Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Samacheer NotesTnpsc

தமிழ்நாடு – மானுடப் புவியியல் Notes 10th Social Science Lesson 23 Notes in Tamil

10th Social Science Lesson 23 Notes in Tamil

23. தமிழ்நாடு – மானுடப் புவியியல்

அறிமுகம்

மானுடப் புவியியல் என்பது மனித சமுதாயம் வளர்ச்சி பெற்ற வழிமுறைகள் மற்றும், இயற்கை சூழலுடனான செயல்பாடுகள் குறித்துக் கற்றறிதல் ஆகும். தமிழ்நாட்டில் காணப்படும் பல்வேறு வளப்பரவல்கள், பண்புகள் மற்றும் பயன்பாடுகள் பற்றி இப்பாடப்பகுதி விளக்குகிறது. புவியானது, பல்வேறு வகையான இயற்கை வளங்களாகிய நிலப்பகுதிகள் , ஆறுகள், மண்வகைகள், இயற்கைத் தாவரங்கள், நீர் மற்றும் வன வளங்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளது என்பதை முன்னரே கற்றுள்ளோம். மேற்கண்டவற்றை பயன்படுத்தினால் மட்டுமே அவை சார்வளங்கள் ஆகும். மனிதர்கள் தங்கள் அறிவு கூர்மை மற்றும் திறன்களால் பல வளங்களைப் பயன்படுத்துகின்றனர். எனவே புவியில் காணப்படும் வளங்களில் மனித வளமே மிகச் சிறந்த வளமாகும். மனிதர்கள் தங்களது திறன்கள் மூலம் இயற்கை வளங்களைப், பயன்படுத்தக்கூடிய பொருட்களாக மாற்றுகின்றனர்.

வேளாண்மை

  • “அக்ரிகல்சர்” என்ற சொல் இலத்தீன் வார்த்தைகளான “அகர்” மற்றும் “கல்சரா” என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் நிலம் மற்றும் வளர்த்தல் என்பதாகும்.
  • வேளாண்மை என்பது விவசாய நடைமுறைகளான பயிர்கள் சாகுபடி, கால்நடை வளர்த்தல், பறவைகள், காடுகள் வளர்த்தல், மீன்பிடித்தல் மற்றும் அதனோடு தொடர்புடைய நடவடிக்கைகளை உள்ளடக்கியதாகும்.
  • தமிழ்நாட்டின் முக்கியமான தொழில் வேளாண்மையாகும். இந்தியா சுதந்திரமடைந்ததிலிருந்து 65% க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்வாதாரத்திற்கு வேளாண் துறையைச் சார்ந்துள்ளனர்.
  • மாநிலத்தின் பொருளாதாரத்தில் வேளாண்மை, கிராமப்புற மக்களுக்கு பெருமளவில் வேலை வாய்ப்பை அளிக்கிறது. வேளாண்மைக்குக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு உள்ளது.
  • மாநிலப் பொருளாதாரத்தில் வேளாண்மையின் பங்கு ஏறத்தாழ 21% ஆகும். இருப்பினும் இது ஆண்டிற்காண்டு மாறுபடுகிறது. நெல், தினைவகைகள் மற்றும் பருப்பு வகைகள் மாநிலத்தின் முக்கிய உணவுப் பயிர்களாகும்.
  • கரும்பு, பருத்தி, சூரியகாந்தி, தென்னை, முந்திரி, மிளகாய், எள், நிலக்கடலை, தேயிலை, காபி, ஏலக்காய் மற்றும் இரப்பர் ஆகியவை முக்கிய வணிகப் பயிர்களாகும்.

வேளாண்மையைத் தீர்மானிக்கும் புவியியல் காரணிகள்

நிலத்தோற்றம், காலநிலை, மண் மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவை வேளாண்மை வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய புவியியல் காரணிகளாகும்.

நிலத்தோற்றம்

  • தமிழ்நாடானது மலைகள், பீடபூமிகள் மற்றும் சமவெளிகள் ஆகிய பல்வேறுபட்ட நில அமைப்புகளைக் கொண்டுள்ளது. மேற்கண்டவற்றுள் சமவெளிகள் வேளாண் உற்பத்திக்கு ஏற்ற வளமான வண்டல் மண்ணைக் கொண்டுள்ளதால் சமவெளிப் பகுதிகள் வேளாண் தொழிலுக்கு ஏற்றதாக உள்ளது.
  • எ.கா. வண்டல் மண் நிறைந்துள்ள காவிரி சமவெளி தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க வேளாண் பகுதியாகும். பீடபூமி, வேளாண்மைக்கு ஓரளவிற்கு ஏற்றதாகவும், மலைப் பிரதேசங்களில் வேளாண் நடவடிக்கைகள் மிகக்குறைந்த அளவிலும் உள்ளன.

காலநிலை

  • தமிழ்நாடு பூமத்தியரேகைக்கு அருகிலும், வெப்ப மண்டலத்திலும் அமைந்துள்ளதால் வெப்ப மண்டலக் காலநிலையைப் பெறுகிறது. ஆகையால் தமிழ்நாட்டின் வெப்பநிலை ஆண்டு முழுவதும் அதிகமாக உள்ளது. எனவே வெப்பமண்டலப் பயிர்கள் மட்டுமே பயிரிடப்படுகின்றன.
  • நீர், வேளாண்மையைமைக் கட்டுப்படுத்தும் முக்கியக் காரணியாகும். வடகிழக்கு பருவக்காற்று தமிழ்நாட்டிற்கான முக்கிய நீர் ஆதாரமாக உள்ளதால், பயிரிடப்படும் முக்கிய காலம் இப்பருவத்தில் தொடங்குகிறது.
  • இப்பருவத்தில் பெறும் மழையின் அளவு மற்றும் நீர்ப்பாசன வசதி போன்றவை வேளாண்மையை மிக அதிக அளவில் பாதிக்கிறது.

தமிழ்நாட்டின் வேளாண் முறைகளின் வகைகள் மற்றும் பகுதிகள்

வேளாண் வகை பயிரிடப்படும் பகுதிகள்
தீவிர தன்னிறைவு வேளாண்மை தமிழ்நாட்டில் சில பகுதிகள் தவிர்த்து அனைத்து பகுதிகளிலும் பின்பற்றப்படுகிறது
தோட்ட வேளாண்மை மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைச்சரிவுகள்
கலப்பு வேளாண்மை காவிரி மற்றும் தென்பெண்ணை ஆற்றுப்படுகைகள்

மண்

வேளாண்மையின் மிக முக்கியமான கூறுகளுள் ஒன்று மண் ஆகும். இது பயிர்கள் மற்றும் தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான கனிமசத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. ஆற்றுப்பள்ளத்தாக்குகள் மற்றும் கடற்கரைச் சமவெளிப் பகுதிகளில் வளமான வண்டல்மண் நிறைந்துள்ளதால் இப்பகுதிகள் மாநில வேளாண் உற்பத்தியில் முக்கிய பங்காற்றுகின்றன.

நீர்ப்பாசனம்

மாநிலத்தின் பருவமழை சமச்சீரற்ற நிலையில் உள்ளது. மேலும் இவை பருவக்காலத்தில் மட்டுமே பொழிகிறது. எனவே மாநிலத்தில் பயிர் சாகுபடி சிறப்பாக நடைபெற நீர்ப்பாசனம் மிகவும் இன்றியமையாததாகும். வறண்ட காலங்களில் மானாவாரிப் பயிர்கள் பயிரிடப்படுகிறது.

  • தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் (TANU) கீழ் செயல்பட்டுவரும் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI) நெல் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் ஓர் இந்திய நிறுவனமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடுதுறை என்னுமிடத்தில் 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் இப்பகுதியிலுள்ள கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு நெல் சாகுபடி மற்றும் உற்பத்தி முறை குறித்த ஆராய்ச்சிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்து வருகிறது.

தமிழ்நாட்டின் வேளாண் பருவகாலங்கள்

வெப்பநிலை மற்றும் மண்ணின் ஈரப்பதத்தை அடிப்படையாகக்கொண்டு விவசாயிகள் பருவகாலத்திற்கு ஏற்ற பல்வேறு வகையான பயிர்களைப் பயிரிடுகிறார்கள். மாநிலத்தின் வேளாண் பருவக்காலங்கள் பின்வருமாறு:

பருவம் விதைக்கும் காலம் அறுவடை காலம் முக்கிய பயிர்கள்
சொர்ணவாரி (சித்திரைப் பட்டம்) ஏப்ரல் – மே ஆகஸ்டு – செப்டம்பர் பருத்தி மற்றும் திணை வகைகள்
சம்பா (ஆடிப்பட்டம்) ஜூலை – ஆகஸ்டு ஜனவரி – பிப்ரவரி நெல் மற்றும் கரும்பு
நவரை நவம்பர் – டிசம்பர் பிப்ரவரி – மார்ச் பழங்கள், காய்கறிகள், வெள்ளரி, தர்பூசணி

தமிழ்நாட்டின் முக்கிய பயிர்களின் பரவல்

நெல்

  • தமிழ்நாட்டின் முக்கியமான உனவுப்பயிர் நெல் ஆகும். பொன்னி மற்றும் கிச்சடி சம்பா தமிழகத்தில் பயிரிடப்படும் முக்கிய நெல் வகைகளாகும்.
  • மாநிலத்தில் ஏறத்தாழ 3 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்படுகிறது. இப்பயிர் தமிழகம் முழுவதும் பயிரிடப்பட்டாலும் தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகளவில் பயிடப்படுகிறது.
  • நெல் உற்பத்தி செய்யும் இந்திய மாநிலங்களில் தமிழகம் மூன்றாம் இடத்தை வகிக்கிறது.
  • தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதி அதிக நெல் உற்பத்தி செய்யும் பகுதியாகும். (பிரிக்கப்படாத தஞ்சாவூர்) எனவே இப்பகுதி தமிழ்நாட்டின் “நெற்களஞ்சியம்” என்றழைக்கப்படுகிறது.
  • இந்தியா, 2018 ஆம் ஆண்டை தினைப் பயிர்களின் தேசிய ஆண்டாக அனுசரித்து, உலக உணவு மற்றும் வேளாண்மைக் கழகம் (FAO) , 2023ஆம் ஆண்டை சர்வதேச தினைப்பயிர்கள் ஆண்டாக அனுசரிக்கத் தீர்மானித்துள்ளது.

தினை வகைகள்

  • தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு பகுதியினரின் முக்கியமான உணவு தினை வகைகளாகும்.
  • சோளம், கேழ்வரகு மற்றும் கம்பு ஆகியன முக்கிய தினைப் பயிர்களாகும். இவ்வகைப் பயிர்கள் வறண்ட பிரதேசங்களில் மட்டுமல்லாமல் கடற்கரைச் சமவெளிகளும் விளைகின்றன.
  • கோயம்புத்தூர் பீடபூமியிலும், கம்பம் பள்ளத்தாக்கிலும் சோளம் பயிரிடப்படுகின்றன. கோயம்புத்தூர் , தர்மபுரி , வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் கேழ்வரகு பயிரிடப்படுகிறது. இராமநாதபுரம் , திருநெல்வேலி, கரூர், பெரம்பலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் கம்பு பயிரிடப்படுகிறது.

பருப்பு வகைகள்

  • பருப்பு வகைகள் புரதசத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளன. கொண்டைக்கடலை, உளுந்து, பச்சைப்பயிறு, துவரம்பருப்பு, தட்டைப்பயறு மற்றும் கொள்ளு ஆகியன தமிழ்நாட்டில் விளையும் முக்கிய பருப்பு வகைகளாகும்.
  • பருப்பு வகைகள் காலநிலைக்கு ஏற்றாற் போல் பரவலாகப் பயிரிடப்படுகின்றன. வறண்ட நிலப்பகுதிகளில் நீர்ப்பாசன வசதியுடனோ அல்லது நீர்ப்பாசனமின்றியோ பயிரிடப்படுகின்றன.
  • மிதமான குளிர்காலநிலை மற்றும் குறைந்த மழைப்பொழிவு இங்கு பயிரிட உகந்த சூழல்களாகும்.
  • பருப்பு வகைகள் கால்நடைகளுக்கு மிகச்சிறந்த தீவனமாக உள்ளன. சென்னை, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பருப்பு வகைகள் பயிரிடப்படுகின்றன.
  • கோயம்புத்தூர் மாவட்டம் கொண்டக்கடலை உற்பத்தியில் மாநிலத்தில் முதன்நிலை வகிக்கிறது. வேலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் துவரம் பருப்பை கூடுதலாக உற்பத்தி செய்யப்படுகின்றன.
  • திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் அதிக அளவில் பச்சைப் பயறு மற்றும் உளுந்து ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றன. தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கொள்ளுப் பயிர் கூடுதலாக பயிரிடப்படுகிறது.
  • இயற்கை வேளாண்மையை மேம்படுத்தும் நோக்கத்தோடு மத்திய அரசானது தேசிய இயற்கை கரிம வேளாண்மைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இயற்கை உரங்களை மேம்படுத்துதல், பயிற்சியளித்தல் போன்றவற்றை இத்திட்டம் செயல்படுத்துகிறது. மேலும் கரிமப் பொருட்களை மறுசுழற்சி செய்யவும், தொழிற்கூடங்கள், உயிரிஉரங்கள், உயிரி பூச்சிக்கொல்லிகள் உற்பத்தி செய்யவும் தொழிற்கூடங்களுக்கு மாநிலத்தில் நிதி உதவி அளித்தல், தரமேம்பாட்டு வளர்ச்சி மற்றும் அதனை நடைமுறைப்படுத்தும் குழுமத்தின், மனிதவளத்தை மேம்படுத்துதல் போன்றவை இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

எண்ணெய் வித்துக்கள்

  • நிலக்கடலை, எள், ஆமணக்கு, தென்னை, சூரியகாந்தி மற்றும் கடுகு ஆகிய தமிழ்நாட்டில் பயிரிடப்படும் முக்கிய எண்ணெய் வித்துக்கள் ஆகும்.
  • உணவுப் பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல் தொழிலகங்களில் மசகு எண்ணெய், மெருகு எண்ணெய் பொருட்கள், சோப்பு, மெழுகுவர்த்தி, அழகுசாதனைப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்திக்கும் இவை பயன்படுகின்றன.
  • நிலக்கடலை, மாநிலத்தின் முக்கிய எண்ணெய் வித்துப் பயிராகும். வேலூர், திருவண்னாமலை, விழுப்புரம், சேலம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நிலக்கடலை உற்பத்தியானது செறிந்து காணப்படுகிறது.
  • தர்மபுரி, கடலூர், பெரம்பலூர், மதுரை, ஈரோடு, இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இவை சிறிய அளவில் பயிரிடப்படுகிறது.
  • கோயம்புத்தூர், தஞ்சாவூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தென்னை மரங்கள் அதிகம் காணப்படுகின்றன.

கரும்பு

  • கரும்பு தமிழ்நாட்டின் முக்கியமான வாணிபப் பயிராகும். இது ஓராண்டு பயிராகும். இதற்கு அதிக வெப்பநிலை மற்றும் அதிகமழைப் பொழிவும் தேவைப்படுகிறது.
  • இது வெப்பமண்டல பிரதேசங்களில் நன்கு வளரக்கூடியவை. திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு ஆகியன கரும்பு பயிரிடும் மாவட்டங்களாகும்.

பருத்தி

  • பருத்தி ஓர் இழைப்பயிர் மற்றும் வாணிபப் பயிராகும். கரிசல்மண், நீண்ட பனிப்பொழிவற்ற காலம், மிதவெப்பம் மற்றும் ஈரப்பத வானிலை ஆகியவை பருத்தி பயிரிடுவதற்கு உகந்தவையாகும்.
  • பருத்தி வளரும் காலத்தில் ஈரப்பத காலநிலையும், அறுவடை காலத்தில் வறண்ட காலநிலையும் பயிருக்கு ஏற்றதாகும்.
  • கோயம்புத்தூர் பீடபூமி பகுதியிலும், வைகை மற்றும் வைப்பாறு ஆற்றிவடிநிலப் பகுதிகளிலும் பருத்தி பயிரிடப்படுகின்றது.
  • மதுரை, இராமநாதபுரம், விருதுநகர் , திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் இவைப் பயிரிடப்படுகின்றது.

தோட்டப்பயிர்கள்

  • தேயிலை, காபி, இரப்பர், முந்திரி மற்றும் சின்கோனா ஆகியன மாநிலத்தின் முக்கிய தோட்டப் பயிர்களாகும். இந்தியாவில் அசாம் மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு தேயிலை பயிரிடும் பரப்பு மற்றும் உற்பத்தியில் இரண்டாமிடம் வகிக்கிறது.
  • நீலகிரி மலைகள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மலைகளில் தேயிலை தோட்டங்கள் காணப்படுகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் காபி பயிரிடப்படுகின்றது.
  • நீலகிரி மலைகள் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மலைச்சவுகளில் காபி குறிப்பிடத்தகுந்த அளவில் பயிரிடப்படுகிறது.
  • திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களிலுள்ள மலைச்சரிவுகளிலும் காபி பயிரிடப்படுகின்றது. காபி உற்பத்தியில் கர்நாடகா மாநிலத்திற்கு அடுத்து தமிழ்நாடு இரண்டாமிடம் வகிக்கிறது.
  • இரப்பர் தோட்டங்கள் கன்னியாகுமரியில் அதிகமாகக் காணப்படுகிறது. தமிழ்நாட்டிலுள்ள, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் சரிவுகளில் மிதவெப்பம் மற்றும் ஈரமான காலநிலை உள்ள பகுதிகளில் மிளகு விளைகின்றது. கடலூர் மாவட்டத்தில் பெரும் பகுதிகளில் முந்திரி பயிரிடப்படுகின்றது.

  • ஏறத்தாழ 1,060 மீட்டர் முதல் 1,280 மீட்டர் உயரம் வரை உள்ள ஆனைமலைப் பகுதிகளில் சின்கோனா பயிரிடப்படுகின்றது. ஏறத்தாழ 915 மீட்டர் முதல் 1,525 மீட்டர் வரை உள்ள மதுரையைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் ஏலக்காய் தோட்டங்கள் காணப்படுகின்றன.

கால்நடை வளர்ப்பு

  • கால்நடை வளர்ப்பு என்பது ஊரக மக்களின் சமூக பொருளாதாரத்தின் ஓர் ஒருங்கிணைந்த அங்கமாகும். தமிழ்நாட்டில் மொத்தம் 88,92,473 கால்நடைகள் உள்ளன. மேலும் 47,86,680 செம்மறியாடுகள், 81,43,341 வெள்ளாடுகள் மற்றும் 11,73,48,894 பண்ணை வளர்ப்புப் பிராணிகள் வளர்க்கப்படுகின்றன.
  • டான் டீ (TANTEA) இந்நிறுவனம் இந்தியாவில் கருப்பு வகை தேயிலை உற்பத்தியிலும், கலப்பு வகை தேயிலை உற்பத்தியிலும் முன்னனி வகிக்கும் நிறுவனங்களுள் ஒன்றாகும். (தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகம்) இந்நிறுவனத்தின் தேயிலை பயிரிடும் பரப்பு ஏறத்தாழ 4,500 ஹெக்டேர் ஆகும்.
  • தமிழ்நாடு பால் வளர்ச்சி கழகம் என்று நிறுவப்பட்ட அமைப்பானது தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் என்ற புதிய அமைப்பாக பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது பிரபலமாக ஆவின் என்று அழைக்கப்படுகிறது.

வெள்ளாடுகள்

  • இந்தியாவில் வெள்ளாடுகள் “ஏழை மக்களின் பசு” என்றழைக்கப்படுகிறது. இது ஒரு புன்செய் வேளாண் அமைப்பின் மிக முக்கிய அங்கமாகும்.
  • கால்நடை வகைகளான பசு மற்றும் எருமை வளர்ப்பிற்கு ஏற்பில்லா இடங்களான நில விளிம்புப் பகுதிகள் மற்றும் மேடு பள்ளங்கள் நிறைந்த நிலத்தோற்றப் பகுதிகளில் வெள்ளாடு வளர்ப்பு ஒரு மாற்றாக உள்ளது.
  • மிகக் குறைந்த முதலீட்டில் அதிக இலாபம் ஈட்டப்படுவதால் சிறு மற்றும் குறு விவசாயிகள் வெள்ளாடு வளர்ப்பினை மேற்கொள்கின்றனர்.

செம்மறியாடு

  • செம்மறியாடுகள், கம்பளி, இறைச்சி, பால், தோல் மற்றும் உரம் போன்ற பல்வேறு பயனுள்ள பொருட்களை அளிப்பதால் தமிழ்நாட்டின் மலைப்பகுதிகள், வறண்ட மற்றும் அரை வறண்ட பகுதிகளில் உள்ள ஊரகப் பொருளாதாரத்தில் இவை முக்கிய பங்காற்றுகிறது.
  • செம்மறியாடுகள் மற்றும் அவற்றின் உரோமம் அதன் உடைமையாளர்களுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளன.
  • பாலுக்காகப் பல்வேறு வகையான கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. இவை ஊரகப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு முக்கிய அங்கமாக உள்ளன. நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கோழிப்பண்ணை மையங்கள் உள்ளன.

மீன் வளர்ப்பு

  • தமிழ்நாடு ஒரு கடற்கரை மாநிலமாதலால் மீன்பிடித்தல் இங்கு முக்கியமான தொழில்களில் ஒன்றாகும். உள்நாட்டி மீன் பிடித்தல் என்பது பரந்த அளவில் காணப்படும் நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளில் கணிசமான அளவு நடைபெறுகின்றது. பல்வேறு நீர்வாழியல் சூழலில் ஏறத்தாழ 2,500 வகையான மீன் இனங்கள் காணப்படுகின்றன.

கடல் மீன் பிடிப்பு

  • தமிழ்நாட்டு கடற்கரையின் நீளம் 1,076 கிலோமீட்டராகும். (நாட்டின் கடற்கரையில் 13 சதவீதம்) மாநிலத்தின் கடற்கரை பகுதி 0.19 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவை உடையது.
  • ஏறத்தாழ 41,412 சதுர கிலோமீட்டர் பரப்பளவு ‘கண்டத்திட்டு’ உள்ளதால் கடற்கரை மீன்பிடிப்புக்கு சாதகமாக உள்ளது.
  • தமிழ்நாடு ‘கடல் மீன்’ உற்பத்தியில் முதன்மையான மாநிலங்களுள் ஒன்றாக உள்ளது. மீன்பிடித்தலுக்கு பெரிய மற்றும் இயந்திரப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.
  • பெருங்கடல் அல்லது கடற்கரையில் இருந்து சில கிலோமீட்டர் தூரம் வரை மீன்பிடித்தல் ‘கடலோர மீன்பிடிப்பு’ என அழைக்கப்படுகிறது. கடற்கரையில் இருந்து பொதுவாக 20 முதல் 30 மைல்கள் தூரம் வரையிலும், பல 100 அல்லது 1000 க்கும் மேற்பட்ட அடிகள் ஆழத்தில் மீன்பிடித்தல் நடக்கிறது. இது “ஆழ்கடல் மீன்பிடிப்பு” என அழைக்கப்படுகிறது.
  • சுறா, பறவை மீன், சங்கு மீன், கெளுத்தி, வெள்ளி வயிறு மீன் போன்ற மீன் வகைகள் மற்றும் நண்டு வகைகள் இங்குப் பிடிக்கப்படுகின்றன.
  • சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, நாகப்பட்டினம் மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மாநிலத்தின் கடல்மீன் உற்பத்தியில் ஏறத்தாழ 40% சதவீதம் பங்களிப்பைத் தருகின்றன.
  • கடற்கரையின் அமைவிடம் இப்பகுதிகளில் மீன் பிடித்தலுக்கு சாதகமாக உள்ளன. தமிழ்நாடானது மூன்று முக்கிய மீன்பிடித் துறைமுகம் மற்றும் 363 மீன்பிடித்தளங்களைக் கொண்டுள்ளது. 2017 – 18 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் கடல் பொருட்களின் ஏற்றுமதி 72,644 மெட்ரிக் டன்கள் ஆகும்.

உள்நாட்டு மீன்பிடிப்பு

  • ஏரிகள், ஆறுகள், கழிமுகங்கள், காயல்கள் மற்றும் சதுப்புநிலப்பகுதி போன்ற நீர் நிலைகளில் உள்நாட்டு மீன் பிடித்தல் நடைபெறுகிறது.
  • சிப்பிகள் மற்றும் இறால்கள் மீன் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன.
  • கட்டுமரம், டீசல் படகுகள் மற்றும் மீன் வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் நடைபெறுகிறது. மீன்பிடித்தலை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு மீன் வளத்துறை பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • பண்ணைக் குளங்கள் மற்றும் நீர்ப்பாசன ஏரிகளில் மீன் வளர்ப்பு, மீன்குஞ்சுகள் பொறிப்பகம், மீன் குளவு வளர்ப்பகம், அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் மீன் வேளாண்மேம்பாட்டு நிறுவனம் போன்றவை இந்நிறுவனத்தின் முக்கிய திட்டங்களாகும்.
  • மாநில உள்நாட்டு மீன் உற்பத்தியில் வேலூர் மாவட்டம் 10 சதவீத உற்பத்தியுடன் முன்னிலையில் உள்ளது. கடலூர், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் தலா 9 சதவீத உள்நாட்டு மீன் உற்பத்தி செய்து மாநிலத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளன. மாநிலப் பொருளாதாரத்தில் மீன் பிடித் துறையானது 1.25% சதவீதம் பங்களிப்பைச் செய்கிறது.

இரண்டாவது பசுமைப்புரட்சி (இயற்கை வேளாண்மை அல்லது கரிம வேளாண்மை):

இயற்கை வேளாண்மையில் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள், தாவர வளர்ச்சி சீராக்கிகள் (செயற்கை இரசாயனம்) கால்நடை தீவனக் கலப்புகள் பயன்படுத்துவதில்லை. இவ்வகை விவசாயம், பயிர் சுழற்சி, பயிர் கழிவுகள், விலங்குகளின் கழிவுகள், விவசாயம் அல்லது கரிம கழிவுகள், உயிரியல் பூச்சிக்கொல்லிகள் ஆகியனவற்றை மண்வளப் பாதுகாப்பிற்கு நம்பியுள்ளனர். குறைவான விவசாயிகளே இம்முறையினைப் பின்பற்றுகின்றனர். இதன் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும்.

நீர் வளம்

மனித குலத்திற்கும் புவியில் வாழும் இலட்சக்கணக்கான உயிரினங்களுக்கும் நீர் இயற்கையின் ஒரு விலைமதிப்பற்ற பரிசாகும்.

தமிழ்நாட்டின் நீர் வளங்கள்

  • இந்தியப் பரப்பளவில் 4 சதவீதத்தையும் மக்கள் தொகையில் 6 சதவீதத்தையும் கொண்டுள்ள தமிழ்நாடு, இந்திய நீர் வளத்தில் 2.5 சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளது.
  • தமிழ்நாட்டின் மேற்பரப்பு நீரில் 95 சதவீதத்திற்கு அதிகமாகவும் மற்றும் நிலத்தடி நீரில் 80 சதவிகிதத்திற்கு அதிகமாகவும் ஏற்கனவே பயன்பட்டிலிருந்து வருகிறது.
  • அதிகளவு நீரானது மக்கள் மற்றும் விலங்குகளின் நுகர்வு, நீர்ப்பாசனம் மற்றும் தொழிலகப் பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
  • தமிழகம் பருவமழையைச் சார்ந்தே உள்ளது. தமிழகத்தின் ஆண்டு சராசரி மழையளவு ஏறத்தாழ 930 மில்லி மீட்டர் ஆகும். (வடகிழக்கு பருவக்காற்று காலத்தில் 47%மும், தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் 35%மும், கோடைக்காலத்தில் 14%மும், குளிர் காலத்தில் 4% மும் மலைப்பொழிவு பெறுகின்றது).

தமிழ்நாட்டில் உள்ள நீர்வள ஆதாரங்கள்

மேற்பரப்பு நீர்வள ஆதாரங்கள் எண்ணிக்கை
ஆற்று வடிநிலம் 17
நீர்த்தேக்கங்கள் 81
ஏரிகள் 41,127
ஆழ்துளை கிணறுகள் மற்றும் மற்ற கிணறுகள் 4,98,644
திறந்தவெளி கிணறுகள் 15,06,919
மொத்தம் 20,46,788 மி.க.மீ
(ஆதாரம் – 2017, தமிழ்நாடு புள்ளியியல் கையேடு)

தமிழ்நாட்டின் பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள்

பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டங்கள், அடிப்படையில் வேளாண் நீர்ப்பாசன மேம்பாட்டிற்காகவும் மற்றும் நீர் மின்சக்தி உற்பத்திக்காகவும் மேற்கொள்ளப்படுகிறன. இருப்பினும் இவை வேறு பல நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.

மேட்டூர் அணை

  • காவிரி ஆறு சமவெளியில் நுழையும் இடத்திற்கு முன்னுள்ள மலையிடுக்குப் பகுதியில் மேட்டூர் அணை கட்டப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மிகப் பழமையான அணைகளில் ஒன்றாகும்.
  • இது சேலம், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலுள்ள ஏறத்தாழ 2,71,000 ஏக்கர் விளை நிலத்திற்கு நீர்ப்பாசன வசதியை அளிக்கிறது.
  • மேலும் இவ்வணையின் அமைப்பு பூங்கா, நீர் மின் நிலையம் மற்றும் இவ்வணையைச் சூழ்ந்துள்ள மலைப்பகுதிகள் ஆகியவை ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாகும்.

பவானி சாகர் அணை

  • ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள பவானி சாகர் அணை, கோயம்புத்தூர் நகரிலிருந்து ஏறத்தாழ 80 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை நாட்டின் மண் –கல் கலவையால் கட்டப்பட்ட மிகப்பெரிய அணைகளுள் ஒன்றாகும்.

அமராவதி அணை

  • அமராவதி அணை, திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப் பேட்டையில் இருந்து ஏறத்தாழ 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்வணை காவிரியின் துணையாறான அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இவ்வணை நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டை முதன்மை நோக்கமாகக் கொண்டது.
  • அண்மையில் ஒரு சிறிய நீர் மின் நிலையமும் இங்கு நிறுவப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத்தில் பெரும் எண்ணிக்கையிலான சதுப்பு நில (சீங்கன்னி) முதலைகள் காணப்படுகின்றன. இது இரு பிரபலமான சுற்றுலாத்தலமாகும்.

கிருஷ்ணகிரி அணை

கிருஷ்ணகிரி அணை, கிருஷ்ணகிரியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் தர்மபுரிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்கம் 5,428 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்குப் பாசனவசதியை அளிக்கிறது. இதுவும் ஒரு பிரசித்திபெற்ற சுற்றுலாத்தலமாகும். இவ்வணை வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி காணப்படுகிறது.

சாத்தனூர் அணை

  • சாத்தனூர் அணை செங்கம் தாலுகாவில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கேக் கட்டப்பட்டுள்ளது. இது சென்னகேசவ மலையின் நடுவே அமைந்துள்ளது. இவ்வணையின் நீர்க்கொள்ளளவு திறன் 7,321 மில்லியன் கன அடிகள் (முழு அளவு 119 அடிகள்) ஆகும்.
  • ஏறத்தாழ 7,183 ஹெக்டேர் விளைநிலங்கள் இடதுகரை கால்வாய்கள் மூலமும், 905 ஹெக்டேர் நிலப் பகுதி வலதுகரைக் கால்வாய்கள் மூலமும் பாசன வசதியைப் பெறுகின்றன.
  • தண்டராம்பட்டு மற்றும் திருவண்ணாமலை ஒன்றியங்கள் இதன்மூலம் நீர்ப்பாசன வசதிகளைப் பெறுகின்றன. இங்குப் பெரிய முதலைப்பண்ணையும் வண்ணமீன் பண்ணையும் அமைந்துள்ளன.
  • சுற்றுலா பயணிகளுக்காக அணையின் உள்ளே பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள பூங்காக்கள் திரைப்படப் படப்பிடிப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

முல்லைப்பெரியாறு அணை

  • முல்லைப்பெரியாறு அணை 1895ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் நிர்வாகத்தால் கட்டப்பட்டது. கேரளாவில், தேக்கடி மலையில் உருவாகும் பெரியாறு ஆற்றின் குறுக்கேக் கட்டப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் நிரந்தரமாக வறட்சிக்குள்ளாகும் சில வேளாண் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் அளிப்பதற்காக இவை கட்டப்பட்டது.
  • இவ்வணை கேரள மாநிலத்தில் அமைந்திருந்தாலும் இதன் நீர் அதிகமாக தமிழ்நாட்டிற்குப் பயன்படுகிறது. இவ்வணை 175அடி உயரம் மற்றும் 1,200 அடி நீளம் கொண்டதாகும்.

வைகை அணை

ஆண்டிப்பட்டிக்கு அருகே வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. 111 அடி உயரம் கொண்ட இவ்வணையில் 71 அடி உயரம் மட்டுமே நீரை சேமிக்க முடியும். இவ்வணை மதுரையிலிருந்து 70 கி.மீ. தூரலத்திலும் ஆண்டிப்பட்டியிலிருந்து 7 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. இவ்வணை 1959ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் நாள் திறக்கப்பட்டது. இங்கு அமைந்துள்ள தோட்டம் “சிறிய பிருந்தாவனம்” என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அணை ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.

மணிமுத்தாறு அணை

  • திருநெல்வேலி நகரிலிருந்து ஏறத்தாழ 47 கி.மீ தொலைவில் மணிமுத்தாறு அணை கட்டப்பட்டுள்ளது. இவ்வணையிலிருந்து ஏறத்தாழ 5கி.மீ தூரத்தில் அழகிய வண்ணமயமான பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கு வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதை வழியாக செல்லும் படகு சவாரி மற்றும் நீர்வீழ்ச்சிகள் இவ்வணை அருகே காணப்படும் சுற்றுலா சார்ந்த சிறப்பம்சங்களாகும்.

பாபநாசம் அணை

திருநெல்வேலியிலிருந்து 49 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பாபநாசம் அணை ‘கரையார் அணை’ என்றும் அழைக்கப்படுகிறது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 3481 ஹெக்டேர் நிலங்கள் இதன் மூலம் பாசன வசதியைப் பெறுகின்றன. இந்த அணையில் ஏறத்தாழ 28 மெகாவாட் நீர் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.

பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம்

  • இது தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது. பரம்பிக்குளம் மற்றும் ஆழியாறு பகுதியில் உள்ள ஏழு ஆறுகளின் நீரினைப் பெற்று அங்குள்ள ஏழு நீர்த்தேக்கங்களையும் ஒன்றோடொன்று இணைக்கும் எதிர்கால நோக்கத்தின் விளைவாக உருவானத் திட்டமாகும்.
  • பாப்பலாறு திட்டம் ஒட்டஞ்சத்திரம் அருகே அமைந்துள்ளது. இதன் நீர் கொள்ளளவுத் திறன் 167 மில்லியன் கன அடிகளாகும். பழனி தாலுகாவில் அமைந்துள்ள இவ்வணை மதுரையிலிருந்து 75 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

மேற்பரப்பு நீர் வளஆதாரங்கள்

  • தமிழ்நாட்டின் மொத்த மேற்பரப்பு நீரின் அளவு ஏறத்தாழ 24,864 மில்லியன் கனமீட்டராகும். மாநிலத்தில் 17 பெரிய ஆற்று வடிநிலப்பகுதிகள், 81 நீர்த்தேக்கங்கள் மற்றும் 41,262 ஏரிகள் உள்ளன.
  • ஏற்கனவே பெரும்பகுதி மேற்பரப்புநீர் பாசனத்திற்காக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏறத்தாழ 24 இலட்சம் ஹெக்டேர் விளைநிலம் மேற்பரப்பு நீர் மூலம் பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள் மூலம் பாசன வசதியைப் பெறுகின்றன.

தமிழ்நாட்டின் நிலத்தடி நீர்வள ஆதாரங்கள்

மாநிலத்தில் பயன்படுத்திக்கொள்ளத்தக்க நிலத்தடி நீர்வளம் 22,433 மில்லியன் கன மீட்டர் ஆகும். நீரின் தற்போதைய பயன்பாட்டின் அளவு 13,558 மில்லியன் கனமீட்டர் ஆகும். இது மறுவூட்டம் மூலம் கிடைக்கும் நீரில் 60 சதவீதமாகும். மீத இருப்பு நீரானது ஏறத்தாழ 8,875 மில்லியன் கன மீட்டராகும். (40%).

நீர்வள மேலாண்மை

  • நீர்வள மேலாண்மை என்பது திட்டமிடல், செயல்படுத்துதல், நீர்வளத்தைப் பெருக்குதல், விநியோகித்தல் மற்றும் நீர்வளங்களின் உகந்த பயன்பாட்டை நிர்வகிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாகும்.
  • தமிழ்நாட்டில் மக்கள் தொகை அதிகரிப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் தனிநபரின் நுகர்வு காரணமாக நீரின் தேவை மிகவும் அதிகரித்துள்ளது.
  • தமிழ்நாட்டின் தனிநபர் நீர்நுகர்வின் அளவு 900 கன மீட்டர் ஆகும். இது தேசிய சராசரியான 2,200 கனமீட்டரை ஒப்பிடும் பொழுது குறைவானதாகும். மாநிலத்தில் உள்ள நீர்வளத்தில் 75 சதவீதம் வேளாண்மைக்காக நுகரப்படுகிறது.
  • மக்களின் நீர்ப் பயன்பாடு , தொழில் துறைக்கான தேவைகள் மற்றும் இதர தேவைகளுக்கான பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகின்றது.
  • மாநிலமானது நீர் தேவைக்கு பருவமழையைப் பெரிதும் சார்ந்துள்ளது; நீர் வளங்களைப் புதுப்பித்துக்கொள்ள மழையையே முழுமையாகச் சார்ந்துள்ளது. பருவ மழை பொய்ப்பதால் கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்பட்டு, வறட்சிக்கு வழி வகுக்கின்றது. எனவே நீர் சேமிப்பது நமக்கும் வருங்கால சந்ததியினருக்கும் பயனுள்ளதாக அமையும்.

தமிழ்நாட்டின் கனிம வளங்கள்

  • வெர்மிகுலைட், மேக்னடைட், டுனைட், ரூட்டைல், செம்மணிக்கல், மாலிப்படினம் மற்றும் இல்மனைட் ஆகிய வளங்களில் தமிழ்நாடு முன்னணி உற்பத்தியாளராக உள்ளது.
  • பழுப்பு நிலக்கரி 55.3%, வெர்முகுலைட் 75%, டுனைட் 59%, செம்மணிக்கல் 59%, மாலிப்டீனம் 52% மற்றும் டைட்டானியம் 30% தாதுக்கள் நாட்டின் மொத்த உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பாகும்.
  • மாநிலத்தில் காணப்படும் முக்கியமான தாதுக்கள் பின்வருமாறு : நெய்வேலி, மிகப்பெரிய பழுப்பு நிலக்கரி வளங்களைக் கொண்டுள்ளது. இராமநாதபுரம் பகுதிகளில் நிலக்கரி படிமங்கள் காணப்படுகின்றன. காவிரி வடிநிலப் பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கைவாயு படிவுகள் காணப்படுகின்றன.
  • சேலம் மாவட்டத்தில் உள்ள கஞ்சமலையிலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையிலும் இரும்புத்தாது படிவுகள் காணப்படுகின்றன. சேலம் அருகே மேக்னசைட் தாது கிடைக்கின்றது.
  • சேர்வராயன் குன்றுகள், கோத்தகிரி , உதகமண்டலம், பழனிமலை மற்றும் கொல்லிமலைப் பகுதிகளில் பாக்சைட் தாதுகள் காணப்படுகின்றன.
  • திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஜிப்சம் கிடைக்கிறது.
  • கன்னியாகுமரி கடற்கரை மணல் பரப்புகளில் இல்மனைட் மற்றும் ரூட்டைல் காணப்படுகிறது. கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், இராமநாதபுரம், சேலம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சுண்ணாம்பு கிடைக்கிறது.
  • கோயம்புத்தூர், தர்மபுரி, கரூர், நாமக்கல், நீலகிரி, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் வேலூர் மாவட்டங்களில் மேக்னசைட் கிடைக்கிறது. பெல்ட்ஸ்பார்க், படிகக்கல், தாமிரம் மற்றும் காரீயம் ஆகியவை மாநிலத்தின் சில பகுதிகளில் காணப்படுகின்றன.

தொழிலகங்கள்

  • மூலப்பொருட்களை இயந்திரங்களின் மூலம் உற்பத்திப் பொருட்களாகவோ அல்லது பயன்படுத்தக்கூடிய பொருட்களாகவோ மாற்றப்படும் இடமே தொழிலகங்களாகும்.
  • பருத்தி நெசவாலை, சர்க்கரை ஆலை, காகித ஆலை, தோல் தொழிலகம், சிமெண்ட் ஆலை, மின்சாதனப் பொருட்கள் உற்பத்தி ஆலை, வாகன உதிரிபாகங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியன தமிழ்நாட்டின் முக்கிய தொழிலகங்கள் ஆகும்.

பருத்தி நெசவாலைகள்

  • பருத்தி நெசவாலைகள் தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க நன்கு வளர்ந்த ஒரு தொழிலகமாகும். பருத்தி நெசவாலைகள் கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், பல்லடம், கரூர், திண்டுக்கல் , விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் செறிந்து காணப்படுகின்றன.
  • தமிழ்நாட்டில் பருத்தி ஆடைகள் உற்பத்தி செய்ய ஏறத்தாழ 3 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள் உள்ளன.
  • இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 30 சதவீதம் ஆகும்.
  • தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு கைத்தறி, விசைத்தறி மற்றும் ஆயத்த ஆடைகளின் விற்பனைக்கு புகழ்பெற்றது. ‘கோயம்புத்தூர் தமிழ்நாட்டின் மான்செஸ்டர்’ என்று அழைக்கப்படுகிறது.
  • கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் நெசவுத்தொழில் மூலம் மாநில பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை அளிக்கின்றன. எனவே இப்பகுதி ‘தமிழ்நாட்டின் ஜவுளி பள்ளத்தாக்கு’ எனக் குறிப்பிடப்படுகிறது. கரூர் ‘தமிழ்நாட்டின் நெசவுத்தலைநகரம்’ என்றழைக்கப்படுகிறது.

பட்டு நெசவு ஆலைகள்

  • நாட்டின் பட்டு உற்பத்தியில் தமிழ்நாடு நான்காவது இடத்தை வகிக்கிறது. ‘காஞ்சிபுரம் பட்டு’ என்பது அதன் தனித்தன்மை, தரம் மற்றும் பாரம்பரிய மதிப்பு ஆகியவற்றால் உலகம் முழுவதும் அறியப்படுகிறது. தமிழ்நாட்டின் ஆண்டு பட்டு உற்பத்தி ஏறத்தாழ 1,200 மெட்ரிக் டன்கள் ஆகும். காஞ்சிபுரம், ஆரணி, கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகியவை தமிழ்நாட்டின் முக்கிய பட்டு நெசவு மையங்களாகும். இராமநாதபுரத்தின் சில பகுதிகளில் செயற்கைப் பட்டு துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

தோல் பதனிடும் தொழிலகங்கள்

  • இந்தியாவில், தோல் பதனிடும் தொழிலகங்களில் தமிழ்நாடு 60% உற்பத்தியையும் காலணிகள், தோல் ஆடைகள் மற்றும் தோல் உபபொருட்கள் உற்பத்தியில் 38% பங்களிப்பையும் அளிக்கிறது.
  • வேலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இராணிப்பேட்டை, ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி நகரங்களில் நூற்றுக்கணக்கான தோல் பதனிடும் தொழிலகங்கள் அமைந்துள்ளன. உற்பத்தி செய்யப்பட்ட தோல் மற்றும் தோல் சார்ந்த பொருட்கள் (தோல் ஆடைகள், கையுறைகள் மற்றும் தோல் காலணிகள்) ஏற்றுமதியில் 37 % பங்களிப்புடன் வேலூர் முதன்மை மாவட்டமாக விளங்குகிறது.
  • அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR) கீழ் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆய்வகம் (CLRI), சென்னையில் அமைந்துள்ளது.

காகிதம் தொழிலகம்

  • தமிழ்நாட்டில் பல காகித தொழிலகங்கள் அமைந்துள்ளன. கரூர் மாவட்டம் காகிதபுரத்தில் தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (TNPL) அமைந்துள்ளன. இது செய்தித்தாள், அச்சுக்காகிதம் மற்றும் எழுதப் பயன்படும் காகிதம் ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றது.
  • 1979 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்தொழிலகம் ஆண்டுக்கு 2.45 லட்சம் மெட்ரிக் டன் காகிதம் உற்பத்தி செய்யும் திறன் பெற்றது.

புவியியல் குறியீடு (GI Tag)

புவியியல் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் பிரதேசத்தில் தயாரிக்கப்படும் பொருட்களின் மீது பயன்படுத்தப்படும் குறிப்பாகும். இது உற்பத்தி செய்யும் உரிமையாளர்களுக்கு உரிமைகள் மற்றும் பாதுகாப்பை வழங்குகிறது.

சில முக்கியப் புவியியல் குறியீடுகள்:

இடம் உற்பத்திப் பொருள்கள்
ஆரணி பட்டு
காஞ்சிபுரம் பட்டு
கோயம்புத்தூர் மாவு அரைக்கும் இயந்திரம், கோரா பட்டு சேலை
தஞ்சாவூர் ஓவியங்கள், கலைநயம் மிக்க தட்டுகள், தலையாட்டி பொம்பைகள், வீணை
நாகர்கோவில் கோயில் நகைகள்
ஈரோடு மஞ்சள்
சேலம் வெண்பட்டு (சேலம் பட்டு)
பவானி போர்வைகள்
மதுரை சுங்கடி சேலை
சுவாமிமலை வெண்கலச் சிலைகள்
நாச்சியார்கோவில் குத்துவிளக்கு
பத்தமடை பாய்
நீலகிரி பாரம்பரிய பூத்தையல்
மகாபலிபுரம் சிற்பங்கள்
சிறுமலை மலைவாழை
ஏத்தோமொழி தேங்காய்
  • தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் உலகளவில் திறன்படைத்த ஆலைகளில் ஒன்றாகும். இவ்வாலை கரும்புச்சக்கை மற்றும் மரக்கூழிலிருந்து பலவகையான காகிதங்களை சிறந்த தரத்துடன் உற்பத்தி செய்கின்றன.
  • காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள புக்காதுரை, பவானிசாகர், பள்ளிபாளையம், பரமத்தி வேலூர், கோயம்புத்தூர், உடுமலைப்பேட்டை, தொப்பம்பட்டி, நிலக்கோட்டை மற்றும் சேரன்மாதேவி ஆகியன மாநிலத்தில் உள்ள மற்ற காகித ஆலைகளாகும்.

சிமெண்ட் தொழிலகம்

  • சிமெண்ட் தொழிலகம் பொருளாதார மந்த நிலையிலும் உற்பத்தி மற்றும் நுகர்வில் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. இந்தியா மிகப்பெரிய சிமெண்டு உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாகவும், 181 மில்லியன் டன்கள் வருடாந்திர உற்பத்தியுடன் உலகில் இரண்டாவது இடத்தை வகிக்கும் நாடாகவும் உள்ளது.
  • தமிழ்நாட்டின் முக்கிய சிமெண்ட் உற்பத்தியாளர்களில், தமிழ்நாடு சிமெண்ட் கழகமும் (TANCEM) ஒன்றாக உள்ளது. அரியலூர் மற்றும் ஆலங்குளம் ஆகிய இடங்களில் சிமெண்ட் உற்பத்தி ஆலைகள் இயங்குகின்றன.
  • ஆலங்குளத்தில் உள்ள கல்நார் சிமெண்ட் அட்டை அலகும், விருத்தாசலத்தில் உள்ள கற்கலன் குழாய் அலகு ஆகியன மாநிலத்தின் மற்ற அலகுகளாகும்.
  • சங்கர் சிமெண்ட், ஜூவாரி சிமெண்ட், அல்ட்ராடெக் சிமெண்ட், மதராஸ் சிமெண்ட் மற்றும் டால்மியா சிமெண்ட் ஆகியன தமிழ்நாட்டின் முக்கிய தனியார் சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களாகும்.

தகவல் தொழில்நுட்பம்

  • தேசிய மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவன கூட்டமைப்பின்படி (NAASCOM) இந்தியாவின் மொத்த மென்பொருள் ஏற்றுமதியில் தென்மாநிலங்கள் தொடர்ந்து மேலானப் பங்களிப்பை செய்து வருகின்றன.
  • தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்கள் இணைந்து இந்தியாவின் மொத்த மென்பொருள் ஏற்றுமதியில் 59.6%ஐ செய்கின்றன.
  • நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியில் கர்நாடகாவுக்கு அடுத்ததாக தமிழ்நாடு இரண்டாவது பெரிய ஏற்றுமதி செய்யும் மாநிலமாக உள்ளது.

சிறப்புப் பொருளாதார மண்டலம்

  • சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சர்வதேச அளவில் மிகச்சிறந்த பகுதிகளாகவும் ஏற்றுமதியை ஊக்குவிக்கக்கூடிய சூழலைப் பெற்றதாகவும் உள்ளது. இம்மண்டலம் பல உற்பத்திப் பொருட்களை அளிப்பதுடன் பல்வேறு சேவைகளையும் அளிக்கிறது.
  • நாங்குநேரி, எண்ணூர், ஓசூர் மற்றும் பெரம்பலூரில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைந்துள்ளன.
  • தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலங்களான; டைடல் பூங்கா – 2, டைடல் பூங்கா – 3 மற்றும் உயிரி மருந்தகம் போன்றவை சென்னையிலும் டைடல் பூங்கா – 4 கோயம்புத்தூரிலும் அமைந்துள்ளன.

தகவல் பேழை

சிறப்புப் பொருளாதார மண்டலம் (SEZ) என்பது மற்ற பகுதிகளிலிருந்து வேறுபட்ட வாணிப சட்ட திட்டங்களை உள்ளடக்கிய ஒரு பகுதியாகும். இம்மண்டலங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளன. வணிக சமநிலையை அதிகரித்தல், வேலை, முதலீட்டை அதிகரித்தல், புதிய வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் சிறந்த நிர்வாகம் ஆகியன இம்மண்டலத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள்

டைடல் பூங்கா, அசெண்டாஸ், தவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளுக்கான மகேந்திரா உலக நகரம், சிறப்பு பொருளாதார மண்டலம் – டைடல் பூங்கா II மற்றும் டைடல் பூங்கா III, கோயம்புத்தூர் சிறப்பு பொருளாதார மண்டலம் –டைடல் பூங்கா ஆகியனவாகும்.

பொறியியல் உற்பத்தி தொழிலகங்கள்

  • உற்பத்தித் தொழில் என்பது மாநிலப் பொருளாதாரத்தின் துடிப்பான துறைகளில் ஒன்றாகும். இது பொறியியல் உற்பத்தி தொழில்துறையில் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது.
  • வாகனங்கள் மற்றும் இதரபாகங்கள் உற்பத்தி, வாகன உற்பத்தி, மூல உலோகம் மற்றும் உலோகக் கலவைத் தொழில்கள், உலோகப் பொருட்கள் மற்றும் பழுதுபார்க்கும் கருவிகள் ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றன.
  • தொழில்துறை உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு நாட்டின் உற்பத்தியில் ஏறத்தாழ 11 முதல் 12% வரையிலும், மென்பொருளை தவிர்த்து நாட்டின் ஏற்றுமதியில் 15% பங்களிப்பு செய்கின்றன. இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 17% சதவீதமாகும்.

வாகனத் தொழிலகங்கள்

  • வாகன உற்பத்தி மற்றும் கனரக வாகன உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு குறிப்பிடத்தக்க அளவிலுள்ளது. வாகனத் தொழிலகம் மாநிலப் பொருளாதாரத்தில் ஒரு முக்கியப் பங்கினை வகிக்கின்றது.
  • மாநிலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீத பங்களிப்பினை அளிப்பதுடன் 2 லட்சத்து 20 ஆயிரம் மக்களுக்கு நேரடி வேலை வாய்ப்பினையும் வழங்குகிறது.
  • இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வாகனத் தொழில்களில் 21% பயணிகள் மகிழுந்து, 33% வணிக வாகனங்கள் மற்றும் 35% வாகன உதிரிபாகங்கள் ஆகியன தமிழ்நாட்டின் அதிகமான பங்களிப்பாகும்.
  • போர்டு, ஹூண்டாய், எச்.எம்.மிட்சுபிவி, அசோக் லைலாண்ட் மற்றும் வேளாண் கருவிகள் நிறுவனம் (TAFE) (இழுவை இயந்திரம்) (Tractor), ஆகியவற்றின் உற்பத்தித் தளங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன.

இரசாயன மற்றும் வார்ப்புப் பொருள் தொழிலகம்

இரசாயன தொழிலகம், பொருளாதாரம் மற்றும் தொழிற்துறையில் வேகமாக வளர்ந்து வரும் ஒன்றாகும். இது மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவீதமும், நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 8 சதவீதமும் பங்களிப்பு செய்கின்றன.

கைத்தறி மற்றும் விசைத்தறி

  • கைத்தறித் துறையானது மாநிலத்தில் மிகப்பெரிய குடிசைத் தொழிலாகும். இது கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரத்தையும் ஏற்றுமதி வருவாயையும் அளிக்கின்றன.
  • கைத்தறித் துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருளாதார நடவடிக்கைகளில் 4.29 இலட்சம் நெசவாளர் குடும்பங்கள் மற்றும் 11.64 இலட்சம் நெசவாளர்களுக்கு நல்ல வருவாயுள்ள வேலைவாய்ப்பினையும் அளிக்கின்றது.
  • நெசவாளர் சங்கங்கள், ‘பள்ளிக் குழந்தைகளுக்கு விலையில்லா சீருடையும், விலையில்லா வேட்டி மற்றும் சேலை’ திட்டத்திற்கு தேவையான துணிகளையும் உற்பத்தி செய்கின்றன.

சர்க்கரைத் தொழிலகம்

  • தமிழ்நாட்டில் சர்க்கரைத் தொழிலகம் ஒரு வேளாண்சார்ந்த தொழிலகமாகும். கிராமப்புற பகுதிகள் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்கினை வகிக்கிறது.
  • சர்க்கரைத் தொழிலகங்கள் பல ஆயிரம் மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்பையும், கரும்பு பயிர்சாகுபடி, அறுவடை, போக்குவரத்து மற்றும் இதரப் பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் வேளாண் தொழிலாளர்கள் போன்ற பல இலட்சம் மக்களுக்கு மறைமுக வேலை வாய்ப்பையும் வழங்குகின்றன.
  • தமிழ்நாட்டில் மொத்தம் 34 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றில் 16 கூட்டுறவுத் துறையாலும் 18 தனியார் துறையாலும் நிர்வகிக்கப்படுகின்றன.

சுற்றுலாத்துறை

  • சுற்றுலாத்துறை ஒரு தொழிலகமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இதில் ஏராளமான மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. சமூப காலங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு முன்னணித் தலங்களில் ஒன்றாக தமிழகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.
  • தமிழகத்தில் சுற்றுலாத்துறை, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தால் (TTDC) ஊக்குவிக்கப்படுகிறது.
  • இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு ரூபாய் 25 கோடி (2013) வருவாயை ஈட்டி, முதன்மை மாநிலமாக திகழ்கின்றது. இத்தொழிலின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 16% ஆகும்.
  • ஆண்டிற்கு ஏறத்தாழ 28 இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் 11 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர்.
  • பழங்கால நினைவுச் சின்னங்கள், புனிதத்தலங்கள், மலைவாழிடங்கள், பலவகையான இயற்கை நிலத்தோற்றங்கள், நீண்ட கடற்கரை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றுடன் தமிழ்நாடு சுற்றுலாப் பயணிகளுக்கு மிகச் சிறந்த மாநிலமாக உள்ளது.

மக்கள் தொகை

  • ஒரு நாட்டின் வரையறுக்கப்பட்ட பகுதியில் வாழும் மக்களின் எண்ணிக்கையே மக்கள் தொகை எனப்படுகிறது.
  • மக்கள்தொகைப் பண்புகள் பற்றிய புள்ளிவிவர ஆய்வுகள் ‘மக்கட்தொகையியல்’ என அழைக்கப்படுகின்றது.
  • மக்கட்புவியியலாளர்கள் மக்கள்தொகை பற்றிய ஆழமான மற்றும் விரிவான ஆய்வை மேற்கொள்கின்றனர். மக்கள் தொகையின் அதிகரிப்பு பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் காரணியாக இருக்கலாம். எனவே அதிக மக்கள் தொகை என்பது நமது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

தமிழ்நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி

  • 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 7,21,47,030 அல்லது 7.21 கோடி ஆகும். 2001 ஆம் ஆண்டு 6.24 கோடியாக இருந்த மக்கள் தொகை 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒரு கோடி மக்கள் தொகை அதிகரித்துள்ளது.
  • 2011 ஆம் ஆண்டில் மாநிலத்தில் ஆண், பெண் மக்கள் தொகை முறையே 3,61,37,975 மற்றும் 3,60,09,055 ஆகும். இதில் 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 3,14,00,909 மற்றும் 3,10,04,770 ஆகும். இது மாநிலத்தின் மக்கள் தொகையில் ஆணும் பெண்ணும் கிட்டத்தட்ட சமமாக இருப்பதைக் காட்டுகிறது. 2001-11, 10 ஆண்டு காலத்தில் மக்கள்தொகை வளர்ச்சி 15.6% ஆக இருந்தது.
  • ஆனால் இதற்கு முந்தைய பத்தாண்டுகளில் இது 11.19 சதவீதமாக இருந்தது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் தமிழ்நாட்டின் மக்கள் தொகை 5.96% ஆகும். 2001இல் இது 6.07 சதவீதம் ஆகும்.

மக்கள் தொகை பரவல்

மொத்த மக்கள்தொகையின் அடிப்படையில் தமிழ்நாடு பின்வரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

அதிக மக்கள் தொகையைக் கொண்ட பகுதிகள்

  • 2011, மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மாவட்ட அளவில் 4.219 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட சென்னையானது அதிக அளவு நகர்ப்புற மக்கள் தொகையைக் கொண்டு முதல் இடத்தில் உள்ளது.
  • கோவை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தர்மபுரி, சேலம், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகியவை தமிழ்நாட்டில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டங்களாகும். இம்மாவட்டங்களில் அதிக அளவிலான மக்கள் தொகை இருப்பதற்குக் காரணம் விவசாயம் மற்றும் தொழில்துறை மேம்பாடு ஆகும்.

மிதமான மக்கள் தொகையைக் கொண்ட பகுதிகள்

திருவண்ணாமலை, கடலூர், திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் 30 – 35 இலட்சம் மக்கள்தொகையைப் பெற்றுள்ளன. வேலூர், திண்டுக்கல், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் ஒவ்வொன்றும் 15 -20 இலட்சம் மக்கள்தொகையைக் கொண்டுள்ளன. விவசாயம் சிறியஅளவிலான தொழ்ல்கள் தவிர கடலோரப் பகுதிகளில் மீன்பிடித்தல் ஆகியவை இம்மாவட்டங்களின் முக்கியத் தொழில்களாகும்.

குறைவான மக்கள் தொகையைக் கொண்ட பகுதிகள்

கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகியவை 15 இலட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகையைப் பெற்றுள்ளன. நீலகிரி மாவட்டம் 10 இலட்சத்திற்கும் குறைவான (7,64,826) மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. இது 2011 மக்கள்தொகைக் கணக்கின்படி மிகக்குறைந்த மக்கள்தொகையைக் கொண்ட மாவட்டமாகும்.

மக்களடர்த்தி

  • 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்களடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 555 ஆகும். இதுவே 2001இல் சதுர கிலோ மீட்டருக்கு 480 ஆகவும் இருந்தது.
  • இந்தியாவின் மக்களர்த்தியில் நமது மாநிலம் 12வது இடத்தில் உள்ளது. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தேசிய சராசரி மக்களடர்த்தி 382 ஆகும்.
  • சென்னை ஒரு சதுர மீட்டருக்கு 26,903 மக்களர்த்தி கொண்ட மாவட்டமாகும். இதையடுத்து கன்னியாகுமரி (1106), திருவள்ளூர் (1049), காஞ்சிபுரம் (927), மதுரை (823), கோயம்புத்தூர் (747), கடலூர் (702), தஞ்சாவூர் (691), நாகப்பட்டினம் (668), சேலம் (663), வேலூர் (646) மற்றும் திருச்சிராப்பள்ளி (602) ஆகிய மாவட்டங்கள் அதிக மக்களடர்த்தி கொண்ட மாவட்டங்களாகும்.
  • நீலகிரி மாவட்டத்தில் குறைந்த அளவு மக்களடர்த்தி (288 ச.கி.மீ) பதிவாகியுள்ளது. மற்ற மாவட்டங்கள் மிதமான மக்களடர்த்தியைக் கொண்டுள்ளது.

மதங்கள்

இந்து, கிறித்தவம் மற்றும் இஸ்லாம் நமது மாநிலத்தின் முக்கிய மதங்களாகும். நமது மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் அதிகமாகவும் (87.58%), அதனைத் தொடர்ந்து கிறித்தவர்கள் (6.12%), இஸ்லாமியர்கள் (5.86%), சமணர்கள் (0.125), சீக்கிய மதத்தினர் (0.02%) மற்றும் புத்த மதத்தினரும் (0.02%) உள்ளனர். பிற மதங்களைச் சார்ந்தவர்களும் (0.01%) குறிப்பிடவியலா மதத்தைச் சேர்ந்தவர்களும் (0.26%) உள்ளனர்.

நகப்புற மற்றும் கிராமப்புற மக்கள் தொகை

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் நகர்ப்புற மக்கள் தொகை 34,917,440 ஆகும். இது மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 48.40 சதவீதம் ஆகும். கிராமப்புற மக்கள் தொகை 37,229,590 ஆகும். இது மாநில மக்கள்தொகையில் 51.60 சதவீதம் ஆகும்.

பாலின விகிதம்

  • பாலின விகிதம் என்பது 1,000 ஆண்களுக்கு இணையாக உள்ள பெண்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. மாநிலத்தின் பாலின விகிதம் 2001இல் 987 ஆக இருந்தது. இது 2001இல் 996 ஆக அதிகரித்துள்ளது.
  • இந்தியாவின் பாலின விகிதம் 2001இல் 933 ஆகவும், 2011இல் 940 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவே மாநிலப் பாலின விகிதமானது நம் நாட்டின் பாலின விகிதத்தைவிட சாதகமாக உள்ளது.
  • 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 32 மாவட்டங்களில் 15 மாவட்டங்கள் பாலின விகிதம் ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதும் இதே நிலை காணப்பட்டது.
  • சிவகங்கை மாவட்டத்தின் பாலின விகிதம் சரியாக 1,000 ஆக உள்ளது. 12 மாவட்டங்களில் 980 முதல் 1,000 வரையிலான குறைவான பாலின விகிதத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • பாலின விகிதம் அதிகம் கொண்ட மாவட்டங்களாக நீலகிரியும் (1041) அதைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டமும் (1031) காணப்படுகின்றன.
  • குறைவான பாலின விகிதம் கொண்ட மாவட்டங்களாகத் தர்மபுரியும் (946) அதனைத் தொடர்ந்து சேலமும் (954) உள்ளன.

கல்வியறிவு விகிதம்

  • 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் கல்வியறிவு விகிதம் 80.09% ஆகும். இது 2001இல் 73.45சதவீதமாக இருந்தது.
  • தற்போதைய ஆண்களின் கல்வியறிவு விகிதம் 86.77 சதவீதமாகவும், பெண்களின் கல்வியறிவு 73.44% ஆகவும் உள்ளது.
  • 2011 நிலவரப்படி ஆண்களின் கல்வியறிவு 82.42% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 64.43% ஆகவும் இருந்தது.
  • தர்மபுரி தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலுள்ள ஆன்களில் நான்கில் மூன்று பகுதியினர் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர்.
  • அதேபோல் 8 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர்.
  • அந்த மாவட்டங்கள் தர்மபுரி (60.03%), கிருஷ்ணகிரி (64.86%) , திருவண்ணாமலை (65.71%), விழுப்புரம் (63.51%), சேலம் (65.43%), ஈரோடு (65.07%), பெரம்பலூர் (66.11%) மற்றும் அரியலூர் (62.2%) ஆகும்.
  • 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் கல்வியறிவு விகிதம் 74.04% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் 82.14% ஆகவும் பெண்களின் கல்வியறிவு விகிதம் 65.46% ஆகவும் உள்ளது.
  • 2001இல் இந்தியாவில் கல்வியறிவு விகிதம் 64.8% இருந்தது. இதில் ஆண் பெண் முறையே 75.3% மற்றும் 53.7% ஆக இருந்தது.
  • கன்னியாகுமரி மாவட்டம் அதிக அளவில் கல்வியறிவு விகிதம் (91.75%) கொண்ட மாவட்டமாகவும், தர்மபுரி மாவட்டம் மிகக் குறைந்த கல்வியறிவு (68.54%) கொண்ட மாவட்டமாகவும் உள்லது.
  • மேலும் அதிக கல்வியறிவு கொண்ட மாவட்டங்களாக சென்னை (90.18%), தூத்துக்குடி (86.16%), நீலகிரி (85.20%) மற்றும் காஞ்சிபுரம் (84.49%) மாவட்டங்கள் உள்ளன.

போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு

சாலைகளின் வகைகள்

  • மாநிலத்தின் மொத்த சாலைகளின் நீளம் 1,67,000 கிலோமீட்டர் ஆகும். இதில் 60,628 கிலோமீட்டர் மாநில நெடுஞ்சாலை துறை மூலம் பராமரிக்கப்படுகிறது.
  • பொதுத்துறை மற்றும் தனியார்துறை கூட்டணி இயக்கத் திட்டத்தின் கீழ் (PPP) மொத்த சாலைத் திட்டங்களில் 20% பங்களிப்புடன் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
சாலைகளின் வகைகள் நீளம் (கி.மீ)
தேசிய நெடுஞ்சாலைகள் 4,994
மாநில நெடுஞ்சாலைகள் 57,291
மாநகராட்சி மற்றும் நகராட்சி சாலைகள் 23,350
ஊராட்சி ஒன்றிய சாலைகள் 1,47,543
கிராம் பஞ்சாயத்து சாலைகள் 21,049
மற்றவை (வனச் சாலைகள்) 3,348
வணிகரீதியிலான சாலைகள் 1,213
வணிகரீதியற்ற சாலைகள் 20.34 லட்சம்
ஆதாரம் – 2017 தமிழ்நாடு புள்ளியியல் கையேடு

இரயில்வே போக்குவரத்து

  • தெற்கு இரயில்வேயின் தலைமையகம் சென்னையில் அமைந்துள்ளது. தற்போது தெற்கு இரயில்வேயின் வலைப்பின்னல் இந்தியாவின் தென் தீபகற்பப் பகுதிகளான தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டின் மொத்த இரும்புப் பாதையின் நீளம் 6,693 கிலோ மீட்டர் ஆகும். இம்மண்டலத்தில் 690 இரயில் நிலையங்கள் உள்ளன. இந்த இரயில்வே வலைப்பின்னல் அமைப்பு இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கிறது.
  • சென்னை, கோயம்புத்தூர், ஈரோடும் மதுரை, சேலம், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகியவை இம்மாநிலத்தில் உள்ள முக்கிய இரயில் சந்திப்புகள் ஆகும்.
  • சென்னையில் புறநகர் இரயில் போக்குவரத்து மற்றும் பறக்கும் இரயில் போக்குவரத்து மற்றும் பறக்கும் தொடருந்துத் திட்டம் ஆகியவை நன்கு வளர்ச்சியடைந்துயுள்ளன.
  • தற்பொழுது மெட்ரோ இரயில்வே அமைப்பு, மே 2017 முதல் பாதாள இரயில் இயக்கத்துடன் இப்போக்குவரத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.

வான்வழி போக்குவரத்து

  • தமிழ்நாட்டில் 4 முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. சென்னை சர்வதேச விமானநிலையமானது மும்பை மற்றும் புது டெல்லிக்கு அடுத்ததாக இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையமாக உள்ளது.
  • கோயம்புத்தூர் மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகியன நாட்டில் பிற சர்வதேச விமான நிலையங்கள் ஆகும்.
  • தூத்துக்குடி மற்றும் சேலம் ஆகியவை உள்நாட்டு விமானநிலையங்கள் ஆகும். இவை நாட்டின் பல பகுதிகளை இணைக்கின்றன.
  • தொழில்துறையின் அதீத வளர்ச்சியானது, பயணிகள் போக்குவரத்துக்களை அதிகரித்துள்ளது. இது ஆண்டிற்கு 18 சதவீதத்திற்கும் அதிகமான விமான போக்குவரத்து வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • தமிழ்நாட்டின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை எண் 44-ஐ உடையதாகும். இது ஓசூரிலிருந்து தர்மபுரி, சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை 627.2 கிலோமீட்டர் தூரம் செல்கிறது. தமிழ்நாட்டின் மிகக் குறைவான நீளங்கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண் 785-ஐக் கொண்டதாகும். இது மதுரையிலிருந்து நத்தம் வரை செல்கிறது. இதன் நீளம் 38 கிலோ மீட்டர் ஆகும்.

நீர்வழிப் போக்குவரத்து

  • சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி ஆகியவை தமிழ்நாட்டின் மூன்று முக்கிய துறைமுகங்களாகும். நாகப்பட்டினத்தில் இடைநிலை துறைமுகமும் பிற பகுதிகளில் 15 சிறிய துறைமுகங்களும் இம்மாநிலத்தில் உள்ளன.
  • துறைமுகங்கள் ஏறத்தாழ 73 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை ஆண்டுதோறும் கையாளுகிறது. (இந்தியாவில் 24 சதவீத பங்கு) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறு துறைமுகங்களும் தமிழ்நாட்டின் கடல்சார் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது. சென்னை துறைமுகம் செயற்கைத் துறைமுகமாகும்.
  • இது சரக்குப் பெட்டங்களைக் கையாளும் நாட்டின் தூறைமுகங்களில் இரண்டாவது பெரிய துறைமுகமாகும். தற்பொழுது 4 இலட்சம் வாகனங்களைக் கையாளும் திறன் கொண்ட பிரத்தியோக முனையம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • இடைநிலை துறைமுகமான எண்ணூர் சமீபத்தில் பெரிய துறைமுகமாக மேம்படுத்தப்பட்டு தமிழகத்தில் அதிக நிலக்கரி மற்றும் தாதுக்களைக் கையாளும் துறைமுகமாக உள்ளது.

தகவல் தொடர்பு

தகவல் தொடர்பு என்பது இலத்தீன் வார்த்தையான ‘கம்யூனிகேர்’ என்பதிலிருந்து பெறப்பட்டது. இது ‘பகிர்தல்’ எனப் பொருள்படும். தகவல்கள், எண்ணங்கள் மற்றும் எண்ணங்களின் பரிமாற்றத்தை தகவல் தொடர்பு என்கிறோம்.

தகவல் தொடர்புகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை:

1. தனிமனித தகவல் தொடர்பு

2. பொதுத்தகவல் தொடர்பு

தமிழ்நாட்டின் அஞ்சலக மாவட்டங்கள் மற்றும் தலைமையகம்

மண்டலம் / மாவட்டங்கள் தலைமையகம்
சென்னை சென்னை
மேற்கு மண்டலம் கோயம்புத்தூர்
மத்திய மண்டலம் திருச்சிராப்பள்ளி
தெற்கு மண்டலம் மதுரை

வணிகம்

  • ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியவை வணிகத்தின் இரு கூறுகளாகும். ஏற்றுமதி என்பது பொருட்கள் மற்றும் சேவைகளை வெளிநாட்டுப் பணத்திற்கு விற்பதாகும்.
  • இந்தியாவின் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 12.2 சதவீதம் ஆகும்.
  • இறக்குமதி என்பது பண்டங்கள் மற்றும் சேவைகளை வெளிநாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்குவதாகும்.
  • தமிழ்நாடு பல பொருட்களை வெளியில் இருந்து இறக்குமதி செய்கிறது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பிற்கு இடையேயான வேறுபாடு ‘வர்த்தக சமநிலை’ என அழைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் முக்கிய ஏற்றுமதிகள்
வேளாண் பொருட்கள் புகையிலை, தானியங்கள், பருத்தி, கரும்பு, நெல், நிலக்கடலை வாசனைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள்
தோல் பொருட்கள் சிறுதோல் பைகள், பணப்பைகள், கைப்பைகள், இடுப்பு கச்சை, காலணிகள் மற்றும் கையுறைகள்
இரத்தின கற்கள் மற்றும் நகைகள் விலை மதிப்பு மிக்க கற்கள், முத்துக்கள், தங்க நகைகள், கலை மற்றும் அலங்காரம் பொருட்கள்
இரசாயன மற்றும் இரசாயனம் சார்ந்த பொருட்கள் காகிதம், இரசாயனங்கள் , இரப்பர் மற்றும் கண்ணாடி

தமிழ்நாட்டின் இறக்குமதிகள்

  • இயந்திரக் கருவிகளான போக்குவரத்து சாதனங்கள், இயந்திர உபகரணங்கள், மின்சாதனமல்லா இயந்திரங்கள், மின்சாதன பொருட்கள், மருந்துப் பொருட்கள், பெட்ரோலியம், உரங்கள் மற்றும் செய்தித்தாள் ஆகியவை முக்கிய இறக்குமதிகளாகும்.
  • நாட்டின் வணிகத்தில் தமிழ்நாட்டின் முக்கிய துறைமுகங்கள் 10.94% பங்களிப்பைச் செய்கின்றன.
  • மேலே விவாதிக்கப்பட்ட கருத்துகளின் மூலம் தமிழகமானது பரப்பு, மக்கட்தொகை, வளம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் ஒரு முக்கிய மாநிலம் என்பது தெளிவாகிறது. இம்மாநிலத்தில் மக்களும் பாதுகாப்பாக உள்ளனர்.
  • தமிழக அரசால் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படும் திட்டங்களின் மூலம் இம்மாநிலமானது அனைத்து துறைகளிலும் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருகிறது.

தமிழ்நாட்டில் மனிதனால் உருவாகும் பேரிடர்கள்

விளக்கம்

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மனித நடவடிக்கைகளால் பேரழிவு நிகழ்வுகள் ஏற்படுமாயின் அதை மனிதனால் உருவாகும் பேரிடர்கள் என்கிறோம். அபாயகரமான பொருட்கள், தொழிலகக் கசிவுகள், தீ, நிலத்தடி நீர் மாசுபடுதல், போக்குவரத்து விபத்துகள், குண்டு வெடிப்புகள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் ஆகியன மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளில் அடங்கும்.

தொழிலகத் துறை பேரிடர்கள்

  • தொழிலக நிறுவனங்களின் கவனக் குறைவாலோ மற்ற குறைபாடுகளாலோ நிகழும் விபத்துகள் இவ்வகையைச் சார்ந்தது. நாட்டின் தொழிலகத்துறை பேரழிவிற்கு மின்சாதனப் பொருட்களால் ஏற்படும் மின்கசிவே முக்கிய காரணமாக உள்ளது.
  • அதிக வெப்பம், நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் மின்சாதனப் பொருட்கள் மற்றும் தரம் குறைந்த மின்சார உபகரணங்கள் ஆகியன தொழிலகத் துறைகளில் அதிகரித்து வரும் தீ விபத்துகளுக்கு முக்கியக் காரணங்களாகும்.
  • மின்சாதனப் பொருட்கள் தவறான முறையில் கையாளப்படும்போது உயிரிழப்பு ஏற்படுகிறது. இவற்றைத் தவிர வெடித்தல் , விஷவாயு கசிதல், இயந்திரங்களினால் ஏற்படும் காய மரணங்கள் மற்றும் விபத்துகள் ஆகியன பிறவகைத் தொழிலகப் பேரிடர்களாகும்.
  • சிவகாசி, இந்தியாவின் பட்டாசு உற்பத்தியின் தலைநகர் எனக் கருதப்படுகிறது. பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் அதிகமுள்ள விருதுநகர் மற்றும் சிவகாசியில் உள்ள தொழிலகங்களில் தொடர்ச்சியாக ஏற்படும் விபத்துகளால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன..
  • 2012 செப்டம்பர் 5 அன்று ஒரு தனியார் பட்டாசு தொழிலகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தினால் 40 தொழிலாளர்கள் உயிரிழந்ததோடு 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
  • 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் நாள் கோயம்புத்தூரில் டயர் உருக்கும் ஆலையில் நடந்த மற்றொரு தொழிற்துறை விபத்தில் 6 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
  • தொழிலகங்களில் ஏற்படும் தீ விபத்துகள் மற்றும் இறப்புகளைக் குறைக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

கூட்ட நெரிசல்

  • ஒரு பெரிய அளவிலான விலங்கு கூட்டம் அல்லது மனித கூட்டம், கட்டுப்பாடற்ற நிலையில் ஒரே சமயத்தில் , ஒரே திசையை நோக்கி ஓடுவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்பு மற்றும் உடல் ஊனம் ஏற்படும் நிலை உருவாகிறது.
  • உதாரணமாக தமிழ்நாட்டில் துரையூர் அருகே முத்தியம்பாளையம் கிராமத்தில் 21 ஏப்ரல் 2019 அன்று கருப்புசாமி கோயிலில் நடந்த திருவிழாவில் படிக்காடு சடங்கு நடைபெற்றபோது நூற்றுக்காணக்கான பக்தர்கள் திரண்டதால் கூட்ட நெரிசலில் சிக்கி, 7 பேர் உயிரிழந்தனர், 10 பேர் காயமடைந்தனர்.

இடர் தணித்தல்

  • இடர் தணித்தல் என்பது மனித உயிருக்கு மற்றும் உடைமைகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலைத் தடுக்க மேற்கொள்ளப்படும் தொடர் நடவடிக்கையாகும்.
  • இயந்திரங்கள் மற்றும் மின்சாதனப் பொருட்களைத் தொடர் பராமரிப்பு செய்வதன் மூலம் விபத்துகளைக் குறைக்கலாம்.
  • விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளித்தல், வேலை நேரங்களில் கவனமாக இருத்தல் போன்றவை பேரழிவுகளின்போது ஆபத்துகளைக் குறைக்க உதவும்.
  • பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்களைத் தொழிலாளர்கள் அணிந்து கொள்வதன் மூலம் கடுமையானக் காயங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்து கொள்ள்முடியும்.
  • குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ முகாம்களை நடத்தி அவர்களின் உடல் நிலையை அறிந்துகொள்ள உதவுதல், ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை ஏற்படுத்தி அவர்களின் வருங்கால வாழ்க்கையைப் பாதுகாத்தல்.
  • எதிர்பாராத அசம்பாவிதங்கள் ஏதேனும் நிகழும் போது நிர்வாகமானது, ஊழியர்களுக்கு நட்புடன் உதவியை வழங்கத் தயாராக இருத்தல் வேண்டும்.
  • பேரிடர் அவசர கால தொலைபேசி எண் 1077 – கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியர் / நீதிபதி.

சாலை விபத்துகள்

  • இந்தியாவில் சாலை விபத்துகள் மிக அதிகமாக நடைபெறுகின்றன. நாட்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.
  • சாலை போக்குவரத்து அதிகரிப்பு, அதிவேகமாகச் செல்லும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுதல் ஆகியவை சாலை விபத்துகளுக்கான முக்கியக் காரணங்களாகும்.
  • 2013ஆம் ஆண்டில் மாநிலத்தில் ஏற்பட்ட 14,504 விபத்துகளில் 15,563 பேர் உயிரிழந்தனர்.
  • 2002 – 2012 வரையிலான 10 ஆண்டுகளில் இந்திய மாநிலங்களில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் அதிக எண்ணிக்கையைக் கொண்டு தமிழகம் முதலிடம் வகிக்கிறது. நாட்டில் பதிவாகும் மொத்த விபத்துகளில் 15% தமிழ்நாட்டில் நடப்பதாக அறிக்கையில் தெரியவந்துள்ளது.
  • 2017 ஆம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி நாட்டில் ஏற்பட்ட சாலை விபத்துகள் 1,47,913இல் 16,157 உயிரிழப்புகள் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • 2018இல் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 12,213 ஆக குறைந்துள்ளது. இது 24.5 சதவீத விபத்துகள் குறைந்துள்ளதைக் காண்பிக்கிறது. இது மேலும் குறைக்கப்பட வேண்டும்.

அபாய நேர்வு குறைப்பு

முன்பு

வேகமாக வாகனங்களை இயக்காமல் இருத்தல், குடித்துவிட்டு வாகனங்களை இயக்குவதைத் தவிர்த்தல், தலைக்கவசம் அணிதல், இருக்கைப்பட்டை அணிதல் மற்றும் போக்குவரத்து விதி முறைகளைப் பின்பற்றுதல்.

பின்பு

காவல் அல்லது அவசர ஊர்தியை அழைத்தல், மருத்துவ உதவியை நாடுதல், விபத்து பற்றிய சரியான தகவல்களைப் பதிவு செய்தல்.

KNOW RISK – NO RISK ஆபத்தை அறிந்தால் – ஆபத்து இல்லை

அடிப்படை சாலை பாதுகாப்பு விதிகளைத் தெரிந்து கொள்ளல்

  • சாலை குறியீடுகள் பற்றிய விழிப்புணர்வு
  • நில், கவனி, செல்
  • வாகனம் நெருங்கி வருகிறதா என்பதை உறுதி செய்தல்
  • சாலைகளில் அதிவிரைவாக வாகனங்கள் செலுத்துவதை தவிர்த்தல்
  • பாதசாரிகளுக்கான இடத்தில் சாலையைக் கடத்தல்.
  • வாகனம் ஓட்டும்போது கைகளை நீட்டாதிருத்தல்.
  • ஒருபோதும் வளைவுகளில் வாகனங்களை முந்தாமல் நின்று கவனமாகச் செல்லுதல்.
  • மக்கள்தொகை மற்றும் பொருளாதாரப் போக்கில் ஏற்பட்ட அதிக மாற்றங்களானது பேரிடர்களின் எண்ணிக்கையையும் அதன் எதிர்மறையான விளைவுகளையும் அதிகப்படுத்தியுள்ளது.
  • தற்போதைய மக்கள்தொகை எண்ணிக்கை சூழலியல் மற்றும் தொழில்நுட்ப நிலை மக்களைப் பேரிடர்களுக்கு அதிகம் உட்படுத்துபவையாக உள்ளன. முந்தையகாலத்தை விட தற்போது பேரிடர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் அவற்றால் ஏற்படும் பேரிழப்புகள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.
  • அரசாங்கம் மற்றும் பொது மக்களால் ஏற்படும் நடவடிக்கைகளைத் தவிர பேரிடர் சார்ந்த விழிப்புணர்வு களப் பேரிடரைக் குறைக்க உதவும்.

மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் கீழ்க்கண்ட மீட்புப் படைகள் மற்றும் அமைப்புகள் இணைந்து செயல்படுகின்றன.

மாநில/யூனியன் பிரதேச அமைப்புகள் மாவட்ட அமைப்புகள் கீழ்க்கண்டவாற்ய்
  1. மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (தலைவர் –முதலமைச்சர்)
  2. நிவாரண /பேரிடர் மேலாண்மைத் துறை
  3. காவல்துறை
  4. வனத்துறை
  5. தீ மற்றும் குடிமையியல் பாதுகாப்பு சேவைகள்
  6. சுகாதார சேவைகள்
  7. போக்குவரத்துத்துறை
  8. பொதுப்பணித்துறை
  9. கால்நடைத்துறை
  10. உணவு மற்றும் வட்ட வழங்கல் துறை
  1. மாவட்ட நீதிபதி (தலைவர் மாவட்ட ஆட்சியர்)
  2. வருவாய்த்துறை
  3. குடிமை பணி நிர்வாகம்
  4. உள்ளூர் காவல்துறை
  5. குடிமை பாதுகாப்பு
  6. தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள்
  7. ஊர்க் காவல் படை (உள்ளூர், சமூகம், அரசு சாரா அமைப்பு, தன்னார்வ நிறுவனங்கள்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!