Tnpsc

மக்கள் தொகையும், குடியிருப்புகளும் Notes 7th Social Science Lesson 5 Notes in Tamil

7th Social Science Lesson 5 Notes in Tamil

5] மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

அறிமுகம்:

மக்கள் தொகை புவியியல் என்பது மக்களின் விகிதம் அதன் பிறப்பு, இறப்பு மற்றும் காரணிகளை சார்ந்த இடம், காலம் கொண்டு தெரிந்து கொள்ளுதல் ஆகும். மக்கள் தொகை அதிகரித்தல் அல்லது குறைதல் என்பது மக்கள் பரவல் மற்றும் வளர்ச்சியைக் குறிப்பதாகும். மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வது மக்கள் புலம்பெயர்வு எனப்படும். பண்டைய கால மக்களின் முதல் நிலைத் தோற்றத்தை, இனம், மொழி, மதம் ஆகியவற்றைக் கொண்டு இடத்திற்கு இடம் குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

இனங்கள்:

மனித இனத்தை மனித உயிர்களுக்குள்ளே பல்வேறு உயிரியல் குழுக்களாக பிரித்துள்ளார்கள். ஒரே பண்புகள் மற்றும் பழக்க வழக்கங்களைப் காலங்காலமாக பின்பற்றக் கூடிய மக்கள் குழுக்கள், மனித இனம் என்று அழைக்கப்படுகிறது. பெருமளவில் பரந்து காணப்படும் மனித இனத்தின் வகைகளை தலையின் வடிவம், முகம், மூக்கு, கண், முடியின் வகை, தோலின் நிறம் மற்றும் இரத்தத்தின் வகை போன்ற பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டுள்ளது.

உலகின் முக்கிய மனித இனங்கள்:

  • காக்கசாய்டு (ஐரோப்பியர்கள்).
  • நீக்ராய்டு (ஆப்பிரிக்கர்கள்).
  • மங்கோலாய்டு (ஆசியர்கள்).
  • ஆஸ்ட்ராலாய்டு (ஆஸ்திரேலியர்கள்).

காக்கசாய்டு:

காக்கசாய்டு என்பவர்கள் ஐரோப்பிய இனத்தவர்கள், இவ்வின மக்கள் வெள்ளை நிறத்தோலும், அடர்பழுப்பு நிறக்கண்களும், அலை போன்ற முடியும், நீளமான மூக்கும் உடையவர்களாவர். இவர்கள் யூரேசியாவிலும் காணப்படுகிறார்கள்.

நீக்ராய்டு:

நீக்ராய்டு இன மக்கள் கருமைநிறக் கண்கள், கருப்புநிறத் தோல், கருமையான, முடி, அகலமான மூக்கு, நீளமான தலை, மற்றும் தடித்த உதடுகளைக் கொண்டவர்களாவார்கள். இவர்கள் ஆப்பிரிக்காவில் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள்.

மங்கோலாய்டு:

மங்கோலியர்கள் பொதுவாக ஆசிய-ஆப்பிரிக்க இனத்தார்களாவர். இவர்கள் வெளிர் மஞ்சள் முதல் பழுப்புநித் தோல், நீளமானமுடி, தட்டையான முக அமைப்பு, பெரிய தலை மற்றும் மத்தியமான மூக்கு உடையவர்களாவார்கள். இவர்கள் ஆசியா மற்றும் ஆர்க்டிக் பிரதேசத்தில் காணப்படுகிறார்கள்.

ஆஸ்ட்ரலாய்டு:

ஆஸ்திரேலியர்கள் அகலமான மூக்கு, சுருள்முடி, கருப்புநிறத்தோல் மற்றும் குறைவான உயரம் உடையவர்களாக குட்டையானவர்களாகக் காணப்படுகிறார்கள். இவர்கள் ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவில் வாழந்து வருகிறார்கள்.

இந்தியாவின் இனங்கள்:

இந்தியாவை மனித நாகரிகத்தின் தொட்டில் என்றே கூற வேண்டும். வட இந்தியாவில் திரவிடர்களின் முதல் நிலைத் தோற்றத்தையே, சிந்து சமவெளி நாகரிகம் என்கிறோம். பிற்காலத்தில் இந்தோ-ஆரியர்களின் வருகைக்குப் பிறகு திராவிட மக்கள் இந்தியாவின் தென்பகுதிக்குத் தள்ளப்பட்டார்கள். இந்தியாவின் தென்பகுதி மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் துளு ஆகியவை திராவிட மொழிகளாகும். பெரும்பாலும் இவர்கள் இந்தியாவின் தென் பகுதியில் வாழந்து வந்தார்கள்.

மதம்:

மதம் என்பது ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையும், வழிபாட்டு முறையும் கொண்டதாகும். இது மனிதனை ஒரு மனித சமுதாயத்திற்குள் கொண்டுவரும். மதம் ஒரு குழுவின் அடையாளமாகவும், கலாச்சார புத்துணர்வுப் புள்ளியின் அடையாளமாகவும் திகழ்கிறது.

மத வகைப்பாடுகள்:

அ. உலகளாவிய மதங்கள்:

கிறிஸ்துவம், இஸ்லாம் மற்றும் புத்த மதம்.

ஆ. மனித இனப்பிரிவு மதங்கள்:

ஜீடோயிசம், இந்துமதம் மற்றும் ஜப்பானிய ஷிண்டோயிசம்.

இ. நாடோடிகள் (அ) பாரம்பரிய மதங்கள்:

அனிமிஸம், ஷாமானிஸம் மற்றும் ஷாமன்.

மதம் வழிபாட்டுத்தலம்
புத்த மதம் விஹாரா
கிறிஸ்துவ மதம் தேவாலயம்
இந்து மதம் கோவில்
இஸ்லாம் மசூதி
சமணம் பசாதி
ஜீடாய்ஸம் சினகாக்
ஜொராஸ்டிரியம் அகியாரி

மொழி:

சமுதாய அமைப்பிற்கு மொழி கலாச்சாரத்தை பரப்பும் ஒரு பிரதான கருவியாகும். ஒருவர் மற்றொருவருடன் தொடர்பு கொள்வதற்கு எழுத்து வடிவிலோ அல்லது ஒலி வடிவிலோ மொழி பயன்படுத்தப்படுகிறது. அரசியல், பொருளாதார சமூக மற்றும் மத செயல்பாடுகளின் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள மொழி வழி வகுக்கிறது.

உலகின் முக்கிய மொழிகள்:

  • தமிழ்.
  • இந்தி.
  • சீனமொழி.
  • ஆங்கிலம்.
  • ஸ்பானிஷ்.
  • போர்ச்சுக்கீஸ்.
  • ரஷ்யன்.
  • அராபிக் மொழி.
  • ஜெர்மன்.

இந்திய மொழிகள்:

இந்தியா பல வகையான மொழிகளைக் கொண்ட நாடு. இந்தி மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக உள்ளது. இந்திய மாநிலங்கள் மொழிகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அரசால் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. வட இந்தியாவில் காஷ்மீர், உருது, பஞ்சாபி, இந்தி, ராஜஸ்தானி, குஜராத்தி, பெங்காலி, அஸ்ஸாமி மற்றும் பல மொழிகள் பயன்படுத்துகின்றனர். தென்னிந்தியாவில் முக்கியமான மொழிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் இவை திராவிட மொழிகள் என்றழைக்கப்படுகிறது.

தேதி நிகழ்வுகள்
ஜீலை 11 உலக மக்கள் தொகை நாள்
பிப்ரவரி 21 பன்னாட்டு தாய்மொழி தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் வரும் 3வது ஞாயிற்றுக்கிழமை உலக மத நல்லிணக்க நாள்
மே-21 உலக கலாச்சார பல்வகை நாள்

இன்றைய மொழிப் பயன்பாடு கலாச்சாரத்தை மாற்றியுள்ளது. இது பெரும்பாலும் தொடர்புக் கருவியாகவே பயன்படுத்தப்படுகிறது. தொழில் நுட்ப வளர்ச்சியினால் பல வகையான தொலைதொடர்பு மற்றும் மின்னனு சாதனத்தின் உதவியுடன் சரியான உச்சரிப்பு மற்றும் வேகமாக நகரும் உலக முன்னேற்றத்துடன், மொழிகளை எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது. இந்த தொழில் நுட்பங்கள் உலகத்தை மனித சமூகத்திற்கு மிக அருகில் கொண்டு வந்திருக்கின்றன.

குடியிருப்பு:

குடியிருப்பு என்பது மனித வாழ்விடமாகும். அங்கு விவசாயம், வாணிபம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய செயல்களின் மூலம் ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். கிராமக் குடியிருப்பு என்பது ஒரு சமுதாய மக்கள், அவர்கள் தங்களின் முதன்மைத் தொழிலான வேளாண்மை, மரம் அறுத்தல், மீன்பிடித்தல் மற்றும் சுரங்கத் தொழிலில் ஈடுபடுத்திக் கொள்வதைக் குறிக்கும். நகர்ப்புற குடியிருப்பில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை தொழில்களான, தொழிற்சாலை, வாணிபம் மற்றும் வங்கிப்பணிகளில் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். மக்கள் தொகையின் அளவு மற்றும் அடர்த்தி ஆகிய இவை இரண்டிற்கும் ஒரு தொடர்பு உண்டு. கிராமப்புற குடியிருப்பில் மக்கள் தொகையின் அளவு மற்றும் அடர்த்தி குறைவாகவும், நகர்ப்புற குடியிருப்பில் அதிகமாகவும் காணப்படுகிறது.

தலம் மற்றும் சூழலமைவு இடம் மற்றும் அமைவிடம் என்பது ஒரு குடியிருப்பின் உண்மையான அமைவிடத்தைக் குறிப்பதாகும். ஒரு குடியிருப்பின் அமைவிடமானது நம் அன்றாடத் தேவைகளுக்கான நீர், நீர் அளிப்பு, எளிதில் கிடைக்கக் கூடிய விவசாய நிலம், கட்டுமானப் பொருட்கள், எரிபொருள் போன்ற காரணங்களை கருத்தில் கொண்டு உருவானதாகும்.

பண்டைய வீட்டின் வகைகள்:

முற்காலத்தில் ஒரு குடியிருப்பானது அங்கேயே கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டது. ஒரு வீட்டின் அமைப்பானது அங்குள்ள சுற்றுச் சூழலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. விவசாயப் பிரதேசங்களில் வீடுகளின் சுவர்கள் களிமண்ணாலும், கூரைகள் வைக்கோலாலும் அல்லது மற்ற செடிகளின் புட்களாலும் வேயப்பட்டிருந்தது. கூரை அமைப்பதற்கான சட்டங்களுக்கு அங்குள்ள மரங்களையே பயன்படுத்திக் கொண்டனர். இம்மாதிரியான பண்டைய வீடுகளில் பெரிய முற்றம், திறந்த வெளிக் காற்றுப் பகுதிகள் இருந்தன. வீட்டின் அளவானது அங்குள்ளவர்களின் பொருளாதாரத்தைச் சார்ந்திருந்தது.

குடியிருப்பின் அமைப்புகள்:

குடியிருப்பு, குழுமிய குடியிருப்பு, சிதறிய குடியிருப்பு என வகைப்படுத்தப்படுகிறது.

குழுமிய குடியிருப்புகள்:

குழுமிய குடியிருப்பை மையக் குடியிருப்பு எனவும் அழைக்கலாம். இவ்வகையான குடியிருப்பில் வீடுகள் ஒன்றுக்கொன்று அருகருகே அமைந்துள்ளன. இவ்வகைக் குடியிருப்புகள் ஆற்றுப் பள்ளத்தாக்கின் ஓரங்களிலும், வளமான சமவெளியை ஒட்டியும் அமைந்திருக்கும். இந்தியாவில் குழுமிய குடியிருப்புகளை, வடக்குச் சமவெளி மற்றும் தீபகற்ப கடற்கரைச் சமவெளிகளிலும் காணலாம்.

சிதறிய குடியிருப்பு:

சிதறிய குடியிருப்புகளை பொதுவாக அதிக வெப்பப் பகுதிகளிலும், மலைப்பாதைகளிலும், அடர்ந்த காட்டுப்பகுதிகளிலும், புல்வெளிகளிலும். தீவிர சாகுபடிப் பிரதேசங்களிலும் காண முடியும். இவ்வகைக் குடியிருப்புகளில் வீடுகள் இடைவெளி விட்டுக் காணப்படுவதுடன் வயல்வெளிகளோடு கலந்திருக்கும். இந்தியாவின் இவ்வகையான குடியிருப்புகளை கோசி மலைப்பாதையின் வடக்குப் பகுதியிலும், கங்கைச் சமவெளியிலும், ராஜஸ்தானின் பாலைவனப் பகுதியிலும், இமயமலை மற்றும் நீலகிரியின் மலையடிவாரத்திலும் காணமுடியும்.

குடியிருப்புகளின் படிநிலை

கிராமப்புறக் குடியிருப்பு

நீர் நிலையை ஒட்டிய இடங்களாகிய ஆறுகள், ஏரிகள் மற்றும் ஊற்றுக்கள் அருகிலேயே பெரும்பாலும் கிராமப்புறக் குடியிருப்புக்கள் அமைந்திருக்கும். வேளாண் தொழிலுக்கு ஏற்ற நிலங்களுடன் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய இடங்களையே மக்கள் குடியேறத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதனால் விவசாய தொழிலுக்கு ஏற்ப ஆற்றுப் பள்ளத்தாக்குகளையும், கடற்கரைச் சமவெளிகளையும் வாழ்வதற்கு ஏற்ற இடமாகக் கருதுகிறார்கள். கட்டிடப் பொருள்களான மரம், கல் மற்றும் களிமண் போன்றவை எளிதில் கிடைப்பதால் கிராமங்களில் குடியிருப்பு அமைக்க சிறந்த இடமாக கருதுகிறார்கள்.

கிராமப்புறக் குடியிருப்புக்கு ஏற்ற காரணிகள்:

  • இயற்கையான நிலத்தோற்றம்.
  • உள்ளுர் தட்பவெப்பநிலை.
  • மண் வளம் மற்றும் நீர் வளங்கள்.
  • சமூக நிறுவனங்கள்.
  • பொருளாதார நிலை.

கிராமப்புறக் குடியிருப்பின் அமைப்புகள் (Pattern of Rural settlement):

கிராமப்புறக் குடியிருப்பின் அமைப்புகள் என்பது வீடுகள் மற்றும் கட்டடங்களுக்கு இடையேயான தொடர்பைக் குறிப்பதாகும். கிராமப்புறக் குடியிருப்பின் அமைப்பு அதன் நிலத்தோற்றம், தட்பவெப்பம், நீர் நிலைகள் மற்றும் சமூகப் பொருளாதாரக் காரணிகளின் செயல்பாடுகளைப் பொறுத்து அமையும். கிராமப்புறக் குடியிருப்புகள் அவற்றின் அமைப்பின் அடிப்படையில் நேர்க்கோட்டு, செவ்வகமான, வட்டமான, நட்சத்திர வடிவமான கிராமம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நேர்க்கோட்டு குடியிருப்பு சாலைகள், இருப்புப் பாதைகள், ஆறு அல்லது கால்வாய், பள்ளத்தாக்கின் சரிவு ஆகியவற்றிற்கு அருகில் கட்டப்பட்ட வீடுகளின் தொகுப்பு நேர்க்கோட்டு குடியிருப்பு எனப்படும். எடுத்துக்காட்டு இமயமலை, ஆல்ப்ஸ் மற்றும் ராக்கி மலைத்தொடர்.

நேர்க்கோட்டு குடியிருப்பு

செவ்வக வடிவக் குடியிருப்புகள் பெரும்பாலும் செவ்வக வடிவில் நீளமானதாகவும் ஒன்றையொன்று நேர் கோணத்தில் சந்தித்துக் கொள்ளும். இவ்வகையான குடியிருப்புகள் சமவெளிப் பகுதிகள் மற்றும் மலைகளுக்கிடையே உள்ள பள்ளத்தாக்குகளில் காணப்படுகின்றன. (எ.கா): சட்லஜ். ஒரு மையப்பகுதியை சுற்றி வட்ட வடிவமாக காணப்படும் குடியிருப்புகளை வட்ட வடிவக் குடியிருப்புகள் ஆகும். இத்தகைய குடியிருப்புகள், ஏரிகள் மற்றும் குளங்களை சுற்றிக் காணப்படும். நட்சத்திர வடிவக் குடியிருப்புகள் சாலைகள் ஒன்று சேரும் இடங்களிலிருந்து, சாலைகளின் இருபக்கங்களிலும் எல்லா திசைகளிலும் பரவி நட்சத்திர வடிவில் காணப்படும். எடுத்துக்காட்டு பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள சிந்து, கங்கை சமவெளிகள்.

நீர் நிலைக் குடியிருப்புகள் (Wet Point Settlement):

இவ்வகையான குடியிருப்புகளை அவற்றின் பெயரைக் கொண்டே நாம் அறிந்து கொள்ள முடியும். நீர் நிலையை ஒட்டிய இடங்களான கிணறுகள், ஏரி, குளம், ஆறு, குட்டைகள் உள்ள இடங்களில் அமைந்திருப்பதே நீர் நிலைக் குடியிருப்புகள் ஆகும்.

வறண்ட (அ) உலர்நிலைக் குடியிருப்புகள் (Dry Point Settlement):

வறண்ட இடம் என்பது சுற்றியுள்ள நிலத்தைக் காட்டிலும் சற்று உயரத்தில் அமைந்துள்ள இடமாகும். நீர் ஆதாரங்களாலும், நிலத்தோற்ற அமைப்பாலும் உலர்நிலைக் குடியிருப்புகள் வெள்ளத்தால் பாதிக்கபடுவதில்லை. இந்தியாவில் கேரளா கரையோரத்திலும் மற்றும் டெல்டா கரையோரப் பகுதிகளிலும் இவ்வகையான குடியிருப்புகள் காணப்படுகின்றன.

நகர்ப்புறக் குடியிருப்புகள்:

நகர்ப்புறக் குடியிருப்புகளில் மக்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைத் தொழில்களில் ஈடுபடுகின்றனர். நகர்ப்புறம் என்ற சொல் நகரங்கள் மற்றும் மாநகரங்களுடன் தொடர்புடையது. நகர்ப்புறம் என்ற வார்த்தை பெரும்பாலும், நகரம், மாநகரம் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளைக் குறிக்கும்.

நகர்ப்புற குடியிருப்புகளின் வகைகள்:

நகர்ப்புறத்திற்கான கூற்று (அல்ல) வரையறை ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் வேறுபடும். பொதுவான சில வகைபாடுகளாவன.

  • மக்கள் தொகையின் அளவு.
  • தொழில் அமைப்பு.
  • நிர்வாகம்.

நகரம் (Town):

நகர்ப்புறக் குடியிருப்பின் மக்கள் தொகையில், குறைந்த பட்ச மக்கள் தொகையான 5000க்கும் மேலான மக்கள் இருக்கும் இடத்தையே நகரம் என்கிறோம். நகரங்கள் செயல்படும் நிகழ்வுகளின் அடிப்படையில் நிர்வாகம், இராணுவம் மற்றும் கல்வி என பல நகரங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மாநகரம் (City):

பொதுவாக ஒரு குறிப்பிட்ட சிறிய நகரத்திலிருந்து தனித்த நகர்ப்புறங்களுக்கு பெருநகரம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. (அல்லது) பெரு நகரங்களுக்கென்று தனியே ஒரு வரைமுறை கிடையாது. சிறு நகரங்களிலிருந்து தனித்த ஒரு நகர்ப்புறமாகும். நன்கு வளர்ச்சி அடைந்த மத்திய தொழில் மாவட்டத்தைக் கொண்ட, பல்வேறு தொழில்களை உள்ளடக்கிய ஒரு தனித்த குடியிருப்பே மாநகரமாகும். இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு மேல் அதிகமானோர் உள்ள இடங்களையே மாநகரம் என அழைக்கிறோம். (மக்கள் தொகை 1,00,000 மேல்).

மிகப்பெரிய நகரம் (Mega City):

10 மில்லியனுக்கு மேல் மக்கள் தொகை கொண்ட பெரிய நகரமே மிகப்பெரிய நகரங்களாகும். இது ஒரு தனித்த தலைநகரமாகவும் செயல்படும். கேன்டன், டோக்கியோ, டெல்லி, மும்பை முதலியவை மிகப்பெரு நகரத்திற்கு சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.

மீப்பெரு நகர் (Megalopolis):

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மிகப்பெரிய நகரங்களின் மக்கள் தொகை பத்து லட்சத்திற்கு மேலாகவும், பெரிய நகராக்கப் பரப்பையும் கொண்ட இடத்தைக் குறிப்பதே மீப்பெரு நகராகும். பாஸ்டனுக்கும் வாஷிங்டனுக்கும் இடைப்பட்ட பிரதேசம் நன்கு அறிந்த மீப்பெரு நகரமாகும். இந்தியாவில் கல்கத்தாவின் மிகப்பெரிய நகர்ப்புறப் பகுதியே மீப்பெரு நகரமாகும். குஜராத்தின் காந்தி நகர், சூரத், வதோதரா, இராஜபுதனம் ஆகியவையே முக்கியமான மீப்பெரு நகரங்களாகும்.

இணைந்த நகரம் (Conurbation):

இணைந்த நகரம் என்பது சில மாநகரங்களையும், பெரிய நகரங்களையும் மற்றும் சில நகர்ப்புறங்களையும் கொண்டு, மக்கள் வளர்ச்சியுடன் நிலப்பரப்பு விரிவாக்கம் அடைந்து இரண்டும் இணைந்து அமையக் கூடிய தொடர் நகர்ப்புறம் (அல்ல) தொழில் வளர்ச்சி அடைந்த இடமே இணைந்த நகரமாகும். மக்கள் தொகை வளர்ச்சியின் காரணமாக நில விரிவாக்கம் அடைந்து, தொழில் வளர்ச்சி அடைந்து சில நகரங்களையும் பெரு நகரங்களையும், நகர்ப்புறங்களையும் கொண்ட பிரதேசமே இணைந்த நகரமாகும். இங்கிலாந்தில் உள்ள மேற்கு மத்தியப் பகுதி, ஜெர்மனியில் உள்ள ரூர், நெதர்லாந்தில் உள்ள ரேன்ஸ்டார்டு ஆகியவையே நகராக்கப் பரப்பிற்கு எடுத்துக்காட்டுகளாகும். இந்தியாவில் மஹாராஷ்ட்ராவில் உள்ள மும்பை, ஹரியானாவின் குர்ஹான், பரிதாபாத், உத்திரப்பிரதேசத்தில் உள்ள நொய்டா இணைந்த நகரத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.

செயற்கைக் கோள் நகரம் (Satellite Town):

அதிக அளவு மக்கள் தொகையைக் கொண்ட முக்கியமான பெரு நகரங்களில், நகர்ப்புறங்களுக்கு வெளியே வடிவமைக்கப்படும் வீடுகளே செயற்கைக் கோள் நகரமாகும். பொதுவாக செயற்கைகோள் நகரங்கள் கிராம, நகர்ப்புற எல்லைக்கு வெளியே அமைந்திருக்கும். இந்தியாவில் உள்ள அநேக செயற்கைக்கோள் நகரங்கள் குடியிருப்புப் பகுதிகளைக் கொண்டதாகவே உள்ளது. செயற்கைக்கோள் நகரங்கள் சில நேரங்களில் பீகாரில் ரோஸ்டாஸ் மாவட்டத்தில் உள்ள டெஹ்ரி மற்றும் டால்மியா நகர் இரண்டு நகரங்களைப் போல் காணப்படும். இவை சாலைகளோடு இணைக்கப்பட்டிருக்கும். (எ.கா): பாட்னா, பரோவ்னி, வாரணாசி மற்றும் ஹஜிப்பூர்,

சிறப்புப் பொருளாதார நகரம் (Smart City):

நகர்ப்புறப் பகுதியில் உள்கட்டமைப்பு வசதி, வீட்டுமனை விற்பனை, தொலைத்தொடர்பு, எளிதாக கிடைக்கக் கூடிய சந்தை உள்ள இடங்களே சிறப்பு பொருளாதார நகரமாகும். இந்தியாவில் உள்ள முதல் பத்து சிறப்புப் பொருளாதார நகரங்களாவன புவனேஷ்வர், புனே, ஜெய்ப்பூர், சூரத், லூதியானா, கொச்சி, அகமதாபாத், சோலாபூர், புதுடெல்லி மற்றும் உதய்ப்பூர் ஆகும். தமிழ்நாட்டில் 12 முக்கிய நகரங்கள் சிறப்புப் பொருளாதார நகரங்களாக மாற்றப்பட உள்ளன. அவை சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருப்பூர், சேலம், வேலூர் கோயம்புத்தூர், தூத்துக்குடி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு ஆகும்.

கிராமம் நகரம்
கிராமத்தில் விவசாயம் முதன்மைத் தொழிலாகும். நகர்ப்புறத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைத் தொழில்களான தொழிற்சாலைகள் ஆட்கொண்டிருக்கும்.
மக்களடர்த்தி குறைவு மக்களடர்த்தி அதிகம்
கிராமங்கள் மற்றும் குடிசைகள் பெருநகரங்கள் மற்றும் நகரங்கள்
விவசாய வேலைகள் விவசாயம் அல்லாத பிற வேலைகள்
எளிதான, அமைதியான வாழ்க்கை வேகமான, சிக்கல் நிறைந்த வாழ்க்கை

சுருக்கம்:

  • பல்வேறு வகையான மரபுவழிக் கடத்தல் மூலம் மனித உயிரினம், உயிரியல் குழுக்களாக பிரிக்கப்படுவதே இனம் ஆகும்.
  • காக்கசாய்டு (ஐரோப்பியர்கள்) நீக்ராய்டு (ஆப்பிரிக்கர்கள்) மங்கலாய்டு (ஆசியர்கள்) ஆஸ்ட்ரோலாய்டு (ஆஸ்திரேலியர்கள்) முக்கியமான இன வகைகளாகும்.
  • மதங்கள் பழமையான மற்றும் நாடோடி மதங்களாக உலகளவில் பிரிக்கப்பட்டுள்ளது.
  • மொழி கலாச்சாரத்தின் நிலையான மதிப்புமிக்க அமைப்பாகும். மொழியினால் கலாச்சாரத்தை உயிர்ப்பிக்க முடியும், வாழவைக்க முடியும்.
  • குடியிருப்பு தொழில் அடிப்படையில் கிராமம் மற்றும் நகரம் என்று பிரிக்கப்படுகிறது.
  • குழுமிய குடியிருப்பு ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும் வளமற்ற சமவெளிகளிலும் வளர்ச்சி அடையும்.
  • சிதறிய குடியிருப்பு பொதுவாக உயர்ந்த தட்பவெப்பநிலை, மலைப்பாதை, அடர்ந்த காடு, புல்வெளிகள் மற்றும் விவசாயத்திற்கு உகந்ததல்லாத நிலங்களின் அருகில் காணப்படும்.
  • பொருளாதாரச் சிறப்பு நகரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மிகவும் முன்னேற்றத்துடன் இருக்கும்.

உங்களுக்கு தெரியுமா?

  • மனிதப் புவியியல் என்பது மனிதன் மற்றும் அவனின் சுற்றுப்புறத்தை இயற்கைச் சூழலோடு படிப்பதே ஆகும்.

யாத்திரைக் குடியிருப்பு:

  • யாத்திரைக் குடியிருப்பு வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியும் (அல்லது) மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் அமையும். (எ.கா): தமிழ் நாட்டில் உள்ள பழனி – முருகன் கோவில்.

உலக சுகாதார நிறுவனம் (WHO):

  • உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி ஒரு ஆரோக்கியமான நகரத்திற்கு அவசியம் இருக்க வேண்டியவையாவன:
    • தூய்மையான பாதுகாப்பான சுற்றுச்சூழல்.
    • அனைத்து மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.
    • உள்ளாட்சியில் உள்ளுர் மக்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
    • எளிதாக கிடைக்கக் கூடிய ஆரோக்கிய சேவைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!