Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Science Notes

அன்றாட வாழ்வில் விலங்குகள் Notes 7th Science Lesson 16 Notes in Tamil

7th Science Lesson 16 Notes in Tamil

16] அன்றாட வாழ்வில் விலங்குகள்

அறிமுகம்:

இயற்கையின் மிகப்பெரிய கொடைகளுள் ஒன்று விலங்குகளாகும். அவை அன்றாட வாழ்வில் மனிதரோடு மிகவும் நெருக்கமாக இணைந்துள்ளன. நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வணிக மேம்பாட்டிற்கும் விலங்குகள் உதவுகின்றன. நமக்கு உணவு, உடை மற்றும் போக்குவரத்து ஆகியவற்றிற்கு விலங்குகள் பயன்படுகின்றன. விலங்குகளின் பொருளாதார முக்கியத்துவம் மற்றும் அவற்றின் பாதுகாப்பு, பராமரிப்பு பற்றியும் நாம் இப்பாடத்தில் அறிந்து கொள்வோம்.

விலங்குகளிலிருந்து பெறப்படும் உணவுப்பொருள்கள்:

பால்:

பால் என்பது, வெண்மையான ஒரு திரவம். இது விலங்குகளில் பாலூட்டிகளின் பால் சுரப்பியிலிருந்து உற்பத்தியாகிறது. பிறந்த குட்டி அல்லது குழந்தைகளின் முக்கியமான ஆதார ஊட்டச்சத்து மிக்க உணவாகப் பால் கருதப்படுகிறது. இதனைத்தான் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்துகிறோம்.

  • நாம் பயன்படுத்தப்படும் பாலானது பசு, எருமை மாடுகள் மற்றும் ஆடுகளிலிருந்து கிடைக்கும் முக்கியமான பொருளாகும்.
  • நம் அன்றாட உணவில் பாலானது தேநீர், காஃபி, சாக்லேட், இனிப்பு மற்றும் இவை போன்ற பால் சம்பந்தமான பொருள்களைத் தயாரிக்க உதவுகிறது.
  • புரதம் மற்றும் கால்சியம் மிக்க ஊட்டச்சத்து உணவாக இருப்பதால் பன்னீர், பாலடைக்கட்டி, பாலேடு (க்ரீம்), வெண்ணெய், நெய் மற்றும் தயிர் போன்றவற்றைத் தயாரிக்க பால் உதவுகிறது.

முட்டை:

பல்வேறு வகையான பெண் பறவைகள் அதாவது கோழி, வாத்து, வான்கோழி மற்றும் நெருப்புக்கோழிகள் போன்றவை அவற்றின் இளம் உயிரிகள் உருவாவதற்கு முட்டையிடுகின்றன. இதனைத்தான் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்துகிறோம் அவை பின்வருமாறு.

  • முட்டை நம் உடலுக்குச் சக்தியையும், நல்ல ஆரோக்கியத்தையும் தருகின்றது.
  • இது புரதம் நிறைந்த ஊட்டச்சத்து உடையதாகும்.
  • ஆறு கிராம் எடையுள்ள முட்டை (Egg) உயர்ந்த ரகப் புரதத்தைக் கொண்டுள்ளது. காலையில் புரதம் மிக்க உணவு, அன்றைய தினம் முழுவதும் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. எந்த வயதினரும், தினமும் முட்டையைஉ ண்பது நல்லது.

இறைச்சி:

விலங்குகளின் உடலின் தசைப்பகுதி இறைச்சி எனப்படும். இதனைத் தான் நாம் இறைச்சியாக உண்கிறோம். பெரும்பாலும் இறைச்சி என்பது எலும்புத் தசையையும், அதில் உள்ள கொழுப்பையும் குறிக்கும். மனிதர்களில் சிலர், கோழி, ஆடு, முயல், பன்றி, வெள்ளாடு, ஓட்டகம், எருமை, மீன், நண்டு, இறால் போன்றவற்றை உணவாக உட்கொள்கின்றனர்.

  • விலங்குகளின் இறைச்சி சிலருக்கு உணவாகப் பயன்படுகிறது.
  • இறைச்சியில் ஊட்டச்சத்து அதிகம் இருப்பதால் அது முக்கிய உணவாகப் பயன்படுகிறது. மேலும், கோழி இறைச்சி பெருமளவில் மனிதர்கள் பலர் பயன்படுத்துவதால், அவை வணிக ரீதியாக கோழிப்பண்ணை அமைத்து கோழிகள் வளர்க்க உதவுகிறது.

ஆட்டு இறைச்சி கோழி இறைச்சி

கோழிப் பண்ணை அமைத்தல்:

வீட்டில் வளர்க்கப்படும் பறவைகளான கோழி, வாத்து, வான்கோழி போன்றவற்றை அவற்றின் இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் வளர்ப்பது பண்ணை அமைத்தல் எனப்படும். கோழிப் பண்ணை அமைத்தல் என்பது, கோழிகளின் எண்ணிக்கையை அதிக அளவில் பெருக்குவது ஆகும். இவற்றை நாம் இரு வகைகளாகப் பிரிக்கலாம்.

  1. முட்டையிடுபவை.
  2. பிராய்லர் (இறைச்சிக்காக வளர்க்கப்படுபவை).

கோழிப்பண்ணைகள் அமைக்கப்போதுமான, பாதுகாப்பான இடம் தேவைப்படுகின்றது. கோழிகளை அடைக்கக் கூடுகள், தேவையான நீர், காற்றோட்டம், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள் நிறைந்த உணவுப்பொருள்கள் போன்றவை தேவைப்படுகின்றன. கோழித் தீவனம் என்பது மக்காச்சோளம், கோதுமை, கம்பு மற்றும் அரிசித் தவிடு இவற்றை நன்கு மசித்துத் தரவேண்டும். இதோடு, நிலக்கடலை, கொண்டைக்கடலை போன்றவற்றையும் உடைத்துத் தரலாம்.

நோய்கள்:

சில நோய்க்கிருமிகள் கோழிப் பண்ணையில் உள்ள கோழிகளைத் தாக்கி நோய்களை உண்டாக்குகின்றன. இதைத் தவிர்க்க, கோழிகள் வாழும் இடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கோழிகளுக்குத் தடுப்பூசி போட வேண்டும். கோழிப் பண்ணையில் உள்ள கோழிகளுக்குப் பொதுவாக உண்டாகும் நோய்கள் பின் வருமாறு:

சால்மோனெல்லோசிஸ் (வயிற்றுப்போக்கு) இந்நோயைப் பாக்டீரியா உருவாக்கும்.
ரானிக் கெட் நோய் (அம்மை நோய்) இந்நோயை வைரஸ் உருவாக்கும்
ஆஸ்பர்ஜில்லஸ் நோய் (பலவீனம், நலிந்துபோதல்) இந்நோயைப் பூஞ்சை உருவாக்கும்.

கோழிப்பண்ணை

உடையாகப் பயன்படும் விலங்கினப் பொருள்:

விலங்குகளின் உரோமங்களுக்கு மிகப் பெரிய தேவை உள்ளது. ஆடுகளின் உரோமத்தைக் கொண்டு கம்பளி ஆடைகள், சால்வைகள், போர்வைகள், தலை முக்காடு மற்றும் காலுறைகளைத் தயாரிக்க உதவும் இதே போல் குதிரையின் உரோமம், ஓவியம் தீட்டும் தூரிகையை உருவாக்கப் பயன்படுகிறது. விலங்கின் உரோமத்தோடு, அதன் தோலும், வெதுவெதுப்பான மற்றும் நவீன ஆடைகளும் தயாரிக்க உதவுகிறது.

விலங்கு இழைகள்:

பஞ்சு, சணல், கம்பளி, பட்டு போன்ற நார்கள் இயற்கை இழைகளாகும். பஞ்சு மற்றும் சணல் போன்றவை தாவர இழைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும். கம்பளி மற்றும் பட்டு இழைகள், விலங்கு இழைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும். இவை துணிகள் நெய்யவும் உதவுகின்றன. கம்பளி என்பது, ஆடு மென் உரோமக் கற்றையிலிருந்து எடுக்கப்படும் இழையாகும். இதைத் தவிர, முயல், யாக், அல்பாகா (உரோம ஆடு) மற்றும் ஒட்டகத்திலிருந்து கம்பளி இழைகள் எடுக்கப்படுகின்றன. பட்டுப்புழுவின் கூட்டிலிருந்து எடுக்கப்படும் இழையே பட்டு இழையாகும்.

ஆடு உரோமத்தைக் கத்தரித்தல்

கழுவுதல் தரம் பிரித்தல் நூற்றல்

கம்பளி:

உறைபனி மிகுந்த இடங்களில் வாழ்வோர் எந்த வகை உடைகளை அணிவார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஏன் அவர்கள் அவ்வகை உடைகளை விரும்பி அணிகிறார்கள்?

கம்பளி என்ற இழை, கேப்ரினே என்ற குடும்பத்தைச் சார்ந்த விலங்குகளின் மென்முடிக் கற்றையிலிருந்து பெறப்படுகிறது. கம்பளி, ஆட்டின் புறத்தோல் பகுதியிலிருக்கும் உரோமம் ஆகும். இது பெரும்பாலும் ஆடு, செம்மறிஆடு, முயல், காட்டெருமையிலிருந்து பெறப்படுகிறது. இந்தக் கம்பளியை உருவாக்க ஐந்து படிகள் உள்ளன. அவை பின்வருமாறு:

  1. கத்தரித்தல் (Shearing).
  2. தரம் பிரித்தல் (Grading or Sorting).
  3. கழுவுதல் (Washing or Scouting).
  4. சிக்கெடுத்தல் (Carding).
  5. நூற்றல் (Spinning).
  • கத்தரித்தல்: ஆடுகளின் உடலிலிருந்து உரோமங்கள் கத்தரிக்கப்படுகின்றன. உடலின் சதைப் பகுதிகளிலிருந்து பிரித்து எடுக்கப்படுகின்றன. இது கத்தரித்தல் எனப்படும்.
  • தரம் பிரித்தல்: ஒரே ஆட்டின் வெவ்வேறு பாகங்களிலிருந்தும் எடுக்கப்படும் உரோமங்கள் வெவ்வோறானவை. இவை பின்னர் தனித்தனியாகப் பிரித்தெடுக்கப்படும். இது தரம் பிரித்தல் எனப்படும்.

தரம் பிரித்தல், கழுவுதல், சிக்கெடுத்தல், நூற்றல்:

  • கழுவுதல்: தோலில் இருந்து கத்தரித்த தோலின் உரோமங்கள் உள்ள தூசி, அழுக்கு மற்றும் எண்ணெய் பிசின் போன்றவற்றை நீக்க, அதைச் சலவைத்தூள் கொண்டு நன்கு கழுவ வேண்டும்.
  • சிக்கெடுத்தல்: காய வைத்த கம்பளி இழைகளைக் கவனத்துடன் பிரிக்க வேண்டும். இதை, ஆலைகளில் உள்ள உருளைகளில் செலுத்தி, பின்னர் மெல்லிய கம்பி போன்ற இழையாக மாற்ற வேண்டும். இப்படிக் கம்பளியைத் தட்டையான தாளாக மாற்றுவது வலை எனப்படும்.
  • நூற்றல்: இந்த வலையைக் குறுகிய தனித்த இழையாக மாற்ற, அவற்றை நூற்பு இயந்திரங்களில் அனுப்ப வேண்டும். இந்த நூல், பின் பந்து போல் உருண்டையாக மாறும். இந்த நூல் பந்து, பின் பின்னல்களாக மாற்றப்பட்டு, ஆடைகள் நெய்ய உதவும்.

கம்பளியின் சிறப்பம்சங்கள்:

  • வெப்பம் மற்றும் தண்ணீருக்கு எதிர்ப்புத் தன்மை உடையது மற்றும் இவை கிழிவதில்லை.
  • ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்ளும் தன்மையுடையது.
  • கம்பளி, குளிருக்கு எதிராகச் செயல்படுகின்றது. எனவே, கம்பளி சிறந்த வெப்பக் கடத்தியாகக் கருதப்படுகிறது.
  • இது எளிதில் சுருங்காது.

கம்பளியின் பயன்கள்:

கம்பளி என்பது, பல்வேறு வகையான பொருள்கள் செய்ய உதவும் இழையாகும். இந்த இழைகளின் விட்டம் ஆடைகள், வீட்டிற்குத் தேவையான துணிகள் மற்றும் தொழிற்சாலைக்குத் தேவையான பொருள்கள் செய்ய உதவுகின்றன. மூன்றில் இரண்டு பங்கு கம்பளி இழைகள், ஸ்வெட்டர், ஆடைகள், கோட் மற்றும் விளையாட்டு வீரர்கள் அணியும் ஆடைகள் தயாரிக்க உதவுகின்றன. கம்பளி இழை மற்றும் இயற்கை அல்லது செயற்கை இழைகளோடு சேரும்போது அவை மடிப்புக்கு எதிர்ப்புத் தன்மை உடைய போர்வைகள் மற்றும் இரைச்சலை உறிஞ்சும் விரிப்புகள் தயாரிக்க உதவுகின்றன.

பட்டு:

பட்டு என்பது, பட்டுப்பூச்சியின் கூடுகளின் சுரக்கும் இழையாகும். மல்பெரி இலைகளை உணவாக உண்ணும் பட்டுப்புழுக்களிலிருந்து பட்டு இழைகள் பெறப்படுகின்றன. பட்டுப்புழுக்கள் குறுகிய காலமே வாழும். அதாவது, இரண்டு மாதங்கள் மட்டுமே வாழும். இந்த காலத்தில் அவை வாழ்க்கையில் நான்கு வளர்ச்சி நிலைகளைக் கடக்க வேண்டும். அவை முட்டை, லார்வா நிலை (கம்பளிப்பூச்சி), கூட்டுப்புழு (குக்கூன்) மற்றும் பட்டுப் பூச்சியாகும். இந்த வாழ்க்கை நிலைகள் பட்டுப்பூச்சியின் வாழ்க்கை சுழற்சியாகும்.

பட்டுப் பூச்சியின் வாழ்க்கை சுழற்சி:

பட்டுப்பூச்சிகளை வளர்த்து, அதிலிருந்து பட்டு தயாரிக்கப்படுவது, பட்டுப்பூச்சி வளர்ப்பு அல்லது செரிகல்சர் எனப்படும். ஒரு முதிர்ந்த பெண் பட்டுப் பூச்சி சுமார் 500 முட்டைகளை இடும். இந்த முட்டைகள் ஆறு வாரங்கள் குளிர் வெப்ப நிலையில் வைக்கப்படும். பின் இவற்றை அடைகாக்கும் பெட்டியில் (இன்குபேட்டர்) வைக்க வேண்டும். பத்து நாள்கள் கழித்து முட்டைகள் பொரிந்து லார்வாக்கள் வெளிவரும். இவை 35 நாட்கள் மல்பெரி இலைகளை உண்டு வாழும். பிறகு பட்டுப்புழு ஐந்து நாளில் பட்டு இழைகளை உற்பத்தி செய்யும். இவை கூட்டுப் புழுக்களாக மாறும். பட்டுக்கூடு இழைகள் தனித்த நீண்ட இழையாக இருக்கும்.

கூட்டுப்புழுக்களைக் கொதிநீரில் இட்டால், அதிலிருந்து பட்டு இழைகளை மிக எளிதாகச் சிக்கலின்றி பிரித்துவிடலாம். ஆனால் அவை பட்டு இழைகளை உருவாக்கட்டும் என்று விட்டு விட்டால் கூட்டுப்புழு உடையும் போது நீண்ட பட்டு இழைகளும் கிழியும். இதனால் தான் கூட்டுப்புழுக்களைக் கொதி நீரில் இட்டு, மிக நீளமான பட்டு நூலை எடுத்து, அதைச் சுத்தமாக்கி, சாயமேற்றி ஆடையாக நெய்கிறார்கள்.

பட்டின் சிறப்பம்சங்கள்:

  • கவர்ச்சியாகவும், மிகவும் மென்மையான, அணிவதற்கு வசதியானது, பலதுறைகளில் பயன்படுகிறது.
  • இதை எளிதில் சாயமேற்றலாம்.
  • இயற்கை இழைகளிலேயே பட்டு இழை தான் வலிமையான இழையாகும்.
  • இது சூரிய ஒளியை எளிதில் கடத்தும்.

பட்டின் பயன்கள்:

பட்டு இயற்கை அழகுடையது, கோடை காலத்தில் இது இதமானதாகவும், குளிர் காலத்தில் வெப்பத்தைத் தரக் கூடியதாகவும் உள்ளது. நாகரிகமான, நவீன உடைகளை அழகாகத் தயாரிக்கவும், சிறப்பு வாய்ந்த அழகிய பட்டாடைகளை வடிவமைக்கவும் முக்கியமாக சேலைகள் தயாரிக்க இது பயன்படுகிறது. வீட்டு உபயோகப் பொருள்களான சுவர் அலங்காரப் பொருள்கள், திரைச் சீலைகள், கம்பளம் மற்றும் இதர விரிப்புகள் தயாரிக்கவும் பயன்படுகின்றன. பட்டு இழையானது, மருத்துவத் துறையில், அறுவை சிகிச்சையின் போது தையல் நூலாகப் பயன்படுத்தப்படுகிறது.

பட்டு மற்றும் கம்பளி ஆலைகளில் ஏற்படும் அபாயங்கள்:

ஆலைகளில் பணிபுரிவோருக்குக் காயங்கள் ஏற்படலாம். ஆலைகளில் சூழ்நிலை காரணமாகச் சில பாதிப்புகள் மற்றும் ஆரோக்கியமற்ற நிலை ஏற்படலாம்.

பட்டாலைகளில் ஏற்படும் பாதிப்புகள்:

பொதுவாகப் பட்டாலைகளில் பணிபுரிபவர்கள் நின்றுகொண்டே பட்டுநூலை நூற்பதால் அவர்கள் மூட்டு வலியால் அவதிப்படுகிறார்கள். மேலும் இவர்கள் முதுகு வலியினாலும், பார்வைக் கோளாறுகள் மற்றும் தோல் காயங்களாலும் துன்புறுகிறார்கள். குறைந்த காற்றோட்டமுள்ள பகுதிகளில் இவர்கள் பணிபுரிவதால் சில சமயம், சுவாச சம்பந்தமான நோய்களான ஆஸ்துமா மற்றும் மார்புச் சளியாலும் அவதிப்படுகிறார்கள்.

கம்பளி ஆலைகளில் ஏற்படும் பாதிப்புகள்:

கம்பளி ஆலைளில் பணிபுரியும் பணியாளர்கள் வெவ்வேறு வேதிப்பொருள்கள் மற்றும் சலவைத்தூள்களையும் பயன்படுத்துவதால் ஒவ்வாமை மற்றும் தோல் நோயால் துன்புறுகிறார்கள். இறந்த விலங்குகளைக் கையாளுவதால் கம்பளி ஆலை பணியாளர்கள் ஆந்தராக்ஸ் பாக்டீரியா தொற்றால் அவதிப்படுகிறார்கள். இது போன்ற பாதிப்பு ஏற்பட்டால் உயிர் சேதம் ஏற்படுகிறது இது பிரித்தெடுப்போர்கள் நோய் என்றும் அழைக்கப்படுகிறது.

பேசில்லஸ் ஆந்த்ராசிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் நோய் ஆந்தராக்ஸ். இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட, விலங்குகளின் உரோமம் மற்றும் அங்கு வாழும் விலங்குகளைக் கையாளுவோர்க்கும் ஆந்தராக்ஸ் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நோயின் அறிகுறிகள் – காய்ச்சல், இருமல், மூச்சு விடுதலில் சிரமம். இவை நிமோனியாவை ஒத்த அறிகுறிகளாகும். சில சமயம் இவர்களுக்கு வாந்தி எடுக்கும் சூழ்நிலையும் மற்றும் வயிற்றுப்போக்கும் ஏற்படுகின்றன.

சிகிச்சை:

  • பெனிசிலின் மற்றும் சிப்ரோஃப்ளோக்சாசின் போன்ற சிறந்த மருந்துகள் ஆந்த்ராக்ஸ் நோயைக் குணமாக்க உதவுகின்றன.
  • விலங்குகளுக்கு ஆந்தராக்ஸ் தடுப்பூசி போட வேண்டும் மற்றும் ஆந்த்ராக்ஸ் நோயால் இறந்த விலங்குகளை ஆழ்குழி தோண்டி அதில் புதைக்க வேண்டும் அல்லது எரிக்க வேண்டும்.
  • முதலாளிகள் தங்களின் பணியாளர்களுக்குச் சுத்தமான சுற்றுச்சூழலும் நல்ல காற்றோட்டம் மற்றும் பாதுகாப்பும் அளிக்க வேண்டியது அவர்களின் கடமையாகும்.

பட்டுபுழு வளர்த்தல் மற்றும் அமைதிப்பட்டு:

பட்டுப்பூச்சிகளை வளர்த்து பட்டு நூலை உருவாக்கும் முறை பட்டுபுழு வளர்ப்பு (Sericulture) எனப்படும். இது அதிகப் பட்டு இழைகளைப் பெறுவதற்காக ஏராளமான பட்டுப்பூச்சிகளை வளர்க்கும் முறை ஆகும்.

அகிம்சைபட்டு:

ஆண்டாண்டு காலமாகக் கொதிக்கும் நீரில் கூட்டுப்புழுக்களைப்போட்டு, அவற்றை அழித்து அதிலிருந்து பட்டு இழைகளை எடுத்தனர். இந்தியாவில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரியாகப் பணியாற்றிய குசுமா ராஜய்யா என்பவர், 1992ஆம் ஆண்டு கூட்டுப்புழுக்களை அழிக்காமல், அவற்றிலிருந்து பட்டு நூலை எடுக்கலாம் என்பதைக் கண்டறிந்தார். ஆனால், மென்மையான முறை ஒன்றை உருவாக்கினார். கூட்டுப்புழுக்கள், கூட்டை உடைத்துக்கொண்டு வெளியேறும் போது அவற்றைக் கொல்லாமல், அவை உண்டாக்கும் பட்டு இழைகளை எடுக்கலாம் என்றார். இந்தப் பட்டு, மனித நேயத்தின் அடிப்படையில், பராம்பரிய முறைகளைத் தாண்டி உருவாக்கப்பட்டதாகும். எனவே இது, அகிம்சைபட்டு அல்லது அமைதிபட்டு என்று அழைக்கப்படுகின்றது. இவரைப் பின்பற்றி, விலங்குகளின் நலனில் அக்கறையுள்ள ஏராளமான மக்களும் இதில் ஆர்வம் காட்டினர்.

விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு:

விலங்குகளைப் பாதுகாத்தல் என்பது நமது குழந்தைகளையும், பெற்றோரையும் பாதுகாப்பதற்கு நிகரானது அவை மனிதர்கள் போன்ற உயிரிகளாகும். இந்த உலகில் வாழும் அனைத்து உயிரினங்களையும்

பாதுகாப்பது மனிதர்களின் கடமை. விலங்குகளைப் பாதுகாக்கும் மிகப்பெரிய பொறுப்புணர்வு மனிதர்களாகிய நமக்கு இருக்கிறது.

நமது சுற்றுச்சூழல், காடு மற்றும் தட்ப வெப்பநிலை மற்றும் மாற்ற சார்ந்த அமைச்சகம், விலங்குகளைத் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்க 1960ஆம் ஆண்டு, நான்கு புதிய சட்டங்களை கொண்டுவந்தது அவற்றுள் வீட்டில் நாய் வளர்ப்பவர்கள், விலங்குகளை சந்தையில் விற்பனை செய்பவர்கள், செல்லப் பிராணிகள் மற்றும் மீன்கள் வளர்ப்பவர்கள் போன்றவர்களுக்காக உருவாக்கியது. விலங்குகளைப் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும் என்ற பல்வேறு குழுக்களின் கூட்டு முயற்சியால்தான் அரசு இச்சட்டங்களை இயற்றியது. நம்மையும், நம் சுற்றுச் சூழலையும் பாதுகாத்துக் கொள்ள, விலங்குகளை நாம் பாதுகாக்க வேண்டும். ஆகையால், நாம் விலங்குகளின் மீது அக்கறை, அன்பு கொண்டு பாதுகாக்க வேண்டும். நம் குடும்பத்திலுள்ள ஓர் உறுப்பினர் போல் விலங்குகளையும் நாம் பேணிக்காக்க வேண்டும்.

உங்களுக்கு தெரியுமா?

தேன்:

தேன் எங்கிருந்து நமக்குக் கிடைக்கிறது? அது எவ்வாறு உருவாகிறது? என்பது தெரியுமா? நீங்கள் தேன் கூட்டில் பல தேனீக்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். தேனீக்கள் மலர்களிலிருந்து, நெக்டார் என்ற இனிப்புச் சாற்றைச் சேகரித்து, அதைத் தேனாக மாற்றி, அதைத் தேன் கூட்டில் உள்ள தேன் அறைகளில் சேமிக்கின்றன.

  • தேன் என்பது தேன் கூட்டிலிருந்து நம்மால் பிரித்தெடுக்கப்படும் இனிப்பான சாறாகும்.
  • மலைப்பகுதியில் வசிக்கும் மக்களால், அடர்ந்த காடுகளில் உள்ள தேன் கூடுகளிலிருந்து இயற்கையான மலைத் தேன் எடுக்கப்படுகின்றது.
  • தேன் சிறந்த மருத்துவ குணம்மிக்கது, அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும்.

தேன் கூட்டிலிருந்து தேன் வழிகிறது

  • வேலைக்காரத் தேனீக்களின் வேலை என்னவென்றால் மலர்களில் உள்ள தேனைச் சேகரிக்கும், மேலும் அவை இளந்தேனீக்களை வளர்க்கும், தேன் கூடு சேதம் அடைந்தால் அதைச் சரி செய்யும், தேன் கூட்டைப் பாதுகாக்கும்.
  • பட்டு உற்பத்தியில், உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பெறுவது நம் இந்திய நாடு. தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம், திருபுவனம் மற்றும் ஆரணி போன்ற இடங்கள் பட்டு உற்பத்திக்குப் புகழ் பெற்றவை.
  • விலங்குகளின் இனப்பெருக்கத்தை ஆய்வு செய்தல் மற்றும் அவற்றின் பராமரிப்பு பற்றிப் படிக்கும் பிரிவிற்கு விலங்கு வளர்ப்பு (Animal Husbandry) என்று பெயர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!