்கை குறியீடுகள்:

சாலையை பயன்படுத்துவோருக்கு எதிர்வரும் சாலையின் நிலை குறித்து எச்சரிக்கின்றன. அவை பொதுவாக முக்கோண வடிவில் இருக்கும்.

தகவல் குறியீடுகள்:

திசைகள், இலக்குகள் பற்றிய தகவல்களை அளிக்கின்றன. அவை பொதுவாக செவ்வக வடிவில் இருக்கும்.

போக்குவரத்து சமிக்ஞைகள்

போக்குவரத்து விளக்குகள் என்பது ஒரு சமிக்ஞை கருவி ஆகும். இது சாலைகள் சந்திக்கும் இடங்களிலும் பாதசாரிகள் சாலையைக் கடக்கும் இடங்களிலும் அமைக்கப்பட்டிருக்கும். அவை உலகளாவிய நிறக் குறியீடுகளை பயன்படுத்துவதன் மூலம் பாதுகாப்பாக எப்போது நடக்கலாம், வாகனங்களைச் செலுத்தலாம் என்பதைக் குறிப்பிடுகின்றன.

சிவப்பு: இந்த சமிக்ஞை நிறுத்தக் கோட்டிற்கு பின்னால் வாகனங்களை நிறுத்தவேண்டும் என்பதை குறிக்கின்றது.

ஆம்பர் (மஞ்சள்): இந்த சமிக்ஞை நிறுத்த வேண்டும் என்பதைக் குறிக்கின்றது. பச்சை வண்ணம் தெரியும் வரை சாலையைக் கடக்கவோ புறப்படவோ கூடாது. தவறுதலாக பெரிய சாலை கடந்து கொண்டிருக்கும் போது இடைப்பகுதியிலேயே மஞ்சள் சமிக்ஞையில் சிக்க நேர்ந்தால் கவனமாக முன் செல்ல வேண்டும். பதற்றத்தில் வேகமாக செல்லக்கூடாது.

பச்சை: பாதைதெளிவாக இருக்கும்பட்சத்தில் செல்லலாம் என்பதை குறிக்கின்றது.

நிலையான பச்சை அம்புக்குறி சமிக்ஞை: முழு பச்சை சமிக்ஞையுடன் கூடுதலாக; இந்த சமிக்ஞை வழங்கப்படலாம். இதில் அம்பு குறிப்பிடும் திசையில் கவனமுடம் செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

ஒளிரும் சிவப்பு சமிக்ஞை: முழுமையாக நிறுத்த வேண்டும் என்பதாகும். பாதை தெளிவான பின்பே செல்ல வேண்டும்.

ஒளிரும் மஞ்சள் சமிக்ஞை: இது வேகத்தை குறைத்து எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்பதை குறிக்கின்றது.

இரவில் விளக்குகள்

இரவில் போக்குவரத்து நெரிசல் குறைந்திருக்கும் போது பல குறுக்கு சந்திப்புகளில் உள்ள சைகை விளக்குகளை காவலர்கள் அணைத்து விடலாம். ஆனால் அப்பகுதிகளைக் கடக்கும் போது மிகவும் எச்சரிக்கையுடன் தொடரலாம். வாகனங்களை நிறுத்தத் தேவையில்லை.

இந்தியாவில் சாலை விதிகள்

  • இந்தியா முழுமைக்கும் பொருந்தக்கூடிய மோட்டார் வாகனச் சட்டம் 1988ல் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, 1989ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.
  • ஒருவழி சாலையில் ஓட்டுநர் தனது வலது புறம் வாகனம் முந்திச் செல்ல அனுமதிக்க வேண்டும். எதிர்புறமாக வாகனங்களை ஒருபோதும் நிறுத்தக்கூடாது.
  • இருவழி சாலையில் இடப்புறம் மட்டுமே ஓட்டுநர் வாகனத்தைச் செலுத்த வேண்டும்.
  • அனைத்து சாலை சந்திப்புகளிலும் மற்றும் பாதசாரி கடக்கும் கோடுகள் உள்ள இடங்களிலும் ஓட்டுநர் கட்டாயமாக வாகனத்தின் வேகத்தை குறைக்க வேண்டும்.
  • தடை செய்யப்பட்ட இடங்களான மருத்துவமனை, பள்ளிக்கூடம் போன்றவைகளின் அருகில் ஓட்டுநர்கள் ஒலிப்பான்களை பயன்படுத்தக் கூடாது.
  • மருத்துவ ஊர்தி (ambulance), தீயணைப்பு வாகனங்கள், இராணுவ பாதுகாப்பு வாகனங்கள் போன்றவைகளுக்கு வழிவிடுவது நமது பொறுப்பாகும்.
  • உயர் கற்றை ஒளியினை தேவையான போது மட்டுமே ஓட்டுநர்கள் பயன்படுத்த வேண்டும். எதிரே வாகனங்கள் வரும் போதும் அல்லது ஒரு வாகனத்தின் அருகில் பின் செல்லும் போதும் மங்கலான முகப்பு விளக்குகளை பயன்படுத்த வேண்டும்.
  • ஓட்டுநர் வாகனத்தின் வேதத்தினை குறைக்கும் பொது தனது வலது கையினை மேல் உயர்த்தி நிதானமக மேலும் கீழுமாக அசைக்க வேண்டும்.
  • ஓட்டுநர் வாகனத்தினை நிறுத்தும் பொழுது பின்வரும் வாகனங்களுக்கு தெரியும் பொருட்டு தனது கையினை செங்குத்தாக மேல் உயர்த்த வேண்டும்.
  • ஓட்டுநர் வாகனத்தினை இடப்பக்கம் திருப்ப விரும்பினால் தனது கையினை இடஞ்சுழியாக (anti-clockwise) சுழற்ற வேண்டும்.
  • அவசர காலத்தில் அபாய குறிக்காட்டிகளை பயன்படுத்த வேண்டும். அது இரண்டு குறிக்காட்டிகளையும் ஒரே நேரத்தில் ஒளிரச்செய்யும்.
  • இரு சக்கர வண்டியின் பின் இருக்கையில் ஒருவர் மட்டுமே அமர அனுமதிக்கப்படுகின்றனர்.
  • ஒலிப்பான்களை கிரீச் என்ற சத்தத்துடனோ, எரிச்சலடையும் வகையிலோ ஒலிக்க விடக்கூடாது. மின்னனு ஒலிப்பான் மட்டுமே அனுமதிக்கப்பட்டவை ஆகும்.
  • மீட்பு வாகனங்களான தீயணைப்பு வண்டி, அவசர சிகிச்சை ஊர்தி அல்லது காவக் துறை வாகனங்கள் போன்ற வாகனங்களின் முன்புறம் வாகனங்களை நிறுத்துவது சட்டப்படி தண்டிக்கப்பட கூடியது மற்றும் அவ்வாறு செய்யும் தனிநபர் அபராதம் செலுத்த நேரிடும்.

இந்திய தண்டனைச் சட்டம் 304A பிரிவு

கண்மூடித்தனமாக ஓட்டுவதாலும் ஓட்டுநரின் அலட்சியம் காரணமாகவும் ஏற்படும் இறப்பு தொடர்பான குற்றங்களுக்கு ஓட்டுநர் மீது காவல் துறை மேற்கூறிய பிரிவின் கீழ் கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்ய நேரிடும்.

பல்வேறு வண்ண இலக்கத்தகடுகள் (Number Plates)

சிவப்பு வண்ணத்தக்டு – குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களின் வாகனங்களில் பயன்படுத்தப்படும்.

நீல வண்ணத்தகடு – அயல்நாட்டு பிரதிதிதிகள் / தூதர்கள் பயன்படுதும் வாகனங்களுக்கு அளிக்கப்படும்

வெள்ளை வண்ணத்தகடு – இது சாதரண குடிமகனுக்கு சொந்தமான வாகனம் என்பதாகும்.

மஞ்சள் வண்ணத்தகடு – வணிக ரீதியான வாகனங்களுக்கானதாகும்.

கட்டாய ஆவணங்கள் – ஓட்டுநர் வாகனம் ஓட்டும் போது பின்வரும் ஆவணங்களை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம், வாகனத்தின் பதிவுச் சான்றிதழ், வரிச்சான்றிதழ், காப்பீட்டுச் சான்றிதழ், வாகன உறுதித்தன்மை மற்றும் அனுமதிச் சான்றிதழ்.

சாலை விபத்துக்களை தவிர்க்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள்

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை (The Ministry of Road Transport and Highways) அமைச்சகம், சாலை விபத்துக்களையும் சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளையும் தவிர்க்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அவையாவன:

ஒரு பன்முக ஏற்புடைய வியூகம்:

ஆங்கில எழுத்து நான்கு ‘E’ – பொறியியல் (Engineering), செயலாக்கம் (Enforcement), கல்வி (Education), அவசரம் (Emergency) ஆகியவற்றின் அடிப்படையில் சாலைப்பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பன்முக யுக்தியாகும். அவை மேம்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பு தரநிலைகளையும் ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளித்தல், செம்மைப்படுத்தப்பட்ட அவசர சிகிச்சை பராமரிப்பு மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வை உருவாக்குதல் ஆகியவற்றிற்கு சிறந்த பாதுகாப்பான யோசனை ஆகும்.

வாகன பாதுகாப்பு தரத்தை உயர்த்துவது:

சரக்கு வாகனங்கள் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கும் கம்பிகளை ஏற்றிச் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. கனரக வாகனங்களில் பூட்டுதலில்லா நிறுத்தம் அமைப்பும் (Anti-locking Brake System). இரு சக்கர வண்டிகளிலும் ABS/CBS நிறுத்தக்கருவியும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வண்டிகள் தெளிவாக தெரியும் பொருட்டு தானியங்கி முகப்பு விளக்கு ஒளிர்விப்பான் (Automatic Headlight On) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்தில் சிக்கியவர்கள் பணமில்லா பரிவர்த்தனை மூலம் சிகிச்சை அளிக்கும் முன்னோட்டத் திட்டம்:

தேசிய நெடுஞ்சாலை எண் 8 மற்றும் 33 இல் இத்திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது தங்க நாற்கர சாலைகளிலும், வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு, மேற்கு இணைப்புச் சாலைகளிலும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உடனடி விரைவு அவசர சிகிச்சை ஊர்திகள்:

தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 50 கி.மீ தொலைவிலும் ஒரு அவசர சிகிச்சை ஊர்தியை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) நிறுத்தப்பட்டிருக்கின்றது. அவசர ஊர்திகளுக்காக பெறப்படும் அழைப்புகளை ஏற்க 24 X 7 செயல்படும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதுடன் சாலை பாதுகாப்பு தன்னார்வத் தொண்டர்களுக்கு முதலுதவி அளிப்பதில் பயிற்சியும் வழங்கப்படுள்ளது.

சேது பாரதம்: தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பாக மற்றும் தடையற்ற பயணம் செய்ய பாலங்களை கட்டுவதற்கான திட்டம் 2016இல் தொடங்கப்பட்டது. அது 2019ஆம் ஆண்டிற்குள் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளையும், இருப்புப்பாதை குறிக்கீடு இல்லாமல் உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள்:

இக்கருவியில் வாகனம் எவ்வளவு வேகத்தில் செல்லுகின்றது என்பதை கண்டறியக்கூடிய தொடர்ச்சியான உணர்கருவிகள் உள்ளன. இவ்வுணர்கருவிகள் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தினை தாண்டும்போது வாகனத்தின் உந்துபொறிக்கு (engine) செல்லும் காற்று மற்றும் எரிபொருளின் அளவினை கட்டுப்படுத்துகிறது. இது தானாகவே வாகனத்தின் வேகத்தினை குறைப்பதோடு முன்னரே தீர்மானிக்கப்பட்ட வேகத்தினை மீறி வாகனம் செல்வதையும் தடுக்கின்றது.

பல்வேறுசெய்திக் குறியீடுகள்:

இவை பயணிகளுக்கு தெரிவிக்கப்படவேண்டிய முக்கியத் தகவல்களை தெரிவிக்கும் ஒளிஉமிழும்முனைய பலகைகள் (LED Boards) ஆகும். பெரிய போக்குவரத்து நெரிசல் மற்றும் நெருக்கடிகள் ஏதேனும் ஏற்பட்டால் அந்நிலைகளை உடனடியாக அச்சாலையை உபயோகிப்பவர்களுக்கு தெரிவிக்க இவை பயன்படுகின்றன.

சாலை பாதுகாப்புக்கான பிரேசிலியா பிரகடனம்:

  • இது ஐ.நா.உலக சுகாதார அமைப்பு இணைந்து நடத்திய சாலை பாதுக்காப்பிற்கான இரண்டாவது உலகளாவிய உயர்மட்ட மாநாடு ஆகும்.
  • சாலை பாதுகாப்பினை மிக முக்கியமானதாக கருதி இந்தியா, பிரேசிலியா பிரகடனத்தில் 2015ஆம் ஆண்டு கையெழுத்திட்டது. இதன் மூலம் இதில் பங்கு பெற்ற அனைவரும் இப்பதிற்றாண்டுகள் சாலை பாதுகாப்பினை மேம்படுத்துவதற்கும்
  • போக்குவரத்தினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கான வழிகளை உருவாக்கவும் உறுதி பூண்டுள்ளன.
  • குழந்தைகளிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கத்தோடு சுவச்ச சேஃபர் (Swachha Safer) மற்றும் சுவரஷித் யாத்ரா (Suvarshit Yatra) என்ற இரு சித்திர புத்தகங்களை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

வாழ்வை காப்பாற்று நிறுவனம் (Save LIFE Foundation)

இது ஒரு சுதந்திரமான, இலாப நோக்கில்லாத , அரசு சாரா, பொதுத் தொண்டு அறக்கட்டளையாகும். இது இந்தியா முழுவதும் சாலை பாதுகாப்பு மற்றும் அவசர மருத்துவ வசதியினை மேம்படுத்துவதற்காக பணியாற்றி வருகின்றது.

சாலை பாதுகாப்பு வாரம்

  • சாலை பாதுகாப்பு வாரம் என்பது சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் சாலை விபத்துக்கள் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதையும் நோக்கமாக கொண்ட தேசிய நிகழ்வு ஆகும். மேலும் இது சாலையினை உபயோகிப்பவர்களுக்கு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை வலியுறுத்துகிறது.
  • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கொண்டாட்டம் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் துவங்கப்பட்டதாகும்.
  • இந்தியாவில் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் இந்திய தேசிய பாதுகாப்பு கவுன்சிலால் ஒருங்கிணைக்கப்படுகிறது. இது பாதுகாப்பு உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து பொதுமக்களை ஊக்குவிப்பதற்காக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
  • ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுகின்றது.

சாலை பாதுகாப்பு நடவடிக்கைக்கான பதிற்றாண்டு 2011 – 2020

  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் 2011 – 2020 வரையிலான பத்தாண்டுகள் சாலை பாதுகாப்பு நடவடிக்கைக்கான பதிற்றாண்டாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சாலைகள் மற்றும் வாகனங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவது, சாலை உபயோகிப்பவர்களின் நடவடிக்கைகளை மேம்படுத்துவது மற்றும் அவசரகால சேவையினை மேம்படுத்துவது ஆகியவற்றின் மூலம் இப்பதிற்றாண்டில் இலட்சக்கணக்கான மக்களின் உயிரினை காக்க முற்படுகின்றது.

செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் சர்வதேசகூட்டமைப்பு

கீழ்க்காணும் 10 உறுதிமொழிகளைப் பரிந்துரைத்துள்ளது.

முடிவுரை

சாலை விபத்துக்கள் யூகிக்கக் கூடியவை அதனால் அவை நிகழாமல் தடுக்கக் கூடியவை ஆகும். எனவே ஒவ்வொருவரும் சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் குறியீடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

சீக்கிரமாக புறப்படு! மெதுவாக செல் !! பாதுகாப்பாக சேர்ந்திடு!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!