Samacheer NotesTnpsc

அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள் பகுதி – I Notes 11th Political Science

11th Political Science Lesson 3 Notes in Tamil

3. அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள் பகுதி – I

இறையாண்மை

அறிமுகம்

நீங்கள் அதிகாரம் படைத்தவரா? நீங்கள் அதிகாரம் படைத்தவர் என்பது எவ்வாறு தெரியும்? ஆனால் நீங்கள் உங்களுடைய நாடு அதிகாரம் வாய்ந்தது என்று கூறலாம். இது எப்படி என்று தெரியுமா? எவ்வாறு என்றால் நம் நாடு ஒரு இறையாண்மை மிக்க தேசமாக விளங்குகிறது.

ஒரு நாடு தன்னிச்சையாக, தன் மக்களை கட்டுப்படுத்தி பாதுகாக்கும்போது இறையாண்மையைப் பெற்றிருப்பதாக கருதப்படுகிறது. அவ்வாறு செயல்படும்போது, அந்நாட்டின் அதிகாரம் வாய்ந்ததாகவும், சுயசார்புள்ளதாகவும் ஏனைய நாடுகள் அங்கீகரிக்கின்றன. இறையாண்மை என்பது “சூப்பரானஸ்” (superanus) என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியதாகும். இது ஆங்கிலத்தில் மிக உயர்ந்த அல்லது மேலான என்றும் பொருள்படுகிறது.

ரோமானிய நீதிபதிகளும் , மக்களும் இடைக்காலத்தில் இறையாண்மையை “சம்மா பொடெஸ்டாஸ்” (Summa Potestas): என்றும் “ப்ளெனிடீயூட்பொடெஸ்டாஸ்” (Plenitude Potestas) என்றும் வார்த்தைகளை பயன்படுத்தி, அரசின் மேலான தன்மையை பெயரிட்டு அழைத்தனர். அரசியல் அறிவியலில் “இறையாண்மை” என்ற சொல் போடின் என்ற அறிஞர் எழுதி 1576-ல் வெளியான குடியரசு என்ற நூலில் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது. ஒரு நாட்டின் உறுதித்தன்மை, அந்நாட்டின் இறையாண்மையை அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. இறையாண்மை என்ற கருத்தாக்கம் அரசின் மேலான தன்மையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

அரசமைப்பு என்பது அரசு தொடர்பான சட்டங்களையும், விதிகளையும் எடுத்துரைக்கிறது. மேலும் அரசமைப்பு என்பது அரசின் இறையாண்மையை பிரதிநிதித்துவபடுத்துவதாகும். இந்திய அரசமைப்பின் முகவுரையில் கூறப்பட்டதுபோல, இறையாண்மை என்றால், அரசு எந்த துறை சார்ந்த சட்டத்தினை உருவாக்கினாலும் அது அரசமைப்பின் வரையறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

இறையாண்மை என்றால் என்ன?

“இறையாண்மை என்பது ஒட்டுமொத்த, மற்றும் தடையில்லாத அரசின் அதிகாரமாகும். மேலும் அதீத கட்டளைத்தன்மை உடையதாகவும் காணப்படுகிறது”.

இறையாண்மையின் பண்பியல்புகளை பற்றி நாம் படிப்போம் அவைகள் யாவை?

அ) நிரந்தரமானது (Permanence)

இறையாண்மையின் முக்கிய பண்பாக அதன் நிரந்தரத்தன்மை திகழ்கீறது. அரசு இயங்கும் வரை இறையாண்மை நீடிக்கிறது. மன்னர் இறப்பதாலும், அரசாங்கம் செயல் இழந்து போவதாலும் இறையாண்மை பாதிக்கப்படுவதில்லை. இதன் எதிரொலியாகவே, “மன்னர் இறந்துவிட்டார், ஆனாலும் அரசபீடம் நீண்டு வாழ்க” என்று இங்கிலாந்து குடிமக்கள் கூறுகின்றார்கள்.

ஆ) பிரத்தியோகமானது (Exclusiveness)

ஓர் சுதந்திர அரசில், இரண்டு இறையாண்மைகள் இயங்காது, அப்படி இருக்குமேயானால் அரசின் ஒற்றுமையானது சீர்குலைந்துவிடும்.

இ) அனைத்தையும் முழுமையாக உள்ளடக்கியது (All comprehensiveness)

ஒவ்வொரு தனிமனிதனும் மற்றும் தனிமனிதர்கள் அங்கம் வகிக்கக்கூடிய குழுமமும் அரசின் இறையாண்மைக்கு உட்பட்டதாகும். குழுமங்கள் அல்லது சங்கங்கள் அதிக வலிமை வாய்ந்ததாக இருந்தாலும், பணம் படைத்ததாக இயங்கினாலும் இறையாண்மையின் அதிகாரத்தை தடுக்கவோ அல்லது அதற்கு கீழ்படியாமலோ இருக்க முடியாது.

ஈ) மாற்றித்தர இயலாதது (Indalienability)

இறையாண்மை என்பது அரசின் உயிர் மற்றும் ஆன்மாவாக விளங்குகிறது. இது அரசை அழிக்காமல் இறையாண்மையை மாற்றித்தர முடியாததாக விளங்குகிறது.

உ) ஒற்றுமை மற்றும் எக்காலத்திலும் நீடித்திருக்கும் தன்மை (Unity and Everlasting)

இறையாண்மையின் தனித்தன்மை அதன் ஒற்றுமையில் ஒன்றியுள்ளது. இறையாண்மை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் செயல்படுவதில்லை. மாறாக து அரசு இயங்கும் வரை நீடித்திருக்கும் அழியாததன்மை கொண்டதாகும்.

ஊ) பிரிக்க முடியாதது (Indivisibility)

இறையாண்மை என்பது பிரிக்க முடியாத தன்மையைக் கொண்டதாகும். இத்தன்மையே இறையாண்மையின் உயிரோட்டமாக விளங்குகிறது.

எ) முழுத்தன்மை (Absoluteness)

இறையாண்மை என்பது நிபந்தனையற்றதாகவும், அளவிட முடியாததுமாக விளங்கிறது. மேலும் இது கீழ்ப்பணிதலுக்கு அப்பாற்பட்டது. தான் விரும்பிய எதையும் சாதிக்க கூடியதாக விளங்குகிறது.

ஏ) சுயமானத்தன்மை (Originality)

இறையாண்மை தனது அதிகாரத்தினை சுய உரிமையினை மையாகக் கொண்டு பெற்றிருக்கிறதே தவிர, யாருடைய தயவிலும் அல்ல.

இறையாண்மையின் இரண்டு அம்சங்கள் யாவை?

அ) உட்புற இறையாண்மை (Internal Sovereignty)

ஒவ்வொரு சுதந்திர அரசிலும் ஓர் மக்கள் சபையானது கட்டளையிடுவதற்கும், கீழ்பணிதலை செயலாற்றுவதற்குமான முழு சட்ட அதிகாரத்தையும் பெற்று காணப்படுகிறது. இவ்வகையான இறையாண்மை, ஓர் அரசுக்கு உட்பட்டு வாழும் அனைத்து தனிமனிதர்கள் அல்லது அவர்கள் சார்ந்த அனைத்து சங்கங்களையும் கட்டுப்படுத்துவதற்குரிய முழு அதிகாரத்தையும் பெற்றுள்ளது.

  • ஓர் மரமானது தான் முளைவிடுவதை மாற்றித்தர முடியாததைப் போன்று இறையாண்மையையும் மாற்றித்தர இயலாது. இது ஓர் மனிதன் தன்னை அழித்துக் கொள்ளாமல் தனது உயிர் அல்லது ஆளுமையை மாற்றித் தர இயலாததைப் போன்றதாகும்.
  • லைபர் (Lieber)

ஆ) வெளிப்புற இறையாண்மை (External Sovereignty)

எளிமையாக கூறவேண்டுமெனில் வெளிப்புற இறையாண்மை என்பது தேசிய விடுதலையாகும். அனைத்து நாடுகளும் தங்கள் வெளியுறவு கொள்கையை நிர்ணயிப்பதற்கும், அதிகாரம் படைத்த கூட்டணியோடு இணைவதற்கும் முழு அதிகாரம் பெற்று செயல்படுகின்றன. ஒவ்வொரு அரசும் ஏனைய அரசுகளை சாராமல் சுதந்திரமாக இயங்குவது வெளிப்புற இறையாண்மை எனப்படும்.

  • மக்கள் இறையாண்மை எனப்படுவது பெரும்பான்மை வாக்களர்களின் அதிகாரமாகும். மேலும் இவ்வகை அதிகாரமானது, தோராயமாக, உலகளாவிய வாக்குரிமை செயல்படக்கூடிய நாட்டில் வாக்களர்கள் பல்வேறு நிறுவப்பட்ட வழிமுறைகளின் வாயிலாக வெளிப்படுத்தும் விருப்பமாகும்.
  • முனைவர் கார்னர் (Dr. Garner)

இறையாண்மையின் வகைகள்

“நடைமுறை மற்றும் சட்டப்படியான இறையாண்மை”

நடைமுறை இறையாண்மை

(De-facto sovereignty)

சட்டப்படியான இறையாண்மை

(De-jure sovereignty)

இவ்வகை இறையாண்மை சட்ட பூர்வமாக இல்லாது, உண்மையான அதிகாரத்தை பெற்று சட்டத்தை நிறைவேற்றும் இறையாண்மையாகும். இவ்வகை இறையாண்மை உண்மையாக நடைமுறையில் இல்லாது, சட்டபூர்வமாக மட்டுமே காணப்படுவதாகும்.

இறையாண்மையின் வகைகள்

பெயரளவு மற்றும் உண்மையான இறையாண்மை சட்ட இறையாண்மை அரசியல் இறையாண்மை மக்கள் இறையாண்மை
அ) அதிகாலத்தில் பல அரசுகளில் முடியாட்சியே இருந்தது. மன்னர்கள் உண்மையான இறையாண்மையைப் பெற்று ஆண்டு வந்தனர். அரசின் அதிகாரத்துவமானது இறுதிக்கட்டளைகளை வெளியிட சட்டப்படியான அதிகாரம் உண்டு. பிரதிநிதித்துவ மக்களாட்சியில் அரசியல் இறையாண்மை என்பது ஒட்டுமொத்த மக்களையும் குறிப்பதாகும். அதாவது வாக்காளர் முறைமை மற்றும் பொதுக் கருத்தாகும். மக்கள் இறையாண்மை என்பது பொது மக்களை மேலான தன்மையுடையவர்களாக பாவிக்கின்றது.
ஆ) பிரெஞ்சு புரட்சி (1789) முடியாட்சியை முடிவுக்கு கொண்டு வந்த ஒரு வரலாற்று நிகழ்வாகும். இந்த புரட்சி அச்சூழ்நிலையை மாற்றியமைத்தது. சட்ட அதிகாரத்துவம் படைத்தவர்கள் மூலம் சட்டத்தை நிறைவேற்றி செயல்படுத்துவதால் இது சட்ட இறையாண்மை ஆகும். அரசியல் இறையாண்மை என்பது பொது மக்களைக் கட்டுப்படுத்தக் கூடிய அதிகாரம் பெற்ற வர்க்கத்தை குறிப்பதாகும். ஆதிகாலங்களில் மக்கள் இறையாண்மையானது, முடியாட்சியின் ஏதேச்சதிகாரத்தை எதிர்க்கும் ஆயுதமாக விளங்கியது.
இ) மன்னர் பெயரளவிலும், மந்திரிசபை உண்மையான இறையாண்மையையும் பெற்றிருந்தது. சட்ட இறையாண்மை என்பது உறுதியாகவும், ஆற்றக் படைத்ததாகவும் இருப்பதுடன் இறையாண்மையாளரின் அதிகராம் முழுமையாகவும் மேலானதாகவும் விளங்குகிறது.
  • இயக்குனரகமுறை ஆட்சியமைப்பினை தூக்கி எறிந்த பின்னர், நெப்போலியன் உண்மையான நடைமுறை இறையாண்மையை (De-facto) பெற்று விளங்கினார். ஸ்பெயினில், சட்ட இறையாண்மையை வேரோடு கலைத்து, ப்ராங்கோ நடைமுறை இறையாண்மையை (De-facto) கையகப்படுத்தினார். அக்டோபர் 28,1922 –இல் நடந்த கறுப்புச்சட்டை புரட்சிக்குப் பின்னர், முசோலினி சட்டப்பூர்வமான பிரதம அமைச்சராக அதிகாரம் பெற்றார். இவர் நாடாளுமன்றத்தை கைப்பற்றி அதன் மூலம் இத்தாலியை ஆட்சி செய்தார். நாடாளுமன்றம் சட்ட இறையாண்மையையும், முசோலினி நடைமுறை இறையாண்மையையும் (De-facto) பெற்று ஆட்சி அரங்கேறியது. மேலும் ஹிட்லரும், ஜெர்மனியில் இச்செயல்பாட்டையே பின்பற்றினார். இவர் சட்ட இறையாண்மையை கையகப்படுத்தியதுடன் மட்டுமல்லாது, நடைமூறை இறையாண்மையைப் (De-facto) பெற்று ஆட்சி செய்தார். மூன்று தசாப்தங்களாக ஸ்டாலின் ஐக்கிய சோவியத் சமதர்மக் குடியரசின், உண்மையான இறையாண்மையை பெற்று ஆட்சி செய்தார். பாகிஸ்தானில், , ‘ஐயூப்’ , ராணுவத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்து (De-facto) நடைமுறை இறையாண்மையை பெற்றார்.
  • 1977 -இல் ஜியா-உல்-ஹக், பூட்டோவின் ஆட்சியைக் கவிழ்த்து நடைமுறை இறையாண்மையை (De-facto) முதலிலும் , பின்னர் சட்டப்படியான இறையாண்மையையும் (De-jure) பெற்று ஆட்சி செய்தார். சோவியத் நாட்டில் பொதுவுடைமை அரசாங்கத்தின் மூலம் நடைமுறை அரசாங்கம் (De-facto) போல்ஷிவிக் புரட்சிக்கு பின்னர் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. 1917-ஆம் ஆண்டு போல்ஷிவிக் புரட்சிக்குப் பிறகு நாளடைவில் மாற்றம் அடைந்து சட்டப்படியான அரசாங்கமாக (De-jure) ஆனது.

பன்மைவாதம் என்றால் என்ன?

  • பன்மைவாதம் என்பது ஒருமைவாத இறையாண்மைக் கோட்பாட்டை எதிர்த்து உருவான வலிமை வாய்ந்த இயக்கமாகும். இவ்வகை இறையாண்மை அரசினுடைய மேலான மற்றும் அளவில்லாத அதிகாரத்திற்கு வகை செய்கின்றது.
  • ஓட்டோ வீ.கீரிக் (Otto V.Gierke) அவர்களின் படைப்புகளின் மூலமாக பன்மைவாத கோட்பாடு பிரபலமடைந்தது. சமூகம் அரசைப்போல பல கூட்டமைப்புகளை பெற்று விளங்குகிறது.
  • அரசு என்பது சமூகத்தின் பல்வேறு கூட்டமைப்புகளில் ஒன்றாகும். அரசு இறையாண்மையை குறிப்பிட்ட சமுதாயத்திற்கென வகை செய்ய முடியாது. இதன் வெளிப்பாடாக, அரசிற்கு இறையாண்மை அதிகாரம் இயல்பாகவே இல்லாமல் காணப்படுகிறது, என்று பன்மைவாதத்தினர் சவால்விடுகின்றனர்.
  • அரசிற்கு முன்னரே , பல சமூக, அரசியல், பண்பாடு மற்றும் பொருளாதாரம் சார்ந்த அமைப்புகள், சமுதாயத்தில் அங்கம் வகித்து இருக்கின்றன. உதாரணத்திற்கு குடும்பம் மற்றும் தேவாலயங்கள் அரசு தோன்றுவதற்கு முன்பே செயல்பட்டு வந்தன.

பன்மைவாதக் கோட்பாட்டின் சிந்தனையாளர்கள்

  • ஹெரால்ட் ஜெ.லாஸ்கி (Herold J.Laski)
  • ஜெ.என்.பிக்கீஸ் (J.N.Figgis)
  • எர்னஸ்ட் பார்க்கர் (Ernest Barker)
  • ஜி.டி.ஹெச்.கோல்(G.D.H.Cole)
  • மேக் ஐவர் (Mac Iver)

பன்மைவாதக் கோட்பாடு

ஒரு அரசின் தன்மை என்பது பல்வேறு குழுக்களிடையே உருவாகும் முரண்பாடுகள் மற்றும் சச்சரவுகள் போன்றவற்றை அவைகளின் நலனை சிறப்பாக பாதுகாப்பதன் அடிப்படையிலேயே தீர்த்து வைப்பதாகும்.

பன்மைவாதக் கோட்பாட்டின் தோற்றம்

  • மக்களாட்சியில் ஆட்சியாளர்களின் அதிகாரம் வரையறைக்கு உட்பட்டது ஆகும். அமைச்சரவை அதிகாரம் வாய்ந்ததாக செயல்பட்டாலும், அர்ரே மேலானதாகவும், இறையாண்மை மிக்கதாகவும் விளங்குகிறது.
  • மக்கள் நலஅரசுகளின் தோற்றத்திற்குப் பிறகு, அரசின் செயல்பாடுகள் தனி மனிதர்களின் வாழ்வில் அனைத்து பரிமாணங்களிலும் வியாபித்து இருக்கிறது.
  • இவ்வாறான மக்கள் நல அரசானது, மக்களின் தேவைகளை நிறைவேற்றாத போத்ய், புரட்சிகளையும் எதிர்நடவடிக்கைகளையும் சந்தித்து இருக்கிறது. இப்படிப்பட்ட எதிர்வினை என்பது மேலான மற்றும் இறையாண்மை மிக்க அரசுக்கு எதிராகத் தோன்றியதால் புரட்சி ஏற்பட்டு அதன் விளைவாகப் பன்மைவாதம் மலர்ந்தது.

ஜான்ஆஸ்டினின் இறையாண்மை கோட்பாடு

கோட்பாட்டின் மறு பெயர்கள்

  • முழுமை இறையாண்மை கோட்பாடு
  • ஒருமைவாத இறையாண்மை கோட்பாடு
  • பன்மைத்துவமில்லாத கோட்பாடு
  • ஒற்றைக்கோட்பாடு

பன்மைவாதம் முக்கியமானதா?

  • பன்மைவாதம் என்பது, கூட்டமைப்புகளின் முக்கியத்துவத்தையும், அதன் சுயாட்சி கோரிக்கையையும் தாங்கி நிற்கிறது.
  • மக்களாட்சி மலர வேண்டுமெனில், இறையாண்மை மிக்க அரசானது சட்ட அதிகாரத்துவத்திற்கு கட்டுப்படாததாக இருத்தல் அவசியமாகும்.
  • இறையாண்மையில் ஏற்படும் பிரிவினைகள் என்பது அதன் அழிவுக்கு வழிவகுப்பது உறுதியாகிறது. இறையாண்மை இல்லாத தருணத்தில் சமுதாயத்தில் அமைப்பெதிர்வாத சூழலே இருக்கும்.

பன்மைவாதத்தின் மீத குற்றச்சாட்டுகள் யாவை?

  • இறையாண்மை மிக்க அரசு ஒற்றுமையை ஏற்படுத்தி, சமுதாயத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்து கூட்டமைப்புகளையும் ஒன்றுபடுத்தி ஒழுங்குமுறைப்படுத்துகிறது.
  • பன்மைவாத நம்பிக்கைக்கு ஒவ்வாததாக அரசே சட்டங்களை இயற்றுகிறது.
  • கூட்டமைப்புகளின் எண்ணிக்கை மிகுதியாக அதிகரிக்கும் பட்சத்தில், மக்களை பாதுகாப்பதற்கு அரசின் தேவை இன்றியமையாததாகிறது.

இந்திய அரசமைப்பு மற்றும் இறையாண்மை

இந்திய அரசமைப்பின் முகவுரையின் படி இந்தியா ஒரு “இறையாண்மை, சமதர்மம் , மதச்சார்பின்மை, மக்களாட்சிக் குடியரசாக” திகழ்கிறது. ஆனால் இதுவே இறையாண்மையின் விளக்கம் அல்லது விரிவான பொருள் விளக்கம் ஆகாது. இறையாண்மை தொடர்பான விளக்கங்கள், பல்வேறு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில் காணப்படுகிறது. உதாரணத்திற்கு கோபாலன் Vs மதராஸ் அரசு (1950), மற்றும் இந்திய யூனியன் Vs மதனகோபால் (1954), வழக்குகளில் தீர்ப்பானது பின்வருமாறு கூறப்பட்டு உள்ளது.

“அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் , குறிப்பிட்டுள்ளபடி “இந்திய மக்களகைய நாங்கள் ஏற்றுக்கொண்ட இறுதியான இறையாண்மை மக்களிடமே உள்ளதுடன் அரசமைப்பும் மக்களுக்கானதாகும்” என கூறியது. மேலும் சிந்தெடிக்ஸ் Vs உத்திரப்பிரதேச அரசு (1990) வழக்கில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இறையாண்மையின் பொருள் என்பது , “அரசிற்கு எந்த பட்டியலில் வேண்டுமென்றாலும் சட்டம் இயற்றக்கூடிய அதிகாரம் இருப்பதாகவும், ஆனால் அரசமைப்பின் வரையரைக்கு உட்பட்டே இது அமையும்” என் கூறியுள்ளது.

இதுபோல, இந்திராகாந்தி Vs ராஜ்நாராயணன் (1975) வழக்கில் , “இந்தியா என்பது, இறையாண்மை பொருந்திய, மக்களாட்சிக் குடியரசு என்றும், இதுவே அடிப்படைக் கூறாக அரசமைப்பின்படி காணப்படுகிறது” என்றும் கூறியுள்ளது. மேற்கூறியவற்றின் மூலம், இந்திய அரசமைப்பின்படி இறையாண்மை என்பது அரசமைப்பின் முக்கிய அம்சமாக விளங்குவதுடன் முகப்புரையின் மூலமாக மக்களே இறையாண்மை மிக்கவர்கள் என்பது தெரியவருகிறது.

சுருங்கக்கூறின், இறையாண்மை என்பது அரசமைப்பைச் சார்ந்துள்ளது. மக்களே அத்தைக அரசமைப்பின் இறுதி ஆதாரமாக விளங்குகின்றனர்.

  • பன்மைவாதத்தின் அருமைகளை ஜெர்மன் நீதிபதியான வான் கிரிய்க்கின் (Von Gierke) 1844 – 1921 காலத்திற்குட்பட்ட படைப்புகளில் காணலாம்.
  • ஆர்.என். கில்கிரிஸ்ட் (R.N.Gilchrist)

அறிமுகம்

சமத்துவத்தினை புரிந்து கொள்ளுதல்

  • மனிதர்கள் அனைவரும் சமம் என்ற கருத்து இன்று வரை புரியாத புதிராகவே விளங்குகிறது. சமத்திவத்தை விரும்புகின்ற நாடானது சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு சட்டங்களை உருவாக்குகிறது.
  • வளர்ந்த நாடானாலும், வளர்ச்சிக்குன்றிய நாடானாலும், சமத்துவம் தொடர்பான சட்டம் போதுமானதாக இல்லை. பன்மைத்துவ சமுதாயம் நிலைநாட்டப்பட்டுவிட்டதால் சமத்துவ சட்டம் அதிகமாக எதிர்க்கப்படுகிறது. அரசியல் கோட்பாட்டில் அமைந்துள்ள சுதந்திரம் மற்றும் உரிமைகள் என்ற கொள்கைகள் சமத்துவம் என்ற மூன்றாவது கொள்கை அமைவதற்கு கரணமாக உள்ளன.
  • உரிமைகள் என்பவை குடிமக்களுக்கும், மக்கள் குழுமங்களுக்கும் அரசால் விநியோகம் செய்யப்படுவதை சமத்துவ கொள்கையே நிர்ணயிக்கப்படுகிறது.
  • ஒரு நாட்டின் மக்களுக்கு உரிமைகள் சரிசமமாக வழங்கப்பட்டாலும், அல்லது ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், அதனை நிர்ணயிக்கும் காரணியாக சமத்துவமே செயல்படுகிறது.
  • எந்த அடிப்படையில் அரசு அல்லது பொது அதிகாரத்துவம் குடிமக்களையும் , தனிமனிதர்களையும், மக்கள் குழுமங்களையும் வெவ்வேறு விதமாக நடத்துகிறது? சமத்துவத்தைப் பற்றி அலசுகிற போது, வெவ்வேறு கால கட்டங்களில் வேறுபட்ட புரிதல் இருந்திருக்கிறது. சுதந்திரத்துவத்தின் பார்வையில், பொருளாதார சமத்துவத்தைவிட, சட்ட மற்றும் அரசியல் சமத்துவம் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன.
  • அதுவே சமதர்ம மற்றும் மார்க்சிய கொள்கை கட்டமைப்பிலான பார்வையில் அணுகுகிறபோது பொருளாதார சுதந்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. பெண்ணியவாதிக்கு பாலின சமத்துவமும், சாதி அடிப்படையிலான இந்திய சமுதாயத்தில் சமூக சமத்துவமும் முக்கியத்துவம் பெறுகின்றன.

சமத்துவம் என்பதன் பொருள்

  • சமத்துவம் என்பது “இக்குவாலிஸ்” (aequalis) என்ற வார்த்தையிலிருந்து உருவானதாகும். இது “நியாயமான” என்று பொருள்படுகிறது. ஒரே மாதிரியான உரிமைகள், சலுகைகள், நிலைகள், வாய்ப்புகள் மற்றும் நடத்தப்படும் முறைகள் போன்றவை, சமூகத்தில் மக்களுக்கு சமமான உரிமையுடன் கிடைத்தல் ஆகியவை சமத்துவத்தை குறிப்பதாகும்.
  • மேலும் சமத்துவம் பங்கீட்டு கொள்கையாக பாவிக்கப்பட்டு உரிமைகள், வாய்ப்புகள், நடத்தும் முறைகள் ஆகியவை பயனாளிகளுக்கு நியாயமான முறையில் வழங்கப்படுதலைக் குறிக்கிறது.
  • மேலும் பங்கீட்டுக் கொள்கை என்பது, அனைவரையும், அனைத்து சூழ்நிலைகளிலும் ஒரே மாதிரியாக நடத்துவதல்ல, மாறாக சமமாக இல்லாதவர்களை சமமற்ற வகையில் நடத்துதலும் சமத்துவ கொள்கையில் ஒரு அம்சமாகும்.
  • ஆகவே சமத்துவம் என்பது சம நீதியை அடிப்படையாக கொண்டதாகவும் விளங்குகிறது. எனவே, சமமானவர்களை சமமற்றவர்களாக நடத்துவதும், சமமற்றவர்களை சமமாக நடத்துவதும் தவறானதாகும். ஆகவே இது பங்கீட்டு கொள்கையைச் சார்ந்த நீதியை உண்மையில் சார்ந்துள்ளது. ஆனால் சமமானவர்களை சமமற்றவர்களாகவோ, சமமில்லாதவர்களை சமமாகவோ நடத்துவதும் கூடாது.

சமத்துவத்தின் முக்கியத்துவம்

ஏன் சமத்துவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது?

  • பல நூற்றாண்டுகளாக உலக சமுதாயத்தை வழி நடத்திய , அதிமுக்கியமான நன்னெறி மற்றும் அரசியல் நல்லியல்பு கொள்கை சமத்துவமாகும். அனைத்து மதங்களும், பிற நம்பிக்கைகளும், கூறுவது என்னவெனில் மனிதர்கள் அனைவருமே இறைவனால் படைக்கப்பட்டவர்களே என்று கூறுகிறது.
  • இதைப்போலவே சமத்துவ கொள்கையானது, மனிதர்களை, நிறம், பாலினம், இனம், தேசம் போன்றவைகளின் பாகுபாடு காட்டாமல் சமமான மதிப்புடன் நடத்தும் அரசியக் கட்சியமாக சமத்துவம் விளங்குகிரது.
  • மனித நேயம் எவ்வாறு பொதுவானதோ, அதே போன்று சகமனிதர்களை மரியாதையுடனும், மனிதாபிமானத்துடனும் நடத்த வேண்டியது அவசியம் என சுதந்திரம் வலியுறுத்துகிறது. இம்மனிதநேய நம்பிக்கையே அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் உருவாக காரணமாக அமைந்தது.
  • சமூக அமைப்புகளையும், அரசுகளையும் எதிர்த்துப் போராட சமத்துவ முழக்கம் மிகவும் உதவிகரமாய் இருந்தது. ஏனெனில் நவீனயுகத்தில் பணி , செல்வவளம், நிலை மற்றும் சலுகை அடிப்படையில் தற்பொழுதும் பிரிவினை இருக்கத்தான் செய்கிறது.
  • 18-ஆம் நூற்றாண்டில் நிலப்பிரபுத்துவ ஆட்சியையும், முடியாட்சியையும் எதிர்த்து, “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற முழக்கத்தை பிரெஞ்சு புரட்சியாளர்கள் ஓங்கி முழங்கினர்.
  • 20-ஆம் நூற்றாண்டில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில், சமத்துவ கொள்கையை நிலைநாட்டக் காலனியாதிக்கத்திற்கு எதிராக புரட்சி நிகழ்த்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மேற்கூறிய சமுதாயங்களில் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டவர்களும், பெண்களும் தங்களின் சமத்துவத்திற்காக புரட்சியை மேற்கொண்டனர்.
  • சமத்துவம் என்பது தற்பொழுது உலகெங்கிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மாபெரும் லட்சியவாதமாக உலக அளவில் சட்டங்களிலும், அரசமைப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
  • இவ்வாறான புரட்சிகளும், எழுச்சிகளும் ஆங்காங்கே எழுதபோதிலும் சமத்துவமின்மை என்பது உலக சமுதாயத்தில் தற்பொழுதும் உள்ளது என்பதே வெளிப்படையான உண்மை ஆகும்.
  • அனைத்து நாடுகளிலும் வீடு மற்றும் வசதிமிக்க வாழ்க்கைக்கு நடுவே சரிவர பராமரிக்கப்படாத கழிவறைகளும், குடிநீரற்ற நிலையும் கொண்ட பள்ளிகள் உள்ளன.
  • உணவை வீணடிக்கும் சிலரும், பசிக்கொடுமையால் வாடும் நிலரும் இருக்கின்ர நிலை பலவித சங்கடங்களை அளிக்கிறது. சட்டப்படியான உத்திரவாதங்களுக்கும் , நடைமுறையிக் நாம் பார்ப்பவற்றிக்கும் இடையே நிறைய வேறுபாடுகளைக் காணலாம்.
  • இந்தியா, தன் அரசமைப்பின் மூலமாக பணக்காரவர்க்கத்திற்கும் , எழை வர்க்கத்திற்கும் இடையேயான இடைவெளியினை குறைப்பதற்கு இயன்ற வரையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பங்கீட்டு நீதி (Distributibe Justice) என்றால் என்ன?

பங்கீட்டு நீதிக்கு சமத்துவக் கொள்கை தேவையாகிறது. அதாவது சமத்துவமான சமூகத்தை நிலை நிறுத்துவதற்கு, சமத்துவமற்ற பங்கீடு செய்தல் அவசியம் என்பதை உறுதிப்படுத்துவதுதான் பங்கீட்டு நீதி ஆகும். உதாரணத்திற்கு, வரிவிதிப்பு விகிதமானது பணக்கார வர்க்கத்திற்கும் , ஏழை வர்க்கத்திற்கும் வேறுபட்டு இருத்தல் வேண்டும். இதுபோலவே பொது வேலை வாய்ப்புகளில் நுழைவதற்கான வரன்முறைகளில் இயல்பானவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் மாறுபட்ட கொள்கை அவசியம் என்பதும் பங்கீட்டு நீதியே ஆகும்.

  • பூமி என்பது அனைவருக்கும் தாய், இதில் வாழும் அனைத்து மக்களுக்கும் அதனிடம் சம உரிமைகள் வெறுவதற்கு உரிமை உண்டு”.
  • சீஃப் ஜோசப் (Chief Joseph)

சமத்துவத்தின் பரிமாணங்கள்

சமத்துவம் என்றால் என்ன?

  • மனித வாழ்க்கையானது பல்வேறு வேற்றுமைகளுக்கிடிஅயில் அமைந்துள்ளது. மனிதர்களுக்கிடையே நிறம், இனம் போன்ற வேற்றுமைகள் இருப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
  • மனசாட்சியின் அடிப்படையில் தவறானது என தெரிந்தபோதிலும், சக மனிதர்களிடையே மரியாதையும், அங்கீகாரமும் மறுக்கப்படுவது வேதனைக்குரிய நிகழ்வு ஆகும்.
  • எந்த ஒரு சமுதாயமும் அனைத்து மக்களையும் சரிசமமாக நடத்துவது இல்லை. மனிதர்களுக்கிடையேயான தேவைகள், திறமைகள் மாறுபடுகின்ற பொழுது அனைத்து மக்களையும் சரிசமமாக பார்ப்பதும், பாவிப்பதும் இயலாததாகக் கருதப்படுகிறது.
  • சமமாக உள்ளவர்கள் சமமில்லாமல் நடத்தப்படுவதும், சமமில்லாதவர்களை சமமாக நடத்துவதும், அநீதிக்கு வழி வகுக்கின்றன. இயற்கை அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பாற்பட்டு சமூக ரீதியான பிறப்பு, செல்வவளம், அறிவு, மதம் போன்றவைகளில் சமத்துவமின்மை காணப்படுகிறது.
  • எவ்வித வரலாற்றின் இயக்கமும், சமத்துவத்தை நோக்கி செல்வது இல்லை. ஏனெனில் ஓர் ஏற்றத்தாழ்வு நிலையை சரிசெய்கின்றபோது மற்றொரு ஏற்றத்தாழ்வு நிலை உருவாகுகிற சூழ்நிலை நிலவுகிறது.
  • இதன் விளைவாக அறிப்படுவது என்னவென்றால், அழிக்கப்படுகின்ற ஏற்றத்தாழ்வுநிலை நியாயமற்றதாகவும், புதியதாக உருவாக்கப்படுகின்ற நிலை நியாயமானதாகவும் கருதப்படுகிறது. இதனால் அரசியல், சமூக மற்றும் கல்வி சமத்துவத்தை வலுப்படுத்தவும் ஒருமுகப்படுத்தவும், புதிய தலைமுறை கடமைப்பட்டிருக்கிறது.
  • சுதந்திரத்தைபோன்று, சமத்துவ கொள்கையும் நேர்மறை மற்றும் எதிர்மறை கோணங்களையும் பெற்று விளங்கிறது. எதிர்மறை சமத்துவம் என்பது யாருக்கும் எந்தவித சலுகைகளும் காட்டாத சமூக நிலையையும், நேர்மறை சமத்துவம் என்பது அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் உள்ள சமூக நிலையையும் பற்றியதாகும்.

லாஸ்கியின் (Laski) கூற்றுப்படி சமத்துவத்தின் விளக்கம்

  • இது சலுகைகள் இல்லாத நிலையாகும். இது சமுதாயத்தில் வாழும் ஒருவருடைய விருப்பமானது வேறொருவருடைய விருப்பதற்கு சமமாக கருதப்படுகின்ர சூழ்நிலை ஆகும். சமுதாயத்தில் வாழும் அனைவருக்கும் உரிமைகள் சமமானதாக வழங்கப்படும். இதுவே சமத்துவ உரிமை ஆகும்.
  • போதுமான வாய்ப்புகள் அனைத்து மக்களுக்கும் வழங்கப்படுதல். ஒவ்வொரு தனிமனிதனும் தன் ஆளுமைத்தன்மையை உணருவதற்கு வாய்ப்பான சூழ்நிலைகளை உருவாக்கித்தருதல்.
  • சமூகத்தின் பலன்கள் அனைவருக்கும் சமமான அளவில் அளவில் கிடைக்கும்படியாகவும், எந்தவொரு அடிப்படையிலும் யாரையும் இதனை அடையவிடாமல் தடுக்கக்கூடாது. ஒரு மனிதனின் பிறப்பினைஅடிப்படையாகக் கொண்ட ஏற்றத்தாழ்வுகள், ஆகியவை பாரம்பரியம் மற்றும் மரபுவழி காரணங்களின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் அர்த்தமற்றவையாகும்.
  • பொருளாதார மற்றும் சமூக சுரண்டல் இல்லாத சமுதாயமாக விளங்குதல்.
  • பெருமளவில் இருக்கக்கூடிய ஏழை வர்க்கமும், சிறியளவில் வாழும் பணக்காரவர்க்கமும் உள்ள அரசில், அரசாங்கத்தின் செயல்பாடுகள் பணக்கார வர்க்கத்தின் உடைமைகளை பாதுகாக்கும் பொருட்டே அமையும்.
  • ஹெரால்ட் லாஸ்கி (Herold Laski)

பார்க்கரின் கூற்றுப்படி சமத்துவத்தின் கருத்தாக்கம்

  • அனைவருக்கும் அடிப்படை சமத்துவம்
  • சமமான வாய்ப்புகள்
  • வாழ்வுக்கான சமதளத்தை உருவாக்கும் சமத்துவ நிலைகள்
  • விளைப்பயன்களில் சமத்துவத்தினை ஏற்படுத்துதல்

வாய்ப்புகளில் சமத்துவம்

  • சமத்துவம் என்பது அனைத்து மக்களுக்கும் சம உரிமைகளையும், வாய்ப்புகளையும் அளித்து அவர்களின் இலக்குகள் மற்றும் இலட்சியங்களை அடைவதற்குண்டான திறமைகளையும், திறன்களையும் வளர்ப்பது ஆகும்.
  • எனினும் மக்களின் நிலைமை, செல்வவளம் அல்லது சலுகைகளில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன என்றாலும், நடப்பு சமூகத்தில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை தேவைகளான கல்வி, சுகாதாரம், பாதுகாப்பான வீடுகள் போன்றவைகளில் ஏற்றத்தாழ்வுகள் உண்டாகி, அதன் விளைவாக நியாயமற்ற, சமமில்லாத மற்றும் அநீதியான சமுதாயம் உருவக்கியுள்ளது என்பதே மிகவும் முக்கியமானதாகும்.

இயற்கை சமத்துவமுன்மை மற்றும் சமூக சமத்துவமின்மை

  • இயற்கை சமத்துவமின்மை என்பது மக்களுக்கு இடையேயான திறன் மற்றும் திறமைகளுக்கு இடையேயான வேறுபாட்டினால் உருவாகிறது. இது போன்ற சமூக சமத்துவமின்மையானது, மக்களுக்கு வழங்கப்படும் சமமில்லாத வாய்ப்புகள் மற்றும் சில சமுதாயக் குழுக்களினுடைய சுரண்டலின் மூலமாக உண்டாக்கப்படுகிறது. இயற்கை சமத்துவமின்மை என்பது பிறப்பிலிருந்து உருவாகின்ற பல இயல்புகள் மற்றும் திறமைகளின் வெளிப்பாடாகும்.
  • ஆனால் சமூக சமத்துவமின்மை என்பது சமுதாயத்தினால் சமமற்றமுறையில் நடத்தப்படுவதால் உண்டாக்கப்படுகின்ற நிலையைக் குறிக்கின்றது. மேலும் இவ்வகை சமத்துவமின்மை என்பது இனம், ஜாதி, மதம், பாலினம், நிறம் போன்றவற்றின் அடிப்படையில் சமுதாயத்தில் மக்களை வேற்றுமைப்படுத்தி நடத்துவதால் உருவாகிறது.
  • பல நூற்றாண்டுகளாக பெண்களுக்கான சம உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அதேபோல. அடிமைத்தனம் பற்றிய எதிர்க்கேள்வி கேட்கப்படும்வரை, கறுப்பின மக்கள், அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். மேலும் பிறப்பிலேயே உடல் ஊனமுற்றோராக பிறந்த சிலர் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவி கொண்டு இயல்பான மக்களுக்கு சமமாக சமூகத்திற்கு தங்களின் பங்களிப்பினைச் செய்கின்றனர்.
  • சமீபத்தில் மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங்ஸின் இயற்பியல் கல்விக்கான பங்களிப்பு, அவருடைய உடல் ஊனத்தையும் தாண்டிய குறிப்பிடத்தகுந்த பங்களிப்பாகும். அரசியல் தத்துவஞானிகள் பலர் தங்களின் கோட்பாடுகள், தத்துவங்கள் மற்றும் சித்தாந்தங்கள் மூலமாக சமமான மற்றும் நியாயமான சமூகத்தினை உருவாக்கும் வழிமுறைகள் பற்றி எழுதியுள்ளனர்.

சமத்துவத்தின் வகைகள் (Types of Equality)

சமத்துவத்தின் பல்வேறு வகைகள் யாவை?

குடிமை சமத்துவம்

  • மதம், மற்றும் நம்பிக்கைகள் போன்றவற்றின் அடிப்படையில் பாகுபாடு இல்லாதிருத்தல்.

அரசியல் சமத்துவம்

  • அதிகாரத்துவத்தை அணுகுவதற்கான வாய்ப்பு
  • வாக்குரிமை

சமூக சமத்துவம்

  • சமமான வாய்ப்புகள்
  • சலுகைகள்

இயற்கை சமத்துவம்

  • இயற்கை உரிமைகள்

பொருளாதார சமத்துவம்

  • செல்வ வளம்

பொருளாதார சமத்துவமின்மையும், அரபு நாடுகளில் எழுச்சியும்

அடிப்படைப் பிரச்சினைகளான நோய், பசி, தாக்கம் போன்றவை தொடர்ந்து, காரணங்களாகவும், விளைவுகளாகவும் விளங்குகின்றன. வறுமைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இவையாவும் ஒன்றோடொன்று தொடர்புடையது. உதாரனத்திற்கு பாதுகாப்பில்லாத சுத்தமற்ற நீர் மோசமான சுகாதாரமற்ற சூழலை உருவாகிறது. இம்மோசமான சூழல், நோயை உண்டாக்கி அதன் விளைவாக பணி செய்ய இயலாமல், வறுமைக்கும், நிரந்தர பசிக்கும் வழி வகுக்கின்றன.

ஒரு நாட்டின் நிலைத்தன்மைக்கு வறுமை என்னும் பிரச்சனை அச்சுறுத்தலாக இருக்கிறது. உதாரணத்திற்கு துனீஷியாவில் நடைபெற்ற ‘மல்லிகைப்’ புரட்சியில் ஆச்சரியப்படும் விதமாக, அந்நாட்டு மக்கள் ஏதேசசதிகார ஆட்சியை எதிர்த்தது அரபு உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 29 நாட்கள் நடந்த புரட்சியில், அந்நாட்டில் 23 வருடங்கள் ஆட்சி செய்த ‘பென் அலி’ என்பவரின் சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. முஹமத் புவாஸ்லி என்ற வேலைவாய்ப்பு கிடைக்காத மனிதரை காவலர்கள் துன்புறுத்தியதால் அவர் டிசம்பர் 17,2010-ஆம் நாள், சிடி புஸித் என்ற துனீஷிய நகரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது ஒட்டுமொத்த புரட்சிக்கு வித்திட்டது. மக்கள் இதன் விளைவாக “மல்லிகைப் புரட்சியை” தொடங்கினார்கள். (மல்லிகை, துனிஷியாவின் தேசிய மலராகும்). பொருளாதார வாய்ப்பில்லாமை மற்றும் தொடர்ச்சியான காவலர் துன்புறுத்தலிலும் சிக்கித் தவித்த, அந்நகரத்து மக்கள், “ஒரு கையில் அலைபேசியையும், மற்றொன்றில் பாறையையும்” கொண்டு புரட்சியை மேற்கொண்டனர்.

கோபம், விரக்தி, இணக்கமற்ற சூழ்நிலை மற்றும் மக்களாட்சி கோரிக்கைக்கான ஒன்றிணைந்த இந்த அலையானது அரபு நாடுகள் அத்தனையையுமே உலுக்கியது. அரபு உலகத்தில் எழுந்த இந்த கிளர்ச்சிப் போராட்டம் மக்களாட்சிக்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையே நடந்த போராட்டம் மட்டுமல்ல. மாறாக இப்புரட்சியானது நியாயமற்ற பொருளாதார முறைமையை எதிர்த்து உண்டான மாபெரும் எதிர்ப்புப் புரட்சியாக அமைந்தது.

அ) சமூக சமத்துவம்

  • சமூக சமத்துவம் என்பது பிறப்பு, சாதி, மதம், இனம், நிறம், பாலினம் மற்றும் சமூக நிலை போன்றவைகளை அடிப்படையாக கொண்டு உரிமைகள், சலுகைகள் மற்றும் வாய்ப்புகளை வழங்குதல், பாகுபாடில்லாத சமூக அமைப்பு போன்றவை ஆகும்.
  • ஒவ்வொருவருக்கும் , தங்கள் ஆளுமைகளை மேம்படுத்துவதற்கு சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். சமூக சமத்துவம் என்பது சில முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. அவை, சமூக நிலையை அடிப்படையாக கொண்ட பாகுபாட்டினை நீக்குதல், சிலருக்கு மட்டுமே உரித்தான சிறப்புச் சலுகைகளை நீக்குதல் மற்றும் அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது ஆகியவை ஆகும்.
  • வரலாற்றைப் பார்க்கும்போது, உலகம் முழுவதும் சில வகையான சமூக ஏற்றத்தாழ்வுகள் எதிர்க்கப்பட்டுவந்துள்ளதும் சமூக சமத்துவத்திற்கான கோரிக்கைகள் எழுத்துள்ளதும் தெரிய வருகிறது.
  • தென்னாப்பிரிக்கா, மேற்கு ஆசியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்த அடிமைத்தனம், இந்தியாவின் உள்ள தீண்டாமை, அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு எதிரான இன வேற்றுமை, யூதர்களுக்கு எதிரான ஹிட்லரின் கொள்கை, சமத்துவமின்மை போன்றவற்றை, அரசாங்க கொள்கைகளின் மூலமாக சில நாடுகளில் முடிவுக்குக் கொண்டு வர முயற்சிகள் தொடர்கின்றன.
  • அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங்கின் குடிமை உரிமைகள் இயக்கம் மற்றும் இந்தியாவில் அம்பேத்கரின் தாழ்த்தப்பட்டோருக்கான சமூக சமத்துவ போராட்டங்கள் போன்றவை உலக வரலாற்றில் சமூக சமத்துவம் சரந்த இயக்கங்களுக்கு சிறந்த உதாரணங்களாகின்றன. “அனைத்து மக்களும் சமமாக படைக்கப்பட்டிருக்கிறார்கள்” என்கிறது அமெரிக்க சுதந்திரப் பிரகடனம்.
  • பிரான்சு நாட்டின் “மனிதர்கள் மற்றும் குடிமக்களின் உரிமைப் பிரகடனம்” குறிப்பிடுகைடில், “மனிதர்கள் சுதந்திரமாக பிறந்த உடன் எப்பொழுதும் சுதந்திரமான மற்றும் சமமான உரிமைகளை பெற்றிருக்கிறார்கள்” என்று கூறுகிறது.
  • 1948, டிசம்பர் 10-ஆம் நாளன்று வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் அச்சபையின் மனித உரிமைகள் பிரகடனம் உலகமக்களின் சமூக சம்த்துவத்தை உறுதி செய்துள்ளது. ஆனாலும் சர்வதேச பொது மன்னிப்பு சபையின் அறிக்கையின்படி, மேற்கூறப்பட்ட உரிமைகள் அனைத்தும் பல நாடுகளில் மீறப்படுவதாகவும், சமூக ஏற்றத்தாழ்வுகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க உலகம் முழுவதும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.
  • அகிம்சை அடிப்படையிலான அமெரிக்க குடிமை உரிமைகள் இயக்கத்தின் ஈடுஇணையற்ற தலைவரால மார்ட்டின் லூதர்கிங் ஜீனியர் கருதப்படுகிறார். 1950 மற்றும் 1960-களில் சமூக நீதிக்காக கறுப்பினத்தவர்கள், அமெரிக்காவில் ஏற்படுத்திய சம உரிமைகளைப் பெறுவதற்கான புரட்சியே குடிமை உரிமைகள் இயக்கமாகும். இந்தியாவில் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் துவங்கிய கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கான இயக்கமானது வரலாற்று சிறப்புமிக்கதாக இந்தியாவில் கருதப்படுகிறது. மேலும் இவ்வியக்கம் சமூக சமத்துவத்திற்கான விதையாகும்.

ஆ) குடிமை சமத்துவம்

சிவில் என்கின்ற வார்த்தை சிவில்ஸ் (Civils) அல்லது சிவிஸ் ( Civis) என்ற லத்தீன் மொழிச்சொல்லிலிருந்து உருவாக்கப்பட்டு ஆங்கிலத்தில் “குடிமக்கள்” எனப்பெயர் பெறுகிறது. குடிமை சமத்துவம் எனப்படுவது சமமான குடிமையுரிமைகளும், பிற சுதந்திரங்களும் ஒரு குடிமகனுக்குத் தரப்படுவதாகும். குடிமை சமத்துவம் என்பது அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான குடிமை சுதந்திரங்கள் மற்றும் குடிமை உரிமைகளை உள்ளடக்கியதாகும்.

இ) அரசியல் சமத்துவம்

அரசின் நடவடிக்கைகளில் பங்குபெறுவதற்கு எத்தகைய பாகுபாடுமின்றி அனைத்து மக்களுக்கும் அளிக்கப்படும் சமமான உரிமைகள் அரசியல் சமத்துவம் எனப்படுகிறது. வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்பதன் மூலம் இந்த அரசியல் உரிமை உறுதி செய்யப்படுகிறது.

குடிமக்களின் அரசியல் உரிமைகளை உறுதி செய்யும் பிற காரணிகள்

  • வாக்குரிமை
  • தேர்தலில் போட்டியிடும் உரிமை
  • அரசாங்கப்பதவிகளை வகிப்பதற்கான உரிமை.
  • அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக மனு செய்தல் மற்றும் பொது கொள்கைகள் மீதான விமர்சனம் செய்யும் உரிமைகள்.

அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான அரசியல் உரிமைகள் அனுபவிப்பதற்கான வாய்ப்புகள் அரசியல் சமத்துவத்தினால் அளிக்கப்படுகின்றன. வயது வந்தோர் வாக்குரிமை என்பது அரசியல் சமத்துவத்தை அடையும் வழியாகக் கருதப்படுகிறது. அரசியல் சமத்துவம் என்பது உண்மையில் மக்களாட்சி பரிசோதனைகளுக்கான தேர்வாகும். அரசியல் அதிகாரத்தை மக்களிடையே பரவ செய்வதற்கு அரசியல் சமத்துவம் மட்டுமே போதாது. மேலும் சமூக, பொருளாதார சமத்துவம் என்பது அரசியல் சமத்துவத்தை அடைய அவசியமாகிறது.

  • செல்வ வளங்களில் உள்ள வேறுபாடுகளை அகற்றி, ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும், நாட்டின் வளமைகளில் சமமான பங்கை அளிப்பது பொருளாதார சமத்துவமாகும்”.
  • ப்ரைஸ் பிரபு (Lord Bryce)

ஈ) பொருளாதார சமத்துவம்

  • பொருளாதார சமத்துவம் என்பதை அனைத்து மக்களும் தங்களை முழுமையாக மேம்படுத்திக் கொள்வதற்கு நியாயமான வாய்ப்புகள் இருந்தால் மட்டுமே நியாயப்படுத்த இயலும். தகுந்த வேலைவாய்ப்பு, உரிய கூலி, போதுமான ஓய்வு, மற்றும் பொருளியல் மேலாண்மையில் சமபங்கு ஆகிய இவையனைத்தும் பொருளாதார சமத்துவத்தினை அர்த்தமுள்ளதாக்குகின்றன.
  • பேராசிரியர் லாஸ்கி பொருளாதார சமத்துவத்தைப் பற்றிக் கூறும்பொழுது “அரசியல் சமத்துவம் என்பது பொருளாதார சுதந்திரமின்றி, மெய்மையாவதில்லை என்றும் அப்படியில்லாத நிலையில் வழங்கப்படும் அரசியல் அதிகாரம் என்பது பொருளாதார அதிகாரத்தின் கைப்பாவையாகும்” என்று கூறுகிறார்.
  • இங்கு பொருளாதார சமத்துவம் என்பது சமமான வாய்ப்புகளை அனைத்து மக்களுக்கும் அளிக்கும்போது பொருளாதாரம் மேம்பாஅடு அடையும் எனப் பொருள்படுகிறது. மேற்கூறிய முறையானது சமதர்மத்தில் சாத்தியமாகுமேயன்றி லட்சியவாதத்தின் அடிப்படையில் முதலாளித்துவத்தில் நடக்காது எனலாம்.

உ) வாய்ப்பு மற்றும் கல்வியில் சமத்துவம்

  • வாய்ப்பு மற்றும் கல்வியில் சமத்துவம் என்பதன் பொருள் அரசு என்பது அனைத்து மக்களுக்கும் சமமான மற்றும் ஒரே மாதிரியான வாய்ப்புகள் அளிக்க வேண்டும் என்பதாகும்.
  • அனைத்துக் குடிமக்களுக்கும் தங்களது ஆளுமைகளை மேம்படுத்திக் கொள்வதற்காக சமமான மற்றும் ஒரே மாதிரியான வாய்ப்புகள் அரசினால் அளிக்கப்படவேண்டும். சாதி, மதம், இனம், மொழி, ஏழை, பணக்காரர், பாலினம் போன்றவற்றை அடிப்படையாக கொண்ட பாகுபாடுகள் நீக்கப்பட வேண்டும்.
  • இந்திய அரசமைப்பு அனைத்து மக்களுக்கும் சமமான வாய்ப்புகள் மற்றும் சமமான கல்வியை அளிக்கிறது.
  • “பசியோடு வாழும் ஒரு மனிதனுக்கு சுதந்திரம் என்ன நன்மையை அளிக்கமுடியும்? அவனால அந்த சுதந்திரத்தை சாப்பிடவோ அல்லது குடிக்கவோ முடியாது.
  • தாமல் ஹாப்ஸ் (Thomas Hobbes)

சுதந்திரத்திற்கும், சமத்துவத்திற்கும் இடையேயான உறவுகள்

  • சமத்துவம் இல்லாமல் சுதந்திரத்திற்கு எந்தசொரு விழுமியமும் கிடையாது. இவற்றை பல்வேறு பார்வைகளில் புரிந்து கொண்டு அரசியல் சிந்தனையாளர்களான ஆக்சன் பிரபு, டி டாக்வில், ஹெரால்டு லாஸ்கி (Lord Acton, De Tocqueville and Harold J.Laski) போன்றோர் அறிவார்ந்த விளக்கங்களை அளித்துள்ளனர்.
  • ஆக்சன் பிரபு, டி டாக்வில் (Lord Acton, De Tocqueville) போன்ற அறிஞர்கள் சுதந்திர கொள்கையின் ஆதரவாளர்கள் ஆவர். ‘சுதந்திரம் இருக்குமிடத்தில் சமத்துவம் இருக்காது எனவும் அதே போல சமத்துவம் இருக்கும் இடத்தில் சுதந்திரம் இருக்காது’ என்பது மேற்கூறிய சிந்தனையாளர்களின் கருத்து ஆகும்.
  • ஆக்சன் பிரபு (Lord Acton)கூறும் பொழுது, “சமத்துவத்தை நோக்கிய உணர்வுப்பூர்வமான பயணமானது சுதந்திரத்திற்கான நம்பிக்கையை வீணாக்குகிறது” என்கிறார்.
  • ஹெரால்ட் லாஸ்கி சுதந்திரத்தை பற்றி கூறும்பொழுது, “சுதந்திரமும், சமத்துவமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து இருப்பது நல்லியல்பு” என கூறுகிறார். மேலும் அவர் கூறும் பொழுது தடையற்ற சுதந்திரம் அளிக்கப்படும்பொழுது, தனிமனிதர்கள் சக மனிதர்களுக்கு தீங்கு இழைக்கிறார்கள்.
  • இவ்வகை சுதந்திரம் சமுதாயத்தில் குழப்பத்தை உண்டாக்குகிறது என்கிறார். 19-ஆம் நூற்றாண்டில், தனிமனிதத்துவவாதிகள் “சுதந்திரத்திற்கு” தவறான வரையறையை அளித்துவிட்டார்கள். அவர்கள் பொருளாதார சமத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் அரசாங்கத்தின் தாராளமயக் கொள்கைக்கு மட்டுமே அழுத்தம் அளித்தார்கள் என்று ஹெரால்ட் லாஸ்கி கூறுகிறார்.
  • மேலும் ஹெரால்ட் லாஸ்கி, கூறுகையில் “எங்கு பணக்கார வர்க்கம் – எழை வர்க்கம், படித்தவர்கள் – படிக்காதவர்கள் என்ற பிரிவினை இருக்கிறதோ, அங்கு கண்டிப்பாக முதலாளி, பணியாளர் என்ற வகுப்புவாத நிலையினை காணமுடியும்” என்று தெரிவித்துள்ளார்.
  • மற்றுமொரு பொருளாதார நிபுணரான ஆடம் ஸ்மித், “முதலாளிகளுக்கும், தொழிலாளர் சங்கத்தலைவர்களுக்கும் இடையே சுதந்திரமான போட்டி நிலவ வேண்டும்” என்ற தனிமனிதத்துவவாதிகளின் விரும்புவதில்லை. அரசாங்கத்தினால் தேவை வழங்கல் சூத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • பொருளாதாரம் தொடர்பான பிரச்சினைகள் இந்த சூத்திரத்தின் மூலமாக நீங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐரோப்பாவில் இதன் மூலம் ஆபத்தான விளைவுப்பயன்களை சந்திக்க நேரிட்டது.
  • முதலாளிவர்க்கமானது வாய்ப்புகள் அனைத்தையும் அதிகபட்சமான சுரண்டலுக்குப் பயன்படுத்தினால், ஏழை வர்க்கத்திற்கும், பணக்காரவர்க்கத்திற்குமான இடைவெளி பெரிதும் அதிகமாகிறது.
  • இதனால் உழைக்கும் வர்க்கம் அதிகம் பாதிக்கப்படுவதால் உண்டான பின்விளைவு, தனிமனிதத்துவத்தினை எதிக்கவும் அதனால் சமதர்மம் உதயமாகவும் காரணமாகிறது. இவ்வாறு எழுச்சிபெற்ற சமதர்மமானது தனிமனிதத்துவவாதத்தின் கொள்கைகளை மறுக்க ஆரம்பித்தது. இந்த மாற்றம் “பொருளாதார சமத்துவமில்லாமல் சுதந்திரம் என்பது பொருளற்றது” என்ற நிலை உருவாக காரணமாக அமைந்தது.
  • அரசியல் சுதந்திரம் ஏற்படுவதற்கு பொருளாதார சமத்துவம் மிகவும் அத்தியாவசியமாகிறது. இது சாத்தியம் இல்லாதபோது, அரசாங்கமுறையானது முதலாளித்துவ மக்களாட்சியாக மாறி அதன் விளைவாக தொழிலாளர் வர்க்கம் என்பது வாக்குரிமையை மட்டுமே பெற்று, அதன் மூலம் அவர்களுக்கு எந்தவித பயனுமில்லாமல் போகும் சூழ்நிலை உருவாகும்.
  • சுதந்திரமும், சமத்துவமும் சமதர்ம மக்களாட்சியில் மட்டுமே ஒன்றோடு ஒண்றாக இணைந்து பயணம் செய்ய முடியும். சுதந்திரத்திற்கு ஒரே ஒரு தீர்வுதான் உண்டு. அது என்னவெனில் சமத்துவம் மட்டுமே.
  • “இதனால் சுதந்திரமும் , சமத்துவமும் ஒன்றுடன் மற்றொன்று நெருக்கம் பாராட்டுகின்றன” என்று கூறுகிறார் பொல்லார்டு.
  • “தனியாருக்கு இடையேயான பரிமாற்றங்கள் அரசாங்க தலையீடுகளான கட்டுப்பாடு, சலுகைகள் , வரி, மானியம் போன்றவை இல்லாமல் சுமூகமாகவும், சுதந்திரமாகவும் நடக்கும் பொருளாதார முறைமையே தாராளமயக் கொள்கை (Laisszr Faire) எனப்படும்”.

தனிமனிதத்துவம்

பொருள் உற்பத்தியின் வழிமுறை, விநியோகம் மற்றும் பரிமாற்றம் இவை யாவும், ஒட்டு மொத்தமாக சமுதாயத்தில் வாழும் மக்களால் ஒழுங்குப்படுத்தப்பட்டும் உரிமைப்படுத்தப்பட்டும் இருக்கப்பட வேண்டும் என்ற அரசியல் மற்றும் பொருளாதார கோட்பாடே சமதர்ம கோட்பாடு ஆகும்.

சமத்துவம் தொடர்பான பிரச்சினைகள்

  • வேறுபட்ட பொருள் விளக்கங்கள் – சமமாக நடத்துதல், சமமான வெளிப்பாடுகள், மற்றும் சமவாய்ப்புகள் என்பன பற்றி தேவைக்கதிகமான வரையறைகள், பொருள் விளக்கங்கள் இந்த பரந்த வரைகூறுகளில் உள்ளன.
  • ஒவ்வொரு வகைப்பாடுகளிலும் உள்ள முரண்பாடுகள் – சமமாக பாவித்தல் என்பது சமமான வெளிப்பாடுகளைத் தடுக்கிறது. அதேபோல சமமான வெளிப்பாடுகள் என்பது சமமான பாவித்தலை பாதிக்கின்றது.
  • சம வாய்ப்புகள் என்பது கருத்தாக்கத்தின் அடிப்படையின் பின்னடைவு பிரச்சனையை உருவாக்குகிறது. எப்படியெனில் கல்வியும், பயிற்சியும் ஒரு வெளிப்பாடா? அல்லது ஒரு வாய்ப்பா? அல்லது ஒரு வாய்ப்பா? என்ற கேள்விகள் எங்கு எழுகிறது.
  • சமமாக நடத்துதல் என்பது பல விதமான வாய்ப்பு வேற்றுமைகளை உள்ளடக்கியதாகும். இதன் விளைவாக வாய்ப்பு வேற்றுமைகளை பொருத்தமான வேற்றுமைகள் மற்றும் பொருத்தமில்லாத வேற்றுமைகள் என அடையாளம் காண இயலாது. உதாரணத்திற்கு உடல் பருமனைக் குறிப்பிடலாம்.
  • உண்மையில் சமமான வெளிப்பாடுகள் என்பவை எப்போதும் இலக்காக விரும்பப்படுவதில்லை. சமத்துவத்தைவிட, சம நியாயமே சமூக நீதியாக பார்க்கப்படுகிறது. நியாயத்தின் ஒரு கோணமே சமத்துவமாகும்.
  • ஆனாலும் சமத்துவமின்மையும் சில சமயங்களில் விரும்பப்படுகிறது. எப்படியெனில் அப்போதுதான் தகுதிக்கான , நியாயமான பரிசு கிடைக்கப்பெறும்.

சமத்துவத்தை எவ்வாறு ஊக்குவிக்கலாம்?

சுதந்திர வாதிகளுக்கும், சமதர்மவாதிகளுக்கும் இடையேயான வேறுபாட்டை நாம் உணரும்பட்சத்தில் , சமத்துவ இலக்கை அடையும் வழிமுறையும் நமக்கு தெளிவடைகிறது. பின்வரும் சமத்துவத்தை ஊக்குவிக்கும் வழிமுறைகளைப் பற்றிய விவாதம் நம்மை சில முறைகளுக்கு வழிகாட்டுகிறது. அவற்றினைப் பற்றி தெரிந்து கொள்வோம். அவைகள்,

  • முறைசார்ந்த சமத்துவத்தை உருவாக்குதல்
  • வேறுபடுத்தி நடத்துதலின் மூலம் சமத்துவத்தை ஏற்படுத்துதல்
  • உடன்பாடான நடவடிக்கைகள் மூலம் சமத்துவம்

ஆண்ட்ரூ ஹேவுட் (Andrew Heywood) கூறும் பல்வேறுவகை சமத்துவ லட்சியங்களைப் பற்றிய பார்வை:

சுதந்திரவாதிகள்

  • சுதந்திரவாதிகள், நம்புவது என்னவெனில் பிறக்கும்போது அனைத்து மக்களும் சமமாவர். இவர்கள் நீதிநெறி அடிப்படையில் சமமாக கருதப்படுகிறார்கள். இது முறையான சமத்துவத்தை உணர்த்துவதாகவும், குறிப்பாக சட்ட மற்றும் அரசியல் சமவாய்ப்புரிமை என்றாலும், சமூக சமத்துவம் என்பது சுதந்திரத்தை தியாகம் செய்து பெறக்கூடியதாகும்.
  • மரபுவழி சுதந்திரவாதிகள் கடுமையான தகுதிமுறையும், பொருளாதார ஊக்குவிப்புகளையும் பரிந்துரைக்கின்றார்கள். இதற்கு மாறாக தற்கால சுதந்திரவாதிகள், சமூக சமத்துவம் நிலைப்படும்பட்சத்தில், சமவாய்ப்புகள் நியாயமாக வழங்கப்படலாம் என்றுரைக்கின்றனர்.

பழமைவாதிகள்

  • சமூகம் இயற்கையிலேயே படிநிலை அமைப்புடையது என்றும் , சமத்துவம் என்பதை எப்போதுமே அடைய முடியாத ஒரு கற்பனை இலக்காக கருதுகின்றனர். ஆனால் புதிய உரிமையின் அடிப்படையில், வலிமையான தொழில்முனைவோர் நம்பிக்கையின் அடிப்படையில் சமவாய்ப்புகளை வழங்கும், அதே நேரத்தில் பொருளாதார சமத்துவமின்மையின் பொருட்பயன்களையும் வலியுறுத்துகிறது.

சமதர்மவாதிகள்

  • சமதர்மச் சிந்தனையாளர்கள் சமத்துவத்தை அடிப்படையான விழுமியமாகவும், அதிலும் குறிப்பாக சமூக சமத்துவத்தை முக்கியமாக ஒப்புக் கொள்கிறார்கள். சமூக மக்களாட்சி தொடர்பான கருத்தாக்கத்தில் பல பரிமாணங்கள் இருந்தாலும், இவ்வகையான சமத்துவம் நிச்சயமாக சமூக ஒருங்கிணைப்பிலும், சகோதரத்துவத்திலும் கால்தடம் பதிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதோடு மட்டுமல்லாமல் , சமூக சமத்துவம் என்பது நீதியை நிலைநாட்டுவதற்கும் , சம நீதியிலான பங்கை அளிப்பதற்கும், சுதந்திரத்தினை பெருமளவில் நேர்மறையாக அளிப்பதற்கும் பயன்படுகிறது.

அமைப்பெதிர்வாதிகள்

இவ்வகை கொள்கைவாதிகள் அரசியல் சமத்துவத்தை மையப்படுத்தி தங்கள் கருத்தாக்கத்தை வலிமைப்படுத்தியுள்ளார்கள். அரசியல் சமத்துவம் தனிநபர் சுதந்திரத்தை வழங்கும் என்றும் , அனைத்து விதமான அரசியல் சமத்துவமின்மையும் எதிர்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்கள். பயந்தரக்கூடிய வளங்களை கூட்டு சொத்துடைமை ஆக்குவதன் மூலம் சமூக சமத்துவத்தை அடையாலம் என்பது அமைப்பெதிர்வாத பொதுவுடைமைவாதிகளின் (Anatcho – Communists) நம்பிக்கையாகும் .

பாசிசவாதிகள்

மனித குலமே இன அடிப்படையிலான சமத்துவமின்மையுடன் இருக்கிறது. இவ்வுலகில் இப்பாகுபாடு தலைவர், தொண்டர், நாடுகள் மற்றும் பல இனங்களுக்கு இடையேயும் இவ்வுலகத்தில் காணப்படுகிறது. ஒரு தேசமோ அல்லது இனமோ எதுவானாலும், அதில் அங்கம் வகிக்கும் நபர்கள் சமமாக பாவிக்கப்படுகிறார்கள். அவர்களின் பிரதான அடையாளமே அவர்களை கண்டறிய பயன்படுகிறது.

பெண்ணியவாதிகள்

பாலின சமத்துவமே இக்கொள்கைவாதிகளின் குறிக்கோள் ஆகும். ஆண்களுக்கு சமமாக பெண்களும் சம உரிமைகள், சமவாய்ப்புகள் பெறுவதோடு மட்டுமல்லாமல், சமூக, பொருளாதார நிலைகளிலும் சம அதிகாரம் பெறுவதை இவர்கள் ஆதரிக்கிறார்கள். ஆனால் இவ்வாறு சமத்துவத்தை கோருவது என்பது பெண்கள், “ஆண்களின் மூலம் அடையாளம்” காணப்படுவதாக சில முற்போக்கு பெண்ணியவாதிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

சூழலியல்வாதிகள்

உயிரி மைய சமத்துவமானது, வாழ்வின் அனைத்து வடிவங்களும் வாழவும், மலர்ந்து வளம் பெறவும் சம உரிமை உள்ளது என வலியுறுத்துகிறது. மரஒஆர்ந்த கருத்தானது, சமத்துவத்தை மனித இனத்தை மையமாக (Anthropocentric) மட்டுமே வைத்து இயங்குகிறது என்று கூறுகிறார்கள். இதனால் மனித இனத்தை .தவிர்த்து, ஏனைய மற்ற உயிரினங்களும், உருபொருளும் இதில் சேராது.

ஹேவுட், ஆண்ட்ரு (2004), அரசியல் இலட்சியங்கள்: ஒர் அறிமுகம், நான்காம் பதிப்பு, நியூயார்க்: மேக்மில்லன் (Heymood, Andrew. (2004) political Ideologies: An Introduction , 4th ed. New York: Macmillan.)

முறைசார்ந்த சமத்துவத்தை நிறுவும் வழிகள்

  • உலக அளவில் சமூக , பொருளாதார, அரசியல் ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் நடைமுறை பழக்க வழக்கங்களின் மூலமாகவும், சட்ட முறைமை வழியாகவும், குறிப்பிட்ட சில வகையான, வாய்ப்புகள் மற்றும் வெகுமதிகளை சில சமூக பிரிவுகள் அனுபவிக்க முடியாதவாறு தடுத்து நிறுத்துகின்றன.
  • உதாரணத்திற்கு , ஏழைகளுக்கு வாக்குரிமை மறுக்கப்படுகிறது. உலகத்தின் சில பகுதிகளில், பெண்கள் பணிசார்ந்த வளர்ச்சி பாதையில் செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இந்தியாவில் நடைமுறையில் இயங்கும் சாதி முறைமையின்படி, தாழ்த்தப்பட்ட மக்கள் , உடலால் உழைப்பதைத் தவிர பிற பணிகளில் ஊக்கப்படுத்தப்படுவதில்லை.
  • இன்னும் சில நாடுகளில், சில குடும்பங்கள் மட்டுமே முக்கிய பதவிகளை வகிக்கின்றன. இவ்விதம் செயல்படும் சலுகைகள் நிலுவையில் இருக்கும் வரை சமத்துவத்தைஅடைவது கடினமாகிறது. இது மாதிரியான சலுகைகளை நிறுத்தாமல் சமத்துவத்தை அடையமுடியாது.
  • தொன்றுதொட்டு இவ்விதமான முறைமைகள் சட்டத்தின் மூலம் வலிமைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாக சமத்துவத்தை அடைய வேண்டுமென்றால், அரசாங்கத்தின் தலையீடு என்பது சட்டத்தின் மூலமாக அவசியமாகிறது.
  • நமது அரசமைப்பானது, நாட்டின் அடிப்படையான மற்றும் மேலான சட்டம் என்ற அடிப்படையில் இப்பணிகளை செய்ய முற்படுகிறது.
  • இந்திய அரசமைப்பின்படி, சாதி, மதம் , இனம், பாலினம் அல்லது பிறப்பிடத்தை அடிப்படையாக கொண்ட பாகுபாடுகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் நமது அரசமைப்பு தீண்டாமையையும் ஒழித்துள்ளது. பல்வேறு நவீன அரசுகளும், மக்களாட்சி அரசாங்கங்களும் சமத்துவக் கொள்கையை தத்தமது நாட்டின் அரசமைப்பில் இணைத்துக் கொண்டுள்ளன.

இந்திய அரசமைப்பில் சமத்துவம்

இந்திய அரசமைப்பின் சமத்துவ கருத்தாக்கம்

  • இந்திய அரசமைப்பின் உறுப்பு -14 ன் படி ‘சட்டத்தின்முன் அனைவரும் சமம் அல்லது அனைவருக்கும் சட்டத்தின் மூலம் சமமான பாதுகாப்பு’ அளிக்கப்படுகிறது. இது முறை சார்ந்த சமத்துவமாகவும், முகவுரையில் கூறப்பட்டுள்ளது போல, “சமமான நிலை மற்றும் வாய்ப்புகளை” குறிக்கிறது.
  • மேலும் இது நாட்டின் சட்டமானது அனைத்து மக்களுக்கும் சமமாக பொருந்தும் என்றும் பிறப்பிடம், சாதி, மதம், மொழி, இனம், பாலினம், நிறம் போன்றவை அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்றும் தெரிவிக்கிறது என்றும், இதைப் போல உறுப்பு – 15, உறுப்பு -14-ஐ உறுதிப்படுத்தும் நோக்குடன் இவ்வகை பாகுபாடுகளை தடை செய்துள்ளது.
  • ‘சட்டத்தின் முன் சமம்’ மற்றும் ‘சமமான சட்டப் பாதுகாப்பு’ ஆகியவை இந்திய அரசமைப்பின் உறுப்பு -21ன் மூலம் வலிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ‘எந்தவொரு தனிநபரும், சட்ட நடைமுறையன்றி அவரது வாழ்வு அல்லது தனிப்பட்ட சுதந்திரத்தினை இழக்க வைக்க முடியாது’ என்றும் விளக்குகிறது.
  • இதன் மூலம் அறிவது யாதெனில், ஒரு தனிநபரை தண்டிக்க வேண்டும் என்றால், அதை சட்டத்தின் நடைமுறை மூலம் மட்டுமே செயல்படுத்த முடியும். இது போல ஒருதலைபட்சமாகவோ, பாகுபாடான முறையிலோ அல்லது சமமற்ற முறையில் பல தனிமனிதர்களை நடத்தலோ தவறு ஆகிறது’.

சுதந்திர உரிமை (உறுப்பு 14-18)

  • சட்டத்தின் முன் சமம் (உறுப்பு – 14)
  • மத அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு தடை (உறுப்பு -15)
  • பொது வேலைவாய்ப்பில் சம வாய்ப்புரிமை (உறுப்பு – 16)
  • தீண்டாமை ஒழிப்பு (உறுப்பு -17)
  • பட்டங்கள் ஒழிப்பு (உறுப்பு – 18 )

வேறுபடுத்தி நடத்துதல் மூலம் எவ்வாறு சமத்துவம் அடையப்படுகிறது?

  • சில நேரங்களில் தனிநபர்களை வேறுபடுத்தி நடத்துதல் மூலம், சம உரிமைகள் உறுதிசெய்யப்படுவது அவசியமாகிறது. இதற்காக சிலவித வேற்றுமைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது என்பது தவிர்க்கமுடியாததாகிறது. இயலாதவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இரவு நேரங்களில் பெருநிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்களில் பணீபுரிய செல்லும் பெண்களுக்கு சில சிறப்பு சலுகைகள் அளிப்பது அவசியமாகிறது.
  • மேற்கூறியவற்றில் வேறுபடுத்தி நடத்துதல் என்பது சமத்துவத்தை உயர்த்துமேயன்றி சமத்துவக்கொள்கை வரம்பினை மீறாது எனலாம். இது போலவே சமத்துவம் பாதிக்கப்படாமல் இருக்க, அரசாங்கத்தின் மூலம் சில கொள்கைகள் அவசியமாகிறது.
  • உதாரணத்திற்கு இந்தியாவில் இடஒதுக்கீடு கொள்கையும், ஏனைய பிற நாடுகளில் “உடன்பாட்டு நடவடிக்கை”யும் (Affirmative Action) பின்பற்றப்படுகிறது.

உடன்பாட்டு நடவடிக்கை (Affimative Action)

உடன்பாட்டு நடவடிக்கை பற்றிய பார்வை

  • சட்டத்தின் மூலமாக முறைசார்ந்த சமத்துவம் நிறுவப்பட முடியாத நிலையில் ‘உடன்பாட்டு நடவடிக்கை’ தேவையாகிறது. நன்றாக வேரூன்றிய சமூக சமத்துவமின்மையை களைவதற்குண்டான நேர்மறையான நடவடிக்கைகளை அமல்படுத்துவது முக்கியமாகிறது.
  • இவை சமூக சமத்துவமின்மையின் தீவிரமான வடிவங்களை படிப்படியாகக் குறைத்து நீக்குகிறது. பெரும்பாலுமான உடன்பாட்டு நடவடிக்கையின் கொள்கைகள் தொன்றுதொட்டு காணப்படும் சமத்துவமின்மையின் விளைவுகளை சரி செய்ய திரளான ஏதுவாக வடிவமைக்கப்படுகின்றன.
  • நமது நட்டில் ஒதுக்கீட்டுக் கொள்கை மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு, வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை, போன்றவை பின்தங்கிய மக்கள் நலனுக்காக அளிக்கப்படுவது விவாதம் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்கு உள்ளாகி வருகிறது.
  • இக்கொள்கையானது சமுதாயத்தில் சில குழுக்கள் சந்திக்கும் சமூக பாரபட்சம், விலக்கல், ஒதுக்கப்படுதல் மற்றும் பாகுபாட்டிற்கு நியாயமான தீர்வாக இந்த உடன்பாட்டு நடவடிக்கை நியாயப்படுத்தப்படுகிறது.
  • அது மட்டுமல்லாமல் நியாயமான மற்றும் சமத்துவ சமுதாயம் உருவாக வேண்டுமெனில், இவ்வகையான சிறப்பு சலுகைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருக்க கூடும். இவ்வகையான உடன்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இயங்கும்.
  • இந்த உடன்பாட்டு நடவடிக்கையின் மூலமான சலுகைகள், சமுதாயத்தில் ஏனைய சமூக குழுக்கள் அனுபவித்து வரும் நலனுக்கு சமமாகவும், குறைபாடுகளைக் களையவும் உதவி புரிகின்றன.
  • நேர்மறையான பாகுபாட்டின் மூலமாக, அளிக்கப்படும் இடஒதுக்கீடு மற்றும் சலுகைகள் ஏனைய மக்களின் சமநல உரிமையை பாதிக்கிறது என்று எதிர்ப்பாளர்கள் கூக்குரலிடுகிறார்கள். இச்சலுகைகள் மூலம், சமத்துவம் என்ற சமதர்ம கொள்கையே பாதிக்கப்படுவதாகவும் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.
  • சமத்துவம் என்பது அனைத்து மக்களையும் சமமாக பாவிப்பதாகிறது. ஆனால் இட ஒதுக்கீடானது சமத்துவ கொள்கையினை கேள்விக்குறியாக்கி தலைகீழ் பாகுப்பாட்டினை ஏற்படுத்துகிறது. சமத்துவம் என்பது அனைவரையும் சமமாக நடத்துதல் என்பதாக இருப்பினும், அது சாதி மற்றும் இன அடிப்படையிலான பாகுபாட்டினை மனிதர்களிடையே உருவாக்குகிறது. இதனால் சமூகம் பிரிவினையை சந்திக்கும் என்று கூறி இப்பிரிவினையை அறிஞர்கள் குறை கூறுகிறார்கள்.
  • விவாதங்கள் பல இருந்தபோதிலும், கிராமம் மற்றும் குடிசைகளில் குழந்தைகளின் பள்ளி படிப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவை , நவீன நகர வசதிமயமான பள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகளின் பள்ளிப்படிப்பிலிருந்தும் சுகாதாரத்திலிருந்தும் வேறுபடத்தான் செய்கின்றன.
  • தகுந்த விதிவிலக்கான சூழல்கள் இல்லாத பட்சத்தில் இந்த தலைகீழான பாகுபாடுமுறை சட்டப்படி தவறானது என்று சமவேலைவாய்ப்புச் சட்டம் கூறுகிறது.
உடன்பாட்டு நடவடிக்கை தலைகீழான பாகுபாடு
காலகாலமாக வேற்றுமையின் மூலம் பாதிக்கப்பட்டு வரும் இலக்கு குழுக்களுக்கு, தகுதிக்கு ஏற்றாற்போல் உரிய சலுகைகள் மற்றும் முன்னுரிமைகள் ஆகியவற்றினை அறிவுப்பூர்வமாக வழங்குதல். இலக்கு குழுக்களுக்கான வேறுபட்ட சலுகைகள் அளிக்கப்படுதல். இதனால் தகுதி வாய்ந்த நபர்கள் சலுகைக் குழுவிலிருந்து வெளியேற்றுதல்
  • இவ்வாறான ஏழை குழந்தைகளுக்கு உயர்கல்வியை கற்பதற்கும், சிறப்புப் பயிற்சியை மேற்கொள்வதற்குத் தகுதியிருந்தும், பொருளாதார வசதி இல்லாமல் ஏழை மாணவர்கள் தடைகளை சந்திக்கின்றார்கள்.
  • இதன் விளைவாக மற்ற வசதியான பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுடன் இவர்கள் போட்டி போட இயலாமல் போகிறது. இது மாதிரியான சமூக மற்றும் பொருளாதார சமத்துவமின்மை, சமவாய்ப்புகளை பயன்படுத்துவதற்கு தடையாக அமைகின்றன.
  • தற்போதைய கோட்பாட்டாளர்கள் இதனை ஏற்றுக்கொண்டாலும், சமவாய்ப்பு இலக்கு அல்லாமல், அரசு இயற்றுகின்ற சமத்துவ இலக்கினை அடைவதற்கான கோள்கைகளை எதிர்ப்பவர்களாகின்றனர்.

உடன்பாட்டு நடவடிக்கை – வரையறை

தொன்றுதொட்டு பாதிக்கப்பட்டு வரும் சிறுபான்மை மக்கள் குழுவின் பொது நலனுக்காக அளிக்கப்படும் சலுகை கொள்கை அல்லது மேம்பாட்டுத் திட்டம், உடன்பாட்டு நடவடிக்கை எனப்படுகிறது. இந்த நடவடிக்கைகளின் மூலம் பாகுபாடுகளை மட்டுமே சந்தித்து வரும் மக்கள் குழுவிற்கு, சமதர்ம சமூகத்தை உருவாக்கும் பொருட்டு கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், சமூக நலன் போன்றவைகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

சமத்துவம்

எனக்கான உரிமைகளும், எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளும் மற்றவர்களுக்கும் கிடைப்பதையும், இவை எவ்வாறு என்னிடமிருந்து பிரிக்கமுடியாத ஒரு உரிமையோ அவ்வாறு மற்றவர்களுக்கு அது போன்ற உரிமையாகும் என்பதே சமத்துவமாகும்.

  • வால்ட் விட்மேன் (Walt whiltman)

சுதந்திரம்

சுதந்திரத்தைப் பற்றிய அறிமுகம்

  • சட்டத்தினால் அனுமதிக்கப்பட்டவாறு நீங்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. சட்டத்தின் முக்கிய கடமையே, தனிமனிதர்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பது ஆகும்.
  • ஓர் தனிமனிதனின் பாதுகாப்பது என்பது அவனது சுதந்திரத்தின் நிலையைப் பொறுத்ததாகும். சட்டமும், சுதந்திரமும் ஒன்றோடு ஒன்றாக பிணைந்து, அனைவரும் சமமாக நடத்தப்பட வழிவகை செய்கின்றன. அரசின் தலையாய கடமையே, குடிமக்களின் சுதந்திரத்தை பாதுகாப்பது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
  • ஒவ்வொரு தனிமனிதனையும் , அரசு சில நியாயமான காரணங்களுக்காக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது, உங்களுக்கு தெரியுமா? இதானால் குடிமக்களுடைய சலுகைகள் எவ்விதத்திலும் பாதிப்படைவதில்லை.
  • ஒவ்வொரு தனிமனிதனுக்கும், அவர்களுக்குரிய உரிமைகளை அளிப்பதும், பாதுகாப்பதும் அரசினுடைய முக்கிய கடமைகளில் ஒன்றாகும். இவ்வாறான செயல்பாடுகளில், தனிமனிதர்களுக்கிடையேயான சமத்துவத்தையும், அரசு தான் நிறைவேற்ற வேண்டியவற்றில் வைத்துள்ளது.

நாம் அனுபவிக்க விரும்பும் சுதந்திர உலகத்திற்கான பயணத்தை நாம் மேற்கொள்வோமா?

  • வகுப்பறை சூழலில் மாணவர்களுக்கான சுதந்திரம் வேறுபடுகிறது. மாணவர்களின் பார்வையில், சில ஆசிரியர்கள் கடுமையானவர்களாகவும், ஏனைய சில ஆசிரியர்கள் சுதந்திர மனப்போக்குடனும் நடந்துகொள்கின்றனர்.
  • மேற்கூறிய பார்வை, மாணவர்கள் தங்களுடைய சுதந்திரத்தை வகுப்பறையில் எந்த அளவிற்கு அனுபவிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அமைகிறது. மாணவர்களை ஓரளவிற்கு கட்டுக்குள் வைக்கவும், கட்டுப்பாடான சுதந்திரத்தை மாணவர்கள் அனுபவிக்கும் வகையிலுமே ஆசிரியர்கள் செயல்படுகிறார்கள்.
  • இவ்வித கட்டுப்பாடுகள், மாணவர்களின் மென்மையான நன்நடத்தைக்கும், அவர்களின் திறன்மிக்க கற்றலுக்கும் ஏதுவாக அமைகிறது. சுதந்திரம் என்னும் கருத்தாக்கத்தினைப் புரிந்துகொள்வது, மாணவர்கள் தங்கள் சக மாணவர்களிடம் உள்ள உறவுமுறை மற்றும் ஆசிரியர்களிடம் காட்டப்படும் நடத்தை மற்றும் மனப்போக்கு போன்றவற்றின் மூலமாக வகுப்பறையில் ஆரம்பிக்கிறது.
  • குறிப்பிட்ட சந்தேகத்தை தீர்ப்பதற்கு கேள்வி கேட்பது மாணவர்களின் உரிமையாகும். அதற்கு ஆசிரியர்கள் அனுமதி வழங்குவது சுதந்திரம் ஆகிறது. சுதந்திரம் எனப்படுவது சட்டத்தால் அனுமதிக்கப்படும் செயல்பாடு ஆகிறது. அதற்கான கட்டுப்பாடுகளும் ஒரு வகையில் சுதந்திரமாக கருதப்படுகிறது.
  • கற்றலுக்கு உகந்த வகுப்பு சூழ்நிலை மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துகிறது. மேலும் சுதந்திரத்தின் பொருள் மற்றும் முக்கியத்துவம் பற்றி நிறைவாக புரிந்து கொள்ள முடியும்.
  • மனிதர்களுடைய வளர்ச்சிக்கும், அரசின் மேம்பாட்டிற்கும் சுதந்திரம் அதிமுக்கியமான அடிப்படைக் கூறாகும். முற்காலத்திலும், இடைக்காலத்திலும், இங்கிலாந்து முடியாட்சி மக்களுக்குத் தேவையான சுதந்திரத்தை மறுதலித்தது வரலாற்று பதிவாகும்.
  • மக்களின் பொறுமையை சோதித்த முழுமையான முடியாட்சி புரட்சியை சந்திக்க நேரிட்டது. இங்கிலாந்து பேரரசர் ஜான் பணிய நேர்ந்ததுடன் உடிமக்களுக்கு சுதந்திரத்தை அளித்து பதவியை விட்டு விலகியதிற்கு பிறகே இந்த புரட்சி ஓய்ந்தது.
  • டியூடர் மற்றும் ஸ்டூவர்ட் பேரரசர்களுக்குப் பின்னால் வந்தவர்களும் முழுமையான முடியாட்சி முறையைத் தொடர்ந்ததால் “உள்நாட்டுப்போர்” வெடித்தது.
  • சுதந்திர வேட்கையினால் உந்தப்பட்டு இப்போரட்டத்தில் அனைத்து குடிமக்களும் பங்கேற்றனர். சார்லஸ் மன்னர் சிரச்சேதம் செய்யப்பட்டு, பின்னர் க்ரோம்வெல் ஆட்சியில் இருந்தபோதும் கூட மக்களுக்கு தேவையான அடிப்படை சுதந்திரம் கிடைக்கவில்லை என்பது வரலாற்று நிகழ்வு ஆகும்.
  • இவ்வாறு மக்கள் போராட்டத்தின் விளைவாக, இங்கிலாந்தில் 1688-இல் “மகத்தான புரட்சி” , முடியாட்சியை எதிர்த்து அரங்கேறியது. இதில் மக்களுக்கு மகத்தான வெற்றொ கிடைத்ததுடன் சில காலம் முழுமையான முடியாட்சி கட்டுப்படுத்தப்பட்டது. இதற்குப் பிறகு வெடித்த “பிரெஞ்சு புரட்சி” 1789-ல் ஏற்பட்டது.
  • இது பல மாற்றங்களை ஏற்படுத்தினாலும், மக்களின் விடுதலை வேட்கைக்கு சரியான அளவில் தீர்வு ஏற்படாதிருந்தது. ஏனெனில் நெப்போலியனுக்கு பின்னர் ஆட்சியில் அமர்ந்தவர்களும் முடியாட்சியைத் தொடர்ந்தார்கள். மூன்றாம் நெப்போலியனின் வீழ்ச்சிக்கு பிறகு மூன்றாவது பிரெஞ்சு குடியரசு நிறுவப்பட்டது.
  • 1940-இல் இதன் வீழ்ச்சிக்குப் பின்னர் வரிசையாக நான்காம் குடியரசும், 1958-இல் அதன் வீழ்ச்சிக்குப் பின்னர் ஐந்தம குடியரசும் நிறுவப்பட்டது. இதற்கிடையே காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகள் விடுதலைக்கான நீண்ட நெடுய புரட்சிக்குப் பின்னர் சுதந்திரத்தை பெற்றன. 19-ஆம் நூற்றாண்டில் இத்தாலியும், 20-ம் நூற்றாண்டில் இந்தியாவும் மிகுந்த தியாகங்களுக்கு பின்னரே தேசிய சுதந்திரம் அடைந்தன.

வரலாற்று சூழல்

  • அறிவொளியின் பகுத்தறிவிற்கான விளைவாகும்
  • பிரெஞ்சு புரட்சி (1789) யின் விளைவாகும்.
  • பிரெஞ்சு புரட்சியாளர்கள் “சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்காக” பாடுபட்டனர்.
  • பிரெஞ்சு புரட்சியின் சிந்தனைகள் இங்கிலாந்து எழுத்தாளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்கள் மக்களாட்சி மற்றும் தனிமனிதனுக்கான பிரெஞ்சு புரட்சியினால் தாக்கத்திற்கு உள்ளாயினர் எனலாம்.
  • தொழில்மயமாதலின் விளைவாகும்.
  • இயற்கை மற்றும் எளிமைக்கான ஏக்கம்.
  • பிரெஞ்சு குடியரசுகள் என்பவை 1792-ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சிக்கான பிரகடனத்திற்கு பின்னர் தொடர்ச்சியாக உருவான குடியரசுகளைக் குறிப்பதாகும். இவ்வாறு பிரான்சின் வரலாற்றில் ஐந்து குடியரசுகள் இருந்துள்ளன. முதலாவது பிரெஞ்சு குடியரது (1972 – 1804), இரண்டாவது பிரெஞ்சு குடியரசு (1848 -1852) , மூன்றாவது பிரெஞ்சு குடியரசு (1870 – 1940), நான்காவது பிரெஞ்சு குடியரசு (1946 – 1958) என்றும் அதன் பின்னர் ஐந்தாவது பிரெஞ்சு குடியரசு அக்டோபர் 5, 1958-இல் ஏற்படுத்தப்பட்டது. ஐந்தாவது குடியரசானது நலிந்த மற்றும் உட்கட்சி பூசல் சார்ந்த நாடாளுமன்ற அரசாங்கத்திலிருந்து மாற்றியமைக்கப்பட்ட ஒரு வலிமை வாய்ந்த மையநோக்கு மக்களாட்சியாகும்.

சுதந்திரத்தின் பொருள் விளக்கம்

  • சுதந்திரம் என்பது “லிபர்” என்கிற லத்தீன் வார்த்தையிலிருந்து உருவாகி ஆங்கிலத்தில் “கட்டுப்பாடில்லாதது” என்று பொருள் பெறுகிறது. “லிபர்” என்கிற வார்த்தைக்கு “தடைகள் இல்லாத” எனப் பொருள்படுகிறது.
  • ஒருவர் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், தான் நினைத்ததை செய்ய முடியும் என்பது இதன் பொருளாகும். ஆனால் சுதந்திரம் என்பதை தனிமனிதர்களை தடையுடன் கூடிய சுதந்திர உரிமையை அனுபவிக்கும் விதத்தில் எடுத்துக்கொள்ளலாம்.
  • சட்டம் என்பது சுதந்திரத்தின் நிபந்தனையாக விளங்குகிறது. பேராசிரியர் பார்க்கரின் கூற்றுப்படி “ஒழுங்குமுறை அரசில் சுதந்திரம் சாத்தியமாகிறது. இவ்வகை அரசில் இறையாண்மையினுடைய சட்டம் மற்றும் அரசியல் அம்சங்கள் ஒன்றியோ , ஏறக்குறையவோ அல்லது முழுவதுமாகவோ காணப்படுகிறது”.
  • லாஸ்கி உரைப்பது போல “வரலாற்று அனுபவங்கள் மக்கள் வசதியாக வாழ்வதற்கும், தகுந்த முன்னேற்றத்திலான வாழ்விற்கான விதிமுறைகளையும் அளித்துள்ளது. கீழ்பணிதலை கட்டாயப்படுத்தும்போது சுதந்திரத்திற்கு உரிய நியாயமான வரையறையாக அது விளங்குகிறது”.
  • மனிதர்கள் சிறப்பாக செயல்படும் வாய்ப்பிற்குரிய சூழ்நிலையை நிர்வகிப்பதே சுதந்திரம் ஆகும்.
  • ஹொரால்ட் லாஸ்கி (Harold.J.Laski)

சுதந்திரம் தொடர்பான அறிஞர்களின் கருத்துக்கள்

சுதந்திரம் என்பது தகுதியான மகிழ்ச்சியையும், மற்றும் வேலையையும் அனுபவிப்பதற்கு உண்டான நேர்மறையான சக்தியாகும்.

  • கெட்டல் (Gettel)

சுதந்திரம் என்பது தனிமனிதர்கள், தங்கள் ஆளுமைத்தன்மையு எந்தவித பாதிப்பும் இல்லாமல் தங்களை வெளிப்படுத்துவதாகும்.

  • ஜி.டி.எச். கோல் (G.D.H.Cole)

சுதந்திரம் என்பதன் பொருள் தடைகள் இல்லாத நிலை என்பதல்ல, மாறாக சுதந்திரத்தை மேம்படுத்துவதில் உள்ளது.

  • மகாத்மாகாந்தி (Mahatma Gandhi)

உரிமைகள் இல்லாமல் சுதந்திரம் கிடையாது, ஏனெனில் உரிமைகள் இல்லாத சூழ்நிலையில் குடிமக்கள் அனைவரும் ஆளுமைத் தன்மையின் தேவைகளுக்கு அவசியமற்ற வெறும் சட்டத்திற்கு உட்பட்ட மக்களாவர்.

  • ஹெரால்ட் ஜே.லாஸ்கி. (Harold.J.Laski)

சுதந்திரம் மற்றும் விடுதலை : ஓர் மாறுபட்ட அணுகுமுறை

  • சுதந்திரம் என்பது அடக்குமுறையிலிருந்தும், வெளிக்கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுபெறும் விடுதலை நிலை ஆகும்.
  • எதிர்மறை சுதந்திரம் என்பது, தடைகளில்லாத, கட்டுப்பாடுகள் களைந்த முழு சுதந்திர நிலையாகும். நேர்மறை சுதந்திரம் என்பது செயல்படக்கூடிய வாய்ப்பு அல்லது செயல்படக்கூடிய உண்மை நிலையாகும்.
  • ‘எஜீஸ்டெம் ஜெனரிஸ்’ எனும் சட்டமொழியில் கூறுவதுயாதெனில் ‘சுதந்திரம்’ என்ற சொல் உறுப்பு 19-ல் உள்ள பொதுவான வார்த்தையாகும். அது தனது அமைப்பினை அவ்வரசமைப்பு உறுப்பிடமிருந்து பெறுகிறது. ஆனால் உறுப்பு 21-ல் இத்தகைய குறிப்பிட்ட வார்த்தைகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. அதில் ‘சுதந்திரம்’ என்ற சொல்லுக்கு முன்பான ‘தனிப்பட்ட’ என்னும் குறிப்பிட்ட வார்த்தை மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆகவே ‘தனிப்பட்ட சுதந்திரம்’ என்பதால் பாதுகாக்கப்படும் எதுவுமே உறுப்பு – 21-க்கு தொடர்புடையதாகும்.

சுதந்திரத்தின் இரண்டு கட்டங்கள் (Two Phases of liberty)

நேர்மறை சுதந்திரம் (Positive Liberty)

நேர்மறை சுதந்திரம் என்பது சிலவற்றை செய்வதற்கான சுதந்திரம் ஆகும். இது தனிமனிதன் தன்னுடைய உரிமைகள் மூலம் ஆளுமை தன்மையை மேம்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பளிக்கின்றது.

எதிர்மறை சுதந்திரம் (Negative Liberty)

ஜே.எஸ்.மில்லின் கூற்றுப்படி சுதந்திரம் என்பது எதிர்மறையானதாகும். மனிதனின் மீதும், அவனது செயல்பாட்டின் மீதும் எவ்வகை கட்டுப்பாடுகளும் விதிக்கப்படக் கூடாது என்கிறார். மேலும் மனிதனின் பாதையில் எவ்வகை தடைகளும் இருக்கக் கூடாது என வலியுறுத்துகிறார்.

அ) இயற்கை சுதந்திரம் ( Naturak Liberty)

ஒருவர் நினைப்பதைத் தங்கு தடையில்லாமல் நடத்தி முடிப்பதற்கான சுதந்திரமே இயற்கை சுதந்திரம் என்ற கருத்தாக்கம் ஆகும். முற்றிலுமாக தடைகளில்லாத, கட்டுப்பாடுகளற்ற மற்றும் ஒருவர் நினைக்கக்கூடியதை செய்யக்கூடிய சுதந்திரமே இயற்கை சுதந்திரம் ஆகும்.

அனைவருக்குமே சுதந்திரத்தைப் பற்றிய தெளிவற்ற பார்வைகள் உண்டு. அது அவரவர்களின் விருப்பத்தைப் பொறுத்து அமைகிறது. பத்து நபர்கள் சுதந்திரத்தைப் பற்றி கருத்துரைக்கிறார்கள் எனும்போது ஒரு வேளை எந்த இருவேறு நபர்களும் அவர்களின் சுதந்திரத்தைப் பற்றிய வரையறையில் ஒன்றுவது இல்லை. மேலும் சுதந்திரத்தின் கருப்பொருளையும் அவர்கள் விரும்பிய வகையில் தெளிவாகக் கூறுவதில்லை. இந்தப் பொதுப்படையான அறிவியல் சார்பில்லா சொற்பிரயோகத்தினையே இயற்கை சுதந்திரம் என்கிறோம்.

  • பேராசிரியர் ஆர்.என்.கில்ரீஸ்ட் (Professor R.N.Gilchist)

சுதந்திரம் பற்றிய விவாதங்கள்

ஜான்லாக் (JohnLocke):

இயற்கை நிலையில் மனிதர்கள் வாழ்வுரிமை, சுதந்திர உரிமை மற்றும் சொத்துரிமை ஆகியவற்றினை அனுபவித்தார்கள்.

எதிர்வாதம்: இது முழுமையாக தவறாகும், இதற்கு காரணம் அரசு என்பது மட்டுமே மேற்கூறிய உரிமைகள் அனுபவிப்பதற்கு உத்திரவாதமளிக்கிறது. இயற்கை நிலையில் உரிமைகள் அல்லாமல் மிருகங்களுக்கு உண்டான வலிமையை மட்டுமே மனித இனம் பெற்றிருந்தது.

ரூசோ (Rousseau): மனிதன் சுதந்திரமாக பிறக்கிறான். ஆனால் எங்கெங்கு காணினும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறான்.

எதிர்வாதம் :

ரூசோவுடைய கருத்தின்படி, மனிதனின் ஆளுமைத்தன்மை வளர்ச்சி அடைய வாய்ப்பில்லை. சமூக ஒப்பந்த கோட்பாட்டியலாளர்களின் கூற்றுப்படி சுதந்திரம் ஓர் உரிமமான மட்டுமே வழங்கப்படுகிறது. மனிதர்களை தாங்கள் விரும்பும் செயல்களை செய்வதற்கு அனுமதித்தால், அங்கு குழப்பமே மிஞ்சுகிறது.

ஆ) குடிமைச் சுதந்திரம் (Civil Liberty)

சட்டத்தின் ஆட்சியை பிரதிபலிப்பதே குடிமை சுதந்திரத்தின் கருத்தாக்கமாகும். இது குடிமக்கள் சமுதாயத்தில் அனுபவிக்கும் சுதந்திரம் அரசில் உள்ளது என்பதைக் குறிப்பதாகும். சட்டத்தின் வரன்முறைகளுக்கு உட்பட்டு அச்சுதந்திரம் அனுபவிக்கப்படுகிறது. குடிமை சுதந்திரத்தை , பாதுகாப்பதற்கு உண்டான உத்திரவாதத்தை அரசின் சட்டங்கள் வழங்குகின்றன.

  • மனிதர்களுக்கிடையேயான வரையறுக்கப்பட்ட சட்டங்களும், உறுதியான நிறைவேற்றுதல் மற்றும் சட்டத்தின் முன் சமத்துவமும் மனிதனின் குடிமை சுதந்திரத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்கிறது.
  • கெட்டல் (Gettel)

இ) அரசியல் சுதந்திரம் (Political Liberty)

  • அரசியல் சுதந்திரத்தின் கருத்தாக்கம் என்பது குடிமக்கள் அரசியல் வாழ்வில் பங்கேற்பதுடன், அரசின் நடவடிக்கைகளில் கலந்து கொள்வதும் ஆகும். லீலாக் என்னும் அறிஞர் அரசியல் சுதந்திரத்தை ‘அரசமைப்பு சுதந்திரம்’ என்று கூறுகிறார்.
  • கில்கிரிஈஸ்ட் என்னும் அறிஞர் அரசியல் சுதந்திரத்தை மக்களாட்சியோடு ஒத்த பொருளுடையது என்று கருதுகிறார். அரசியல் சுதந்திரம் என்பது குறைந்தபட்ச உரிமைகளை உள்ளடக்கியதாகும். வாக்குரிமை, தேர்தலில் போட்டியிடும் உரிமை, பொதுக்கருத்து உரிமை, அரசாங்கத்தின் குறைபாடுகளை எடுத்துரைக்கும் உரிமை, மனுசெய்யும் உரிமை போன்றவை இவ்வகை உரிமைகளாகும்.

ஈ) தனிப்பட்ட சுதந்திரம் (Personal Liberty)

  • எந்தவொரு அடக்குமுறையோ அல்லது சட்டவிரோதமான கட்டுப்பாடுகளோ இல்லாமல் தனிமனிதர்கள் தாங்கள் நினைக்கும் காரியங்களை செயல்படுத்தும் நிலையினை இச்சுதந்திரம் எடுத்துரைக்கின்றது.
  • மேலும் எந்த ஒரு தனிநபரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், அடுத்தவர்கள் குறுக்கிட அனுமதிக்காத உரிமையும் இவ்வகையைச் சேர்ந்தது ஆகும். அனைத்து தனிநபர்களுக்குமே உடுத்துதல், உண்ணுதல், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், திருமணம் மற்றும் குழந்தைகளின் கல்வி போன்றவைகளில் தனிப்பட்ட உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
  • அரசு, தனிநபர் விவகாரத்தில் தலையிடுவது ஆகாது. தனிமனித சுதந்திரம் என்பது மனித சமுதாயம் சுதந்திரமாக மேம்படுவதற்கு ஒத்துழைப்பு நல்குகிறது.
  • சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துவதாலும், மேலும் சுதந்திரத்தின் மூலம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாலும் சுதந்திரத்திற்கு ஆபத்தான நிலை உருவாக்கப்படலாம்.
  • ஜேம்ஸ் மாடிசன் (James Madison)

உ) பொருளாதார சுதந்திரம்

ஒருவரின் அன்றாட வாழ்வாதாரத்திற்கான உணவை தேடி கொள்ளும் தனிநபர் சுதந்திரம் என்பது பொருளாதார சுதந்திரம் ஆகும். நியாயமான வழிமுறைகளின் மூலமாக ஒருவரின் அன்றாட வாழ்வாதாரத்தைப் பூர்த்தி செய்து கொள்ள சாதி, நிறம் , இனம் மற்றும் பாலினம் போன்றவைகளுக்கு அப்பாற்பட்டு சுதந்திரமாக வருவாய் ஈட்டுவதே பொருளாதார சுதந்திரம் ஆகும்.

  • பொருளாதார சுதந்திரம் என்றால், தனிமனிதருக்கு உண்டான, தேவைப்படுகிற அன்றாட வருவாய் மற்றும் உணவை தேடிக்கொள்ள ஏற்படுத்தப்படும் பாதுகாப்பு மற்றும் வாய்ப்புமாக நான் கருதுகிறேன். வேலையில்லா திண்டாட்டத்திலிருந்தும், போதாமை மற்றும் இல்லாமையிலிருந்து உருவாக்கும் பயத்திலிருந்தும் நான் விடுதலை அடைய வேண்டும். ஏனெனில் இவ்வகையான பயம் ஆளுமைத்தன்மையின் வலிமையை குறைக்கச் செய்கிறது. நாளைய தேவையிலிருந்து விடுபட நான் பாதுகாப்புடன் வாழ விரும்புகிறேன்.
  • ஹெரால்டு. J.லாஸ்கி (Harold.J.Laski)

சுதந்திரத்திற்கான சரியான வரையறை இதுகாறும் இவ்வுலகத்தில் எழுதப்படவில்லை. மேலும் அமெரிக்க குடிமக்களுக்கு தற்சமயம்தான் அந்த வரையறை தேவைப்படுகிறது. நாம் அனைவரும் சுதந்திரத்தை அறிவித்திருக்கிறோம், ஆனால் அந்த ஓநாயோ, அவனை சுதந்திரத்தை ஒழிப்பவன் என குறை கூறுகிறது. ஏனெனில் குறிப்பாக அந்த ஓநாய்க்கும், கறுப்பு செம்மறியாட்டிற்கும் சுதந்திரம் தொடர்பான ஒத்த கருத்துக்கள் அமைவதில்லை. இதைப் போலவே தான் மனித இனத்திற்கு இடையேயும் தற்பொழுதும் சுதந்திரத்தைப் பற்றிய வேறுபாடுகள் உள்ளன.

  • ஆப்ரகாம் லிங்கன் (Abharam Lincoln)

சுதந்திரம் பரவுதல்

சுதந்திரம் என்பது அரசின் முக்கிய நிலைமையாக கருதப்படுகிறது. இது மனிதர்களின் ஆளுமைத்தன்மையை மேம்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாகவும் அமைகின்றது.

ஏ) நிதி சுதந்திரம்

  • பிரதிநிதித்துவம் இன்றி வரிவிதிப்பு கூடாது என்பது இச்சுதந்திரத்தின் கொள்கையாகும். தங்களுடைய வரிப்பணம் எவ்வாறு செலவிடப்பட வேண்டும். யாருக்குபோய் சேர வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும் என்பது நடுத்தர வர்க்கத்தின் கோரிக்கையாகும்.
  • குடிமை மற்றும் நிதி சுதந்திரம் ஆகிய இவ்விரண்டுமே உரிமையாளர்களின் உடைமையையும், உரிமையையும் சார்ந்ததாகும். குடிமை மற்றும் நிதி சுதந்திரம் இல்லாமல் தங்களால் வாழவே இயலாது என்பது நடுத்தரமக்களின் கூற்று ஆகும்.
  • மேற்குறிப்பிட்ட சுதந்திரங்கள் முறையே இல்லாதுபோயின் , தன்னிச்சையான ஆட்சியால் தாங்கள் சுரண்டப்படுவதுடன் உயிர் வாழ்வதும் இயலாத காரியம் என்பது நடுத்தர மக்களின் எண்ண வெளிப்பாடக விளங்குகிறது.

ஐ) குடும்பம் சார்ந்த சுதந்தரம்

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சமமான உரிமையை வழங்குவது இவ்வகை சுதந்திரமாகும். கொடுமையாக நடத்துதல், இம்சித்தல் மற்றும் சுரண்டல் போன்ற அநாகரீகமான செயல்களுக்கு எதிராக அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பெண்களுக்கும் , குழந்தைகளுக்கும் கல்வியுரிமை வழங்க வேண்டும் என்பதே குடும்ப சுதந்திரத்தின் சிறப்பு அம்சங்களாகும்.

ஒ) தேசிய சுதந்திரம்

  • ஒரு நாடு அல்லது தேசத்தில் நிலவக்கூடிய சுதந்திர சூழ்நிலையை தேசிய சுதந்திரம் என்கிறோம். ஒரு தேசமோ அல்லது சமூகமோ சுதந்திரம் மற்றும் இறையாண்மையுடன் கூடிய நிலையை அடையும் போது தேசிய சுதந்திரம் இருக்கிறது எனலாம். இதையே தேச சுதந்திரம் அல்லது தேச இறையாண்மை என்றும் குறிப்பிடலாம்.
  • அனைத்து தேசங்களும் சுதந்திரமாக இருப்பதையே விரும்புகின்றன. சுதந்திரம் இல்லாத சூழ்நிலையில், அத்தேசம் வளர்ச்சிப் பாதையில் செல்ல இயலாது.
  • ஏகாதிபத்தியத்தின் கட்டுக்குள் இருந்த அத்தனை நாடுகளுக்கும் விடுதலை என்பது இறுதி முழக்கமானது. இவ்வாறாக, ஏகாதிபத்ய சக்திகளால் பாதிக்கப்பட்ட தேசங்கள் அத்தனையுமே அயல்நாட்டு ஆட்சியையும், ஆக்கிரமிப்பையும் எதிர்த்து சுதந்திரம் பெறும்வரை போரட்டத்தில் ஈடுபட்டன.
  • ஆஸ்திரியாவுக்கு எதிரான இத்தாலியின் போராட்டம், ஆப்பிரிக்க நாடுகளின் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம், இங்கிலாந்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டம் போன்ற உதாரணங்கள் தேசத்தின் சுதந்திர வேட்கை பற்றிய வரலாற்று நிகழ்வுகளாகும்.
  • இந்தியாவின் மீது சீனா 1962-ல் தாக்குதல் தொடுத்த போதும், பாகிஸ்தான் முறையே 1965, 1971-ல் தாக்குதல் நடத்தியபோதும் இந்திய அரசாங்கம் தேச சுதந்திரத்தை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.

அடிப்படை சுதந்திரத்தை சிறிய அளவிலான தற்காலிக பாதுகாப்பிற்காக யாரேனும் துறந்தால் அவர்கள் சுதந்திரமோ அல்லது பாதுகாப்போ கிடைப்பதற்கு தகுதியற்றவர்களாவர்.

  • பெஞ்சமின் பிராங்ளின் (Benjamin Franklin)

சுதந்திரம் என்பது மனிதர்களை நோக்கி வருவது அல்ல, மாறாக மனிதர்களே சுதந்திரத்தை நோக்கி எழுச்சி கொண்டு செல்ல வேண்டும். மகிழ்வுடன் வாழ்வதற்காக சிரமப்பட்டு பெறப்படுகின்ற சுதந்திரம் ஓர் ஆசிர்வாதமாகும்.

  • புது தில்லி, மத்திய செயலகத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

ஓ) பன்னாட்டு சுதந்திரம்

  • உலக நாடுகளின் கூட்டாட்சியையும், மற்றும் பன்னாட்டு கூட்டுறவையும் ஏற்படுத்தக் கூடிய பன்னாட்டு அமைதியே இவ்வகை சுதந்திரத்தின் கருத்தாக்கமாகும்.
  • தேசிய கொள்கையில் வலிமையை ஓர் காரணியாக பயன்படுத்துவதை தாராளவாதிகள் எதிர்க்கின்றார்கள். முதலாளித்துவமானது அமைதி மற்றும் பன்னாட்டு கூட்டுறவின் மூலமாக உலக வளங்கள் மேலும் மேன்மையடையவும் , ஒரு நட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு பொருட்கள் தங்குதடையின்றி செல்வதற்கும் வேண்டுகிறது.
  • இதற்கு அரசியல் மற்றும் ஏனைய தடைகளை தகர்த்தெறியவும் இக்கொள்கை பாடுபடுகிறது. இதனால் உலக நலன்கள் மேம்பாடு அடைகின்றன.

குறியீட்டு பொருள்

சுதந்திரதேவி சிலைக்கென்று ஒரு குறிக்கோள் உள்ளது. அது விடுதலையை பற்றிய உலகளாவிய நினைவூட்டலாகவும், அமெரிக்க குடிமக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாகவும் அமைந்துள்ளது.

ஆன்ட்ரூ ஹேவுட்டின் சுதந்திரம் பற்றி லட்சியவாதப் பார்வை

தாராளவாதிகள்:

சுதந்திரத்தை தலையாய தனிமனிதத்துவ விழுமியமாக கருதி முன்னுரிமை அளிக்கிறார்கள். மரபுவழி தாராளவாதிகள் எதிர்மறை சுதந்திரத்தை ஆதரிக்கின்றார்கள். எதிர்மறை சுதந்திரம் என்பது முழுவதுமாக கட்டுப்பாடற்ற அல்லது விருப்புரிமை வாய்ப்பற்ற சுதந்திரமாகும். ஆனால் நவீன தாராளவாதிகள் நேர்மறை சுதந்திரம் அல்லது கட்டுப்பாடான சுதந்திரத்தை பேணுகின்றார்கள். ஏனெனில் கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்திரமே மனிதம் மலர்வதற்கும், தனிமனித மேம்பாட்டிற்கும் உறுதுணையாக அமையும்.

பழமைவாதிகள்:

சுதந்திரத்தின் வலிமையற்ற பார்வையை ஆதரிக்கின்றார்கள். இவற்றையே கடமைகளையும், பொறுப்புகளையும் விருப்பத்துடன் அங்கீகரிப்பதாக கருதுகிறார்கள். அதே சமயம் எதிர்மறை என்பது சுதந்திரம் சமூகத்தின் கட்டமைப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. ஆனால் அவர்கள் எதிர்மறை சுதந்திரத்தை பொருளாதார துறையிலும், சந்தைகளின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் வலியுறுத்துகின்றனர்.

சமதர்மவாதிகள்:

சுதந்திரம் பொதுவாக நேர்மறையாக புரிந்து கொள்ளப்படுகிறது, கூட்டுறவு சமூக தொடர்பு அல்லது படைப்பாக்க உழைப்பு மூலமாக சுயதிருப்தி அடைவதை சுதந்திரமாக அணுகுகின்றார்கள். சமூக மக்களாட்சிவாதிகள் நவீன சுதந்திரத்துவத்துடன் ஒத்த கருத்தாக, சுதந்திரத்தை தனிமனித திறமையின் மெய்ப்படுதலாக பாவிக்கின்றார்கள்.

அமைப்பெதிர்வாதிகள்,

அரசியல் அதிகாரத்துவத்துடன் எவ்விதத்திலும் ஒத்துபோகாத, முழுமையாக விழுமியமாக சுதந்திரம் கருதப்படுகிறது. சுதந்திரம் என்பது சுயவிருப்பமும், சுய இயக்கமுமாக தனிமனிதனின் தன்னாட்சி நிலையை ஊக்குவிக்கும் சூழ்நிலையாக பார்க்கப்படுகிறது. வெறுமனே “தனித்துவிடுதல்” என்பது சுதந்திரம் அல்ல. பகுத்தறிவிலான சுய விருப்பம் மற்றும் சுய வழிகாட்டுதலாகும்.

பாசிசவாதிகள்,

சுதந்திரம் அனைத்து விதத்திலும் , ஒவ்வாது என்பது இவர்களின் வாதம். உண்மையான சுதந்திரம் என்பது தலைமையிடம் எந்த கேள்விக்கும் இடமில்லாமல் சரணாகதி அடைவதும், தேசத்துக்காக தனிமனிதத்தை தியாகம் செய்யவுமாக இருக்கக்கூடிய சமூகமே சுதந்திரமானது என்பது பாசிசவாதிகளின் கருத்தாகும்.

சூழலியலாளர்கள்,

தனிப்பட்ட சுயநலத்தை உலக சூழலில் கல்ந்து சுய உணர்தலையும், ஒருமித்த தன்மையும், அடைவதே சுதந்திரம் என்பதாகும். அரசியல் சுதந்திரத்திற்கு முரணாக சில சமயங்களில் உள்ளார்ந்த சுதந்திரம் மற்றும் சுய அறிதலுக்கான சுதந்திரத்தையும் ஆதரிப்பவர்கள் இக்கோட்பாட்டாளர்களாவர்.

மத அடிப்படைவாதிகள்,

ஆழ்மனதின் உள்ளார்ந்த ஆன்மிக நல்லியல்பை போற்றுவதே சுதந்திரமாக இவர்களால் கருதப்படுகிறது. இறைவனின் விருப்பத்தை வெளிப்படுத்துவதும், மதவாத அதிகாரத்துவத்திற்குத் தலைவணங்கி ஆன்மீக மன திருப்தியை அடைவதுமே சுதந்திரத்தின் பாதையாகிறது.

ஹேவுட் ஆண்ட்ரு (2004) அரசியல் லட்சியவாதங்கள் ஓர் அறிமுகம், 4-ஆம் பதிப்பு, நியூயார்க்: மேக்மில்லன் (Heywood, Andrew. (2004) Political Ideologies: An Introduction , 4th ed. New York: Macmillan)

சுதந்திரம், இறையாண்மை மற்றும் சட்டம் ஆகியவை எவ்வாறு ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது?

சுதந்திரம் என்பது முழுவதுமான சட்டங்களில்லாத நிலையல்ல. அரசு ஒழுங்குமுறையில் இயங்கினால் மட்டுமே சுதந்திரம் செயல்படுகிறது.

அரசு சட்டங்களை இயற்றுகிறது. இறையாண்மை மிக்க அரசு செயல்படுவது சட்டங்களால் மட்டுமே ஆகும். சுதந்திரம், இறையாண்மை மற்றும் சட்டம் ஆகியவற்றிற்கு இடையே நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது. அமைப்பெதிர்வாதிகள் போன்றோர் அரசை அழிக்க விரும்புகிறார்கள். அரசு அதிக அதிகாரம் படைத்ததாக செயல்படும்போது, தனிமனித சுதந்திரம் குறைக்கப்படுகிறது என்பது அவர்களுடைய கருத்தாகும்.

அமைப்பெதிர்வாதம் என்பது ஒழுங்கற்ற தன்மையோ அல்லது குழப்பமான நிலையோ அன்று மாறாக அடக்குமுறையிலான மையப்படுத்தப்பட்ட அதிகாரத்துசத்தின் ஏகபோக ஆற்றல், அதிகாரத்திலிருந்து சுதந்திரம் பெறுவதாகும்.

தனிமனிதத்துவாதிகளின் கருத்துக்கள்

இவர்கள் அரசை தனிமனித சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் கருவியாக சித்தரிக்கின்றனர். இதனால் அரசின் அதிகாரம் குறைக்கப்பட வேண்டும் என உரைக்கப்பட்டு இங்கிலாந்தில் இவ்வகையான கொள்கை பல ஆபத்தான விளைவுகளை உண்டாக்கியது. தற்போதைய காலக்கட்டத்தில் உலக அளவில் சட்டமே சுதந்திரத்தின் பாதுகாவலானாக விளங்குவதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். சட்டம் இல்லாவிட்டால் சுதந்திரம் இருக்காது.

சட்டங்கள் இல்லையென்றால் அங்கே சுதந்திரம் இல்லை.

  • ஜான்லாக் (John Locke)

லட்சியவாதிகளின் கருத்து

சட்டம் இல்லாவிட்டால் சுதந்திரமான சூழ்நிலை இருக்காது. லட்சியவாதிகளின் கூற்றுப்படி சட்டத்திற்கு கீழ்பணிதல் என்பது உண்மையான விருப்பத்திற்கு கீழ்பணிதல் ஆகும்.

பூமியில் இறைவனின் ஆட்சியே அரசு எனப்படுகிறது. மேலும் சமூக நீதிநெறியின் உறுப்பாகவும், நன்னெறி மேலான வெளிப்பாடாகவும் அரசு விளங்குகிறது.

  • ஹெகல் (Hegel)

சட்டம் எவ்வாறு சுதந்திரத்தை பாதுகாக்கிறது?

  • சமூகத்தில் குடிமை வாழ்வை எவ்வித பிரச்சினையும் இன்றி நடத்துவதற்குண்டான இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. சட்டம் குற்றவாளிகளை தண்டித்து தனிமனிதர்களின் உரிமைகளை பாதுகாக்கின்றது.
  • தனிமனித உரிமைகள் மற்றும் கடமைகளுக்கு சட்டம் உத்திரவாதம் அளிப்பதுடன் அவற்றை பாதுகாக்கவும் செய்கிறது. சக மனிதர்களுக்கு, ஒருவர் தீங்கு விளைவிக்கும்போதும், அவர்களின் வழியில் குறுக்கிட்டு சீர்குலைக்கும் போதும் அரசு அவர்களை தண்டிக்கிறது.
  • சுதந்திரத்தின் பாதுகாவலனாக அரசமைப்பு விளங்குகிறது. அரசின் அதிகாரத்துவத்தை கட்டுப்படுத்துவதுடன் மக்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்கின்றது.

சுதந்திரம் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது?

ஒரு நிலையான இராணுவத்தை விட, கல்வி என்பது சுதந்திரத்தின் சிறந்த பாதுகாவலாகும்.

  • எட்வார்ய் எவ்ரட் (Edward Evedrett)

அ) மக்களாட்சி

வேறு எந்த அரசாங்க முறையையும் விட சுதந்திரம் என்பது மக்களாட்சியில் பாதுகாப்பாக இருக்கிறது எனலாம். மக்களின் அரசாங்கமாக மக்களாட்சி செயல்படுகிறது. ஏனைய ஆட்சிகளான முடியாட்சி மற்றும் சர்வாதிகார ஆட்சி ஆகியவை அதிகார குவிப்பை ஒருவரிடமோ அல்லது குழுமத்திடமோ ஒப்படைக்கின்றன. மக்களாட்சியில் எதிர்க்கட்சிகள் தகுந்த மரியாதையுடன் நடத்தப்படுகின்றன. அரசாங்கத்தை பற்றிய குறைகூறல் என்பது மக்களாட்சியில் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டு சகித்துக் கொள்ளப்படுகின்றன.

ஆ) அரசமைப்பு

ஒரு நாட்டின் அரசமைப்பில் இருந்து தான் அரசின் அதிகாரத்துவம்/ ஆணையுரிமை பெறப்படுகிறது.

நாம் அரசமைப்பின் முகவுரையை தெளிவாகவும், கவனமாகவும் படித்து புரிந்து கொள்வோம். மக்களாட்சியைப் பற்றிய கவிதையாக இந்திய அரசமைப்பின் முகவுரை விளங்குகிறது. இது ஒட்டுமொத்த இந்திய அரசமைப்பினுடைய அடிப்படை தத்துவத்தை தன்னுள் கொண்டதாகும். அரசாங்கத்தால் உருவாக்கப்படுகின்ற சட்டமும், அதனால் நிறைவேற்றப்படுகின்ற மக்கள் நல நடவடிக்கைகளும் , மக்கள் நலனிற்கு உகந்ததா, இல்லையா என்பதை ஆராய்ந்து மதிப்பிடும் தன்மை படைத்தது அரசமைப்பு முகவுரையாகும். இந்திய அரசமைப்பின் ஆன்மாவாக முகவுரை கருதப்படுகிறது.

இ) அடிப்படை உரிமைகள்

அரசின் அதிகாரத்துவத்தை வரையறுப்பது அடிப்படை உரிமைகள் ஆகும். தனிமனிதர்களின் சொந்த விவகாரங்களில் அரசாங்கத்தின் தலையீடின்றி இருப்பதற்கு இவ்வகை உரிமைகள் உறுதியளிக்கின்றன.

ஈ) அதிகாரப் பரவலாக்கம்

சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு அதிகாரப் பரவலாக்கம் அவடியமாகின்றது. அதிகாரங்கள் முறையே மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அரசாங்கத்திற்கு பகிர்ந்து அளிக்கும்பட்சத்தில் நிர்வாகம் திறம்பட செயலாற்ற இயலும்.

அடிப்படை உரிமைகள்

  • சமத்துவ உரிமை (உறுப்பு 14 – 18)
  • சுதந்திர உரிமை ( உறுப்பு 19 – 22)
  • சுரண்டலுக்கு எதிரான உரிமை (உறுப்பு 23-24_
  • மதச் சுதந்திர உரிமை (உறுப்பு 25 – 28)
  • பண்பாடு மற்றும் கல்வி உரிமை (உறுப்பு 29 – 30)
  • அரசமைப்பு பரிகார உரிமைகள் (உறுப்பு 32 -35)

சுதந்திரமான நீதித்துறை

குடிமக்களின் சுதந்திரத்திற்கான பாதுகாப்பு என்பது நீதித்துறையின் சுதந்திரத்தைச் சார்ந்தே அமைகிறது. நீதித்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டுமெனில் , செயலாட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து தனித்திருப்பது அவசியமாகும். பொதுவுடைமை மற்றும் சர்வாதிகார நாடுகளில் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டாலும் நீதித்துறை செயலாட்சியின் ஆதிக்கத்தில் அமைகிறது. இவ்வாறான நாடுகளில், அடிப்படை உரிமைகளை பாதுகப்பதும், சுதந்திரத்தை பேணுவதும், அரசமைப்பினை நடைமுறைப்படுத்துவதும் கடினமாகும்.

உ) பொருளாதார இடர்காப்பு

சுதந்திரத்தின் நிபந்தனையாக பொருளாதார சுதந்திரம் அமைகிறது. “ஏழை மற்றும் பணக்காரர், படித்தவர் மற்றும் படிக்காதவர் என்ற பிரிவினை சமூகத்தில் நிலைக்கும் வரையிலும் எஜமானர் மற்றும் பணியாளர் என்ற உறவுமுறை நீடிக்கும்”.

ஊ) சட்டத்தின் ஆட்சி

சட்டத்தின் ஆட்சி என்பது இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ளது. சாதி, இனம், நிறம் மற்றும் நம்பிக்கை போன்றவைகளில் வேறுபாடுகள் இல்லாத சமமான ஆட்சியே சட்டத்தின் ஆட்சியாகும். சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம். குற்றங்களில் ஈடுபடும்போது தண்டனைக்கு உள்ளாக வேண்டிய நிலை அனைவருக்குமே ஏற்படுகிறது.

சுதந்திரமான நீதித்துறை

இந்திய அரசமைப்பு, நீதித்துறை சுதந்திரமாக செயல்படத் தகுந்த முறையிலான அம்சங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சுதந்திரமாக செயல்படும் நீதித்துறையே, மக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும், அரசமைப்பின் மேலான தன்மையையும் பாதுகாக்கிறது.

  • நீதிபதிகளின் நியமனத்திற்கு பாகுபாடற்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.
  • நீதிபதிகளுக்கு, உயர்ந்த தகுதிகளை நிர்ணயித்துள்ளது.
  • உச்சநீதிமன்ற நீதிபதிகள் 65 வயது வரையிலும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் 62 வயது வரையிலும் பணியாற்றுவார்கள்.

வறுமை என்பது விபத்து அல்ல. அடிமைத்தனம் மற்றும் நிறவெறி போன்றவை மனிதர்களால் உருவக்கப்பட்டவை ஆகும். இவை மனிதர்களின் நடவடிக்கைகள் மூலம் களையப்பட வேண்டியவையாகும்.

  • நெல்சன் மண்டேலா (nelson Mandela)

இங்கிலாந்து சட்ட நிபுணரான எ.வி. சைசி ‘சட்டத்தின் ஆட்சி’ என்ற கருத்தாக்கத்தினை 19-ஆம் நூற்றாண்டில் மேலும் பிரபலப்படுத்தியவர் ஆவார். முற்கால தத்துவ ஞானிகளுக்கு ‘சட்டத்தின் ஆட்சி’ என்னும் சொற்றொடர் அறிமுகமில்லாவிட்டாலும் அக்கருத்தக்கத்தினை அரிஸ்டாட்டில் எனும் ஞானி ‘சட்டமே ஆளுகை புரிய வேண்டும்’ என எழுதியுள்ளதை காணலாம்.

எ) அரசியல் கல்வி மற்றும் காலவரம்பற்ற கண்காணிப்பு

சுதந்திரம் என்பதை நிர்ந்தரமாக பாதுகாக்க முடியும். கல்வியறிவு பெற்றவர்கள் முற்றிலுமாக உரிமைகளையும் கடமைகளையும் பற்றி அறிவர். காலவரம்பற்ற கண்காணிப்பு இருந்தாலொழிய, மக்கள் தவறுகள் செய்வதை நாம் கண்டறியமுடிவதில்லை. அரசாங்கம் தன் அதிகார எலையை மீறி மக்களின் தனிப்பட்ட வாழ்வில் தலையிடும்போது அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் புரட்சி செய்கிறார்கள்.

“குடிமக்களின் தூய உணர்விலான உத்வேகமானது, சட்டத்தின் வார்த்தைகளை விட குறைவுபடினும் அதுவே அவர்களுக்கு மிகவும் உண்மையான பாதுகாவலாகும்”.

  • ஹெரால்டு.J. லாஸ்கி (Harold .J.Lask)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!