Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Samacheer NotesTnpsc

அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள் பகுதி – II Notes 11th Political Science

11th Political Science Lesson 4 Notes in Tamil

4. அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள் பகுதி – II

சட்டம்

அறிமுகம்

அரசின் இறையாண்மையால் உத்திரவாதம் அளிக்கப்படுகின்ற விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் சட்டம் எனப்படுகிறது. போடின் (Bodin) கூறுவதுபோல, இறையாண்மையின் கட்டளையே சட்டம் ஆகிறது.

இதனைப் போன்று அரிஸ்டாட்டிலும், “சட்டம் செயல்படாத நிலையில் மனிதர்கள் விலங்குகளாக மாறுகிறார்கள்” என்று சரியாக சுட்டிக்காட்டுகிறார். சமுதாயத்தின் கட்டுக்கோப்பினைப் பாதுகாக்கவும், தேசத்தின் வளர்ச்சியை மேம்படுத்தவும், சட்டமானது உலகம் முழுமைக்கும் இன்றியமையாததாகிறது. சமுதாய ஒழுங்கினைப் பராமரிக்க, சட்டத்தின் அபரிமிதமான சக்தி மட்டுமே முழு தீர்வாக விளங்க முடியாது. ஏனெனில் சட்டத்திற்கு என்று ஒரு குறிப்பிட்ட வரையறை உள்ளது. குற்றவாளிகளுக்கு சட்டம் கொடுங்கோலனாகவும் குடிமக்களுக்கும் , நல்லவர்களுக்கும் அதே சட்டம் பாதுகாவலனாகவும் விளங்குகிறது.

உலகத்தின் ஒரு பகுதியில் சட்டம், கடினமானதாகவும் மறுபக்கம் இணக்கமாகவும் விளங்கக்கூடிய காரணம் என்பது எப்போதும் சர்ச்சைக்குரியதாகவும், விவாதத்திற்குரியதாகவும் தொடர்கிறது. மேற்கூறிய வாதமும், விவாதமும் தத்தம் நாடுகளின் பணிகள், குறிப்பாக தண்டனைகளை பொறுத்து அமைகிறது. உதாரணத்திற்கு மக்களாட்சி நாடுகளில் நிறைவேற்றப்படக் கூடிய சட்டம், முற்றதிகார நாடுகளின் சட்டங்களை விட வேறுபட்டதாகவும், மக்கள் நலனுக்காகவுமாக செயல்படுகிறது. இதை தவிர்த்து சட்டம், ஒரு நாட்டு மக்களுக்கு எந்த அளவிற்கு சுதந்திரத்தை வழங்குகிறது என்பது குறிப்பிட்ட சட்டத்தை நிர்வகிக்கும்போதும், செயல்படுத்தும் போதும் தெரிய வருகிறது. உலகின் எந்த நாட்டிலுமே சட்டத்தினை அறியாமை என்பது தண்டனையிலிருந்து தப்பிக்கும் ஒரு காரணியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனவே சட்டத்தின் கருத்தாக்கத்தினை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவதும், அவை அரசமைப்புன் வழங்கும் அடிப்படை சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை என புரிய வைப்பதும் இன்றியமையாததாகிறது.

அறிமுகம்

  • சட்டம் என்றால் என்ன?

அரசால் அமலாக்கம் செய்யப்படுகிண்ற விதிமுறைகளின் தொகுப்பிற்கு சட்டம் என்று பொருள்.

  • சட்டம் – நீதி ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு
  • சமூகத்தில் நீதியை அடைவது சட்டத்தின் குறிக்கோள் ஆகும்.
  • நீதி என்பது எது சரி, எது தவறு, எது நல்லது, எது சமத்துவம் போன்றவைகளை விளக்கக்கூடிய ஓர் புலனாகாத கருத்தாகும்.
  • எனவே ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் எது சரியானதோ அல்லது எது நியாயமானதோ அதைச் செய்வதாகும்.

சட்டத்தின் பொருள்

  • சட்டம் என்கிற வார்த்தை பண்டைய டியூட்டோனிக் (Teutonic) மொழியிலுள்ள “லாக்” என்ற வேர்ச்சொல்லிலிருந்து உருவானதாகும். ‘லாக்’ என்ற சொல்லானது நிலைத்தன்மை அல்லது ஒரே சீரான என்று பொருள்படுகிறது.
  • சட்டமில்லாத சமுதாயம் மற்றும் ஆட்சி, குழப்பவாதத்திலும், கலகத்திலும் முடிவுறும். உண்மையில் சட்டமே வாழ்க்கையை ஒழுங்குபடுத்துகிறது.
  • சட்டம் என்ற சொல் ‘சீரானது’ என்பதைக் குறிக்கிறது. சட்டத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை, இயற்கை சட்டம் மற்றும் மனிதச் சட்டம் ஆகுயவையாகும். இயற்கை சட்டம் இயற்கையையும் , மனிதச் சட்டம் மனிதர்களுன் வாழ்க்கையையும் ஒழுங்குபடுத்துகிறது.
  • அரசியல் அறிவியலில் சட்டம் என்பது மனித நடவடிக்கைகளை வழிநடத்துகிற விதிகளைக் கொண்ட தொகுப்பு ஆகும். அரசின் கடமைகளை அரசாங்கம் செயல்படுத்துகிறது. அதைப் போலவே அரசாங்கம் அரசின் விருப்பத்தை சட்டத்தின் வாயிலாக நிறைவேற்றுகிறது.

சட்டம் பற்றிய கருத்துகள்

  • சட்டம் என்பது இறையாண்மையின் கட்டளை – ஜான் ஆஸ்டின் (John Austin)
  • நீதி நிர்வாகத்தை செயல்படுத்துவதற்காக அரசு அங்கீகரித்த விதிமுறைகளின் தொகுப்பே சட்டம் ஆகின்றது. – சல்மாண்டு (Salmond)
  • க்ராப்’ (Krabbe) என்ற அறிஞரின் கூற்றின்படி, “சட்டம் என்பது விழுமியங்களைச் சார்ந்த தீர்ப்புகளின் வெளிப்பாடு ஆகிறது. மனித வர்க்கம் விரும்புகின்ற ஒழுங்கனைவு மற்றும் இயற்கையை சார்ந்த நீதிநெறியாகவும் சித்தரிக்கப்படுகிறது. – க்ராப்’ (Krabbe)
  • அரசாங்கத்தின் சக்தியாலும், அதிகாரத்தாலும் நிலைப்படுத்தப்பட்ட ஒரே சீரான விதிமுறைகளின் அமைப்பிற்கு சட்டம் என்று பொருள். மேலும் இது நிலைப்படுத்தப்பட்ட எண்ணங்களாகவும் பழக்க வழக்கங்களாகவும் கருதப்படுகிறது. – உட்ரோ வில்சன் (Woodrow Wilson)
  • மனிதர்களின் புற நடவடிக்கைகளுக்காக, இறையாண்மை மிக்க அரசியல் அதிகாரம் மூலம் அமலாக்கம் செய்யப்படும் பொது விதிகளின் தொகுப்பே சட்டமாகும். – ஹாலந்து (Holland)

சட்டத்தின் நோக்கம் என்ன?

  • மேக்ஐவர் (Maclver) என்பாரின் கூற்றுப்படி, “அரசின் ஆதரவில்லையெனில் ஒரு சட்டம், சட்டமாகவே இருக்க முடியாது. சட்டத்தின் நோக்கமானது உறுதியான அடித்தளங்களை நிறுவவும், மனிதர்களின் மெய்யுறுதியை வலிமையாக்கி அதன்மூலம் சமூகத்தின் கட்டமைப்பை மேம்பட செய்வதுமாகும்”.
  • ‘சட்டம்’ எனும்சொல்லானது, அரசியல் அறிவியல் மூலம் மனிதர்களின் நடவடிக்கைகளின் மீது ஆளுகை செய்யவும், அவர்களின் வாழ்வை நெறிமுறைப்படுத்துவதற்குமான விதிகளின் தொகுப்பாகக் கருதப்படுகிறது.
  • “சட்டம் அரசை உருவாக்குவது அல்ல, மாறாக அரசின் அழுத்தமே சட்டத்தை உருவாக்குகிறது” என்று நம்பிக்கையாக ஹாக்கிங் (Hocking) கூறுகிறார்.

சட்டத்தின் நோக்கங்கள் யாவை?

  • அடிப்படை மனித உரிமைகளை பாதுகாத்தல்
  • நியாயத்தை ஊக்குவித்தல்
  • சச்சரவுகளை தீர்த்தல்
  • நீதியை ஊக்குவித்தல்
  • ஒழுங்கையும், நிலைத்தன்மையையும் ஏற்படுத்துதல்
  • விரும்பத்தகுந்த சமூக மற்றும் பொருளாதார நடத்தையை ஊக்குவித்தல்
  • பெரும்பான்மை விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்துதல் (சில பிரச்சனைகளில்)
  • சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாத்தல்.

சட்ட வகைகள்

அ) தனியார் சட்டங்கள் (Private Laws)

குடிமக்களிடையேயான உறவுகளும், அவ்வுறவுகளை கட்டுப்படுத்தும் விதிமுறைகளும் தனியார் சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.

தனியார் சட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தனி நபர்களாகவும், அவர்களுக்கு மேலாகவும், இடையேயும் ஓர் பாரபட்சமில்லாத நடுவராக அரசு இருக்கிறது. –ஹாலந்து (Holland)

ஆ) பொது சட்டங்கள் (Public Laws)

குடிமக்களுக்கும், அரசுக்கும் இடையேயான உறவுகளை முடிவு செய்வது பொது சட்டமாகும். இவ்வகை சட்டத்தில் அரசு நடுவராகவும், கட்சிகாரராகவும் பார்க்கப்படுகிறது.

இ) அரசமைப்புச் சட்டங்கள் (Constitutional Laws)

  • அரசை வழி நடத்தக்கூடிய அடிப்படை சட்டங்கள் அரசமைப்பு சட்டங்கள் ஆகும். அரசாங்கத்தின் செயல்பாடுகளை வரையறுத்து, தெளிவுபடுத்தக்கூடிய சட்டங்களே அரசமைப்பு சட்டங்களாகும்.
  • உதாரணத்திற்கு, குடியரசு தலைவர் தேர்தல், உச்ச நீதிமன்றத்தின் அதிகாரம் மற்றும் பொதுசட்டம், சட்டமன்றத்தால் இயற்றப்படக் கூடிய நிரந்தர சட்டத்திலிருந்து வேறுபடுகிறது.
  • பொதுசட்டம் முன் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு உருவாவதாகும். சட்டமன்றத்தால் இயற்றப்படும் நிரந்தர சட்டமானது, எழுதப்பட்ட சட்டங்களால் ஆன முறை சார்ந்த ஒன்றாகும். இச்சட்டத்தில் பொதுமக்களின் நடவடிக்கைகளை கட்டாயப்படுத்தவோ அல்லது தடைசெய்யவோ சட்டகளும், ஒழுங்குமுறை விதிமுறைகளும் அமைந்துள்ளன.
  • பொதுச்சட்டமானது நீதிபதிகள் தங்கள் தீர்ப்புகளை, முந்தைய தீர்ப்புகளை முன்னுதாரணமாக கொண்டு, அதனடிப்படையில் வழங்க அனுமதிக்கீறது. செயல்பாடுகள், ஆளுநர் நியமனமுறை போன்றவை அரசமைப்பு தொடர்பான நிகழ்வுகளாகும்.
  • அரசாங்கத்தின் செயல்பாடுகளையும், அடிப்படை உரிமைகளையும், அதிகாரங்களையும் பற்றியதாக இல்லாமல், குடிமக்களுடைய சமூக மற்றும் பொருளாதார நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டிருந்தால் அவை சாதாரண சட்டங்கள் எனப்படும். உதாரணத்திற்கு குழந்தை திருமணங்கள் மற்றும் மதுபானத்தின் மீதான தடை போன்றவைகள் சாதாரண சட்டங்களின் கீழ் அமைகிறது.

ஈ) நிரந்தர சட்டங்கள் (Statute Laws)

நிரந்தர சட்டங்கள் என்பவை மாநில சட்டமன்றத்தின் மூலமாகவும் , நாடாளிமன்றத்தின் மூலமாகவும் இயற்றப்படும் சட்டங்களாகும். மக்களாட்சி நாடுகளில் பெரும்பான்மையான சட்டங்கள் நாடாளுமன்றத்தின் மூலமாகவே இயற்றப்படுகின்றன.

உ) அவசர சட்டம் (Ordinance)

பொதுவாக அரசினுடைய சட்டங்களின் அடிப்படையில் , அரசாங்கத்தின் செயலாட்சி துறை மூலம் இது பிறப்பிக்கப்படுகின்றது. இவ்வகை சட்டம், குறைந்த கால கட்டமே நீடிக்கும். நாடாளுமன்றம் இயங்காத காலங்களிலும், அவசர காலங்களிலும் குடியரசு தலைவர் மூலம் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்.

ஊ) பொது சட்டங்கள் (Common Laws)

பொது சட்டங்களானது மரபுகளையும், பாரம்பரிய பழக்க வழக்கங்களையும் அடிப்படையாக கொண்டது. ஆனால் நிரந்தர சட்டங்களை போல நீதிமன்றங்களால், அமலாக்கம் செய்யக்கூடிய தன்மை உடையதாகும். பொது சட்டங்கள் இங்கிலாந்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சட்டங்கள் ஆகும்.

எ) நிர்வாக சட்டங்கள் (Administrative Laws)

  • அரசாங்க பணியாளர்களின் அலுவல் மற்றும் பொறுப்புகளை பற்றி விளக்கமளிப்பதுடன், ஆளுகையை முறைப்படுத்துவதற்கான சட்டம் நிர்வாக சட்டம் எனப்படும்.
  • தனி மனிதர்களுக்கும், பொதுநிர்வாக அதிகாரிகளுக்கும் இடையே சட்டத்தையும் , அதன் செயல்பாட்டையும் பிரித்து நடைமுறைப்படுத்துவது நிர்வாக சட்டமாகும். மேலும் இது அரசாங்க அதிகாரிகளின் சலுகைகளை பற்றி விளக்கம் அளிக்க முயலுகிறது.
  • இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நிர்வாக சட்டம் பிரபலம் அடையவில்லை. பிரான்ஸ் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் இவை பிரபலமாக உள்ளன.
  • உதாரணத்திற்கு குடிமக்களுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையே சர்ச்சை ஏற்படும் பட்சத்தில் நிர்வாக நீதிமன்றம், நிர்வாக சட்டத்தின் மூலம் தீர்வு காண்கிறது.

ஏ) பன்னாட்டு சட்டங்கள் (International Laws)

  • பன்னாட்டு சூழலில் நாகரீகமடைந்த நாடுகளுக்கு இடையேயான உறவுமுறைகளையும், நடத்தையையும் நிர்ணயிக்கும் சட்டம், பன்னாட்டு சட்டமாகும்.
  • பன்னாட்டு உறவுகளை ஒழுங்குபடுத்துவதற்கென்று, தனித்தன்மையுடைய பன்னாட்டு சட்டம் என்ற ஒன்று வழக்கில் இல்லை. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையும், உலக பொதுமக்களின் கருத்துமே, ஒவ்வொரு நாடும் தங்கள் இறையாண்மையை முழுவதுமாக அனுபவிக்க வழிவகை செய்கின்றது.
  • மேலும் கடல் எல்லை பாதுகாப்புச் சட்டம், வான்எல்லை சட்டம் என்றும் பன்னாட்டு சட்டங்களின் பிரிவுகள், தரைவழி, கடல்வழி, ஆகாய வழி என்று நாடுகளுக்கிடையே சர்வதேச எல்லைகளை வரையறுக்கிறது.
  • வான்எல்லைச் சட்டங்களின் மூலம் ஒரு நாட்டின் ஆகாய விமானம் இன்னொரு நாட்டின் வான் எல்லையில் பறக்கும்போது அனுமதி பெற்ற பிறகே பறக்க வழி செய்கிறது.

சட்டத்தின் மூல ஆதாரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

அ) வழக்காறுகள் (Customs)

  • சட்ட உருவாக்கத்திற்கு பழக்கவழக்கங்கள் மிகவும் உதவி புரிந்துள்ளன. பழக்கவழக்கங்களின் மூலமாக பயன்படுத்தப்பட்டுவந்த வழக்காறுகள் யாவும் நாளடைவில் அரசால் அங்கீகரிக்கப்பட்டு சட்டமாகின.
  • ஆதிகாலத்திலிருந்து பழங்குடியினரிடையேயான சர்ச்சைகளும், பிரச்ச்னைகளும் அக்குடியினுடைய தலைவரின் மூலமாக அவர்களின் வழக்காறுகள் மற்றும் மரபுகளின் வழியே தீர்வு காணப்பட்டு வருகிறது.
  • பழங்குடிகள் நாளடைவில் அரசுடன் இணைத்துக் கொள்ளப்படும்போது அம்மக்கள் பின்பற்றிய பழக்கவழக்கங்களும் படிப்படியாக சட்டங்களாக்கப்பட்டன. ஒரு நாட்டின் மரபுகளையும், பழக்க வழக்கங்களையும் அரசால் மறுதலிக்க முடிவதில்லை.
  • இன்றளவில் இங்கிலாந்தின் , பொது சட்டமானது வழக்காறுகளில் இருந்து பெறப்பட்டது என்பது ஒரு முக்கிய உதாரணமாகும்.
  • உதாரணத்திற்கு இந்தியாவில் தமிழ் மக்களிடையே ‘ஏறு தழுவுதல்’ (Bull Taming Sport) என்ற பண்பாடு சார்ந்த விளையாட்டானது 2017-ஆம் ஆண்டி ‘ஜல்லிக்கட்டு சட்டம்’ என்ற புதிய சட்டம் உருவாகக் காரணமாக அமைந்தது.

ஆ) மதம் (Religion)

ஆதிகால சமூகங்கள் பின்பற்றிய மத சம்பிரதாயங்களும் அரசினுடைய, சட்ட உருவாக்கத்தில் பெரிதான பங்கை ஆற்றியுள்ளது. பெரும்பான்மையான நாடுகளில் மதமே சட்டத்தின் அடிப்படையாக அமைந்துள்ளது. இந்து மதச் சட்டமானது பெரும்பாலும் மனுவின் விதிமுறையிலிருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இஸ்லாமியச் சட்டமானது ஷரியத் சட்டங்களின் மூலத்திலிருந்து பின்பற்றப்படுகிறது. தெய்வீகச் சட்டமானது, மனிதனின் மூலமாக கடவுள் வழங்கிய சட்டங்கள் என்று கருதப்படுகிறது. தெய்வீக சட்டத்தின் ஆதிமூலமாக கடவுளே இருப்பதாகக் கருதப்படுகிறது. கிறித்துவர்களுக்கு, அவர்களின் பரமபிதா முதன்முதலில் அருளிய பத்து கட்டளைகளே சட்டத்தின் அடிப்படையாகக் கருதப்படுகிறது.

அலங்காநல்லூர் – ஜல்லிக்கட்டு

இந்த படம் ஏறுதழுவுதல் என்ற தமிழரின் பண்பாடு விளையாட்டான ஜல்லிக்கட்டு பற்றியது ஆகும். இது மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும். அலங்காநல்லூர் என்றால் ஜல்லிகட்டு என்றும், ஜல்லிகட்டு என்றால் அலங்காநல்லூர் என்றும் அழைக்கப்படுமளவுக்கு அவ்வூரின் பண்பாடு மற்றும் வரலாற்றுடன் அவ்விளையாட்டு ஒன்றிணைந்துள்ளது. இது பொதுவாக பொங்கள் கொண்டாடப்படும் ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் நடைபெறும் ஒரு தமிழர் பண்பாட்டு விழாவாகும். நம்நாட்டில் உள்ள ஒவ்வொரு சமூகத்தினருக்கும் வாழ்வதற்கான உரிமை, சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் தங்கள் பண்பாட்டையும் , மரபையும் காப்பதற்கான உரிமை ஆகியவை உண்டு. ஆனால் ஜல்லிகட்டு என்பதில் பண்பாட்டிற்கும், விலங்குகளின் உரிமைக்கும் இடையே முரண்பாடு தோன்றியது.

அரசமைப்பின் பகுதி மூன்றில் அடிப்படை உரிமை உறுப்பு 29(1)-இல் கல்வி மற்றும் பண்பாடு உரிமைகளுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. 2014-இல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் “விலங்குகளும் புலன் உணர்வு கொண்டவை, ஆதாலால் அடிப்படை உரிமை உறுப்பு 19(1)-படி வாழும் உரிமையைப் பெறுகின்றன என்றும் ஆதலால் அவற்றை துன்புறுத்துவதை அனுமதிக்க இயலது” என தீர்ப்பு கூறியது. இந்த முரண்பாடுகள் இவ்விளையாட்டை முறைப்படுத்துவதில் பல்வேறு விளக்கங்களுக்கு வித்திட்டன.

  • உண்மையில் முற்கால ரோமானிய சட்டங்கள் பெரும்பாலும், மதநுட்ப விதிகளை விடவும் சற்றே அதிகமாக உள்ளது. அவைகள் பெரும்பாலும் சில மத சூத்திரங்களை முறையாக பின்பற்றுவதன் மூலம் மத உரிமைகளை அடையும் வழி முறைகளாக இருந்தன.

– உட்ரோ வில்சன் (Woodrow Wilson)

இ) வழக்குமன்றங்களின் முடிவுகள் (Judicial Decisions)

கெட்டல் (Gettel) கூற்றின்படி, “அரசு என்பது சட்டத்தை உருவாக்க மட்டுமல்லாது, அதனை தெளிவுபடுத்துவதற்காகவும், வழக்காறுகளை செயல்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது. நீதித்துறையின் செயல்பாடனது சட்டங்களை தெளிவுபடுத்தவும், சட்டங்களை நடைமுறைப்படுத்துவதுமாக அமைகிறது. நீதிமன்றங்கள் செயல்படும்போது, அவைகளின் தீர்ப்புகள் புதிய சட்டங்களாக உருவாகின்றன. அதன் பிறகே இவ்வகை சட்டங்கள் அரசு மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்படுகின்றன. எனவே, நீதிமன்ற தீர்ப்புகள் இவ்வகையில் புதிய பல சட்டங்களை உருவாக்குவதற்கு மூல ஆதாரமாக அமைகிறது. சில சமயங்களில், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களின் தீர்ப்புகள் சட்டங்களாக பாவிக்கப்படுகின்றன.

ஈ) சமச்சீராக்கம் (Equity)

சட்டங்கள் எப்போதெல்லாம், தெளிவற்று சூழ்நிலைக்கு பொருந்தாமல் இருக்கீறதோ, அந்தச் சமயங்களில் இந்த சம நீதி பங்கிலான கொள்கைகளும், நல்லியல்புகளும், பொது அறிவு அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு அக்குழப்பமான சூழலுக்கான தீர்வு காணப்படுகிறது.

  • “சமச்சீராக்கம் என்பது அசல் குடிமைச் சட்டத்தோடு இருக்கக்கூடிய விதிமுறை தொகுப்பாகும். நீதியின் அடிப்படையிலும் , மரபுகளின் அடிப்படையிலும் உருவானதால் இவ்வுறுப்புகள் குடிமைச் சட்டத்தின் பயன்பாடுகளை மீறுமளவிற்கு தலையாய புனிதத்தன்மையை பெற்று விளங்குகின்றன”.
  • சர் ஹென்றி மெய்ன் (Sir Henry Maine)

சமச்சீராக்கம்

  • ஆங்கிலேய பொதுச் சட்ட மரபை பின்பற்றும் நாடுகளில் உள்ள சட்ட விதிகளின் தொகுப்பிற்கு சமச்சீராக்கம் (Equity) என பெயரிடப்பட்டுள்ளது, இது இயற்கை நீதி என்று சில நேரங்களில் குறிப்பிடப்படுகின்ற ஒன்றை அடைய கடுமையான சட்டங்களைடும் கண்டிப்பான அமலாக்கத்தையும் துணையாக கொண்டுள்ளது.
  • சமச்சீராக்கம் நியாயத்தை நிலைநாட்டுவதாகவும் உள்ளது.
  • சமச்சீராக்கம் என்பது பொதுச் சட்டத்திற்கு துணையாக வர்ணிக்கப்படுகிறது. இது ஆங்கிலேய பொதுச் சட்டத்தில் இடம் பெறாத பகுதிகளையும் ஒன்றிணைத்து அச்சட்ட அமைப்பை ஒரு முழுமையான ஒன்றாக ஆக்குகிறது.
  • ஆங்கிலேய சட்டத்தின்படி, சமச்சீராக்கம் என்பது இங்கிலாந்து உயர்நீதி மன்றத்தால் மட்டுமே அமல்படுத்த கூடிய விதிகளின் தொகுப்பாகும்.

உ) அறிவியல் விளக்கவுரைகள் (Scientific Commentaries)

சட்ட வல்லுநர்களின் அறிவியல் விளக்கவுரைகள், மர்ருமொரு சட்டமூலமாக விளங்குகின்றன. முதன்முதலில் இத்தகைய அறிவியல் விளக்குரைகள் தோன்றியபோது, அனைவரும் அதனை ஒரு வாதமாக மட்டுமே வர்ணித்தார்கள். நாளடைவில் இதன் சிறப்புத் தன்மையும், அதிகாரமும் , நீதி மற்றும் நீதிமன்ற முடிவுகளையும் விட அதிகாரத்துவம் பெற்று விளங்கியது.

  • சட்ட நிபுணர்களின் கருத்துக்கள் பெரும்பாலான நேரங்களில் சட்டமாகவே கருதப்படுகிறது. உதாரணத்திற்கு, இங்கிலாந்தில் கோக் மற்றும் ப்ளாக் ஸ்டோனின் விளக்கவுரைகள் (Coke and Blackstone), அமெரிக்காவின் ஸ்டோரி மற்றும் கென்ட் (Story and Kent), இந்தியாவின் விஜ்நானேஸ்வரா மற்றும் அபரார்கா (Vijnaneswaa and Aprarka) ஆகியோரின் விளக்கவுரைகளைக் கூறலாம்.
  • அ. அப்பாதுரை (A.Appadurai)

ஊ) சட்டமன்றம் (Legislature)

தற்காலத்தில் பெரும்பான்மையான சட்டங்கள் சட்டமன்றத்தின் மூலமே இயற்றப்படுகிறது. சட்டத்தின் மூலமே இயற்றப்படுகிறது. சட்டத்தின் மிக முக்கிய ஆதாராங்களுள் ஒன்றாக இது உள்ளது. பிற நாட்டு அரசமைப்புகளில் உள்ள நிறந்த அம்சங்களைப் பெற்று அதை தன் சொந்த நாட்டின் நன்மைக்கு பயன்படுத்துவதற்கு சிறந்த உதாரணமாக இந்திய அரசமைப்பு உள்ளது.

  • “குடிமக்களின் மனங்களிலிருந்து உருவாவது அரசாகும். அவர்கள் நீதிநெறி முகவர்களாவர். அதேசமயம், நல்லியல்பு இல்லாத கெட்ட குடிமக்களிடம் இருந்து உருவாவது மோசமான அரசும், மோசமான சட்டங்களுமே ஆகும்”.

– கில்கிரிஸ்ட் (Gilchrist)

இந்திய அரசமைப்பின் ஆதாரங்கள் (Sources of the Indian Constitution)

  • இந்திய அரசாங்க சட்டம் 1935 – கூட்டாட்சி முறை, ஆளுநர், நீதித்துறையின் பங்கு, நெருக்கடி நிலை அதிகாரங்கள்.
  • பிரிட்டன் அரசமைப்பு – சட்ட உருவக்கமுறைகள், நாடாளுமன்ற அரசாங்கம், சட்டத்தின் ஆட்சி, ஒற்றைக்குடியுரிமை, ஈரவை அரசாங்கம்.
  • அமெரிக்க அரசமைப்பு – அடிப்படை உரிமைகள், சுதந்திரமான நீதித்துறை, நீதிப்புனராய்வு, குடியரசுத் தலைவர் பதவி நீக்க நடைமுறை, உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீதான குற்ற விசாரணை, துணைக்குடியரசுத் தலைவரின் பங்கு.

சட்டம் எவ்வாறு அரசுடனும், நீதி நெறியுடனும் தொடர்பு கொண்டுள்ளது?

  • சட்டமும், நீதிநெறியும் சமமாக பாவிக்கப்படுகிறது. நீதிநெறியானது குடிமக்களுக்கு ஒழுக்க விதிகளை போதிக்கிறது. அதேபோல, அரசால் இயற்றப்படுகின்ற சட்டமும் இந்த லட்சியத்தை அடைய பாடுபடுகிறது. மக்களின் நலனை மேம்படுத்தும் ஒரே நோக்கத்துடன் அரசு செயல்படுகிறது. சட்டத்திற்கும், நீதிநெறிக்கும் உள்ள நல்லுறவை போலவே, சட்டத்திற்கும் அரசிற்கும் இடையே உள்ளது.
  • சட்டமும் ஒழுக்கமும் ஒன்றோடு ஒன்று மிகுந்த தொட்ரபுடையன ஆகும். ஒழுக்க விதிமுறைகள் என்பவை குடிமக்களின் நன்னடத்தைகளுக்கு அடிப்படையாகும்.
  • நல்லியல்பு அரசு நற்குடிமக்களை பெற்று நிறந்து விளங்குகிறது. நல்லியல்பற்ற அரசானது, ஒழுக்கம் தவறிய குடிமக்களைப் பேற்று சீரழியும். அரசின் உயிர்மூச்சான செயல்பாடாக “நீதி நெறிகள்” விளங்குகின்றன.
  • தீண்டாமையை ஒழிப்பதற்கு இந்திய அரசாங்கம் கடந்த பல ஆண்டுகளாக போராடிக்கொண்டிருக்கிறது. தீண்டாமைக்கு எதிரான பல சட்டங்களையும் இயற்றியுள்ளது.
  • தீண்டாமை போன்ற சமூக அவலங்களுக்கெதிராக சட்டங்கள் இருந்தாலும், சாதி, மதம், இனம், வர்க்கம், நிறம் அடிப்படையில் பாகுபாடு காட்டும் கொள்கையானது பாவம் என்பதை அறிய வேண்டும்.
  • மேற்கூறியவைகளின் அடிப்படையில் சமூகத்தில் எழும் இன்னல்களுக்கு அளவே இல்லாததாக இருக்கிறது. அரசாங்கம் மக்கள் உடல்நிலைக்கும், மனநிலைக்கும் பங்கம் விளைவிக்கும் மது மற்றும் குழந்தை திருமணம் போன்றவற்றை தடுக்கும் பல சட்டங்களை இயற்றி வருகிறது. பொதுவாக மக்களாட்சியில் ஒழுக்க நெறிகளுக்கு எதிரான சட்டம் என்று ஒன்று இல்லை.
  • வில்சன் , “அரசின் சட்டங்கள் என்பவை நீதிநெறியிலான சமூகத்தை உருவாக்குவதாகும்” என்று தெளிவாக தெரிவித்துள்ளார். இதனாலேயே சட்டத்தை உருவாக்கும் இறையாண்மையானது, சட்டத்திற்கும், நீதிநெறிக்கும் ஒரு நெருங்கிய உறவை ஏற்படுத்த விழைகிறது.

சட்டத்திற்கும் நீதிநெறிக்கும் உள்ள வேறுபாடுகள் (The Distinction between Law and Morality)

  • அரசு சட்டங்களை அமலாக்கம் செய்கிறது, சட்டத்தின் கட்டளைகளையும், கட்டுப்பாடுகளையும் மீறுபவர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படுகிறார்கள்.
  • சமூக விதிகளையும் சமூக நீதிநெறிகளையும் மதியாதவர்களுக்கும் எதிராக நடப்பவர்களுக்கும் சமூக புறக்கணிப்பு என்பதே மாபெரும் தண்டனையாக அமைகிறது.
  • நீதிநெறி என்பது மனிதர்களின் அக மற்றும் புற நடவடிக்கைகள் தொடர்புடையதாகும். ஆனால் சட்டமோ மனிதர்களின் புற நடவடிக்கைகளுடன் மட்டுமே தொடர்புடையதாகும். இதனாலேயே மனிதர்கள் தங்கள் புற நடவடிக்கைகளின் மூலம் சட்டத்தை மீறும்போது , தண்டிக்கப்படுகிறார்கள்.
  • ஒரு நபர் திருட்டோ அல்லது கொலையோ அல்லது வழிப்பறியோ செய்யும்பட்சத்தில் மட்டுமே தண்டிக்கப்படுகிறார்.
  • அதேபோல், ஒரு நபர் சமூகத்தில் பொய் கூறினாலோ அல்லது ஏமாற்றினாலோ அதே சட்டத்தினால் தண்டிக்கப்படுகிறார்.
  • பொய் கூறுவதும் , பிறருக்கு கண்டனம் தெரிவிப்பதும் , விசுவாசமற்று இருப்பதும் பாவங்களாக கருதப்படுகின்றதே ஒழிய குற்றங்களாக அல்ல. ஒழுக்கமற்ற செயல்கள் கூட அரசிற்கு நன்மை பயக்குமெனில் அது சட்டபூர்வமானது தான் என்று மாக்கியவல்லி கூறுகிறார்.

பொதுக் கருத்து!

பொதுவான நலனுக்கான மக்களின் கருத்தாகும்.

நீதிநெறி என்றால் என்ன?

சமூக எதிர்மறைகளான மது, சூது, திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை, போன்றவைகளை கட்டுப்படுத்தும் சமூக உறுப்புகள் நீதிநெறி எனப்படுகிறது. நீதிநெறிகள் தொடர்பான சட்டங்கள் எப்போதும் நிலையானவைகளாகும்.

  • “தனிமனிதனின் நல்லொழுக்கத்திற்கு சரிசமமாக இயங்கக்கூடியது நல்லரசாகும். அரசியல் உடற்கூறில் ஏதேனும் ஒரு பகுதி பாதிக்கின்றபோது, ஒட்டுமொத்த உடலும் பாதிப்புறும்”.
  • பிளாட்டோ (Plato)
  • நீதிநெறிகள் என்பவை அரசிற்கு அத்தியாவசியமான நிபந்தனையாக விளங்குகிறது. சட்டமும், அரசும் பொதுமக்கள் கருத்தை உருவாக்கவும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் தொடர்ந்து முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கின்றன. சட்டமானது பொதுக்கருத்தை பிரதிபலிப்பதோடு நல்லியல்புகளின் மேம்பாட்டிற்கான குறியீடாகவும் விளங்குகிறது.
  • மேக்ஐவர் (MacIver)

பொதுக்கருத்தும், சட்டமும் ஒன்றுகொன்று எவ்வாறு தொடர்புடையவை?

  • மக்களாட்சி நடைமுறையில், தங்களின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் மக்கள் அரசியலில் பங்கேற்பதுதான் மக்களாட்சியை வலிமையுள்ளதாக மாற்றுகின்றது.
  • சட்ட உருவாக்கத்தில் மக்கள் நேரடியாக பங்கு பெறவில்லையென்றாலும் சட்ட மன்றத்தின் பிரதிநிதிகளை அவர்களே தேர்ந்தெடுக்கின்றார்கள். வாக்காளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காகவும் திருப்திபடுத்துவதற்காகவும் இப்பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
  • இவ்வாறு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றமானது மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கின்றது. சட்டத்திற்கும், பொதுக் கருத்திற்கும் இடையேயான நெருங்கிய தொடர்பை பார்ப்போம்.
  • மக்களின் கருத்தை அடிப்படையாகக் கொண்டே மக்களாட்சியில் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. மக்கள் தங்கள் அதிருப்தியையும், கோபத்தையும் அமைதியான போராட்டங்களின் மூலமாக அரசுக்கு வெளிப்படுத்துகிறார்கள். மக்களின் பொதுநலனும், சமூக மேம்பாடும், பொதுக் கருத்தின் இரு கண்களாகும்.

தற்கால அரசானது, நீதிநெறி , மதம் மற்றும் இயற்கை சட்டத்தின் லட்சியவாத அடிப்படையில் நீடிக்கிறது எனலாம். அதே சமயத்தில் அரசு, தனது சுய பாதுகாப்பிற்காக மேற்குறிப்பிட்ட ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ மீறுகிறது.

  • J.M.கோட்ஸீ (J.M.Coetzee)

நீதிநெறி கடமைகளை மறுதலிப்பதும், சட்டக் கடமைகளை மறுதலிப்பதும் நீதிநெறிகளை முற்றிலும் நாசமாக்குகிறது. சட்ட மனசாட்சி மற்றும் நீதிநெறி மனசாட்சி என்ற இரு வேறு மனசாட்சிகள் ஒன்றோடு ஒன்று எப்போதும் ஒத்துவராதவைகளாகும்.

  • மேக்ஐவர் (Maclver)

சட்டமும், ஒழுங்கும் நீதியை நிலைநாட்டுவதற்காக இயங்குகிறது. இதை செய்ய தவறும்பட்சத்தில், சமூக வளர்ச்சியை தடுக்கும் ஆபத்தான தடுப்பு அணைகளாக இவை மாறுகின்றன.

  • மார்டின் லூதர்கிங் ஜீனியர் (Martin Luther King. Jr)

குடியுரிமை

அறிமுகம்

  • அரசியல் கோட்பாட்டில், குடியுரிமை என்பது குடிமக்களுக்கான சட்டப்பூர்வமான அங்கீகாரம் மட்டுமல்லாது, நெறிமுறை நல்லியல்பிற்கு இணங்க, அரசியல் செயல்பாடுகளில் முழுமையாகவும், சமமாகவும் பங்கேற்கின்ற உரிமையையும் அனைத்து குடிமக்களுக்கும் அளிப்பதாகும்.
  • மக்களாட்சியும், குடியுரிமையும் எப்போதும் ஒரே நேர்கோட்டில் செல்லக்கூடியது ஆகும். மக்களாட்சி என்பது அரசியல் கட்சிகள், தேர்தல் முறைமைகள், சட்டத்தின் ஆட்சி போன்றவைகளிலும், குடியுரிமை என்பது தனிமனிதர்களிடத்தும் முக்கிய கவனம் செலுத்துகின்றன.
  • குடியுரிமையானது ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபட்டதாக இருக்கிறது. தற்கால அரசுகளில், குடியுரிமையானது, குடிமக்களுக்கான உரிமைகள் மட்டுமல்லாது மக்கள் அரசுக்கு ஆற்றவேண்டிய கடமைகளையும் உள்ளடக்கியதாக காணப்படுகிறது.

நீங்கள் இயற்கை குடியுரிமை (Natural Citizenship) உடையவரா அல்லது தங்கியிருத்தல், திருமணம் போன்றவற்றால் தகுதி ஆக்கப்பட்டு பெறப்படும் (Naturalized Citizenship) குடியுரிமையை வேண்டி பெற்றவரா? இவ்விரண்டிற்கும் வித்தியாசம் யாவை?

  • இயற்கையான குடிமக்கள் என்பது இம்மண்ணில் பிறந்ததன் மூலமாக இயற்கையாக அந்த குடியுரிமையை அடைவது ஆகும். ஆனால் இயற்கையாதலான குடிமக்கள் என்போர் பின்னர் குடியுரிமையைப் பெற்றவர்களாவர்.
  • அரிஸ்டாட்டிலின் கூற்றுபடி, குடியுரிமை என்பது பிறப்பிடம், குடும்பம், பரம்பரை மற்றும் பண்பாட்டைச் சார்ந்து அமைவதாகும்.
  • ‘ஸ்டாயிக்குகளின் (Stoics)’ கருத்து வளர்ச்சியடைந்த பெருநகரங்களில் வசிப்பவர்களுக்கே குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதாகும். கன்பூசியசின் (Confusius) கருத்து பொது நலத்தை சீரமைத்து அதில் அனைவரும் தங்கள் நலனிற்காகவும், இணக்கச் சூழலுக்காவும் பாடுபட வேண்டும் என்பதாகும்.
  • இந்தியாவிலும் இதே போன்று வாசுதேவக் குடும்பகம் (Vasudeva Kudumbakam) (ஒரே உலகம், ஒரே குடும்பம்) என்பது ஒரு நல்லியல்பு கருத்தாக்கமாக காணப்படுகிறது.

குடியுரிமை மற்றும் நகர அரசு (Citizenship and City – State)

  • கிரேக்க மற்றும் ரோமானிய குடியரசுகளில் முக்கியத்துவம் பெற்ற குடியுரிமை என்பது நிலப்பிரபுத்துவ காலங்களில் முற்றிலுமாக மறைந்தது. மறுபடியும், மறுமலர்ச்சி காலக்கட்டத்தில் மனிதத்தன்மையின் விரும்பத்தக்க பகுதியாக குடியுரிமை மலர்ந்தது. பண்டைய ஏதென்சின் , நகர அரசில் குடியுரிமை என்பது அரசின் கடமைகளில் பங்கேற்பதாக அறியப்பட்டது.
  • குடியுரிமை என்பதை அரிஸ்டாட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதினார். ஏனெனில் லட்சிய அரசு என்பது சட்டத்தின் அடிப்படையிலான, சட்டத்தை மதிக்கும் குடிமக்களாலேயே சாத்தியப்படும் எனக் கருதினார்.
  • அவர் மேலும் கூறுகையில், ஒவ்வொரு மனிதனும் அரசியல் விலங்கு என்றும், நகர அரசில் மட்டுமே அவன் முழுமையடைவான் என்றும் கூறுகிறார். எனவே அரசியல் பதவிகளை விரும்புவது இயற்கை என்கிறார்.
  • மேலும் அப்பெருமகனார், குடியுரிமை என்பது குடிமக்களையும், வேற்றுநாட்டவர்களையும் மட்டுமல்லாது பிறநாட்டு அடிமைகளையும் உள்ளடக்கியதாக ஓர் ஆட்சியில் காணப்படுவதாக விளக்குகிறார்.
  • ஒரு நாட்டின் குடிமகன் என்பவன் சட்டத்துறை, நீதித்துறை தொடர்பான அலுவல்கள் மட்டுமல்லாமல் அரசமைப்பின்படி அரசியல் உரிமைகளையும், அனுபவிக்கும் உரிமை பெற்றவனாக விளங்குகின்றான்.

மார்ஷலின் பகுப்பாய்வு (Marshall’s Analysis)

  • சுதந்திர சமூக மக்களாட்சிவாதியான மார்ஷல், குடியுரிமையையும், சமூக நிலைமைகளையும் , முதலாளித்துவ அடிப்படையில் ஆராய்கிறார். அவரது கருத்தின்படி, குடியுரிமை மூன்று வகைப்படுகிறது. அவை குடிமை, அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த குடியுரிமைகளாகும்.
  • அனைத்து தனிமனிதர்களுக்கும் சுதந்திரம் என்பது குடிமை விவகாரங்களில் தேவைப்படுகிற ஒரு முக்கியமான அம்சமாகும்.
  • சட்டத்தின் ஆட்சியில் , குடியுரிமை என்பது ஒரு தனித்துவம் பெற்ற அம்சமாக விளங்குகிறது. ஒரு குடிமகனான, நமக்கு அரசியல் தொடர்பான முடிவெடுக்கும் முறைமையில் பங்குபெறுவதற்கு முழு உரிமை உண்டு. இது அரசியல் வகைப்பாட்டில் பிரதிபலிக்கிறது.
  • அரிஸ்டாட்டிலின் வரையறையின்படி “எவர் ஒருவருக்கு விவாதங்களிலும் அரசின் நீதி நிர்வாக அமைப்பிலும் பங்கேற்க அதிகாரம் இருக்கிறதோ அவரே குடிமகன் ஆவர்”.
  • கிரேக்கர்கள் மக்களாட்சியின் கீழ் வாழும் பேறுபெற்றவர்கள். அவர்களின் அரசாங்கம் சாதாரண மக்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் தங்கள் பேச்சு உரிமையின் மூலமாக மிகப்பெரிய பேச்சு சுதந்திரத்தை பெற்றிருந்தனர்.

குடியுரிமை மற்றும் கல்வி (Citizenship and Education)

இப்பிரிவில், கல்விக்கும், குடியுரிமைக்கும் உண்டான தொடர்பை பல்வேறு தத்துவஞானிகளின் கருத்துகள் வாயிலாக பார்க்கலாம்.

அரிஸ்டாட்டிலின் கூற்றின்படி, அனைத்து வகை மனிதர்களுக்கும் மூன்று பண்புகள் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும்.

  • அரசமைப்பிடம் விசுவாசம்.
  • கடமைகளில் அதிகபட்ச திறனுடன் இருத்தல்.
  • நல்லியல்பு மற்றும் நீதி வழுவாமை.

மக்களாட்சி நாடானது, அரசியல் மற்றும் பொருளாதார சமத்துவத்தை எப்போதும் நிலைநாட்டுகிறது. இதனால் நல்லியல்பு கொண்ட மனிதனுக்கும், நல்ல குடிமகனுக்குமான அடையாளம் எளிதில் காணப்படுகிறது.

பிளாட்டோவின் கருத்துப்படி, கல்வியே நாட்டில் நிலவும் ஊழலுக்கும், நிலைத்தன்மையற்ற அரசியலுக்குமான தீர்வாக கருதப்படுகிறது. இதனால், அப்பெருமகனார், கல்வியானது பயனுள்ளதாகவும், பொறுப்புள்ளதாகவும் அமைய வேண்டும் என கூறுகிறார். அரிஸ்டாட்டில் (Aristotle), ஹியூம் (Hume) மற்றும் ரூசோ (Rousseau), ஆகியோரின் கூற்றுப்படி, ஓர் நாட்டின் குடிமக்களுக்கு, தங்களது நாட்டின் சக குடிமக்களின் அணுகுமுறை, எதிர்பார்ப்பு ஆகியவை பற்றிய அறிவு வேண்டும் என கூறுகின்றனர். J.S. மில் (J.S.Mill), மற்றும் அலெக்ஸ் டோக்யூவில்லி (TocqueVille), ஆகியோர் மேலே குறிப்பிட்டதற்கு மாறாக “குடிமக்களுக்கு , அரசியலில் பங்குபெறவும், உள்ளாட்சி அரசாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தன்னார்வ மற்றும் நீதி கடமைகள் ஆற்றவும், சங்கங்களை நிர்வகிக்கவும், கல்வி அதிகமாக தேவைப்படுகிறது” என கூறுகிறார்கள்.

வயதான பெற்றோர், முதியோர் பராமரிப்பு மற்றும் நலன் சார்ந்த சட்டம் (MWPSC Act) 2007-ல், முதியவர்கள் மற்றும் பெற்றோர் நலனுக்காக இயற்றப்பட்டது.

இச்சட்டத்தின்படி…….

  • முதியோருக்கு துரிதமாகவும், பயனுள்ளதாகவும் நிவாரணத்தை வழங்க “பராமரிப்பு தீர்ப்பாயத்தினை” (Maintenance Tribunal) நிறுவியது.
  • இச்சட்டத்தின்படி, பராமரிப்பு என்பது உணவு, உடுத்த உடை, இருப்பிடம் மற்றும் மருத்துவ சிகிச்சையையும் உள்ளடக்கியது ஆகும்.
  • இச்சட்டத்தின் ஒரே நிபந்தனையாக, எவரெல்லாம் தன் சொந்த வருமானத்திலும், உடைமையின் மூலமும் தன்னை பராமரிக்க இயலாதவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் இப்பராமரிப்பின் கீழ் உட்படுவார்கள்.
  • இச்சட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகபட்ச பராமரிப்புச் செலவாக மாதம் ரூ.10,000 அளிக்க கட்டாயமாக்கப்பட்டது. பராமரிப்புத் தொகையானது, உரிமை கோருபவர்களின் தேவைகள் மற்றும் அவர்கள் இயல்பு வாழ்க்கையை வாழ்வதற்கான தேவைகளைப் பொருத்தும் அமைகிறது.
  • பெற்றோர்களும், முதியோர்களும் அரசாங்கத்தின் இச்சலுகையை அனுபவிக்க, பராமரிப்பு தீர்ப்பாயத்தின் முன் பராமரிப்பு அதிகாரியிடம் தங்கள் விருப்பங்களை முறையிடலாம். இச்சட்டத்தின்படி, வழக்கறிஞர்கள், தீர்ப்பாயத்தின் முன் எவருக்காவும் வாதாட இயலாது.
  • முதியோர் நலனைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கக்கூடிய யாரேனிம் நன்கறிந்தே அவர்களை கைவிடும்பட்சத்தில், ரூ.5,000 அபராதமே அல்லது மூன்று மாதம் சிறை தண்டனையோ அல்லது மேற்கூறிய இரண்டு தண்டனையுமோ வழக்கப்படலாம்.

இந்தியாவில் குடியுரிமை (Citizenship in India)

இந்தியா ஒரு மதச்சார்பற்ற, மக்களாட்சி மற்றும் தேசிய அரசு ஆகும். சுதந்திர இயக்கம் எதனால் உண்டானது? பல்வேறுபட்ட மதங்கள், பிராந்தியங்கள் மற்றும் பண்பாட்டினை ஒன்றிணைக்கும் காரணகர்த்தாவாக இவ்வியக்கம் தொடங்கப்பட்டது. இந்திய பிரிவினையில் முஸ்லீம் லீக் கட்சியுடன் வேறுபாடுகள் இருந்தபோதிலும், சுதந்திர போராட்ட இயக்கத்தின் இந்திய தேசிய தலைவர்களின் மூலம், மதச்சார்பற்ற மற்றும் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய இந்திய தேசமாக வலிமைப்படுத்தியது.

இவ்வலிமையான தீர்மானத்தை நாம் அரசமைப்பில் கண்கூடாக பார்க்கலாம். இந்திய அரசமைப்பானது பாரபட்சமின்றி அனைத்து மக்களுக்கும் குடியுரிமை வழங்குகிறது. பெண்கள் , தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினட் , அந்தமான் நிக்கோபரின் கடைக்கோடி சமூகங்கள் போன்றோர் இதுகாறும் அனுபவித்திராத குடியுரிமை தற்போது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

குடியுரிமை பற்றிய சட்டங்கள், அரசமைப்பின் பகுதி இரண்டிலும் மற்றும் அவை தொடர்பான நாடாளுமன்ற சட்டங்களிலும் காணப்படுகிறது. இந்தியாவில் குடியுரிமையானது, பிறப்பு, வம்சாவழி, பதிவு, இயல்புரிமை மற்றும் பிரதேச உள்ளடக்கத்தின் மூலம் பெறப்படுகிறது.அரசமைப்பின்படி அரசாங்கம் குடிமக்களை இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் போன்ற நிலைகளில் வேற்றுமைப்படுத்தல் ஆகாது. மேலும் மதம் மற்றும் மொழி சார்ந்த சிறுபான்மையின் மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படுகிறது.

உலக குடியுரிமை மற்றும் தேசியக் குடியுரிமை

தேசிய குடியுரிமை என்பது, நாம் குடியிருக்கும் நாட்டின் அரசாங்கம் நமக்களிக்கும் பாதுகாப்பும் உரிமையுமாகும். ஆனால் அரசிற்கு தீர்க்கக்கூடிய பிரச்சினைகள் பெருமளவில் இருப்பதால், தனிமனித உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு சட்டத்தினால் உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

உலக குடியுரிமை என்பது தேசிய எல்லைகளை கடந்த குடியுரிமையாகும். இவ்வுரிமையானது, பலதரப்பட்ட மக்களும், நாடுகளும் சேர்ந்த கூட்டுறவு நடவடிக்கையை வலியுறுத்துகிறது. இதனால், குடியுரிமை என்பது பல்வேறுபட்ட சமூக பொருளாதார ஏற்றத்தாழ்விகளை தீர்க்கக்கூடியதாக அமைகிறது. மேலும் உலகளாவிய குடியுரிமை, உலக நாடுகளின் ஒற்றுமையையும், கூட்டுறவின் வலிமையையும் பறைசாற்றுகிறது.

உரிமைகள் மற்றும் கடமைகள்

அறிமுகம்

  • உரிமைகள் என்ற வார்த்தை நம்முடைய நீதிநெறி, சட்டம் மற்றும் அரசியல் சொல்லகராதியில் பல நூற்றாண்டுகளாக இடம் பெற்றுள்ளதை நாம் காண்கிறோம்.
  • உரிமைகள் என்பது பொதுவாக உலகில் காணப்படுவது, மேலே உள்ல நீதிநெறி, சட்டம், அரசியல் ஆகிய அனைத்தும் ஒன்றாக இணைந்து உருவானதே மனித உரிமைகள் ஆகும்.
  • இந்த உரிமைகள் இன்றியமையாதவையாக நவீன காலத்தில் அமைந்துள்ளதற்கு அது அரசமைப்பிலும், பன்னாட்டு மனித உரிமை பிரகடனங்களிலும் இடம்பெற்று இருப்பது காரணம் ஆகும்.
  • மனித இனத்தில் பிறந்த அனைவரும் மனிதனாக பிறந்ததற்கான அடிப்படையில் மனித உரிமைகளை கொண்டு இருக்கின்றார்கள். இந்த அடிப்படையில் அனைத்து மனிதர்களும் சாதி, மத, இன, வகுப்பு வேறுபாடுகளைக் கடந்து நீதிநெறியிலான சமத்துவத்தின் அடிப்படையில் மனித உரிமைகளைப் பெறுகிறார்கள்.

பொது மக்களின் விருப்பத்திற்கு மக்களாட்சியில் மதிப்பளித்தல்

  • மக்களாட்சியில் அனைத்து வயது வந்த குடிமக்களும் தேர்தலில் வாக்களிப்பார்கள். வாக்களிப்பதன் மூலமாக மக்கள் தங்களின் அரசாங்கம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்துகின்றனர்.
  • தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றவர்கள் வெற்றி பெறுவதும், குறைந்த வாக்கினைப் பெற்றவர்கள் தோல்வியுறுவதும் இயல்பாகும்.
  • இருப்பினும் வெற்றி பெற்ற பெரும்பான்மையினர் தோல்வியடைந்த சிறுபான்மையிரை மறந்து விட முடியாது. இரண்டு குழுக்களும் ஒன்றோடொன்று இணைந்து வாழ வேண்டும். நீங்கள் சிறுபான்மையினர் எனில் பெரும்பான்மையினரின் தேர்வினை ஏற்று கொண்டிருக்கிறீர்கள் என பொருள்படுகிறது.
  • பெரும்பான்மையோராக இருப்பதென்பது சிறுபான்மையினரை மதிப்பதாகும். அதேபோன்று சிறுபான்மையினராக இருப்பவர்கள் பெரும்பான்மையினருடன் ஒத்துழைக்க வேண்டும். அவர்கள் விரும்புவதை அடுத்த தேர்தலில் முயற்சி செய்து பெற வேண்டும். இருப்பினும் தற்போதைக்கு அவர்கள் ஐம்பது சதவீதத்திற்கு மேலான வாக்காளர்களின் விருப்பத்திற்கு இசைந்து செல்ல வேண்டும்.
  • ஒருவரை ஒருவர் மதிப்பது என்பது நாம் இணைந்து சிறப்பாக வாழ உதவி செய்கிறது. மக்கள் தாங்கள் நினைப்பதை பிறரிடம் கூறுவதற்கு உரிமை உள்ள அதே நேரத்தில் பிறருடைய கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.
  • ஒவ்வொரு தேர்தலும் அனைத்து தரப்பினருக்கும் தாங்கள் விரும்புவதைக் கூறவும், தங்களுக்குத் தேவையானவற்றிற்காக வாக்களிக்கவும் வாய்ப்பளிக்கிறது.

உரிமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

  • சமூக வாழ்க்கையில் உரிமைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை இல்லாமல் எந்த ஒரு மனிதனும் பொதுவாக தமது சுயத்தை சிறப்பாக உணர முடியாது.
  • மக்கள் தங்களின் உரிமைகளைப் பெற்று அனுபவிக்கும் போது மட்டுமே அவர்களின் ஆளுமைத் திறன் மேம்பட்டு சமுதாயத்திற்கு சிறந்த பங்களிப்பினை மேற்கொள்வர்.
  • மக்கள் தங்களின் உரிமைகளைப் பெற்று அனுபவிக்கும் போது மட்டுமே அவர்களின் ஆளுமைத் திறன் மேம்பட்டு சமுதாயத்திற்கு சிறந்த பங்களிப்பினை மேற்கொள்வர்.
  • உரிமை என்பது பொதுமக்களின் விருப்பக் கோரிக்கைகள் ஆகும். ஒவ்வொரு பண்பாட்டிலும் இத்தகைய கோரிக்கைகள் சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட்டு வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. அதனால் தான் அரசுகள் இவற்றை நடைமுறைப்படுத்துகின்றன.

நீதிநெறியிலானவனாக மனிதனின் பணியை நிறைவேற்றுவதற்குத் தகுந்த அதிகாரங்களே உரிமையாகும். – டி.எச்.கீரின் (T.H.Green)

ஐசையா பெர்லின் (Isaiah Berlin) உரிமை என்பதை வரையறை செய்யும்போது நேர்மறை சுதந்திரம் மற்றும் எதிர்மறை சுதந்திரம் என்பவை பற்றி குறிப்பிடுகின்றார். நேர்மறை சுதந்திரம் என்பது பேச்சுரிமை பற்றியதாகும். உதாரணமாக ஒருவர் தன்னுடைய கருத்தை பொது வெளியில் அச்சமின்றித் தெரிவிப்பதாகும். எதிர்மறை சுதந்திரம் என்பது உடல் சார்ந்த தலையீடு இல்லாமல் ஒருவர் சுதந்திரமாக இருப்பதாகும்.

இயல்புகள்

  • உரிமைகள் என்பது மக்களின் பகுத்தறிவு மற்றும் தார்மீக கோரிக்கைகள் ஆகும். இது அவர்களுடைய சமூக மேம்பாட்டிற்கு முக்கியமானதாக அமைந்துள்ளது.
  • உரிமை என்பது மதம், சாதி, இனம், பாலினம் என்று பாராமல் , அனைவருக்கும் கிடைக்கக் கூடியது.
  • உரிமைகள் மற்றும் கடமைகள் இவ்விரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்ததாகும். “கடமைகள் இல்லை என்றால் உரிமைகள் இல்லை”. “நான் சில உரிமைகளை பெற்றிருக்கிறேன் என்றால் சமுதாயத்தில் பிறருடைய உரிமைகளை மதிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்” என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.
  • உரிமைகள் அனைத்தும் நீதிமன்றத்தில் வழக்கிட்டு பெறக்கூடியது ஆகும்.
  • உரிமைகளை பாதுகாப்பது மற்றும் நடைமுறைப்படுத்துவது அரசின் சட்டங்கள் ஆகும். மேலும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பது அரசின் கடமை ஆகும்.

உரிமைகள் மற்றும் பொறுப்புகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை நாம் காண்போம்.

உரிமைகள் மற்றும் பொறுப்புகள் இவை இரண்டும் பிரிக்கமுடியாதவை ஆகும். உலகில் பிறக்கும் மனிதர்கள் அனைவருக்கும் அதிகமான பொறுப்புகளும் கூடவே பிறக்கின்றன. அவர்களுக்கு அதனால் இயற்கையாகவே போதுமான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. உரிமைகள் என்பது ஒரு மனிதன் தனது அன்றாட பல்வேறு பொறுப்புகளை செய்வதற்கு உறுதுணையாக நிற்கின்றது.

உங்களது கடமை, பொறுப்புகள் என்னென்ன?

  • இந்தியாவின் ஒற்றுமையும், இறையாண்மையும் பாதுகாத்தல்.
  • பொது சொத்தை பாதுகாத்தல்.
  • இந்தியாவின் இயற்கை வளங்களை பாதுகாத்தல். (உதாரணமாக வன விலங்குகள், ஏரிகள், குளங்கள், காடுகள், ஆறுகள்)
  • சாதி, இனம் , நிறம் மற்றும் பொருளாதார நிலைமைகளைக் கடந்து அனைவரிடத்திலும் சகோதரத்துவத்தையும் , நல்லிணக்கத்தையும் பராமரித்தல்.
  • இந்தியாவின் பண்பாட்டையும், சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாத்தல்.
  • தேசியக்கொடி மற்றும் தேசியகீதம் போன்றவற்றுக்கு மரியாதை செலுத்துதல்.

பல்வேறு வகையான உரிமைகள்

அ) இயற்கை உரிமைகள் (Natural Rights)

இந்த வகையான உரிமைகள் மனித இயல்பு மற்றும் பகுத்தறிவின் ஒரு பகுதியாகும். இதனை பற்றி அரசியல் கோட்பாடுகள் கூறுவது என்னவென்றால் ஒவ்வொரு மனிதனும் சில அடிப்படை உரிமைகளைப் பெற்றுள்ளான். இதனை அரசாங்கங்கள் கூட மறுக்க இயலாது. மரபுவழி அரசியல் தத்துவத்தில் “இயற்கை உரிமை” என்பது நேர்மையை அடிப்படையாகக் கொண்ட சிறந்த செயலையும், தூய ஆத்மா, சரியான செயல்பாடுகள் மற்றும் அரசின் சிறந்த ஆட்சி என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆ) நீதிநெறி உரிமைகள் (Moral Rights)

நீதிநெறி உரிமை என்பது நன்னடத்தை, மரியாதை, நல்லொழுக்கம் ஆகியன பற்றியது ஆகும். இது அறநெறியின் படி மக்களை முழுமையாக வழி நடத்தி செல்கின்றது.

இ) சட்ட உரிமைகள் (Legal Rights)

சட்ட உரிமைகள் என்பது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் சமமாகக் கிடைக்க கூடிய ஒன்றாகும். இதில் எவ்வித பாகுபாடும் இன்றி பின்பற்றப்படுகிறது. சட்ட உரிமைகள் என்பது அரசினால் ஏற்று கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் ஆகும். சட்ட உரிமைகள் என்பது மூன்று வகைப்படும்.

குடிமை உரிமைகள் (Civil Rights)

இந்த வகையான உரிமைகள் ஓர் மனிதன் சமூகத்தில் நாகரிமகான வாழ்க்கையை வாழ்வதற்கு அடிப்படை உரிமைகளை வழங்குகிறது. இது அரசினால் பாதுகாக்கப்படுகிறது. அதாவது உயிர் வாழுகின்ற உரிமை, சுதந்திரம் மற்றும் சமத்துவம் ஆகிய குடிமை உரிமைகளை அரசு நிலைநாட்டி பாதுகாக்கிறது.

அரசியல் உரிமைகள் (Political Rights)

மக்கள் தங்களது நன்னடத்தையின் மூலம் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு வழிவகை செய்வது அரசியல் உரிமைகள் ஆகும். இது வாக்களிக்கும் உரிமை, தேர்ந்தெடுக்கப்படும் உரிமை, பொதுப் பதவி வகிக்கும் உரிமை போன்றவை ஆகும்.

பொருளாதார உரிமைகள் (Economic Rights)

இந்த உரிமைகள் தனிமனிதனுக்கு பொருளாதார பாதுகாப்பு அளிப்பதாகும். இதன் மூலம் மக்கள் தங்களது குடிமை மற்றும் அரசியல் உரிமைகளைப் பயன்படுத்த அதிகாரம் அளிக்கப்படுகிறது. பொருளாதார உரிமை என்பது ஒருவருக்கு வேலைவாய்ப்பு உரிமை, தகுந்த பாதுகாப்பு உரிமை, சமூக பாதுகாப்புரிமை ஆகியவற்றினை அளிப்பது போன்றவை ஆகும்.

ஈ) ஒப்பந்தம் மூலம் பெறும் உரிமைகள் (Contractural Rights)

இவ்வகையான உரிமைகள் என்பது தனி மனிதனுக்கு ஒரு குறிப்பிட்ட நிகழ்வில் வழங்கப்படுகிற வாக்குறுதிகள் அல்லது ஒப்பந்தங்கள் வாயிலாக தோற்றுவிக்கப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட சூழலில் தனி மனிதர்களுக்கு வழங்கப்படும் உறுதிகள் மற்றும் அதன் செயலாக்கங்களும் ஆகும். இதற்கு உதாரணமாக கூறவேண்டுமானால் பொருட்களை வாங்கும் உரிமை, சேவை பெறும் உரிமை, பொருள் அல்லது சேவையை விற்கும் உரிமை ஆகியவற்றினைக் குறிப்பிடலாம்.

உ) மனித உரிமைகள் (Human Rights)

மனித உரிமைகள் என்பவை உரிமைகளில் மிகவும் உயர்ந்து இருப்பதாகும். இவை தார்மீக அடிப்படையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது உலகளவிலான மனித குலத்தின் நல்லியல்பில் உள்ளதாகும். இது உள்நாட்டு அளவிலும், சர்வதேச அளவிலும் சட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலமாக ஆதரவளிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

குழந்தைகளுக்கான உரிமைகள் குழந்தைகளுக்கான பொறுப்புகள்
புறக்கணிப்பு, சுரண்டல், கொடூரம், சச்சரவுகள் ஆகியவைகளிடமிருந்து பாதுகாத்தல் உரிமை. ஒருவருக்கு ஒருவர் தாக்குதல் மற்றும் துன்புறுத்தல் நடத்திக் கொள்ளாமல் இருத்தல்.
வீடு, பள்ளி மற்றும் அவர்கள் போகும் இடமெல்லாம் சுத்தமான சூழல் அமைதல் உரிமை. செல்லும் இடங்களிலெல்லாம் சுற்றுச்சூழல் மாசுபடாமல் பார்த்துக் கொள்ளுதல்.
கல்வி பெறும் உரிமை. தங்களால் எவ்வளவு கற்றுக்கொள்ள முடியுமோ அதனைக் கற்றுக் கொண்டு மற்றவர்களும் கற்றுக் கொள்வதற்கு உதவுதல்.

உரிமைகள் மசோதா மற்றும் அடிப்படை உரிமைகள்

உரிமைகள் மசோதா என்பது அமெரிக்காவில் டிசம்பர் 15–ல், 1791-ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இது தனிமனித உரிமைகளின் உத்திரவாதங்களை மிகுந்த வலிமையுடன் மத்திய மற்றும் மாநில அரசுகளால் கருத்திணைவு அடிப்படையில் செயல்படுத்த வழிவகை செய்தது.

ஜேம்ஸ் மேடிசன் இந்த ‘உரிமைகள் மசோதா’வை அறிமுகப்படுத்தினார். இது, அவர் 1776 இல் வெளியிட்ட புகழ்பெற்ற வெர்ஜீனியா மனித உரிமைகள் பிரகடனத்தின் அடிப்படையில் அமைந்தது ஆகும்.

  • ஜேம்ஸ் மேடிசன் (James Madison)

ஜேம்ஸ் மேடிசன் (James Madison)

உரிமைகள் மசோதா என்பது இங்கிலாந்தின் மகாசாசனம் (Magna Carta) (1215) மற்றும் ஆங்கில உரிமைகள் மசோதா (1689) ஆகியவற்றில் இருந்து பெறப்பட்டது. இது காலனி ஆதிக்க எதிர்ப்புப் போரட்டத்தினால் மன்னர் மற்றும் நாடாளுமன்றம் போன்றவற்றின் ஆதிக்கத்திற்கு எதிராக உருவாக்கப்பட்டது ஆகும். அமெரிக்காவின் உரிமைகள் சாசனம் அந்த நாட்டின் சட்டம் மற்றும் அரசாங்கத்தில் மையப்பங்கு வகிப்பதாகும். சுதந்திரம் மற்றும் பண்பாட்டின் அடிப்படை சின்னமாகவும் இது விளங்குகிறது.

அடிப்படை உரிமைகள்

  • இந்தியா 1947-ஆம் ஆண்டு தனது சுதந்திரத்தை பிரிட்டிஷ் காலனியாதிக்க ஆட்சியிடமிருந்து பெற்றது. அதன் பிறகு இந்திய உரிமைகளைப் பெரிதும் வலியுறுத்தக் கூடிய மதச்சார்ப்பற்ற, மக்களாட்சி நாடாக உருவானது.
  • 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் நாள் அரசமைப்பு நிர்ணய சபையானது வரைவு குழுவை உருவாக்கி அதற்கு தலைவராக டாக்டர் அம்பேத்கரை நியமனம் செய்தது. அதில் தோராயமாக 7635 சட்ட திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு அதில் 2437 மசோதாக்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன.
  • 1950-ஆம் ஆண்டு ஜனவரி 24-ஆம் தேதி பன்னிரெண்டாவது அரசமைப்பு நிர்ணய சபையின் கூட்டத்தொடரில் இராஜேந்திரபிரசாத் முதலாவது இந்திய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், இதன் பிறகு அரசமைப்பு நிர்ணய சபையின் சட்ட மற்றும் அரசியல் வல்லுனர்கள் அரசமைப்பு கூட்டத்தினை அதிகாரப்பூர்வ பிரதிகளில் கையெழுத்திட்டனர்.
  • இந்திய அரசமைப்பின் சட்டப் பகுதி III-இல் அடிப்படை உரிமைகள் உள்ளன. இந்த பகுதியில் நாட்டினுடைய மக்களாட்சி முறையின் அடிப்படைக் கூறுகளைப் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்திய அரசமைப்பு சட்டமானது அதன் உரை மற்றும் பரப்பெல்லை அளவில் உலகில் மிகப்பெரியதாகும். அடிப்படை உரிமை பற்றி மிகவும் நுண்ணிய கருத்துக்கள் அனைத்தையும் அடிப்படை உரிமைகள் உள்ளடங்கியதாக உள்ள காரணத்தினால் தான் அது அளவிலும் பெரியதாக உள்ளது.
  • அரசமைப்பு நிர்ணயசபையானது இந்திய அரசமைப்புச்சட்டத்தினை வரையறை செய்ய 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 20 நாட்கள் எடுத்துக்கொண்டது.

சமத்துவ உரிமை (Right to Equality)

சமத்துவ உரிமை என்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உத்திரவாதத்தினை அளிக்கிறது. இது மேலும் பொது இடங்களுக்குச் செல்வதற்கு உள்ள பாகுபாட்டையும் தடைசெய்கிறது. இது அனைவருக்கும் கோவில்கள், உணவகங்கள், விடுதிகள் மற்றும் பொதுவான கேளிக்கை இடங்கள் ஆகியவற்றிற்கு அனைவரும் செல்ல அனுமதிக்கிறது. இது மேலும் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும் சமமான பணி வாய்ப்பினை வழங்குகிறது. இது தீண்டாமையை எந்த வடிவத்திலிருந்தாலும் தடை செய்வதுடன் இதனை பெரும் குற்றமாகக் கருதுகிறது.

சுதந்திர உரிமை (Right to Freedom)

  • சுதந்திரம் மற்றும் சமத்துவம் ஆகிய இரண்டுமே மக்களாட்சிக்கு தேவையான அடிப்படை உரிமைகள் ஆகும். இந்த உறுப்பு பின்வரும் உரிமைகளைக் குடிமக்களுக்கு அளிக்கிறது.
  • சுதந்திரமான பேச்சு மற்றும் கருத்து உரிமை, பொதுஇடத்தில் ஆயுதங்களின்றி அமைதியாகக் கூடுதல், சங்கம் அமைக்கும் உரிமை , நாடு முழுவதும் சுதந்திரமாக உலவுகின்ற உரிமை போன்றவற்றை வழங்குகிறது.
  • உங்களுக்குத் தெரியுமா …… இந்த உறுப்பு தான் எவரும் தாங்கள் விரும்பக்கூடிய எந்த தொழிலையும் செய்ய அனுமதிக்கிறது. ஆம். நீங்கள் ஒரு மருத்துவமனை அமைக்கலாம், மருந்தகம் நடத்தலாம் அல்லது நீங்கள் ஒரு பெரிய வணிக வளாகம் கூட அமைத்து நடத்தலாம்.
  • கடமைகள் மற்றும் உரிமைகள் இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாதவை, பின் உள்ள உரிமைகள் வழங்கும் சலுகைகள்தான் தனது கடமைகளை ஒருவர் செய்வதற்கு காரணமாகிறது.
  • மகாத்மா காந்தி (Mahatma Gandhi)

வாழும் உரிமை மற்றும் தனிநபர் சுதந்திரம் (Right to Life and Personal Liberty)

எந்த ஒரு குடிமகனுக்கும் தனிநபர் சுதந்திரம் மறுக்கப்படக் கூடாது. அதாவது எந்த ஒரு மனிதனும் கைது செய்யப்படும் போது அதற்கான காரணத்தை அவனுக்கு தெரிவிக்காமல் காவலில் வைக்கக் கூடாது. மேலும் அவர் தனது சார்பாக வாதாட ஒரு வழக்குறைஞரை தேர்ந்தெடுத்து கொள்ளும் உரிமை வழங்கப்பட வேண்டும். அவர் கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளாக நீதிமன்றத்தின் முன்பாக ஆஜர்படுத்தப்பட வேண்டும்.

தடுப்புக் காவல் (Preventive Detention)

தடுப்புக் காவல் என்பது காலத்தின் கட்டாயத்தினால் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவரின் செயலை தடுப்பதற்கானதாகும். தடுப்பு காவல் என்பது ஒருவர் சட்டம் மற்றும் ஒழுங்கை அச்சுறுத்தும் வகையிலும், தேசப்பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதையும் தடுப்பதற்காக அரசால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை ஆகும். இதற்காக அந்த நபரைக் கைது செய்யவோ அல்லது காவலில் வைக்கவோ அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது.

சுரண்டலுக்கு எதிரான உரிமை (Right Against Exploitation)

  • நம் நாட்டில் இலட்சக்கணக்கானோர் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு தவறாகப் பயன்படுத்தப் படுகிறார்கள். இவர்கள் அனைவரும் சமூகத்தின் அடித்தட்டு மக்களே ஆவர்.
  • தற்போதைய நிலையில் “ஆட்கடத்தல்” (Human Trafficking) என்பது மனிதர்களுக்கு எதிரான மிகவும் ஆபத்தான சுரண்டலாக திகழ்கின்றது. ஆட்கடத்தல் செய்தல் என்பது மனிதர்களை விற்பதும், வாங்குவதும் அவர்களை அடிமைகளைப் போன்று நடத்துவதும் ஆகும். இது மட்டுமின்றி குழந்தைத் தொழிலாளர் முறையும் சுரண்டலின் மற்றொரு பகுதி ஆகும்.
  • இக்குழந்தைகள் ஊதியமின்றி பணிசெய்யக் கட்டாயப் படுத்தப்படுகிறர்கள். இந்த காரணத்தினால் தான் அரசமைப்புச் சட்டத்திலேயே அரசு சுரண்டலுக்கு எதிரான உரிமையை வழங்கியுள்ளது.
  • இதன்படி ஆட்கடத்தல் செய்தல் கட்டாயப்படுத்தி பிச்சையெடுக்க வைத்தல் ஆகியவை கட்டாயப் பணி செய்ய வைத்தலின் வடிவங்களாகும். மேலும் இது பதினான்கு வயதிற்குட்பட்ட சிறார்களை தொழிற்சாலைகள், சுரங்கங்ல: அல்லது உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய எத்தொழிலும் ஈடுபட வைப்பதை தடை செய்கிறது.

மத சுதந்திர உரிமைகள் (Right to Freedom of Religion)

  • இந்தியாவில் அனைத்து மக்களும் தங்களது மதம் மற்றும் நம்பிக்கையினைத் தேர்தெடுத்து அதன்வழி செல்லும் உரிமையை அரசமைப்பு சட்டம் வழங்கி உள்ளது. இதன் மூலமாக அனைவரும் தங்களது மதத்தின் படி வழிபடுவதுடன் பரப்புரையும் செய்யலாம். இந்த உரிமைகள் மதத்தில் சமூகம் மற்றம் தனிப்பட்ட அம்சங்களைக் கொண்டதுடன் நாட்டின் குடிமக்கள் அனைவரும் இதனை அனுபவித்து வருகிறார்கள்.
  • மத சுதந்திரத்திற்கான உரிமை அனைவருக்கும் அளித்துள்ள உத்திரவாதம் என்னவென்றால் அனைவரும் தங்களது சுய விருப்பத்தின்படி அவர்களுக்கு ஏற்புடைய மதத்தினை தழுவுதல், பின்பற்றுதல் மற்றும் அதனைப் பரப்பலாம் என்றும் , மேலும் பொது ஒழுங்கு, நீதிநெறிமுறைகள் மற்றும் சுகாதார வரையறைகளுக்கு உட்பட்டு அவர்களுடைய அச்செயல்பாடுகள் அமைய வேண்டும் என்றும் கூறுகின்றது.
  • அரசமைப்பின் உறுப்பு 26-ன் படி ஒவ்வொருவரும் மத விவகாரங்களின் அடிப்படையில் சேவை புரிவதற்காக நிறுவனங்களை உரிவாக்கி, அதற்கென அசையும் மற்றும் அசையா சொத்துக்களை உரிமையாக்கி சட்டத்தின் அடிப்படையில் நிர்வகிப்பதாகும்.

பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் (Cultural and Educational Rights)

  • இந்தியாவின் மதம், மொழி மற்றும் பண்பாடு அடிப்படையிலான சிறுபான்மையினர், குழுக்கள் அல்லது பிரிவினருக்கு அரசமைப்பின் மூலம் இந்த அரசியல்சாராத உரிமைகள் வழங்கப்படுகிறது.
  • எந்த குடிமகனும் அரசு நடத்தும் அல்லது அரசின் நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் கல்விபெறுவதற்கு உரிமையிண்டு என்பதனை மறுக்க இயலாது. இந்த உரிமையை சாதி, மதம், இனம், பாலினம், நம்பிக்கை போன்றவற்றைக் காரணம் காட்டி மறுக்க இயலாது.
  • குடிமக்கள் தாங்கள் விரும்பும் பள்ளிகள் அல்லது கல்லூரிகளில் கல்வி கற்றும் உரிமை உள்ளது. எந்த ஒரு கல்வி நிறுவனமாவது இந்த அடிப்படையில் பாகுபாடு காட்டுமாயின் அரசின் நிதி உதவி அந்தக் கல்வி நிறுவனத்திற்கு மறுக்கப்படும்.
  • மேலும் இந்த சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் எவ்விதமான கல்வி முறையை பின்பற்ற வேண்டும் என்பதனை அரசு வலியுறுத்த முடியாது. அந்தக் கல்வி நிறுவனங்களை அவரவர்களது பண்பாட்டினை பாதுகாக்கும் வகையில் செயலாற்ற அனுமதிக்க வேண்டும்.

அரசமைப்பு சட்ட பரிகார உரிமைகள் (Right to Constitutional Remedies)

ஒரு குடிமகன் தனது உரிமையை பாதுகாத்து கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தினை அணுகுவதற்கு இந்த உரிமை வழி வகை செய்கின்றது. அரசமைப்பின் உறுப்பு 32-ன்படி உச்ச நீதிமன்றம் பரிகாரம் செய்யலாம். அதுவே அரசமைப்புச் சட்ட உறுப்பு 226-ன்படி உயர்நீதிமன்றம் பரிகாரம் செய்கின்றது. இதற்காக நீதிமன்றம் நீதிப்பேராணைகளை பிறப்பிக்கிறது. இவைகல், ஐந்து வகைப்படும்.

  • ஆட்கொணர்வு நீதிப் பேராணை (Writ of Habeas Corpus)
  • கட்டளை நீதிப்பேராணை (Writ of Mandamus)
  • சான்றாய்வு நீதிப் பேராணை (Writ of Certiorari)
  • தகுதி வினவும் நீதிப் பேராணை (Writ of Quo Warranto)
  • தடைநீதிப் பேராணை அல்லது தடை உத்தரவு (Writ of Prohibition or Injunction)

ஆகவே அடிப்படை உரிமைகள் என்பது தனிமனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்கின்ற கருவியாக நம் நாட்டில் பயன்படுகிறது. அந்த வகையில் அடிப்படை உரிமைகளை செயல்படுத்தும்போது, மக்களாட்சி அடிப்படையிலான வாழ்க்கை முறையும் அதன் அடிப்படைக் கொள்கைகளான சமத்துவம் மற்றும் நீதியையும் சமூகத்தில் நிலைநிறுத்துகிறது. அடிப்படை உரிமைகள் நம் நாட்சின் சுதந்திரத்தில் ஒரு மைல்கல் ஆகும். இது வழக்கு விசாரணை மற்றும் பெருந்துன்பத்திற்குப் பிறகு நமக்கு கிடைத்துள்ளதாகும்.

தகவல் அறியும் உரிமை (Right to Information)

நீங்கள் அரசிடம் இருந்து ஏதேனும் தகவல் பெற வேண்டுமா? அதனை நீங்கள் தாராளமாக கேட்கலாம். அவர்கள் எப்படை வேலை செய்கிறார்கள், அதன் உறுப்பினர்கள் யார்? அவர்களுக்கு உதவி செய்வது யார்? போன்றவற்றை கேட்களாம். அதற்கு உங்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறு என ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? ஆம்! இது உண்மையே! இதற்கு தகவல் உரிமை சட்டம் 2005-இல் வழி வகை செய்து அரசாங்கத்திடம் மக்கள் தகவல்கள் கேட்பதனை சட்டப்பூர்வமாக்கியுள்ளது. இந்தச்சட்டமானது அரசாங்கங்களை வெளிப்படைத் தன்மை கொண்டதாகவும், குடிமக்களுக்கு பொறுப்புணர்வு கொண்டதாகவும் மாற்றியுள்ளது. இதன் மூலமாக அரசின் நடவடிக்கைகளை தகவலறிந்த குடிமக்கள் எளிதாகக் கண்காணிக்க முடியும். இதனால் அரசாங்கம் மக்களுக்கு கடமைப்பட்டதாக மாற்றப்பட்டுள்ளது.

தனியுரிமை (Right to Privacy)

இந்திய மக்கள் கண்டிப்பாக தனி மனித வாழ்வின் மதிப்பு மிக்க அம்சங்களான வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் விடுதலையை யாரிடமும் ஒப்படைக்க வேண்டியதில்லை. அரசிடம் தனி மனிதனின் அனைத்து உரிமைகளை சமர்ப்பிக்க வேண்டியதில்லை. தனியுரிமை என்பது மனிதனின் மாண்புடன் ஒன்றிணைந்ததாகும். தனியுரிமையைப் பாதுகாப்பதற்கு அரசமைப்பின் உறுப்பு 21-இல் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது வாழ்வுரிமை மற்றும் தனிநபர் சுதந்திரத்தின் உள்ளார்ந்த பகுதியாகும். இந்த உரிமைகள் அரசமைப்பின் பகுதி – III –இல் இடம் பெற்றுள்ளது.

மாற்றுப்பாலினத்தவரின் உரிமைகள் அ(Rights of Transgenders)

மாற்றுப்பாலினத்தவர் என்பவர் யார்? அவர்களை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? மாற்றுப்பாலினத்தவர் என்போர் எந்த வயதினராகவும், சாதாரணமாக ஆண் அல்லது பெண் போன்றும் இருப்பார்கள். ஆனால் அவர்கள் தங்களது குணாதிசயங்களில் ஆடவர் அல்லது மகளிரிடமிருந்து மாறுபட்டு காணப்படுவார்கள். அவர்கள் காலங்களைக் கடந்தும் அனைத்து பண்பாடுகள், இனம் மற்றும் அனைத்து வகுப்புகளிலும் இருக்கிறார்கள். வெகு சமீப காலங்களில்தான் அவர்களின் பிரச்சனைகள் பேசப்படுகின்றன. அவர்கள் இப்போது ‘மூன்றாம் பாலினம்’ என்று அழைக்கப்படுகின்றனர். உச்சநீதிமன்றமானது மத்திய-மாநில அரசுகளுக்கு ஓர் உத்தரவை வழங்கியுள்ளது. அதில் இவர்களின் பாலின அடையாளத்தினை சட்டபூர்வமாக அங்கீகரிக்கும்படி கூறியுள்ளது. இவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அளிக்கப்பட்ட அனைத்து அடிப்படை உரிமைகளையும் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இவர்கள் பொது நலம் மற்றும் சுகாதாரம், சமூக – பொருளாதார உரிமைகளாகிய அனைத்தும் பெறும் உரிமையுடையவர்கள் ஆவர்.

அரசின் நேரடி வழிகாட்டி நெறிமுறைகள் (Directive Principles of State Policy)

  • அரசின் நேரடி வழிகாட்டி நெறிமுறைகள் இந்திய அரசமைப்பின் பகுதி நான்கில் இடம் பெற்றுள்ளது. இதில் அரசியல், சமூக, பொருளாதார திட்டங்களை உள்ளடக்கி அரசுக்கு வழிகாட்டக்கூடிய பல மக்கள் நலக்கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நெறிமுறைக் கோட்பாடானது மனித நலன் சார்ந்த சமதர்ம நோக்கினைக் கொண்ட ஒரு செயல் திட்டத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது.
  • அரசின் நேரடி வழிகாட்டி நெறிமுறைகளில் போதிய அளவிற்கு தற்போதைய அரசாங்கங்களுக்கு நேரடி வழிகாட்டி நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளன. அதனை அரசு நடைமுறைப்படுத்தி ஆணுக்கும், பெண்ணுக்கும் சரிசமான வாழ்வாதாரங்களை உரிவாக்கித் தர வேண்டும் என இச்சட்டம் கூறுகிறது.
  • இது ஆணுக்கும், பெண்ணுக்கும் சரிசமமான ஊதியத்தை வழங்குகின்றது. இந்த நேரடி வழிகாட்டி நெறிமுறையில் உள்ள கொள்கையின்படி அனைவருக்கும், போதிய ஓய்வு, வாழ்க்கை தரம் மற்றும் சமூக, பண்பாட்டு வாய்ப்புகள் போன்றவை உறுதி செய்யப்படுகின்றன.
  • அரசின் வழிகாட்டி நெறிமுறைகளில் காந்தியக் கொள்கைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றின்படி குடிசைத் தொழில்கள் தனிநபரின் அடிப்படையிலோ அல்லது கூட்டுறவு அடிப்படையிலோ கிராமப்புற பகுதிகளில் ஊக்குவிக்கப்பட வேண்டும் என கூறுகிறது. மேலும் காந்திய கூற்றுப்படி மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என கூறுகிறது.
  • அரசின் நேரடி வழிகாட்டி நெறிமுறைகளில் இடம் பெற்றுள்ள சுதந்திர மக்களாட்சி கொள்கையின்படி அனைவருக்கும் ‘பொது குடிமைச் சட்டம்’ கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளபட வேண்டும்.
  • இது மேலும் 6 வயது முதக் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி வழங்க வேண்டும் எனவும் கூறுகிறது. இது இப்பொழுது அடிப்படை உரிமைகளில் சேர்க்கப்பட்டுள்ளது. குழந்தைகள் உடல் ரீதியான சித்ரவதை அல்லது மன உளைச்சலுக்கு ஆளாவதை தடை செய்கிறது.

அடிப்படை உரிமைகள்

உறுப்புகள் 14 -18 : சமத்துவ உரிமை

உறுப்புகள் 19 – 22 : சுதந்திர உரிமை

உறுப்புகள் 23 – 24 : சுரண்டலுக்கு எதிரான உரிமை

உறுப்புகள் 25 – 28 : மத சுதந்திரத்திற்கான உரிமை

உறுப்புகள் 29 -30 : பண்பாடு மற்றும் கல்வி உரிமை

உறுப்புகள் 32 : அரசமைப்புச் சட்ட பரிகார உரிமை

அரசியல் கடப்பாடு (Political Obligation)

அரசாங்கம் என்பது வெளிப்படைத் தன்மை கொண்டதாகவும் , குடிமக்களுக்கு பொறுப்பு உடையதாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? ஆம் எனில் இநிங்கள் எவ்வாறு அரசுடன் பரிமாற்றம் மேற்கொள்கிறீர்கள்? இது தான் அரசியல் கடப்பாடு எனப்படுகிறது. இது நீதிநெறியுடன் தொடர்புடையதாகும்.

  • ஒவ்வொரு தனிமனிதனும் தனது கடமைகளை செய்கிறான். உதாரணமாக வரி செலுத்துதல், தேர்தலில் வாக்களித்தல், நீதிமன்ற பணி மற்றும் இராணுவப்பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவைகள் யாவும் எதற்காக? இவை அனைத்தும் நாட்டின் அரசியல் சரந்த நிறுவனங்களை நிர்வகிப்பதற்காகத்தான் என்பதனை உணருங்கள்.
  • அரசியல் கடப்பாடுகள் என்பது அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளை ஒருவர் நிறைவேற்றுவதற்கான பிணைப்பாக விளங்குகிறது. ஒவ்வொரு தனி மனிதனும் தன் சுய நலத்திற்காகவும், சமுதாய நலத்திற்காகவும் அரசமைப்புச் சட்ட உறுப்புகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்றுகிறான்.
  • அரசாங்கம் எப்படி குடிமக்களுக்கு பொறுப்பானதோ. அதே போன்று குடிமக்களுக்கு பொறுப்பானதோ. அதே போன்று குடிமக்களும் அரசாங்கத்திற்கு பொறுப்பானவர்கள் ஆவர். ஒரு அரசு சீரிய முறையில் இயங்குவது அரசாங்க அமைப்புகளின் சீரிய இயக்கத்தை சார்ந்ததாகும்.
  • ‘அரசியல்’ என்ற வார்த்தை, அரசாங்க நிர்வாகம் மற்றும் கொள்கைகள் தொடர்புடையதாகும். அரசியல் முறைமையின் கட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் அதிகாரங்களின் எல்லைகள் கண்டறியப்படுகின்றன.
  • டி.எச்.கிரீன் (T.H.Green) என்பவரின் கூற்றுப்படி “அரசியல் கடப்பாடு என்பது ஓர் ஆளுகைக்கு உட்பட்டோருக்கு இறையாண்மை மிக்க ஆள்வோரிடம் உள்ள கடப்பாடு, குடிமகனுக்கு அரசிடம் உள்ள கடப்பாடு, சக மனிதர்க்கு ஆற்ற வேண்டிய கடப்பாடு போன்றவைகளும். இதனை அரசியல் உயர் பதவியில் இருப்பவர்கள் நடைமுறைப்படுத்துகிறார்கள்”.

அரசியல் கடப்பாடு மற்றும் அரசியல் அதிகாரத்துவம் (Political Obligation and Political Authority)

ஒரு அரசு, அரசியல் அதிகாரத்துவம் கொண்டு இருந்தால் அதனால் கீழ்படியாதவர்கல் மீது ஆதிக்கம் செலுத்தமுடியும். உதாரணமாக அரசால் வரி விதிக்கப்படுகிறது எனில் வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரி வசூல் செய்ய அரசால் முடியும். எனினும் அரசு அவ்வாறு செய்யவில்லை என்றால் கூட குடிமகன் தார்மீக அடிப்படையில் அரசின் சட்டத்தினை மதித்து அதற்கு கீழ்ப்படிய வேண்டும். எனவே அரசியல் கடப்பாடு என்பது எங்கும் நிறைந்திருக்கக்கூடிய தற்கால தேசிய அரசில் ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டியதாகும். அரசியல் கடப்பாடுகள் மூன்று முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாகும்.

அடையாளம் காண கூடிய அதிகாரத்திடம் அரசியல் கடப்பாடுகளை காண்பித்தல்

ஒருவரை தன்னுடைய அரசியல் கடப்பாடுகளை செய்ய வைக்கவோ அல்லது செய்யாமல் விலகி இருப்பவர்களை ஆணைகள் வழங்கி அதனைச் செய்ய வைக்கவோகூடிய அதிகாரம் இந்த அடையாளம் காணக்கூடியவர்களிடம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஒருவருடைய அரசியல் கடப்பாடு என்பது குறிப்பிட்ட வகையில் அவர்களின் குடியுரிமையுடன் சம்மந்தப்பட்டது. ஏனெனில் குடியுரிமை இல்லாத வெளிநாட்டவர்களுக்கு அரசியல் வழங்கப்படவில்லை. ஆனால் அவர்களுக்குச் சட்டப்படியாக கடப்பாடுகள் மற்றும் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

எதுவரை அரசியல் கடப்பாடுகளை ஆற்ற வேண்டும்?

அரசு தனது சட்டத்தினை நடைமுறைப்படுத்தி அதன் அடிப்படையில் தனக்கு கீழ்உள்ள குடிமக்களிடமிருந்து சில குறைந்தபட்ச கடப்பாடுகளை எதிர்பார்க்கிறது. அதாவது மக்கள் சட்டத்தினை தேர்ந்தெடுத்து மதிக்க முடியாது. ஆனால் அனைத்து சட்டத்தினையும் மதிக்க வேண்டும். உதாரணமாக வாக்களித்தல், இராணுவ பணிகள் ஆகியவற்றினைக் கூறலாம். இதனை போன்று அடிப்படை பணிகள் அனைத்தும் அரசியல் கடப்பாடுகளாகக் கருதப்படுகின்றன. இவைகளை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். இதில் தேர்ந்தெடுத்தல் என்பது இருக்கக்கூடாது.

அரசியல் கடப்பாடுகளின் அடிப்படை (The Basis of Political Obligations)

  • அரசியல் கடப்பாடுகள் 16-ஆம் நூற்றாண்டுக்கு பிறகே உத்வேகம் பெற தொடங்கியது எனலாம். அதற்கு முன்பு அரசியல் கடப்பாடு என்பது கடவுளின் விருப்பமாகக் கருதப்பட்டது. ஆனால் தற்காலத்தில் அரசியல் கோட்பாடுகள் அந்த விளக்கத்தில் இருந்து வேறுபடுகின்றன.
  • இந்த கோட்பாடுகள் கூறுவது என்னவென்றால் எந்த மனிதனையும் கட்டாயப்படுத்தி வேலை வாங்க கூடாது. மாறாக தன்னார்வ அடிப்படையில் தாமாக முன்வந்து கடமைகளை செய்ய மக்கள் முன்வர வேண்டும் இவை அவர்களின் முறைப்படியாக அமைந்த கடப்பாடுகளாகும்.
  • மக்கள் ஏன் அவ்வாறு நினைக்கிறார்கள் என்று தெரியுமா? இதற்கு சுய விருப்பம் மற்றும் அரசின் அடிப்படைக் கடமைகளை உணர்தல் ஆகியவை காரணங்களாகும்.
  • அரசு மக்களுக்கு உடல் சார்ந்த பாதுகாப்பு வழங்குகிறது. மக்களுக்கு நீதி கிடைப்பதும் அதன் விளைவாக மகிழ்ச்சியாய் இருப்பதற்கும் காரணம் அரசினால் செயல்படுத்தப்படும் அரசியல் அதிகாரம்தான் என்றும், அது இல்லை என்றால் மகிழ்ச்சியும், நீதியும் தங்களுக்குக் கிடைக்காது என்பதும் அவர்களுக்கு நன்கு தெரியும். ஆதலால் மக்கள் இயற்கையாகவே அரசியல் கடப்பாடுகளுக்குப் பொறுப்பானவர்களாக உள்ளனர்.

அரசியல் கடப்பாட்டின் இயல்புகள் (Features Political Obligations)

  • அரசியல் ஆர்வம் கொள்வதும், சமூகப் பணி செய்தலும் விரும்பத்தக்கதாக உள்ளது.
  • பொதுப்பணி செய்பவர்களுக்கு நாணயம் மற்றும் நேர்மை ஆகியவை இன்றியமையாத அம்சங்களாகும்.
  • சட்டபூர்வ தன்மை மற்றும் திறனை மேம்படுத்துதல் ஆகியவை இருக்க வேண்டும்.
  • குடிமக்கள் தங்களது காப்பாளரை பாதுகாக்கின்ற பொறுப்பினைக் கொண்டுள்ளனர்.

அரசியல் கடப்பாடுகளின் வகைகள்

அரசியல் கடப்பாடுகள் நான்கு வகைப்படும். அவைகள் யாவை?

அ) நீதிநெறி கடப்பாடு (Moral Obligation)

வீட்டிற்கு வரும் விருந்தினரை உபசரிக்கிறீர்களா? ஏழைகளுக்கு உதவுகிறீர்களா? வயதான பெற்றோரை பேணுகிறீர்களா? இவை உங்களின் நீதி நெறி சார்ந்த கடப்பாடுகள் ஆகும். இது சமூகத்தில் சட்டத்தின்படி நடைபெறுவதில்லை. மேலும் இவற்றை நீங்கள் நிறைவேற்றவில்லை என்றால் உங்களுக்கு சட்டப்படியான தண்டனை எதுவும் கிடையாது. ஆனாலும் நன்நெறி மற்றும் நீதிநெறு கொள்கைகளின்படியும் உனது மனிதாபிமான உள்ளுணர்வுபடியும், செயலாற்ற வேண்டும்.

ஆ) சட்டப்படியான கடப்பாடு (Legal Obligation)

நம் நாடு மக்கள் நல அரசு கொள்கையைக் கொண்ட நாடாகும். இதில் அரசாங்கமானது நாட்டிற்கு உள் கட்டமைப்பு, வசதிகளை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. சாலை வசதி, சுகாதார மையங்கள், மருத்துவம், கல்வி போன்றவற்றை வழங்குவது அரசின் கடமை என்பதற்கான சில உதாரணங்களாகும்.

இ) நேர்மறை கடப்பாடு (Positive Obligation)

அரசு சில விதிமுறைகளை உருவாக்கி செயல்படுத்துகிறது. அவற்றை நம்மால் கீழ்ப்படியாமல் இருக்க முடியாது. இவற்றைத்தான் நேர்மறை கடப்பாடு என்று கூறுகிறோம். நேர்மறைக் கடப்பாட்டிற்கு சில உதாரணங்களைச் சிந்திக்க முடியுமா? உதாரணமாக வரி செலுத்துதல், நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுதல் போன்றவைகளைக் கூறலாம். இவை நேர்மறை கடப்பாட்டின் சில உதாரணங்களாகும்.

ஈ) எதிர்மறை கடப்பாடு (Negative Obligation)

  • எதிர்மறைக் கடப்பாடுகள் என்பது நேர்மறை கடப்பாடுக்கு எதிரானதாகும். அரசால் தடைசெய்யப்பட்ட ஓர் செயலை செய்வதற்கு எந்த ஒரு தனி நபருக்கும் சட்டத்தின் படி அனுமதி இல்லை. அத்தகைய செயலுக்கு தண்டனை உண்டு.
  • தற்பொழுது எதிர்மறைக் கடப்பாட்டிற்கான சில உதாரணங்களைச் சிந்திக்கவும். உதாரணத்திற்கு மது அருந்திவிட்டு சிலர் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்வதை பார்த்திருக்கிறாயா?
  • மேலும் , சிலர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகின்றனர். அதனால் பல பாதிப்புகள் குடும்பத்திற்கும் ஏற்படுகிறது. இவ்வாறு அரசால் தடுக்கப்பட்ட எந்தவொரு செயலையும் ஒரு குடிமகன் செய்யாமல் இருப்பதே எதிர்மறை கடப்பாடு ஆகும். குற்றம் செய்தல் என்பதே ஓர் எதிர்மறைக் கடப்பாடாகும்.

அரசமைப்புச் சட்டம் கூறும் முக்கிய கடப்பாடுகள்

  • அரசமைப்புச் சட்டம் என்பது அரசுக்கு அடிப்படை சட்ட புத்தகமாக கருதப்படுகிறது. எனவே அதில் உள்ள விதிமுறைகளை மக்கள் பின்பற்றி நடப்பார்கள் என்பது பொதுவான எதிர்பார்ப்பு ஆகும்.
  • அந்த அரசமைப்புச் சட்டம் சிறப்பாக இயங்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம் ஆகும், ‘சட்டம் என்பது வழி, அதன் வழியாக முடிவை எட்டலாம். அதுவே முடிவாக அமையாது’, ‘நீராவி உருளைச் சட்டமன்றம்’ என்ற கருத்தக்கம் ஒன்று உண்டு.
  • அதன்படி எந்தவொரு சட்டமும் நல்லது செய்யவில்லௌ என்றால் அதனை மாற்றிவிட வேண்டும். சில சமயங்களில் சில சட்டங்களை அரசு உருவாக்கும் போது அவை மக்களுக்கு தீங்கு விளைவித்தாலும் அதற்கு ஆதரவு அளிக்கப்படுகிறது.
  • இத்தகைய சட்டமே நீராவி உருளைச் சட்டம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சட்டங்களை கடுமையாக எதிர்ப்பது குடிமக்களின் கடமை ஆகும். இதன் மூலமாக நாம் அறிவது அரசியல் கடப்பாடுகள் என்பது சட்டத்தினை மதித்து மட்டுமல்ல சில சமயங்களில் சமுதாய நலனுக்கு எதிராக இருந்தால், சட்டத்தினை எதிர்க்கச் சொல்வதும் அரசியல் கடப்பாடுகளே ஆகும்.

நீங்கள் அரசுக்கு ஆற்ற வேண்டிய கடப்பாடுகள் எவை?

  • நண்பர்களுடன் விளையாடுதல்
  • தேர்தல் நேரத்தில் வாக்களித்தல்
  • சகோதர/ சகோதரிக்கு கற்பித்தல்
  • அரசுக்கு வரி செலுத்துதல்
  • பொது பணியில் சேருதல்
  • அவசர காலத்தில் இராணுவத்தில் பணிபுரிதல்

அரசியல் கடப்பாடு பற்றிய கோட்பாடுகள் (Theories of Political Obligation)

வாழ்க்கையில் நாம் அனைவரும் பல கோட்பாடுகளை பின்பற்றி வருகிறோம். அதேபோன்று அரசியல் கடப்பாடுகள் பற்றி சில கோட்பாடுகளை இங்கு காண்போம்.

ஆ) தெய்வீகக் கோட்பாடு (Divine Theory)

முற்காலத்தில் மக்கள் நினைத்தது என்னவென்றால் “அரசினை கடவுள் படைத்தார் என்றும், அரசர் கடவுளின் பிரதிநிதியாவார்” என்றும் அவர்கள் நம்பினார்கள். இந்தக்கோட்பாடு முற்காலத்திலும், இடைக் காலத்திலும் புகழ் பெற்று இருந்தாலும் தற்காலத்தில் இந்தக் கோட்பாட்டுக்கு இடமில்லை.

ஆ) ஒப்புதல் கோட்பாடு (Consent Theory)

இந்த கோட்பாடு முன்மொழிவது என்னவென்றால் அரசின் அதிகாரம் அனைத்தும் மக்களின் ஒப்புதல் அடிப்படையிலானதாகும். ஹாப்ஸ், லாக், ரூசோ போன்றோர் இந்த கோட்பாட்டினை நியாயப்படுத்துவதுடன் , அரசின் அதிகாரம் மக்களின் ஒப்புதல் அடிப்படையிலேயே அமைகிறது என்று கூறுகிறார்கள். ஆனாலும் பிற்காலத்தில் இது ஏற்றுக் கொள்ளப்படவில்லை, ஏனெனில் அரசு என்பது செயற்கையாக உருவாக்கப்பட்ட அமைப்பு என்று கூறப்பட்டதால் இந்தக்கோட்பாடு நிராகரிக்கப்பட்டது.

இ) பரிந்துரைக் கோட்பாடு (Prescriptive Theory)

இந்தக் கோட்பாடு கூறுவது என்னவென்றால் அரசியல் அதிகாரத்துவத்தின் மதிப்பு என்பது வழக்கமான உரிமைகள் எனும் கொள்கையின் அடிப்படையில் அமைகிறது என்பதாகும். இக்கோட்பாடானது அரசியல் நிறுவனங்கள் என்பவை பழங்காலந்தொட்டு அமைந்து இருந்தன என்று கூறுகிறது. இக்கருத்தினை எட்மண்ட் பர்க்கும் (Edmund Burke) ஆதரிக்கிறார். ஆனாலும் காலப்போக்கில் இது செயல் இழந்து போனதற்கு காரணம் அளவுக்கு அதிகமாக நன்கு கடைபிடிக்கப்பட்ட நடைமுறைகளை வலியுறுத்தியதாகும்.

ஈ) இலட்சியவாதக் கோட்பாடு (Idealistic Theory)

இந்த கோட்பாடு மனிதன் மற்றும் அரசு ஆகிய இரண்டும் தனித்தனியான குணகூறுகள் கொண்டவை என்று குறிப்பிடுகிறது. ‘மனிதன்’ என்பவன் அரசியல் மற்றும் பகுத்தறிவினால் உருவானவன் என்றும், அரசு என்பது சுயசார்புடைய சமூக அமைப்பு என்றும் கூறுகிறது. மேலும் இலட்சியவாதக் கோட்பாடு கூறுவது என்னவென்றால் மனிதன் தன் அதிகாரத்தை அரசிடம் இருந்து மட்டுமே பெறுகிறான் எனும் போது அவன் அரசிடம் இருந்து மாறுபடுகின்ற அதிகாரத்தை இழக்கிறான் என்பதே சரியானது ஆகும். எனினும் இந்த கோட்பாட்டின் கருத்துக்கள் பெரும்பாலும் மனிதனால் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு கற்பனையாக அமைந்துள்ளது.

உ) மார்க்சின் கோட்பாடு (Marxian Theory)

மார்க்சின் கோட்பாடு பிற கோட்பாடுகளில் இருந்து மாறுபட்டதாகும். அது மூன்று நிலைகளாகப் பிரிக்கப்படுகிறது.

புரட்சிக்கு முந்தையநிலை

இந்நிலையில் மனிதன் முழுவதும் அரசியல் கடப்பாடுகளின்றி இருப்பதை கூறுகிறது.

புரட்சிக்கால நிலை

இந்த நிலையானது முழுவதுமான அரசியல் கடப்பாடுகளில் இருந்து சமூக மேம்பாட்டிற்கு மாறும் நிலை பற்றியதாகும்.

மார்க்சிய அரசியல் கோட்பாடு கூறுவது என்னவென்றால் அரசு என்பது பாட்டாளி வர்க்கத்தினர் ஆளும் அமைப்பு ஆகும். வெற்றிகரமான புரட்சியின் மூலமாக முதலாளித்துவ அரசு மாற்றப்பட்டு சமதர்ம முறைமை உருவாக்கப்படுவதுடன் இதில் அரசுகள் படிப்படியாக உதிர்ந்து போகும். எனினும் இக்கோட்பாடு மனிதன் அரசிடம் கெஞ்சிப் பணிகிறான் என்ற நிலையினை உருவக்குவதால் தர்க்கத்தின் அடிப்படையில் பொருத்தமற்றதாகிறது.

நாம் ஏன் அரசுக்கு கீழ்ப்படிய வேண்டும்? அது தேவையானதா?

இக்கோட்பாடுகள் அரசியல் கடப்பாடு பற்றியவையாக இருந்தாலும் சில புலனாகாதவை மற்றும் சில கோட்பாடுகள் தர்க்க அடிப்படையில் பொருத்த மற்றவையாகும். ஆனால் நீங்கள், அரசுக்கு கீழ்ப்படிய வேண்டும் என எப்போதாவது எண்ணி இருக்கிறீர்களா? நாம் பயத்தின் காரணமாகவா அல்லது தேசபக்து காரணமாகவா? அல்லது வேறு எந்த காரணத்திற்காக தனி மனிதன் அரசிடம் கீழ்ப் படிகிறான் என்பதைக் காண்போம்.

அ) தண்டனை பற்றிய பயம்

நீங்கள் உங்களது வீட்டுப் பாடத்தினை செய்யாமல் பள்ளிக்கு சென்றால் ஆசிரியர் தண்டனை கொடுப்பார் எனப் பயமா? அதேபோன்று உங்களது தந்தை போக்குவரத்து விதிகளை மதித்து நடப்பது. தண்டனை என்ற பயத்தின் காரணமாகவா? ஆம். நமது கடமைகளை ஒழுங்காகச் செய்யாத போது பயம் வருகிறது. அதே போன்று தண்டனை கிடைக்கும் என்ற பயத்தின் காரணமாகவே தனிமனிதர்கள் தங்களின் பணிகளைச் செய்கிறார்கள். வேறு வழியில் கூற வேண்டுமெனில், அரசு தனது அதிகார வலிமையைப் பயன்படுத்தியே மனிதனை முறைமைக்குத் தக்கவாறு விதிகளை பின்பற்றவைக்கின்றது.

ஆ) தேசப்பற்று

  • தேசிய கீதத்திற்கு ஏன் எழுந்து நிற்கிறீர்கள்? அவ்வாறு நிற்பதற்குக் காரணம் தேசப்பற்று ஆகும். நாம் நமது நாட்டினை நேசிக்கிறோம். அதனால் நமது சுற்றுப்புறத்தையும் தெருக்களையும் தூமையாக வைத்திருப்பதுடன் சாலைகளில் குப்பைகளின்றி வைத்திருப்பது நமது கடமை ஆகும். ஆதலால் நாட்டின் மீது குடிமகன் என்ற முறையில் அக்கறை உணர்வுடன் செயல்பட வேண்டும். அத்தகைய அக்கறை உணர்வு இன்று மனிதனால் நாகரிகமான குடிமக்களாக வாழமுடியாது. உறுப்பினர்கள் என்ற முறையில் அனைவரும் அரசுடனான பிணைப்பினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

இ) சமூக ஒழுங்கின்மை மற்றும் அமைப்பெதிர்வாதம் பற்றிய பயம்

உங்களது இல்லத்தை ஒழுங்கற்ற முறையில் நடத்திட நீங்கள் அனுமதிப்பீர்களஆ? நீங்கள் காலை உணவை ஒவ்வொரு நாளும் மதியத்தில் உண்ணுவீர்களா? உங்களது உடைகள் அங்கும், இங்கும் சிதறி கிடப்பதை கற்பனை பண்ணி பாருங்கள். உங்கள் இடம் சுத்தமின்றி இருப்பதை நீங்கள் விரும்புகிறீர்களா? விரும்புவதில்லையல்லவா? மனிதஇனம் அமைதியையும் , ஒழுங்கினையும் விரும்புவது பொதுவான கொள்கையாகும். சட்டத்திற்கு கீழ்படிதலையும் மனிதர்கள் விரும்பியே ஏற்றுக்கொள்கின்றனர். அவ்வாறு சட்டத்திற்கு கீழ்படியாதவர்களை மனிதன் தனித்துப் பார்க்கிறான்.

ஈ) மரபுகள் மற்றும் பழக்கங்கள்

நாம் அனைவரும் துணிவு, நேர்மை, வீரம், ஒழுக்கம், கீழ்படிதல் போன்அ நல்லொழுக்கங்களை பழக்கங்களாகவே பின்பற்றி வருகிறோம். இது நமக்கு மரபார்ந்த விழுமியங்களால் ஏற்பட்டதாகும். இதே போன்று நாட்டில் குடிமக்கள் நல் மரபுகளை நிறுவ விரும்புவதுடன் அரசுக்குக் கீழ்படிதல், போன்ற செயல்களும் பழக்கமாகின்றன.

ஆகவே அரசியல் கடப்பாடு என்பது தேசிய அளவில் சிறந்த முறைமையை நிர்வகிக்க அவசியமாகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆதலால் ஒவ்வொருவரும் அரசிடமிருந்து சிறந்த கைமாறு எதிர்பார்த்தால் சட்டத்தினை மதித்து கீழ்படிய வேண்டும்.

  • நம் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் குடும்ப சொத்து என்பது தந்தைக்கு பின் அவரது மகன்களுக்கு மட்டுமே பிரித்து வழங்கப்படுகிறது. ஆனால் அதே தந்தைக்குப் பிறந்த ஓர் மகளுக்கு அந்த உரிமை வழங்கப்படவில்லை. 1956-ஆம் ஆண்டு இந்து வாரிசு சட்டம் பெண்களுக்கும் ஆண்களைப் போன்று பிரிக்கப்படாத குடும்ப பாரம்பரிய சொத்தில் சமமான பங்கு உண்டு என உரிமையை வழங்கியுள்ளது.

சொத்து

சொத்து என்பது இயற்கை உரிமையாகும். அது மனித மாண்பு, சுதந்திரம் மற்றும் மாண்பமை வாழ்விற்கு அவசியமாகிறது. சொத்து என்பது மனிதனுடன் சட்ட தொடர்புடைய பொருள்களாகவோ அல்லது புலனாகாதவைகளாவோ இருக்கலாம். திரைப்பட காப்புரிமை, படைப்பு இலக்கிய காப்புரிமை போன்ற பல சொத்துக்களும் புலனாகாதவற்றில் அடங்கும். சொத்து என்பது தனிநபர் சொத்துகள் மட்டுமல்ல. தனிநபர் சொத்து என்னும் கருத்து கீழ்க்கண்ட இயல்புகளைச் சார்ந்ததாகும்.

  • உங்களுக்கு சொந்தமாக வீடு இருக்கிறதா? ஆம் என்றால் அது உங்களின் தனிப்பட்ட சொத்து. அதனைப் பிறர் உரிமை கொண்டாட இயலாது. உரிமையாளர் என்ற முறையில் நீங்கள் மட்டுமே உரிமை கொண்டாட இயலும்.
  • உரிமையாளர் என்ற முறையில் உங்களின் வீட்டினை நீங்கள் உபயோகித்து கொள்ளலாம். ஆனால் அதனை மாற்றியமைக்கவோ அல்லது இடிக்கவோ அதற்கு உரிய அனுமதியை அதற்கென அதிகாரம் பெற்ற அரசின் அமைப்பிடம் பெற வேண்டும்.
  • சொத்துக்களை மற்றவர்களுக்கு மாற்றம் செய்வதற்கு நீங்கள் விரும்பினால் அரசுக்கு சில வரிகலை நீங்கள் செலுத்த வேண்டும். வரிகளற்ற சில சொத்து பரிமாற்றங்கள் அரசினால் தடை செய்யப்பட்டுள்ளது அல்லது தண்டணைக்குரிய வரிவிதிப்பிற்குரியதாகும். உதாரணமாக அன்பளிப்பு வரி அல்லது முதலீடு மாற்ற வரியைக் குறிப்பிடலாம்.

சொத்துக்கள் பல வகைப்படும் அவை பொதுச்சொத்து, அரசுச்சொத்து, அரசாங்கச்சொத்து என வகைப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக போக்குவரத்து, இரயில்வே போன்றவை பொதுச் சொத்துக்களாகும்.

லாக் மற்றும் பயன்பாட்டு வாதத்தினரின் நியாயவாதம் (Locke and the Utilitarian Justification)

லாக்கின் கூற்றுப்படி அரசாங்கத்தின் முக்கிய பணி என்பது குடிமக்களின் உரிமைகளை காப்பதுடன், அமைதியான முறையில் தங்களின் சொத்துக்களை அனுபவிக்கும் நிலையினை உருவாக்கி அவர்களை மகிழ்ச்சியுடன் வாழ செய்வதாகும். மனித இனம் வாழ்வதற்கு சொத்து அடிப்படைத் தேவை ஆகும். பொதுவாக மனிதர்கள் ஒவ்வொரு தருணத்தைப் பற்றியும் திட்டமிடுவதில்லை. ஆனால் அதே மனிதன் தனது எதிர்கால பொருளாதார பாதுகாப்பிற்காக திட்டமிடுகிறான்.

மக்களுக்கு பாதுகாப்பு என்பது மிக முக்கியமானதாகும். அதுவே தனிமனிதனுக்கு மகிழ்ச்சி மற்றும் அமைதியை அளிக்கக் கூடியதாகும். இதனையே பயன்பாட்டு வாதம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது. “சொத்துரிமை என்பது தனிநபர்க்குத் தேவையானது. அதுவே அவனுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையைக் கொடுக்கிறது. எந்தவொரு அரசாங்கமும் மக்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை அளிக்க நினைத்தால், முதலில் மக்களின் சொத்துரிமைக்குத் தகுந்த பாதுகாப்பு அளித்து உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். எந்த ஒரு சரசும் சொத்துக்களை மக்களிடம் இருந்து பறிக்க கூடாது. சொத்து என்பது மக்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தருவது என்பது உறுதியாகும்”.

இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மேம்பாடுகள்

இரண்டாம் உலக்ப் போருக்குப்பின் பெரும்பாலான வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள், சமூக நலக் கொள்கையை பின்பற்றுகின்றன. அக்கொள்கையின் முக்கியக் கூறுகளாக இருப்பது சொத்து வரிவிதிப்பு, அடிப்படைத் தொழிற்துறையில் மாறுதல், பொது மக்களின் அடிப்படை வசதிகளான சுகாதாரம், கல்வி போன்ற அரசு கட்டுப்பாட்டில் உள்ளவை போன்றவைகளாகும்.

பெண்ணியவாதிகளின் கண்ணோட்டம் (Feminist Perspectives)

21-ஆம் நூற்றாண்டில் பெண்களில் ஆற்றலாதல் துவங்கியவுடன் சம உரிமைக் கோரிக்கை பெண்களால் முன் வைக்கப்பட்டது. இந்த பெண்ணியவாதிகள் கூறுவது என்ன என்றால் பெண்களின் இண்றைய அடிமை நிலைக்கு காரணம் அவர்களுக்கு வருவாய், நிலம் போன்ற ஆதாரங்கள் மறுக்கப்படுவதாகும். சொத்து உரிமைகள் முழுவதும் ஆண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு அவர்களால் கட்டுப்படுத்தப்படுவதால் பெண்கள் ஆண்களை சார்ந்தே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, இந்தச் சார்பு நிலைதான் பெண்கள் தங்களது உரிமைகளையும், சொத்து உரிமையையும் கோருவதற்கு காரணமாக அமைந்து இருக்கின்றது.

இந்திய அரசமைப்பு சொத்து உரிமையை அடிப்படை உரிமையில் இருந்து நீக்கியது. 1977-ஆம் ஆண்டு 44-அவது அரசமைப்பு சட்ட திருத்தம் மூலம் சொத்துரிமை நீக்கம் மேற்கொள்ளப்பட்டது எனினும் சொத்துரிமை என்பது விதி 300 (A) யில் சாதாரண உரிமையாக வழங்கப்பட்டுள்ளது. இதன்படி சட்டத்தினால் வழங்கப்பட்ட யாருடைய சொத்துரிமையையும் மறுக்க இயலாது என கூறப்பட்டுள்ளது. ஆகவே சொத்துரிமை தற்பொழுது சட்ட அங்கீகாரம் உள்ளதாக விளங்குகிறது.

இன்றைய குடிமைச் சமூகத்தில் வலியுறுத்தியோ அல்லது அதிகாரப்படுத்தியோ, சொத்துக்களை கையகப்படுத்தும் முறை கூறைக்கப்பட வேண்டும். எனினும் சூழ்நிலையின் காரணமாக அல்லாமல் வலிமையைப் பயன்படுத்தி மக்களின் சொத்துகளை கையக்கப்படுத்துவதை செய்யக் கூடாது. அரசு பல நேரங்களில் பெரிய தொழிலதிபர்களுக்கு முகவர்களாகவும், இடைத்தரகர்களாகவும் செயல்படாமல் விவசாயிகளின் உறுதியான சொத்துரிமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!