Samacheer NotesTnpsc

அரசாங்கத்தின் வகைப்பாடுகள் Notes 11th Political Science

11th Political Science Lesson 6 Notes in Tamil

6. அரசாங்கத்தின் வகைப்பாடுகள்

அறிமுகம்

அரசாங்கம் என்பது அரசின் மிக முக்கிய அங்கமாகும். அரசாங்கம் என்பது அரசியல் மற்றும் நிர்வாகம் சார்ந்த துறைகளின் உறுப்பினர்களை உள்ளடக்கியது ஆகும். மக்கள் நலன் சார்ந்த கொள்கை உருவாக்கத்திலும் , நடைமுறைப்படுத்துவதிலும் அரசாங்கம் மிக முக்கியப்பங்கு வகிக்கின்றது. மேலும் அரசாங்கம் என்பது சட்டம் இயற்றுதல், செயல்முறைப்படுத்துதல் மற்றும் நீதிவழங்குதல் சார்ந்த பணிகளையும் மேற்கொள்கிறது. சட்டமன்றம், நீதிமன்றம் மற்றும் செயலாட்சித் தூறை ஆகிய மூன்றும் சட்டம் மற்றும் அரசமைப்பின் அடிப்படையில் அரசாங்கத்தின் அங்கங்கள் ஆகும். இம்மூன்று அங்கங்களும் அரசின் நோக்கங்களுக்குச் செயல்முறை வடிவம் கொடுக்கின்றது. அரசாங்கத்தைப் பின்வரும் வகையில் ஒற்றையாட்சி, கூட்டாட்சி, நாடாளுமன்ற மூறை, குடியரசுத் தலைவர் முறை என வகைப்படுத்தலாம்.

  • “எந்த ஒரு மனிதனும் தனக்கு தெரியாத அல்லது அனுபவம் இல்லாத துறையில் செயல்பட விரும்புவதில்லை, அரசாங்கம் என்ற கடினமான மற்றும் மிகுதியான திறன் தேவைப்படும் தூறையில் ஈடுபட தமக்குத் தகுதி உள்ளதாகக் கருதி அனைவரும் செயல்பட விரும்புகின்றனர்”
  • சாக்ரடீஸ் (Socrates)

கட்டுப்பாடுகள் மற்றும் சமநிலைகள் (குடியரசுத் தலைவர் முறை)

ஐக்கிய அமெரிக்க குடியரசு – Checks and Balances (Presidential form)

செயலாட்சிப் பிரிவு (குடியரசுத் தலைவர் சட்டங்களைச் செயல்படுத்துகிறார்)

சட்டமன்றப் பிரிவின் மீதான கட்டுப்பாடுகள்

  • சட்டங்களை முன்மொழியலாம்
  • சட்டங்களை ரத்து செய்தல் காங்கிரசின் சிறப்புக் கூட்டத் தொடர்களுக்கு அழைக்கலாம்
  • நியமனங்கள் செய்தல்
  • வெளிநாட்டுடனான உடன்படிக்கைகளுக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுதல்
நீதித்துறை பிரிவின் மீதான கட்டுப்பாடுகள்

  • கூட்டாட்சி நீதிபதிகளை நியமிக்கிறார்.
  • கூட்டாட்சியிலுள்ள குற்றவாளிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்குதல்
சட்டமன்றப் பிரிவு (காங்கிரஸ் சட்டங்களை உருவக்குகிறது)

செயலாட்சிப் பிரிவின் மீதான கட்டுப்பாடுகள்

  • குடியரசுத் தலைவரின் ரத்து அதிகாரங்களை மீறிச் செயல்படும் அதிகாரமிக்கதாகும்.
  • செயலாட்சியின் நியமனங்களை உறுதிசெய்தல்
  • உடன்படிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்தல்
  • போரைப் பிரகடனப்படுத்துதல்
  • நிதி ஒதுக்கீடு செய்தல்
  • குடியரசுத் தலைவரை பதவி நீக்க நடைமுறையின் மூலம் அகற்றுதல்
நீதித்துறைப் பிரிவின் மீதான கட்டுப்பாடுகள்

  • கூட்டாட்சியின் கீழமை நீதிமன்றங்களை உருவாக்குதல்
  • நீதிபதிகளைப் பதவி நீக்கமுறையின் மூலம் அகற்றுதல்
  • நீதித்துறையின் முடிவுகளை மீறும் அதிகாரம் கொண்டதுடன் சட்டத்திருத்தத்தினை முன்மொழியலாம்.
  • கூட்டாட்சி நீதிபதிகளின் நியமனங்களை அங்கீகரித்தல்
நீதித்துறைப் பிரிவு (உச்சநீதிமன்றமானது சட்டங்களுக்கு விளக்கமளித்தல்)

செயலாட்சிப் பிரிவின் மீதான கட்டுப்பாடுகள்

  • செயலாட்சியின் நடவடிக்கைகளை அரசமைப்பிற்கு முரணானதாக பிரகடனப்படுத்துதல்
சட்டமன்றப் பிரிவின் மீதான கட்டுப்பாடுகள்

  • சட்டமன்றத்தின் நடவடிக்கைகளை அரசமைப்பிற்கு முரணானதாக பிரகடனப்படுத்துதல்

அரசாங்கத்தை அறிந்து கொள்வதற்கான அணுகுமுறைகள்

பல்வேறு வகையான அணுகுமுறைகள் மூலம் அரசாங்கத்தை அறிந்து கொள்ள முயல்வது நமக்கு அரசாங்கத்தின் தோற்றம் மற்றும் அதன் செயல்பாடுகளை விரிவாக அறிந்து கொள்ள உதவுகிறது.

அ) ஒப்பிட்டு மற்றும் வரலாற்று அணுகுமுறை

ஒப்பீட்டு மற்றும் வரலாற்று அணுகுமுறையானது மேற்கத்திய அரசியல் நிறுவனங்களைப் பண்டைய காலம் முதல் தற்காலம் வரை கற்றறிந்து உள்ளது. இந்த அணுகுமுறை விளக்கரீதியான தன்மையை கொண்டது. அரிஸ்டாட்டில், மாண்டெஸ்க்யூ மற்றும் லாக் ஆகியோர் இவ்வணுகுமுறையினைக் கையாண்டு அரசாங்கங்களை பகுத்தாய்ந்தனர்.

உதாரணமாக, அரிஸ்டாட்டில் தனது மிகச்சிறந்த படைப்பான ‘அரசியல்’ எனும் புத்தகத்தை எழுதும்முன் 158 நாடுகளின் அரசமைப்புகளை பகுத்தாய்ந்துள்ளார். மாண்டெஸ்க்யூ இங்கிலாந்து அரசமைப்பை பகுத்தாராய்ந்து பின்னர் இங்கிலாந்து அரசமைப்பின் உறுதித்தன்மைக்கு ‘அதிகாரங்களின் பிரிவினையே காரணம்’ என கண்டுணர்ந்தார்.

ஆ) சட்ட மற்றும் நிறுவனம் சார்ந்த அணுகுமுறை

பெந்தம், ஆஸ்டின் மற்றும் டைசி போன்ற அறிஞர்கள் இந்த அணுகுமுறையினைக் கையாண்டனர். இது அரசியல் நிறுவனங்களின் முறையான சட்டக் கட்டமைப்பை மையமாக கொண்டதாகும்.

அரசாங்கம் மற்றும் சட்டத்திற்கு இடையேயான தொடர்புகளை விளக்குவதற்கு ஏதுவாக சிலகோட்பாடுகளை உருவாக்கம் செய்ய இந்த அணுகுமுறை உதவுகின்றது. பெந்தம் இங்கிலாந்து சட்டத்தை சீரமைப்பு செய்ய தன்னிகற்ற அறிஞர் ஆவார். ஆஸ்டின் இறையாண்மையின் சட்டரீதியான அடிப்படையை உணர்த்தியவர் ஆவார். மேலும் இவர் இறையாண்மை என்பது பிரிக்க இயலாத, மாற்றித்தர முடியாத மற்றும் இறுதியான அதிகாரம் என்று கூறியவர் ஆவார். ஏ.வி.டைசி அரசாங்கத்தினை சட்டத்தின் அடிப்படையிலும், அரசாங்கம் பிறகிளைகளில் அதன் செயலாக்கத்தினைப் பொறுத்தும் மதிப்பிடுகிறார்.

இ) அரசியல் பொருளாதார அணுகுமுறை

இது அரசியலுக்குப் பொருளாதாரம் சார்ந்த விளக்கங்களை அளிக்கின்றது. மேலும் சந்தையின் பங்களிப்பு, உற்பத்தி வழிமுறைகள் மற்றும் சமூகத்திற்கு உற்பத்தி பொருட்களை கொண்டு செல்வது குறித்தும் இது விவாதிக்கின்றது. இந்த அணுகுமுறை தாராளவாத அரசியல் பொருளாதாரம் மற்றும் மார்க்சிய அரசியல் பொருளாதாரம் என இருவகையாக வகைப்படுத்தப்படுகின்றது.

ஈ) அரசியல் சமூகவியல் அணுகுமுறை

இந்த அணுகுமுறையானது சமூகவியல் மற்றும் மானுடவியல் சார்ந்து உள்ளது. மேலும் இதனை அமைப்புசார் அணுகுமூறை என்றும் கூறலாம். அரசாங்கம் அல்லது அரசியல் அமைப்பு என்பது சமூகம் உறுதி செய்கின்றது. இந்த அணுகுமுறை பெரிய மற்றும் சிறிய அமைப்புகளுக்கிடையேயான தொடர்பை ஆராய்கின்றது.

மாண்டெஸ்க்யூ அரசாங்கத்தை மூன்று விதமாக வகைப்படுத்துகிறார், அவை முறையே குடியரசு, முடியாட்சி மற்றும் கொடுங்கோல் அரசாங்கம் ஆகும்.

குடியரசு அரசாங்கம்

இவ்வகை அரசாங்கத்தில் மக்கள் இறையாண்மை அதிகாரத்தை பெற்றுள்ளனர்.

முடியாட்சி அரசாங்கம்

இது ஒரு தனி மனிதனின் ஆட்சியாகும். அத்துடன் நிலையாக நிறுவப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடத்தப்பெறுவது ஆகும்.

கொடுங்கோல் அரசாங்கம்

ஒரு தனிமனிதனின் விருப்பு, வெறுப்பிற்கு உட்பட்டே ஆளுகை நடைபெறும். மேலும் நிறுவப்பெற்ற மற்றும் நிலையான சட்டதிட்டங்கள் கிடையாது. மாண்டெஸ்க்யூவின் கூற்றுப்படி, அரசு தொடர்ந்து நோடித்திருப்பதற்கு “உறுதியான சமுதாயத்தினுடைய குறிப்பிட்ட உத்வேகத்தின் பண்பியல் வடிவத்தை சார்ந்த்திருக்கிறது”.

அரசாங்கத்தின் பொருள் வரையறை மற்றும் தன்மை:

  • அரசாங்கம் என்பது அரசின் செயலாட்சிப் பணிகளைக் குறிப்பதாகும். இது குடிமை, பெருநிறுவனம், மதம், கல்வி மற்றும் பிற குழுக்களுக்கு சட்டம் இயற்றி செயல்படுத்தும் அதிகாரம் கொண்ட அமைப்பினைக் குறிப்பதாகும்.
  • அரசாங்கம் எனும் சொல்லானது பழைய பிரெஞ்சு, வார்த்தையான ‘ஆளுநர்’ (Governor) ‘குபர்நேட்’ (Gubernate) என்ற லத்தீன் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். இதன் பொருள் இயக்குதல், ஆட்சி, வழிகாட்டு, ஆளுகை என்பதாகும்.

மிகப்பழமையான அரசாங்கம் முறை எது?

இங்கிலாந்தின் முடியாட்சியே மிகப் பழமை வாய்ந்த அரசாங்க வடிவமாகும். முடியாட்சியில் மன்னர் அல்லது ராணி அரசின் தலைவராக இருப்பார். இங்கிலாந்து முடியாட்சியானது அரசமைப்பிலன முடியாட்சி என அழைக்கப்படுகிறது. மன்னர் அரசினுடைய தலைவராக இருந்தாலும், சட்டமியற்றக்கூடிய தகுதி தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்திடமே உள்ளது என்பது இதன் பொருளாகும்.

அரசாங்கத்தின் வகைப்பாடு பற்றி அரிஸ்டாட்டில்

அரிஸ்டாட்டில் இரண்டு அடிப்படைகளின் இணைவில் அவர் பகுப்பாய்ந்த அரசமைப்புக்களை வகைப்படுத்தியுள்ளார்.

முதலாவது அடிப்படை

ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை ஒன்று, சில மற்றும் பல என்பதன் அடிப்படிஅயில் முடியாட்சி, பிரபுக்கள் ஆட்சி, தூய அரசியல் அமைப்புமுறை (Polity) என வகைப்படுத்தியுள்ளார்.

இரண்டாவது அடிப்படை

அரசாங்கம் யாருடைய நலனுக்காக செயல்படுகின்றது என்ற அடிப்படையில் பொதுநலம் மற்றும் சுயநலம் என்று வகைப்படுத்தியுள்ளார். கீழ்வரும் அட்டவணை மூலம் நெறி தவறிய மூன்று வடிவங்களான கொடுங்கோலாட்சி , சிறுகுழு ஆட்சி மற்றும் மக்களாட்சியினை காணலாம்.

அதிகாரத்தில் உள்ளோர் எண்ணிக்கை மக்கள் நலம் சுயநலம்
ஒன்று முடியாட்சி கொடுங்கோல் ஆட்சி
சிலர் பிரபுக்கள் ஆட்சி சிறுகுழுவின் ஆட்சி
பலர் தூய அரசியல் அமைப்பு முறை (Polity) மக்களாட்சி அல்லது கும்பல் ஆட்சி

ஒற்றையாட்சிமுறை அரசாங்கம் (Unitary Form of Government):

ஒற்றையாட்சி அரசாங்கம் அல்லது அரசு என்பது ஒன்றாக இணைத்து ஆட்சி செய்யப்படக்கூடிய இறையாண்மையுடைய அரசு ஆகும். ஒற்றையாட்சிமூறை அரசாங்கத்தில், மத்திய அரசாங்கமே அனைத்து அதிகாரத்தையும் உள்ளடக்கியதாகும். நிர்வாக காரணங்களுக்காகத் தோன்றிய பிற பிரிவுகள் மத்திய அரசாங்கம் தற்காலைகமாகப் பகிர்ந்தளித்த அதிகாரத்தின் அடிப்படையிலேயே செயல்பட இயலும்.

ஒற்றையாட்சி அரசாங்கத்தில் அதிகாரத்தைப் பகுர்ந்தளிக்கும் முறைகள்

ஒற்றையாட்சி முறை அரசாங்கங்கள் – உதாரணம் : இங்கிலாந்து , பிரான்சு, ஜப்பான் மற்றும் இலங்கை.

ஒற்றையாட்சி அரசாங்கத்தில் அனைத்து அதிகாரங்களும் மையமாக ஓரிடத்தில் குவிந்து இருக்கும், மாறாக கூட்டாட்சி அரசாங்கத்தில் அதிகாரமானது மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படும். ஒற்றையாட்சி அரசாங்கத்தில் அதிகார பகிர்வு இருப்பினும் அக்காரணத்தினால் அதனை கூட்டாட்சி முறை என முடிவு செய்ய இயலாது.

ஒற்றையாட்சியின் வரையறை:

சில அரசியல் சிந்தனையாளர்கள் ஒற்றையாட்சி முறை அரசாங்கத்தினை பின்வருமாறு வரையறை செய்கின்றனர்.

ஏ.வி.டைசி:

ஒர் மைய சக்தியே மேலான சட்டமியற்றும் அதிகாரத்தினை வழக்கமாகச் செயல்படுத்துகிறது.

கார்னர்:

ஒர் மத்திய அமைப்பிடம் அரசாங்கத்தின் அனைத்து அதிகாரங்களும் அரசமைப்பு மூலம் வழங்கப்பட்டிருக்கும்.

சி.எஃப். ஸ்ட்ராங்:

ஒற்றையாட்சி அரசாங்கத்திற்கு இரண்டு முக்கிய தகுதிகள் உள்ளன அவையாவன:

  • மத்திய அரசாங்கத்தின் மேலான தன்மை
  • இறையாண்யுடைய துணை அமைப்புகள் இல்லாதிருத்தல்

துணை சட்டமியற்றும் அமைப்புகளுக்கும், இறையாண்மையுடைய துணை அமைப்புகளுக்கும் உள்ள வேறுபாடு என்பது ஒற்றையாட்சியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டாசியில் அங்கமாக உள்ள அலகுகளுடனான வேறுபாடுகளுக்கு ஒப்பானதாகும்.

K.C.வியர்:

கோட்பாட்டின் அடிப்படையில் ஒற்றையாட்சியாக இருக்கும் ஒர் அரசமைப்பு, நடைமுறையில் பெரும்பாலும் கூட்டாட்சி அமைப்பாக இருக்க வாய்ப்புள்ளது. அதேபோல கூட்டாட்சியாக இருக்கும் ஒரு அரசமைப்பு நடைமுறையில் ஒற்றையாட்சியாக இருக்க வாய்ப்புள்ளது. உதாரணமாக மெக்சிகோ, வெனிசுலா, பிரேசில் மற்றும் அரிஜென்டினா போன்ற கூட்டாட்சி அரசமைப்புக்களைக் கூறலாம்.

ஒற்றையாட்சி முறை அரசாங்கத்தின் நிறைகள் (Merits of Unitary form of Givernment)

  • சிறிய நாடுகளுக்கு உகந்தது
  • அதிகாரம் மற்றும் பொறுப்பு சார்ந்த மோதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.
  • ஒற்றையாட்சி முறையில் சரியான நேரத்தில் முடிவுகள் எடுக்கப்படுவதுடன் செயல்பாடுகள் விரைவாக இருக்கும்.
  • ஒற்றையாட்சி முறை அரசாங்கம் குறைந்த செலவீனம் கொண்டதாகும்.
  • அரசமைப்பில் திருத்தங்கள் கொண்டுவருவது எளிதாகும்.
  • நாடு முழுவதற்குமான ஒரே சீரான சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நிர்வாகம் ஆகியவை இருக்கும்.

ஒற்றையாட்சி முறை அரசாங்கத்தின் குறைகள் (De-merits of Unitary form of Government)

  • பெரிய நாடுகளுக்கு ஒற்றையாட்சி முறை பொருந்தாது.
  • மத்திய அரசாங்கம் பல சிக்கலான பிரச்சினைகளை சமாளிக்க நேர்வதால் நிர்வால ரீதியான தாமதம் ஏற்படுவதற்கு வாயுப்புகள் அதிகமாகும்.
  • மத்திய அரசானது வட்டாரத் தேவைகள் சார்ந்த துவக்கமுறை மற்றும் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை.
  • மத்திய அரசாங்கத்தில் அதிக அதிகாரங்கள் குவிந்து உள்ளதால், மத்திய அரசாங்கம் ஏதேச்சதிகாரமான போக்கை கடைபிடிக்க வயப்புள்ளது.

இந்திய அரசமைப்பின் ஒற்றையாட்சி இயல்புகள்

அ) உறுதியான மத்திய அரசாங்கம்

  • அதிகாரப் பகிர்வானது மத்திய அரசுக்குச் சாதகமாக இருப்பதுடன், கூட்டாட்சி நோக்கில் பார்க்கும்போது அதிகாரம் சமநிலையற்று பகிரப்பட்டிருக்கும். முதலில் சமநிலையற்று பகிரப்பட்டிருக்கும்.
  • முதலில் இந்தியாவில் மத்தியப்பட்டியலானது மாநிலப் பட்டியலைவிட அதிக அதிகாரங்கள் கொண்ருக்கிறது. இரண்டாவதாக முக்கியமான அதிகாரங்கள் அனைத்து மத்திய அரசிடமே இருக்கிறது. மூன்றாவதாக பொதுப்பட்டியலிலும் மத்திய அரசின் அதிகாரமே மேலோங்கி இருக்கிறது.
  • இறுதியாக, இந்திய அரசமைப்பின் எஞ்சிய அதிகாரங்களும் மத்திய அரசாங்கத்திடமே உள்ளது. இதற்கு மாறாக அமெரிக்க அரசமைப்பின்படி எஞ்சிய அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடம் உள்ளது. மேற்கூறிய வகைகளில் இந்திய அரசமைப்பானது மத்திய அரசாங்கத்தினை அதிக வலிமையானதாக உருவாக்கியுள்ளது.

ஆ) மாநில நிலப்பரப்புகளின் மீதான மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாடு

பிற கூட்டாட்சிகளைப் போலன்றி இந்தியாவில் மாநில அரசுகளுக்குத் தங்களது நிலப்பரப்பிற்கு உட்பட்ட பகுதிகளின் மீது அதிகாரம் கிடையாது. இந்திய நாடாளுமன்றம் தன்னிச்சையாக மாநிலங்களின் பெயர், நிலப்பரப்பு மற்றும் எல்லைகளை வரையறை செய்ய இயலும்.

இ) ஒற்றை அரமைப்பு

வழக்கமாகக் கூட்டாட்சி அமைப்பு முறையில், மாநிலங்கள் தங்களுக்கான அரசமைப்பை தனியாக இயற்றிக் கொள்ள உரிமை உண்டு. இதற்கு மாறாக இந்தியாவில் அவ்வகையான அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை. இந்திய அரசமைப்பானது மத்திய மற்றும் மாநிலங்களுக்கான அரசமைப்பை உள்ளடக்கியது ஆகும். இதன்படி மட்டுமே மத்திய, மாநில அரசாங்கங்கள் செயல்பட முடியும். இதற்கு ஜம்மு காஷ்மீர் மாநிலம் மட்டுமே விதிவிலக்காகும். ஏனெனில் இம்மாநிலத்திற்கு மட்டுமே தனி அரசமைப்பு உண்டு.

ஈ) அரசமைப்பின் நெகிழும் தன்மை

இந்திய அரசமைப்பின் பெரும்பான்மையான பகுதியை நாடாளுமன்றம் தன்னிச்சையாக அரசமைப்பு சட்ட திருத்தத்தின் மூலமாக மாற்றலாம். இம்மாற்றங்களைச் செய்ய சாதாரண பெரும்பான்மை அல்லது சிறப்பு பெரும்பான்மை பெற்றிருந்தால் போதுமானதாகும். இருப்பினும் அரசமைப்பு சட்டத்திருத்தத்திற்கான துவக்கத்தினை மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே உள்ளது. அமெரிக்காவில் மாநிலங்களுக்கும் அரசமைப்பு சட்ட திருத்தத்தை துவக்க உரிமையுண்டு. மாறாக இந்தியாவில் மாநிலங்களுக்கு அவ்வுரிமை கிடையாது.

உ) மாநிலங்களின் சமநிலையற்ற பிரதிநிதித்துவம்

கூட்டாட்சி தத்துவத்தின்படி நாடாளுமன்றத்தின் மேலவையில் மாநிலங்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் அளித்தல் வேண்டும். மாறாக இந்திய மாநிலங்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் மாநிலங்களவையில் அளிக்கப்படவில்லை.

ஊ) நெருக்கடி நிலை அதிகாரங்கள்

இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனத்தின் போது மத்திய அரசாங்கம் மிகவும் வலிமையாக இருப்பதுடன் மாநில அரசுகள் மத்திய அரசின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் சென்றுவிடும். நெருக்கடி நிலை காலத்தில் கூட்டாட்சி நடைமுறையானது அரசமைப்புச் சட்டத்திருத்தம் செய்யப்படாமலேயே ஒற்றையாட்சி நிலைக்கு சென்றுவிடும். இவ்வகையான மாற்றம் எந்தவொரு கூட்டாட்சி அமைப்பிலும் கிடையாது.

எ) ஒற்றைக் குடியுரிமை

இந்தியா ஒற்றைக்குடியுரிமை என்னும் மூறையினை ஏற்றுக்கொண்டுள்ளது. நம் நாட்டில் இந்தியக் குடியுரிமை மட்டுமே உள்ளது, மாநிலங்களுக்கு தனி குடியுரிமை கிடையடஹு.

நம் நாட்டில் எந்த மாநிலத்திலும் பிறந்த அல்லது வசிக்கின்ற அனைத்து குடிமக்களும், மாநில வேறுபாடின்றி நாடு முழுவதும் ஒரே மாதிரியான உரிமைகளைக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்கா, சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற கூட்டாட்சி அரசுகளில் குடிமக்கள் ‘இரட்சைக் குடியுரிமை’ பெற்றுள்ளனர். அதாவது தேசியக் குடியுரிமை மற்றும் மாநிலக் குடியுரிமை ஆகியவையாகும்.

ஏ) ஒருங்கிணைந்த ஒரே நீதித்தூறை

இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றத்திலிருந்து கீழமை நீதிமன்றங்கள் வரை படிநிலை அமைப்பின் அடிப்படையில் உள்ளது. இந்திய நீதிமன்றங்களுக்கு நேரடி மற்றும் மேல்முறையீட்டு அதிகாரங்கள் உள்ளன.

ஐ) அகில இந்தியப் பணிகள்

இது அகில இந்திய பணிகள் அல்லது மத்தியப் பணிகள் மற்றும் மாநில குடிமைப் பணிகள் ஆகியவற்றின் இயல்புகளைக் கொண்டுள்ளது. மத்திய மற்றும் அகில இந்தியப் பணிகள் ஆகியவை ஒரே சீரான நிர்வாக முறைமை மற்றும் செயல்முறையினை இந்தியா முழுமைக்கும் ஊக்குவிக்கின்றன.

ஒ) ஆளுநர் நியமனம்

மாநில ஆளுநர் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை, குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகிறார், இவர் குடியரசுத் தலைவரின் விருப்பத்தின் அடிப்படையிலேயே பணியைத் தொடர்கிறார். ஆளுநர் என்பவர் மாநிலத்தின் செயலாட்சித்துறைத் தலைவர் ஆவார். அவருக்கு சட்டமன்றம், செடலாட்சி, நீதித்துறை மற்றும் நெருக்கடி நிலை தொடர்பான அதிகாரங்கள் உண்டு.

கூட்டாட்சி முறை அரசாங்கம்

ஒற்றையாட்சி மற்றும் கூட்டாட்சி என்ற வகைப்பாடு என்பது மாநிலங்கள் மற்றும் மத்திய அரசாங்களுக்கிடையேயான உறவுகளின் அடிப்படையில் அமைவதாகும், கூட்டாட்சி அரசாங்கம் என்பது தேசிய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கிடையே அரசமைப்பிலான அதிகார பிரிவினையின் அடிப்படையில் அமைவதாகும். அதன் அடிப்படையில் அவ்வரசுகள் தங்களுக்கென உள்ள அதிகார எல்லையின் படி சுதந்திரமாகச் செயல்பட முடியும். அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா, ரஷ்யா, பிரேசில் மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகள் கூட்டாட்சி முறையிலான அரசாங்கத்தினை கோண்டுள்ளன. கூட்டாட்சி மாதிரியிலான அரசமைப்பில் தேசிய அரசாங்கமானது மத்திய அரசாங்கம் அல்லது ஒன்றிய அரசாங்கம் எனவும், வட்டார அரசாங்கங்கள் மாநில அரசாங்கம் அல்லது மாகாண அரசாங்கம் எனவும் அறியப்படுகின்றன.

இந்திய அரசமைப்பின் கூட்டாட்சி இயல்புகள்

அ) இரட்டை அரசாங்கம்

இந்திய அரசமைப்பின்படி மத்திய அளவில் ஒன்றியமும் அதன் பரப்பளவிற்குள் மாநில அரசாங்கங்கள் என இரண்டு வகையான அரசாங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த இரண்டு அரசாங்கங்களும் அரசமைப்பில் கூறப்பட்டுள்ளவாறு தனக்கென தனிப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு செயல்படுகின்றன.

ஆ) எழுதப்பட்ட அரசமைப்பு

இந்திய அரசமைப்பு எழுதப்பட்ட விதிகளைக் கொண்டிருப்பதால் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் திருத்தங்கள் கொண்டுவருவது கடினமாகும்.

இ) அதிகாரப் பங்கீடு

இந்திய அரசமைப்பின் ஏழாவது அட்டவணையின்படி மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் மத்திய பட்டியல், மாநில பட்டியல் மற்றும் பொதுப் பட்டியல் என்ற அடிப்படையில் அதிகாரம் பங்கிட்டு அளிக்கப்பட்டுள்ளது.

ஈ) அரசமைப்பின் மேலான தன்மை

இந்தியாவில் அரசமைப்புச் சட்டமே நாட்டின் மிகவும் உயர்ந்த சட்டமாகும். மத்திய மற்றும் மாநில அரசுகள் இயற்றும் சட்டங்கள் அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இருத்தல் வேண்டும்.

உ) நெகிழா அரசமைப்பு

ஒவ்வொரு அவையிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை என்ற நடைமுறையின் மூலமே அரசமைப்புச் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் ஆளும் கட்சியினரால் மிக எளிதாக அரசமைப்பு சட்டத்திருத்தம் கொண்டுவர இயலாது.

ஊ) சுதந்திரமான நீதித்துறை

இந்தியாவில் நீதிமன்றமானது சட்டமன்றம் மற்றும் செயலாட்சித் துறையின் தலையீடு இல்லாமல் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் தேசிய மற்றும் மாநில அளவிலான அதிகார எல்லைகளின் படி அவை நேரடி, மேல் முறையீட்டு மற்றும் நீதிப்புனராய்வு பணிகளை மேற்கொள்கிறது.

எ) ஈரவைச் சட்டமன்றம் முறை (Bicameralism)

இந்திய நாடாளுமன்றமானது மேலவை மற்றும் கீழவை என இரண்டு அவைகள் கொண்டதாகும். மேலும் கீழவை நிதி தொடர்பான சட்டமியற்றலை மேற்கொள்ளும் அதிகாரம் கொண்டதாகும்.

கூட்டாட்சி மூறை அரசாங்கத்தின் நிறைகள்

  • உள்ளாட்சியினுடைய தன்னாட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு இடையே சமரசத்தினை ஏற்படுத்துகிறது.
  • மத்திய, மாநில அரசாங்கங்களுக்கிடையே அதிகாரம் பகிரப்படுபவதால் நிர்வாகத் திறன் மேம்படுகிறது.
  • அளவில் மிகப்பெரிய நாடுகள் உருவாவதற்கு வாய்ப்புகள் உருவாகின்றது.
  • அதிகாரங்கள் பங்கீடு செய்யப்படுவதால் மத்திய அரசாங்கம் ஏதேச்சதிகாரத்துடன் செயல்படுவதைக் கட்டுப்படுத்த இயலும்.
  • மிகப்பெரிய நாடுகளுக்கு கூட்டாட்சி அரசாங்கம் மிகவும் பொருத்தமானதாகும்.
  • பொருளாதார மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு இது மிகவும் நன்மையாகும்.

கூட்டாட்சி முறை அரசாங்கத்தின் குறைகள்

  • ஒற்றையாட்சி அரசாங்கத்தோடு ஒப்பிடும்போது கூட்டாட்சி அரசாங்கங்கள் வலிமையற்றவை ஆகும்.
  • கூட்டாட்சி அரசாங்கங்கள் அதிக செலவினங்களை கொண்டதாகும்.
  • பிரிவினைவாத மனப்போக்கு உருவாக பொதுவான வாய்ப்புகள் உள்ளன.
  • நிர்வாகத்தில் ஒருமுகத் தன்மையை கோண்டுவர இயலாது.
  • தேசிய ஒருமைப்பாட்டிற்கு இது ஒரு அச்சுறுத்தலாகும்.
  • மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான அதிகாரப் பங்கீடு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
  • இரட்டைக் குடியுரிமை
  • மாறிவரும் சூழல்களுக்கேற்ப நெகிழா அரசமைப்பினை எளிதாகத் திருத்துவது இயலாததாகும்.
  • சில சமயங்களில் மாநில அரசாங்கங்கள் அயலுறுவுக் கொள்கையில் தடையை ஏற்படுத்துகின்றன.

கூட்டாட்சி மற்றும் ஒற்றையாட்சி அரசாங்கத்திற்கிடையேயான வேறுபாடுகள்

வ.எண் ஒற்றையாட்சி கூட்டாட்சி
1 ஒரு அடுக்கு அரசாங்கம் மற்றும் துணை அலகுகள் இரண்டு அடுக்கு அரசாங்கம்
2 பெரும்பாலும் ஒற்றை குடியுரிமை இரட்டைக் குடியுரிமை
3 துணை அலகுகள் சுதந்திரமாகச் செயல்பட இயலாது. கூட்டாட்சி அலகுகள் மத்திய அரசுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.
4 அதிகாரப்பகிர்வு என்பது கிடையாது. அதிகாரப் பகிர்வு என்பது இருக்கும்.
5 அதிகாரக் குவிப்பு அதிகாரப் பரவலாக்கம்
வ.எண் நாடு நாடாளுமன்றம்
1 இஸ்ரேல் நெசெட்
2 ஜெர்மனி பன்டஸ்டாக்
3 ஜப்பான் டயட்
4 நார்வே ஸ்டோர்டிங்
5 நேபாளம் பஞ்சாயத்து
6 பாகிஸ்தான் தேசிய சபை
7 ரஷ்யா டூமா
8 அமெரிக்கா காங்கிரஸ்
9 தென் ஆப்பிரிக்கா நாடாளுமன்றம்
10 சுவிட்சர்லாந்து கூட்டாட்சி சபை
தொகுப்பு
வ.எண் வகையினம் வகைகள் நாடுகள்
1 அரசாங்கத்தின் முறைகள் குடியரசுத் தலைவர் முறை அரசாங்கம் அமெரிக்கா
நாடாளுமன்ற முறை அரசாங்கம் இங்கிலாந்து
நேரடி மக்களாட்சி சுவிட்சர்லாந்து
மறைமுக மக்களாட்சி இந்தியா
முடியாட்சி முழுமையான முடியாட்சி – பஃரைன்
அரசமைப்பிலான முடியாட்சி – ஜப்பான்
காமன்வெல்த் பகுதிகள் – ஆஸ்திரேலியா
சர்வாதிகாரம்

மதச்சார்பின்மை

ஹிட்லரின் ஜெர்மனி, முடோலியின் இத்தாலி

இந்தியா

2
சமய ஆட்சி பாகிஸ்தான், ஈரான், வாடிகன், நேபாளம்
3 நிலப்பரப்பு சார்ந்த அதிகாரப் பங்கீடு ஒரவை சட்டமன்றம் சீனா
ஈரவை சட்டமன்றம் இங்கிலாந்து, அமெரிக்கா
4 செயலாட்சியின் வகைகள் ஒற்றை செயலாட்சி மாதிரி அமெரிக்கா
பன்மை செயலாட்சி பிரான்சு
5 நீதித்துறையின் வகைகள் சுதந்திரமானது அனைத்து மக்களாட்சி நாடுகள்
அர்ப்பணிப்பு உறுதியுடையது முன்னாள் சோவியத் ரஷ்ய குடியரசு
6 அரசமைப்பின் தன்மை நெகிழாதது மற்றும் எழுதப்பட்டது அமெரிக்கா
நெகிழும் தன்மையுடையது மற்றும் எழுதப்படாதது இங்கிலாந்து
7 அரசின் தன்மை (நோக்க லட்சியம் மற்றும் கொள்கைகள் அடிப்படையிலானது) முதலாளித்துவம் அமெரிக்கா
பொதுவுடைமை கியூபா, சீனா, வடகொரியா
சமதர்மம் ரஷ்யா

நாடாளுமன்ற முறை அரசாங்கம்

  • தற்கால மக்களாட்சி அடிப்படையிலான அரசாங்கங்கள் நாடாளுமன்ற முறை அரசாங்கம் மற்றும் குடியரசுத் தலைவர் முறை அரசாங்கம் என வகைப்படுத்தப்படுகின்றன. இந்த வகைப்பாடானது அரசாங்கத்தின் சட்டமியற்றும் அமைப்பிற்கும், செயலாட்சிக்கும் இடையேயான உறவுகளின் தன்மையில் அடிப்படையிலானதாகும்.
  • நாடாளுமன்ற முறை அரசாங்கத்தில் செயலாட்சியானது தனது கொள்கைகள் மற்றும் செயல்பாட்டிற்காக, நாடாளுமன்றத்திற்குப் பொறுப்பானதாகும். மாறாக குடியரசுத் தலைவர் முறை அரசாங்கத்தில் , செயலாட்சியானது சட்டமன்றத்திற்கு தங்களது கொள்கைகள் மற்றும் செயல்பாட்டிற்காக பதில் சொல்ல அவசியம் கிடையாது.
  • மேலும் செயலாட்சியானது அரசமைப்பின் அடிப்படையில் சட்டமன்றத்திடம் இருந்து சுதந்திரமாக இயங்குகிறது.
  • நாடாளுமன்ற முறை அரசாங்கம் என்பது அமைச்சரவை முறை அரசாங்கம் என்றும், கடமைப்பாடுடைய அரசாங்கம் அல்லது வெஸ்ட் மினிஸ்டர் (West Minister) அரசாங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கிலாந்து, ஜப்பான், கனடா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் நாடாளுமன்ற முறை அரசாங்கத்தைப் பின்பற்றுகின்றன.

  • ஐவர் ஜென்னிங்ஸ் நாடாளுமன்ற முறை அரசாங்கத்தை அமைச்சர் குழுமுறை என்று அழைக்கிறார். ஏனெனில் அமைச்சரவை என்பது நாடாளுமன்ற அரசாங்க முறையினுடைய அதிகாரத்தின் மையக்கருவாக விளங்குகிறது.
  • நாடாளுமன்ற முறை அரசாங்கம் என்பது கடமைப்பாடுடைய அரசாங்கமாகும். இதில் அமைச்சரவை என்பது உண்மையான செயலாட்சியாகும். மேலும் இது நாடாளுமன்றத்திற்கு பொறுப்பானதாக இருப்பதுடன் அதன் நம்பிக்கையை பெற்ற வரையிலும் பதவியில் நீடிக்கிறது.
  • இங்கிலாந்தில்தான் நாடாளுமன்ற முறை அரசாங்கம் தோன்றியது. இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் அமைவிடம் வெஸ்ட் மினிஸ்டர் (West Minister) ஆகும். எனவே நாடாளுமன்ற முறை அரசாங்கம் வெஸ்ட் மினிஸ்டர் (West Minister) முறை அரசாங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கிலாந்தின் பிரதம மந்திரி மற்ற அமைச்சர்களை ஒப்பிடுகையில் அதிக அதிகாரம் கொண்டவர்.
  • இவர் தனது அமைச்சரவையில் சமமானவர்களில் முதன்மையானவராக (Primus interpares) கருதப்படுகிறார். தற்போதைய காலகட்டத்தில் பிரதம மந்திரியின் அதிகாரங்கள் அதிகரித்துள்ளது. பிரிட்டனின் அரசியல் மற்றும் நிர்வாகத்தில் தற்போதைய பிரதம மந்திரி ஆதிக்கம் செலுத்துகிறார்.

நாடாளுமன்ற முறை அரசாங்கத்தின் இயல்புகள்

அ) பெயரளவு செயலாட்சி மற்றும் உண்மையான செயலாட்சி

குடியரசுத் தலைவர் பெயரளவு அதிகாரம் கொண்ட செயலாட்சியாவார் (de- jure executive (or) titular executive). மாறாக பிரதம மந்திரி உண்மையான அதிகாரம் கொண்ட செயலாட்சியாக விளங்குகிறார் (de-facto executive).இவ்வகையில் குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவர் என்றும் பிரதம மந்திரி அரசாங்கத்தின் தலைவர் என்றும் கருதப்படுகிறார்.

ஆ) பெரும்பான்மை பெற்ற அரசியல் கட்சியின் ஆட்சி

நாடாளுமன்றத்தின் கீழவையில் பெரும்பான்மைப் பெற்ற கட்சியே அரசு அமைக்கின்றது. அக்க்சட்சியின் தலைவர் குடியரசுத் தலைவரால் பிரதம மந்திரியாக நியமிக்கப்படுகிறார். பிற அமைச்சர்கள் பிரதம மந்திரியின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மஒ கிடைக்காத நிலையில் கட்சிகளின் கூட்டணியை குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார்.

இ) கூட்டுப் பொறுப்புணர்வு

அமைச்சர்கள் நாடாளுமன்றத்திற்கு கூட்டுப் பொறுப்பாகும் கடமைப்பட்டவர்கள். இதுவே நாடாளுமன்ற முறை அரசாங்கத்தின் அடிப்படை கோட்பாடாகும்.

ஈ) இரட்டை உறுப்பினராதல்

அமைச்சர்கள் ஒரே நேரத்தில் நாடாளுமன்ரத்திலும் செயலாட்சிப் பிரிவிலும் உறுப்பினர்களாக இருப்பர்.

உ) பிரதம மந்திரியின் தலைமை

நாடாளுமன்ற முறை அரசாங்கத்தின் பிரதம மந்திரியே தலைமை பொறுப்பு வகிக்கிறார். அவரே அமைச்சரவை குழு, நாடாளுமன்றம் மற்றும் ஆட்சியிலுள்ள கட்சியின் தலைவர் ஆவார். இவ்வகையில் பிரதம மந்திரி அரசாங்கத்தின் செயல்பாடுகளில் குறிப்பிடத் தகுந்த மிக முக்கிய பங்கு வகிக்கிறார்.

நாடாளுமன்ற முறை அரசாங்கத்தின் நிறைகள்

அ) சட்ட மன்றம் மற்றும் செயலாட்சி இடையேயான நல்லிணக்கம்

நாடாளுமன்ற முறை அரசாங்கத்தின் மிகப்பெரிய நன்மையாதெனில் அது அரசாங்கத்தின் அங்கங்களான சட்டமன்றம் மற்றும் செயலாட்சிக்கு இடையே நல்லிணக்கமான உறவுகள் மற்றும் கூட்டுறவினை ஏற்படுத்துகிறது. செயலாட்சி பிரிவு உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் இருப்பதால் அவர்களுக்கிடையே சிக்கல்கள் எழுவதிற்கான சாத்தியம் குறைவாகிறது. எனவே அவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

ஆ) கடமைப்பாடுடைய அரசாங்கம்

நாடாளுமன்ற முறை அரசாங்கம் ஒரு கடமைப்பாடுடைய அரசாங்கம் உருவாவதற்கு வழிவகுக்கின்றது. அமைச்சர்கள் அவர்களுடைய அனைத்து செயல்களுக்கும் நாடாளுமன்றத்திற்கு கடமைப்பட்டவர்கள் ஆவர். நாடாளுமன்றமானது கேள்வி நேரம், விவாதங்கள் , ஒத்திவைப்பு தீர்மானம் மற்றும் நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற கருவிகள் மூலம் அமைச்சர்கள் மீது கட்டுப்பாடுகள் செலுத்துகின்றது.

இ) எதேச்சதிகாரத்தை தடைசெய்தல்

அதிகாரங்கள் ஒரு தனி நபரிடம் இல்லாமல் அமைச்சரவை என்ற ஒரு குழுவிடம் உள்ளதால் தனிநபர் தன்னிச்சையாக செயல்படும் வாய்ப்புகள் குறைவாகும். இதன்மூலம் அமைச்சர்கள் சர்வாதிகாரியாக செயல்பட இயலாது. மேலும் அமைச்சர்கள் நாடாளுமன்றத்திற்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்களாக இருப்பதுடன் அவர்களை நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் நீக்கம் செய்வதற்கும் வாய்ப்புகள் உண்டு.

ஈ) பரவலான பிரதிநிதித்துவம்

நாடாளுமன்ற முறை அரசாங்கத்தின் அனைத்து வகுப்பினர் மற்றும் அனைத்து பகுதியினர் என அனைவருக்கும் பரந்துபட்ட பிரதிநிதித்துவம் அளிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் பிரதமந்திரி இக்காரணிகளை தனது அமைச்சரவையை முடிவு செய்யும்போது கருத்தில் கொள்வார்.

நாடாளுமன்ற முறை அரசாங்கத்தின் குறைகள்

அ) நிலைத்தன்மையற்ற அரசாங்கம்

நாடாளுமன்ற முறையானது நிலைத்தன்மை உடைய அரசாங்கத்தைத் தராது. அரசாங்கம் தன்னுடைய பதவிகாலத்தை நிறைவு செய்வதற்கான எந்த ஒரு உத்திரவாதமும் கிடையாது. அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையின் அடிப்படையிலேயே பதவியை தொடர இயலும். ஒரு நம்பிக்கையில்லா தீர்மானமோ, கட்சி தாவலோ அல்லது நிலைத்தன்மையற்ற கூட்டாட்சி அரசாங்கமோ எந்நேரத்திலும் அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

ஆ) கொள்கைகளில் தொடர்ச்சி இல்லாமை

நீண்ட கால கொள்கைகளையோ, திட்டங்களையோ நாடாளுமன்ற முறை அரசங்கத்தின் மூலம் உருவாக்கி செயல்படுத்துவது கடினமாகும். இதற்கு காரணம் அரசாங்கத்தின் நிலைத்தன்மையற்ற பதவிக் காலமே ஆகும். ஆளுங்கட்சி மாறும் நிலையில் அரசாங்கத்தின் கொள்கைகள் மாறுவது சாதாரணமாக நடக்கக்கூடியதாகும்.

இ) அமைச்சரவையின் சர்வாதிகாரம்

ஆளுங்கட்சி நாடாளுமன்றத்தில் ஒரு உறுதியான பெரும்பான்மை பெறும் நிலையில் அமைச்சரவையானது எல்லையற்ற அதிகாரம் பெற்று ஒரு சர்வாதிகார தன்மையுடன் செயல்பட வாய்ப்புகள் உண்டு.

ஹரால்டு J.லாஸ்கி (Harold J.Laski) கூற்றுப்படி நாடாளுமன்ற முறை அரசாங்கம் செயலாட்சி பிரிவிற்கு சர்வ வல்லமையுடன் செயல்படுவதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

ராம்சே முர் (Ramsay muir) முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரி இதனை அமைச்சர் குழுவின் சர்வாதிகாரம் என்று குற்றம் சாட்டுகிறார்.

ஈ) அதிகார பிரிவினைக்கு எதிராக இருத்தல்.

நாடாளுமன்ர முறை அரசாங்கத்தில் செயலாட்சியும், சட்டமன்றமும் ஒருங்கிணைந்து உள்ளது. அமைச்சரவௌயானது சட்டமன்றம் மற்றும் செயலாட்சி பிரிவிற்கு தலைமை ஏற்கிறது. இக்காரணத்தால் நாடாளுமன்ற முறை அரசாங்கம் அதிகார பிரிவினை அடிப்படிஅயிலான கோட்பாட்டிற்கு எதிராக செயல்படுகிறது என்றே கூறலாம்.

அதிபர் ஆட்சிமுறை இந்தியாவுக்குத் தேவையா?

ராஜு ராமசந்திரன்

இந்த விவாதம் நடைமுறைக்குப் பொருந்தாதது. இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளின்படி, நாம் அதன் தன்மையை மாற்றவே முடியாது என்பதால், இப்போதுள்ள நாடாளுமன்ற மக்களாட்சி முறையைக் கைவிட்டு, அதிபர் ஆட்சிக்கு மாற முடியாது. 1973-ல் உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், எந்தவிதத் தயக்கமும் இன்றி இந்திய அரசியல் வர்க்கமும் இதை ஏற்றுக்கொண்டுவிட்டதால், அதிபர் ஆட்சி முறை பற்றி மீண்டும் மீண்டும் பேசுவதில் பொருள் இல்லை. நெருக்கடி நிலை அமலில் இருந்த காலத்தில், இந்திரா காந்தி தலைமையிலான அரசு, அதிபர் ஆட்சிமுறையைக் கொண்டுவர முயற்சித்துக் கைவிட்டது.

இங்கிலாந்தில் கடைபிடிக்கப்படும் நாடாளுமன்ற மக்களாட்சி முறை (வெஸ்ட்மினிஸ்டர் மாடல்), அமெரிக்க அதிபர் பதவி ஆட்சிமுறை என்ற இரண்டையும் முன்வைத்து, இந்தியாவுக்கு இதில் ஏற்றது எது என்று தேர்வுசெய்யும் வாய்ப்பை அரசியல் சட்டத்தை வகுப்பதற்கான சபையின் தலைவர் அம்பேத்கர் ஒரு வாய்ப்பை அளித்தார். இரு அமைப்புகளின் சாதக, பாதகங்களையும் உறுப்பினர்கள் நன்கு புரிந்துகொள்ளப் பட்டியலும் இட்டார். விரிவான விவாதத்துக்குப் பிறகே, நாடாளுமன்ற மக்களாட்சி முறையை அரசியல் சட்டத்தை உருவாக்குவதற்கான நிர்ணய சபை தேர்ந்தெடுத்தது. இதை இப்போது மாற்றுவது அரசியல் சட்டத்தின் அடிப்படைத் தன்மையையே மாற்றுவதாகிவிடும். அதே வேளையில், அரசியல் சட்டத்தின் அடிப்படைத் தன்மையை மாற்றக் கூடாது என்ற கருத்து எனக்கு உடன்பாடானது அல்ல என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன் என்கிறார்.

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் பற்றிய கவலைகள்

  • அதிபர் ஆட்சிமுறையில் நாட்டின் நிர்வாக அதிகாரம் அனைத்தும் ஒரு தனி நபரின் கையில் குவிகிறது. நாடாளுமண்ற மக்களாட்சி மத்திய அமைச்சரவையின் ‘பிற அமைச்சர்களுக்குச் சமமான முதலாமவர்’ என்ற அந்தஸ்து மட்டும் தான் பிரதமருக்கு.
  • ஒரேயொருவரின் அதிகாரத்துக்கு முன் அனைவரும் மண்டியிடுவது என்ற அதிபர் ஆட்சிமுறை மக்களாட்சிக்கு ஆபத்தானது. ஒரேயொருவரிடம் எல்லா அதிகாரங்களும் குவிந்துவிடாமல் நாம் எச்சரிக்கையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • அதிபர் ஆட்சிமுறையை ஆதரிப்பவர்கள், அதிபர் தன்னுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திவிடாமல் தடுக்கப் போதிய கண்காணிப்பு ஏற்பாடுகளும் ,பாதுகாப்பு ஏற்பாடுகளும் சட்டபூர்வமாகச் செய்துகொள்ளப்படலாம் என்கின்றனர்.
  • அதிகாரம் மிகுந்த அதிபராக இருந்தாலும், அதிகாரமுள்ள நாடாளுமன்றத்தால் அவறைத் தடுத்து நிறுத்திவிட முடியும் என்கின்றனர்.
  • அதிபர் பதவியில் இருப்பவருடைய கட்சியே நாடாளுமன்றத்திலும் பெரும்பான்மை வலுவுடன் இருந்தால் மக்கள் செல்வாக்குள்ள அதிபர் அல்லது அதிகாரத்தைக் கையிலெடுத்துக்கொண்டு அடக்கி ஒடுக்கும் அதிபர், நாடாளுமன்றம் தனக்கு எதிராகச் செயல்படாமல் தடுக்க முடியும்.
  • அதிபருடைய கட்சிக்கு எதிரான கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வலுவுடன் இருந்து, அதிபருக்குக் கடிவாளம் போடுவது என்று தீர்மானித்துவிட்டால், முக்கியமான பிரச்சினைகளில் முட்டுக்கட்டை நிலைதான் நிலவும். ஏனென்றால், நாடாளுமன்ற நியதிப்படி, அதிபரும் நாடாளுமன்றமும் அவரவர் நிலையில் சட்டப்படியான அங்கீகாரம் பெற்ற அமைப்புகள்.
  • பன்முகத்தன்மை கொண்ட இந்தியா போன்ற நாட்டில், கருத்தொற்றுமை இல்லாமல் முக்கிய முடிவுகளை எடுக்க முடியாது. ‘வெற்றியாளருக்கே எல்லா பரிசுகளும்’ என்ற கோட்பாட்டின்படி, ஆட்சிமுறையே அதிபருக்கு அதிகாரம் வழங்கிவிட்டால் பல்வேறு சமூகங்களின் நலனை, விருப்பத்தை ஒரு தனி நபர் புறக்கணித்து முடிவெடுக்க வாய்ப்பு இருக்கிறது.

அரசுகள் எப்படி?

  • அதிபர் ஆட்சிமுறைக்கு மாறினால், திறமை உள்ளவர்களை அமைச்சர்களாக நியமித்துக்கொள்ளலாம் என்று வாதாடப்படுகிறது. நாடாளுமன்ற முறையிலும் அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
  • சிந்தாமணி தேஷ்முக், டி.ஏ.பை, மன்மோகன் சிங்க், எம்.ஜி.கே. மேனன் , ராஜா ராமண்ணா போன்ற திறமைசாலிகள் மாநிலங்களவை மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக்கப்பட்டனர்.
  • தங்களுடைய திறமையை நாட்டுக்கு அர்ப்பணித்த அவர்கள், நாடாளுமன்றத்துக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் இருந்தார்கள். அதிபர் ஆட்சிமூறையில், ஒருவரை அமைச்சராக நியமித்தாலும் அவர் தன்னை நியமித்தவருக்கு மட்டும்தான் பதில் சொல்ல அல்லது விசுவாசம் காட்ட கடமைப்பட்டவராக இருப்பார்.
  • அதிபர் ஆட்சிமுறையை ஆதரிப்பவர்கள் மத்திய அரசை மட்டுமே மனதில் கொண்டு பேசுகின்றனர். மாநிலங்களுக்கு என்ன மாதிரியான அரசைக் கொண்டுவருவது? மத்தியில் அதிபர் ஆட்சி என்றால், மாநிலங்களில் ஆளுநரின் (கவர்னர்) ஆட்சி என்பது தர்க்கரீதியாக ஏற்கும்படியாகிவிடும். அதற்கும் நாம் தயாராக இருக்கிறோமா?

மக்களாட்சி செயல்படுவதை உறுதிசெய்வதற்குச் சிறந்த வழி குடியரசுத் தலைவர் முறைக்கு மாறுவதாகும்.

  • நம்முடைய நாடாளுமன்ற முறையை, இங்கிலாந்து நாட்டினர் போன்ற விபரீத சிந்தனையாளர்களால் மட்டும்தான் உருவாக்க முடியும். வாக்குச்சீட்டு மூலம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் மூலம் ‘நிர்வாக அமைப்பை’ ஏற்படுத்தும் முறையை அவர்கள்தான் கொண்டுவந்தனர்.
  • சட்டம் இயற்றுவதற்கு உரிய தகுதிகள் இல்லாத, ஆனால் தேர்ந்தெடுக்கப்படுவதால் நிர்வாக அதிகாரத்தையும் மேற்கொள்வதற்கான உரிமை படைத்தவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வருகின்றனர்.
  • அதிகாரப் பகிர்வு தெளிவாகச் செய்யப்பட்டிருக்கவில்லை. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற பிறகு, சட்டமியற்றும் அமைப்புக்கு நிர்வாகத்துறை சார்ந்து பதில் சொல்லும் பொறுப்புகள் எதுவும் இல்லை. நாடாளுமன்ற நிர்வாக முறையில் சட்டமியற்றும் நாடாளுமன்றமும், அதிகாரமும் செலுத்தும் ஆட்சியாளர்கள் அமைப்பும் தெளிவாகப் பிரிக்கப்பட்டிருக்கவில்லை.
  • நாடாளுமன்றமும் நிர்வாகமும் கூட்டாகச் சிந்தித்து சட்டங்களை இயற்றும் நிலை காணப்படுகிறது. தொடர்ந்து 25 ஆண்டுகளாக அதாவது 2014 வரையில் மத்தியில் கூட்டணி அரசுகள் ஆட்சி செய்துவந்துள்ளன. அவை அரசின் கொள்கை மற்றும் நிர்வாகம் ஆகியவற்றைவிட அரசியல் விவகாரங்களில்தான் அதிகம் கவனம் செலுத்தின. சிறிய கட்சிகூட ஆதரவை விலக்கிக் கொண்டுவிட்டால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதால், எல்லாக் கட்சிகளின் இழுப்புக்கும் ஏற்ப வளைந்து கொடுக்கவே சரியாக இருந்தது. நாடாளுமன்ற முறையானது எந்தத் தனி நபர் உங்களுக்குத் தேவை என்று பார்த்து வாக்களிக்கும் வாய்ப்பைத் தந்ததே தவிர, எந்தக் கட்சி அல்லது எந்தக் கொள்கைகள் உங்களுக்குத் தேவை என்று தேர்வுசெய்ய இடம் தரவே இல்லை.

அமைப்பின் தோல்விகள்

  • இந்தியாவுக்குள்ள பல்வேறு சவால்களுக்குத் திட்டவட்டமான செயல்களை அனுமதிக்கும் அரசியல் ஏற்பாடுகள்தான் தேவை. ஆனால், முடிவெடுக்க முடியாத நிலையும், தீர்வு காண முடியாமல் தத்தளிக்கும் நிலையும்தான் கண்ணில்படுகின்றன.
  • எப்படியாவது தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலான அரசியல் தலைவர்களின் உத்தியாகத் தெரிகிறது.
  • ஊராட்சித் தலைவர்கள், மாநகரத் தந்தைகள், முதலமைச்சர்கள் (அல்லது ஆளுநர்கள்),, தேசியத் தலைவரான குடியரசுத் தலைவர் என்று அனைவருமே குறிப்பிட்ட ஆண்டுகாலப் பதவிகளுக்கு நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியா எதிர்கொண்டுள்ள பொருளாதார, சமூக சவால்களை எதிர்கொள்ள உதவியாக இருக்கும். நாடாளுமன்றத்தின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பத்தான் செயல்பட முடியும் என்பது திட்டவட்டமான முடிவுகளை எடுக்க அனுமதிக்காது.
  • மத்திய அமைச்சரவைப் பதவிகள் என்பது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டும்தான் என்றில்லாமல், திறமைசாலிகள் அனைவருக்கும் பதவிகள் என்ற நிலைக்கு இட்டுச்செல்லும்.
  • மக்களவைக்கு இப்போதுள்ள ஐந்தாண்டு பதவிக்காலம் என்பதைப் போல, அது முடிந்ததும் மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதில் அதிபர் என்ன செய்தார், முதலமைச்சர் என்ன செய்தார் என்று எடைபோட முடியும். இப்போதைய கவனம் எல்லாம் அரசு கவிழ்ந்து விடாமல் முழுப் பதவிக் காலமும் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதாக இருக்கீறது.

நேரடி பொறுப்புணர்வு

  • சட்டமியற்றும் அதிகாரம் உள்ள அதிபர் பதவியை ஏற்படுத்தினால், அவர் சர்வாதிகாரி ஆகிவிடுவார் என்ற அச்சம் தேவையற்றது. அதிபரைப் போலவே மாநிலங்களின் தலைமைப் பொறுப்புக்கு (முதலமைச்சர்கள் அல்லது ஆளுநர்கள்) தேர்ந்தெடுக்கப்படுகிறவர்களும் நேரடியாக மக்களுடைய ஆதரவின் பேரில்தான் தேர்ந்தெடுக்கப்படப் போகிறார்கள்.
  • அதிபர் எல்லையை மீறிவிடாமல் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். சர்வாதிகாரி என்பவர் அரசின் அமைப்பு முறை காரணமாக உருவாவதில்லை.
  • தன்னுடைய வரவு-செலவு அறிக்கைக்கு ஒப்புதல் பெற அல்லது குறிப்பிட்ட மசோதாக்களுக்கு ஆதரவு பெற நாடாளுமண்ரத்துடன் அதிபர் இணைந்து செயலாற்றியாக வேண்டும்.
  • இந்திய அரசியலில் பலநூறு கட்சிகள் இருப்பதால், அமெரிக்காவில் உள்ளதைப் போல இருகட்சி ஆட்சிமுறை இப்போதைக்குச் சாத்தியமில்லை. இந்திய அதிபர், தான் எடுத்துக்கோள்ளும் பிரச்சினைகளுக்கு ஏற்ப வெவ்வேறு கட்சிகளுடன் உடன்பாடு கண்டு கூட்டணியை அமைக்க ம்டுஇவும்.
  • அதிபர் பதவி என்றாலே, எதிர்ப்பாளர்களைக் கீழேபோட்டு மிதித்து நடுக்கிவிட்டுத் தன்னுடைய கொள்கையைத்தான் அமல்படுத்துவார் என்ற அச்சத்துக்கு முற்றிலும் மாறான யதார்த்தம் இது.
  • இந்தியாவை அதிபராக ஆட்சி செய்ய விரும்பும் எந்த அரசியல்வாதியும் தன்னுடைய மாநிலம் சார்ந்தவர்களையும் தாண்டி, மற்றவர்களுடைய ஆதரவையும் பெற்றாக வேண்டும்.
  • எனவே, வெவ்வேறு குழுக்கள், சிறுபான்மையினர் ஆகியோரை அரவஔத்துச் செல்பவராக இருக்க வேண்டும். நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் அதிபர், தன்னிடைய தோல்விக்கு அல்லது செயல்படாத் தன்மைக்குத் தோழமைக் கட்சி எதையும் பலிகடாவாக்க முடியாது என்பதால், மக்களுக்குப் பலன் அளிக்கிற செயல்களை ஐந்து ஆண்டுகளுக்குள் செய்துமுடித்தாக வேண்டும். நாட்டின் நிர்வாகத்துக்கு அவர் நேரடியாகவும் தனிப்பட்ட முறையிலும் பொறுப்பேற்றாக வேண்டும்.
  • இந்தியா ஒரு நாடாகத் தொடர்ந்து நீடிக்க மக்களாட்சி மிக மிக அவசியம். அதை நாம் சரியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்பதில் பெருமை கொள்வோம். ஆனால், நம்முடைய மக்களாட்சி நமக்களித்துள்ள அரசியல் குறித்து மிகச் சிலர்தான் பெருமைப்பட முடியும். உலக மக்களின் ஆறில் ஒரு பகுதி வாழும் மக்களின் தேவைகள், அவர்களுக்கு முன்னாலிருக்கும் சவால்கள் ஆகியவற்றை மனத்தில் கொண்டு அவற்றைப் பூர்த்திசெய்யும் அரசாக இருக்க வேண்டும். மக்களாட்சி நன்கு செயல்பட அதிபர் ஆட்சிமூறைக்கு மாறுவதுதான் இருப்பதிலேயே சிறந்த வழி. இது மாறுவதற்கான நேரம்.

நிர்வாக அமைப்பை மாற்றுவதைவிட தேர்தல் நடைமுறையைச் சீர்திருத்துங்கள் – உபேந்திர பாக்‌க்ஷி

  • இந்த விவாதத்துக்கென்று தனியே ஒரு வாழ்க்கைச் சூழல் இருக்கிறது. அறுதிப் பெரும்பான்மைக்கும் மேல் பெற்று, ஒரு கட்சி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இப்படியொரு விவாதம் கிளம்புகிறது.
  • ஜவஹர்லால் நேரு காலம் தொடங்கி, இந்திரா காந்தி காலம் வரை தொடர்ந்து இப்போதும் நீடிக்கிறது. இந்த விவாதம் இரண்டு அம்சங்களைச் சுற்றி மையம்கொள்கிறது. முதலாவது, இது விரும்பத்தக்காத? இரண்டாவது, இது சாத்தியமானதா?
  • இரண்டாவதை முதலாவதாகப் பரிசீலித்தால், உச்ச நீதிமன்றம் தனது மனதை மாற்றிக் கொண்டால்தான் இது சாத்தியம் என்பது விளங்கும், ஆட்சிமுறையை மாற்றக் கொண்டுவரும் எந்தத் திருத்தமும், அதன் அடித்தளக் கட்டமைப்பை மாற்றக் கூடாது என்று கேசவானந்த பாரதி வழக்கு காலத்திலிருந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனவே, உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் வேறு கண்ணோட்டத்துடன் அணுகத் தயாரானால்தான் இப்படு ஆட்சி முறையை மாற்றுவது சாத்தியம்.

பல்வேறு மாதிரிகள்

  • அதிபர் ஆட்சிமுறை விரும்பத்தக்கது என்று முடிவுசெய்தால், எந்த நாட்டிலிருக்கும் அதிபர் முறையை நாம் கொண்டுவரப் போகிறோம்? அமெரிக்க அதிபர் தேர்தல் முறைக்கும், இங்கிலாந்தில் வெஸ்ட்மினிஸ்டர் பாணி நாடாளுமன்ற மக்களாட்சிக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? அமெரிக்க நடைமுறையில் அதிபர் தனக்கான அதிகாரிகளை நியமித்துக்கொள்கிறார்.
  • அவர்களுக்குக் குறிப்பிட்ட ஆண்டு பதவிக்காலம்தான். அவர்களுடைய நியமனங்கள் செனட் சபையால் (மேலவை) உறுதிப்படுத்தப்பட வேண்டும். கியூபா போன்ற தென் அமெரிக்க நாடுகளில் அதிபருக்கு அவருடைய ஆயுட்காலம் வரையிலும் பதவி தரப்படுகிறது. இப்படி ஏராளமான மாதிரிகள் உள்ளன.
  • ஒவ்வொன்றிலும் சாதகங்களும் பாதகங்களும் உள்ளன. எனவே , அதிபர் ஆட்சி முறை வேண்டும் என்று கேட்பவர்கள் இதில் எதைக் கேட்கிறார்கள்?
  • நம்முடைய மாநிலங்களவையை அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையுடன் ஒப்பிட முடியாது. அமெரிக்க மாகாணங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அரசியல் சட்டங்கள் உள்ளன. அவற்றை அம்மாகாணங்களால் மாற்றிக்கொள்ள முடியும்.
  • அங்கே ஃபெடரல் (மத்திய) அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் உள்ள உறவு அதாராணமானது. அந்த நீதிமன்றங்களின் நிலையும் நீதிபதிகளை நியமிக்கும் விதமும் அப்படியே. இவற்றையெல்லாம், அதிபர் ஆட்சிமூறை வேண்டும் என்பவர்கள் சிந்தித்திருப்பார்கள் என்று தோன்றவில்லை. நாம் கேட்கும் அதிபர் ஆட்சி மூறையில் அதிபருடைய பதவிக்காலம் எவ்வளவு? அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் உரிமை பெற்றவரா? அப்படியென்றால், எத்தனை மூறை அவர் அப்பதவியை வகிக்க முடியும்? மாற்றங்களை யார் தீர்மானிப்பது? நாடாளுமன்றமா? இவையெல்லாவற்றுக்கும் இந்திய அரசியல் சட்டத்தின் கட்டமைப்பையே பெருமளவுக்கு மாற்ற வேண்டியிருக்கும். அரசியல் சட்டத்தின் கட்டமைப்பு குறித்து உச்ச நீதிமன்றம் தன்னுடைய நிலையை ஏற்கெனவே தெரிவித்துவிட்டது.
  • ஒரு கருத்தை தெரிவிப்பது என்பது வேறு. தீர்ப்பு என்பது எல்லா அம்சங்களையும் கவனமுடன் பரிசீலித்த பிறகே அளிக்கப்படுவது. இப்போதுள்ள நாடாளுமன்ற மக்களாட்சி முறை வேண்டாம், அதிபர் ஆட்சிமுறைதான் முறை வேண்டும் என்பவர்கள் தங்களுடைய கருத்துக்கு வலு சேர்க்கும் அம்சங்களை வெகு கவனமுடன் தாயரிக்க வேண்டும்.
  • அடுத்து, அதிகாரங்களைப் பிரித்துத் தருவதும் முக்கியமானது. அமெரிக்க அமைப்பில் அதிபராக இருப்பவர், முப்படைகளுக்கும் தலைமைத் தளபதியாகவும் பதவி வகிக்கிறார். அத்துடன், நாடாளுமன்றத்தின் தீர்மானங்களைக்கூட ரத்து அதிகாரம் மூலம் நிராகரிக்கும் அதிகாரம் படைத்திருக்கிறார். இந்தியாவுக்கு இப்படிப்பட்ட அதிபர் பதவி அவசியமஆ?
  • அமெரிக்காவில் அதிபரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான நாடாளுமன்ற நடைமுறைகள் மிகவும் சிக்கலானவை. அதிபருடைய அதிகாரங்களைக் கூட்டிக்கொண்டே போவதற்கான சாத்தியக் கூறுகளும் உண்டு.
  • நாடாளுமன்ற நடைமுறையில்கூட இப்படிப்பட்ட இடர்கள் இருக்கின்றன. எனவே, முழுமையாகச் சிந்தித்து முடித்துவிட்டதாகக் கருதவில்லை. ஆட்சி முறையை மாற்றுவது தொடர்பான விவாதம் இன்னும் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

நடைமுறையில் சீர்திருத்தங்கள்

  • மக்களாட்சியை மேலும் வகுப்படுத்த தேர்தல் நடைமுறையைச் சீர்திருத்துவது தொடர்பான கருத்துகள் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. அரசியல் கட்சிகள் செய்யும் செலவுகளைக் கட்டுப்படுத்துவது, தேர்தல் செலவுக்கு உச்ச வரம்பை நிர்ணயிப்பது சட்டப் பேரவைகளுக்கும், மக்களவைக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவது, தொகுதிவாரியாகத் தேர்தல் முடிவுகளை அறிவிக்காமல் வாக்குச்சாவடிகளின் தொகுப்பு வாரியாக என்பவை அவற்றில் சிலவாகும்.
  • இவற்றையெல்லாம் விவாதித்து, தேர்தல் நடைமுறையில் உள்ள ஓட்டைகளை விரைவாக அடைப்பது பலன் தரும்.
  • இப்போதுள்ள நாடாளுமன்ற நடைமுறை நன்கு தீர்மானித்து அமல்படுத்தப்பட்டு எழுபத்தி ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. இதை மாற்றுவதற்குப் பதிலாக இதைச் சீர்திருத்தி, தேர்தல் நடைமுறைகளைத் தூய்மைப்படுத்தினால் என்ன?

இந்திய அரசமைப்பினை உருவாக்கியவர்கள் ஏன் நாடாளுமன்ற அரசாங்க முறையினை ஏற்றனர்?

  • நாடாளுமன்ற அரசாங்க முறையுடனான பரிச்சயம் உண்டு
  • அதிக பொறுப்புணர்வுக்கான விருப்புரிமை
  • சட்டமன்றத்திற்கும், செயலாட்சிக்கும் இடையேயான பிரச்சனைகளைத் தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.
  • இந்திய சமுதாயத்தின் தன்மை அடுத்த முக்கியமான காரணமாகும். இந்தியா உலகிலேயே மிகவும் அதிகமான கலப்பு மரபுகளையும், சிக்கலான பன்மை சமூகங்களையும் கொண்ட மாநிலங்கள் உள்ள நாடுகளில் ஒன்றாகும். ஆகவே அரசமைப்பினை உருவாக்கியவர்கள் நாடாளுமன்ற அரசாங்க முறையினை ஏற்றனர். அது பல்வேறு பிரிவுகள், விருப்பங்கள் மற்றும் பகுதிகளுக்கு அரசாங்கத்தில் பிரதிநிதித்துவம் தர பெரும் வாய்ப்புள்ளதாகும். இது மக்களிடையே தேசிய உணர்வினை வளர்ப்பதுடன் தணிக்கை செய்யப்பட்ட இந்தியாவினை கட்டமைக்கிறது எனலாம்.

குடியரசுத் தலைவர் முறை அரசாங்கம்

குடியரசுத் தலைவர் முறை அரசாங்கமானது அதிகாரப் பிரிவினை கோட்பாட்டின்படி கட்டமைக்கப்பட்டது. இது கடமைப்பாடற்ற, நாடாளுமன்ரம் சாராத அல்லது நிரந்தரமானது செயலாட்சி அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா மற்றும் இலங்கை போன்ற நாடுகள் குடியரசுத்தலைவர் மூறை அரசாங்கத்திற்கு உதாரணமாகும்.

குடியரசுத் தலைவர் முறை அரசாங்கத்தின் இயல்புகள்

அமெரிக்க குடியரசுத் தலைவர் அரசு மற்றும் அரசாங்கத்திற்கு தலைவர் ஆவார். அரசின் தலைவர் என்ற முறையில் அவர் பெயரளவிலன நிலையினை வகிக்கிறார். அரசாங்கத்திற்குத் தலைவர் என்ற முறையில் அரசாங்கத்தி செயலாட்சி பிரிவை தலைமையேற்று நடத்துகிறார்.

குடியரசுத் தலைவர் வாக்காளர் குழுவினால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவரது பதவிக்காலம் நான்கு ஆண்டுகள் ஆகும். அமெரிக்கா நாடாளுமன்றத்தின் (காங்கிரஸ்) பதவி நீக்க முறையின் மூலம் அரசமைப்பிற்கு எதிரான தீவிரமான செயல்பாட்டின் காரணமாக மட்டுமே அவரை பதவி நீக்கம் செய்ய முடியும்.

குடியரசுத் தலைவர் தனது அமைச்சரவை குழு அல்லது சிறிய அமைப்பின் உதவியுடன் அரசாங்கத்தை நடத்துகிறார். அது ‘சுயவிருப்ப அமைச்சரவை’ (Kitchen cabinet) என அழைக்கப்படுகிறது. இது தேர்ந்தெடுக்கப்படாத தூறை செயலாளர்களைக் கொண்ட ஓர் ஆலோசனைக் குழுவாகும். இந்த அமைச்சரவை குழுவில் உள்ளவர்கள் அனைவரும் குடியரசு தலைவராலேயே தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் குடியரசுத் தலைவருக்கு கடமைப்பட்டவர்கள் ஆவர். மேலும் அவர்கள் குடியரசுத் தலைவரால் எந்த நேரத்திலும் பதவி நீக்கம் செய்யப்படலாம்.

குடியரசுத் தலைவரும் அவருடைய செயலாளர்களும் (அமைச்சர்கள்) அமெரிக்க நாடாளுமன்றத்திற்குப் (காங்கிரஸ்) பொறுப்பானவர்கள் அல்ல. மேலும் அவர்கள் நாடாளுமன்றத்தில் (காங்கிரஸ்) உறுப்பினர்களாக இருக்க வேண்டுமென்பதோ அதன் கூட்டத்தொடரில் பங்குகொள்ள வேண்டுமென்ற அவசியமே கிடையாது.

குடியரசுத் தலைவருக்கு நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையினைக் கலைக்கும் அதிகாரம் இல்லை. அமெரிக்க குடியரசுத் தலைவர் முறையின் அடிப்படை சாராம்சமானது ‘அதிகார பிரிவினைக் கோட்பாடு’ ஏகும். மேலும் சட்டமன்றம், செயலாட்சி மற்றும் நீதித்துறை சார்ந்த அதிகாரங்கள் தனித்தனியே பிரிக்கப்பட்டு மூன்று வெவ்வேறு சுதந்திரமான அங்கங்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற முறை அரசாங்கத்திற்கும் , குடியரசுத்தலைவர் மூறை அரசாங்கத்திற்கும் இடையேயான வேறுபாடுகள்

வ.எண் குடியரசுத் தலைவர் முறை அரசாங்கம் நாடாளுமன்ற முறை அரசாங்கம்
1 குடியரசுத் தலைவர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்ட அரசியல் கட்சியின் தலைவரே பிரத மந்திரியாவார்.
2 குடியரசுத் தலைவரே மேலான அதிகாரம் பெற்றவர் மத்திய சட்டமன்றமே மேலான அதிகாரம் கொண்டதாகும்.
3 அதிகாரப் பிரிவினை அதிகாரப் பிரிவினை கிடையாது அதிகாரம் மைப்படுத்தப்பட்டிருக்கும்.
4 சுதந்திரமான கிளைகள் ஒன்றுடன் ஒன்று கலந்த பணிகளை உடைய சுதந்திரமான கிளைகள்
5 குடியரசுத் தலைவரே அரசின் தலைவராவார் குடியரசுத் தலைவரே அரசின் தலைவராவார்.
6 குடியரசுத் தலைவரே அரசாங்கத்தின் தலைவராவார் பிரதம மந்திரியே அரசாங்கத்தின் தலைவராவார்.
7 குடியரசுத் தலைவரே தலைமைப் பணியை ஏற்கிறார் கூட்டுத்தலைமை
8 குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்திற்கு (காங்கிரஸ்) பொறுப்பானவர் கிடையாது. நாடாளுமன்றத்தில் கூட்டுப் பொறுப்புணர்வு மற்றும் தனிப்பொறுப்புணர்வு உண்டு.

அரசுக்கு எதிரான சந்தை பற்றிய விவாதம் (Debate on State Vs Market)

“உலக வங்கி – உலக மேம்பாட்டு அறிக்கை 1997 : மாறிவரும் சூழலில் அரசின் நிலை”

இந்த அறிக்கையானது வேகமாக மாறிவரும் உலக சூழலில் அரசு எவ்வகையில் நாட்டின் வளர்ச்சியில் சிறப்பாகப் பங்களிக்கலாம் என்பதைக் குறித்ததாகும். அரசு என்ன செய்ய வேண்டும், எவ்வாறு செய்ய வேண்டும் என்பதுடன் அரசு தன்னை எவ்வாறு மேம்படுத்திக் கொள்ளலாம் என்பன குறித்தும் இவ்வறிக்கையில் விவாதம் செய்யப்பட்டுள்ளது. மையப்படுத்தப்பட்ட திட்டமிடல் மற்றும் கலப்பு பொருளாதாரம் சார்ந்த அரசாங்கங்கள் தற்போதைய காலகட்டத்தில் சந்தை சார்ந்த பங்கினைக் குறைத்துக் கொண்டு வருகின்றன. இதற்குத் தோல்வியில் முடியும் அரசின் தலையீடுகள் காரணமாகும்.

இவ்வறிக்கை மேற்கூறிய கருத்துக்கு எதிராக சில முக்கியமான தருணங்களில் அரசின் தலையீடு சந்தையில் தேவை என்பதை வலியுறுத்துகிறது. பொருளாதாரம் சார்ந்த நிறுவனச் சூழலில் சட்டத்தின் ஆட்சியைச் செயல்படுத்தும் பங்கு அரசிற்கு உள்ளது. மேலும் நாட்டின் மேம்பாட்டிற்கு அரசின் சந்தை சார்ந்த தலையீடு அத்தியாவசியம் என கருதுகிறது. அரசாங்கத்தை குறைந்தபட்ச அரசாக சுருக்குவதற்கு இது எதிர்ப்பு தெரிவிக்கிறது. மேலும் தனியார் தொழில்கள் மற்றும் தனிமனிதர்களின் செயல்பாடுகளுக்கு தகுந்த ஊக்கம் மற்றும் ஆதரவினை நல்கும் சிறப்பான அரசே மேம்பாட்டிற்குத் தேவை என விளக்குகிறது.

இவ்வறிக்கை அரசிற்கு சில சீர்திருத்தங்களை வலியுறுத்துகிறது. முதலாவதாக, அரசின் செயல்பாடுகளையும், அதன் திறன்களையும் சமன்படுத்துதலில் கவன் செலுத்துதல் மற்றும் இரண்டாவதாக, அரசின் திறன்களை மேம்படுத்துவதற்கு அரசு நிறுவனங்களை மாற்றியமைப்பதற்கான வழிமுறைகளை கண்டுணர வேண்டும்.

இவ்வறிக்கையின்படி, பின்வரும் ஐந்து அடிப்படைப் பணிகளை அரசாங்கம் தனது நோக்கங்களாக மேற்கொள்ள வேண்டும். இவை இல்லையென்றாக் நிலையான, வறுமையில்லாத மற்றும் அனைவருக்குமான வளர்ச்சியை நாம் அடைவது சாத்தியமற்றதாகும்.

அவையாவன ………………………………

  1. நாட்டில் அடிப்படைச் சட்டத்தை நிறுவுதல்
  2. பேரியல் பொருளாதார நிலைத்தன்மையை பாதுகாத்தல்
  3. அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் சமூகப் பாதுக[அ[இல் முதலீடு செய்தல்
  4. சமூகத்தில் எளிதில் இலக்காகும் நிலையில் உள்ளவர்களை பாதுகாத்தல்
  5. சுற்றுச்சூழல் பாதுகாப்பு

அரசாங்கத்திலிருந்து ஆளுகை வரை பற்றிய கருத்தாக்கம்

  • நல்ஆளுகை என்ற சொல்லானது பொது நிறுவனங்கள் எவ்வாறு மக்களின் பிரச்சனைகளை நிர்வகித்து நாட்டின் வளங்களையும் சரியான முறையில் மேலாண்மை செய்கின்றன என்பதைப் பற்றியதாகும். ஆளுகை என்பது “முடிவுகள் எந்த நடைமுறையில் எடுக்கப்பட்டு அவை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதே ஆகும்”.

‘அரசாங்கம்’ மற்றும் ‘ஆளுகை’ ஆகிய இரண்டுமே ஒரே பொருளைக் கொண்டதாகும். இது ஓர் அமைப்பு, நிறுவனம் அல்லது அரசில் அதிகாரத்தைச் செயல்படுத்துவதைக் குறிப்பாகும். கீழ்க்கண்ட பரிமாணங்களில் அரசாங்கம் மற்றும் ஆளுகையை வேறுபடுத்தலாம்.

  1. ஆளுகைசெயல்பாட்டிலுள்ள நடவடிக்கைகள் யாவை?
  2. ஆளுகையில் உள்ளடங்கிய செயலமைப்புகள் யாவை?
  3. இம்மறுவரையறையைத் தேவையாக்கிய நடைமுறைகள் யாவை?
  4. நல் ஆளுகையை மதிப்பீடு செய்ய பயன்படுத்தப்பட்ட வரைகூறுகள் யாவை?
  5. இதனை அடைவதற்காக மேம்படுத்தப்பட வேண்டிய திறன்கள் யாவை?
  • ஆளுகை என்பது ஒரு தேசத்தின் விவகாரங்களை நிர்வகிப்பதற்காக அரசியல், பொருளாதார மற்றும் நிர்வாக அதிகாரத்தினை செயல்படுத்துவதாலும். ஆளுகை என்பது அனைத்து முறைகளையும் உள்ளடக்கியதாகும். நன்மையோ, தீமையோ ஆனாலும் சமுதாயங்கள், அதிகாரத்தினைப் பங்கிட்டு பொது ஆதாரங்கள் மற்றம் பிரச்சனைகளை கையாளுக்கின்றன. (UNDP, 1997)
  • ஒரு நாட்டின் மேம்பாட்டிற்காக அதன் சமூக மற்றும் பொருளாதார வளங்களை மேலாண்மை செய்வதற்காக அதிகாரத்தினை செயல்படுத்தும் பாங்கே ஆளுகையாகும். (ADB, 2000)
  • அரசாங்கத்திலிருந்து ஆளுகைக்கு செல்வது என்பது புதிய அமைப்புக்களை உருவக்குவது மட்டுமல்லாமல் பழைய அமைப்புக்களையும் புதுப்பிப்பதாகும். தனது புதிய பங்கினை ஆற்றுவதற்கு அரசு வலுப்படுத்தப்பட வேண்டும். மக்களாட்சி என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல்களைச் சந்திப்பது மட்டுமல்ல, அமைப்பின் செயல்திறனை விழிப்புடன் கண்காணித்து அவ்வாண்டுகளில் அதனை பொறுப்பானதாக்குவது குடிமைச் சமுதாயத்தின் பணியாகும்.

குடிமைச் சமுதாயத்துடனான கூட்டுப்பங்காண்மை

ஆட்சியை ஆளுகையாக மாற்றும் முனைப்பில் குடிமைச் சமுதாயத்தின் பங்கு குறிப்பிட்த்தகுந்ததாகும். அதன் பங்கினை இருவகையான இழைகளாகப் பார்க்கலாம்.

  1. சமூக இயக்கங்கள்
  2. அரசு சாரா அமைப்புகள்

சமூக இயக்கங்கள் வறுமை நிலையில் உள்ள மக்கள் மற்றும் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்காக போராடுவதன் மூலம் அரசாங்கத்தின்மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். இவ்வகையான அழுத்தத்தினால் அரசாங்கமும் மக்களுக்காக நிறுவனங்கள், சட்டங்கள் மற்றும் நடைமுறைகளில் சில மாற்றங்களை கொண்டுவருகிறது.

அரசு சாரா அமைப்புகளும் பல்வேறு வகையில் மக்கள் நலனுக்காக செயல்படுகின்றன. மேலும் அவர்கள் அரசாங்கத்தின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும் உதவிக்கரமாக உள்ளனர்.

சமூக இயக்கங்களும், அரசு சாரா அமைப்புகளும் தற்போதைய காலகட்டத்தில் அரசியல் செயல்பாடுகள் மற்றும் பொது சேவைகள் ஆகியவை மக்களைச் சென்றடைவதில் மிகப்பெரிய பங்காற்றுகின்றன.

உலகளாவிய பார்வையிலான சிந்தனை பற்றிய கேலிச் சித்திரம்

கோபன் ஹேகன் பருவநிலை உச்சிமாநாடு 09.12.2009 /P.8 மற்றும் 18.12.2009/P.10

197 நாடுகள் பசுமை வாயுக்களை படிப்படியாக நீக்க ஒப்புக்கொண்டன

இது கரியமில வாயுவைவிட ஆயிரம் மடங்கு மோசமான வாயுக்களை குறைத்து புவி வெப்பமயமாதலை தடுக்கும் சட்டப்பூர்வமான ஒப்பந்தமாகும்.

மூன்று குழுவிலான நாடுகள்

அமெரிக்கா போண்ற வளர்ந்த நாடுகள் தங்களின் ஹைட்ரோ ப்ளூரோ கார்பன் பயன்பாட்டினை 2019ஆம் ஆண்டுவாக்கில் பத்து சதவீதம் 2011 – 2013-ஆம் அளவிலிருந்து குறைப்பதுடன் 2036-ஆம் ஆண்டுவாக்கில் என்பத்து ஐந்து சதவீதம் வரை குறைக்க வேண்டும்.

இரண்டாவது குழுவானது சீனா மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளைக் கொண்ட வளரும் நாடுகள் இம்மாற்றத்தினை 2024-ஆம் ஆண்டிற்குள் செய்து முடிக்க உறுதிபூண்டுள்ளன. இவை 2020 – 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பத்து சதவீதமாவது 2029-ஆம் ஆண்டுவாக்கில் குறைப்பதுடன் இதனை நீட்டித்து 2045-ஆம் ஆண்டுவாக்கில் எண்பத்து ஐந்து சதவீதம் வரை குறைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் மூன்றாவது குழுவாக, வளரும் நாடுகளான இந்தியா , பாகீஸ்தான் , ஈரான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகள் உள்ளன, இவை இந்நடைமுறையை 2028-ல் தொடங்குவதுடன் 2024 – 2026-ல் அளவிலிருந்து கணக்கிடு போது பத்து சதவீதம் வரை 2032-ல் குறைக்க வேண்டும். இது 2047-ல் எண்பத்து ஐந்து சதவீதமாக இருக்க வேண்டும்.

கிகாலி (ருவாண்டா) – Kigali (Rwanda)

புவி வெப்ப்மயமாதலைத் தடுப்பதற்கான ஒரு முக்கியப் படியாக 200 நாடுகளின் பிரதிநிதிகள் சந்தித்து குளிர்ப்பதனப் பெட்டி மற்றும் காற்றுப் பதனி ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் அச்சுறுத்தலான பசுமை வாயுக்களை படிப்படியாக நீக்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டனர். 1987-ஆம் ஆண்டு ஓசோன் படலப் பாதுகப்பிற்காக மேற்கொள்ளப்பட்ட மாண்ட்ரீயல் நெறிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு பணக்கார நாடுகள், வளரும் நாடுகளைக் காட்டிலும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்றுக்கொள்ளப்பட்டது.

  • ருவாண்டாவின் தலைநகர் கிகாலியில் இரவு முழுவதும் கண் விழித்து ஹைட்ரோ ப்ளோரோ கார்பன் உற்பத்தி மற்றும் நுகர்வினை படிப்படியாக குறைப்பதற்கான ஒப்பந்தத்தை உருவாக்கும் இறுதி கட்டத்தில் இருந்த பிரதிநிதிகள் மகிழ்வுடன் கைதட்டி இதனை வரவேற்றனர்.
  • இருப்பினும் சில பிரதிநிதிகள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகள் ஆகியவை இம்மாற்றத்தினை பிற நாடுகளைக் காட்டிலும் பின்னே மேற்கொள்வதற்கு வருத்தம் தெரிவித்தனர்.
  • மார்ஷல் தீவுகள் என்ற குட்டி பசிபிக் நாட்டின் பிரதிநிதி கூறுகையில் “இது மார்ஷல் தீவுகள் முழுமையாக விரும்பியதாக இல்லாவிடினும், சிறந்த ஒப்பந்தமாகும்” என்றார்.
  • ஹைட்ரோ ப்ளோரோ கார்பன்கள் அகற்றப்பட்டால் 2100-ஆம் ஆண்டுவாக்கில் புவிவெப்பமயமாதல் 0.5 சதவீதம் குறையும் என 2015-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
  • இருப்பினும் இந்தியா போன்ற அதிக உஷ்ணமான தட்பவெப்ப நிலையை கொண்ட வளரும் நாடுகள் ஹைட்ரோ ப்ளோரோ கார்பன்களுக்கு மாற்றாக அம்மோனியா, தண்ணீர் அல்லது ஹைட்ரோ ப்ளோரோலெபீன்ஸ் போன்ற வாயுக்களை பயன்படுத்தினால் செலவினம் அதிகரிக்கும்.
  • இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் இந்திய சுற்றுச்சூழல் மற்றும் பருவ நிலைமாற்ற அமைச்சகத்தைச் சேர்ந்த அஜய்நாராயணன் ஜா கூறுகையில் ”இதில் செலவினப் பிரச்சனை,தொழில்நுட்ப பிரச்சனை,நிதிப்பிரச்சனை ஆகியவை உள்ளன” என்கிறார்.அவர் மேலும் கூறுகையில் “எந்த ஒப்பந்தமாக இருந்தாலும் அது ஒரு பக்கத்திலிருந்து நெகிழ்வானதாக இருக்க வேண்டுமே தவிர மறுபக்கத்தில் இருந்தல்ல என்பதை நாம் வலியிறுத்த விரும்புகிறோம்” என்றார்.
  • ஓசோன் படலத்தை ஹைட்ரோ ப்ளோரோ கார்பன்களின் முன்னோடியான குளோரோ ப்ளோரோ கார்பன்கள் அழிப்பதை உணர்ந்த விஞ்ஞானிகள் அவற்றினை மாண்ட்ரியல் நெறிமுறைகளின் அடிப்படையில் கைவிட்டனர்.தற்பொழுது சரியாகி வரும் ஓசோன் படலத்திற்கு ஹைட்ரோ ப்ளோரோ கார்பன்கள் பாதுகாப்பானவையாக தெரிந்தாலும் முக்கிய பசுமை வாயுவான கரியமில வாயுவை விட வெப்பமாக்குதலில் ஆயிரம் மடங்கு மோசமானதாக இருக்கிறது.

புதிய இந்தியன் எக்ஸ்பிரஸ் 16-10-2016

உலகளாவிய பார்வையிலான ஓர் சிந்தனை

  • ஓர் உலகளாவிய பார்வை என்பது உங்களை நான்,எனது குடும்பம்,எனது பள்ளி,எனது சமூகம்,எனது கிராமம்,எனது மாவட்டம்,எனது மாநிலம் அல்லது நான் வாழும் நாடு என்பதைத் தாண்டி சிந்திக்க வைக்கிறது.செய்திகளில் வரும் பிரச்சனைகள் உலகளாவிய தன்மையுள்ளவையாகும். உதாரணமாக சுற்றுச்சூழல் பிரச்சனையைக் கூறலாம்.
  • பெரும்பாலும் உலகளாவிய பிரச்சனைக்கு ஓர் உலகளாவிய தீர்வு தேவைப்படுகிறது.பருவநிலை மாற்றம் என்ற உலகளாவிய பிரச்சனையை உள்ளூர் தீர்வுகளால் சரிசெய்ய இயலாது.
  • இருப்பினும் உள்ளூரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் உலகளாவிய தீர்விற்கு வழிசெய்ய உதவுகிறது. பருவநிலை மாற்றம் தொடர்வான பிரச்சனைக்கு,
  • உதாரணமாக உள்ளூர் அளவிலான விழிப்புணர்வினை தெரு நாடகங்கள், கண்காட்சி, மனிதச் சங்கிலி மற்றும் சுவரொட்டி பிரச்சாரம் போன்றவற்றின் மூலமாக மக்களை உலகளாவிய அளவில் சிந்திக்க வைத்து உள்ளூர் அளவில் செயல்பட வைக்கிறது எனலாம்.

நல்ஆளுகையின் பண்பியல்புகள்

அ)பங்கேற்பு

  • நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆண்களும், பெண்களும் அரசாங்கத்தின் முடிவெடுத்தலில் குரல் கொடுக்க வேண்டும்.அதனை அவர்களின் விருப்பங்களைப் பிரதிபலிக்க கூடிய சட்டப்பூர்வமான இடைநிலை அமைப்புகளின் வாயிலாக பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்.
  • இத்தகைய பரந்த பங்கேற்பானது மக்களின் பேச்சுரிமை, ஒன்று கூடும் உரிமை மற்றும் ஆக்கப்பூர்வமான பங்பேற்புத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது.

ஆ)சட்டத்தின் ஆட்சி

  • சட்டக்கட்டமைப்பு என்பது நியாயமாகவும்,நடுநிலையுடனும் செயல்படுத்தப்பட வேண்டும்.குறிப்பாக மனித உரிமைகள் தொடர்பான சட்டங்களைக் கூறலாம்.

இ)வெளிப்படைத்தன்மை

  • கட்டுப்பாடற்ற சுதந்திரமான தகவல் பரிமாற்றமே வெளிப்படைத் தன்மையை கட்டமைக்கிறது. நடைமுறைகள், நிறுவனங்கள் மற்றும் தகவல்கள் ஆகியவை அவற்றுடன் சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாக அணுகத்தக்க வகையில் இருப்பதுடன் புரிந்து கொள்ளக்கூடிய அளவிலான தகவல்கள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்.

ஈ)மறுமொழி பகிர்தல்

  • நிறுவனங்களும் அவைசார்ந்த செயல்பாடுகளும் மக்களின் தேவைக்கேற்ப செயலாற்ற முயல வேண்டும்.

உ) ஒருமித்த கருத்திலான திசைப்போக்கு

  • நம் ஆளுகை என்பது மாறுபட்ட விருப்பங்களுங்கு இடையே ஓர் பரந்த ஒப்புதலை ஏற்படுத்த நடுவுநிலைப் பங்காற்றுகிறது. இது குழுவினுடைய சிறந்த நலன்கள்,கொள்கைகள் மற்றும் நடைமுறைகளின்படி அவை எவ்வாறு சாத்தியமாகும் என்பது பற்றியதாகும்.

நல்ல அரசாங்கம்

  • ஒருமித்த கருத்திலான நிலைப்போக்கு
  • சிறப்பானது மற்றும் செயல்திறன் வாய்ந்தது
  • சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்றுகிறது.
  • சமநீதிப்பங்கிலானது மற்றும் உள்ளடக்கியது
  • பொறுப்பானது
  • பங்கேற்பிலானது
  • மறுமொழி பகிர்தல்
  • வெளிப்படையானது

ஊ) சமசீராக்கம்

  • ஆண்களும் பெண்களும் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான, சமமான வாய்ப்புகள் அல்லது தங்களின் நலனை நிர்வகிப்பதாகும்.

எ) சிறப்பான தன்மை மற்றும் செயல்திறன்

  • நிறுவனங்கள் மற்றும் நடைமுறைகள் ஆகியவை தேவைகளை நிறைவேற்றும் விதத்தில் சிறப்பாக வளங்களைப் பயன்படுத்தி முடிவுகளைத் தரவேண்டும்.

ஏ)பொறுப்புடைமை

  • அரசாங்கத்தில் முடிவு எடுக்கும் நிலையில் உள்ளவர்கள்,தனியார் துறையினர் மற்றும் குடிமைச்சமூக அமைப்புகள் ஆகியவை பொதுமக்களுக்கும், அமைப்பின் பங்கேற்பாளர்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
  • இப்பொறுப்புடைமை என்பது அமைப்புகளைப் பொறுத்து மாறுபடுவதுடன் அமைப்பில் எடுக்கப்படும் முடிவானது உட்புறமானதா அல்லது வெளிப்புறமானதா என்பதையும் பொறுத்தாகும்.

ஐ) திறன்சார்ந்த தொலைநோக்கு பார்வை

  • தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் நல்ஆளுகை மற்றும் மனித மேம்பாட்டினை நீண்டகால தொலைநோக்கு பார்வையுடன் அணுகுதல் வேண்டும்.மேலும் வரலாறு,பண்பாடு மற்றும் சமூக சிக்கல்களையும் தொலைநோக்குப் பார்வைக்காகக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.

ஆதாரம்

(ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத்திட்டம் -1997),(நிலையான மனித மேம்பாட்டிற்கான ஆளுகை பற்றிய ஐ.நா.வின் மேம்பாட்டுத்திட்டம்)

அரசாங்கத்தின் செயல்திறனை எவ்வாறு மதிப்பிடுவது?

  • ஒரு அரசாங்கத்தின் செயல்பாடுகளை ஏதோ ஒரு காரணியைக் கொண்டு பகுப்பாய்தல் என்பது இயலாத காரியமாகும்.
  • ஆகவே உண்மையான மதிப்பீட்டினை மேற்கொள்ள ஆளுகையின் பல்வேறு அம்சங்களான சமூக பண்பாட்டு காரணிகள்,அரசியல்,பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் ஆகியவற்றினை பரிசீலிக்க வேண்டும். எனவே கீழ்க்காணும் காரணிகளைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தின் செயல்பாடுகளை மதிப்பிடலாம்.

சமூக பண்பாட்டு காரணிகள்

  • பாலின சமநிலை குறியீடு
  • மதச்சுதந்திரம்
  • சாதி அடிப்படையிலான சமநிலை
  • மதம் மற்றும் மொழி அடிப்படையிலான சிறுபான்மையினர் உரிமைகள் பாதுகாப்பு
  • பாலினம் சார்ந்த வரவுசெலவு திட்டம்

அரசியல் காரணிகள்

  • மக்களாட்சி நடைமுறையின் சிறப்பான செயல்பாடு
  • சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள்
  • ஊழலற்ற அரசியல் மற்றும் நிர்வாகம்
  • நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை
  • சுதந்திரமான பத்திரிக்கைகள்
  • சுதந்திரமான நீதித்துறை
  • மனித உரிமைகள்

பொருளாதார காரணிகள்

  • மனித வளமேம்பாட்டுக் குறியீடு
  • மொத்த உள்நாட்டு உற்பத்தி
  • வாங்கும் திறன் சமநிலை
  • வளர்ச்சி மேம்பாடு
  • சமமாக வளங்களைப் பங்கிடுதல்

சுற்றுச்சூழல் காரணிகள்

  • நிலையான மேம்பாட்டு இலக்குகள்
  • பருவநிலை மாற்றத்திற்கான தேசிய செயல்திட்டம்
  • பசுமை வரவு செலவு திட்டம்
  • பேரிடர் மேலாண்ம

தேசிய ஒட்டு மொத்த மகிழ்ச்சி குறியீடு

  • தேசிய ஒட்டு மொத்த மகிழ்ச்சி குறியீடு என்பது தற்பொழுது மேம்பட்டு வரும் ஒரு தத்துவம் மட்டுமல்லாமல் குறிப்பிட்ட எந்தவொரு தேசத்தின் கூட்டு மகிழ்ச்சியினை அளவீடு செய்யும் “குறியீடு” ஆகும்.இக்கருத்து முதன்முதலில் 18 ஜுலை 2008-ல் இயற்றபபட்ட பூடான் நாட்டினுடைய அரசமைப்பில் குறிப்பிடப்பட்டது.
  • 1970 களில் பூடானின் நான்காவது மன்னரான ஜிக்மே சிங்யே வாங்சுக் அவர்களால் “ஒட்டுமொத்த தேசிய மகிழ்ச்சி” என்ற சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.
  • “ஒட்டு மொத்த தேசிய மகிழ்ச்சி”- என்பதன் மைய சால்புகள் “நிலையான மற்றும் சமநீதிப்பங்கிலான சமூக –பொருளாதார மேம்பாடு; சுற்றுச்சூழல் பாதுகாப்பு; பண்பாட்டினை வளர்த்தல் மற்றும் பாதுகாத்தல்;நல் ஆளுகை” ஆகியவையாகும்.
  • “ஒட்டு மொத்த தேசிய மகிழ்ச்சி” யை வேறுபடுத்திப் பார்ப்பதற்கு உதாரணமாக கூட்டு மகிழ்ச்சியை ஆளுகையின் இலக்காகக் கொள்வதுடன் இயற்கை மற்றும் மரபார்ந்த விழுமியங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தையும் வலியுறுத்துவதைக் கூறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!