Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Samacheer NotesTnpsc

இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி Notes 12th History Lesson 1 Notes in Tamil

12th History Lesson 1 Notes in Tamil

இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி

அறிமுகம்

  • இந்தியாவை முன்னைக் காட்டிலும் அதிகமாகச் சுரண்டுவதற்காகவும், கட்டுப்படுத்துவதற்காகவும் இந்திய அரசியலை, பொருளாதாரத்தை ஒருமுகப்படுத்துவதில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.
  • இவ்வெற்றி தவிர்க்க இயலாத வகையில் தேசிய உணர்வின் வளர்ச்சிக்கும், தேசிய இயக்கம் தோன்றுவதற்கும் இட்டுச் சென்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் சமூகச் சீர்திருத்தங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட இயக்கங்கள், போராட்டங்கள் அவற்றைத் தொடர்ந்து மேலைக்கல்வி பயின்ற இந்தியர்கள், குடியுரிமை உரிமைகளுக்காக முன்வைத்த வேண்டுகோள்கள், சமர்பித்த மனுக்கள் ஆகியவற்றை ஆரம்பப் புள்ளிகளாகக் கொண்டு இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு தொடங்குகிறது.
  • கி.பி. (பொ.ஆ) 1915 இல் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி, 1919இல் இந்திய தேசிய இயக்கத்திற்கு அவர் தலைமையேற்றதிலிருந்து இந்திய தேசியம் மிகப்பெரும் மக்கள் இயக்கமாக மாறியது.
  • காந்தியடிகளுக்கு முன்னர் தாதாபாய் நௌரோஜி, கோபால கிருஷ்ண கோகலே, பிபின் சந்திர பால், லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர் போன்றோரும், ஏனையோரும் காலனியச் சுரண்டல் குறித்தும் , மக்களின் தேசிய அடையாளம் பற்றியும் இந்தியர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கான முன் முயற்சிகளை மேற்கொண்டனர்.
  • இவ்வியலில் இந்திய தேசிய இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி ஆகியவற்றின் வழித்தடத்தைக் கண்டறிவதோடு, தொடக்ககாலத் தலைவர்கள் என்றறியப்பட்ட இவர்களின் பங்களிப்பின் மீதும் கவனம் செலுத்துகிறோம்.

தேசியம்: விரிவான தளத்தில் தேசியமென்பது ஒரு நாட்டிற்கு விசுவாசமாகவும் பக்தியோடும் இருத்தல் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. அது தனது நாட்டை ஏனைய நாடுகளைக் காட்டிலும் உயர்வான இடத்தில் வைத்துப் பார்த்து அல்லது ஏனைய நாடுகளுக்குப் போட்டியாக தனது நாட்டின் பண்பாடும் மற்றும் விருப்பங்களின் வளர்ச்சியில் சிறப்புக் கவனம் செலுத்தும் ஒரு தேசிய உணர்வு அல்லது மனப்போக்காகும்.

சமூகப் பொருளாதாரப் பின்னணி

அ) புதிய நிலவுடைமை உரிமைகளால் ஏற்பட்ட பாதிப்புகள்

  • இந்தியாவின் மரபு சார்ந்த நிலவுடைமை முறையை ஆங்கிலேயர் சிதைத்தனர். ஆங்கிலேயர்க்கு முந்தைய காலங்களில் நிலவரியானது, விவசாயிகளுடன் விளைச்சலைப் பகிர்ந்து கொள்வதாய் அமைந்திருந்தது.
  • ஆனால், ஆங்கிலேயர் பயிர்கள் விளையாமல் போவது, விலைகளில் ஏற்படும் வீழ்ச்சி, வறட்சி , பஞ்சம் போன்ற நிகழ்வுகளைக் கணக்கில் கொள்ளாமல் நிலவரியைப் பணமாகக் கணக்கிட்டு நிர்ணயம் செய்தனர்.
  • மேலும் கடனை அடைப்பதற்காக விற்பனை செய்வது என்பதும் பழக்கமானது. வட்டிக்கடன் கொடுப்பவர்களை நிலவுரிமையாளர்களுக்கு முன்பணம் வழங்கு ஊக்குவித்து, கடன் கொடுத்தவர்கள் கடன் வாங்கியவரின் சொத்துகளை இதன்மூலம் அபகரிக்க அனைத்து விதமான சூழ்ச்சிகளையும், மோசடிகளையும் மேற்கொண்டனர்.
  • கிழக்கிந்திய கம்பெனி அறிமுகம் செய்த புதிய நில நிர்வாகக் கொள்கையினால் மேலும் இரண்டு முக்கியப் பாதிப்புகள் ஏற்பட்டன.
  • நிலத்தை விற்பனைப் பொருளாக்குவது, இந்தியாவில் வேளாண்மையை வணிகமயமாக்குவது ஆகிய இரண்டையும் அவர்கள் நிறுவனமாகவே ஆக்கினர்.
  • ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு இந்தியாவில் நிலத்தில் தனிச் சொத்துரிமை என்பது இல்லை. தற்போது நிலம் ஒரு சரக்காக மாற்றப்பட்டு விற்பது அல்லது வாங்குவதன் வழியாக நபர்களிடையே கைமாறியது. மேலும் வரி/குத்தகை செலுத்தப்படவில்லை என்பதற்காக அரசு நிர்வாகம் நில உரிமையாளர்களிடமிருந்து நிலங்களைப் பறிமுதல் செய்தது. இந்நிலங்கள் மற்றவர்களுக்கு ஏலத்திற்கு விடப்பட்டன.
  • இம்முறையால் ஒரு புதுவகையான நிலப்பிரப்புகள் வர்க்கம் உருவானது. தங்கள் நிலங்களில் வாழாமல் நகரங்களில் வாழ்ந்த இவர்கள் குத்தகையை மட்டும் கறந்து கொண்டனர்.
  • மரபு சார்ந்த வேளாண் முறையில் விவசாயிகள் பெரும்பாலும் தங்கள் நுகர்வுப் பயன்பாட்டிற்குத் தேவையானதை மட்டுமே உற்பத்தி செய்தனர்.
  • புதிய நிலவருவாய் முறைகள் அறிமுகமான பின்னர் அவர்கள் சந்தைக்குத் தேவையானதை மட்டுமே உற்பத்தி செய்தனர்.
  • நிலம் விற்பனைச்சரக்காக மாற்றப்பட்டதும் வேளாண்மை வணிகமயமாக்கப்பட்டதும் விவசாயிகளில் வாழ்க்கை நிலையில் எந்த ஒரு முன்னெஏற்றத்தையும் ஏற்படுத்தவில்லை; மாறாக விவசாயிகளிடையே மனநிறைவின்மையை ஏற்படுத்தி அவர்களை அமைதி இழந்தவர்களாக, கட்டுப்பாடுகளை மீறுபவர்களாக ஆக்கியது. இந்த விவசாயிகள் பின்னர் ஏகாதிபத்தியவாதிகளுக்கும் அவர்களின் கூட்டாளிகளுக்கும் எதிராகத் திரும்பினர்.

ஆ) கட்டுப்பாடுகளற்ற வணிகக் கொள்கை, தொழில் நீக்கச் செயல்பாடுகள்: இந்தியக் கைவினைஞர்கள் மீது ஏற்படுத்தியத் தாக்கம்

  • இங்கிலாந்தில் தொழில் புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து கம்பெனி பின்பற்றியக் கொள்கையானது, இந்தியாவில் தொழில்கள் நீக்கப்படும் விளைவுகளை ஏற்படுத்தியது.
  • இப்போக்கு முதல் உலகப் போர் தொடங்கும் வரை நீடித்தது. ஆங்கில அரசு கட்டுப்பாடுகளற்ற சுதந்திர வணிகம் (laissez faire) எனும் கொள்கையைப் பின்பற்றியது.
  • பருத்தி, சணல், பட்டு ஆகிய கச்சாப் பொருட்கள் இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. இக்கச்சாப் பொருட்களிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டப் பொருட்கள் மீண்டும் இந்தியச் சந்தைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
  • தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியுடன் இங்கிலாந்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் இந்தியச் சந்தைகளில் மலைபோல் குவிந்தன. இந்தியக் கைத்தறி நெசவுத் துணிகளைக் காட்டிலும் இறக்குமதி செய்யப்பட்டத் துணிகள் கூறைந்த விலையில் கிடைத்தன.
  • ஆங்கிலேயரின் வருகைக்கு முன்பாக தனது கைத்தறித் துணிகளுக்காகவும் கைவினைப் பொருட்களுக்காகவும் இந்தியா புகழ் பெற்றிருந்தது. உலகச் சந்தையிலும் நல்ல மதிப்பைப் பெற்றிருந்தது.
  • இருந்த போதிலும் காலனியாதிக்கக் கொள்கையின் விளைவாக இந்தியக் கைத்தறிப் பொருட்களும் கைவினைப் பொருட்களும் தங்கள் உள்நாட்டு, பன்னாட்டுச் சந்தைகளைப் படிப்படியாக இழந்தன.
  • இங்கிலாந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதால் இந்தியாவின் நெசவாளர், பருத்தியிழை ஆடை தயாரிப்போர், தச்சர், கொல்லர், காலணிகள் தயாரிப்போர் ஆகியோர் வேலையற்றோர் ஆயினர்.
  • கச்சாப் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கான இடமாக இந்தியா மாறியது.
  • இங்கிலாந்தின் தொழிற்சாலைகளுக்குத் தேவையான தொழிற்சாலைப் பயிர்களான அவுரி (Indigo) மற்றும் ஏனையப் பயிர்களை உற்பத்தி செய்யும்படி இந்திய விவசாயிகள் வற்புறுத்தப்பட்டனர்.
  • இம்மாற்றத்தினால் பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் மூலாதாரமாக விளங்கிய வேளாண்மை பாதிக்கப்பட்டு உணவுப் பற்றாக்குறைக்கு இட்டுச் சென்றது.

  • 1859-60 இல் வங்காளத்தில் நடைபெற்ற இண்டிகோ கலகம் கம்பெனியின் அடக்குமுறைக் கொள்கைக்கு எதிரான இந்திய விவசாயிகளின் ஒரு எதிர்வினையாகும்.
  • பெரும்பாலும் ஐரோப்பியர்களுக்குச் சொந்தமாயிருந்த நிலங்களில் இந்தியக் குத்தகை விவசாயிகள் அவுரியைப் பயிரிடக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
  • துணிகளுக்கு சாயம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இச்செடிக்கு ஐரோப்பாவில் பெரும்தேவை ஏற்பட்டிருந்தது. சிறியதோர் தொகையை முன்பணமாகப் பெற்றுக் கொள்ளவும் சாதகமற்ற ஒப்பந்தங்களை ஏற்றுக் கொள்ளவும் இந்திய விவசாயிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
  • ஒரு விவசாயி இவ்வொப்பந்தத்திற்கு ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் அவர் தனது நிலத்தில் அவுரியை மட்டுமே பயிர் செய்தாக வேண்டும். அவுரிக்குப் பண்ணையார் கொடுக்கும் விலையோ சந்தை விலையைவிடக் குறைவாக இருந்தது.
  • இதனால் பல சமயங்களில் தங்கள் நிலங்களுக்கான வரிபாக்கியைக் கூட விவசாயிகளால் செலுத்த இயலாத நிலை ஏற்பட்டது. ஆட்சியாளர்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்வர் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் அதிகாரிகளுக்குப் பல மனுக்களை எழுதினர்.
  • அமைதியான வழிகளில் தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். இவர்களின் வேண்டுகோள்கள் அனைத்தும் பயனற்றுப் போனதால் முன்பணம் பெறவும் புது ஒப்பந்தம் போடவும் அவர்கள் மறுத்துக் கலகத்தில் இறங்கினர்.
  • 1859-60இல் மேற்கொள்ளப்பட்ட இந்த இண்டிகோ புரட்சியின் மூலம் விவசாயிகள் பண்ணையாளர்களை வடக்கு வங்காளத்திலிருந்து வெளியேற்றினர்.

இ) பஞ்சங்களும் இந்தியர்கள் ஆங்கிலேயரின் கடல் கடந்த காலனிகளில் குடியேறுதலும்

பஞ்சங்கள்

  • இந்தியா மேன்மேலும் தொழில் நீக்கம் செய்யப்பட்ட நாடாக மாறியதால் கைவினைத்தொழில்களில் ஈடுபட்டிருந்த கைவினைத் தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.
  • மேலும் நீர்ப்பாசன ஏற்பாடுகள் மராமத்து செய்யப்படாமல் புறக்கணிக்கட்டதாலும் கொடுமையான நிலவரியின் காரணமாகவும் பஞ்சங்கள் மீண்டும் மீண்டும் ஏற்பட்டன.
  • ஆங்கிலேயரின் வருகைக்கு முன்னர் இந்திய ஆட்சியாளர்கள் பஞ்ச காலங்களில் வரி விலக்களிப்பது, தானியங்களின் விலைகளை முறைப்படுத்துவது , பஞ்சத்தால் பாதிப்புக்குள்ளானப் பகுதிகளிலிருந்து உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதைத் தடை செய்வது போன்ற நடவடிக்கைகள் மூலம் மக்களின் சிரமங்களைச் சீர்செய்து துயர் துடைத்தனர்.
  • ஆனால் ஆங்கிலேயர்கள் பஞ்சங்களின் போதும் தலையிடாக் கொள்கையைப் பின்பற்றினர். இதன் விளைவாக ஆங்கிலேயரின் ஆட்சியில் லட்சக்கணக்கான – மக்கள் பட்டினியால் மாண்டனர்.
  • 1770 – 1900 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பஞ்சத்தின் காரணமாக இருபத்தைந்து மில்லியன் மக்கள் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 1793இல் தொடங்கி 1900 வரையிலான காலப்பகுதியில் உலகில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போர்களில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை ஐந்து மில்லியனாக இருக்க 1891 முதல் 1900 வரையிலான பத்தாண்டுகளில் பஞ்சத்தினால் மட்டுமே இந்தியாவில் பத்தொன்பது மில்லியன் மக்கள் உயிரிழந்ததாக மெட்ராஸ் டைம்ஸ் பத்திரிக்கையின் ஆசிரியர் வில்லியம் டிக்பை குறிப்பிட்டுள்ளார்.
  • இதில் துயரம் யாதெனில், பட்டினியால் மக்கள் மடிந்து கொண்டிருந்த நிலையில் பல மில்லியன் டன் கோதுமை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
  • எடுத்துக்காட்டாக 1866இல் ஒரிசா பஞ்சத்தின்போது ஒன்றரை மில்லியன் மக்கள் பட்டினிக்குப் பலியான நிலையில் ஆங்கிலேயர் 200 மில்லியன் பவுண்ட் அரிசியை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்தனர்.
  • ஒரிசா பஞ்சத்தின் தூண்டுதலின் காரணமாக தேசியவாதியான தாதாபாய் நௌரோஜி இந்தியாவின் வறுமை குறித்துத் தனது வாழ்நாள் முழுவதுமான ஆய்வைத் தொடங்கினார்.
  • 1876-1878 காலப்பகுதியில் தொடர்ந்து இரண்டாண்டுகள் பருவமழைப் பொய்த்துப் போனதால் மதராஸ் மாகாணத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது.
  • ஒரிசா பஞ்சத்தின் போது பின்பற்றப்பட்ட தலையிடாக் கொள்கையையே அரசப்பிரதிநிதி லிட்டன் பின்பற்றினார். மதராஸ் மாகாணத்தில் 3.5 மில்லியன் மக்கள் பஞ்சத்திற்குப் பலியானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒப்பந்தக் கூலி தொழிலாளர்

  • ஆங்கிலேயப் பேரரசின் காலனிகளான சிலோன்(ஸ்ரீலங்கா), மொரிஷியஸ், ஃபிஜி, மலேயா, கரீபியன் தீவுகள், தென்னாப்பிரிக்கா போன்ற பகுதிகளில் பெருந்தோட்டப் பயிர்களான காபி, தேயிலை, கரும்பு ஆகியன அறிமுகமானபோது அத்தோட்டங்களில் வேலை செய்யப் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர்.
  • 1815இல் சிலோன் ஆளுநர் மதராஸ் மாகாண ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் பெருந்தோட்டங்களில் வேலை செய்யக் “கூலிகளை” அனுப்பிவைக்கக் கேட்டுக் கொண்டார்.
  • மதராஸ் மாகான ஆளுநர் இக்கடிதத்தை மேல் நடவடிக்கைக்காகத் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தார். மக்கள் தங்கள் நிலத்தின் மீது அதிகப்பற்றுக் கொண்டிருப்பதால் ஊக்கத் தொகை ஏதேனும் வழங்காமல் அம்மக்களை அவர்களின் சொந்த மண்ணிலிருந்து நகரச் செய்வது சிரமமெனத் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
  • ஆனால் 1833, 1843 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சங்கள் அரசாங்கத்தின் தூண்டுதல் இல்லாமலேயே மக்கள் புலம்பெயர்ந்து செல்லும் நிலையை உருவாக்கியது.
  • ஒப்பந்தக்கூலித் தொழிலாளர் முறையின் கீழ் இலங்கையின் காபி, தேயிலைத் தோட்டங்களில் இந்தியர்கள் கூலிகளாக வேலைசெய்யச் சென்றனர். 1843இல் பிரிட்டிஷ் இந்தியாவின் அடிமைமுறை ஒழிக்கப்பட்டதால் பேரரசின் காலனிகளுக்கு குடிபெயரும் செயல்பாடுகள் ஊக்கம் பெற்றன.
  • 1837இல் தமிழ்நாட்டிலிருந்து குடிபெயர்ந்து இலங்கையில் காபித் தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் 10,000. தொழிலின் வேகமான வளர்ச்சியால் தொழிலாளர்களின் தேவை அதிகரித்தது.
  • 1846இல் 80,000 என மதிப்பிடப்பட்ட தமிழ் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1855இல் 1,28,000 ஆனது. 1877இல் ஏற்பட்ட பஞ்சத்தினால் இலங்கையில் ஏறத்தாழ 3,80,000 தமிழ் கூலித்தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
  • இலங்கைக்கு மட்டுமல்லாது ஏனைய ஆங்கிலேய காலனிகளான மொரிஷியஸ், நீரினைக் குடியேற்றங்கள் (Strait Settlements). கரீபியன் தீவுகள், டிரினிடாட், ஃபிஜி, தென்னாப்பிரிக்கா போன்ற இடங்களுக்கும் ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களாகக் குடிபெயர்ந்து செல்ல இந்தியர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
  • 1843இல் மொரிஷியஸில் 30,218 ஆண்களும் 4,307 பெண்களும் குடியேறியதாக அரசே அறிவித்தது. நூற்றாண்டின் இறுதியில் 5,00,000 தொழிலாளர்கள் இந்தியாவிலிருந்தது மொரிஷியஸ் சென்றனர்.

ஒப்பந்தத் தொழிலாளர் முறை: உழைப்புடன் கூடிய கடுங்காவல் தண்டனை போன்ற இவ்வொப்பந்தக் கூலித்தொழிலாளர் முறையின் கீழ் தொழிலாளர்கள் ஐந்து வருட காலத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இறுதியில் அவர்கள் குறைந்த அளவு கூலியைப் பெற்றுக் கோண்டு வீடு திரும்பலாம். வறுமையில் உழன்ற பல விவசாயிகளும் நெசவாளர்களும் ஓரளவுப் பணம் சம்பாதிக்கும் நம்பிக்கையுடன் சென்றனர். ஆனால் அது அடிமைத் தொழிலை விடவும் மோசமாக அமைந்தது. வறுமையில் வாடிய ஏழைத் தொழிலாளர்களைச் சுழச்சியின் மூலமோ அல்லது கடத்தியோ கொண்டுவர அரசு தனது முகவர்களை (கங்காணிகள்) அனுமதித்தது. நீண்ட கடல் பயணத்தில் தொழிலாளர்கள் பெருந்துயரங்களுக்குள்ளாயினர். பலர் வழியிலேயே இறந்தனர். 1856-1857 இல் கல்கத்தாவிலிருந்து டிரினிடார் சென்ற கப்பலில் பயணம் செய்த ஒப்பந்தக் கூலித்தொழிலாளர்களின் இறப்பு விகிதம் பின்வருமாறு: ஆண்களில் 12.3 விழுக்காட்டினரும், பெண்களில் 18.5 விழுக்காட்டினரும், 28% சிறுவர்களும், 36% சிறுமிகளும், 55% குழந்தைகளும் இறந்துவிட்டனர்.

மேற்கத்தியக் கல்வியும் அதன் தாக்கமும்

அ) ஆங்கிலேயருக்கு முந்தைய இந்தியாவில் கல்வி

  • காலனிய காலத்திற்கு முந்தைய இந்தியாவில் கல்வியானது சாதி, மத அடிப்படையில் துண்டுபட்டிருந்தது. இந்துக்களிடையே, பிராமணர்கள் உயர்நிலை சார்ந்த சமய, தத்துவ அறிவினைப் பெறும் தனியுரிமையைப் பெற்றிருந்தனர்.
  • கல்வியைத் தங்களின் முற்றுரிமையாக்கிக் கொண்ட அவர்கள் பிரதானமாக அர்ச்சகர்களாகவும் ஆசிரியர்களாகவும் சமூகத்தில் அங்கம் வகித்தனர்.
  • வித்யாலயங்கள், சதுஸ்பதிகள் என்றழைக்கப்பட்ட உயர்தரக் கல்விக் கூடங்களில் கல்வி பயின்றனர். புனிதமான மொழி எனக் கருதப்பட்ட சமஸ்கிருத மொழி வழியில் அவர்கள் கல்வி கற்றனர்.
  • தொழில்நுட்ப அறிவானது – குறிப்பாகக் கட்டடக்கலை,உலோகவியல் சார்ந்த அறிவுத்திறனானது பரம்பரையாக ஒரு சந்ததியிடமிருந்து மற்றொன்றுக்கு கைமாற்றம் செய்யப்பட்டது. இம்முறை புதிய முயற்சிகளுக்குத் தடையாயிருந்தது.
  • இம்முறையிலிருந்த மற்றுமொரு குறைபாடு பெண்களும் ஒடுக்கப்பட்டோரும் ஏனைய ஏழை மக்களும் கல்வியறிவு பெறுவதிலிருந்து தடை செய்யப்பட்டதாகும்.
  • கல்வி கற்பதில் மனப்பாட முறைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. புதிய முயற்சிகளுக்கு மற்றுமொரு தடைக்கல்லாயிற்று.

ஆ) காலனியரசின் பங்களிப்பு : மெக்காலே கல்வி முறை

  • இந்தியர்களைக் கல்வி கற்றவர்களாகவும் வலிமை பெற்றவர்களாகவும் மாற்ற வேண்டும் என்பதைக் காட்டிலும் வேறுசில காரணங்களுக்காகவும் காலனியரசு இந்தியாவில் நவீனக் கல்வியின் பரவலுக்கு உதவிகள் செய்தது.
  • இந்தியா போன்ற ஒரு பெரிய காலனி நாட்டை ஆள்வதற்கு ஆங்கிலேயர்க்குத் தங்களிடம் பணி செய்ய பெரும் எண்ணிக்கையிலான கல்வி கற்ற நபர்கள் தேவைப்பட்டனர்.
  • தேவைப்படும் அளவிற்கான பெரிவாரியானப் படித்த நபர்களை இங்கிலாந்திலிருந்து அழைத்து வருவது சாத்தியமற்றது. இந்நோக்கத்தில்தான் 1835இல் இந்தியக் கவுன்சில் ஆங்கிலக் கல்விச் சட்டத்தை இயற்றியது,.
  • இந்தியாவில் அறிமுகம் செய்ய வேண்டிய ஆங்கிலக் கல்விமுறையை வடிவமைத்தவர் டி.பி.மெக்காலே ஆவார். இதன் விளைவாகக் காலனிய நிர்வாகம், ஆங்கில நவீனக் கல்வியை வழங்கும் பள்ளிகளையும், கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் இந்தியாவில் தொடங்கிற்று.
  • 1857இல் பம்பாய், சென்னை, கல்கத்தா ஆகிய இடங்களில் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன. இந்தியர்களில் படித்த வகுப்பினர் ஆங்கிலேயர்க்கு விசுவாசமாக இருப்பதோடு ஆங்கில அரசின் தூண்களாகவும் திகழ்வர் என காலனியரசு எதிர்பார்த்தது.
  • ஆங்கிலேயர் தங்கள் நலனுக்காக கற்றறிந்த இந்திய மத்தியதர வர்க்கத்தை உருவாக்கி அதை பாபு வர்க்கமென ஏளனப்படுத்தினர்.
  • இருந்தபோதிலும் அந்த வர்க்கத்தினரே இந்தியாவின் புரட்சிகர, முற்போக்கானப் படித்த வர்க்கமாக மாறி நாட்டின் விடுதலைக்காக மக்களைத் திரட்டுவதில் முக்கியப் பங்காற்றினர்.

T.B.மெக்காலே 1834 முதல் 1838 வரை கவர்னர் ஜெனரலின் ஆலோசனைக் குழுவில் முதல் சட்ட உறுப்பினராக அங்கம் வகித்தவர். மெக்காலே இந்தியாவிற்கு வருவதற்கு முன்னதாக 1823இல் பொதுக்கல்விக்கான பொதுக்குழு உருவாக்கப்பட்டது. கல்வி தொடர்பாகவும், எம்மொழியில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வழிகாட்டுவது இக்குழுவின் பொறுப்பாகும். இவ்வமைப்புப் பின்னர் இரண்டு குழுக்களாகப் பிரிந்தது. கீழ்த்திசைக் குழுவானது கல்வி பிராந்திய மொழிகளில் கற்பிக்கப்பட வேண்டும் எனும் கருத்தை முன்வைத்தது. ஆங்கில மரபுக்குழு மேலைக் கல்வியானது ஆங்கில மொழி வழியில் கற்பிக்கப்பட வேண்டும் எனும் கருத்தை முன் வைத்தது.

மெக்காலே ஆங்கில மரபுக்குழுவின் கருத்துக்கு ஆதரவாக இருந்தார். 1835இல் அவர் தனது புகழ்பெற்ற “இந்தியக் கல்வி குறித்த குறிப்புகள் (Minute on Indian Education)” எனும் குறிப்புகளை வெளியிட்டார். இக்குறிப்புகளில் ஆங்கில வழியில் மேற்கத்தியக் கல்வி கற்பிக்கப்படுவதற்கு ஆதரவாக வாதிட்டார். ரத்தத்திலும் நிறத்திலும் இந்தியராகவும் விருப்பத்தில், கருத்தில், ஒழுக்க நெறிகளில், அறிவியக் ஆங்கிலேயராய் இருக்கும் ஒரு மக்கள் பிரிவினரை இந்தியாவிற்குள்ளே உருவாக்க அவர் விரும்பியதே அவர் ஆங்கில மரபுக் குழுவை ஆதரித்ததன் காரணமாகும்.

இ) கற்றறிந்த மத்தியதர வகுப்பினரின் பங்கு

  • பொருளாதார நிர்வாக மாற்றங்கள் ஒருபுறமும் மேற்கத்தியக் கல்வியின் வளர்ச்சி மறுபுறத்திலுமாக புதிய சமூக வர்க்கங்கள் வளர்ச்சி பெறுவதற்கு இடமளித்தன.
  • இப்புதிய வர்க்கங்களின் இடையேயிருந்து ஒரு நவீன இந்திய கற்றறிந்தோர் பிரிவு உருவானது. ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இந்நவீன சமூக வர்க்கம் இந்தியாவின் வணிக வர்த்தகச் சமூகங்கள், நிலப்பிரபுக்கள், லேவாதேவி செய்வோர் (வட்டிக்குப் பணத்தைக் கடன் கொடுப்பீர்) ஆங்கிலம் பயின்ற ஏகாதிபத்திய அரசின் துணை நிர்வாகப் பிரிவுகளில் பணியமர்த்தப்பட்டோர், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாய் இருந்தது.
  • இவர்கள் தொடக்க காலய்த்தில் ஆங்கிலேய நிர்வாகத்துடன் இணக்கமான அணுகுமுறையைக் கொண்டிருந்தனர். இருந்தபோதிலும் தங்களது விருப்பங்கள் சுதந்திர இந்தியாவில் மட்டுமே நிறைவேறுமென்பதை இவர்கள் உணர்ந்து கொண்டனர்.
  • மேற்சொல்லப்பட்ட வர்க்கங்களைச் சேர்ந்த மக்கள் ஏனைய மக்களிடையே நாட்டுப்பற்றை வளர்த்தெடுப்பதில் சிறப்பானப் பங்காற்றினர். தேசிய அளவில் இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப்படுவதற்கு முன்னர் இருந்த பல அமைப்புகளில் இவ்வகுப்புகளைச் சேர்ந்தோரின் உணர்வுகள் தெளிவாகப் பேசப்பட்டதைக் காண முடிகிறது.
  • நவீன இந்தியக் கற்றறிந்தோர் பிரிவைச் சேர்ந்த ராஜா ராம்மோகன் ராய், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், சுவாமி விவேகானந்தர், அரவிந்த கோஷ், கோபால கிருஷ்ண கோகலே, தாதாபாய் நௌரோஜி, பெரோஸ்ஷா மேத்தா, சுரேந்திரநாத் பானர்ஜி ஆகியோரும் மற்றோரும் இந்திய அரசியல், சமுதாய, மத இயக்கங்களுக்குத் தலைமையேற்றனர்.
  • மேலைநாட்டு அறிஞர்களான ஜான்லாக், ஜேம்ஸ் ஸ்டூவர்ட் மில், மாஜினி , கரிபால்டி, ரூஸோ, தாமஸ்பெயின், மார்க்ஸ் ஆகியோராலும் மற்றவர்களாலும் கூறப்பட்ட தேசியம் , மக்களாட்சி, சோசலிசம் போன்ர தத்துவக் கருத்துக்களைக் கற்றறிந்த இந்தியர்கள் அறிந்து கொண்டனர்.
  • சுதந்திரமான பத்திரிகை உரிமை, பொதுக்கூட்டங்களில் சுதந்திரமாகப் பேசும் உரிமை, சுதந்திரமாக ஒன்று கூடும் உரிமை ஆகியன இயற்கையான இயல்பான உரிமைகளாகும்.
  • கற்றறிந்த இந்தியரின் ஐரோப்பியக் கூட்டாளிகள் இந்த உரிமைகளைத் தங்கள் நெஞ்சுக்கு நெருக்கமாக வைத்திருந்தனர்; அதை அவ்வாறே கடைபிடிக்க இவர்களும் விரும்பினர்; பல அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அங்கே மக்கள் ஒருவரையொருவர் சந்தித்துத் தங்களைப் பாதிக்கும் அம்சங்கள் குறித்து விவாதித்தனர்.
  • இச்செயல் போக்குவரத்து வசதியின் மிகப்பெரும் விரிவாக்கம், இந்தியா முழுவதும் நிறுவப்பட்ட அஞ்சல், தந்தி சேவைகள் ஆகியன இதுபோன்ற விவாதங்கள் தேசிய அளவில் நடைபெறுவதையும் சாத்தியமாக்கின.

ஈ) சமயப் பரப்பாளர்களின் பங்களிப்பு

  • இந்திய மக்களிடையே நவீனக் கல்வியைக் கற்றுத்தர மேற்கொள்ளப்பட்ட தொடக்க கால முயற்சிகளிலொன்று கிறித்தவ சமயப்பரப்பு நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டதாகும்.
  • மதமாற்ற ஆர்வத்தால் தூண்டப்பெற்ற அவர்கள் இந்துக்களிடையே நடைமுறையிலிருந்த பலகடவுள் நம்பிக்கையையும் சாதிய ஏற்றத் தாழ்வுகளையும் தாக்கலாயினர்.
  • நவீன மதச்சார்பற்ற கல்வியின் மூலமாக கிறித்தவத்தைப் போதிப்பது சமயப் பரப்பு நிறுவனங்கள் கைக்கொண்ட ஒரு மூறையாகும். மரபு சார்ந்த கல்வி முறையில் , கல்வி கற்பதற்கான உரிமைகள் மறுக்கப்பட்ட அடித்தட்டு மக்களும், விளிம்பு நிலை மக்களும் கல்வி பெறுவதற்கான வாய்ப்பை இவை வழங்கின.
  • மக்களில் மிகமிகச் சிறிய பகுதியினரே கிறித்தவ மதத்திற்கு மாறினர். ஆனால் கிறுத்தவம் விடுத்த சவால்கள் பல்வேறு சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் தோன்ற வழிவகை செய்தது.

சமூக, சமய சீர்திருத்தங்கள்

  • அரசியல் செயல்பாடுகளில் மக்களை ஈடுபடுத்தும் முன்னர் சமூகத்தை சீர்திருத்த வேண்டியதை ஆங்கிலக் கல்வியைக் கற்றறிந்தோர் உணர்ந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடைபெற்ற சீர்திருத்த இயக்கங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
  1. ராஜா ராம்மோகன் ராயால் நிறுவப்பெற்ற பிரம்ம சமாஜம், டாக்டர் ஆத்மராம் பாண்டுரங் உருவாக்கிய பிராத்தனை சமாஜம், சையத் அகமது கானால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட அலிகார் இயக்கம் ஆகிய சீர்திருத்த இயக்கங்கள்
  2. மீட்பு இயக்கங்களான ஆரிய சமாஜம், இராமகிருஷ்ண இயக்கம், தியோபந்த் இயக்கங்கள்
  3. புனேயில் ஜோதிபா பூலே , கேரளாவில் நாராயண குரு, அய்யன்காளி, தமிழ்நாட்டில் இராமலிங்க அடிகள், வைகுண்ட சுவாமிகள் பின்னர் அயோத்தி தாசர் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட சமூக இயக்கங்கள் குறித்தும் இவ்வனைத்து சீர்திருத்தவாதிகள் குறித்தும் அவர்களின் பங்களிப்பு குறித்தும் பதினொன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
  • பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குச் சீர்திருத்தவாதிகள் காரணத்தை அடிப்படையாகக் கொண்டு கற்றறிந்த மேலை நாட்டினர் முன்வைத்த சவால்களை எதிர்கொண்டு பதில் கூறினர்.
  • இச்சீர்திருத்தவாதிகளால் தூண்டப்பட்ட மீள் சிந்தனையின் விளைவாகவே இந்திய தேசிய உணர்வு உதயமானது.
  • 1828இல் ராஜா ராம்மோகன் ராய் பிரம்ம சமாஜத்தை நிறுவினார். அதனைத் தொடர்ந்து ஏனைய சமூகப் பண்பாட்டு அமைப்புகளான பிரார்த்தனை சமாஜம் (1867) ஆரிய சமாஜம் (1875) ஆகியவை நிறுவப்பெற்றன.
  • ராயின் முன் முயற்சி கேசவ் சந்திர சென், ஈஸ்வர சந்திர வித்யாசாகர் போன்ற சீர்திருத்தவாதிகளால் தொடரப்பட்டன. சதி ஒழிப்பு , குழந்தைத் திருமண ஒழிப்பு, விதவை மறுமணம் ஆகியவைகளின் மீது இச்சீர்திருத்தவாதிகள் அதிக அக்கறை செலுத்தினர்.
  • இஸ்லாமியரிடையே அலிகார் இயக்கம் இதே பணியை மேற்கொண்டது. காலப்போக்கில் அரசியல் தன்மை கொண்ட அமைப்புகளும் கழகங்களும் பிரிட்டிஷ் இந்தியாவின் பல பகுதிகளில் தோன்றி மக்களின் குறைகளைப் பற்றி பேசத்தொடங்கின.

தேசியத்தின் எழுச்சிக்கு ஏனைய முக்கியக் காரணங்கள்

அ) 1857 குறித்த ஓயாத நினைவுகள்

  • 1857 இன் பேரெழுச்சியே இந்திய தேசிய இயக்கத்தின் பிறந்த நாளாகும். புரட்சி ஒடுக்கப்பட்ட பின்னர் ஆங்கில ராணுவம் செய்த அட்டூழியங்கள் ‘பழி தீர்க்கப்படாமலே’ இருந்தன.
  • ராணுவச் சட்டங்களும் நடைமுறைகளும்கூடப் பின்பற்றப்படவில்லை. ராணுவ நீதிமன்றத்தின் விசாரணை அதிகாரிகள் தங்கள் கைதிகள் கூற்றம் புரிந்தவர்களோ அல்லது ஒன்றுமறியாதவர்களோ எப்படியிருப்பினும் அவர்களைத் தூக்கிலிடப் போவது உறுதி எனக் கூறினர்.
  • இவ்வாறான பாகுபாடற்ற பழிச்செயலுக்கு எதிராக யாரேனும் குரலை உயர்த்தினால் அதிகாரியின் உடன் பணியாற்றுபவர்கள் கோபத்துடன் அவர்களை அடக்கினர்.
  • கேலிக்கூத்தான இவ்விசாரணைகளுக்குப் பின்னர் மரண தண்டனை அளிக்கப்பட்டோர் அது நிறைவேற்றப்படும் வரை அதிகாரிகளுக்கு தெரிந்த வீரர்களால் சித்திரவதை செய்யப்பட்டனர்.
  • 1857 ஜூன்-செப்டம்பர் மாதங்களில் ஆங்கிலப் படைகளால் டெல்லி முற்றுகையிடப்பட்டது குறித்து, பம்பாய் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எல்பின்ஸ்டன் , அப்போதைய இந்தியாவின் எதிர்கால அரசப்பிரதிநிதி (1864) சர் ஜான் லாரன்ஸுக்கு எழுதியதை இங்கே பதிவு செய்வது பொருத்தமுடையதாகும்.
  • “நண்பன் பகைவன் என்ற வேறுபாடின்றி முழுவீச்சிலான பழி வாங்குதல் மேறொள்ளப்பட்டுள்ளது. கொள்ளையடிப்பதைப் பொறுத்தமட்டில் நாம் உண்மையாகவே நாதிர்ஷாவை மிஞ்சிவிட்டோம்”.

ஆ) இனப்பாகுபாடு

  • ஆங்கிலேயர் இனப்பாகுபாட்டுக் கொள்கையைப் பின்பற்றினர். அரசு உயர்பதவிகளில் இந்தியர்களைப் பணியமர்த்தாமல் திட்டமிட்டு விலக்கி வைக்கப்பட்டதை மக்கள் இந்திய எதிர்ப்புக் கொள்கையின் நடவடிக்கையாகக் கருதினர். இதன் விளைவாக இந்திய உயர் வகுப்பாரிடையே ஏற்பட்ட வெறுப்பு ஆங்கிலேயர் ஆட்சிக்கெதிராக இந்தியர்கள் புரட்சி செய்ய இட்டுச் சென்றது. குடிமைப் பணிக்கானத் தேர்வுகள் அறிமுகமானபோது வயது வரம்பு இருபத்தொன்று என நிர்ணயம் செய்யப்பட்டது.
  • அத்தேர்வுகளில் இந்தியர்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அத்தேர்வுகளை இந்தியர்கள் எழுதவிடாமல் தடுப்பதற்காக வயது வரம்பு பத்தொன்பதாகக் குறைக்கப்பட்டது.
  • இதைப்போலவே குடிமைப்பணித் தேர்வுகளை ஒரே நேரத்தில் இங்கிலாந்திலும், இந்தியாவிலும் நடத்த வேண்டுமென இந்தியாவின் கற்றறிந்த நடுத்தர வர்க்கம் வைத்த வேண்டுமோளை ஆங்கில அரசு ஏற்றுக்கொள்ள மறுத்தது.

இ) இந்தியர்களுக்கு எதிரான அடக்குமுறை, சுரண்டல் நடவடிக்கைகள்

  • அரசுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் முயற்சிகளை மேற்கொள்வோரை தண்டனைக்குள்ளாக்கும் இந்திய தண்டனைச் சட்டம் (1870) பிரிவு 124A அடக்குமுறை ஒழுங்காற்றுச் சட்டமும், பத்திரிக்கைகளைத் தணிக்கைக்கு உட்படுத்திய பிராந்திய மொழிச் சட்டமும் (1878) எதிர்ப்புகளைத் தூண்டின.
  • இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்தியிழைத் துணிகளின் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டதும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பருத்தியிழைத் துணிகளின் மீதான உள்நாட்டுத் தீர்வை உயர்த்தப்பட்டதும் நாடு முழுவதும் மனநிறைவின்மையை ஏற்படுத்தியது.
  • ரிப்பன் அரசப்பிரதிநிதியாக இருந்தபோது இல்பர்ட் மசோதாவின் மூலம் இந்திய நீதிபதிகள் ஐரோப்பியர்களை விசாரிக்க அதிகாரம் பெற்றனர். ஆனால் ஐரோப்பியர் எதிர்ப்பால் ஐரோப்பியரின் விருப்பங்களை நிறைவு செய்யும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது.

ஈ) பத்திரிகைகளின் பங்கு

  • இந்தியாவில் அச்சு இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டமை மிக முக்கிய நிகழ்வாகும். அது தன்னாட்சி, மக்களாட்சி, குடிமை உரிமைகள், தொழில்மயமாக்குதல் போன்ற நவீன சிந்தனைகளைப் பரப்ப மக்களுக்கு உதவியது.
  • பத்திரிக்கைகள் அரசியலை விமர்சனம் செய்யத் தொடங்கின. நாட்டினைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து மக்களிடம் பேசின. ராஜா ராம்மோகன் ராயின் வங்க மொழிப் பத்திரிக்கையான கம்வத் கௌமுதி (1821) பாரசீக மொழிப் பத்திரிக்கையான மிராத்-உல்-அக்பர் ஆகியவை மக்கள் நலன் சார்ந்த முக்கியப் பொது விஷயங்களை மக்களுக்குக் கற்ருக் கொடுப்பதில் முற்போக்காக பங்காற்றின.
  • பின்னர், மக்கள் கருத்தை உருவாக்குவதற்காக எண்ணற்ற தேசிய, பிராந்திய மொழிப் பத்திரிகைகள் தொடங்கப்பட்டன. தேசிய உணர்வைப் பேணுவதில் அவை மிகப்பெருந் தொண்டாற்றின. அவைகளுள் அமிர்த பஜார் பத்திரிக்கா, தி பாம்பே கிரானிக்கல், தி ட்ரிப்யூன் , தி இண்டியன் மிரர், தி இந்து , சுதேசமித்திர ஆகியன முக்கியமானவையாகும்.

உ) இந்தியாவின் பழம் பெருமையை வணங்குதல்

  • வில்லியம் ஜோன்ஸ், சார்லஸ் வில்கின்ஸ், மேக்ஸ் முல்லர் போன்ற கீழையுலக அறிஞர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு அராபிட, பாரசீக, சமஸ்கிருத மொழிகளிலிருந்த மத, வரலாற்று இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அனைவருக்கும் கிடைக்கச் செய்தனர.
  • இந்தியாவின் மரபு, புலமை ஆகியவற்றின் செழுமையால் கவரப்பட்டப் பல தொடக்ககால தேசியவாதிகள் இந்தியாவின் பண்டையப் பெருமையை மீட்டெடுக்க ஆர்வத்துடன் வேண்டுனர்.
  • “தேசியத்தின் குறிக்கோளானது இந்தியச் சிந்தனையை, இந்திய குணநலன்களை , இந்தியச் குணநலன்களை, இந்திய உணர்வுகளை, இந்திய ஆற்றலை, இந்தியாவின் உன்னதத்தை மீட்டெடுப்பதாகும். மேலும் உலகைத் தடுமாறச் செய்யும் பிரச்சனைகளை இந்திய மனப்பாங்குடன் இந்திய நிலைப்பாட்டில் தீர்த்து வைப்பதாகும்” என அரவிந்தகோஷ் எழுதினார்.

இந்தியாவில் சங்கங்கள் உருவாதல்

அ) சென்னைவாசிகள் சங்கம் (Madras Native Association – MNA)

  • 1852 பிப்ரவரி 26இல் சென்னைவாசிகள் சங்கம் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. மக்களை ஒருங்கிணைத்து கம்பெனிக்கு எதிராகக் குறைபாடுகளை எடுத்துரைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சிகளில் இது ஒன்றாகும்.
  • இதும் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த நிலவுடைமை வணிக வர்க்கத்தினரின் அமைப்பாகும். கம்பெனியின் நிர்வாகத்தில் வருவாய், கல்வி, நீதி ஆகியத் துறைகளில் தங்களுக்குள்ள குறைபாடுகளை இவர்கள் இவ்வமைப்பின் மூலம் எடுத்துரைத்தனர்.
  • சென்னையின் மிக முக்கிய வணிகரான கஜுலா லட்சுமிநரசு என்பவரே இவ்வமைப்பு உருவாவதற்கு உந்து சக்தியாய்த் திகழ்ந்தவர்.
  • இவ்வமைப்புத் தனது குறைகளை இங்கிலாந்துப் பாரளுமன்றத்தின் முன் வைத்தது. இங்கிலாந்துப் பாராளுமன்றத்தின் முன் வைத்தது. இங்கிலாந்துப் பாராளுமண்டம் இந்தியாவில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி குறித்து விவாதித்து 1853இல் பட்டயச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் இது நடைபெற்றது.
  • இவ்வமைப்பு 1852 டிசம்பரில் சமர்ப்பித்த மனுவில் ரயத்துவாரி, ஜமீந்தாரி முறைகள் வேளாண் வர்க்கத்தினரைக் கடும் துன்பங்களுக்கு உள்ளாக்கியதைச் சுட்டிக் காட்டியது.
  • ஜமீன்தார்கள், கம்பெனியின் அதிகாரிகள் ஆகியோரின் அடக்குமுறை சார்ந்த தலையீட்டிலிருந்து விவசாயிகளை விடுவிக்கப் பண்டைய கிராமமுறை மீட்டெடுக்கப்பட வேண்டுமென இவ்வமைப்பு வற்புறுத்தியது. நீதித்துறையானது தாமதமாக செயல்படுவதாகவும், சிக்கல்கள் நிறைந்ததாகவும் குறைபாடுகளுடையதாகவும் இருப்பதாக இம்மனுவில் புகார் கூறப்பட்டிருந்தது.
  • நீதிபதிகளின் நியமனத்தின்போது அவர்களின் நீதித்துறைசார் அறிவுத்திறனும் வட்டார மொழிகளில் அவர்களுக்குள்ளத் திறமையும் மதிப்பீடு செய்யப்படாததால் நீதித்துறையின் தீரமை பாதிக்கப்படுவதை இம்மனு சுட்டிக்காட்டியது.
  • மானிய உதவித்திட்டதின் கீழ் சமயப்பரப்பு நிறுவனங்களின் கல்விக் கூடங்களுக்கு அரசின் நிதி மடைமாற்றம் செய்யப்படுவதும் இம்மனுவில் எதிர்க்கப்பட்டிருந்தது.
  • சென்னைவாசிகள் சங்கத்தின் மனு மார்ச் 1853இல் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. இந்தியச் சீர்திருத்தக் கழகத்தின் தலைவரான H.D.செய்மோர் அக்டோபர் 1853இல் சென்னை வந்தார்.
  • குண்டூர், கடலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களைப் பார்வையிட்டார். இருந்தபோதிலும் 1853ஆம் ஆண்டு பட்டயச்சட்டம் இந்தியாவில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சித் தொடர அனுமதி வழங்கியது. இதனால் இவ்வமைப்பு இந்தியாவிலுள்ள ஆங்கிலேயருக்குச் சொந்தமான பகுதிகள் மகாராணியாரின் நேரடிக் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட வேண்டுமென ஒரு போராட்டத்தை நடத்தியது. இவ்வமைப்பு இந்தியாவில் கம்பெனியின் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையைக் கொண்ட பதினான்காயிரம் நபர்களால் கையெழுத்திடப்பட்ட தனது இரண்டாவது மனுவை ஆங்கிலப் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தது.
  • இவ்வமைப்பின் ஆயுட்காலம் குறைவானதே. 1866இல் லட்சிமுநரசு இயற்கை எய்தினார். 1881இல் இவ்வமைப்பு இல்லாமல் போயிற்று.
  • சீர்திருத்தங்கள் என்றளவில் இவ்வமைப்புப் பெருமளவில் சாதனைகள் செய்யவிட்டாலும் இது இந்தியரின் கருத்தினை வெளியே சொல்ல மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த முயற்சியின் தொடக்கமாகும்.
  • தனது வாழ்நாளில் இவ்வமைப்பு சென்னை மாகாண எல்லைகளுக்குள்ளே மட்டும் செயல்பட்டது. இவ்வமைப்பு தனது மனுக்கள் மூலம் சுட்டிக்காட்டிய குறைபாடுகளும், நடத்தியப் போராட்டங்களும் செல்வந்தர்களின் குறிப்பாகச் சென்னை மாகான நிலவுடைமையாளர்களின் எண்ணத்தின்படி நடந்தவையாகும்.
  • குறைபாடு யாதெனில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும், மக்களின் குறைகளை ஓங்கி ஒலிக்கச் செய்து, அக்குறையை நிவர்த்தி செய்ய காலனியாதிக்கத்திற்கு எதிராகப் போராடும் தேசிய அளவிலான அரசியல் சார்ந்த அமைப்பாக இல்லாமல் போனதுதான். அந்த இடைவெளியை இந்திய தேசிய காங்கிரஸ் நிரப்பியது.

ஆ) சென்னை மகாஜன சங்கம் (Madras Mahajana Sabha – MMS)

  • சென்னவாசிகள் சங்கம் செயலிழந்த பின்னர் சென்னை மாகாணத்தில் அதைப் போன்ற வேறு அமைப்பு இல்லாமல் போனது. கற்றறிந்த பல இந்தியர்கள் இந்நிலையைக் கவலையுடன் நோக்கினர்.
  • ஓர் அரசியல் சார்ந்த அமைப்பின் தேவை உணரப்பட்டது. அதன் விளைவாய் மே, 1884 இல் சென்னை மாகாஜன சங்கம் நிறுவப்பெற்றது. 1884 மே 16இல் நடைபெற்ற தொடக்க விழாவில் பங்கேற்ற முக்கியப் பிரமுகர்கள் G.சுப்ரமணியம், வீரராகவாச்சாரி, அனந்தா சார்லு, ரங்கையா, பாலாஜிராவ், சேலம் ராமசாமி ஆகியோராவர்.
  • இதற்கிடையே இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப் பெற்றது. சென்னை மகாஜன சபையின் பிராந்திய மாநாடு நடைபெற்று முடிந்த பின்னர் அதன் தலைவர்கள் பம்பாயில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாட்டில் கலந்துகொண்டு சென்னை மகாஜன சபையை இந்திய தேசிய காங்கிரசோடு இணைத்தனர்.

இ) இந்திய தேசிய காங்கிரஸ் (Indian National Congree – INC)

  • காலனிய ஆட்சிக்கு எதிராகக் குறைகளையும் பிரச்சனைகளையும் எழுப்பும் ஒரு அரசியல்சார் அமைப்பை நிறுவும் சிந்தனை வெற்றிடத்திலிருந்து உருவானதல்ல.
  • 1875க்கும் 1885 க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் ஆங்கிலேயரின் கொள்கைகளுக்கு எதிராகப் பல போராட்டங்கள் நடைப்பெற்றன, 1875இல் இறக்குமதியாகும் பருத்தி இழைத்துணிகளின் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட வேண்டுமென ஜவுளி ஆளை உரிமையாளர்கள் இயக்கம் நடத்தினர்.
  • 1877 இல் அரசுப் பணிகள் இந்திய மயமாக்கப்பட வேண்மென்றக் கோரிக்கை ஓங்கி ஒலித்தது. 1877இல் அரசுப் பணிகள் இந்திய மயமாக்கப்பட வேண்டுமென்றக் கோரிக்கை ஓங்கி ஒலித்தது.
  • 1878ஆம் ஆண்டு வட்டார மொழிப் பத்திரிக்கைச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன. இல்பர்ட் மசோதாவிற்கு ஆதரவாக 1883இல் கிளர்ச்சிகள் நடைபெற்றன.
  • ஆனால் இப்போராட்டங்களும் கிளர்ச்சிகளும் ஒருங்கிணைக்கப்படாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே நடைபெற்றன. தேசிய அளவிலான ஒரு அரசியல்சார் அமைப்பு உருவாக்கப்படாத நிலையில் இத்தகையப் போராட்டங்கள், கொள்கைகளை வடிவமைப்போர் மீது தாக்கத்தை ஏற்படுத்தாது என்பது ஆழமாக உணரப்பட்டது.
  • இவ்வுணர்தலில் இருந்து உதயமானதே இந்திய தேசிய காங்கிரஸ். இந்தியா ஒரே நாடு எனும் கருத்து அவ்வமைப்பின் பெயரில் பிரதிபலித்தது. இவ்வமைப்பு தேசியவாதம் எனும் கருத்தையும் அறிமுகம் செய்தது.

  • ஆலன் ஆக்டேவியன் ஹியூம் (A.O.Hume) எனும் பணி நிறைவு பெற்ற இந்தியக் குடிமைப் பணி (Indian Civil Service – ICS) அதிகாரி டிசம்பர் 1884இல், சென்னையில் பிரம்ம ஞான சபையின் கூட்டமொன்றிற்குத் தலைமை ஏற்றிருந்தார்.
  • இக்கூட்டத்தில் அகில இந்திய அளவில் செயல்படும் ஒரு அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பாக விவாதிக்கப்படுகையில் இந்திய தேசிய காங்கிரசை உருவாக்குவது எனும் கருத்து உருவானது.
  • இந்திய தேசிய காங்கிரஸ் 1885 டிசம்பர் 28இல் பம்பாயில் உருவாக்கப்பட்டது. A.O.ஹுயூம் தவிர இவ்வமைப்பை உருவாக்கிய முக்கிய உறுப்பினரான W.C.பாணர்ஜி இவ்வமைப்பின் முதல் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
  • கோரிக்கை மனு கொடுப்பது, விண்ணப்பங்கள் அனுப்புவது போன்ற செயல்பாடுகளை மட்டுமே காங்கிரஸ் மேற்கொண்ட போதும், தொடக்கத்திலிருந்தே சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் தனது வரம்புக்குள் கொண்டுவரும் பணிகளை மேற்கொண்டது.
  • இந்தியாவை ஒரே நாடாக ஒருங்கிணைப்பதே இந்திய தேசிய காங்கிரசின் இன்றியமையா நோக்கங்களில் ஒன்றாக இருந்தது, இந்தியர்கள் தாங்கள் அனைவரும் ஒரு நாட்டின் குடிமக்கள் என உணர்ந்தால் மட்டுமே காலனியாட்சிக்கு எதிரானப் போராட்டங்கள் வெற்றி பெறுமென்பதை அவர்கள் நன்குணர்ந்தனர்.
  • இம்முயற்சியில் வெற்றி பெறும் பொருட்டு நாட்டின் பல பகுதிகளிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இயக்கங்களின் பொது அரசியல் மேடையாகக் காங்கிரஸ் செயல்பட்டது.
  • நாட்டின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரசியல் செயல்பாட்டாளர்கள் ஒன்று கூடவும் காங்கிரசின் பதாகையின் கீழ் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் காங்கிரஸ் இடமளித்தது.
  • இவ்வமைப்பு நூற்றுக்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட சிறிய அமைப்பாக இருந்தபோதிலும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளின் பிரதிநிதித்துவத்துடன் அகில இந்தியப் பண்பைப் பெற்றிருந்தது. இதுவே அகில இந்திய அளவில் மக்களைத் திரட்டும் தொடக்கமாய் ஆனது.

இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய நோக்கங்களும் கோரிக்கைகளும்:

அரசியல் அமைப்பு

அர்சாங்கத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென்பது இந்திய தேசிய காங்கிரசின் முக்கியக் கோரிக்கையாகும். அரசில் இந்தியப் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டுமெனக் காங்கிரஸ் கோரியது.

பொருளாதாரம்

விவசாயிகளின் துன்பநிலைக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று அதிக நிலவரியாகும். நிலவரி குறைக்கப்பட வேண்டுமெனவும் ஜமீன்தார்களின் சுரண்டலிலிருந்து விவசாயிகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் காங்கிரஸ் கோரியது. சுதேசிப் பொருட்களுக்கு நன்மை அளிக்கும் விதத்தில் இறக்குமதி செய்யப்படும் பண்டங்களின் மீது அதிகவரி விதிக்கும்படி காங்கிரஸ் பரிந்துரை செய்தது.

நிர்வாகம்

இந்திய நிர்வாகத்திற்குப் பொறுப்பு வகிக்கும் உயர்நிலை அதிகாரிகள் இங்கிலாந்தில் நடத்தப்படும் குடிமைப்பணித் தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டன. இதன் பொருள் தகுதியுடைய கற்றறிந்த இந்தியர்கள் லண்டனுக்குச் செல்லும் வசதியில்லாவிட்டால் நிர்வாகப்பதவிகளில் அமரும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லை என்பதுதான். எனவே, இந்தியக் குடிமைப்பணித் தேர்வுகளை இங்கிலாந்திலும் இந்தியாவிலும் ஒரே நேரத்தில் நடத்துவதன் மூலம் நிர்வாகப் பணிகளை இந்தியமயமாக்குவது காங்கிரசின் முக்கியக் கோரிக்கையாகும்.

நீதித்துறை

ஆங்கிலேய நீதிபதிகள் இந்திய அரசியல் செயல்பாட்டாளர்களிடம் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வதால் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நிர்வாகமும் நீதி நிர்வாகமும் தனித்தனியே முற்றிலுமாகப் பிரிக்கப்படவேண்டுமெனக் காங்கிரஸ் கோரிக்கை வைத்தது.

ஈ) தொடக்ககால தேசியவாதிகளின் பங்களிப்பு (1885 – 1915)

  • இந்திய தேசிய காங்கிரசை சேர்ந்த தொடக்க காலத் தலைவர்கள் சமூகத்தின் உயர்குடிப் பிரிவைச் சேர்ந்தோர் ஆவர். வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் போன்றோர் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தினர்.
  • இருந்தபோதிலும் அவர்கள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்களாயினும் இந்திய தேசிய காங்கிரசை உண்மையாகவே ஒரு தேசிய அரசியல்சார் அமைப்பாக ஆக்கினர்.
  • காங்கிரசின் இத்தலைவர்கள் அரசியல் சட்டம் அனுமதித்த வழிகளான மனுகொடுப்பது, மன்றாடுவது, விண்ணப்பம் செய்வது போன்ற முறைகளை மேற்கொண்டதால் “மிதவாத தேசியவாதிகள்” என்னும் புனைப் பெயரைப் பெற்றனர்.
  • காலனியம் பற்றிய ஒரு வகையான புரிதல் இந்தியாவில் உருவாகிக் கொண்டிருந்த காலமது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் உருவான காலப்பகுதியில் காலனிய எதிர்ப்பு தொடர்பான புரிதல் இருந்ததா என்பது பற்றித் தெரிந்து கொள்ள ஆயத்த நிலைக் குறிப்புகளில்லை.
  • நாம் ஒரே நாடாக என்ற கருத்து வடிவம் பெற உதவுயவர்கள் இத்தொடக்ககால தேசியவாதிகளே.
  • அவர்கள் உண்மையாகவே இம்மண் சார்ந்த காலனிய எதிர்ப்புச் சித்தாந்தத்தையும் தாங்களாகவே தங்களுக்கென ஒரு செயல் திட்டத்தையும் உருவாக்கிக் கொண்டனர். இது உண்மையில் காந்தியடிகள் போன்ற எதிர்கால மக்கள் தலைவர்களுக்கு உதவியது.
  • 1890களின் பிற்பகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசுக்குள்ளே கருத்து வேற்றுமைகள் வளர்ந்தன. பிபின் சந்திரபால், பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்ற தலைவர்கள் வேறுமனே மனுக்கள் எழுதுவது, மன்றாடிக் கேட்டுக்கொள்வது, விண்ணப்பம் செய்வது போன்ற அணுகுமுறைகளுக்குப் பரிந்துரைத்தனர்.
  • இத்தன்மையுடையோர் மிதவாத தேசியவாதிகளுக்கு நேரெதிராக “தீவிர தேசியவாதிகள்” என்றழைக்கப்பட்டனர்.
  • 1897இல் திலகர் “சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என முழங்கிய போது அவர்களின் நோக்கம் தெளிவாகத் தெரிந்தது. தங்களது மனுக்கள், பிரார்த்தனைகள் மூலமாக மிதவாத தேசியவாதிகள் கேட்டுக் கொண்டிருந்த பொருளாதார அல்லது நிர்வாகச் சீர்திருத்தங்களுக்குப் பதிலாகத் திலகரும் தீவிரப்போக்குடைய அவருடையத் தொண்டர்களும் சுயராஜ்ஜியத்தைக் கோரினர்.
  • அவர்கள் ஒருவரையொருவர் விமர்சித்துக் கொண்டாலும் அவர்களை எதிரெதிர் துருவங்களில் வைத்துப் பார்ப்பது தவறாகும். மிதவாத தேசியவாதிகள், தீவிர தேசியவாதிகள் ஆகிய இரு தரப்பினருமே மாபெரும் இந்திய தேசியவாதிகளின் இயக்கத்தில் முக்கியக் கூறுகளாவர்.
  • உண்மையில் சுதேசி இயக்கம் தோன்றுவதற்கு பங்களிப்புச் செய்தவர்கள் அவர்களேயாவர்.
  • 1905இல் ஆங்கிலேயர்களால் மேற்கொள்ளப்பட்ட வங்கப்பிரிவினை இந்தியர்களால் ஆவேசமாக எதிர்க்கப்பட்டது. 1905இல் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கம் ஆங்கிலேய ஆட்சியை நேரடியாக எதிர்த்ததோடு, சுதேசித்ன் தொழில்கள், தேசியக்கல்வி, சுயஉதவி இந்திய மொழிகளைப் பயன்படுத்துதல் ஆகிய கருத்துகளை ஊக்குவித்தது.
  • தீவிர தேசியவாதிகள் முன்வைத்த பெருமளவிலான மக்களைத் திரட்டுவது, ஆங்கிலப் பொருட்களையும் நிறுவனங்களையும் புறக்கணிப்பது ஆகிய போராட்ட முறைகள் மிதவாத தேசியவாதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • மிதவாத தேசியவாதிகள், தீவிர தேசியவாதிகள் ஆகிய இருதரப்பினரும் அவர்கள் வழிகாட்டிகளாகப் பொறுப்பு வகித்து, அப்பொறுப்புகளை நிறைவெஏற்ற வேண்டியத் தேவையுள்ளது எனும் உண்மையை ஏற்றுக்கொள்வதில் ஒரே கருத்தையேக் கொண்டிருந்தனர்.
  • பத்திரிகைகள் முதலானப் பல்வேறு வழிகளில் தேசிய உணர்வைப் புகட்டும் முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டனர். 1885இல் இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டபோது அதன் உறுப்பினர்களின் மூன்றில் ஒரு பகுதியினர் பத்திரிகையாளர்களாக இருந்தனர்.
  • தொடக்ககால விடுதலை இயக்கத்தின் வல்லமைமிக்கத் தலைவர்களில் பெரும்பாலோர் பத்திரிகைகளில் எழுதுவதில் ஈடுபட்டிருந்தனர். தாதாபாஉ நௌரோஜி இந்தியாவின் குரல் (Voice of India), ராஸ்த் கோப்தார் (Rast Goftar) எனும் இரு பத்திரிகைகளைத் தொடங்கி அவற்றின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

  • சுரேந்திரநாத் பானர்ஜி பெங்காலி (Bengalee) என்னும் செய்திப்பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பாலகங்காதர திலகர் கேசரி, மராட்டா ஆகிய பத்திகைகளின் ஆசிரியராகத் திகழ்ந்தார்.
  • ஒவ்வழி முறைகளைப் பயன்படுத்தியே அவர்கள் காலனிய அடக்குமூறை குறித்து மக்களுக்கு கற்பித்துத் தேசியக் கருத்துகளையும் பரப்பினர். இந்திய தேசிய காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சிகள் பற்றிய செய்திகளை இப்பத்திரிகைகளே மக்களுக்கு எடுத்துச் சென்றன.
  • இந்திய வரலாற்றில் முதன் முறையாக காலனிய அரசின் அடக்குமுறை கொள்கைகளுக்கும் சட்டங்களுக்கும் எதிராகப் பொதுமக்கள் கருத்தை உருவாக்குவதில் பத்திரிகைகள் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டன.

  • தேசிய இயக்கத்தில் மத்தியதர வகுப்பினரும் விவசாயிகளும், கைவினைஞர்களும் தொழிலாளர்களும் மிக முக்கியமான பங்கினை வகிக்க முடியுமென பால கங்காதர திலகர் உறுதியாக நம்பினார்.
  • காலனிய அரசின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக இம்மக்கள் பிரிவினரிடையே மன நிறைவின்மையைப் பரப்புவதற்கு அவர் பத்திரிகைகளைப் பயன்படுத்தினார். இந்தியாவில் ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக நாடுதழுவிய எதிர்ப்புக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
  • 1897 ஜூலை 27இல் திலகர் கைது செய்யப்பட்டு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124A யின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார்.
  • திலகர் காங்கிரசில் தீவிர தேசியவாதிகள் பிரிவைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும் மிதவாத தேசியவாதிகள், தீவிர தேசியவாதிகள் ஆகிய இரு பிரிவினரும் ஒருங்கிணைந்து அவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்தனர்.
  • கருத்துச் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம் ஆகிய இரு உர=ரிமைகளும் இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கியக் கூறுகளாய் விளங்கின.

நௌரோஜியும் அவர் முன்வைத்த சுரண்டல் கோட்பாடும்

  • ‘இந்திய தேசியத்தின் முதுபெரும் தலைவர்’ என அறியப்படும் தாதாபாய் நௌரோஜி தொடக்ககால தேசிய இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராவார்.
  • 1870களில் பம்பாய் மாநகராட்சிக் கழகத்திற்கும் , நகரசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1892இல் இங்கிலாந்துப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவர் லண்டனில் ‘இந்திய சங்கம் (Indian Society – 1865) , கிழக்கிந்தியக் கழகம் (East Indian Association-1866) எனும் அமைப்புகளை உருவாக்கினார். அவர் மூன்று முறை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • அவர் எழுதிய ‘வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத இந்திய ஆட்சியும்’ (Roverty and Un-British Rule in India – 1901) எனும் புத்தகமே இந்திய விடுதலைப் போரட்டத்திற்கு அவர் செய்த முக்கியப் பங்களிப்பாகும்.
  • இந்நூலில் அவர் “செல்வச் சுரண்டல்” எனும் கோட்பாட்டை முன் வைத்தார். எந்த நாடாக இருந்தாலும் வசூலிக்கப்பட்ட வரியை அந்நாட்டு மக்களின் நல்வாழ்விற்காகவே செலவழிக்க வேண்டும்.
  • ஆனால் பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலேயர் வசூலிக்கும் வரி இங்கிலாந்தின் நலனுக்காகச் செலவு செய்யப்படுகிறது எனக் கூறினார். 1835 முதல் 1872 முடிய ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 13 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடையப் பொருட்கள் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் ஆனால் அந்த அளவிற்கானப் பணம் இந்தியா வந்து சேரவில்லை எனவும் கூறினார்.
  • லண்டனில் வாழும் கம்பெனியின் பங்குதாரர்களுக்கு லாபத்தில் வழங்கப்பட வேண்டிய பங்கு, இருப்புபாதைத் துறையில் (Railways) முதலீடு செய்தவர்களுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டவாறு தரப்பட வேண்டிய வட்டி, பணி நிறைவு பெற்றுவிட்ட அதிகாரிகளுக்கும் தளபதிகளுக்கும் வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம் இந்தியாவிலும் இந்தியாவிற்கு வெளியிலும் நாடுகளைக் கைப்பற்ற மேற்கொள்ளப்பட்டப் போர்களுக்காக இங்கிலாந்திடமிருந்து பெற்ற கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டி ஆகிய இவையனைத்துக்கும் பதிலாகவே அப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக அவர் வாதாடினார்.
  • இவையனைத்தும் தாயகக் கட்டணம் (Home Charges) எனும் பெயரில் ஆண்டொன்றுக்கு 30 மில்லியன் பவுண்டுகள் நஷ்டம் ஏற்படுத்துவதாக நௌரோஜி உறுதிபடக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!