Samacheer NotesTnpsc

இந்தியப் பொருளாதாரம் Notes 11th Economics

11th Economics  Lesson 1

இந்தியப் பொருளாதாரம்

இலக்க முறை (Digital) பொருளாதாரத்தில் இந்தியா ஒரு உலகளாவிய போட்டியாளராகும். – சுந்தர் பிச்சை , CEO கூகுல்

வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் என்பதன் பொருள்

  • ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது பொதுவாக அந்நாட்டின் வருமானத்தால் அளவிடப்பட்டாலும், அது மொத்த உள்நாட்டு உற்பத்தியாலேயே (GDP) குறிப்பிடப்படுகிறது.
  • ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில், அதாவது ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த பண மதிப்பைக் குறிக்கும்.
  • ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் என்பது பொதுவாக அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியால் மட்டும் குறிப்பிடப்படுவதன்றி, அந்நாட்டு மக்களின் உயர்ந்த வாழ்க்கைத்தரம் அல்லது மக்களின் நலவாழ்வையும் உள்ளடக்கியதாகும்.
  • ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தின் அளவீடுகள் என்பது மனிதவள மேம்பாட்டிக் குறியீடு (HDI) வாழ்க்கைத் தரக்குறியீடு (PQLI) மொத்த நாட்டு மகிழ்ச்சிக் குறியீடு (GNHI) ஆகியவற்றைப் பொறுத்தது.
  • வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் அடிப்படையிலேயே உலக நாடுகள் வளர்ந்த மற்றும் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன.
  • வளர்ந்த பொருளாதார நாடுகள் என்பவை தொழில்மயமான, வளங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதுமான நாடுகளைக் குறிக்கும். (எ.கா) அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜப்பான்.
  • வளர்ந்த நாடுகள் என்பவை முழுமையாக பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள் என்று குறிப்பிடப்படுகின்றன. மாறாக தன் வளங்களான நிலம், சுரங்கங்கள், உழைப்பாளர்கள் ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்தாத நாடுகளை அதாவது குறைந்த தலா வருவாய் கொண்ட நாடுகளை வளர்ந்து கொண்டிருக்கிற நாடுகள் என்று அழைக்கிறோம்.
  • (எ.கா) ஆப்பிரிக்கா, பங்களாதேஷ், மியான்மர், பாகிஸ்தான், இந்தோனேசியா. இந்நாடுகளை முன்னேற்றமடையாத வளர்ச்சி குன்றிய, பின்தங்கிய மற்றும் மூன்றாம் உலக நாடுகள் என்றும் அழைக்கலாம்.

மொத்த நாட்டு மகிழ்ச்சிக் குறியீடு (GNHI)

“மொத்த நாட்டு மகிழ்ச்சி” என்ற தொடர் 1972 ஆம் ஆண்டு பூடான் நாட்டின் நான்காவது மன்னரான ஜிக்மே-சிங்யே-வாங்சுக் என்பவரால் உருவாக்கப்பட்டது. இது நிலைத்த முன்னேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கலாச்சார மேம்பாடு, சிறந்த நிர்வாகம்.

இந்தியப் பொருளாதாரம்

  • உலகின் வலிமையான மற்றும் பெரிய பொருளாதாரங்களின் வரிசையில் இந்தியா 7-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. தொழில்மயமாதல் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் முன்னேறிக்கொண்டிருக்கும் நாடுகளில் 7 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன் ஒரு வலுவான இடத்தை அடைத்திருக்கிறது.
  • நமது வளர்ச்சி விகிதம் நீடித்ததாகவும், நிலையானதாகவும் இருப்பதுடன் வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பெருமளவில் கொண்டிருந்தாலும் சில பின்தங்கியிருப்பதற்கான அறிகுறிகளும் காணப்படுகின்றன.

முன்னேறிய நாடுகளின் இயல்புகள்

  1. உயர்ந்த நாட்டு வருமானம் வளர்ச்சி
  2. உயர்ந்த தனிநபர் வருமானம்
  3. உயர்ந்த வாழ்க்கைத்தரம்
  4. முழுவேலைவாய்ப்பு
  5. தொழில்துறையின் ஆதிக்கம்
  6. உயர் தொழில் நுட்பம்
  7. தொழிற்செறிவு
  8. அதிக நுகர்ச்சி நிலை
  9. அதிக நகர்மயமாதல்
  10. சீரிய பொருளாதார வளர்ச்சி
  11. சமுதாய, சமத்துவம், பாலின சமத்துவம் மற்றும் மிகக்குறைந்த வறுமை நிலை
  12. அரசியல் நிலைத்தன்மை மற்றும் நல்ல ஆட்சி

இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள்

இந்தியப்பொருளாதாரத்தின் பலங்கள்

  1. இந்தியா ஒரு கலப்பு பொருளாதாரம்:

இந்தியப் பொருளாதாரம் கலப்புப் பொருளாதாரத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இதன் பொருள் தனியார் துறையும் பொதுத்துறையும் இணைந்து சீரியமுறையில் செயல்படுவது. ஒரு புறம் மிக முக்கியமான அடிப்படை மற்றும் கனரக தொழில்கள் பொதுத்துறையால் நிர்வகிக்கப்படுகின்றன. அதே சமயம் பொருளாதார தாராள மயமாக்கலின் விளைவாக தனியார் துறையின் வளர்ச்சி முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதனால் தனியார் துறையும் பொதுத்துறையும் ஒரே கட்டமைப்பின் கீழ் இணைந்து செயல்பட ஏதுவாகின்றது.

  1. வேளாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது:

இந்தியாவில் அதிகமானோர் வேளாண் தொழில் செய்து வருவதால் அது பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் 60% மக்கள் தங்கள் வாழ்க்கை ஆதாரமாக வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இந்தியாவில் 17% மொத்த உள்நாட்டு உற்பத்தி வேளாண் துறையிலிருந்தே கிடைக்கிறது. பசுமைப்புரட்சி, பசுமை மாறா புரட்சி மற்றும் உயிரி தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளால் வேளாண்மையில் தன்னிறைவு அடைந்ததுடன் அல்லாமல் உபரி உற்பத்தி அடைந்துள்ளது. பழங்கள், காய்கறிகள், வாசனைப் பொருட்கள், தாவர எண்ணெய் புகையிலை, விலங்குகளின் தோல் போன்ற இந்திய வேளாண் பொருட்கள் பன்னாட்டு வாணிபத்தின் மூலம் நமது பொருளாதாரத்திற்கு வலுச்சேர்க்கின்றன.

  1. வளர்ந்து வரும் சந்தை:

முன்னேறிக் கொண்டிருக்கும் நாடுகளுக்கிடையே இந்தியாவின் சந்தை பிற நாடுகளுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. நிலைத்த உள்நாட்டு உற்பத்தியை தொடர்ந்து தக்க வைத்து கொண்டிருப்பதால், பிற நாடுகள் அந்நிய நேரடி முதலீடு (FDI) மற்றும் அந்நிய நிறுவன முதலீட்டாளர் (FII) வழியாக முதலீடு செய்ய பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது இன்னொரு வகையில் இந்தியப் பொருளாதாரம் வலிமையாக மாறுவதற்கு உதவி செய்து வருகிறது. இந்தியா குறைந்த முதலீட்டில் , குறைவான இடர்பாட்டு காரணிகளினால் அதிகமான வளர்ச்சி சாத்தியங்களைக் கொண்டுள்ளதால் நம் நாடு வேகமாக வளர்ந்து சந்தையாக மாறி இருக்கிறது.

  1. வளர்ந்து வரும் பொருளாதாரம்:

உலகப் பொருளாதாரத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஏழாவது இடத்தையும், வாங்கும் சக்தியில் (PPP) மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. விரைவான பொருளாதார வளர்ச்சியின் விளைவாக இந்தியப் பொருளாதாரம் G20 நாடுகளில் இடம் பெற்றுள்ளது.

  1. வேகமாக வளரும் பொருளாதாரம்:

இந்தியப் பொருளாதாரம் அதிக நிலையான வளர்ச்சியினை கொண்டது. 2016-17ல் சீன மக்கள் குடியரசு நாட்டிற்கு அடுத்தபடியாக மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1% பெற்றதன் வாயிலாக உலகின் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளுக்கிடையே, இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை காட்டுகிறது.

  1. வேகமாக வளரும் பணிகள் துறை:

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்கு பணிகள்துறையின் பங்களிப்பாகும். தகவல் தொழில்நுட்பம் , BPO போன்ற தொழில்நுட்ப சேவைகள் பேரளவு வளர்ச்சி பெற்றுள்ளது. இவை பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கின்றன. இத்தகைய வளர்ந்து வரும் பணிகள் துறைகள், நாட்டை உலக அளவில் கொண்டு செல்லவும் மற்றும் பணிகள் துறையின் பிரிவுகளை உலகம் முழுவதும் பரவச் செய்யவும் துணை நிற்கின்றன.

  1. பேரளவு உள்நாட்டு நுகர்ச்சி:

நமது நாட்டின் வேகமான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதால், உள்நாட்டு நுகர்வுப் பொருட்களை வாங்குவது பெருமளவு அதிகரித்து இருக்கிறது. வாழ்க்கைத்தரம் உயர்ந்ததால் மக்களின் வாழ்க்கை முறையை மாற்றி உள்ளது.

  1. நகரப்பாகுதிகளின் விரைவான வளர்ச்சி:

பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறிகளில் நகரமயமாதல் முக்கிய அறிகுறியாகும். சுதந்திரத்திற்குப் பின்னர் நகர்ப்புறங்கள் விரைவான வளர்ச்சி பெற்று வருகிறது. மேம்பட்ட போக்குவரத்து மற்றும் தொடர்புகள், கல்வி மற்றும் சுகாதார வசதிகள் நகரமயமாதலை மேலும் விரைவுபடுத்துகின்றன.

  1. நிலையான பேரளவு பொருளாதாரம்:

உலக நாடுகளில் இந்தியா ஒரு நிலைத்த பேரளவு பொருளாதார நாடு என்பதை தொடர்ந்து நிரூபித்து வருவதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. நடப்பாண்டின் பொருளாதார ஆய்வறிக்கை இந்தியப் பொருளாதாரத்தை “நிலைத்த உறுதிவாய்ந்த, சிறந்த எதிர்காலம் கொண்ட பேரியல் பொருளாதாரத்திற்கான சொர்க்கம்” என்று குறிப்பிடுகிறது. பொருளாதார ஆய்வறிக்கையின்படி , 2014-2015க்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் 8%-ஆக இருக்கும் என நிர்ணயித்து இருந்தபோதிலும் உண்மையான வளர்ச்சி அதைவிட சற்று குறைவாக 7.6%-ஆக இருந்தது. இதன்மூலம் இந்தியா ஒரு நிலையான பேரளவு பொருளாதார வளர்ச்சியுடையது என நிரூபித்து வருகிறது.

  1. மக்கள் தொகை – பகுப்பு:

இந்திய மனித வளம் இளைஞர்களால் நிரம்பியுள்ளது. இதன் பொருள் இந்தியா, அதிக அளவு இளைஞர்கள் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. இளைஞர்களே வளர்ச்சியின் அடிப்படை. இந்திய இளைஞர்களின் திறமை மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியின் காரணமாக பொருளாதார வளர்ச்சி உச்சத்தை எட்டியுள்ளது. நாடு உச்ச வளர்ச்சி அடைவதற்கு மனிதவளம் ஒரு முக்கிய பங்கு அளிக்கிறது. மேலும் இது வெளிநாடு முதலீட்டையும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளையும் ஈர்க்கிறது.

இந்தியப் பொருளாதாரத்தின் பலவீனம்

  1. அதிக மக்கள் தொகை:

மக்கள் தொகைப் பெருக்கத்தில் இந்தியா, சீனாவிற்கு அடுத்த இரண்டாவது நாடாக உள்ளது. வரும் காலத்தில் சீன மக்கள் தொகையையும் மிஞ்சக்கூடும். மக்கட்தொகை வளர்ச்சி வீதம் இந்தியாவில் அதிகமாக இருப்பதால் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் தடையாக உள்ளது. மக்கள் தொகை அதிகருப்பு ஒவ்வொரு 1000 பேருக்கும் 1.7 என்ற வீதத்தில் அதிகரிக்கிறது. ஆண்டுதோறும் ஏற்படும் மக்கள் தொகை பெருக்கும் ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகைக்குச் சமமாக உள்ளது.

  1. ஏற்றத்தாழ்வு மற்றும் வறுமை:

இந்திய பொருளாதாரத்தில் பொருளாதார ஏற்ற தாழ்வுநிலை நீடிக்கிறது. அதிக அளவில் வருமானம் மற்றும் சொத்துக்களைப் பெற்றிருக்கும் 10% இந்தியர்களின் சொத்துக்கள் மேலும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் சமுதாயத்தில் மீதமுள்ள அதிக அளவு மக்களின் வறுமை நிலை அதிகரிப்பதற்கும், வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் வீதம் அதிகரிப்பதற்கும் காரணமாக அமைகிறது. பணக்காரர்கள் தொடர்ந்து பணக்காரர்களாகவும், ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாகவும் நீடிக்கின்றனர்.

  1. அத்தியாவசியப் பண்டங்களின் விலை உயர்வு:

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிலையான வளர்ச்சி மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் இருந்த போதும், அத்தியாவசியப் பண்படகளின் விலை தொடர்ந்து உயர்கிறது. இந்த தொடர் விலை ஏற்றத்தால் வாங்கும் சக்தி குறைவதோடு மட்டுமல்லாமல் நிரந்தர வருமானம் இல்லாத ஏழை மக்களை பாதிக்கிறது.

  1. உள்கட்டமைப்பு பலவீனம்:

கடந்த பத்து இருபது ஆண்டுகளில் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் படிப்படியான முன்னேற்றம் காணப்பட்டாலும் மின் ஆற்றல், போக்குவரத்து, பண்டங்கள் பாதுகாப்பு பெட்டகம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் இன்றளவும் பற்றாக்குறையாக உள்ளது.

  1. வேலைவாய்ப்பை உருவக்க திறனற்ற நிலை:

அதிகரித்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலை வாய்ப்பு வசதியை அதிகரிப்பது அவசியமாகிறது. உற்பத்தியில் ஏற்படும் வளர்ச்சி வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை. எனவே, இந்தியப் பொருளாதாரம் “வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி” என்ற பண்பைக் கொண்டுள்ளது.

  1. பழமையான தொழில் நுட்பம்:

வேளாண்மை மற்றும் சிறுதொழில் நிறுவனங்களின் தொழில்நுட்ப நிலை இன்னும் பழமையானதாகவும் , வழக்கொழிந்ததாகவும் உள்ளது.

இந்தியாவில் மக்கள் தொகை போக்குகள்

மக்கள் தொகை அம்சங்கள் பற்றி அறிவியல் நெறிப்படி படிப்பதே மக்கள் தொகையியல் எனப்படும். இந்திய மக்கள் தொகை போக்கின் பல்வேறு கூறுகளாவன

  • மக்கள் தொகை அளவு
  • வளர்ச்சி வீதம்
  • பிறப்பு மற்றும் இறப்பு விகிதம்
  • மக்கள் தொகை அடர்த்தி
  • பாலின விகிதம்
  • வாழ்நாள் எதிர்பார்ப்பு
  • எழுத்தறிவு விகிதம்

அ. மக்கள் தொகை அளவு

கணக்கெடுப்பு ஆண்டு மக்கள் தொகை (கோடிகளில்) சராசரி ஆண்டு வளர்ச்சி
1901 23.84
1911 25.21 0.56
1921 25.13 -0.03
1931 27.90 1.04
1941 31.87 1.33
1951 36.11 1.25
1961 43.92 1.96
1971 54.81 2.20
1981 68.33 2.22
1991 84.33 2.16
2001 102.70 1.97
2011 121.02 1.66
  • கடந்த நூறு ஆண்டுகளில் நான்கு மடங்கு மக்கள் தொகை அளவு அதிகரித்து உலக அளவில் சீனாவிற்கு அடுத்து 2-ம் நிலையை அடைந்துள்ளது. உலகின் புவிப்பரப்பில் 2.4% பரப்பளவு மற்றும் உலக வருவாயில் 1.2% வருவாயைப் பெற்றுள்ள இந்தியா, உலக மக்கள் தொகையில் 17.5%ஐக் தன்னகத்தே கொண்டுள்ளது. வேறு வகையில் கூறினால் உலக மக்கள் தொகையில் 6-ல் ஒருவர் இந்தியர். உண்மையில் உத்திரபிரதேசம் மற்றும் மகாராஸ்டிரா இவற்றின் மக்கட்தொகையின் கூடுதலை ஒப்பிட்டால் மக்கள் தொகையில் மூன்றாம் இடம் பிடிக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகளை விட அதிகம். இந்தியாவின் சில மாநிலங்களின் மக்கள் தொகை உலகின் பல்வேறு நாடுகளின் மக்கட் தொகையை விட அதிகளவு உடையது.
  • காலரா, பிளேக், இன்ஃபுளுயன்சா போன்ற கொள்ளை நோய்கள் மற்றும் பஞ்சம் இவற்றின் காரணமாக 1911-1921 காலகட்டத்தில் மக்கள் தொகை எதிர்மறையாகக் குறைந்தது. 1921ஆம் ஆண்டு மக்கள் தொகை அதிகரிக்க துவங்கியதால் அவ்வாண்டு “பெரும் பிரிவினை ஆண்டு” என அழைக்கப்படுகிறது.
  • 1951ஆண்டு மக்கள் தொகைப் பெருக்க வீதம் 1.33% லிருந்து 1.25% ஆக குறைந்து வந்தது. ஆகையால் இது “சிறு பிளவு ஆண்டு” என அழைக்கப்படுகிறது.
  • 1961-ல் இந்திய மக்கள் தொகை உயர்வு வீதம் 1.96% அதாவது 2% ஆகும். ஆகையால் 1961ஆம் ஆண்டை “மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு” என்கிறோம். 2001ஆம் ஆண்டு மக்கள் தொகை ஒரு பில்லியன் (100 கோடி) அளவைக் கடந்தது.
  • 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இளைஞர்களின் மக்கட் தொகை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இது ‘மக்கட்தொகை மாறுதலைக்’ குறிக்கிறது.

ஆ. பிறப்பு விகிதம் மற்றும் இறப்பு விகிதம்

குழந்தைகள் பிறப்பு விகிதம்: இது 1000 மக்கள் தொகைக்கு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறிக்கும்.

இறப்பு விகிதம்: இது 1000 மக்கள் தொகைக்கு இறப்பவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கும்.

வெவ்வேறு ஆண்டுகளில் இந்தியாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் மற்றும் இறப்பு விகிதங்கள்.

பிறப்பு மற்றும் இறப்பு வீதம்

ஆண்டு பீறப்பு வீதம் இறப்பு வீதம்
1951 39.9 27.4
2001 25.4 8.4
2011 21.8 7.11
  • 1951-ல் 39.9-ஆக இருந்த பிறப்பு விகிதம் 2011ஆம் ஆண்டு 21.8 ஆக குறைந்தது. பிறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும் குறிப்பிடப்படும் படியானதாக இல்லை.
  • இறப்பு விகிதம் 1951-ல் 27.4-ஆக இருந்தது. 2011-ல் 7.1ஆக குறைந்தது. மேற்கண்ட அட்டவணை பிறப்பு விகிதத்தின் குறைவானது, இறப்பு விகிதத்தின் குறைவைவிட குறைவாக உள்ளதைக் காட்டுகிறது.
  • கேரளா மிகக் குறைந்த பிறப்பு விகிதம் (14.7) மற்றும் உத்திரப்பிரதேசம் (29.5) அதிக அளவு பிறப்பு விகிதத்தையும் கொண்டுள்ளது. மேற்கு வங்காளம் மிகக் குறைந்த இறப்பு விகிதத்தையும் (6.3), ஒரிசா அதிக இறப்பு விகிதத்தையும் (9.2) கொண்டுள்ளது.
  • மாநிலங்களிடையே பத்தாண்டுகளின் (2001 – 2011) பீகார் அதிக மக்கள் தொகை பெருக்கத்தையும் கேரளா குறைந்த பிறப்பு விகிதத்தையும் கொண்டுள்ளது.
  • பீகார் (BI), மத்தியப்பிரதேசம் (MA), ராஜஸ்தான் ® , உத்திரபிரதேசம் (U) ஆகிய நான்கு மாநிலங்கள் “BIMARU” பிமரு மாநிலங்கள் எனப்படுகின்றன. அவை அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள் ஆகும்.

இ. மக்கள் தொகை அடர்ந்த்தி

  • மக்கள் தொகை அடர்த்தி என்பது ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையைக் குறிக்கின்றது. அதாவது நிலம் மற்றும் மனிதன் விகித அளவைக் குறிக்கீறது.
  • மொத்த நிலப்பரப்பு மாறாதிருக்கும் போது அதிகரிக்கும் மக்கள் தொகையானது மக்கள் தொகையின் அடர்த்தியை அதிகரிக்கின்றது.

மக்கள் தொகை அடர்த்தி =

ஆண்டு மக்கள் தொகை அடர்த்தி (ஒரு சதுரகிலோ மீட்டரில் உள்ள மக்கள்)
1951 117
2001 325
2011 382

(Source: Registrar General of India)

  • சுதந்திரம் அடைவதற்கு சற்று முன்னர் வரை மக்கள் தொகை அடர்த்தி 100-க்கும் குறைவு. ஆனால் சுதந்திரத்திற்கு பின்னர் மக்கள் தொகை அடர்த்தியானது 1951-ல் 117-ஆக இருந்து உயர்ந்து பின் 2001-ல் 325ஆக் அதிகரித்தது.
  • 2011-ல் மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி மக்கள் தொகை அடர்த்தி 382 ஆகும். இவ்வாறு மக்கள் தொகை அழுத்தம் மேலும் அதிகரிக்கிறது.
  • கேரளா, மேற்கு வங்காளம், பீகார், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இந்தியாவின் சராசரி அடர்த்தியை விட மக்கள் தொகை அடர்த்தி மிகுந்து காணப்படுகிறது.
  • பீகார் மிகவும் அதிக மக்கள் தொகை அடர்த்தியுடன், ஒரு சதுர கி.மீக்கு 1,102-என உள்ளது. அதனை அடுத்ததாக மேற்கு வங்காளம் 880 மக்கள் தொகை அடர்த்தி கொண்டுள்ளது.
  • ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 17 நபர்கள் என்ற அளவில் அருணாசலப் பிரதேசம் மிக குறைவான மக்கள் தொகை அடர்த்தியைப் பெற்றுள்ளது.

ஈ. பாலின விகிதம்

மக்கள் இது 1000 ஆண்டுகளுக்கு உள்ள பெண்களின் விகிதத்தை குறிக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆண் பெண் பாலின விகிதத்தை அளவிடவும், பாலினச் சமநிலையை பிரபலப்படுத்துவதற்கான முக்கியமான சுட்டிக் காட்டியாகும்.

கணக்கெடுப்பு ஆண்டு பாலின விகிதம் (1000 –ஆண்களுக்கு உள்ள பெண்கள் வீதம்)
1951 946
2001 933
2011 940

(Source: Registrar General of India)

  • இந்தியாவில் பெண்களை விட ஆண்களின் பெருக்க விகிதம் அதிக சாதகமாக உள்ளது. கேரளாவில் , 2011ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி 1064 என்ற அளவில் வயது வந்தோர் பாலின விகிதம் இருந்தது.
  • இறுதியாக 2011ல் எடுக்கப்பட்ட மக்கட் தொகை கணக்கெடுப்பின் படி பாலின விகிதம் அதிகரித்து உள்ளது. 2011-ன் படி ஹரியானா மிகக்குறைந்த பாலின விகிதமான 877-யும் கேரளா மற்ற மாநிலங்களை விட பெண்கள் பாலின விகிதம் அதிகரித்து 1000 ஆண்களுக்கு 1084 பெண்களைக் கொண்டுள்ளது.

உ. பிறப்பின் போது வாழ்நாள் எதிர்பார்ப்பு

  • பிறப்பின்போது எதிர்பாக்கப்படும் வாழ்நாள் அளவே வாழ்நாள் எதிர்பார்ப்பு எனக் குறிக்கப்படுகிறது. வாழ்நாள் எதிர்பார்ப்பு காலம் அதிகரித்து வருகிறது.
  • இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும் போது வாழ்நாள் காலம் குறைவாகவும், மாறாக இறப்பு விகிதம் குறைவாக இருக்கும் போது வாழ்நாள் காலம் அதிகமாகவும் உள்ளது.
  • வேறு வகையில் கூறுவதானால் அதிக வாழ்நாள் காலம், குறைந்த இறப்பு விகிதத்தையும், குறைந்த வாழ்நாள் காலம் அதிக இறப்பு விகிதத்தையும் குறிப்பிடுகின்றது.
ஆண்டு ஆண்கள் பெண்கள் மொத்தம்
1951 32.5 31.7 32.1
1991 58.6 59.0 58.7
2001 61.6 63.3 62.5
2011 62.6 64.2 63.5

(Source: Registrar General of India)

  • 1901-1911 ஆண்டுகாலங்களில் வாழ்நாள் எதிர்பார்ப்பு விகிதம் 23 வருடங்கள் மட்டுமே ஆகும். இது 2011-ல் 63.5 வருடங்கள் என்ற அளவில் அதிகரித்தது இதற்கு முக்கியக் காரணம் இறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்ததே ஆகும். ஆயினும் மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் வாழ்நாள் எதிர்பார்ப்பு காலம் குறைவே ஆகும்.

ஊ. எழுத்தறிவு விகிதம்

  • இது மொத்த மக்கள் தொகையில் எழுத்தறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை விகிதத்தை குறிப்பிடுகிறது. 1951-ல் ஆண்கள் நான்கில் ஒருவர் மற்றும் பெண்கள் பன்னிரெண்டில் ஒருவர் என்ற அளவிலேயே எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை இருந்தது.
  • சராசரியாக ஆறு பேருக்கு ஒருவர் மட்டுமே எழுத்தறிவு பெற்றவர் ஆவார். இது 2011-ல் ஆண்கள் 82 % மற்றும் பெண்கள் 65.5% என்ற அளவில் ஒட்டு மொத்த எழுத்தறிவு விகிதம் 74.04%. இது மற்ற வளர்ந்த நாடுகள் மற்றும் இலங்கையைக் காட்டிலும் கூட மிகவும் குறைவு.
கணக்கெடுப்பு ஆண்டு கல்வியறிவு பெற்றவர்கள் ஆண்கள் பெண்கள்
1951 18.3 27.2 8.9
2001 64.8 75.3 53.7
2011 74.04 82.1 65.5

(Source: Registrar General of India)

  • 1901-1911 ஆண்டுகாலங்களில் வாழ்நாள் எதிர்பார்ப்பு விகிதம் 23 வருடங்கள் மட்டுமே ஆகும். இது 2011-ல் 63.5 வருடங்கள் என்ற அளவில் அதிகரித்தது இதற்கு முக்கியக் காரணம் இறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்ததே ஆகும். ஆயினும் மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் வாழ்நாள் எதிர்பார்ப்பு காலம் குறைவே ஆகும்.

ஊ. எழுத்தறிவு விகிதம்

  • இது மொத்த மக்கள் தொகையில் எழுத்தறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை விகிதத்தை குறிப்பிடுகிறது. 1951-ல் ஆண்கள் நான்கில் ஒருவர் மற்றும் பெண்கள் பன்னிரெண்டில் ஒருவர் என்ற அளவிலேயே எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை இருந்தது.
  • சராசரியாக ஆறு பேருக்கு ஒருவர் மட்டுமே எழுத்தறிவு பெற்றவர் ஆவார். இது 2011-ல் ஆண்கள் 82% மற்றும் பெண்கள் 65.5% என்ற அளவில் ஒட்டுமொத்த எழுத்தறிவு விகிதம் 74.04%. இது மற்ற வளர்ந்த நாடுகள் மற்றும் இலங்கையைக் காட்டிலும் கூட மிகவும் குறைவு.
கணக்கெடுப்பு ஆண்டு கல்வியறிவு பெற்றவர்கள் ஆண்கள் பெண்கள்
1951 18.3 27.2 8.9
2001 64.8 75.3 53.7
2011 74.04 82.1 65.5

(Source: Registrar General of India)

  • கேரளா 92%-உடன் அதிக எழுத்தறிவு விகிதமும், அடுத்தபடியாக கோவா (82%) எழுத்தறிவு விகிதமும் ஹிமாச்சல பிரதேசம் (76%) மகாராஸ்டிரா (75%) மற்றும் தமிழ்நாடு (74%) என அடுத்த இடங்களைப் பிடிக்கிறது: 2011-ன்படி பீகார் 53% குறைவான எழுத்தறிவு விகிதம் பெற்ற மாநிலமாக உள்ளது.

இயற்கை வளங்கள்

  • ஒரு நாட்டில் இயற்கையிலிருந்து பெறப்படும் வளங்கள் இயற்கை வளங்கள். காடு, நீர், கனிம வளங்கள் மற்றும் ஆற்றல் சக்திகள் ஆகியன முக்கிய இயற்கை வளங்கள் ஆகும்.
  • அதிக இயற்கை வளங்களைக் கொண்டுள்ள இந்தியா பெருவாரியான ஏழை மக்களையும் கொண்டுள்ளது. இயற்கை நமக்கு பல்வேறு காலநிலை, பாசனத்திற்கான பல்வேறு ஆறுகள், மின் சக்தி, அதிக கனிமவளங்கள் காடுகள் மற்றும் பல்வேறு மண்வளங்களை அளிக்கிறது.

இயற்கை வளங்களின் வகைகள்

அ) புதுப்பிக்கக்கூடிய வளங்கள்: நீண்டகாலங்கள் நிலைத்து இருக்கக்கூடிய மீண்டும் உருவாக்கக்கூடிய வளங்கள் எ.கா, காடுகள், வனவிலங்கள், காற்று, கடல்வளங்கள், நீர்மின் சக்தி, உயிரினத் தொகுதி, காற்றாலை மின் உற்பத்தி போன்றவை.

ஆ) புதுப்பிக்க இயலாத வளங்கள்: மீண்டும் உருவாக்கப்பட முடியாத நிலைத்து இருக்க முடியாதவைகள் எ.கா. படிம எரிபொருட்கள் நிலக்கரி, பெட்ரோலியம் கனிமங்கள் போன்றன.

மண் வளம்

  • இந்தியா மொத்த பரப்பளவில் 32.8 லட்சம் சதுர கிலோமீட்டர் நில பரப்புடன் உலகில் ஏழாவது இடத்தைப் பெற்றுள்ளது. இது உலக நிலப்பரப்பில் 2.42% ஆகும்.
  • இந்தியா நிலப்பரப்பளவில் உண்மையில் பெரியநாடு என்ற போதும் மிகப்பெரிய மக்கட் தொகை அளவினால் நிலப்பரப்பு –மனிதன் விகிதம் சாதகமானதாக இல்லை.
  • வேளாண் புள்ளி விவர அறிக்கையின்படி, அதிக விவசாய பரப்பில் விவசாயம் செய்பவர்கள் (10 ஹெக்டேர் மற்றும் அதற்கு மேலும்) குறைவான எண்ணிக்கையிலும் மிக குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள் (1 ஹெக்டேர் அதற்கும் குறைவு) அதிகமான எண்ணிக்கையிலும் இருக்கின்றனர். இது நிலம் துண்டாடப்படுதால், மேலும் பிரிவினையைக் கூடும் என்பதையே காட்டுகிறது.

வனவளம்

2007-ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி இந்தியாவின் காடுகள் 69.09 மில்லியன் ஹெக்டேர் அதாவது மொத்த நிலப்பரப்பில் 21.02% ஆகும். இதில் 8.35 மில்லியன் ஹெக்டர் அடர்ந்த காடுகள், 31.90 மில்லியன் ஹெக்டேர் காடுகள் ஓரளவு அடர்ந்த காடுகள் மற்றும் 28.84 மில்லியன் ஹெக்டேர் காடுகள் பரந்தவெளி காடுகள்.

முக்கியமான கனிம வளங்கள்

அ. இரும்புத்தாது

இந்தியாவில் உயர்தரமான இரும்புத்தாது அபரிமிதமாகக் காணப்படுகிறது. (ஹேமடைட்) இரும்புத்தாது 4630 மில்லியன் டன் மற்றும் (மேக்னடைட்) இரும்புத்தாது 10619 மில்லியன் டன் அளவிற்கு இரும்புத்தாது நமது நாட்டில் இரும்பு உள்ளது. ஹேமடைட் இரும்புத்தாது அதிகமாக சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, கோவா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் கிடைக்கிறது. மேக்னடைட் தாது கர்நாடகாவில் உள்ள மேற்கு கடற்கரையில் அதிகம் கிடைக்கிறது. கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசங்களிலும் சில இடங்களில் இரும்புத்தாது காணப்படுகிறது.

ஆ. நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி

பூமிக்கு அடியில் அதிகமாக கிடைக்கக் கூடிய கனிமங்களில் நிலக்கரி முக்கியமானதாகும். சீனா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு அடுத்தபடியாக நிலக்கரி உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. மேற்கு வங்காளம், பீகார், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் ஆந்திரபிரதேசம் முக்கிய நிலக்கரி கிடைக்கக்கூடிய இடங்களாகும். வங்காளம், ஜார்கண்ட் மாநில நிலக்கரி வயல்களிலிருந்து அதிக அளவு நிலக்கரி கிடைக்கிறது.

இ. அலுமினியத்தாது (பாக்சைட்)

பாக்சைட் அலுமினியம் தயாரிக்கப் பயன்படும் முக்கியமான தாது ஆகும். கிழக்குக் கடற்கரையில் ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய இடங்களில் அதிக அளவு பாக்சைட் தாது செறிந்து காணப்படுகிறது.

ஈ. மைக்கா

மைகா ஒரு வெப்பத்தை தடுக்கும் கனிமம் மற்றும் அரிதிற் மின் கடத்தி ஆகும். இந்தியா மொத்த வியாபாரத்தில் 60% பங்குடன், மைக்காதான் உற்பத்தியில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. பெக்மடைட் எனப்படும் மைக்கா வகை ஆந்திரபிரதேசம், ஜார்க்கண்ட், பீகார் மற்றும் ராஜஸ்தானில் கிடைக்கிறது. மின் உபகரணங்களில் மின் தடுப்பானாக பயன்படுத்தப்படுகிறது.

உ. சுத்திகரிக்கப்படாத எண்ணெய்

இந்தியாவில் அஸ்ஸாம் மற்றும் குஜராத்தின் பல இடங்களில் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் எடுக்கப்படுகிறது. டிக்பாய், பாடர்பூர், நாகர்காட்டிகா, காசிம்பூர், பள்ளியரியா, ருத்ராபூர், சிவசாகர், மார்ன் (அஸ்ஸாமின் அனேக இடங்கள்) காம்பே வளைகுடா அங்கலேஸ்கர் மற்றும் காலோல் (குஜராத்தின் அனேக இடங்கள்) ஆகியவை முக்கியமான எண்ணெய் வளங்கள் உள்ள இடங்களாகும்.

ஊ. தங்கம்

இந்தியா குறைந்த அளவே தங்க வளம் இரும்பு பெற்று விளங்குகிறது. மூன்று முக்கிய தங்கச் சுரங்கப் பகுதிகள் உள்ளன. கோலார் மாவட்டத்தில் கோலார் தங்க வயல் சுரங்கத்திலும் ரெய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள ஹட்டி தங்க வயம் சுரங்கத்திலும் (இரண்டும் கர்நாடகாவில் உள்ளது) மற்றும் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ராம்கிரி தங்க வயல் சுரங்கத்திலும் ஓரளவு தங்கம் கிடைக்கிறது.

எ. வைரம்

  • UNECE அறிக்கயின்படி நாடு முழுவதிலும் 4582 ஆயிரம் காரட் வைரங்கள் கிடைக்கின்றன. அதில் அதிகமாக மத்தியபிரதேசத்தின் பன்னாவிலும், ஆந்திரபிரதேசத்தில் கர்னூல் மாவட்டம் ராமல்ல கோட்டா போன்ற இடங்களிலும், கிருஷ்ணா நதியின் படுகையிலும் கிடைக்கிறது. புதிதாக ராய்பூர் இம்பெர்லி சுரங்கம் ராஜ்பூர் மற்றும் சட்டீஸ்கரிலுள்ள பாஸ்டர் மாவட்டத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • ஒடிஷாவின் நியுபடோ மற்றும் பார்கர் மாவட்டம், ஆந்திராவின் நாராயணபேட் மத்தூர் கிருஷ்ணா பகுதி, கர்நாடகாவின் ராய்ச்சூர் குல்பர்ஹா மாவட்டத்தில் ரெய்சூர் ஆகிய சில வைரம் கிடைக்கக்கூடிய மற்ற இடங்களாகும்.

கட்டமைப்பு வசதிகள்

கட்டமைப்பு மேம்பாடு என்பது பல்வேறு வளர்ச்சிக்கு உதவும் வகையிலான கட்டமைப்புகளாகும் இது இரு வகைப்படும்.

அ) பொருளாதார கட்டமைப்பு

ஆ) சமூக கட்டமைப்பு

பொருளாதார கட்டமைப்பில் உள்ளடக்கியது:

போக்குவரத்து தொலைதொடர்பு, ஆற்றல் வளங்கள், நீர்பாசனம் பண மற்றும் நிதிநிறுவனங்கள் முதலியனவாகும்.

சமூக கட்டமைப்பில்: கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி, சுகாதாரம் வீட்டு வசதி மற்றும் பொது வசதிகள் ஆகியன அடங்கியுள்ளன.

பொருளாதார கட்டமைப்பு வசதிகள்

  • பொருளாதார கட்டமைப்பு வசதிகள் நாட்டின் உற்பத்தி மற்றும் பகிர்வு வசதிக்கு பயன்படுவதாகும்.
  • உதாரணமாக, இருப்புப் பாதைகள், சரக்கு வாகனங்கள், தபால் மற்றும் தொலை தொடர்பு நிலையங்கள், துறைமுகங்கள், கால்வாய்கள் , மின் உற்பத்தி நிலையங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவை பொருளாதார கட்டமைப்பு உதவுகின்றன. இவை பண்டங்கள் பணிகள் உற்பத்திக்கு உதவுகின்றன.

போக்குவரத்து

  • உறுதியான பொருளாதார வளர்ச்சிக்கு அனைத்து இடங்களையும் நன்றாக இணைக்கக்கூடிய திறன்மிகு போக்குவரத்து முறை தேவைப்படுகிறது.
  • இந்தியா இருப்புப்பாதை, சாலை, கடல்வழி (கப்பல் போக்குவரத்து) மற்றும் வான்வழி போக்குவரத்தின் நல்ல கட்டமைப்பை பெற்றுள்ளது. சாலைப் போக்குவரத்தில் 30 லட்சம் கி.மீ நீளம் கொண்ட சாலைகளால் உலகத்தின் மிகப்பெரொய சாலை போக்குவரத்து கொண்ட நாடாக திகழ்கிறது.
  • ஆசியாவில் மிகப்பெரிய இருப்புப் பாதை வழிகளிலும், உலகின் நான்காவது பெரிய போக்குவரத்து அமைப்பாகவும் விளங்குகிறது. இந்தியாவின் இருப்புப் பாதை நீளம் உள்ளது 63,000 கி.மீ. இதில் 13,000 கி.மீ. மின் மயமாக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் முக்கியமான துறைமுகங்களான கொல்கத்தா, மும்பை, சென்னை, விசாகப்பட்டினம், கோவா ஆகிய இடங்களில் 90% கடல் வழி வாணிபமும் , உலகின் பல பகுதிகளிலிருந்தும் சரக்கு கப்பல்கள் மற்றும் பயணிகள் கப்பல்கள் பொருட்கள் இறக்கும் இடங்களாகவும், உலகின் அதிக பயணிகள் வந்து போகும் இடங்களாகவும் உள்ளன.
  • இந்தியாவின் முக்கிய நகரங்களை வான் வழி போக்குவரத்து நாட்டின் பெரிய நகரங்கள் மற்றும் சிறு நகரங்களை இணைக்கின்றன. உள்நாட்டு விமானச் சேவையை இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் தனியார் விமான சேவைகள் செய்து வருகின்றன. பன்னாட்டு விமானப்போக்குவரத்து ஏர் இந்தியன் நிறுவனம் வழங்கி வருகிறது.
  • இந்திய இரயில்வே முதல் Wi-fi- வசதியை பெங்களூருவில் தொடங்கியது.
  • இந்திய விமான போக்குவரத்து நிறுவனம், ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் ஆகியவை 27-8-2007 –அன்று ஒன்றாக இணைத்தது.
  • மத்திய மற்றும் மாநில அரசுகள் துறைமுகங்களின் மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்கு வழிகாட்ட 1950-ல் தேசிய துறைமுக வாரியம் உருவாக்கப்பட்டது.

ஆற்றல்

நம் வாழ்க்கைக்கு தேவையான அங்கங்களில் ஒன்று மின் ஆற்றலாகும். இன்றைய நவீன தொழில்நுட்ப காலத்தில் மின்சாரம் இன்றி நம்மால் வாழ்வது சிரமம். மின் உற்பத்திக்கு பயன்படுத்தக் கிடைக்கக்கூடிய மூல வளங்கள் அடிப்படையில் அவை இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது.

  1. புதுப்பிக்க இயலாத மின்ஆற்றல் மூல வளங்கள்
  2. புதுப்பிக்கக்கூடிய மின்ஆற்றல் மூல வளங்கள்
  3. புதுப்பிக்க இயலாத மின்ஆற்றல் மூலங்கள்:

இதன் பெயருக்கு ஏற்றார் போல் இத்தகைய வளங்களை நாம் மறுபடியும் பயன்படுத்த முடியாது. அவை தீர்ந்து விட்டால் மறுபடியும் உருவாக்க முடியாது. இத்தகைய ஆற்றல் மூலங்கள் தொடர்ந்து பயன்படுத்திட அவை காலப்போக்கில் தீர்ந்து போகும். உதாரணம் நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு மற்றும் பல.

  1. புதுப்பிக்கக்கூடிய மின்சக்தி மூல வளங்கள்:

இத்தகைய வளங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்த இயலும் ஏனென்றால் இத்தகைய வளங்கள் தீர்ந்து போகாதவை. இவை ஏராளாமாகவும், முற்றுப் பெறாதவைகளாகவும் இருக்கின்றன.

அவை

  1. சூரிய சக்தி
  2. காற்று சக்தி
  3. அலைகள் சக்தி
  4. புவி வெப்ப சக்தி
  5. உயிரி எரிவாயு சக்தி

சில நேரங்களில் புதுப்பிக்க கூடிய வளங்களை, வழக்கில் இல்லாத ஆற்றல் எனவும் அழைப்பதுண்டு. காரணம் இவ்வளங்கள் கொண்டு முன்காலங்களில் மின் ஆற்றல் உற்பத்தி செய்யப்படவில்லை அல்லது வழக்கத்தில் இல்லை எனலாம். உற்பத்தி திறனையும் அதிகரிக்கின்றன. (எ.கா) பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் பொது வசதி மற்றும் இதர குடிமை வசதிகள். குறைவான சமூக அடிப்படைக் கட்டமைப்பினால், இந்தியப் பணியாளர்களின் உற்பத்தித் திறன் குறைவாக இருக்க காரணமாக உள்ளது சமூகக் கட்டமைப்புகளின் நிலை மற்றும் வளர்ச்சி பற்றி காண்போம்.

கல்வி

அ. இந்தியாவில் கல்வி

இந்தியாவில் குருகுல முறையில் பன்னெடுங்காலமாக கல்வி போதிக்கப்பட்டது. தற்போது வளர்ந்து வரும் பொருளாதாரத் தேவைகளுக்கேற்ப இந்தியக் கல்விமுறை வேகமாக வளர்ந்து வருகிறது. மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் (MHRD) நம் நாட்டின் கல்விக் கொள்கைகளையும், திட்டங்களையும் வகுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

ஆ. இந்திய கல்வி முறை

1976வரை மாநில அரசின் பொறுப்பில் இருந்த கல்வி அதன்பிறகு மத்திய மாநில அரசுகளின் கூட்டுப்பொறுப்பில் வந்தது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை கல்விக்கான வரவு செலவுகளை மேற்கொள்கிறது.

இந்திய கல்வி முறை, அடிப்படையில் ஆறு நிலைகளைக் கொண்டுள்ளது.

  • குழந்தைக்கல்வி
  • தொடக்கக் கல்வி
  • இடைநிலைக் கல்வி
  • மேல்நிலைக் கல்வி
  • இளங்கலைப் பட்டம்
  • முதுகலைப் பட்டம்

இ. இந்திய கல்வி நிறுவனங்கள்

இந்திய கல்வி முறை 10, +2 முறையைக் கொண்டுள்ளது. உயர் கல்வியைப் பொறுத்த அளவில், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள், பல்வேறு படிப்புகளை மற்றும் பாடங்களை வழங்கி வருகின்றன. பல்கலைக்கழக மானியக் குழுச் (UGC) சட்டத்தின்படி பல்கலைக்கழகங்களின் தரம் அளவிடப்படுகிறது. கல்வித்துறை என்பது பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை உள்ளடக்கியது. இது சமுதாயத்தின் எல்லா பிரிவு மக்களுக்கும் நடுநிலையான கல்வியளிக்கும் அமைப்பு ஆகும். வரவு செலவுத் திட்டத்தில் 3% (GDP) நிதி கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டு, பெருமளவு நிதி பள்ளிக் கல்விக்கே செலவிடப்படுகிறது. இருப்பினும் ஒரு மாணவருக்கு ஆகும் கல்விச் செலவு இன்னும் குறைவாகவே இருக்கிறது.

உடல்நலம்

அ. இந்தியாவில் உடல்நலம்

இந்தியாவின் உடல்நலம் மாநில அரசின் பொறுப்பில் வருகிறது. மத்திய சுகாதாரம் மற்றும் நலவாழ்வு கழகம் (Central Council of Health and Welfare) பல்வேறு நலக்கொள்கைகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. மத்திய நலத்துறை அமைச்சகம் நலத்துறையின் நிர்வாகத்தையும், அதற்கான தொழில்நுட்ப தேவைகளையும் கவனித்துக்கொள்கிறது.

  • இந்தியாவில் உடல்நலம் பேணுதல் பல முறைகளில் (பலவடிவங்களில்) நடக்கிறது. ஆயுர்வேதம், சித்தா, யுணானி, மூலிகை மருத்துவம் , ஹோமியோபதி, ஆங்கில மருத்துவம், யோகா போன்ற பல முறைகள் இங்குண்டு.
  • ஒவ்வொன்றும் தனித்தனி சிகிச்சை முறைகள் மற்றும் சிறப்புக் குணங்கள் உள்ளன. இந்தியாவில் மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ல நடுவண் நலத்தூறை அமைட்டகத்திடமிருந்து முறையான அனுமதி பெறவேண்டும். அனைத்து மருத்துவ நடைமுறைகளும் ஒரே அமைச்சகத்தின் கீழ் (ஆயுஷ் AYUSH) தற்போது உள்ளன.

ஆ. இந்தியாவில் உடல்நலப் பணிகள்

இந்தியாவில் உடல்நலப்பணிகள் மத்திய நலத்துறை அமைச்சகத்தின் கீழ் வருகின்றன. மாநிலங்களைப் பொறுத்த வரையில் கேரளா மற்ற மாநிலங்களை விட உடல் நலம் பேணுதலில் சிறப்பான இடத்தை பெற்றிருக்கிறது. மற்ற முன்னேறிய நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் உடல்நலம் பேணுதல் திருப்திகரமானதாக இல்லை. இலங்கையை விட இந்தியாவில் உடல் நலம் பேணுதல் குறைவாக உள்ளது.

இந்தியப் பொருளாதாரச் சிந்தனையாளர்களின் பங்களிப்பு

திருவள்ளுவர்

  • திருவள்ளுவரின் பொருளாதாரக் கருத்துக்கள் காளத்தால் அழியாத, அறநூலான திருக்குறளில் காணக் கிடைக்கின்றன.
  • திருவள்ளுவரின் காலம் குறித்த பல்வேறு கருத்துகள் அறிஞர்கள் மத்தியில் நிலவினாலும் பொதுவாக பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டின் சங்க காலத்தையே அவரின் காலமாகக் கருதலாம். திருவள்ளுவரின் கருத்துக்கள் நடைமுறைக்கு ஏற்றவைகளாகவே இன்றும் கருதப்படுகின்றன.
  • வள்ளுவரின் நிறைய பொருளாதாரக் கருத்துக்கள் திருக்குறளின் இரண்டாம் பகுதியான பொருட்பாலில் காணப்படுக்கின்றன. பொருட்பால் செல்வத்தோடு தொடர்புடையது.
  • வாழ்வின் அடிப்படைகளை அறிந்தவர் வள்ளுவர். அவர் மழையை வாழ்வின் பெரும் ஆதாரமாகக் கருதினார். மழை தான் உணவு தருகிறது.
  • மழைதான் பொருளாதார வாழ்வில் அடிப்படையை உருவாக்குவதாக நம்பினார். வாழ்வின் அடிப்படை பொருளாதார தேவையான வேளாண்மை மழையைச் சார்ந்திருக்கிறது அழிமானத்தையும் தரும், அழிமானத்திலிருந்து மீண்டும் தழைத்தோங்கவும் செய்யும் ஆகிய இரண்டையும் செய்யும் தன்மையுடையது மழையாகும்.

அ. உற்பத்திக் காரணிகள்

உற்பத்திக் காரணிகளான நிலம், உழைப்பு, முதல், அமைப்பு, காலம், தொழில்நுட்பம் ஆகியவை குறித்து பல கருத்துகளை வள்ளுவர் எளிமையாகச் சொல்லியிருக்கிறார்.

“பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற”

என்கிறார் திருவள்ளுவர் (குறள் 61)

ஆ. வேளாண்மை

வள்ளுவர் வேளாண்மையை, அடிப்படைப் பொருளாதார நடவடிக்கை என்கிறார். உலகத்தின் அச்சாணியாக வேளாண்மை இருப்பதாகவும், பொருளாதார ரீதியாக பிற துறைகளின் செழுமை வேளாண்மை துறையின் செழுமையைச் சார்ந்தது. உழவுத்தொழில் புரிபவன் மட்டுமே தலையாய மனிதன்.

“உழுதூண்டு வாழ்வோரே வாழ்வார் மற்றெல்லாம்

தொழுதுண்டு பின் செல்பவர்”

(குறள் எண் – 1032, அதிகாரம் – உழவு)

உழவுத்தொழிலே மற்ற தொழில்களைவிட உயர்ந்ததாக வள்ளுவர் கருதுகிறார்.

இ. பொது நிதி

திருவள்ளுவர் பொதுநிதி பற்றி பொது வருவாய், பொதுச்செலவு, நிதி நிர்வாகம் ஆகிய தலைப்புகளில் விரிவாக எழுதியிருக்கிறார்.

  1. வருவாய் உருவாக்குதல்
  2. வருவாயை சேகரித்தல்
  3. வருவாய் நிர்வாகம்
  4. பொதுச் செலவு பற்றியெல்லாம் குறிப்பிடுகிறார்.

ஈ. பொதுச்செலவு

வள்ளுவர் சமநிதிநிலை அறிக்கையைப் பரிந்துரை செய்கிறார். “ஒரு நாடு அதன் செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பட்சத்தில், அதன் வருமானம் குறைவாக இருந்தாலும் பாதகமில்லை” என்கிறார். நிதிநிலைக் கொள்கை வகுக்கும்போது செய்ய வேண்டியதாக அவர் சொல்வது “எப்போதும் உபரி நிதிநிலை இருக்கட்டும், சிலநேரங்களில் சம நிதிநிலை இருக்கலாம், ஆனால் ஒரு போதும் பற்றாக்குறை நிதிநிலை மட்டும் கூடாது” பொதுச் செலவை கீழ்க்காணும் மூன்று இனங்களுக்கு செலவிடுமாறு வலியுறுத்துகிறார் வள்ளுவர்

  1. பாதுகாப்பு 2. பொதுப்பணிகள் 3. சமூகப்பணிகள்.

உ. வெளிநாட்டு உதவி

வள்ளுவர் வெளிநாட்டு உதவி பெறுதலை ஆதரிக்கவில்லை. குறள் 739-ல் வெளி உதவி கோரும் நாடுகள் நாடுகளே அல்ல என்கிறார். வேறுவகையில் சொல்வதனால் அவர் தன்னிறைவு பெற்ற பொருளாதாரத்தையே வலியுறுத்தினார்.

ஊ. வறுமை மற்றும் பிச்சையெடுத்தல் (இரத்தல்)

பசிக்கொடுமையிலிருந்து பெறும் விடுதலையே ஒவ்வொரு மனிதனும் பெறக்கூடிய அடிப்படை சுதந்திரம் என்றும் அனைத்து குடிமகனும் இதனை அனுபவிக்க வேண்டும் என்று வள்ளுவர் கருதினார். வறுமையே அனைத்து தீமைகளூக்கும் வேறாய் இருந்து எக்காலத்தும் தீராத துன்பங்களைத் தருவதாகவும் கருதினார். ஆனால் இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் எண்ணிக்கையில் பிச்சையெடுப்பவர்கள், வசிப்பிடமின்றி சாலையோரம் வசிப்பவர்கள் மற்றும் குப்பை பெருக்குபவர்கள் அதிகமாக உள்ளனர்.

எ. செல்வம்

செல்வம் வாழ்வதற்கான வழியே அன்றி அதுவே இலக்கல்ல என்று வள்ளுவர் கருதினார். செல்வம் சிறந்த மதிக்கத்தகுந்த வழிகளிலேயே ஈட்டப்பட வேண்டும் என்கிறார். செல்வத்தைப் பதுக்கி வைப்பது பயனற்றுப் போகும் என்கிறார். அவரைப் பொறுத்த வரையில் தொழில்தான் உண்மையான செல்வம், மேலும் உழைப்பு தான் மிகப்பெரும் வளம்.

ஏ. நலம்பேணும் அரசு

திருவள்ளுவர் நலம்பேணும் அரசு எது என்பதைக் குறித்து விளக்கியுள்ளார். ஒரு நலம்பேணும் அரசில் வறுமை, எழுத்தறிவின்மை மற்றும் நோய்கள் போன்றவை இருக்காது என்கிறார்.

நலம் பேணும் அரசின் முக்கியக் கூறுகளாவன:

  • நோய் நொடியற்ற ஆரோக்கியமான மக்கள்
  • பெருஞ்செல்வம்
  • நல்ல விளைச்சல்
  • வளம் மற்றும் மகிழ்ச்சி
  • மக்களுக்கு முழுப் பாதுகாப்பு

மகாத்மா காந்தியடிகள்

  • காந்தியப் பொருளாதாரம் நன்நெறியை அடிப்படையாகக் கொண்டது. 1921-ல் காந்தி “ஒரு தேசத்தின் அல்லது ஒரு தனியாரின் தார்மீக ஒழுக்க நெறிகளை காயப்படுத்தினால் அந்த பொருளாதார நடவடிக்கையும் இழுக்கானது மேலும் அது பாவமானது” என எழுதுகிறார்.
  • “தர்மீக மதிப்புகளைப் புறந்தள்ளும் பொருளாதாரம் உண்மையற்றது” என அதே நம்பிக்கையை காந்தியடிகள் மீண்டும் 1924ல் கூறுகின்றார்.

காந்தியப் பொருளாதார சிந்தனைகளின் சிறப்பியல்புகள்

  1. கிராமக் குடியரசு: காந்தியடிகள் கிராமங்களில் தான் இந்தியா வாழ்வதாகக் கருதினார். தன்னிறைவு பெற்ற கிராமமாக முன்னேறுவதை அவர் விரும்பினார். அதிக அளவில் இயந்திரங்களைப் பயன்படுத்துதல், நகர்மயமாதல் மற்றும் தொழில் மயமாதல் ஆகியவற்றை எதிர்த்தார்.
  2. இயந்திரங்கள்: காந்தியடிகள் இயந்திரங்களை ‘மிகப்பெரிய பாவம்’ என்று வர்ணித்தார். காந்தியடிகள், “இயந்திரங்களின் தீமைகள் குறித்து விளக்க புத்தகங்கள் எழுதப்படவேண்டும், அதன் தீமைகள் மக்களுக்கு உணர்த்தப்படவேண்டும். இயந்திரங்கள் வரமல்ல, மாறாக நமக்கு சாபம் என்று நாம் ஊணர வேண்டும். இயந்திரத்தின் தீமைகளை நாம் பார்க்க வேண்டும். அவைகள் நம் இணக்கமான வாழ்வை முடிவுக்கு கொண்டு வந்து விடும்” என்கிறார்.
  3. தொழில்மயம்: தொழில்மயம் மனித இனத்தின் பெரும் சாபக்கேடு என்று காந்தி கருதினார். நாட்டின் திறனை முழுவதும் சுரண்டுவதை தொழில்மயம் சார்ந்துள்ளது எனக் கருதினார்.
  4. உற்பத்தி பரவலாக்கம்: உற்பத்தி பரவலாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய காந்தி அது அநேக இடங்களில் சிறிய அளவிலும் அல்லது வீடுகளிலேயே உற்பத்தி நடைபெற வேண்டுமென்றும் விரும்பினார்.
  5. கிராம் சர்வோதயா: “உண்மையான இந்தியா வாழ்வது நகரங்களிலோ புறநகரங்களிலோ இல்லை கிராமங்களில் தான்” என்று சொன்ன காந்தியடிகள் கிராமங்கள் தன்னிறைவு பெற்றவைகளாகவும் சுயசார்பு பெற்றவைகளாகவும் இருக்க வேண்டும் என்றார்.
  6. உடல் உழைப்பு (bread labour): மனித உழைப்பின் மகத்துவம் உணர்ந்தவர் காந்தியடிகள். கடவுள் மனிதனைப் படைத்ததன் நோக்கமே, தனக்கு தேவையான உணவை தானே நெற்றியில் வியர்வை சிந்தி தன் உழைப்பின் வழியால் பெற்றுக்கொள்வான் என்ற கருத்தை நம்பினார். மனித உழைப்பு என்பதே உடல் உழைப்பு தான் என்று காந்தி உறுதிபடக் கூறுகிறார்.
  7. அறக்கட்டளைக் கோட்பாடு: தற்போதைய முதலாளித்துவ முறையை மாற்றி சமத்துவ சமூகத்தை உருவாக்குவதே அறக்கட்டளைக் கோட்பாடு எனப்படும் இதில் முதலாளித்துவத்திற்குப் பங்கில்லை. இருப்பினும் இந்தியா சூதாட்ட முதலாளித்துவம் மற்றும் குறைகூறும் முதலாளித்துவம் சார்ந்த அனுபவங்களையும் பெற்றுள்ளது.
  8. உணவுப்பிரச்சனை: உணவுப்பொருட்களின் மீதான எந்தவிதக் கட்டுப்பாடுகளையும் காந்தி எதிர்த்தார். அத்தகைய கட்டுப்பாடுகள் செயற்கைப் பற்றாக்குறையை உருவக்கும் என்றார். இந்தியா ஒரு சமயத்தில் உணவு தானியத்திற்காக கையேந்தும் நிலையில் இருந்தது. ஆனால் தற்போது, உணவு தானியம், பழங்கள், காய்கறிகள், பால், முட்டை இறைச்சி போன்ற அதிக அளவு உற்பத்தி செய்து உலக அளவில் உயர்ந்த இடத்தில் உள்ளது.
  9. மக்கள் தொகை: காந்தி செயற்கையான குடும்பக் கட்டுப்பாட்டு மூறைகளை எதிர்த்தார். ஆனாலும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த சுயகட்டுப்பாடு மற்றும் பிரம்மச்சாரியத்தை வலியுறுத்தினார். சுயகட்டுப்பாடே மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த சிறந்த வழி என்று கருதினார்.
  10. மதுவிலக்கு: முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தியவர் காந்தியடிகள். “மது நமக்கு எந்த விதத்திலும் தூணை செய்வதல்ல, மாறாக நோயைத் தருகிறது” என்றார் காந்தியடிகள். “இந்தியா குடிகாரர்களின் நாடாக இருப்பதை விட ஏழைகளின் நாடாக இருப்பதே மேல்” என்றார். ஆனால் பல மாநிலங்களின் வருவாய் மது விற்பனையைச் சார்ந்துள்ளது.

ஜவஹர்லால் நேரு

நவீன இந்தியாவை கட்டமைத்த முதன்மை சிற்பிகளில் ஒருவர் ஜவஹர்லால் நேரு ஆவார். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம அமைச்சராக பதவியேற்ற நாள் முதல், 1964-ல் இறக்கும் வரை அவர் பதவி வகித்தார். அவர் ஒரு மிகப்பெரிய தேச பக்தர், சிந்தனையாளர், அரசியல்வாதி அவருடைய பொருளாதார கருத்துக்கள் அவர் ஆற்றிய எண்ணற்ற உரைகளிலிருந்தும் அவர் எழுதிய புத்தகங்களிலிருந்தும் நமக்கு கிடைக்கின்றன.

அ. ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை

ஜனநாயகத்தை உறுதியாக நம்பியவர் ஜவஹர்லால் நேரு. வர் பேச்சுரிமை குடிமக்கள் உரிமை, வாக்குரிமை, சட்டத்தின் வழி ஆட்சி மற்றும் பாராளுமன்ற ஜனநாயகம் ஆகியவற்றை நம்பியவர். மதச்சார்பின்மை இந்தியாவிற்கு நேரு தந்த மிகப்பெரிய பங்களிப்பு. நமது இந்தியாவில் இந்து மதம், இஸ்லாமிய மதம், கிறிஸ்தவ மதம், புத்த மதம், ஜைனமதம், சொராஸ்வீரிய மதம், சீக்கிய மதம் போன்ற இன்னும் பிற மதங்களும் இருக்கின்றன. ஆனால் மதப்பெருமான்மையால் எந்த ஒரு அச்சுருத்தலும் இல்லை. மதச்சார்பின்மை என்பது எல்லா மதங்களுக்கும் சமமான மரியாதை ஆகும்.

ஆ. திட்டமிடுதல்

  • திட்டமிடுதலை நம் நாட்டில் அறிமுகப்படுத்திய பெருமை ஜவஹர்லால் நேருவையேச் சேரும். ஒரு நட்டின் முன்னேற்றத்திற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறைக்கு திட்டம் அவசியம் என்று அவர் கருதினார்.
  • 1956-ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கருப்பொருள் மீதான விவாதத்தை பாராளுமன்றத்தில் துவக்கிவைத்து பேசினார்.
  • “திட்டமிடுதலின் சாரம் என்பது மனித சக்தி வளங்கள், பணம் இவற்றை சிறந்த வழிகளில் பயன்படுத்துவதை குறிக்கும்” – என்கிறார்.
  • திட்டமிடுதல் என்பது தொழில் மயமாதலோடு தொடர்புடையது, இதன்மூலம் ஒரு நாடு தன்னைத்தானே வளர்ச்சியடைய செய்து தற்சார்பினை அடைகிறது.
  • எனவே நேரு திட்டமிட்ட வளர்ச்சிபெற இந்த யுக்த்தியை முன்னெடுக்கிறார். “அறிவியல், ஆராய்ச்சி, தொழில் நுட்பம் மற்றும் தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் நேருவின் பங்களிப்பு மறக்க முடியாது. அவர் பிரதமராகப் பணியாற்றிய காலத்தில் தான் பல IIT (இந்திய தொழில் நுட்ப கழகம் ) மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அவர் எப்போதும் அறிவியல் மனப்பான்மையை வலியுறுத்தினார்.

இ. ஜனநாயக சமதர்மம்

சமதர்மம் என்பது இந்தியாவிற்கு நேருவின் மிகப் பெரிய பங்களிப்பு ஆகும். அவர் நம் இந்தியாவை சமதர்ம சமூகமாக கட்டமைக்க விரும்பினார். ஆனால் நேருவின் சமதர்மம் என்பது ஜனநாயக சமதர்மம் ஆகும்.

பி.ஆர். அம்பேத்கர்

  • பி.ஆர்.அம்பேத்கார் (1891 – 1956) ஒரு பன்முகத்திறன் பெற்றவர். அவர் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவக்கிய சிற்பி, சமதர்ம காவலர், சமூக நீதி பாதுகாவலர் மற்றும் அரசின் திட்டங்களை வடிவமைத்தவர்.
  • “பழங்கால இந்திய வர்த்தகம்” (1915-ல் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டப் படிபிற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை) “இந்தியாவின் தேசிய பங்கீடு –பற்றி வரலாறு மற்றும் பகுப்பாய்வு ஆய்வறிக்கை” (முனைவர் பட்டத்திற்காக சமர்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை) என்ற இரண்டு நூல்களிலும் அவருடைய பொருளாதார கருத்துக்கள் காணப்படுகின்றன. மேலும் “பிரிட்டிஷ் இந்தியாவில் மாகாண நிதிகளின் மதிப்பீடு: மாகாண ஏகாதிபத்தியத்தின் நிதிகள் பரவலாக்கம் பற்றிய ஓர் ஆய்வு” கட்டுரையாக வெளியிடப்பட்டது.
  • 1921-ல் அம்பேத்கருடைய பிரிட்டிஷ் இந்தியாவின் மாகாண நிதி பரவலாக்கள் என்ற ஆய்வுக் கட்டுரை M.Sc பட்டத்திற்காக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • மேலும் 1933ல் “ரூபயைன் பிரச்ச்னைகள்” என்ற ஆய்வறிக்கையை ஏற்று லண்டன் பொருளாதார பள்ளி D.Sc பட்டம் வழங்கியது. ஆச்சரியமான விசயம் என்னவென்றால் இந்திய ரிசர்வ் வங்கியானது அம்பேத்கர் நூலான ரூபாயின் பிரச்சினைகள் அதன் தோற்றமும்-அதன் தீர்வும் என்பதில் வழங்கப்பட்ட வழிகாட்டுதலின்படி கருத்தாக்கம் பெற்றது. அவருடைய பொருளாதார கருத்துக்கள் நான்கு தலைப்புகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
  1. நிதிப்பொருளாதாரம்: அம்பேத்கருடைய பெரும்பாலான நூல்கள் அவர் வெளிநாட்டில் தங்கியிருந்த 1913 – 1923 வரையிலான காலத்தில் எழுதப்பட்டவை. அவர் நிதிப் பொருளாதாரம் குறித்து நிறைய எழுதி இருக்கிறார். மாகாண நிதி பெருக்கத்தை மூன்று நிலைகளாகப் பிரிக்கிறார்.
  2. ஒப்படைப்பு வரவு செலவுத் திட்டம் (1871 – 72 முதல் 1876-77 முடிய)
  3. ஒதுக்கீடு வரவி செலவுத் திட்டம் (1877 -78 முதல் 1881 -82 முடிய) மற்றும்
  4. வருவாய் பங்கீடு வரவு செலவுத் திட்டம் (1882 – 83 முதல் 1920 – 1921 முடிய)
  5. வேளாண்மை பொருளாதாரம்: 1918-ல் அம்பேத்கர் “இந்தியாவில் குறைந்த நிலவுடமை மற்றும் தீர்வுகள்” என்ற கட்டுரையை எழுதினார். ஆடம்ஸ்மித்தின் ‘நாடுகளின் செல்வத்தைப் போல்’ நிலவுடைமை ஒருங்கிணைப்பு மற்றும் நிலவுடைமை விரிவாக்கம் இவற்றிற்கிடையேயான வேறுபாட்டினை கூறுகிறார்.
  6. நிதிப்பொருளாதாரம்: சமூக முன்னேற்றத்திற்கு சாதி மிகப் பெரிய தடையாக இருப்பதாக அம்பேத்கர் நம்பினார். சாதி சமூக பிரிவினைக்கு வழிவகுக்கிறது. தனி நபர்கள் தங்களுக்குள் வேலைகளை பரிமாறிக்கொள்ளும் வழி இருக்கவேண்டுமென்று அவர் சொன்னார். மேலும் சாதிய முறை சமூக பதட்டத்திற்கு காரணமாக அமைகிறது. சாதி முறை அரசியல் ஜனநாயத்தை விடவும், சமூக ஜனநாயத்தை அமைப்பதில் தோல்வியடைந்திருக்கிறது என்று அவர் கூறுகிறார்.
  7. சமதர்ம பொருளாதாரம்: அம்பேத்கர் ஒரு சமதர்மவாதி சமூக நீதியின் பாதுகாவலர். அவர் அனைத்து முக்கியமான தொழில்களையும் நாட்டுஉடமை ஆக்க வேண்டுமென்றும், நிலத்தை அரசே நிர்வகிக்க வேண்டும் என்றும் கூட்டு வேளாண்மை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அரசே காப்பீடு வணிகம் செய்ய வேண்டும் என விரும்பினார். அனைத்து மக்களுக்கும் கட்டாயமாக காப்பீட்டு வசதி அளிக்கப்பட வேண்டுமென்று கூறினார்.

அம்பேத்கர் மிகச்சிறந்த பொருளியல் அறிஞர் என்பதில் அய்யமில்லை. ஆனால் சட்டம் மற்றும் அரசியலில் அவரது அளப்பரிய பங்களிப்புகள் அவருடைய பொருளாதார பங்களிப்பை குறைத்து காட்டிவிட்டன. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதி.

J.C. குமரப்பா

  • ஜோசப் செல்லத்துரை குமரப்பா தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் 1892- ஜனவரி 4-ல் பிறந்தார். கிராமப் பொருளாதார முன்னேற்றக் கொள்கைகளின் முன்னோடியாக அறியப்படுகின்ற குமரப்பா அவரது அனைத்து பொருளாதார கருத்துக்களையும் காந்தியம் என்பதன் அடிப்படையிலேயே அமைத்துக்கொண்டார். மேலும் “காந்தியப் பொருளாதாரம்” என்ற கருத்தையே அவர் உருவாக்கினார்.

காந்தியப் பொருளாதாரம்

  • J.C.குமரப்பா, காந்தியின் கருத்தான கிராமத் தொழில்கள், கிராமத் தொழில் வளர்ச்சி சங்கம் ஆகியவற்றை வலுவாக ஆதரித்தார். கிருஸ்துவ மற்றும் காந்திய மதிப்பீடுகளை உள்ளடக்கி அவர் கோட்பாடுகளைக் கொண்டு வந்தார்.
  • அதில் அஹிம்சைக் கொள்கை, மனித நடத்தைகளை மையப்படுத்துதல் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை பொருள்முதல் வாதத்திற்குப் பதிலாக பயன்படுத்தினார்.
  • சோசலிசம் எடுத்துரைக்கும் வர்க்கப் போர் முக்கியத்துவத்தை நிராகரிக்கும் அதே வேளையில், தடையில்லா சந்தையில் உள்ள பருப்பொருள் வளர்ச்சி, போட்டி மற்றும் தீறன் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் நிராகரித்தார்.
  • காந்தியும் குமரப்பாவும் மனிதனின் பொருளாதார சேவைகளை நிறைவேற்ற வேண்டுமானால் சமூக பொருளாதார பிரச்சினைகள், வேலையின்மை, வறுமை மற்றும் ஆதரவற்ற நிலை ஆகியவற்றை களையவேண்டும் என்று கூறுகின்றனர்.
  • குமரப்பா உப்பு சத்யாக் கிரகத்தின் போது ‘யங் இந்தியா’ பத்திரிக்கையில் பணியாற்றிக் கொண்டே, அகமதாபாத்தில் உள்ள குஜராத் வித்யா பீடத்தில் பொருளாதார பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார். அனைத்திந்திய கிராம தொழில் கழகத்தை 1935-ல் தோற்றுவித்தார்.
  • வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது ஓராண்டிற்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது “நிலைத்த பொருளாதாரம்”, “இயேசுவின் வழிமுறைகள் (1945)” மற்றும் “கிறிஸ்துவம்: அதன் பொருளாதாரமும் வாழ்க்கை முறையும் (1945)” ஆகிய இரண்டு புத்தகங்களை எழுதினார்.
  • காந்தியைப் பின்பற்றுபவர்கள் சுற்றுப்புற சூழலியல் குறித்து நிறைய கோட்பாடுகளை உருவாக்கினர். குமரப்பா 1930 -1940 ஆண்டுகளுக்கிடையே இதுகுறித்து நிறைய புத்தகங்களை எழுதினார்.
  • வரலாற்று ஆய்வாளர் இராமச்சந்திர குஹா அவர்கள் குமரப்பாவை ‘பச்சை காந்தி’ என்று அழைத்து சிறப்பிக்கிறார். இந்தியாவின் சுற்றுச் சூழலியல் குறித்து அடித்தளமிட்டதால் அவ்வாறு அழைக்கப்படுகிறார்.
  • இந்தியத்திட்டக் குழுவிலும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலும் பணியாற்றி வந்த குமரப்பா, வேளாண்மைக்கான தேசிய கொள்கைகள் மற்றும் கிராம முன்னேற்றம் குறித்து பல கொள்கைகளை வகுத்து தந்தார்.
  • சீனா, கிழக்கு ஐரோப்பா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் சென்று அங்கு இருந்த கிராம வளர்ச்சித் திட்டங்களை பார்வையிட்டு நம் நாட்டில் அமல்படுத்த முனைந்தார்.

V.K.R.V.ராவ்

P.R.பிரமானந்தாவின் கூற்றுப்படி, “சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் இந்தியாவின் தலைசிறந்த பொருளியல் அறிஞர்களாக D.R.காட்கில், C.N.வக்கில் மற்றும் V.K.R.V.ராவ் ஆகியோரைக் குறிப்பிடலாம். இந்த அறிஞர்கள் சிறந்த கனவுகளோடும், இந்தியப் பொருளாதார பிரச்சனைகளை ஆராய்ந்து கொள்கைகளையும் திட்டங்களையும் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக வழங்கியிருக்கிறார்கள்” என்றார்.

V.K.R.V. ராவ் ஒரு தேர்ந்த எழுத்தாளர் அவர் மூன்று முக்கிய கருத்துக்களில் ஆர்வமுடையவராக இருந்தார்.

  1. தேசிய வருமானம்
  2. உணவு, ஊட்டச்சத்து மற்றும் பண்டங்களின் பகிர்வு
  3. வேலைவாய்ப்பு மற்றும் தொழில்பகிர்வு
  4. தேசிய வருமானம் கணக்கீட்டுமுறை:

தேசிய வருமான கணக்கீட்டு முறையின் வாயிலாக ராவ் ஒரு நடைமுறைப் பொருளாதாரவாதியாக நினைவில் கொள்ளப்படுகிறார். ராவ் J.M.கின்சின் மாணவர் மட்டுமல்லாது கோலின் கிளார்க் அவர்களுடன் பணி செய்து இருக்கிறார். H.W.சிங்கர், “கீன்சன் மாணவர்களில் சிறந்தவராக V.K.R.V.ராவ்” அவர்களைக் கருதுகிறார். ராவின் கணக்கீட்டு முறை

  1. பொதுவாக வளரும் நாடுகள், குறிப்பாக இந்தியாவிற்கு உகந்த தேசிய வருமானக் கருத்துக்கள்,
  2. முன்னேறிக்கொண்டிருக்கும் பொருளாதாரத்தில் முதலீடு, சேமிப்பு, பெருக்கி ஆகியவற்றை ஆய்வு செய்தல்.
  3. வளர்ச்சி குன்றிய நாடுகளின் தொழில்மயமாக்கலின் விளைவுகளை, தேசிய வருவாயை இணைத்துப் படிக்க வேண்டும். ‘முழு வேலை வாய்ப்பும் பொருளாதார முன்னேற்றமும்’ என்ற ராவின் ஆய்வுக் கட்டுரை வேலை வாய்ப்புத் துறையில் மிகச்சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.
  4. பன்னாட்டு உணவு உதவி: உலக வறுமையை ஒழிப்பதில் ராவ் சிறந்த கொள்கைகளை வகுத்துத் தந்தது மட்டுமல்லாது, உணவுப் பொருட்களை பன்னாட்டு அளவில் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்றும், தேர்ச்சி பெற்ற பன்னாட்டு சாதனங்களின் பங்களிப்பு கருத்தையும் முன்வைத்தார். தனது பங்களிப்பு மட்டுமன்றி, பன்னாட்டு உதவி மற்றும் வெளி வளங்களின் மூலம் உணவுக்கான நிதி வாய்ப்புகளை உருவாக்கினார்.
  5. சமதர்மத்திற்கு ஆதரவு: இந்திய திட்டமிடலின் முந்தைய காலங்களில் ராவ் சமதர்ம இந்தியாவை வலியுறுத்தினார். அரசாங்கமே பொருளியல் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டது என்றும், பொதுத்துறை பொருளாதார வளர்ச்சியின் உச்சத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்து பொருளாதார முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகிக்கவேண்டும் என்ற கருத்தையும் கொண்டிருந்தார்.
  6. ராவின் பார்வையில் தொழில்மயமாதல்: ராவ் எழுதிய ‘இந்திய பொருளியல் வாழ்வில் என்ன தவறு?’ (1938) என்ற சிறு புத்தகத்தில் இந்தியாவில் தனிநபர் வருமானம் குறைவிற்கும், தனிநபர் ஊட்டச்சத்து குறைவிற்கும் பின்வரும் காரணங்களை விளக்குகிறார்.
  7. முறையற்ற நிலவுடைமை, நிலம் துண்டாடல், நிலம் பிரிக்கப்படுதல்.
  8. பயிர்களுக்கு குறைவான நீர்ப்பாசன வசதி கிடைத்தல்
  9. பேரளவு தொழில்துறை இன்மையால், வேளாண்மையில் அதிக மக்கள் தொகை அழுத்தம் ஏற்படுகின்றது.
  10. முதலீடு இன்மை
  11. நாணயத்தில் சுயாட்சி கொள்கையின்மை மற்றும் பணம் பற்றிய கருத்துக்களில் தங்கத்தை உடமையாகக் கொள்வதை ஊக்குவித்தது.
  12. கிராம தொகுதிகள்: கிராம முன்னேற்றத்திற்காக கிராம குழுக்கள் அமைக்கப்படவேண்டும். ஊரக வளர்ச்சிக்காக கிராமங்கள் தொகுப்பாக ஒரே அலகாக செயல்பட வேண்டும். அதனால் கிராமங்களிடையே சமூக மற்றும் பொருளாதார மேம்பாடு அடையும். அக்குழுக்கள் திறம்பட சுயமுன்னேற்றத்திற்கு பொதுமக்கள் பங்கேற்புடன் தங்களை வடிவமைத்துக் கொள்ளும். குழுக்கள் ஒன்றுக்கொன்று உதவிக்கொள்பவராகவும், அதன் மூலம் சமூக பொருளாதார தொடர்பு கிராமத்தில் அதிக வளர்ச்சியையும், ஆற்றல் மிக்க உற்பத்தியையும், தன்னாக்க முறையில் செய்ய பொதுமக்கள் அதன் முன்னேற்றத்தில் பங்கெடுத்துக் கொள்பவராகவும் இருக்க வேண்டும் என்று ராவ் கருதினார்.
  13. முதலீடு , வருமானம் மற்றும் பெருக்கி: ‘முன்னேற்றம் அடையாத நாடுகளின் முதலீடு, வருமானம் மற்றும் பெருக்கி ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பு’ (1952) என்ற ராவ் அவர்களின் புத்தகம் பேரியியல் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு வழங்கியது.

சிந்தனையாளர், ஆசிரியர் , பொருளாதார ஆலோசகர் மற்றும் நேரடி கொள்கை வடிவமைப்பாளர் என்ற பார்வையில் J.M.கீன்சின் அடிகளை பின்பற்றுகிறார்.

  1. நிறுவனக் கட்டமைப்பாளர்: ராவ் தேசிய அளவிலான மூன்று ஆராய்ச்சி நிறுவனங்களை உருவாக்கினார். அவை டெல்லி பொருளாதாரப் பள்ளி (டெல்லி), பொருளாதார வளர்ச்சிக் கழகம் (டெல்லி), சமூக பொருளாதார மாற்றத்திற்கான கழகம் (பெங்களூரு).

அமர்த்தியாகுமார் சென்

நோபல்குழு, சென்னின் பங்களிப்பைப் பற்றி குறிப்பிடும்போது, அவருடைய சமூகத் தெரிவு கொள்கை, வளர்ச்சிப் பொருளாதாரம், வறுமை மற்றும் பஞ்சங்கள் பற்றி ஆய்வு மற்றும் உரிமங்கள் திறன் முன்னேற்றம் பற்றிய கருத்து (1998) ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.

  1. வறுமை மற்றும் பஞ்சம்: சென்னின் வறுமை மற்றும் பஞ்சம்: ‘உரிமம் மற்றும் இழப்பு பற்றிய ஓர் கட்டுரை (1981) சிறந்த ஒன்றாக இருக்கிறது. அவருடைய புத்தகத்தில் பல்வேறு பஞ்சங்கள் பற்றி ஆய்வு செய்து அவற்றின் உண்மையான காரணங்கள் எடுத்து காட்டியிருக்கிறார். வறுமை பற்றிய பல்வேறு விளக்கங்களை ஆராய்ந்து முழு வறுமை மற்றும் தொடர்புடைய வறுமை ஆகியவைப் பற்றிய காரணங்களைக் கூறி கவனத்தை ஈர்க்கின்றனர்.
  2. வறுமை மற்றும் சமத்துவமின்மை: சென் இந்தியாவில் வறுமை மற்றும் சமத்துவம் இன்மை பற்றி நிறைய எழுதி இருக்கிறார். வரிமானப் பகிர்வு மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்களின் நுகர்வு ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது சென் அவர்களின் முக்கியக் கருத்தாகும்.
  3. திறன் பற்றிய கருத்து: பொருட்கள் எல்லது பயன்பாடுகளைவிட திறன்களை வளர்ப்பது பற்றிய சென்னின் கருத்துக்கள் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. சென் அவர்களின் கருத்துப்படி திறன் என்பது அடிப்படை கச்சாப் பொருட்களை மக்கள் நலத்திற்காக மாற்றி அமைப்பது ஆகும்.
  4. உரிமைகள்: ஊட்டச்சத்து உணவு, மருத்துவம், உடல் நலப் பாதுகாப்பு, வேலை வாய்ப்பு , பஞ்சத்தின் போது வழங்கப்படும் உணவு ஆகியவை நமது உரிமைகளாக மாறவேண்டும் என்று சென் கருதினார். இத்தகைய உரிமைகள் வழிவகுவதில் ஏற்பட்ட தோல்வியே பஞ்சம் ஏற்படுவதற்கு காரணமாகும் என அவர் கருதினார்.
  5. தொழில் நுட்பத் தெரிவு: மூலதன செறிவு நுட்ப முறையில், உழைப்பாளர்கள் உபரியாக உள்ள பொருளாதாரத்தில் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது கடினம் என்று ‘தொழில் நுட்பத் தெரிவு’ என்ற புத்தகத்தில் சென் குறிப்பிடுகிறார்.

முடிவாக அமர்த்தியாசென் பொருளியல் அறிஞர் மட்டுமல்ல நன்னெறி தத்துவ அறிஞரும் ஆவார். அவர் சுதந்திரத்தை நேசிப்பவர் மற்றும் மனித நேய ஆதரவாளர். அவர் ஏழைகளைக் குறித்து அதிக அக்கரை எடுத்துக்கொண்டார். மேலும் அவர்களை இரக்கத்திற்கு உரியவர்களாக பார்க்காலம் உரிமைகள் வழங்கப்பட அதிகார உரிமைகள் கொண்டவர்களாக பார்க்க வேண்டும். அதிகாரம் வழங்குதல், கல்வி, உடல்நலம், ஊட்டச்சத்து, பாலின சமநிலை, துன்பம் நேரும் காலங்களில் பாதுகாப்பு ஆகியவை வழங்கப்பட வேண்டியவர்களாக கருதுகிறார்.

தொகுப்புரை

இப்பாடம், இந்திய பொருளாதாரம் மற்றும் அதன் வளங்கள் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆற்றல் பற்றிய பார்வையை மையப்படுத்துகிறது. இந்திய பொருளாதார சிந்தனையாளர்களின் தத்துவங்களின் தத்துவங்களைப் பற்றி விவரிப்பதால் மாணவர்கள் ஆர்வமுடன் சிறந்த பொருளியல் அறிஞர்களின் நல்ல நூல்களை வாசிப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!