Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Samacheer NotesTnpsc

சட்டமன்றம் Notes 12th Political Science Lesson 2 Notes in Tamil

12th Political Science Lesson 1 Notes in Tamil

சட்டமன்றம்

அறிமுகம்

  • சட்டமன்றமானது பிரதிநிதித்துவ மக்களாட்சியில் ஒரு மிக முக்கியமான நிறுவனமாகிறது. சட்டமன்றத்தின் அடிப்படை நோக்கமானது, அதன் பிரதிநிதிகளை பதிலளிக்க கடமைப்பட்டவர்களாகவும், நாட்டிலுள்ள மக்களின் நலன்களுக்கு பொறுப்புடையவர்களாகச் செய்வதே ஆகும்.
  • நாட்டின் அனைத்து தொகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கோண்டு, அந்நாட்டின் சட்டங்களை இயற்றுதல் அல்லது மாற்றுதல் ஆகியவற்றை செய்யும் ஓர் உயர்ந்த அமைப்பே, சட்டமன்றம் ஆகும்.
  • இந்தியா முழுமைக்குமான சட்டங்களை இயற்றுதல் அல்லது மாற்றுதல் ஆகியவற்றை செய்யும் ஓர் உயர்ந்த அமைப்பே, சட்டமன்றம் ஆகும்.
  • இந்தியா முழுமைக்குமான சட்டங்களை இயற்றும் சட்டமன்றம் நாடாளுமன்றம் அல்லது தேசிய சட்டமன்றம் என்று குறிப்பிடப்படுகின்றது. மாநிலங்களிலும் ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள சட்டமன்றங்கள் சட்டமன்ற பேரவை என்று அழைக்கப்படுகின்றன.
  • நாடாளுமன்றம் ஈரவைகளை கொண்டுள்ளது. அவை மக்களவை மற்றும் மாநிலங்களவை. இது நாடாளுமன்றத்தின் ஈரவை முறை எனப்படும். இது பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறை மற்றும் அமெரிக்காவின் ஈரவை முறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
  • இதேபோல் சில மாநிலங்களில் சட்ட மேலவை மற்றும் சட்டசபை என ஈரவை முறையே உள்ளது.
  • ஆனால் பல மாநிலங்களில் சட்டமேலவை இன்றி ஒற்றை அவையாக சட்ட மன்றமே உள்ளது. இந்தியாவில் நாடாளுமன்றம் அதன் சட்டம் இயற்றும் பணி மற்றும் அதனை செயல்படுத்துகின்ற பொறுப்பினை 28 மாநிலங்களுடனும், 9 ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளுடனும் பகிர்ந்து கொள்கிறது. ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகள் மத்திய அரசால் நேரடியாக ஆட்சி செய்யப்படுகின்றன. (தில்லி மற்றும் புதுச்சேரி தவிர)

ஒன்றியச் சட்டமன்றம் : நாடாளுமன்றம்

  • நாடாளுமன்றம், ஒன்றியச் சட்டமன்றம் அல்லது தேசிய சட்டமன்றம் என்று அறியப்படுகிறது. அதுவே முடிவுகளை எடுக்கக்கூடிய உச்ச அமைப்பு மற்றும் மக்களாட்சியின் அடையாளம்.
  • நாட்டு மக்களின் நலன் சார்ந்த பிரச்சனைகள் மீதான விவாதத்திற்கும், அரசியல் அமைப்பில் சட்டங்களை இயற்றுவதற்கும், திருத்துவதற்கும், பதிலளிக்க கடமைபட்ட மிகவும் சக்தி வாய்ந்த தளமாக நாடாளுமன்றமே உள்ளது.
  • நாடாளுமன்றத்திற்கு இரு முக்கியமான அதிகாரங்கள் மற்றும் பணிகள் உள்ளன. அவை சட்ட அதிகாரம் மற்றும் நிதி அதிகாரம் ஆகியவைகளாகும். சட்ட அதிகாரங்கள் சட்டம் இயற்றுவதற்கானவை.
  • நிதி அதிகாரங்கள் நிதி சம்பந்தப்பட்ட நிதிநிலை அறிக்கை கணக்குகளை தயார் செய்வதற்கானது. மேலும் இந்திய குடியரசுத்தலைவர் மற்றும் குடியரசுத் துணைத்தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடத்துவதற்கான தேர்வுச் செய்யும் பணிகளும் நாடாளுமன்றத்துக்கு இருக்கின்றன.
  • சட்ட முன் வரைவுகளுக்கான ஒப்புதல் அளித்தல், பல்வேறு தீர்மானங்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்து விவாதம் நடத்துதல், போன்றவற்றிற்காக திட்டமிடப்பட்ட ஒரு கால வரையறையில் நாடாளுமன்றம் கூடுவதைத்தான் ஒரு கூட்டத்தொடர் என்று அழைக்கிறோம். ஒரு வருடத்தில் நாடாளுமன்றம் மூன்று கூட்டத் தொடர்களை நடத்துகிறது.
  1. நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் (பிப்ரவரி – மே)
  2. மழைக்காலக் கூட்டத்தொடர் ( ஜூலை – ஆகஸ்ட்)
  3. குளிர்காலக் கூட்டத்தொடர் (நவம்பர் – டிசம்பர்)

செயல்பாடு – கருத்து சுதந்திரத்தின் பொருள் விளக்கம்

மாநிலங்களவையின் பெண் உறுப்பினர்கள், பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்ட முன்வரைவை மக்களவையில் நிறைவேற்ற வலியுறுத்தினர். பெண்களுக்கு, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33% இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் இந்த சட்ட முன்வரைவு, 2010-ம் ஆண்டு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இன்று வரை அது மக்களவையில் நிறைவேற்றப்படாமலே உள்ளது.

இந்திய அரசமைப்புச் (108 – வது திருத்தச் சட்டம்) சட்ட முன்வரைவு, பொதுவாக பெண்கள் இட ஒதுக்கீடு முன்வரைவு என்றழைக்கப்படும் இந்த சட்ட முன்வரைவு, மக்களவையில் நிறைவேற்றினால் மட்டுமே சட்டமாகும்.

  • குடியரசுத்தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் மீதான பதவிநீக்க தீர்மானத்தை விவாதிக்கவும், நிறைவேற்றி நீக்கம் செய்யவும் நாடாளுமன்றத்துக்கு உள்ளது. அவ்வாறு பதவி நீக்கம் செய்யப்படும் நடைமூறை “பழிச்சாட்டுதல்” நடைமுறை என்று அழைக்கப்படும்.
  • நாடாளுமன்றத்தை கூட்டுமாறு அழைப்பது குடியரசுத்தலைவரின் கடமை, அது வருடத்திற்கு இரண்டு கூட்டத்தொடர்களுக்கு குறையாமல் கூட வேண்டும். ஒவ்வொரு வருடமும், நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் குடியரசுத்தலைவர் அவரது சிறப்புரையை நிகழ்த்துவார்.
  • அதில் எதிர்காலத்தில் அரசு எடுக்கப்போகிற புதிய கொள்கைகள், திட்டங்கள் மற்றும் புது முயற்சிகளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆகியவை இருக்கும், இந்திய நாடாளுமன்றத்துக்கு சட்டங்கள் இயற்றுவது, அதன் நிர்வாகத்தை மேற்பார்வையிடுவது, நிதிநிலை அறிக்கைத் திட்டத்தை நிறைவேற்றுவது, பொதுமக்களின் மனக்குறைகளை அவர்களின் பிரதிநிதிகள் வழியே வெளிப்படுத்துவது, தேசியக் கொள்கைகள் மற்றும் நாட்டின் பிரச்சனைகள் குறித்து விவாதிப்பது போன்ற பணிகளும் உள்ளது. அமைச்சர்கள், தனித்தனியாகவும் கூட்டாகவும் மற்றும் மக்களவையால் நீக்க கூடிய பொறுப்புடையவர்கள்.

மக்களவையின் செயல்பாடுகள்

  • நாடாளுமன்றம் ஈரவைகளைக் கொண்டது. ஈரவைகளும் ஒரே மாதிரியான மதிப்பீடுகளையும் பொறுப்புகளையும் தன்னகத்தே கொண்டவை.
  • இருப்பினும், நிதிச் செலவு ஒப்புதல் பெறுவது போன்ற சில விதிவிலக்குகள் உள்ளன. இவற்றில் முதலாவது மக்களவை, தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொண்ட, நாடெங்கிலுமுள்ள 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினர்களால், நாட்டின் 543 நாடாளுமன்றத் தொகுதிகளிலிருந்து, நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 543 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டது மக்களவை ஆகும்.
  • மக்களவையில் ஆங்கிலோ-இந்திய சமூகத்திலிருந்து நியமிக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள் நியமன உறுப்பினர்களாக இருப்பார்கள்.
  • மக்களவை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 545 நாடாளுமன்றத்தில் அரசின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் தீர்மானத்தில் நியமன உறுப்பினர்கள் முடிவெடுக்க முடியாது.
  • மக்களின் பொதுப் பிரச்சினைகள் தொடர்பான விவாதங்கள், மக்களின் சமூக பொருளாதார தேவைகள், மற்றும் கொள்கை முடிவுகள் பற்றி கலந்துரையாட, விவாதிக்க, அமைந்த ஒரு மிக உயரிய மன்றம் தான் மக்களவை.
  • இரு அவைகளை சார்ந்த உறுப்பினர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் என்றே மக்கள் பொதுவாக அழைப்பர். மாநிலத்தின் ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலிருந்தும் மக்களால் தேர்தல்கள் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களவையில் இருப்பர். மக்களவையின் ஆயுட்காலம் ஐந்து வருடங்களாகும்.

சபாநாயகரின் பங்கு மற்றும் பொறுப்புகள்

  • மக்களவையை தலைமை தாங்கி நடத்துபவர் சபாநாயகர் ஆவார். அவர் மக்களைவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராவார். சபையை வழிநடத்துவது, கலந்துரையாடல் மற்றும் விவாதங்களை நடத்த உதவுவது, சபை உறுப்பினர்களின் நடத்தை குறித்த கேள்விகளுக்கு பதில்களை பெறுவது மற்றும் அவர்களின் சலுகைகள் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பது ஆகியவை சபாநாயகரின் கடமை ஆகும். நாடாளுமன்ற தலைமைச்செயல்கத்தின் நிர்வாகத் தலைவர் மக்களவை சபாநாயகர் ஆவார்.
  • உறுப்பினர்கள் பொருத்தமான நடைமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்களா என்பதை உறுதிசெய்வது, உறுப்பினர்களை கேள்விகள் எழுப்புவதற்கு அனுமதிப்பது, அவர்கள் பேசுவதற்கு நேரம் ஒதுக்குவது, மற்றும் ஆட்சேபனைக்குரிய குறிப்புக்களை பதிவேட்டிலிருந்து நீக்குவது மற்றும் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிவது ஆகியவை சபாநாயகரின் கடமையாகும்.
  • அவையின் விதிமூறைகள் மற்றும் விதிகளை உதாசீனப்படுத்தும் அல்லது மீறும் உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்றும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு.
  • ஒரு திருத்தச்சட்டம் முன்மொழிவதற்கு சபாநாயகரின் அனுமதி பெறப்படவேண்டும். அந்த திருத்தச்சட்ட முன்வரைவை அனுமதிப்பதா இல்லையா என்பதை சபாநாயர்கர்தான் தீர்மானிப்பார். மன்றத்தின் உரிமைகள், சிறப்புரிமைகள் மற்றும் கலந்தாய்வுக் குழு, சிறப்புக்குழு, ஆலோசனைக்குழு போன்ற பல்வேறு குழுக்கள் மற்றும் அவற்றின் உறுப்பினர்கள் ஆகியோரின் உரிமைகளின் பாதுகாவலராக சபாநாயகர் செயல்படுவார். சிறப்புரிமை குறித்த எந்த விளக்கமும் வேண்டி ஆய்வு செய்யவும், விசாரணை நடத்தவும் மற்றும் அறிக்கை அளிக்கவும் உரிமைக்குழுவுக்கு பரிந்துரைப்பது சபாநாயகரின் மற்றொரு முக்கியமான அதிகாரமாகும்.
  • உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள் , அளிக்கும் பதில்கள், விளக்கங்கள், மற்றும் அறிக்கைகள் அனைத்தும் சபாநாயகரை நோக்கியே இருக்க வேண்டும்.
  • அவை ஒழுங்குப் பிரச்சினை குறித்த கேள்விக்கு சபாநாயகரே இறுதி முடிவெடுப்பார். அரசமைப்பின்படி சபாநாயகர் சிறப்பு அந்தஸ்தை பெற்றுள்ளார்.
  • அதன் மூலம் நிதி முன்வரைவு என்று சான்றளிக்கும் அதிகாரம் பெற்றவர். சிறப்பு நிகழ்வுகள், அல்லது சில சட்ட நடவடிக்கைகளில் ஈரவைகளுக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்படும் சமயங்களில் நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டுத்தொடருக்கு மக்களவையின் சபாநாயகர் தலைமை தாங்குவார்.
  • மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவருக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து சபாநாயகரே முடிவு செய்வார். அரசமைப்பு 52-வது திருத்தச்சட்டத்தின் படி ஒரு உறுப்பினரை கட்சித்தாவலின் அடிப்படையில் தகுதியிழப்பு செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவருக்கு உள்ளது.
  • சபாநாயகர் நாடாளுமன்றத்தின் ஒரு உறுப்பினராக இருந்தாலும் கூட நடுநிலை வகித்து மன்றத்தில் வாக்கு செலுத்தமாட்டார். இருப்பினும், விதிவிலக்காக எந்த முடிவையும் எட்டாவது இருபுறமும் சரிசமமாக இருக்கும் சில அரிய சந்தர்ப்பங்களில் தனது வாக்கை செலுத்துவார். இது முடிவு செய்யும் வாக்கு (casting vote) எனப்படும்.

  • இந்தியாவின் தலைமைச் சிற்பிகளில் ஒருவரும் அதன் மக்களாட்சி அரசமைப்புத் தத்துவத்தின் உந்து சக்தியாக திகழ்ந்தவர் ஜவஹர்லால் நேரு , இந்திய சபாநாயகரின் அலுவலகத்தை குறித்து ஒரு பொருத்தமான சூழ்நிலையில் இவ்வாறு கூறுகிறார், “சபாநாயகர் மன்றத்தின் பிரதிநிதியாக திகழ்கிறார். அவர்/ அவள் இந்த மன்றத்தின் மாண்பு மற்றும் அதன் சுதந்திரத்தின் பிரதிநிதியாக விளங்குகிறார். இந்த மன்றம், நாட்டின் சின்னமாக விளங்குவதால் ஒரு குறிப்பட்ட வகையில் சபநாயகர் இந்த நட்டின் சுதந்திரம் மற்றும் விடுதலையின் சின்னமான திகழ்கிறார். ஆகவே, அது ஒரு மேன்மைதாங்கிய சுதந்திரமான பதிவியாக இருக்க வேண்டும். அந்தப்பதவி எப்போதும் மிகத்திறமை வாய்ந்த மற்றும் பாரபட்சமற்ற ஒருவரால் வகிக்கப்பட வேண்டும்.

மாநிலங்களவை

  • மாநிலங்களவை என்று அழைக்கப்படுவது, அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளிலிருந்து வரும் 238 உறுப்பினர்களையும் மற்றும் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்பட்ட 12 நியமன உறுப்பினர்களையும் சேர்த்து மொத்தம் 250 உறுப்பினர்களைக் கொண்டது.
  • மாநிலங்களவை அல்லது மேலவை இந்திய நாடாளுமன்றத்தின் இரண்டாவது ஆட்சி மன்றம் என்று அழைக்கப்படுகிறது.
  • அமெரிக்காவிலுள்ள ஆட்சிமன்ற்க் குழுவைப்போல மாநிலங்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு அமைப்பு மாநிலங்களவை ஆகும். இது 1952 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி உருவாக்கப்பட்டது.
  • மாநிலங்களவை உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
  • மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் தவிர, இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவை போன்ற துறைகளிலிருந்து புகழ் பெற்ற 12 உறுப்பினர்களை இந்தியக் குடியரசுத்தலைவர் நியமிக்கிறார்.
  • மக்களவையைப் போல் மாநிலங்களவை கலைக்க இயலாது. ஆனால் ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கும் அதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் தங்களது பதவிக்காலத்தை நிறைவு செய்வார்கள்.
  • ஒரு உறுப்பினரின் பதவி காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். மாநிலங்களவை உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களால், மாற்றத்தக்க ஒற்றை வாஅக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மாநிலங்களவையின் செயல்பாடுகள்

  • குடியரசுத் துணைத்தலைவர் மாநிலங்களவையின் அலுவல் வழி அவைத்தலைவராக இருப்பார். அவைத்தலைவர் மாநிலங்களவையின் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கி முறைப்படுத்துவார்.
  • பணம்/ நிதி சம்பந்தமான முன்வரைவுகளைத் தவிர்த்து, ஏனைய முன்வரைவுகள் அனைத்தும் மாநிலங்களவையில் விவாதிக்கவும், கேள்விகள் கேட்கவும், முன்வரைவுகள் மற்றும் தீர்மானங்களை நிறைவேற்றவும் நடைமுறைகள் விதிகளின் அடிப்படையில் நடைபெறும்.
  • மக்களவையைப் போலவே சட்டம் இயற்றுதல்தான் மாநிலங்களவையின் மிக முக்கியமான பணிகளில் ஒன்று. இதில் மக்களவைக்கு இணையான அதிகாரத்தை மாநிலங்களவை கொண்டுள்ளது.
  • ஐக்கிய அமெரிக்க நாட்டில் மாநிலக் குழுவின் உறுப்பினர்கள் செனட்டர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அங்கு மாநிலத்தின் பரப்பளவு மற்றும் மக்கள்தொகை ஆகியவற்றை பொருட்படுத்தாது ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமமான அளவில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுகிறது.
  • ஆனால் இந்தியாவில் மாநிலங்களவையில் பிரதிநிதித்துவம் அந்தந்த மாநிலங்களின் மக்கள்தொகை அடிப்படையில் அமைந்துள்ளது.

  • உதாரணமாக, மிக அதிக மக்கள் தொகையைக் கொண்ட உத்திரப்பிரதேச மாநிலம் மாநிலங்களவைக்கு 31 உறுப்பினர்களை தேர்வு செய்கிறது.
  • அதே சமயம், மிகக்குறைந்த மக்கள்தொகையைக் கொண்ட சிக்கிம் மாநிலம் மாநிலங்களவைக்கு ஒரு உறுப்பினரைத்தான் தேர்ந்தெடுக்கிறது.
  • மாநிலங்களவைக்கு தமிழ்நாடு 18 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை அரசமைப்பின் நான்காவது பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.
  • மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். அதன் பின்னர் அவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படலாம். நாடாளுமன்றத்தின் நிரந்தரஅவை என்று மாநிலங்களவை அழைக்கப்படுகிறது. அது எப்போதும் முழுமையாக கலைக்கப்படுவதில்லை. மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சில முக்கியமான சிறப்புரிமைகள் மற்றும் சட்ட விலக்களிப்புகள் பின்வருமாறு:

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்

  1. நாடாளுமன்றத்தில் பேச்சுரிமை மற்றும் நாடாளுமன்றத்தில் அல்லது எந்த ஒரு குழுவிலும் அவர் தெரிவித்த கருத்துக்கள் அல்லது அளித்த வாக்குகள் குறித்து எந்த நீதிமன்றத்திலும் சட்ட நடவடிக்கைகள் தொடருவதற்கு எதிரான பாதுகாப்பு.
  2. ஈரவைகளிலுமிருந்து அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் எந்த ஒரு அறிக்கை, கட்டுரை, வாக்குகள் அல்லது நடவடிக்கைகளை பிரசுரிப்பதற்கு எதிராக சட்ட நடவடிகளைகள் எந்த நீதிமன்றத்திலும் தொடருவதற்கு எதிரான பாதுகாப்பு.
  3. நாடாளுமன்ற நடவடிக்கைகள் பற்றி விசாரணை நடத்துவதற்கு நீதி மன்றத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  4. ஈரவைகளில் எந்த ஒரு அவை நடவடிக்கைகளின் உண்மையான எந்த ஒரு அறிக்கையையும் செய்தித்தாள்களில் பிரசுரிக்கும் உரிமைக்கு எதிரான சட்ட விலக்களிப்பு, பிரசுரம் தவறான நோக்கோடு பிரசுரிக்கப்பட்டதாக இருந்தாலொழிய, அதற்கெதிரான நீதிமன்ற சட்ட நடவடிக்கைகளுக்கு எதிரான பாதுகாப்பு.
  5. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதும், கூட்டத்தொடர் தொடங்குவதற்கு நாற்பது நாட்களுக்கு முன்பும், மற்றும் கூட்டத்தொடர் முடிந்து நாற்பது நாட்கள் வரையிலும் உரிமையியல் வழக்குகளின் கீழ் ஒரு உறுப்பினரை கைது செய்யப்படாமல் இருக்கும் சுதந்திரம்.
  6. நாடாளுமன்ற வளாகத்தினுள் ஒரு உறுப்பினர்மீது சட்ட நடவடிக்கை அறிக்கை அளிப்பது அல்லது கைது ஆகியவற்றிலிருந்து விதிவிலக்கு.

ஆதாரம்: https://www.india.gov.in/sites/upload_files/npi/files/coi_part_full.pdf

யார் மாநிலங்களவை உறுப்பினராகலாம்?

  • இந்திய நாட்டின் குடிமகனாக இருக்கவேண்டும்.
  • 30 வயதுக்குட்பட்டவராக இருக்கக்கூடாது.
  • மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் கீழ் மாநிலங்களவைவுக்கு தேர்ந்தெடுக்கப்பட விரும்பும் ஒரு நபர் அந்த மாநிலத்தின் நாடாளுமன்ற தொகுதியில் ஒரு வாக்காளராக இருக்கவேண்டும்.
  • மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் மூன்றாவது பிரிவினை மக்கள் பிரதிநிதித்துவ (திருத்த) சட்டம், 2003 திருத்தியது.

இதன் மூலம் மாநிலங்களவைக்கு போட்டியிடும் ஒருவர் எந்த மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றாரோ, அந்த மாநிலத்தில் வசிப்பவராக இருக்கவேண்டும் எற நிபந்தனை விலக்கிக்கொள்ளப்பட்டது.

நாடாளுமன்றம் : மக்களவை, மாநிலங்களவை

மக்களவையின் அதிகாரங்கள்

  1. மக்களவை மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இது நாட்டின் அரசியல், சமூகம் மற்றும் பொருளாதார நிலையைப் பிரதிபலிக்கிறது. மிக உயரிய பொறுப்பை கொண்டுள்ள அமைப்பு மேலும் நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் பிரதிநிதியாகவும் நடைமுறையில் திகழ்கிறது.
  2. மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டது. இதன் உறுப்பினர்கள் மக்களின் பல்வேறு விருப்பங்களின் பிரதிநிதியாக திகழ்கிறார்கள். ஆகவே இது மக்களாட்சி அமைப்பின் மிக உயரிய இடத்தில் உள்ளது. இங்கிருந்துதான் நாட்டின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் சட்டங்கள் உருவாகின்றன.
  3. ஒன்றியப் பட்டியல் மற்றும் பொதுப் பட்டியலில் உள்ள விசயங்கள் குறித்த சட்டங்களை மக்களவை நிறைவேற்றுகிறது. மேலும் மக்களவை புதிய சட்டங்களை இயற்றவும் நடைமுறையிலுள்ள சட்டத்தை நீக்க அல்லது அதைத் திருத்தவும் முடியும். பணம் சார்ந்த முன்வரைவுகளின் மீது மக்களவைக்கு மட்டுமே முழுமையான அதிகாரம் உள்ளது.
  4. மக்களவையின் சிறப்பு அதிகாரம் என்னவென்றால், நிதிநிலை அறிக்கை அல்லது பணம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு சட்டத்தையும் அது நிறைவேற்றினால், அதை மாநிலங்களவை நிராகரிக்க முடியாது. ஆனால் மாநிலங்களவை அந்த சட்டத்தை 14 நாட்களுக்கு மட்டும் காலதாமதப்படுத்த முடியும். மேலும் அந்த சட்டத்தில் மாநிலங்களவை ஏதாவது மாற்றம் செய்வதற்கு ஆலோசனை கூறினால் அதை ஏற்றுக்கொள்ளவோ நிராகரிக்கவோ மக்களவைக்கு உரிமை உண்டு.
  5. நாட்டின் பொருளாதாரம் மக்கள் கட்டுப்பாட்டில் இருப்பதை வெளிப்படையாக தெரிவிக்கும் வகையில் அமையும் நிதிநிலை அறிக்கை மற்றும் நிதி அறிக்கையை தயார் செய்வதும் சமர்ப்பிப்பதும் மக்களவையின் சிறப்புரிமைகளில் ஒன்று ஆகும்.
  6. கேள்விகள், மற்றும் துணைக்கேள்விகள் எழுப்புதல், முன்வரைவு நிறைவேற்றம், மற்றும் நம்பிக்கையில்லா தீர்மானங்கள் ஆகியவற்றின் மூலம் ஆட்சித்துறையை மக்களவை கட்டுப்படுத்துகிறது.
  7. அரசமைப்பை திருத்தி அமைக்கவும், அவசரகால நிலை பிரகடனத்தை வெளியிடவும் மக்களவை அதிகாரம் பெற்றுள்ளது.
  8. இந்திய நாட்டின் குடியரசுத்தலைவர் மற்றும் குடியரசுத் துணைத்தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுக்கும் பணியில் மக்களவை முக்கிய பங்காற்றுகிறது.
  9. மக்களவை, புதிய குழுக்கள் மற்றும் ஆணையங்களை அமைக்கும் அதிகாரத்தை பெற்றது. மேலும் அவற்றின் அறிக்கைகளை விவாதிப்பதற்கு ஏதுவாக நாடாளுமன்றத்தின் முன் சமர்பிக்கவும், அவ்வறிக்கைகளை அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலிக்கவும் மக்களவைக்கு அதிகாரம் உண்டு.
  10. மக்களவை பெரும்பான்மை ஆதரவை கொண்டிருக்கும் பிரதமர் மற்றும் அமைச்சரவை ஆகியோரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். ஒருவேளை பிரதமர் மக்களவையின் நம்பிக்கையை இழந்தால் மொத்த அரசும் வெளியேற நேரிடும் மற்றும் புதிய தேர்தல்களை சந்திக்க வேண்டும்.

மாநிலங்களவையின் அதிகாரங்கள்

மக்களவையுடன் ஒப்பிடும்போது, அரசமைப்பின்படி மாநிலங்களவையின் அதிகாரத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

  1. மக்களவையும் மாநிலங்களவையும் சம அளவில் அதிகாரம் உள்ள இடங்கள்
  2. மாநிலங்களவையும் மக்களவையும் சமமற்ற அதிகாரம் கொண்டுள்ள இடங்கள்.
  3. மாநிலங்களவையின் சிறப்பு அதிகாரங்கள் இவை மக்களவையுடன் பகிர்ந்து கொள்ளப்படாதவை.

மாநிலங்களவையும் மக்களவையும் சம நிலையில் உள்ள இடங்கள்

கீழ்க்கண்ட அடிப்படையில் மாநிலங்களவையின் அதிகாரமும், மக்களவையின் அதிகாரமும் சம அளவில் உள்ளன.

  1. முன்வரைவுகள் மற்றும் திருத்தச்சட்டங்களை நிறைவேற்றுதல்.
  2. இந்திய அரசின் தொகுப்பு நிதியில் இருந்து செய்யப்படும் செலவினங்கள் தொடர்பான முன்வரைவுகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் நிறைவேற்றுதல்.
  3. குடியரசுத்தலைவர் மற்றும் துணைக்குடியரசுத்தலைவரை தேர்ந்தெடுத்தல் மற்றும் பதவி நீக்க நடைமுறையில் பங்கேற்றல்.
  4. துணைக் குடியரசுத்தலைவரின் பதவி நீக்க தீர்மானத்தை மாநிலங்களவையே துவக்க முடியும். ஒரு சிறப்பு பெரும்பான்மையின் மூலம் துணைக் குடியரசுத்தலைவரை மாநிலங்களவை பதவி நீக்கம் செய்கிறது. அதை சாதாரண பெரும்பான்மை மூலம் மக்களவை ஏற்றுக்கொள்கிறது.
  5. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இந்தியாவின் தலைமைத் தணிக்கைக் கணக்காயர் ஆகியோரை பதவி நீக்கம் செய்யும் பரிந்துரையை குடியரசுத்தலைவருக்கு அனுப்புதல்.
  6. குடியரசுத்தலைவரின் அவசர சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தல்.
  7. குடியரசுத்தலைவரின் மூன்று விதமான அவசரநிலைப் பிரகடனங்களுக்கு ஒப்புதல் வழங்குதல்.
  8. பிரதமர் உட்பட அமைச்சர்களை தேர்வு செய்தல். இந்திய அரசமைப்பின்படி பிரதமர் மற்றும் அமைச்சர்கள் இரண்டு அவைகளில் ஏதேனும் ஒன்றில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். அவர்கள் எந்த அவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் மக்களவைக்கு மட்டுமே பொறுப்பானவர்கள் ஆவர்.
  9. நிதிக்குழு ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் போன்ற அமைப்புகள் அளிக்கும் அறிக்கைகளை பரிசீலித்தல்.
  10. உச்ச நீதிமன்றம் மற்றும் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரம் வரம்பை அதிகப்படுத்துதல்.

மக்களவையுடனான சமமற்ற நிலை

  1. நிதி முன்வரைவானது மக்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்த இயலும், மாநிலங்களவையில் அல்ல.
  2. மாநிலங்களவை நிதி முன்வரைவில் திருத்தம் செய்யவோ அதை நிராகரிக்கவோ இயலாது. அம்முன்வரைவை 14 நாட்களுக்குள் மாநிலங்களவை தன் பரிந்துரையுடனோ அல்லது பரிந்துரை ஏதுமின்றியோ மக்களவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.
  3. மாநிலங்களவையின் பரிந்துரைகளை மக்களவை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். எதுவாக இருப்பினும் முன்வரைவு ஈரவைகளிலும் நிறைவேறியதாகவே கருதப்படும்.
  4. ஒரு நிதி முன்வரைவு சட்ட உறுப்பு 110-இல் கூறப்பட்டுள்ள விவரங்கள் தொடர்பாக இல்லாதிருப்பினும் அது மக்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும். ஆனால் அதை நிறைவேற்றுவதில் ஈரவைகளுக்குமே சமமான அதிகாரம் உள்ளது.
  5. ஒரு முன்வரைவு , பண முன்வரைவு என்று தீர்மானிக்கும் அதிகாரம் மக்களவை சபாநாயக்ருக்கே உள்ளது.
  6. ஈரவைகளின் கூட்டு கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகரே தலைமை தாங்குகிறார்.
  7. பொதுவாக, கூட்டுக் கூட்டங்களின் வாக்கெடுப்பில் மக்களவையின் நிலைப்பாடே வெற்றி பெறும். ஏனெனில் அது மாநிலங்களவையை விட அதிக உறுப்பினர்களை கொண்டுள்ளது. ஈரவைகளிலும் ஆளும் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்த எதிர் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட குறைவாக இருக்கும் சமயத்தில் மட்டுமே ஆளும் கட்சியின் தீர்மானம் வெற்றி பெறாது.
  8. மாநிலங்களவை நிதிநிலை அறிக்கை திட்டத்தின் மீது விவாதம் நடத்தலாம். ஆனால் அதற்கான வாக்கெடுப்பில் பங்கு பெற முடியாது. இது மக்களவைக்கு மட்டுமே உள்ள சிறப்பு உரிமையாகும்.
  9. அமலில் உள்ள தேசிய அவசர நிலையை நீக்கும் தீர்மானம் மக்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும்.
  10. எந்த ஒரு அமைச்சருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மாநிலங்களவை மேற்கொள்ள முடியாது. ஏனெனில் அமைச்சர்கள் குழுவாகவும் , தனிப்பட்ட முறையிலும் மக்களவைக்கே பொறுப்பானவர்கள். ஆனால் மாநிலங்களவை அரசின், கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை *857+4-
  11. 1
  12. \9+விமர்சிக்க முடியும்.

மாநிலங்களவையின் சிறப்பு அதிகாரங்கள்

கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் மாநிலங்களவை இரண்டு பிரத்யோகமான தனித்துவமான அதிகாரங்களை பெற்றுள்ளது.

  1. உறுப்பு 249-ன்படி மாநிலங்களவை மாநில பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதிகாரங்களில் நாடாளுமன்ற சட்டம் இயற்ற அதிகாரமளிக்க முடியும்.
  2. உறுப்பு 312-ன் படி மாநில மற்றும் மத்திய அரசுக்கு பொதுவான அனைத்து இந்தியத் தேர்வாணையத்தை உருவாக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரமளிக்க முடியும்.
  • மேற்கண்ட ஆய்வின் மூலம் இந்திய மேலவையானது (மாநிலங்களவை) ஆங்கிலேய நாடாளுமன்ற அமைப்பில் உள்ள மேலவை (பிரபுக்கள் சபை) போல அதிகாரமற்று இல்லாமலும், அமெரிக்க மேலவை (செனட்) போல் மிகுந்த அதிகாரமுடையதாகவும் இல்லாமல் இருப்பதாக புலனாகிறது. மாநிலங்களவையானது , நிதிவிவகாரங்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான கட்டுப்பாடு தவிர மற்ற எல்லா தளங்களிலும் கிட்டத்தட்ட மக்களவைக்கு நிகரான அதிகாரத்தையே பெற்றுள்ளது.
  • மக்களவையுடன் ஒப்பிடும்போது, மாநிலங்களவைக்கு குறைவான அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தாலும் கீழ்க்கண்ட விவகாரங்களில் இதன் பயன் அவசியமாகிறது.
  1. அவசரமாகவும், குறைபாடுகளுடனும், கவனமின்றியும் மக்களவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுப்பப்படும் சட்ட முன்வரைவுகளை திருப்பி அனுப்பவும் அவற்றில் திருத்தங்களை மேற்கொள்ளவும் மாநிலங்களவை செய்கிறது.
  2. நேரடியாக தேர்தலைச் சந்திக்கமுடியாத புகழ்பெற்ற நிபுணர்கள், கலை, இலக்கிய வல்லுனர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு இந்த அவை பிரதிநிதித்துவம் அளிக்கிறது. மேலும், குடியரசுத்தலைவர் இது போன்ற நபர்களை இந்த அவையின் உறுப்பினராக நியமிக்கிறார்.
  3. கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையான மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் காவலனாக மத்திய அரசின் அதிகார தலையீடுகளைத் தடுக்கிறது.

உறுப்பு 120

நாடாளுமன்றத்தின் அலுவல் மொழியாக இந்தியும் ஆங்கிலமும் இருக்கும் என அரசமைப்பின் உறுப்பு 120 கூறுகிறது. இவ்வாறிருந்தாலும், நாடாளுமன்ற உறுப்பினர் எவரேனும் இந்தி மற்றும் ஆங்கிலம் தெரியாதவராக இருப்பின், அவர் தனது தாய் மொழியில் உரையாற்ற அவைத்தலைவர் அனுமதிக்கலாம் என்றும் இவ்வுறுப்பு மேலும் கூறுகிறது.

சட்டம் இயற்றும் நடைமுறைகள்

  • இந்திய நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும் நடைமுறைகள் அதன் மக்களாட்சித் தத்துவத்தின் நம்பகத்தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. சட்டம் இயற்றும் நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகளின் பங்கு மிக இன்றியமையாததாக அமைகிறது.
  • மக்களாட்சி அமைப்பினை முறைப்படுத்துவதில், ஒரு சட்ட முன்வரைவு மற்றும் அதன் மீது தங்கள் கருத்துகளை எதிரொலிப்பதன் மூலம் எதிர்க்கட்சிகள் மிக மிக முக்கிய பங்களிக்கின்றன.
  • மாநிலங்கள் மற்றும் மக்களின் நலனை பேணும் பொருட்டு சமூகம், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை முறைப்படுத்தி வழிகாட்டும் சக்தியாக சட்டங்கள் விளங்குகின்றன. பரிசீலனைக்காக நாடாளுமன்றத்தில் “சட்ட முன்வரைவாக” (சட்ட முன்வரைவு) சட்டங்கள் முன்மொழியப்படுகின்றன.

  • சட்ட முன்வரைவை அரசமைப்பிற்கு உட்பட்டு முழுமையாக அறிந்து கொள்ளும் பொருட்டு ஒரு முழுமையான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறும்.
  • அந்த சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு குடியரசுத்தலைவரின் ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு சட்டமாக இயற்றப்படும்.
  • அரசமைப்பு நடைமுறைகளின் அடிப்படையில் புதிய சட்டங்களை இயற்றுவதும் நடைமுறையிலுள்ள சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவருவதும் நாடாளுமன்றத்தின் தலையாய கடமையாகும்.

இந்திய நாடாளுமன்றம் இரு வகையான முன்வரைவுகளை நிறைவேற்றுகீறது அவை:

  1. நிதி முன்வரைவு
  2. நிதிசாரா முன்வரைவு அல்லது சாதாரண அல்லது பொது முன்வரைவு
  • ஒரு சாதாரண சட்ட முன்வரைவு ஒரு சட்டமாக இயற்றப்படுவதற்கு முன் பல்வேறு நிலைகளை கடந்து வர வேண்டும். சாதாரண முன்வரைவுகளை நிறைவேற்றுவதற்கான நடைமுறைகளை இரு வேறு பகுப்புகளாக அரசமைப்பு வகுத்துள்ளது.

இவைகள் பின்வருமாறு: ஒரு சாதாரண சட்ட முன்வரைவு பின்வரும் நிலைகளைக் கடந்து இரண்டு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்பட்டு ஒப்புதலைப் பெற்றிருக்கவேண்டும்.

  1. “முதல் நிலையில் சட்ட முன்வரைவானது ஏதாவது ஒரு அவையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. அங்கு சட்ட முன்வரைவு வாசிக்கப்படுகிறது. பெரும்பாலான முன்வரைவுகள் சம்பந்தப்பட்ட அமைச்சர்களால் அறிமுகப்படுத்தப்படும். அந்த முன்வரைவு குறிப்பிட்ட தொழில் தூறை சார்ந்த தொழில் நுட்ப வல்லுனர்களால் முன்வரைவு செய்யப்பட்டு அமைச்சரவை ஒப்புதல் பெறவேண்டும். எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் “தனி நபர் முன்வரைவை” அறிமுகப்படுத்தலாம். அவ்வாறு அறிமுகப்படுத்த மக்களவை சபாநாயகருக்கோ அல்லது மாநிலங்களவை தலைவருக்கோ ஒரு மாதம் முன்பே தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு தனிநபர் முன்வரைவை சமர்ப்பிக்கும் நாள் குறிக்கப்பட்டு நாடாளுமன்ற அவையில் அது அறிமுகப்படுத்தப்படும். பொதுவாக வரைவு நிலையிலுள்ள முன்வரைவுகளின் மீது விவாதம் எதுவும் நிகழ்த்தப்படுவதில்லை ஏனென்றால் அது ஒரு அலுவல் சார்ந்த நடவடிக்கையாகும்.
  2. முன்வரைவு சமர்ப்பிக்கப்பட்ட பிறகு இந்திய அரசிதழில் பிரசுரிக்கப்படும். சபாநாயகர் அல்லது அவைத்தலைவர் முதல் வாசிப்புக்கு முன்னரே சில முன்வரைவுகளை அரசிதழில் வெளியிட அனுமதிக்கலாம். அப்போது அந்த முன்வரைவை சமர்ப்பிப்பதற்கு எந்த தீர்மானமும் தேவையில்லை.
  3. முன்வரைவின் முதல் வாசிப்பு நடைபெற்ற இரண்டு நாள் கால இடைவேளைக்கு பிறகு இரண்டாவது வாசிப்பு நடைபெறும். அந்த நிலையில் கீழ்க்கண்ட நான்கு நடைமுறைகளில் ஏதாவது ஒன்று பின்பற்றப்படும்.
  • அந்த முன்வரைவு மன்றத்தின் பரிசீலனைக்காக உடனடியாக எடுத்துக்கொள்ளப்படலாம்.
  • அது நாடாளுமன்ற தேர்வுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படலாம்.
  • அது ஈரவைகளும் இணைந்த தேர்வுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படலாம் அல்லது
  • பொதுமக்கள் கருத்துகளை அறிந்து கொள்ளுவதற்காக சுற்றுக்கு விடப்படலாம். முன்வரைவுகளை பரிசீலனைக்கு நேரடியாக எடுத்துக்கொள்ளுவது மிக அரிதாகவே நிகழும்.
  • முன்வரைவு சுற்றுக்கு விடப்பட்டால் (4- வது வழிமுறைப்படி) அவையின் சம்பந்தப்பட்ட செயலர் உள்ளாட்சி அமைப்புக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளும் வகையில் மாநில அரசிதழ்களில் வெளியிடச்சொல்லி மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்ளுவார். அவ்வாறு பெறப்பட்ட கருத்துக்கள் உறுப்பினர்களிடையே சுற்றுக்கு விடப்படும்.

குழுநிலை

  • முன்வரைவு தேர்வுக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டால், அவையின் சபாநாயகர் அல்லது அவைத்தலைவர் அந்தக் குழுவின் ஒரு உறுப்பினரையும் மற்றும் தலைவரையும் நியமிப்பார். அக்குழு அந்த முன்வரைவை பரிசீலித்து அவைக்கு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்.

அறிக்கை நிலை

  • அறிக்கை நிலை என்பது மிக முக்கியமான ஒரு நிலையாகும். அதில்தான், அந்த முன்வரைவின் உட்கூறுகள் ஒவ்வொன்றும் விவாதத்துக்கு உட்படுத்தப்படும்.
  • இந்த நிலையில் அந்த அறிக்கை அசல் முன்வரைவு மற்றும் தேர்வுக்கமிட்டி அறிக்கையுடன் இணைத்து சுற்றுக்கு விடப்படும்.
  • அறிக்கைநிலை என்பது அந்த முன்வரைவுக்கு இறுதி வடிவம் கொடுப்பது. பிறகு அந்த முன்வரைவு மூன்றாவது வாசிப்புக்கு சமர்ப்பிக்கப்படும். முன்வரைவு பெரும்பான்மை வாக்குகள் பெற்றும் நிறைவேற்றப்படும். மூன்றாவது வாசிப்பு என்பது நாடாளுமன்றத்தின் முறையான ஒப்புதல் பெறுவதற்கானதாகும்.
  • மூன்றாவது வாசிப்புக்குப் பிறகு ஏதாவது ஒரு அவையில் அந்த முன்வரைவு ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, அடுத்த அவைக்கு அது மாற்றப்பட்டு அங்கு மேற்கண்ட அனைத்து நிலைகளையும் கடந்து செல்லும்.
  • அடுத்து அவை அந்த முன்வரைவை அப்படியே மாற்றமின்றி ஏற்றுக்கொள்ளலாம். அனைத்து நிலைகளையும் கடந்த நிலையில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அது அனுப்பி வைக்கப்படும்.
  • அந்த முன்வரைவு முதலில் சமர்ப்பிக்கப்பட்டு அவையில் நிறைவேற்றப்பட்ட பிறகும் அடுத்த அவையில் அது நிராகரிக்கப்படலாம். மாறாக முதல் அவையினால் ஏற்றுக்கொள்ளப்படாத மாற்றங்களை அறிமுகம் செய்யலாம் அல்லது ஆறு மாத காலத்திற்கு திருப்பி அனுப்பாமல் நிறுத்தி வைத்துக்கொள்ளலாம்.
  • அம்மாதிரியான சந்தர்ப்பங்களில் ஈரவைகளுக்குமிடையே அரசியல் சாசனம் முடக்கப்படலாம். அப்போது சபாநாயகர் அல்லது அவர் இல்லாத காலங்களில் துணை சபாநாயகர் ஈரவைகளின் கூட்டு கூட்டங்களுக்கு தலைமை ஏற்று நடத்துவார். இந்த முடக்கம் பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்படும்.
  • முன்வரைவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தால் அது சட்டமாக்கப்பட்டுவிடும். ஆனால் குடியரசுத்தலைவர் அதை மறு பரிசீலனைக்காக திருப்பி அனுப்பி வைக்கலாம்.
  • அந்த முன்வரைவு மாற்றம் செய்யப்படாமல் அல்லது மாற்றம் செய்யப்பட்டு திரும்பவும் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்படுமேயானால் குடியரசுத்தலைவர் அவரது ஒப்புதலை அளித்தே ஆக வேண்டும்.
  • இவ்வாறான சிக்கல் நிறைந்த காலம் அதிகம் பிடிக்கும் வழிமுறைகள், அவசர நிலையிலும் குறைபாடுகளுடனும், சட்டம் இயற்றப்படுவதை தடுக்கும் நோக்கத்தோடு பின்பற்றப்படுகிறது.

தனிநபட் சட்டமுன்வரைவு

  • அமைச்சர் அல்லாத உறுப்பினர்கள் தாக்கல் செய்யும் சட்ட முன்வரைவு தனிநபர் முன்வரைவு என்று அழைக்கப்படுகிறது.
  • நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர் கட்சிகளைச் சேர்ந்த எவரும் தனிநபர் சட்ட முன்வரைவு கொண்டு வரலாம். தனிநபர் சட்ட முன்வரைவு என்பது அமைச்சரவையிலோ நிர்வாகத்திலோ உறுப்பினராக இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் முன்மொழியப்படுவது ஆகும்.
  • தனிநபர் சட்ட முன்வரைவு மீதான விவாதம் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் வெள்ளிக் கிழமைகளில் பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை நடைபெறும்.
  • இந்த சட்ட முன்வரைவு கொண்டு வர ஒரு மாதத்திற்கு முன்பாகவே முன்அறிவிப்பு தர வேண்டும். தனிநபர் முன்வரைவுகள் நிராகரிக்கப்பட்டாலும் அது ஆட்சியல் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
  • இதுவரை நாடாளுமன்றத்தில் 14 தனிநபர் சட்ட முன்வரைவு மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. கடைசியாக, தனிநபர் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1970. இவ்வாறு கொண்டு வரப்படும் தனிநபர் முன்வரைகளில் பெரும்பாலானவை வாசிக்கப்படுவதோ, விவாதிக்கப்படுவதோ, நிராகரிக்கப்படுவதோ கூட கிடையாது.
  • அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் கோரும் முன்வரைவுகள் கூட தனிநபர் முன்வரைவுகளாக ஏற்கப்படலாம். ஆனால் நிதி முன்வரைவுகளை தனிநபர் சட்ட முன்வரைவாக கொண்டு வர முடியாது.

மூன்றாம் பாலின நபர்கள் உரிமைகள் சட்ட முன்வரைவு 2014

மூன்றாம் பாலின நபர்கள் உரிமைகள் சட்ட முன்வரைவு திருச்சி சிவா அவர்களால் கொண்டுவரப்பட்ட தனிநபர் சட்ட முன்வரைவு ஆகும். இந்தியாவில் மூன்றாம் பாலின மக்கள் சந்தித்து வரும் புறக்கணிப்புகளுக்கு முடிவுகட்ட இம்முன்வரைவு கோருகிறது.

சட்டமன்றத்தின் அமைப்பு, அதிகாரம் மற்றும் செயல்பாடுகள்

  • இந்திய அரசமைப்பின் ஏழாவது அட்டவணையில், மத்திய மற்றும் மாநிலங்களின் சட்டரீதியான அதிகாரங்களும் செயல்பாடுகளும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. இதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டம் இயற்றுவதற்காக அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரங்கள் மூன்றாக வகுக்கப்பட்டுள்ளன.
  1. ஒன்றியப் பட்டியல்
  2. மாநிலப் பட்டியல்
  3. பொதுப் பட்டியல்
  • ஒன்றியப் பட்டியலில் அடங்கியுள்ள துறைகள் மீது சட்டங்களை இயற்றுவதற்கும், நடைமுறையில் உள்ள சட்டங்களை மாற்றுவதற்கும் பிரத்யோகமான அதிகாரம் நாடாளுமன்றத்திடமே உள்ளது.
  • மாநிலப் பட்டியலில் குறிப்பிட்டுள்ள துறைகள் மீது பிரத்யோகமான அதிகாரம் மாநிலச் சட்டமன்றத்திடம் உள்ளது. பொதுப்பட்டியலில் குறிப்பிட்டுள்ள துறைகள் மீது மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டம் இயற்றலாம்.
  • மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் இடையே முரண்பாடுகளின்போது மத்திய அரசின் அதிகாரமே மேலோங்கும். இந்த பட்டியலில் குறிப்பிடப்படாத எஞ்சியுள்ள அதிகாரங்கள் மத்திய அரசிடமே உள்ளது.
சாதாரண சட்டமுன்வரைவு மற்றும் நிதி சட்ட முன்வரைவுகளுக்கிடையேயான வேறுபாடுகள்
வ. எண் சாதாரண சட்டமுன்வரைவு நிதிசட்ட முன்வரைவு
1 இது மக்களவை அல்லது மாநிலங்களவை எதில் வேண்டுமானாலும் கொண்டு வரப்படலாம். இது மக்களவையில் மட்டுமே கொண்டுவரப்பட முடியும்.
2 இது அமைச்சர் அல்லது எந்த ஒரு உறுப்பினராலும் அறிமுகப்படுத்தப்படலாம். அமைச்சர் மட்டுமே இம்முன்வரைவை அறிமுகப்படுத்த முடியும்.
3 குடியரசுத்தலைவரின் பரிந்துரையில்லாமலே இது அறிமுகப்படுத்தப்படலாம். குடியரசுத்தலைவரின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே இது அறிமுகப்படுத்தலாம்.
4 இதை மாநிலங்களவை திருத்தவோ நிராகரிக்கவோ முடியும். இதை மாநிலங்களவை திருத்தவோ நிராகரிக்கவோ முடியாது. மாநிலங்களவை, அதன் பரிந்துரையுடனோ அல்லது பரிந்துரையில்லாமலோ மக்களவைக்கு இம்முன்வரைவை திருப்பி அனுப்ப வேண்டும். அதை மக்களவை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.
5 எந்த முடிவும் எடுக்காமல் ஆறுமாத காலத்திற்கு மாநிலங்களவை இம்முன்வரைவை நிறுத்தி வைக்க முடியும். இம்முன்வரைவை 14 நாட்கள் வரை மட்டுமே மாநிலங்களவையில் வைத்திருக்க முடியும்.
6 இம்முன்வரைவு மக்களவையிலிருந்து வந்திருந்தாலும், அதற்கு மக்களவை சபாநாயகரின் சான்றளிப்பு தேவையில்லை. மாநிலங்களவைக்கு இம்முன்வரைவு செல்லும்போது மக்களவை சபாநாயகரின் சான்றளிப்பு அவசியம்.
7 ஈரவைகளும் ஏற்றுக் கொண்ட பிறகே இது குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். இம்முன்வரைவை நிறைவேற்றுவதில், ஈரவைகளின் கருத்து வேறுபாட்டால் முடக்கம் ஏற்பட்டால், ஈரவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு குடியரசுத்தலைவர் அழைப்பு விடுப்பார். மக்களவையில் மட்டுமே நிறைவேற்றினாலும் கூட இம்முன்வரைவு குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ஈரவைகளுக்கிடையே கருத்து வேறுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லாததால் முடக்கம் ஏற்படாது, கூட்டுக் கூட்டத்திற்கும் வழிவகையில்லை.
8 மக்களவையில் இம்முன்வரைவு தோல்வி அடைந்தால், அரசாங்கம் பதவி விலக நேரிடும். (முன்வரைவு ஓர் அமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால் மட்டுமே) மக்களவையில் இம்முன்வரைவு தோல்வி அடைந்தால் அரசாங்கம் பதவி விலக வேண்டும்.
9 குடியரசுத்தலைவர் இம்முன்வரைவை நிராகரிக்கம், மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பி அனுப்ப முடியும். இதற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம். ஆனால் மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பி அனுப்ப முடியாது.
அதிகாரத்தின் வகைகள்
மத்திய பட்டியல் மாநில பட்டியல் பொதுப் பட்டியல்
1 பாதுகாப்பு 1 விவசாயம் 1 கல்வி
2 அணு சக்தி 2 காவல் துறை 2 விவசாய நிலங்களை தவிர சொத்து பரிமாற்றம்
3 வெளிநாட்டு (அயல்நாட்டு) விவகாரங்கள் 3 சிறைச்சாலை 3 வனத்துறை
4 போர் மற்றும் அமைதி உடன்படிக்கை 4 உள்ளாட்சி அரசாங்கம் 4 தொழிற்சங்கங்கள்
5 வங்கி சேவை 5 பொதுச் சுகாதாரம் 5 கலப்படம்
6 ரயில்வே 6 நிலம் 6 தத்தெடுப்பு மற்றும் வாரிசு தொடர்ச்சி
7 அஞ்சல் மற்றும் தந்தி 7 மது
8 வான் வழிகள் 8 வர்த்தகம் மற்றும் வணிகம்
9 துறைமுகங்கள் 9 கால்நடை மற்றும் கால்நடை வளர்ப்பு
10 வெளிநாட்டு வர்த்தகம் 10 மாநிலப் பொதுப்பணிகள்
11 பணம் மற்றும் நாணயம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்பான சலுகைகளும் ஊதியமும் வழங்கப்படுகிறது. ஆனால் அவர்களின் செயல்திறன் குறைவாகவே உள்ளது : குடிமக்கள் அறிக்கை

  • மக்களவையில் 2010 – 12 ஆம் ஆண்டுகளில் 227 கூட்டத்தொடர்கள் 852 மணித்துளிகள் அலுவல் பணிகள் நடந்துள்ளது. அதாவது, ஒரு நாளுக்கு நான்கு மணி நேரத்துக்கும் குறைவாக.
  • 2013 இல் ஆளுகை மற்றும் வளர்ச்சி பற்றிய அறிக்கையை தேசிய சமூக கண்காணிப்பும் எனும் அமைப்பு வெளியிட்டது. அதில் உலகில் அதிக ஊதியம் மற்றும் சலுகைகள் பெறக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியல் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும் உண்டு. ஆனால் நாடாளுமன்றத்தில் அவர்களது பணி பின்தங்கியே உள்ளது என்கிறது.
  • சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் சலுகைகளைவிட அதிகமாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது. இது பக்கத்து நாடான பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவதைவிட நான்கரை மடங்கு அதிகமாகும். இது நம் நாட்டின் தனிநபர் வருமானத்தை போல் 68 மடங்கு உள்ளது.

திருத்தச்சட்டங்களுக்கான நடைமுறைகள் மற்றும் வழிமுறைகள்

இந்திய அரசமைப்பு, மாறும் காலச்சூழல் மற்றும் தேவைகளுக்கு பொருத்தமான வகையில் இருக்கும்படியும், அதேசமயம் அடிப்படை கட்டமைப்பு மாறாவண்ணம் இருக்குமாறும் ஒரு தனித்துவமான அமைப்பை கொண்டுள்ளது. உறுப்பு 368, அரசமைப்புச் திருத்தச்சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவதைப் பற்றி குறிப்பிடுகிறது. அந்த திருத்தச்சட்டத்தில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாடாளுமன்றத்திற்கு உச்சபட்ச அதிகாரம் இருக்கிறது. அரசமைப்பு திருத்தச்சட்டத்தை மேற்கொள்ளும் நடைமுறைகள் பின்வருமாறு:

  1. அரசமைப்பிலுள்ள சில விதிகளில் திருத்தங்களை செய்ய, சிலவற்றை சேர்க்க, மாற்றியமைக்க அல்லது நீக்க, நாடாளுமன்றம் இந்த பிரிவில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளின்படி செயல்படலாம்.
  2. அரசமைப்பில் ஏற்படுத்தப்படும் திருத்தம், நாடாளுமன்றத்தின் ஈரவைகளிலும் ஒரு முன்வரைவாக சமர்ப்பிக்கப்பட்டு, தனித்தனியாக ஒவ்வொரு அவையிலும், மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கு மேல் ஆதரவும், வாக்கு செலுத்தியவர்களின் எண்ணிக்கை, மூன்றில் இரண்டு பங்குக்கு குறையாத பெரும்பான்மை ஆதரவைப்பெற்று நிறைவேற்றப்பட்டால், அது பின்னர் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.
  3. அந்த முன்வரைவு ஒவ்வொரு அவையிலும் ஒரு சிறப்பு பெரும்பான்மை பெற்று நிறைவேற்றப்பட வேண்டும். அதாவது அந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான பெரும்பான்மை எண்ணிக்கை கொண்டிருக்க வேண்டும். மற்றும் வருகை தந்து வாக்களிக்கும் உறுப்பினர்களின எண்ணிக்கயில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும். ஒவ்வொரு அவையும் தனித்தனியாக அந்த முன்வரைவை நிறைவேற்ற வேண்டும். ஒருவேளை திருத்த நடவடிக்கைகள் காரணமாக ஈரவைகளுக்கிடையே கருத்து வேறுபாடு தோன்றுமென்றால் ஈரவைகளையும் இணைந்து நடத்துவதற்கான வழிமுறைகள் எதுவுமில்லை. ஒருவேளை முன்வரைவில் அரசமைப்பின் கூட்டாட்சி வகைமுறைகள் குறித்து ஏதேனும் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருந்தால், மொத்த மாநிலங்களின் எண்ணிக்கையில், பாதி மாநிலங்களின் தனிப்பெரும்பான்மை ஏற்படுத்தி அதாவது அத்தகைய சட்டமன்றங்களில் வருகை தந்து வாக்களிக்கும் உறுப்பினர்களின் பெரும்பான்மை தேவை.
  4. நாடாளுமன்றத்தின் ஈரவைகளிலும் முறையாக நிறைவேற்றப்பட்டு மற்றும் தேவைப்பட்ட இடங்களில் அந்தந்த மாநிலச் சட்டமன்றங்களால் உறுதிசெய்யப்பட்ட பிறகு அந்த முன்வரைவு ஒப்புதலுக்காக குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த முன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது அல்லது மறு பரிசீலனை செய்யுமாறு நாடாளுமன்றத்துக்கு திருப்பி அனுப்புவது போன்றவற்றை குடியரசுத்தலைவரால் செய்ய இயலாது. குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பிறகு அது சட்டமாகிறது. (அதாவது ஒரு அரசமைப்பு திருத்தச்சட்டம்) அரசமைப்பு விதிமுறைகளின் அடிப்படையில் அந்த சட்டம் திருத்தமடைகிறது.

திருத்தச்சட்டங்களின் வகைகள்

அரசமைப்பு திருத்தச்சட்டங்களை மூன்று வழிகளில் மேற்கொள்ளலாம்:

  1. நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை
  2. நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை , மற்றும்
  3. நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை மற்றும் சரி பாதி மாநிலச் சட்டமன்றங்களால் ஏற்புறுதி செய்யப்படுவது.
  4. நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை

உறுப்பு 368-ன்படி அரசமைப்பின் பெரும் எண்ணிக்கையிலான சட்ட விதிகள் நாடாளுமன்றத்தின் ஈரவைகளில் தனிப்பெரும்பான்மை மூலம் திருத்தி அமைக்கப்படலாம். விதிமுறைகள், பின்வருவனவற்றில் உள்ளடக்கம்:

  • புதிய மாநிலங்களை அனுமதிப்பது மற்றும் உறுவாக்குவது. மேலும் தற்போது இருக்கும் மாநிலங்களின் எல்லைகளை மாற்றி அமைப்பது, அவற்றின் பெயர்களின் மாற்றங்கள் செய்வது.
  • மாநிலங்களில் மேலவையை உருவாக்குவது அல்லது நீக்குவது.
  • குடியரசுத்தலைவர், மாநில ஆளுநர், சபாநாயகர், நீதிபதிகள் போன்றோருக்கு அரசமைப்பு இரண்டாம் அட்டவணையில் குறிக்கப்பட்டிருக்கும் ஊதியம், படிகள், சிறப்புச் சலுகைகளை நிர்ணயிப்பது.
  • நாடாளுமன்றத்தில் அமர்விற்கு குறைந்தபட்ச உறுப்பினர் எண்ணிக்கையை முடிவு செய்வது.
  • நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம் மற்றும் படிகள் நிர்ணயிப்பது.
  • நாடாளுமன்ற நடைமுறை விதிகளை உருவாக்குதல்.
  • நாடாளுமன்றம், நாடாளுமன்றக் குழுக்கள் மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆகியோரின் சிறப்பு உரிமைகள்.
  • நாடாளுமன்றத்தில் ஆங்கில மொழி பயன்பாடு.
  • உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை முடிவு செய்தல்.
  • உச்ச நீதிமன்றத்திற்கு மேலும் அதிக அதிகாரம் வழங்குதல்.
  • அலுவல் ஆட்சி மொழியை பயன்படுத்துதல்.
  • குடியுரிமை அளித்தல் மற்றும் ரத்து செய்தல்.
  • நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்கள்.
  • தொகுதிகளின் எல்லைகளை வரையறுத்தல்.
  • ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதி.
  • ஐந்தாம் அட்டவணை –பட்டியலின மற்றும் பழங்குடி இன பகுதிகளை நிர்வகித்தல்.
  • ஆறாம் அட்டவணை – பழங்குடி இன பகுதிகளை நிர்வகித்தல்.

நாடாளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மை மூலமாக

  • அரசமைப்பின் பெரும்பாலான சட்ட விதிகள் நாடாளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மை மூலம் திருத்தி அமைக்கப்பட வேண்டும். அதாவது ஒவ்வொரு அவையின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மை (அதாவது 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக) மற்றும் ஒவ்வொரு அவையிலும் வருகை தந்து வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைந்தபட்சமாக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை. அவையின் மொத்த உறுப்பினர்கள் என்று குறிப்பிடுவது அவையில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கையாகும்.
  • முன்வரைவின் மூன்றாவது வாசிப்பின் போது இந்த சிறப்பு பெரும்பான்மை தேவைப்படும்.
  1. அடிப்படை உரிமைகள்
  2. அரசுக்கொள்கைகளை வழி நடத்தும் நெறிமுறைகள் மற்றும்
  3. முதல் மற்றும் மூன்றாவது பிரிவுகளில் குறிப்பிடப்படாத மற்ற விதிமுறைகள். இவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளும்போது மேற்கண்ட வைழ்முறை பின்பற்றப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மை மூலம் திருத்தம் செய்தலும் மற்றும் மாநிலங்களின் ஒப்புதலும்

  • குடியுரிமையின் கூட்டாட்சி அமைப்புடன் தொடர்புடைய அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு நாடாளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மை மற்றும் 50% மாநிலச் சட்டமன்றங்களின் தனிப்பெரும்பான்மை ஒப்புதலுடன் திருத்தியமைக்கப்படலாம்.
  • மாநிலங்கள் முன்வரைவுக்கு தனது ஒப்புதலை அளிக்க எந்த விதமான கால வரையறைவும் கிடையாது. இந்த வகையில் கீழ்க்கண்ட விதிமுறைகள் திருத்தி அமைக்கப்படலாம்.
  • குடியரசுத்தலைவரைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் அதன் முறைகள்.
  • மத்திய மற்றும் மாநிலங்களின் நிர்வாக அதிகாரத்தின் விரிவாக்கம்.
  • உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதி மன்றங்கள்.
  • மத்திய மற்றும் மாநிலங்களிக்கிடையில் சட்டம் இயற்றும் அதிகாரத்தை பகிர்ந்தளித்தல்.
  • ஏழாவது அட்டவணையில் அடங்கியுள்ள எந்த ஒரு பட்டியலும்.
  • நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம்.
  • அரசமைப்பு மற்றும் அதன் நடைமுறைகளை திருத்தியமைக்கும் நாடாளுமன்றத்தின் அதிகாரம். (உறுப்பு – 368)

மாநிலச் சட்டமன்றம் : கட்டமைப்பு, அதிகாரம் மற்றும் செயல்பாடுகள்

மாநிலச் சட்டமன்ற கட்டமைப்பு

  • அரசமைப்பின் கூட்டாட்சி கட்டமைப்பில் மாநிலங்கள் இரண்டாவது அடுக்கில் இருக்கிறது. ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலங்களுக்கு தனி அரசமைப்பு இருப்பதால் அவற்றைத் தவிர மற்ற மாநிலங்களை ஆட்சி செய்யும் விதிமுறைகள் அரசமைப்பு VI பிரிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
  • 152-லிருந்து 237 வரையிலான மாநிலச் சட்டமன்றங்கள் குறித்து முழுமையாக விளக்குகிறது. மாநிலச் சட்டமன்றத்தில் மக்கள் மன்றமாக சட்டசபை மட்டுமே அமையப்பெற்றிருந்தால் அது சட்டபேரவை என்று அழைக்கப்படும்.
  • பெரும்பாலான அதிகாரங்களும் மற்றும் செயல்பாடுகளும் கிட்டத்தட்ட ஒன்றியச் சட்டமன்ற அமைப்பைப் போன்றதே. சட்டமன்றம் மாநிலச் சட்டசபை மற்றும் சட்ட மேலவை இரண்டையும் கொண்டிருக்கும்.

ஆளுநர்

  • மாநில நிர்வாகத்தின் அரசமைப்புத் தலைவராக ஆளுநர் இருப்பார். மற்றும் மாநிலத்தின் செயல் அதிகாரம் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும்.
  • மாநிலத்தில் அனைத்து செயல்திட்ட நடவடிக்கைகளும் ஆளுநரின் பெயராலேயே நடைபெற வேண்டும். மாநிலத்தின் ஆளுநர் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுவார்.
  • ஆளுநர் ஐந்தாண்டு காலம் பதவியிலமர்த்தப்படுவார். அல்லது குடியரசுத்தலைவர் விரும்பும் காலம் வரை பதவியிலிருப்பார்; அல்லது வேறொருவர் பதவியில் அமர்த்தப்படும்வரை பதவியில் இருப்பார்.
  • ஆளுநராக பதவியில் அமர்த்தப்படுவதற்கான தகுதி அவர்/அவள் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். இலாபம் ஈட்டும் பதவி எதுவும் வகிக்கக் கூடாது. மேலும் 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
  • ஆளுநர் ஒரு முறைக்கு மேல் பதவியிலமர்த்தப்படலாம். அவசர தேவைக்காக (உடனடி) அல்லது ஒரு மாற்று ஏற்பாடாக ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக பதவியில் இருக்கலாம்.

ஆளுநரின் அதிகாரங்களும் பணிகளும்

  • ஒரு மாநில ஆளுநர் குடியரசுத்தலைவரைப் போலவே ஆட்சித்துறை, சட்டமன்றம், நீதித்துறை மற்றும் அவசரகால அதிகாரங்களைக் கொண்டிருப்பார்.
  • ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தில் அமைச்சரவை நியமனம், மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர், மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் நியமனம், மாநிலத்தின் சட்டமன்றத்துக்கு ஆங்கிலோ –இந்திய இனத்திலிருந்து உறுப்பினர்களை நியமிப்பது போன்றவைகளும் அடங்கும்.
  • இலக்கியம், அறிவியல், கலை கூட்டுறவு இயக்கம் ஆகியவற்றில் சிறப்பு அறிவு படைத்தவர்களை மேலவை உறுப்பினர்களாக காலியாக இருக்கும் இடங்களில் நியமிக்கும் அதிகாரம் பெற்றவர்.
  • மேலும் ஆளுநர் மக்களவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் 1/6 பங்கு உறுப்பினர்களை நியமிக்கமுடியும். ஆளுநர் “தன் விருப்புரிமைக்கு” ஏற்ப சிறப்பு அரசமைப்புக் கடமைகளை நிறைவேற்றும் அதிகாரம் கொண்டவர்.
  • அவ்வப்போது குடியரசுத்தலைவர் வழிகாட்டுதலின் அடிப்படையில் அவரது சிறப்பு கடமைகளை அதிகார பூர்வமாக நிறைவேற்றலாம். சில எதிர்பாராத சந்தர்ப்பங்களில் ஆளுநர் அமைச்சரவை ஆலோசனைகள் இன்றி செயல்படலாம்.
  • மேலும் ஆளுநர் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளிடையே பாலமாக செயல்படுகிறார். மாநிலத்தின் நிகழ்வுகளை ஆளுநர் உடனுக்குடன் குடியரசுத்தலைவருக்கு தெரிவிப்பார்.
  • ஆளுநர் மாநிலச் சட்டமன்றத்தின் ஒரு அங்கமாவார். ஆளுநரின் சட்ட அதிகாரம் சட்டமன்றத்தில் உரையாற்றுதல், மற்றும் செய்திகள் அனுப்புதல், சட்டமன்றத்தை கூட்டுதல், கூட்டத்தொடரை ஒத்துவைத்தல் மற்றும் மாநிலச் சட்டமன்றத்தைக் கலைத்தல் ஆகியவையாகும்.
  • எந்த ஒரு முன்வரைவும் சட்டமாக இயற்றப்படுவதற்கு ஆளுநரின் ஒப்புதல் தேவை. ஆளுநரின் மறுப்புரிமை அதிகாரங்கள் பின்வருமாறு:
  1. அவர் ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைக்கலாம் அப்போது அது சட்டமாவது தவிர்க்கப்படும்.
  2. முன்வரைவைத் தவிர்த்து எந்த ஒரு முன்வரைவையும் மறு பரிசீலனைக்காக மாநிலச் சட்டமன்றத்துக்கு திருப்பி அனுப்பலாம். இதில் அவர்/அவள் மறுப்புரிமை அதிகாரத்தை இரண்டாவதுமுறை பயன்படுத்த முடியாது. மாநிலச் சட்டமன்றம் திருத்தியோ அல்லது திருத்தாமலோ மீண்டும் அந்த முன்வரைவை நிறைவேற்றி திரும்ப அனுப்பும் பட்சத்தில் அதற்கு ஒப்புதல் அளிப்பதைத்தவிர அவருக்கு வேறு வழியில்லை.
  3. ஆளுநர், தேவை என்று கருதினால் ஒரு முன்வரைவை குடியரசுத்தலைவரின் கருத்துக்காக நிறுத்திவைக்கலாம்.
  • ஆளுநரின் நீதித்துறை அதிகாரம் என்பது மாநிலத்தி செயலதிகாரத்துக்கு உட்பட்ட எந்த ஒரு குற்றத்துக்காகவும் எந்த ஒரு சட்டத்தின் தொடர்பாகவும் தண்டிக்கப்பட்ட ஒரு நபருக்கு மன்னிப்பளிப்பது, தண்டனையை நிறுத்தி வைப்பது, தாமதப்படுத்துவது, தண்டனையைக் குறைப்பது போன்றவையாகும்.
  • இருப்பினும், ஆளுநருக்கு மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகளை பணியமர்த்தும் அதிகாரம் கிடையாது. ஆனால் இந்த விவகாரத்தில் குடியரசுத்தலைவர் அவரிடம் ஆலோசிக்க வேண்டிய உரிமையைக் கொண்டவர்.
  • உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை பணியில் அமர்த்தும் அதிகாரம் இந்தியக் குடியரசுத்தலைவர் அதிகாரத்தின் கீழ் வருகிறது.
  • குடியரசுத்தலைவருக்கு இருப்பதைப் போன்ற அவசரகால அதிகாரங்கள் ஆளுநருக்கு கிடையாது. ஆனால் அரசியல் சாசன சீர்குலைவு அல்லது மாநிலத்தில் ஏதாவது நெருக்கடி நேரும்போது குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்த ஆலோசனை வழங்கி ஆளுநர் குடியரசுத்தலைவருக்கு அறிக்கை அனுப்பலாம்.
  • அவ்வாறான சூழ்நிலைகளில் ஆளுநர் குடியரசுத்தலைவரின் முகவராக செயல்படுகிறார். அப்போது 356-உறுப்பின்படி மாநில அரசுப் பணிகளை அவர் மேற்கொள்ள முடியும்.

முதலமைச்சர் தலைமையில் அமைந்த அமைச்சரவைக் குழு

முதலமைச்சரின் நிலை

  • அமைச்சர்கள் குழு மற்றும் அமைச்சரவையின் தலைவராக முதலமைச்சர் உள்ளார். நடைமுறையில், அவர் மாநிலத்தின் உண்மையான நிர்வாகத் தலைவராக இருக்கிறார்.
  • அவர் சட்டசபையின் தலைவராகவும் இருக்கிறார். இந்திய அரசமைப்பின் 164 (1) உறுப்பின்படி மாநிலத்தின் முதல்வர் நியமிக்கப்பட வேண்டும்.

முதலமைச்சரின் அதிகாரங்களும் பணிகளும்

மாநிலத்தின் உண்மையான நிர்வாகத் தலைவராக, முதலமைச்சர் பெருமளவில் அதிகாரங்களைப் பெறுகிறார் மற்றும் பல பொறுப்புகளை நிறைவேற்றுகிறார். முதலமைச்சரின் பணிகள் பின்வருமாறு:

  1. அமைச்சர்கள் குழுவின் தலைவர் என்கிற முறையில், முதலமைச்சர். அதிக அதிகாரம் கொண்டவர். அமைச்சரவையின் பிற அமைச்சர்களை நியமனம் செய்வதற்கு ஆளுநருக்கு பரிந்துரை வழங்குகிறார். மேலும் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய அவருக்கு உரிமை உள்ளது.
  2. அமைச்சரவை கூட்டங்களுக்கு அவர் தலைமை தாங்குகிறார், மேலும் அரசாங்கத்தின் முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கிறார்.
  3. அவர் அமைச்சர்கள் மற்றும் ஆளுநருக்கு இடையேயான ஒரே ஒரு இணைப்பாகச் செயல்படுகீரார். நிர்வாகம் மற்றும் சட்டங்கள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அமைச்சரவையின் அனைத்து முடிவுகளையும் ஆளுநரிடம் தெரிவிக்கிறார்.
  4. சட்டமன்றத்தில் கொண்டு வரவேண்டிய அனைத்து ஆவணங்கள், முன்வரைவுகள், தீர்மானங்கள் போன்றவற்றையும் அவர் பரிசீலனை செய்கிறார்.
  5. அனைத்து முக்கிய நியமனங்களையும் ஆளுநரே செய்வதாக எழுத்தில் இருந்தாலும், நடைமுறையில் அத்தகைய நியமனங்கள் அனைத்துமே முதலமைச்சரின் ஆலோசனையின்படியே செய்யப்படுகின்றன.

மாநில அமைச்சர்கள் குழு

அறிமுகம்

  • ஆளுநருக்கு உதவியாக ஆலோசனை வழங்க முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்கள் குழு நியமிக்கப்படுவதைப்பற்றி அரசமைப்பின் 163 (1) –வது உறுப்பு குறிப்பிடுகிறது. ஆனால் அரசமைப்பு விதிகளிபடி, நெருக்கடிச் சூழலில் ஆளுநர் நேரடியாக ஆட்சியை மேற்கொள்ள இயலும்.
  • மத்திய அமைச்சர்கள் குழுவை போன்றே மாநில அமைச்சரவைக் குழுவும் அமைக்கப்படுகிறது. சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம் கொண்ட கட்சியின் தலைவரோ அல்லது கூட்டணி கட்சிகளின் தலைவரோ முதலமைச்சராக ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்.
  • அமைச்சரவைக் குழுவில் உள்ள அனைத்து அமைச்சர்களும் முதலமைச்சரின் அறிவுரையின்படி ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர்.

மாநில அமைச்சரவையின் பதவிக்காலம்

அரசமைப்பின்படி ஆளுநரின் விருப்பம் உள்ளவரை அமைச்சர்கள் பதவியில் தொடரலாம். ஆனால் நடைமுறையில் முதலமைச்சரின் விருப்பமுள்ளவரை அமைச்சர்கள் பதவியில் தொடர்வர். ஏனெனில் முதலமைச்சரின் பரிந்துரைப்படியே ஆளுநர் அமைச்சர்களை நியமிக்கவும், பதவி நீக்கம் செய்யவும் செய்கிறார். எனவே அமைச்சர்கள் தனித்தனியாகவும் கூட்டாகவும் முதலமைச்சருக்குப் பொறுப்பானவர்கள் ஆவர்.

மாநிலச் சட்டமன்றத்தின் குழுக்கள் மற்றும் அதிகாரிகளும்

மாநிலச் சட்டமன்றத்தின் சபாநாயகர்

  • சட்டமன்ற உறுப்பினர்களால் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். சட்டமன்றத்தை தலைமை தாங்கி நடத்துகிறார். சட்டமன்ற நடவடிக்கைகளை ஒழுங்காகவும், கண்ணியத்தை கடைபிடித்து நடக்கவும் மற்றும் அதன் நடவடிக்கைகளின் பொது உறுப்பினர்களை கேள்வி கேட்கவும் அனுமதிக்கிறார்.
  • முக்கியமான விஷயங்களில் மற்றும் நிதிநிலை அறிக்கை மற்றும் நிதி ஒதுக்கீடு சமயங்களில் பேச அனுமதிப்பது போன்ற கடமைகளையும் அதிகாரங்களையும் பெற்றவராவார்.
  • அரசியல் சாசனத்திலுள்ள விதிகள், சட்டமன்ற நடைமுறை விதிகள், பேரவைக்குள் சட்டமண்ர நடவடிக்கைகளின் முன்மாதிரிகள் ஆகியவற்றின் பொருள் விளக்குவது சபாநாயகர்தான்.
  • சட்டமன்ற நடவடிக்கைகளின் போது விதிகள் நடைமுறைகள் மற்றும் ஒழுங்கு முறைகள் மீறப்படுமேயானால் சட்டமன்றச் கூட்டத்தொடரை ஒத்திவைக்கவும், தற்காலிகமாக நிறுத்திவைக்கவும் மற்றும் மீண்டும் தொடரச் செய்யவும் மற்றும் கூட்டுத்தொடரில் பங்குபெறாமல் உறுப்பினர்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் சபாநாயருக்கு அதிகாரம் உண்டு.
  • சட்டமன்றம் நடைபெறும்பொழுது சபாநாயகர் பொதுவாக நடுநிலை மற்றும் பாரபட்சமின்மையை மேற்கொள்ளுவார். ஒரு முன்வரைவு, மற்றும் தீர்மானத்தின் மீது முடிவெடுக்க முடியாமல் வாக்கு சமநிலையிலிருந்தால் சபாநாயகரின் வாக்கு மிக முக்கியத்துவம் பெறுகிறது.
  • உறுப்பினர்களின் நடத்தையை ஒழுங்குபடுத்துவதில் மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகள் குறித்து அல்லது சட்டமன்றத்தில் ஒழுங்கை பராமரிப்பது ஆகியவற்றில் சபாநாயகரின் முடிவே இறுதியானது.
  • அம்மாதிரி விஷயங்களில் சபாநாயகரின் நடவடிக்கைகளில் நீதிமன்றம் குறுக்கிடமுடியாது. அனைத்து குழுக்களின் தலைவர்களையும் சபாநாயகர்தான் நியமிக்கிறார் மற்றும் அவர்களின் செயல்பாடுகளையும் மேற்பார்வையிடுகிறார்.

துணை சபாநாயகர்

  • சட்டமன்ர உறுப்பினர்கள், தங்களில் ஒருவரை துணை சபாநாயகராக தேர்ந்தெடுப்பார்கள். சபாநாயகர் அவையில் இல்லாத பொழுது, துணை சபாநாயகர், சபாநாயகரின் கடமைகளையும் பொறுப்புகளையும் செயல்படுத்துவார், அவைக்குத் தலைமை தாங்குவார்.
  • துணை சபாநாயகருக்கு, சபாநாயகருக்கு சமமான அதிகாரங்கள் அவைக்குள் உண்டு. சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் இருவரும் அவையில் இல்லாதபொழுது, அவையில் உள்ள மூத்த உறுப்பினர் யார் வேண்டுமானாலும் அவைக்குத் தலைமை தாங்கலாம்.

நாடாளுமன்றக் குழுக்கள்

  • நாடாளுமன்றக் குழுக்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். நிலைக் குழுக்கள் மற்றும் தற்காலிகக் குழுக்கள். நிலைக் குழுக்கள், நிரந்தரமானவையாகும், தொடர்ந்து பணியில் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் புதிதாக உருவாக்கப்படும். ஆனால் தற்காலிக குழுக்கள் நிரந்தமானவை அல்ல. ஒரு குறிப்பிட்ட பணிக்காக உருவாக்கப்படும். அப்பணி நிறைவடைந்தவுடன் அவை கலைக்கப்படும்.

நிலைக் குழுக்கள்

நிலைக் குழுக்கள் அவற்றின் தன்மைக்கேற்ப ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

  1. நிதிக் குழுக்கள்

அ) பொதுக் கணக்குக் குழு

ஆ) மதிப்பிட்டுக் குழு

இ) பொதுத்துறை நிறுவனக் குழு

  1. துறைசார் நிலைக்குழுக்கள்
  2. விசாரணைக் குழுக்கள்

அ) மனுக்கள் குழு

ஆ) சிறப்புரிமைக் குழு

இ) நன்னெறிக் குழு

  1. கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் குழுக்கள்

அ) அரசாங்க உத்திரவாதங்களுக்கான குழு

ஆ) துணைச் சட்டங்களுக்கான குழு

இ) அட்டவணையில் எழுதப்பட்ட ஆவணங்களின் குழு

ஈ) பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் நலனுக்கான குழு

உ) பெண்களுக்கு அதிகாரம் அளித்தலுக்கான குழு

ஊ) ஆதாயம் தரும் பதவிகளுக்கான இணைக் குழு

  1. அவையின் தினசரி அலுவல்களுக்கான குழுக்கள்

அ) அலுவல் ஆலோசனைக் குழு

ஆ) தனிநபர் முன்வரைவு மற்றும் தீர்மானங்களுக்கான குழு

இ) விதிகள் குழு

ஈ) சட்டமன்றக் கூட்டத்தொடரில் வராத உறுப்பினர்கள் குழு

  1. சேவை குழு (உறுப்பினர்களுக்கு வசதிகள் மற்றும் சேவைகள் தொடர்பான குழு)

அ) பொது தேவைகள் குழு

ஆ) அவை குழுக்கள்

இ) நூலகக் குழு

ஈ) உறுப்பினர்களுக்கான ஊதியம் மற்றும் மற்ற படிகளுக்கான இணைக் குழு

தற்காலிகக் குழுக்கள்

தற்காலிகக் குழுக்கள் இரண்டு வகைப்படும். அவை , விசாரணைக்குழு மற்றும் ஆலோசனைக்குழு.

மதிப்பீட்டுக் குழு:

  • பரிசோதகருக்கும் மதிப்பீட்டாளருக்கும் அறிவுறுத்துவது மற்றும் பொருளாதாரம் சார்ந்த கொள்கைகள், மாற்றுக் கொள்கைகள், நிர்வாக சீர்திருத்தங்கள், மதிப்பீடு ஆய்விலுள்ள வெவ்வேறு திட்டத்திற்காக மாநிலத்திற்கு உள்ளும் வெளியிலும் பயணம் மேற்கொள்வது போன்ற விசயங்களில் பரிந்துரை அளிப்பது ஆகியவை இக்குழுவின் முக்கிய பொறுப்புகளாகும்.

பொதுக் கணக்குக் குழு:

மாநிலத்தின் ஒதுக்கீட்டுக் கணக்குகளையும் இந்திய அரசுக் கணக்குத் தணிக்கைத் தலைவரின் (குடிசார்) அறிக்கையையும் ஆய்வு செய்வதே குழுவின் முக்கியப் பணி. மேலும் வருவாய் பற்றுச்சீட்டுகளும், பணப்பட்டுவாடாவும் எந்த சேவைக்காக அல்லது பயன்பாட்டிற்காக கணக்கு ஏற்படுத்தப்பட்டதோ அந்த கணக்கு தொடர்புடையதாக பற்றுரிமை உள்ளதா என்றும் சரிபார்ப்பதே இந்த குழுவின் வேலை.

பொதுத்துறை நிறுவனங்களின் குழு:

  • தணிக்கை அறிக்கை கணக்குகளையும் பொதுத்துறை நிறுவனக் கணக்குகளையும் அவ்வப்போது ஆய்வு செய்வதற்காக இந்தக் குழு உள்ளது.
  • மேலும் பொதுத்துறை நிறுவனங்களின் தன்னாட்சியையும் பயன்திறனையும் இந்தக் குழு ஆய்வுசெய்கிறது.
  • மேலும் நல்ல வியாபாரக் கொள்கைகளையும் மதுநுட்ப வணிக நடைமுறைகளையும் பின்பற்றி பொதுத்துறை நிறுவனங்களின் அலுவல்கள் நடைபெறுகிறதா என்று கருத்தில் கொள்கிறது.
  • மேலும் பொதுத்துறை நிறுவனங்கள் குறித்த இந்திய அரசுக் கணக்குத் தணிக்கைத் தலைவரின் அறிக்கைகளை இந்தக் குழு ஆய்வு செய்கிறது. மேலும் நிறுவனங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் விசாரித்து நிறுவனங்களின் சம்பந்தப்பட்ட ஆதாரத்தைப் பெற்று இந்தக் குழு அவைக்கு பரிந்துரைகளை அளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!