Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Samacheer NotesTnpsc

சுற்றுச்சூழல் அக்கறைகளும் உலகமயமாக்கலும் Notes 12th Political Science Lesson 12 Notes in Tamil

12th Political Science Lesson 12 Notes in Tamil

12. சுற்றுச்சூழல் அக்கறைகளும் உலகமயமாக்கலும்

இயற்கை மூல வளங்களை பராமரிப்பதில் தவறினால் எதுவும் சரியான வழியில் செல்லாது.

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு

  • ஒரு உலகளாவிய தேவையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது தொழில் மயமாக்குதலுக்குப் பிந்தைய அம்சமாகும். காடுகள் அழிப்பு, தொழிற்சாலை மாசு, பசுமைக்குடி வாயு கசிவுகள், ஓசோன் அடலத்தின் துளை, புவி வெப்பமாதல் மற்றும் கடல் மட்டம் தொடர்ந்து உயருதல் போன்றவை முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சனைகளாகவும் இவை உடனடியான தலையீடுகளைக் கோருவனவாகவும் இல்லாவிடுல் மிக மோசமான எதிர் விளைவுகளை உண்டாக்க கூடியதாகவும் உள்ளன.
  • ஐக்கிய நாடுகள் பொது அவை 1982இல் “இயற்கைக்கான உலக சாசனம்” என்ற பிரகடனத்தை வெளியிட்டது. அதில் ஒட்டுமொத்த மனித குலமும் இயற்கையின் அங்கம் எனவும், இயற்கையைச் சார்ந்தே வாழ்க்கை அமைகிறது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
  • வளம் குன்றா வளர்ச்சி என்ற கருத்துருவின் அடிப்படையிலேயே சுற்றுச்சூழல் அமைப்பு குறித்த தற்கால விவாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. இவை சுற்றுச்சூழல் மாசுவைத் தடுக்க உயிர் பன்மையத்தை பராமரித்தல், சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுதக் ஆகியவற்றிற்குப் பெரும் முக்கியத்துவம் அளிக்கின்றன.
  • உலக அளவில் உலக சுற்றுச்சூழல் ஆளுகையின் அரண் காப்பாளராக ஐக்கிய நாடுகள் அவை செயல்படுகிறது. அதன் அங்கங்கள் மற்றும் பல்வேறு சிறப்பு முகமைகள் மூலமாக செயல்படுத்துகிறது.

கார்பன் வாயுவை வெளியிடும் முதல் பத்து நாடுகள்

  • சீனா
  • அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள்
  • ஐரோப்பிய ஒன்றியம்
  • இந்தியா
  • ரஷ்யா
  • ஜப்பான்
  • ஜெர்மனி
  • ஈரான்
  • சவுதி அரேபியா
  • தென் கொரியா

நிறுவனப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினை உருவாக்குதல்

  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பராமரித்தலுக்கான விவாதத் தலைப்புகள் என்பது மனித வாழ்க்கைக்கும், சுற்றுச்சூழல் அமைப்பிற்கும் நிலவும் குழப்பமான உறவு நிலைகளிலிருந்து எழுகிறது.
  • இயற்கை தன்னளவில் ஒரு வாழ்க்கை ஆதார அமைப்பு என்ற அளவில் சுற்றுச்சூழல், அமைதி, மோதல், மனித உரிமைகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் தாக்கங்களை நிகழ்த்துகிறது.
  • உயர் வாழ்வை நிலைத்திருக்க செய்வதில் இயற்கை நிகழ்த்தும் பங்களிப்பிற்கு மாற்று கிடையாது. இதனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நிறுவனப்படுத்தப்பட்ட அணுகுமுறை என்பது மிகவும் அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இதற்கான ஒரே வாய்ப்பாக சுற்றுச்சூழல் சட்டம் உருவானது.
  • சூற்றுச்சூழல் சமநிலைக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை இச்சட்டம் செயல்படுத்தும். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பில் உலகளாவிய ஆர்வம் உருவாகியதால் சட்ட வரையறைகளும் நிறுவனப்படுத்தப்பட்ட செயல்பாடுகளும் இருபதாம் நூற்றாண்டின் உருவாக்கமாக இருந்தது.
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நிறுவனப்படுத்தப்பட்ட அணுகுமுறை எனும் சிந்தனை விதை 1872ஆம் ஆண்டு முதலே விதைக்கப்பட்டது. ஆர்வம் கொண்ட சில தனி நபர்களால் அரசு-சாரா பேரவை ஒன்று இதன் நோக்கில் அப்போது அமைக்கப்பட்டது. இதுதான் பின்னர் பெர்ன் நகரில் ஆலோசனை ஆணையமாக விரிவடைந்து, உலகளாவிய இயற்கைப் பாதுகாப்புப் பிரச்சனைகளை அணுகியது.
  • இருந்தபோதும் முதல் உலகப் போரால் இந்த அமைப்பு முடக்கப்பட்டது. ஆனால், இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் நாடுகளுக்கிடையேயான முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பாக புத்துருவாக்கம் பெற்றும் தமக்கான சட்ட அங்கீகாரங்களுடன் செயல்பட்டது.
  • சுவிஸ் லீக் என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இயற்கை பாதுகாப்பிற்கான ஃபுரூனன் மாநாடு 1947ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் இயற்கை பாதுகாப்பிற்கான பன்னாட்டு ஒன்றியம் என்ற புதிய அமைப்பிற்கான அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • அதில் சுற்றுச்சூழல் செயல்பாடுகளுக்கான விவகாரங்களுக்கான கூடுதலான நிறுவனப்படுத்தப்பட்ட பரிமாணங்கள் உருவாக்கப்பட்டன. ஐக்கிய நாடுகளைப் பொறுத்தவரை பொருளாதாரம் மற்றும் சமுதாயத்திற்கான குழு (ECOSOC) என்ற ஒரு அமைப்பு மட்டுமே சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் நேரடி தொடர்பு கொண்டுள்ளது. அத்துடன் ஐக்கிய நாடுகள் வரம்புக்குள் உருவாக்கப்பட்டுள்ள தனித்தன்மை கொண்ட எட்டு அமைப்புகள் சுற்றுச்சூழல் அக்கறைகளில் நேரடியாக ஈடுபடுகின்றன.
  • ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு (UNESCO) 1945ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதுடன் போருக்குப் பிந்தைய காலகட்டம் சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் உலகநாடுகள் மத்தியில் ஒருமித்த கருத்து உருவாக்குவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
  • இந்த வளர்ச்சிப் போக்கை தொடர்ந்து 1948ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இயற்கைப் பராமரிப்பிற்கான பன்னாட்டு ஒன்றியம் (IUCL) என்ற அமைப்பு ஒரு முக்கியத் திருப்பமாகும். இந்த அமைப்பு உலகளாவிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஒரு மேலான நிலைக்கு எடுத்துச் சென்றது.
  • அதன் பின்னர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பன்னாட்டு சட்டங்களை உருவாக்கும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டன. சுற்றுச்சூழல் சட்டம் என்பது அதன் கொள்கைப் பரிணாமங்களை பொறுத்தவரை உடன்படிக்கைகள் , ஒப்பந்தங்கள் சிரப்பு மாநாடுகள், பிரகடனங்கள், கொள்கைகள், தீர்ப்பாயர்களின் கருத்துகள், சுற்றுச்சூழல் உரிமைகள், நடவடிக்கைகள் மீதான நாடுகளுக்கிடையேயான பரஸ்பர அங்கீகாரங்கள் ஆகியவற்றின் தொகுப்பாகும்.
  • சுற்றுச்சூழல் சட்டத்தின் வெற்றி என்பது ஒரு குறிப்பிட்ட கொள்கை வரம்பிற்குள் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்த பன்னாட்டு அரசுகளுக்கிடையே ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைவிற்கான ஒரு செயல் திட்டம் உருவாவதைச் சார்ந்துள்ளது.

பன்னோக்கு சுற்றுச்சூழல் மாநாடுகள்

  • சுற்றுச்சூழல் செயல் தந்திரம் என்ற அம்சம் 1970-களிலிருந்து பன்னாட்டு வாதத்தின் முக்கிய துணை அங்கமாக மாறி வருகிறது. உலக நாடுகள் இடையிலான மட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான எண்ணற்ற முயற்சிகள் முறைசார்ந்தும், முறைசாராமலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
  • இத்திசை வழியில் சுற்றுச்சூழல் அக்கறைகளை முன்னெடுத்துச் சென்று ஒருங்கிணைக்கும் முக்கிய கருவியாக ஐக்கிய நாடுகள் செயல்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக தொடர்ச்சியான மாநாடுகள் அவை:

ராம்சர் சிறப்பு மாநாடு – 1971

  • ராம்சர் சிறப்பு மாநாடு என்பது சதுப்பு நிலங்களுக்கான மாநாடு ஆகும். “உள்ளூர் மற்றும் தேசிய செயல்கள் மூலம் அனைத்து சதுப்பு நிலங்களையும் சமயோசிதமாக/ அறிவுபூர்வமாக பயன்படுத்துதல், மற்றும் பாதுகாத்தல், உலகம் முழுவதும் வளம் குன்றா வளர்ச்சியை எட்டுவதற்காக நாடுகளிடையேயான ஒத்துழைப்பு ஆகிய நோக்கங்களை எட்டுவதற்காக நாடுகளிடையேயான ஒத்துழைப்பு ஆகிய நோக்க்களை எட்டுவதற்கான ஒரு பன்னாட்டு உடன்படிக்கை மேற்கொள்ள அழைப்பு விடுத்தது”.
  • 1971ஆம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரைவு 1975ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இந்த சிறப்பு மாநாட்டிற்கான நிதியை யுனஸ்கோ வழங்கியது. சுவிட்சர்லாந்தில் உள்ள கிலாண்ட் நகரில் இயற்கை பராமரிப்பிற்கான பன்னாட்டு ஒன்றிய தலைமையக வளாகத்திற்குள் ராம்சர் சிறப்பு மாநாட்டு செயல் அலுவலகம் இயங்குகிறது.
  • 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் நாளன்று நடைபெற்ற ராம்சர் சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் ராம்சர் செயல் திட்டத்தின் நான்கு அம்சங்களை 2016-2024 காலகட்டத்திற்குள் செயல்படுத்த ஒப்புக்கொண்டனர்.
  • ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2ஆம் நாளன்று உலக சதுப்பு நில நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
  • மான்டிராக்ஸ் (Montreux) ஆவணம் என்பது “பன்னாட்டு முக்கியத்துவம் கொண்ட சதுப்பு நிலங்களில் தொழில்நுட்ப மேம்பாடுகள், மாசுபடுதல், இதர மனித தலையீடுகள் காரணமாக பாதிப்பு ஏற்படும் சதுப்பு நிலங்களை அடையாளம் கண்டு பதிவு செய்யப்படும் பட்டியலின் பதிவேடு ஆகும்”. இது ராம்சர் உடன்படிக்கையின் ஒரு அங்கமாகப் பராமரிக்கப்படுகிறது.
  • சிறப்பு மாநாட்டின் மூன்று முக்கிய அம்சங்களின் கீழ் எதிர்நிலை தரப்புகள் கீழ்க்கண்டவற்றுள் ஒத்துழைப்பு நல்க உறுதி ஏற்றுள்ளன.
  1. தமது அனைத்து சதுப்பு நிலங்களையும் அறுவுப்பூர்வமாக பயன்படுத்துதல்.
  2. ராம்சர் பட்டியலின் கீழ் சேர்க்க தகுதி கொண்ட பன்னாட்டு முக்கியத்துவம் கொண்ட சதுப்பு நிலங்களை அடையாளம் கண்டு பிரகடனப்படுத்தி அவற்றின் திறன் மேலாண்மையை உறுதிப்படுத்துதல்.
  3. நாடுகளுக்கு இடையேயான சதுப்பு நிலங்கள், பகிரப்படும் சதுப்பு நில அமைப்புகள் மற்றும் ஜீவராசிகளின் பகிர்தல் ஆகியவற்றில் பன்னாட்டு ஒத்துழைப்பு நல்குதல்.

உலக தொன்மைச் சின்னங்கள்

(வேர்ல்டு ஹெரிடேஜ்) சிறப்பு மாநாடு – 1972

  • உலகின் இயற்கையாக அமைந்த தொன்மைச் சின்னங்களை அடையாளம் கண்டு பாதுகாக்கும் நோக்கில் உலக தொன்மைச் சின்னங்கள் மாநாடு 1972இல் நடைபெற்றது.
  • இயற்கை மற்றும் பண்பாட்டுத் தொன்மைச் சின்னங்களை அடையாளம் கண்டு யுனஸ்கோ தொன்மைச் சின்ன மையத்தின் ஆதரவின் கீழ் உலக தொன்மைச் சின்னங்கள் இக்குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இதற்கான செயல் அலுவலகம் பாரிஸ் நகரத்தில் அமைந்துள்ளது.
  • இக்குழுவிற்கு உதவிட மூன்று தொழில்நுட்ப ஆலோசனைக் குழுக்கள் –ஐ.யு.சி.என் (IUCN), ஐ.சி.ஒ.எம்.ஒ.எஸ் (ICOMOS) மற்றும் ஐ.சி.சி.ஆர்.ஒ.எம் (ICCROM) அமைக்கப்பட்டுள்ளன.

மானுட சுற்றுச்சூழலுக்கான ஐ.நா மாநாடு

  • ஸ்டாக்ஹோல்ம் மாநாடு என்று அழைக்கப்படும் மானுட சுற்றுச்சூழலுக்கான ஐ.நா மாநாடு சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கான நடைபெற்ற முதல் முக்கிய பல்நோக்கு மாநாடு ஆகும். 1972ஆம் ஆண்டு ஜூன் 5 முதல் 16 வரை ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோல்ம் நகரின் நடைபெற்றது. 114 அரசுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
  • உலக நாடுகளின் ஒத்துழைப்புகளின் அடிப்படையில் ஒரு உலகளாவிய சுற்றுச்சூழல் ஆளுகை மண்டலம் அமைப்பதற்கான அடித்தளத்தை உருவாக்குவதற்கான உரையாடல் இதில் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் சுற்றுச்சூழல் அரசியலுக்கான ஒரு புதிய தொடக்கம் உருவானது.
  • இவ்வாறாக, இம்மாநாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒரு மைல் கல்லாகக் கருதப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் நிகழ்ச்சி நிரல் (UNUP) என்ற செயல்திட்ட முன் முயற்சியும் இம்மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது.

அழிந்துவரும் அரிய வனங்கள் நீர்வாழ் மற்றும் நில உயிரினங்கள் பன்னாட்டு வர்த்தக சிறப்பு மாநாடு – 1973

  • இயற்கை பராமரிப்பிற்கான பன்னாட்டு ஒன்றியம் (IUCN) 1973அன்று நிறைவேற்றிய தீர்மானத்தின் விளைவாக அழிந்துவரும் அரிய உயிரினங்களான வனங்கள், நீர்வாழ் மற்றும் நில உயிரினங்கள், பன்னாட்டு வர்த்தகம் குறித்த சிறப்பு மாநாடு வாஷிங்டனில் நடைபெற்றது. அதில் அழிந்து வரும் அரிய உயிரினங்கள் மற்றும் அவற்றில் இருந்து எடுக்கப்படும் தயாரிப்புகள் ஆகியவற்றின் மீதான பன்னாட்டு வர்த்தகத்தை தடுக்குமாறும் மற்றும் கட்டுப்படுத்துமாறும் உலக நாடுகளிடம் வலியுறுத்தப்பட்டன.
  • இது அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க நேரடியான நடவடிக்கை இல்லை எனினும் வணிக நலன்களுக்கான அழிந்து வரும் அரிய உயிரினங்கள் வேட்டையாடப்படுவது மற்றும் அவைகளின் வாழ்விடங்கள் சூறையாடப்படுவது ஆகியனவற்ரைக் குறைக்கும் நோக்கம் கொண்டுள்ளது. பயனர்கள் தேவையைக் குறைப்பதன் மூலம் சட்ட விரோத சந்தைகளை அகற்றும்படி இம்மாநாடு வேண்டுகோள் விடுத்தது. வாஷிங்டன் சிறப்பு மாநாட்டு தீர்மானம் 1975-இல் நடைமுறைக்கு வந்தது.

வலசை செல்லும் உயிரினங்கள் சிறப்பு மாநாடு – 1979

  • வலசை செல்லும் உயிரினங்கள் சிறப்பு மாநாடு அல்லது பான் சிறப்பு மாநாடு என்று அழைக்கப்படும் வலசை செல்லும் வனவிலங்குகள் பாதுகாப்பு சிறப்பு மாநாடு (1979) நிறைவேற்றிய தீர்மானம் 1983 முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இடம் விட்டு இடம் செல்லும் நில, நீர், ஆகாய உயிரினங்கள் பாதுகாக்கப்பட்ட வேண்டுமென்று வலியுறுத்தும் இம்மாநாடு வலசை செல்லும் உயிரினங்களை பாதுகாக்க கடுமையான நிபந்தனைகளை முன்மொழிந்தது.
  • வலசை செல்லும் உயிரினங்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த கூட்டு ஆராய்ச்சிகளுடன் கூடிய பன்நோக்கு உடன்படிக்கைகள் இதன் ஒருங்கிணைந்த சட்டபூர்வ அம்சமாகும். இந்த தீர்மானத்தின் இணைப்பு பட்டியல் 1இல் வலசை செல்லும் பறவைகளில் உடனடியான பன்னாட்டு ஒத்துழைப்பு தேவைப்படும் அழிந்துவரும் அரிய உயிரினங்கள் வகைப்படுத்தப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளது. இணைப்பு பட்டியல் 2இல் சிறப்பு அக்கறை கோரும் உயிரினங்களின் பட்டியல் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

ஓசோன் படலம் பாதுகாப்பு வியன்னா சிறப்பு மாநாடு – 1985

  • ஓசோன் படலம் பாதுகாப்பிற்கான வியன்னா சிறப்பு மாநாடு என்பது ஒரு பன்நோக்கு சுற்றுச்சூழல் உடன்படிக்கையாகும். புவியின் ஓசோன் படலம் பாதுகாப்பு குறித்த உலகளாவிய ஒத்துழைப்பை இம்மாநாடு தொடங்கி வைத்தது. இத்தீர்மானம் 1985மார்ச் 22ஆம் நாளன்று ஏற்கப்பட்டது.
  • இதைத் தொடர்ந்து ஓசோன் படலத்தை அரிக்கும் பொருட்கள் குறித்த மாண்ட்ரியல் ஒப்பந்தம் 1987 செப்டம்பர் 16ஆம் நாளன்று நிறைவேற்றப்பட்டு 1989இல் அமுலுக்கு வந்தது. இந்த பன்னாட்டு ஒப்பந்தம் ஓசோன் படலத்தை அரிக்கும் பொருட்களை அகற்றும் நடவடிக்கைகளை கண்காணிக்கிறது.
  • கென்யாவில் உள்ள நைரோபியில் அமைந்துள்ள இதன் தலைமைச்செயலகம் வியன்னா சிறப்பு மாநாடு மற்றும் மாண்ட்ரியல் ஒப்பந்தம் இவ்விரண்டுக்குமான செயலகமாக இயங்குகிறது.

சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கான உலக ஆணையம் – 1987

  • சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கான உலக ஆணையத்தின் முதல் தலைவராக பணியாற்றிய குரே ஹார்லெம் புருண்டிட் லேண்ட். அவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வளம் குன்றா வளர்ச்சி ஆகியனவற்றிக்கான செயல் திட்டங்களை வகுத்து தந்தமையால் புருண்டிட் லேண்ட் ஆணையம் என்று அழைக்கப்படுகிறது.
  • “நமது பொதுவான எதிர்காலம்” என்னும் தலைப்பிலான அதன் இறுதி அறிக்கை 1987இல் பதிப்பிக்கப்பட்டது. அது சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது பொருளாதார வளர்ச்சி மற்றும் ஆற்றல் உற்பத்தி போன்ற இதர அம்சங்களோடும் பிணைக்கப்பட்டுள்ளதை அழுத்திக் கூறியது.
  • இதன் மூலம் இந்த ஆவணமே பன்னாட்டுச் சுற்றுச் சூழல் சட்டமான இன்று வரை பின்பற்றப்படுகிறது. இந்த முன்னெடுப்பின் மூலமாகவே வளம் குன்றா வளர்ச்சி எனும் கருத்தியல் முதல் முறையாக அலுவல் பூர்வமாக வரையறை செய்யப்பட்டது.

கேடு விளைவிக்கும் கழிவுகளின் எல்லை கடந்த நடமாட்டம் குறித்த பாஸெல் சிறப்பு மாநாடு – 1989

  • 1992இல் அமுலுக்கு வந்த பாஸெல் சிறப்பு மாநட்டுத் தீர்மானம் வளர்ந்த நாடுகள் கடைபிடித்த ‘எனது கொல்லைபுறத்தில் இல்லை’ (Not in my backyard – NIMBY) அறிகுறிக்கான எதிர்வினையாகும்.
  • 1980-களில் உற்பத்தி பெருக்கத்தின் காரணமாக ஆபத்து விளைவிக்கும் ரசாயனக் கழிவுகளைத் தமது நாடுகளில் சேமிப்பதை கைவிட்டு அதை ஒரு சந்தையாக்கி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறைந்த ஏழை நாடுகளில் (LDC) கொட்டும் போக்கு அதிகரித்தது. இதனை எதிர்க்கும் மக்களின் போராட்டம் அதிகரித்ததின் காரணமாக இப்பிரச்சனை கவனத்தில் கொள்ளப்பட்டது. குறிப்பாக இது ஒரு லாபம் தரும் தொழிலாக மாறியதால் வளர்ந்த நாடுகளில் உற்பத்தியாகும் கேடு விளைவிக்கும் கழிவுப்பொருட்களைக் கொள்முதல் செய்வதில் ஏழை நாடுகளிடையே போட்டி ஏற்பட்டது. இதனால் வளர்ந்த நாடுகளில் இதற்கான செலவுகள் குறைந்தன. இதுவே ‘எனது கொல்லைப்புறத்தில் இல்லை’ அறிகுறியாகும். இத்தகைய கழிவுகள் உருவாக்கத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் வளர்ந்த நாடுகளில் இருந்து ஏழை நாடுகளுக்கு இத்தகைய கழிவுகளைக் கொண்டு செல்வதைச் சட்ட பூர்வமாகத் தடுப்பது ஆகிய நடவடிக்கைகளை பாஸெல் சிறப்பு மாநாடு வலியுறுத்துகிறது.

சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான ஐ.நா மாநாடு – 1992

  • புவி உச்சி மாநாடு என்று சிறப்பாக அழைக்கப்படும் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான ஐ.நா மாநாடு ரியோ-டி-ஜெனிரோ நகரில் 1992-ஆம் ஆண்டு ஜூன் 3 முதல் 14 வரை நடைபெற்றது.
  • பன்னாட்டு மாநாடுகள் வரலாற்றில் இந்த உச்சி மாநாடுதான் மிகப்பெரிய பன்னாட்டு மாநாடு என்று புகழ்ப்படுகிறது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அதிகரித்தலுக்கான தேவை, மாற்று ஆற்றல் வளங்கள் மற்றும் போக்குவரத்து அமைப்புகள் முதல் உற்பத்தி வரையறைகள் வரையிலான பல முக்கியவரையறைகள் வரையிலான பல முக்கிய பிரச்சனைகளில் இம்மாநாடு கவனம் செலுத்தியது. இந்த இரு வார உச்சி மாநாட்டின் விளைவுகளாக நிரல் 21, சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த ரியோ பிரகடனம், வனக்கொள்கை வழிகாட்டு ஆவணம், காலநிலை மாற்றத்திற்கான ஐ.நா வரையறை அமைப்பு சிறப்பு மாநாடு ஆகிய முக்கிய மாநாடுகளும் ஆவணங்களும் உருவாக்கப்பட்டன.
  • ரியோ உச்சி மாநாட்டின் விளைவாக வளம் குன்றா வளர்ச்சி ஆணையம், வளம் குன்றா வளர்ச்சிக்கான ஊடாட்ட – முகமை குழு, வளம் குன்றா வளர்ச்சிக்கான உயர்நிலை ஆலோசனை வாரியம் போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இந்த மாநாடு ‘உலகின் நாடாளுமன்றம்’ என்று சிறப்பிக்கப்படுகின்றது.

பாலைவனமாதலை தடுப்பதற்கான ஐ.நா சிறப்பு மாநாடு – 1994

  • நீடித்த நிலவள மேலாண்மை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல், வளர்ச்சி ஆகிய இரண்டையும் இணைக்கும் வகையிலான ஒரே சட்டப்பூர்வ பன்னாட்டு நடவடிக்கையாக பாலைவனமாதலைத் தடுப்பதற்கான ஐ.நா. சிறப்பு மாநாடு 1994இல் நடைபெற்றது.
  • இது வறண்ட நிலங்கள் என்று அறியப்படும் நீர் பிடிப்பற்ற உலர் நிலங்கள், சேற்று நிலங்கள் , அரைகுறை சேற்று நிலங்கள் போன்ற எளிதில் பாதிப்புக்குள்ளாகும் உயிர் மண்டலங்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி இந்த மாநாடு கவனம் செலுத்தியது. இதற்காக 2018 – 2030 செயல் திட்ட சட்டகம் உருவாக்கப்பட்டு இம்மாநாட்டில் ஏற்கப்பட்டது. இதில் ‘நிலம் மாசுபடுதல் சமநிலை’ பற்றிய (LDN) வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டன. மண் வளத்தை மீட்டுருவாக்கம் செய்து அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளாக இந்த வழிகாட்டுதல்கள் அமைந்துள்ளன.
  • ஜெர்மனி பான் நகரில் 1992இல் இதன் செயலகம் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. 2001 முதல் இந்த அமைப்பின் உச்ச கொள்கை முடிவு எடுப்பாளர்களான தரப்புகளின் மாநாடு இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறுகிறது. இதுவரை 13 மாநாடுகள் நடைபெற்றுள்ளது. அங்காரா மற்றும் சாங்வாங் முன்னெடுப்புகள் அண்மைகால நடவடிக்கைகளாகும்.

சுற்றுச்சூழலுக்கான ஐ.நா. பொது அவை சிறப்பு அமர்வு – 1997

  • புவி உச்ச மாநாடு பிரகடனம் நிரல் 21 செயல் திட்டம் எவ்வாறு அமலாக்கப்படுகிறது என்பதையும் அதன் முன்னேற்றத்தையும் சீராய்வு செய்வதற்கான சிறப்பு அமர்வு ஒன்றினை 1997 ஜூன் 23 -27 ஆகிய தேதிகளில் ஐ.நா பொது அவை ஏற்பாடு செய்தது. இந்த சிறப்பு அமர்வில் நிரல் 21 செயல் திட்டத்தை உலக நாடுகள் எவ்வாறு பின்பற்றி வந்துள்ளது என்பதை மதிப்பீடு செய்ததுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பினை மேலும் தீவிரப்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை தீவிரப்படுத்தப்படுகிறது. இந்த சிறப்பு அமர்வு “புவி உச்சி மாநாடு +5” என்று அழைக்கப்படுகிறது.
  • “நிரல் 21 அமலாக்க முன்னெடுப்புகளுக்கான உறுதிமொழியுடன் கூடிய செயல் திட்டம்” ஒன்றினை இந்த உச்சி மாநாடு நிறைவேற்றியது.

கியோட்டோ ஒப்பந்தம் – 1997

  • கியோட்டோ பரஸ்பர ஒப்பந்தம் 1997 டிசம்பர் 11 அன்று ஏற்கப்பட்டது இது UNFCCC (1992) வரம்புகளை விரிவுபடுத்தும் பன்னாட்டு சுற்றுச்சூழல் உடன்படிக்கையாகும். இதன் மூலம் கையெழுத்திட்ட உறுப்பு நாடுகள் பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்தை குறிப்பிட்ட அளவிற்கு குறைப்பதாக சட்டப்பூர்வ கடமைப்பாட்டினை உறுப்பு நாடுகள் ஏற்கச் செய்யப்பட்டது. இது 2005 பிப்ரவரி 16 முதல் அமலாக்கப்பட்டது.
  • பசுமைக்குடில் வாயுக்கள் கட்டுப்படுத்துதல் குறித்த வளர்ந்த நாடுகள் பொறுப்புணர்வு குறித்து இந்த உடன்படிக்கையில் திட்டவட்டமாக வலியுறுத்திக் கூறப்பட்டது. அதிக பசுமைக்குடில் வாயுக்கள் வளர்ந்த நாடுகலே வெளியிடுகின்றன என்ற அடிப்படையில் “பொதுவான ஆனால் வேறுபாட்டுடன் பொறுப்புணர்வுகள்” என்ற கொள்கையின் கீழ் வளர்ந்த நாடுகள் பொறுப்பாளிகளாக்கப்பட்டன. இது முதல் உறுதிமொழி எனப்படுகிறது.
  • 2007இல் மெராக்கோ, மர்ரகேஷ் எனும் நகரில் நடைபெற்ற COP 7 ஒரு விரிவான செயல் திட்டத்தினை உருவாக்கியது. இது மர்ரகேஷ் ஆவணங்கள் என்று அழைக்கப்படுகிறது. 2012இல் கத்தார் தலைநகர் தோகாவில் டிசம்பர் 8 இல் நடைபெற்ற உச்சி மாநாட்டில் ஒப்பந்தம் விரிவுபடுத்தப்பட்டது.
  • தோகா திருத்தம் 2ஆம் உறுதிமொழி எனப்படுகிறது. இதன்படி இணைப்பட்டியல் 1இல் இடம்பெற்ற நாடுகள் 2013 ஜனவரி 1 முதல் 2020 டிசம்பர் 31 வரை 2-வது உறுதிமொழியை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் ஒப்பந்தத்தின் பல்வேறு விதிகளிலும் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
  • இதன்படி, பட்டியல் இடப்பட்ட நாடுகள் படுமைக்குடில் வாயுக்கள் வெளியேற்றம் கட்டுப்படுத்துதல் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். முதல் உறுதிமொழியின்படி பசுமைக் குடில் வாயுக்கள் வெளியேற்றம் 1990-களில் இருந்த அளவை விட ஐந்து விழுக்காடு குறைக்கப்பட வேண்டும். ஆனால் இரண்டாம் உறுதிமொழி படி குறைக்கப்பட்ட அளவை விட மேலும் எட்டு விழுக்காடு குறைக்கப்பட வேண்டும்.
  • இதையொட்டி இந்த இலக்குகளை எட்டும் வகையில் மூன்று சந்தை அடிப்படையிலான செயல் அமைப்புகள் அடையாளம் காணப்பட்டன. அவை பன்னாட்டு மாசு வெளியேறுதல் வணிகம், தூய வளர்ச்சி செயல் அமைப்பு, கூட்டு அமலாக்கம் ஆகிய இம்மூன்று அமைப்புகளும் பசுமை மூதலீட்டிற்கு ஆதரவு வழங்கி மாசு வெளியேறுதல் இலக்குகளை அடைவதற்கான சிக்கனமான வழிவகைகளை வழங்குகின்றன.

வளம் குன்றா வளர்ச்சி குறித்த உலக உச்சி மாநாடு – 2002

  • ஐ.நா ஆதரவுடன் நடைபெற்ற வளம் குன்றா வளர்ச்சி குறித்த உலக உச்சி மாநாடு தென்ஆப்பிரிக்கா தலைநகர் ஜோகன்னஸ்பெர்க் நகரில் 2002 ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 6 வரை நடைபெற்றது.
  • சுற்றுச்சூழல் மண்டலத்தைப் பாதிக்கும் புதிய சவால்கள் மற்றும் அக்கறைகளை பட்டியலிடுவதில் இம்மாநாடு தொடர் கவனம் செலுத்தியதால் இம்மாநாடு புவி உச்சிமாநாடு என்றழைக்கப்படுகிறது. புதிய வடிவத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த சுற்றுச்சூழியல் வாரம் புத்தாயிரம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதற்கான நீடித்த வளர்ச்சியுடன் கூடிய ஒரு வழித் திட்டத்தை வழங்கியது.
  • இந்த உச்சிமாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஆவணமான வளம் குன்றா வளர்ச்சி குறித்த ஜோகன்னஸ்பெர்க் பிரகடனம் கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட பன்னோக்கு முன் முயற்சிகளின் அடிப்படைகளுக்கு மறு அழுத்தம் வழங்கியது.
  • நிரல் 21 உள்ளிட்ட ஏராளமான உடன்படிக்கைகளின் மீது உறுப்பு நாடுகள் கால வரையறைப்படுத்தப்பட்ட செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை இப்பிரகடனம் சுட்டிக்காட்டியது.
  • இருப்பினும், ஒரு புதிய தன் –ஏற்பாட்டினை உருவாக்குவதில் பல தரப்புகளிலிருந்து எழுந்த கடுமையான கருத்து முரண்பாடுகளின் விளைவாக இம்மாநாடு ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை.

வள்ம குன்றா வளர்ச்சி குறித்த ஐ.நா மாநாடு – 2012

  • ரியோ +20 என்று அழைக்கப்படும் வளம் குன்றா வளர்ச்சி குறித்த ஐ.நா மாநாடு பிரேசில் நாட்டில் ரியோ-டி-ஜெனிரோ நகரில் 2012 ஜீன் 20 – 22 தேதிகளில் நடைப்பெற்றது.
  • ஒரு தன்னோக்கம் கொண்ட வளம் குன்றா வளர்ச்சித் திட்டத்தினை உருவாக்குவதில் சமரசமற்ற உறுதியுடன் நின்ரதால் வளம் குன்றா வளர்ச்சி இலக்குகளை (SDG) புத்தாயிரம் மேம்பாட்டு இலக்குகளுடன் (MDG) இணைப்பதற்கான ஒரு செயல்முறையை உருவாக்குவதில் கவனம் செலுத்தியது.
  • மேலும் பசுமைப் பொருளாதார கொள்கைகளுக்கான வழிகாட்டுதல்கள் ஏற்கப்பட்டது ரியோ + 20 மாநாட்டின் திருப்புமுனையாகும். மேலும் ஐ.நா பொது அவையின் கீழ் அரசுகளுக்கிடையேயான செயல்முறை குழு ஒன்றினை உருவாக்கியது இம்மாநாட்டில் வெற்றியாகும்.
  • இக்குழு நிதி, வளம் குன்றா வளர்ச்சி ஆகியன குறித்த ஒரு செயல் திட்டத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டிருந்தது. வளம் குன்றா வளர்ச்சிக்கான ஒரு உயர்மட்ட அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான ஒரு உடன்படிக்கையை எட்டியது ஒரு சாதனையாகும். “எதிர்காலம் நம் விருப்பம்” எனும் கருப்பொருளில் மாநாட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது.

ஐ.நா வளம் குன்றா வளர்ச்சி உச்சி மாநாடு – 2015

  • ஐ.நா பொது அவையில் உயர்மட்ட பிளீனக் கூட்டமாக கூட்டப்பட்ட ஐ.நா வளம் குன்றா வளர்ச்சி மாநாடு 2015, செப்டம்பர் 25- 27 தேதிகளில் ஐ.நா நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைப்பெற்றது. இம்மாநாட்டில் 2015-க்கு பிறகான செயல்நிரல் ஏற்கப்பட்டு “மாறும் நம் உலகம் : வளம் குன்றா வளர்ச்சிக்கான செயல்நிரல் 2030” எனும் தலைப்பில் பிரகடனமாக வெளியிடப்பட்டது.
  • 17 வளம் குன்றா வளர்ச்சி இலக்குகள் (SDG) மற்றும் 169 துணை இலக்குகள் ஆகியனவற்றை உள்ள்டக்கியதாக இப்பிரகடனம் அமைந்தது. இந்த இலக்குகள் 2016இல் அமலுக்கு வந்தது. 2030 வரை வளம் குன்றா வளர்ச்சி செயல்பாடுகளை இந்த இலக்குகள் வழி நடத்தும்.
வளம் குன்றா வளர்ச்சி இலக்குகள்
இலக்கு 01 அனைத்து இடங்களிலும், அனைத்து வடிவங்களிலும் வறுமையை ஒழிப்பது.
இலக்கு 02 பசிக்கு முடி கட்டுதல், உணவு பாதுகாப்பு எட்டுதல், நுண்ணூட்டச்சத்து மற்றும் வளம் குன்றா வேளாண்மையை ஊக்கப்படுத்துதல்.
இலக்கு 03 சுகாதார வாழ்வை உறுதிப்படுத்துதல் மற்றும் அனைத்து வயதைச் சேர்ந்த அனைவருக்கும் நல்வாழ்வை ஊக்கப்படுத்துதல்.
இலக்கு 04 அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவமான தரமான கல்வியை உறுதிப்படுத்துதல் மற்றும் அனைவரும் வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான வாய்ப்பினை ஊக்கப்படுத்துதல்.
இலக்கு 05 பாலின சமத்துவத்தை எட்டுதல் மற்றும் அனைத்து பெண்கள், சிறுமிகளை அதிகாரப்படுத்துதல்.
இலக்கு 06 அனைவருக்கும் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை கிடைக்கச் செய்தல்;
இலக்கு 07 எளிதில் பெறத்தக்க, நம்பகமான, வளம் குன்றா, நவீன ஆற்றல்கள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்துதல்.
இலக்கு 08 நீடித்த, உள்ளடக்கிய, வளம் குன்றா பொருளாதார வளர்ச்சி, முழுமையான மற்றும் உற்பத்திசார்ந்த வேலைவாய்ப்பு, அனைவருக்குமான நாகரிகமான வேலை ஆகியவனவற்றை முன்நிலைப்படுத்துதல்.
இலக்கு 09 பொருத்தமான உள்கட்டமைப்பை உருவாக்குதல், உள்ளிணைக்கப்பட்ட வளம் குன்றா தொழில் மயமாக்குதலை முன்நிலைப்படுத்துதல், படைப்பூக்கத்தை ஆதரித்தல்.
இலக்கு 10 நாடுகளுக்கிடையிலும், நாடுகளுக்குள்ளும் ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல்.
இலக்கு 11 உள்ளிணைக்கப்பட்ட பாதுகாப்பான உறுதிமிக்க வளம் குன்றா முறையில் நகரங்களையும், மக்கள் குடியிருப்புகளையும் அமைத்தல்.
இலக்கு 12 வளம் குன்றா நுகர்வு முறையையும், உற்பத்தி முறைகளையும் உறுதிப்படுத்துதல்.
இலக்கு 13 காலநிலை மாற்றம் மற்றும் பாதிப்புகளை எதிர்கொள்ள உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
இலக்கு 14 வளம் குன்றா வளர்ச்சி உறுதிப்படுத்தும் வண்ணம் பெருங்கடல்கள், கடல்கள் மற்றும் கடல்நீர் மூலவளங்கள் ஆகியனவற்றை நீடித்த அளவில் பயன்படுத்துதல் மற்றும் பராமரித்தல்.
இலக்கு 15 நிலப்பரப்பு சார்ந்த உயிர்மண்டலங்களை பாதுகாத்தல், புத்தாக்கம் செய்தல் மற்றும் நீடித்த பயன்பாட்டினை முன்னிலைப்படுத்துதல், வனங்களில் வளம் குன்றா அளவில் பராமரித்தல், வன அழிப்பை தடுத்தல், நில மாசினை தடுத்தல், புத்தாக்கம் செய்தல், பல்லுயிர் பெருக்க இழப்புகளை தடுத்தல்.
இலக்கு 16 வளம் குன்றா வளர்ச்சியினை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைதியான உள்ளிணைக்கப்பட்ட சமுதாயங்களை ஊக்கப்படுத்துதல், அனைவருக்குமான நீதி பரிபாலனம் வழங்குதல், அனைத்து மட்டங்களிலும் பொறுப்புமிக்க உள்ளிணைக்கப்பட்ட நிறுவனங்களை உருவாக்குதல்.
இலக்கு 17 வளம் குன்றா வளர்ச்சி அமலாக்க உறுப்புகளை வலுப்படுத்துதல், வளம் குன்றா வளர்ச்சிக்கான உலகளாவிய பங்குதாரர் முறையை புத்தாக்கம் செய்தல்.

பாரிஸ் உடன்படிக்கை 2016

  • பாரிஸ் உடன்படிக்கை (பிரென்சு மொழியில் LACCARD) என்பது காலநிலை மாற்றத்திற்கான ஐ.நா வடிவமைப்பு (UNFCC) வரம்பிற்குள் உருவாக்கப்பட்ட பன்னோக்கு உடன்படிக்கையாகும். பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்தினை குறைப்பதற்கான விரிவான செயல் திட்டத்தினை அது வழங்குகிறது. 2016, ஏப்ரல் 22ஆம் நாளன்று கையெழுத்தாகி 2016, நவம்பர் 4ஆம் நாளன்று அமலுக்கு வந்தது. இதன்படி, நிதிநல்கை 2020ஆம் ஆண்டு தொடங்குகிறது.
  • தொழில் மயமாதலுக்கு முந்தைய காலகட்டம் உலகளாவிய வெப்பநிலையிலிருந்து 2 டிகிரி செல்சியஸ் (3.6 ஃபாரன்ஹீட்) அதிகம் என்ற அளவிற்குள் 2050 ஆம் ஆண்டு முதல் 2100ஆம் ஆண்டிற்குள் கட்டுப்படுத்த புவி வெப்பத்தை பராமரிப்பதையும் முடிந்தால் 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்குள் கட்டுப்படுத்துவதையும் பாரிஸ் உடன்படிக்கை இலக்காகக் கொண்டுள்ளது.
  • மேலும் மனித செயல்பாடுகளால் வெளியேற்றப்படும் பசுமைக் குடில் வாயுக்கள் அளவை மரங்களும், மண்ணும், கடல்களும் இயற்கையாகத் திரையிட்டுக் கொள்ளும் அளவுக்கு கட்டுப்படுத்துவதிலும் இம்மாநாடு ஒருமித்த கருத்தை எட்டியது. இதனை உறுப்பு நாடுகள் செயல்படுத்துவதின் மீதான சர்ரப்பூர்வ சீராய்வுகளுடன் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மதிப்பீடு செய்வது என்று இந்த மாநாடு உறுதி செய்தது.
  • அத்துடன் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப தம்மைத் தகவமைத்து கொள்ளும் வகையில் வளர்ச்சி குறைந்த நாடுகள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திக்கு காலம் முழுவதும் வளர்ச்சி அடைந்த நாடுகள் “காலநிலை நிதி” உதவிகளிஅ தொடர்ந்து வழங்குவதையும் இம்மாநாடு உறுதிப்படுத்தியுள்ளது. 197 உறுப்பு நாடுகளில் இதுவரை 184 உறுப்பு நாடுகள் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.

பாரிஸ் உடன்படிக்கை மீது இந்தியா அளித்துள்ள உறுதிமொழிகள்

  • இந்த புதிய உலகளாவிய உடன்படிக்கையை செயல்படுத்தும் வண்ணம் 2020ஆம் ஆண்டிற்கு பின்னர் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள செயல்பாடுகளை ஒவ்வொரு நாடும் தாமாக முன்வந்து உறுதிமொழியாக வழங்கியுள்ளன. இது தேசிய அளவில் வரையறுக்கப்பட்டுள்ள பங்களிப்புகள் திட்டமிடல் (INDC) என்று அறியப்படுகிறது.
  • இதன் அடிப்படையில் இந்தியா தாம் மேற்கொள்ளவுள்ள பங்களிப்புகளை உறுதிமொழியாக வழங்கியுள்ளது. அதன்படி, 2030ஆம் ஆண்டிற்குள் ஜி.டி.பி.யில் மாசு அடர்த்தி அளவு 33 – 35 விழுக்காடுகள் அதாவது 2005 அளவிற்குள் கட்டுப்படுத்தப்படும் என்று இந்தியா உறுதியளித்துள்ளது. அதேபோல புதைப்படிவம் சாராத மின் உற்பத்தி அளவு 2030ஆம் ஆண்டிற்குள் 40 விழுக்காடாக உயர்த்தப்படும் எனவும் உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது. தனது வனப்பகுதிகளின் அளவு 2.5 முதல் 3.0 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வாயுவை கிரகிக்கும் அளவுக்கு விரிவுப்படுத்தப்படும் (புவி வெப்பமாவதற்கு முக்கிய காரணி கார்பன் –டை-ஆக்சைடு ஆகும்).
  • அதே நேரத்தில் , காலநிலை இலக்குகளை எட்டுவதற்கு பன்னாட்டு நிதி உதவியும் தொழில்நுட்ப உதவியும் தேவை என்பதையும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்த வகையில் , இப்பொழுதிலிருந்து 2030ஆம் ஆண்டு வரை காலநிலை மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள குறைந்தபட்சம் 2.5 ட்ரில்லியன் டாலர் (2014 – 15 ஜூலை நிலவரப்படி) நிதி உதவி தேவைப்படுவதாகவும் இந்தியா கூறியுள்ளது.

சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் இந்திய நிலைப்பாடு

  • உலகளாவிய சுற்றுச்சூழல் ஆளுகையில் இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். 1972 ஸ்டாக்ஹோல்ம் மாநாடு முதல் 2015 தில்லி COP 21 வரை இந்தியா ராஜதந்திர அளவிலும் நிர்வாக மூலதன முதலீடு அளவிலும் கவரத்தக்க அளவிலான பங்களிப்பினை வழங்கியுள்ளது.
  • ஸ்டாக்ஹோம் மாநாட்டில் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி நிகழ்த்திய உரை இப்பிரச்சனையில் புதிய அரசியல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை உருவாக்கியது. அதாவது, சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அம்சங்களைக் கட்டுப்படுத்துவதில் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு இருக்கும் பொறுப்பினை இந்தியா திட்டவட்டமாகக் சுட்டிக்காட்டியது. குறிப்பாக, காலநிலை மாற்றம் தொடர்பாக இந்தியா மேற்கொண்டு வரும் சுற்றுச்சூழல் கொள்கைகளின் அடிநாத கோட்பாடுகளை 1992 ரியோ உச்சிமாநாடு நடைபெற்ற காலத்திலிருந்தே காண முடியும். அந்த மாநாட்டின் பிரகடனமாக “சமத்துவமற்ற ஓர் உலகில் புவி வெப்பமாதல்” என்ற அம்மாநாட்டு பிரகடனத்தில் புவி வெப்பமாவதில் முக்கிய காரணியான கார்பன் வெளியேற்றத்தில் பெரும் பங்கு மேற்கத்திய நாடுகளுக்கே உள்ளது என்றும், இதனை “கார்பன் காலனியாக்கம்” என்றும் மேற்கத்திய நாடுகள் மீது நேரிடியாகக் குற்றம் சுமத்தியது. இதற்கு இந்திய கொள்கைகளின் செல்வாக்கு ஒரு முக்கிய காரணமாகும்.
  • பசுமைக் குடில் வாயுக்கள் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் சுமை வளரும் நாடுகள் மீது சுமத்தப்படுவதை இந்தியா திட்டவட்டமாக எதிர்த்து வந்துள்ளது. ஏனெனில், கார்பன் வாயு வெளியேற்றத்தில் தெற்கு நாடுகளில் பங்களிப்பு மிக மிகக் குறைவாகும். புவி வெப்பமாதல் உச்ச நிலை அடைவதில் மேற்கத்திய நாடுகளின் பங்களிப்பே அதிகம்.

  • அதே நேரத்தில் உள்நாட்டு மட்டத்திலும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வகையில் அரசமைப்புச் சட்டம் அளவிலும், சட்டப்பொறுப்புகள் அளவிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக இந்தியாவில் அமலாக்கப்படும் முக்கிய சட்ட ஆவணங்கள் பின்வருமாறு:
  • சுற்றுசூழல் பாதுகாப்புச் சட்டம் (1986), வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டம் (1972), காற்று மாசு கட்டுப்படுத்துதல் மற்றும் தடுத்தல் சட்டம் (1981), நீர் மாடுபடுதல், கட்டுப்படுத்துதல் சட்டம் (1974), இந்த வனச் சட்டம் (1927)..
  • நாட்டில் சுற்றுச்சூழல் கொள்கைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்தும் முதன்மை அமைப்பாக மத்திய சுற்றுச்சூழல் , வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் செயல்படுகிறது. நீதித்துறை செயல்பாட்டுவாதம் அடிப்படையில் அவ்வப்பொழுது சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் தலையிடுவதன் மூலம் இந்திய நீதித்துறையும் ஈடு இணையற்ற பங்களிப்பினை ஆற்றி வருகிறது.

தேசியப் பசுமை தீர்ப்பாயம்

தேசியப் பசுமை தீர்ப்பாயம் 2010-ல் உருவாக்கப்பட்டு சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த அதீத மாசு வெளியேற்ற வழக்குகளை விசாரித்து வருகிறது.

சுற்றுச்சூழல் பிரச்சனையில் இந்தியா – உலகநாடுகள் ஒத்துழைப்பு

  • சுற்றுச்சூழல் குறித்த பல்நோக்கு சிறப்புப் பேரவைகள், உடன்படிக்கைகள், நிறுவனங்கள் ஆகியனவற்றில் இந்தியா உறுப்பினராக உள்ளது. சுற்றுச்சூழல் சீர்கேட்டில் மேற்கத்திய நாடுகளுக்கு இருக்கும் வரலாற்றுப்பூர்வ பொறுப்பினை இந்திய அரசு தொடர்ந்து சுட்டிக்காட்டி வருவதுடன் தனிநபர் மாசு வெளியேற்றத்தை பொறுத்தவரை இந்தியா மிகக் குறைந்த அளவே வெளியேற்றுவதையும் முன்னிலைப்படுத்தத் தயங்குவதில்லை.
  • தேசிய சுற்றுச்சூழல் கொள்கையில் விளக்கப்பட்டுள்ளவாறு காலநிலை மாற்றம் என்பது ஒரு மேம்பாட்டிற்கான நிலைப்பாடு என்ற நிலையை வகிக்கிறது. “தலைமுறைகளுக்கிடையில் சமத்துவம்” (சுற்றுச்சூழல் பாதுகப்பில் இது முக்கிய நிலைப்பாடாகும்) எனும் அடிப்படையில் தற்போதைய வாழும் தலைமுறையானது வளர்ச்சி என்பதை உடனடித் தேவைக்கு மட்டும் என பயன்படுத்தி எதிர்வரும் தலைமுறைகளுக்கு இந்த பூமியை காலநிலை மாற்றப் பாதிப்பு ஏதுமற்ற நிலையில் அளிப்பதாகும்.
  • பாரிஸ் உடன்படிக்கையை ஏற்றுக்கொண்ட நாடு எனும் அடிப்படையில் உடன்படிக்கையின் சாராம்சத்தை அங்கீகரிக்கிறது மேலும் “சமத்துவம்” மற்றும் பொது என்பதை இந்தியா மீண்டும் வலியுறுத்துவதுடன் பொறுப்பிணர்வுகள் மற்றும் தகுதிநிலை சார்புகள் இடையே வேறுபாடுகள் காணப்பட வேண்டியதன் அவசியத்தையும் (CBDR –RC) வலியுறுத்துக்கிறது. கார்பன் மயமாக்கல் குறித்து இந்தியா மேற்கொண்டுள்ள உறுதிப்பாடின் காரணமாக, மின் உற்பத்தியில் தனது நிலக்கரி சார்பினைக் குறைத்து, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்கும் செயல்திட்டத்தைத் தழுவியுள்ளது.
  • 2016ஆம் ஆண்டு இந்திய அரசால் முன்மொழியப்பட்ட கருத்துருவான உலகளாவிய சூரிய ஒளி கூட்டணி ஏற்கப்பட்டதன் மூலம் சுற்றுச்சூழல் செயல்நிரலில் இந்தியாவின் பங்களிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
  • இவ்வாறு சொல் அலங்காரமாக புகழப்படும் போதிலும் இந்தியா உலகின் மோசமான சுற்றுச்சூழல் கொண்ட நாடாகவே இருக்கிறது. உலக நாடுகள் வெளியிடும் சுற்றுச்சூழல் மாசு குறித்த உலக கார்பன் திட்ட அறிக்கை 2018 இல் வெளியிடப்பட்டது.
  • இதில் உலகில் அதிக சுற்றுச்சூழல் மாசு வெளியிடும் நாடுகள் வரிசையில் இந்தியா நான்காவது இடம் வகிக்கிறது. 2017ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் மாசு அளவில் இந்தியாவின் பங்கு 7 சதவீதமாகும்.
  • இதேபோல சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்படும் நாடுகளின் வரிசையில் சுற்றுச்சூழல் செயல்பாட்டு வரிசை அறிக்கை 2018இல் வெளியிடப்பட்டது.
  • 180 நாடுகள் இடம்பெற்றுள்ள இவ்வரிசையில் இந்தியா 176-வது இடம் வகிக்கிறது. காற்று மாசுவினால் ஏற்படும் மரணம் அதிகரித்ததாலும் சுற்றுச்சூழல் சுகாதாரக் கொள்ஐ மோசமாக அமலாக்கப்பட்டதாலும் இந்தியா இந்த கீழ் நிலையை அடைந்துள்ளது.

உலகளாவிய சூரிய ஒளி கூட்டணி

  • உலகளாவிய சூரிய ஒளி கூட்டணி (ISN) என்பது இந்தியாவால் முன்னெடுக்கப்பட்ட கூட்டணியாகும். இதில் 122 நாடுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானாவை சூரியஒளி வெப்ப நாடுகளாகும். இவை அனைத்தும் கடக, அட்ச ரேகைகளுக்கு இடையில் அமைந்துள்ள நாடுகளாகும். தற்போது ஐ.நா உறுப்பு நாடுகளாகவும் உள்ளன.
  • கூட்டணி நாடுகள் சூரிய வெப்ப ஆற்றலைப் பயன்படுத்துவதை பாரிஸ் பிரகடனம் ஊக்கப்படுத்துகிறது.
  • சூரிய ஆற்றல் மூலம் ஆயிரம் GW மின்சக்தி உறொஅத்தி செய்வது உலகளாவிய சூரிய ஒளி கூட்டணி (ISN) அமைப்பின் முக்கிய இலக்குகளின் ஒன்றாகும். 2030ஆம் ஆண்டிற்குள் இதற்கான மூலதனமாக 1000 மில்லியன் டாலர் முதலீடுகளை திரட்டுவதும் இதன் நோக்கமாகும்.
  • இதனைச் செயல்படுத்துவதற்காக, சூரிய ஆற்றல் அபரிமிதமான உள்ள நாடுகளை ஒருங்கிணைத்து உலகின் மின்தேவையை நிறைவு செய்யவும் இதன் மூலம் மின்சார விலையைக் குறைக்கவும் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, பயன்பாட்டில் இருக்கும் சூரிய ஆற்றல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது கூட்டு சூரிய மின் உற்பத்தி ஆய்வுத் திட்டங்கள் மற்றும் தகுதிப்படுத்துதல் திட்டங்களையும் ஊக்குவிக்கிறது.
  • உலகளாவிய சூரிய ஒளி கூட்டணி (ISN) வரையறை உடன்படிக்கை 2017 டிசம்பர் 6 முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இதன் சட்டப்பூர்வ தலைமையகம் இந்தியாவில் குருகிராம் நகரில் பன்னாட்டு அரசுகளுக்கு இடையிலான அமைப்பாக இயங்கி வருகிறது.

கொச்சி பன்னாட்டு விமான நிலையம்

கேரளாவில் அமைந்துள்ள கொச்சி பன்னாட்டு விமான நிலையமே முழுமையாக சூரிய ஒளி மின்சாரத்தால் இயங்கும் உலகின் முதல் சூரிய ஒளி மின்சார விமான நிலையமாகும்.

நகோயா விதிமுறைகள்

இந்தியா கையெழுத்திட்டுள்ள பன்னாட்டு சிறப்பு பேரவை பிரகடனங்கள், உடன்படிக்கைகள் மற்றும் அமைப்புகள்

  • அழிந்துவரும் அரிய வனங்கள் வாழ் நீர் மற்றும் நில உயிரினங்கள் பன்னாட்டு வர்த்தக சிறப்பு மாநாடு
  • இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் பராமரிப்புக்கான பன்னாட்டு ஒன்றியம் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு
  • வலசை செல்லும் வன உயிரினங்கள் பாதுகாப்பு சிறப்புப் பேரவை
  • பன்னாட்டு திமிங்கல ஆணையம்
  • வனப்படுத்துதலுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு
  • பன்னாட்டு வெப்ப மண்டல மரங்கள் அமைப்பு
  • ராம்சர் சிறப்பு மாநாடு
  • உயிரி பல்லுயிர் பெருக்க சிறப்புப் பேரவை
  • மூங்கில் மற்றும் ராத்தல் பன்னாட்டு வலைப்பின்னல்
  • ஆசியப்பசிபிக் வனமாக்கல் ஆணையம்
  • காடுகள் அழிப்பு தடுப்பு ஐக்கிய நாடுகள் சிறப்புப் பேரவை
  • காலநிலை மாற்றம் ஐக்கிய நாடுகள் சிறப்புப் பேரவை
  • கியோட்டோ ஒப்பந்தம்

நகோயா விதிமுறைகள்

நகோயா விதிமுறைகள் என்பது 1992 உயிரியல் பன்மைய மாநாட்டு முடிவுகளின் கீழ் 2010ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டதுணை உடன்படிக்கையாகும். இது உயிரியல் பன்மையத்தை பயன்படுத்துவது குறித்து எழுந்த கேள்விகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட உடன்படிக்கையாகும். அதாவது, அணுகுதல் மற்றும் பயனடைதலில் பகிர்தல் (ABS) உடன்படிக்கையான இது நகோயா விதிமுறைகள் என்று அழைக்கப்படுகிறது. மரபியல் மூல வளங்களை நியாயமாகவும், சமமாகவும் அணுகி, பயன்களை நியாயமாகவும், சமமாகவும் பகிர்தல் குறித்த விதிமுறைகளை இது கொண்டுள்ளது.

பூர்வக்குடி மக்களும் அவர்களின் உரிமைகளும்

வரையறை

  • ஒரு பரந்த தளத்தில் பண்பாட்டு பன்மைத்துவம் கொண்ட சமூகப் பிரிவுகளே பூர்வக்குடி மக்கள் என அடையாளப்படுத்தப்படுகின்றனர். இவ்வாறு சுமார் 5000 பண்பாட்டு குழுக்களை சேர்ந்த 35 கோடி பூர்வக்குடி மக்கள் 20 விழுக்காடு நிலப்பரப்பில் வாழ்கின்றார்கள்.
  • பூர்வக்குடி மக்கள் எதிர்க்கொள்ளும் சவால்களிலேயே முதன்மையான சவால் என்பது பூர்வக்குடி மக்களுக்கான வரையறைகளை உருவாக்குவதில் ஒருமித்த கருத்து உருவாகாதது ஆகும்.
  • பூர்வக்குடிகள் என்ற சொல்லத்தக்கத்தைப் புரிந்து கொள்வதிலிருந்து அடிப்படை வேறுபாடுகள் தோன்றுகின்றன. பூர்வக்குடி மக்கள் உரிமைகளுக்காக பணியாற்றும் ஐ.நா பணிக்குழுக்களால் கூட பூர்வக்குடிகளின் உண்மை அடையாளங்களை வரையறை செய்வதில் ஒருமித்த கருத்து எட்ட முடியவில்லை.
  • ஒரு குழுவின் பூர்வக்குடித்தன்மை இவை என்பதை வரையறுப்பதற்கான முழுமையான அளவீடுகளை உருவாக்குவதைல் எழும் கருத்து வேறுபாடுகளே முதன்மைக் காரணியாக விளங்குகிறது.
  • குறைந்த மக்கள் தொகையை பூர்வக்குடிகளுக்கான ஒரு வரையறையாகக் கருத முடியுமா? அல்லது அவர்களது சொந்த வாழ் இடத்திற்கும் அவர்களுக்குமான தொடர்பு அவர்கள், எவ்வளவு காலம் வாழ்கிறார்கள், தொழில் மயமாக்க வாழ்முறை அல்லாத பாரம்பரிய வாழ்க்கை மூறை, இவற்றை பூர்வக்குடிகளுக்கான ஒரு வரையறையாக கருத முடியுமா? இதில் வட அமரிக்க சமுதாயங்கள் மத்தியில் வட அமெரிக்க பூர்வக்குடிகள்/ முதல் தேசம், அமேசான் காடுகளில் வாழும் குடிமக்கள், தூர வடக்கு இனியுட் பூர்வக்குடிகள், பப்புவா நியூகினியா பூர்வக்குடிகள் போன்ற சில குழுக்களை வரையறை செய்வதில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது. பூர்வக்குடித் தன்மையை வரையறை செய்வதில் ஒரு உலகளாவிய அங்கீகாரம் பெறுவதற்காகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் ஐக்கிய நாடுகள் அவை உயர் அதிகாரி ஜீலியன் பெர்கர் முன்மொழிந்த வரையறை குறிப்பிடத்தக்கதாகும். அவரின் கூற்றுப்படி, “ஒரு தனித பண்பாடு பல்வேறுபட்ட கூறுகளை மொழி, மதம், சமூகம், அரசியல் அமைப்புகள், ஒழுக்க நெறிகள், அறிவியல் மற்றும் தத்துவ அறிவு , நம்பிக்கைகள் , வீர கதைகள், சட்டங்கள், பொருளாதார அமைப்புகள், தொழில்நுட்பம், கலை, உடை, இசை, நடனம், கட்டடக்கலை போன்ற எண்ணற்ற வேறுபாடுகள் இருந்தாலும் பூர்வக்குடி மக்களே தமது பூர்வக்குடித் தன்மையை வரையறுக்க இயலும்” . பூர்வக்குடி மக்கள் வரையறைகளாக அவர்கள் மேலும் கூறுவதாவது:
  1. பூர்வக்குடி மக்கள் தங்கள் பூர்வ நிலங்களில் இருந்த ஆக்கிரமிப்பாளர்களால் விரட்டப்பட்டு இடம் பெயர்ந்தவர்களாக இருக்கலாம்.
  2. நாடோடி மற்றும் அரைக்குறை நாடோடி மக்களாக இருக்கலாம். இடம் விட்டு இடம் பெயர்ந்து பயிரிடுபவர்கள், மேய்ச்சல் குடிகள், வேட்டையாடி உணவு சேமிப்பவர்கள் அல்லது உபரி அதிகமில்லாத உடல் உழைப்பு கோரும் வேளாண் குடிகளாக இருக்கலாம்.
  3. மையப்படுத்தப்பட்ட அரசியல் நிறுவனங்களாக அல்லாத, சமுதாயமாக அணி திரட்டப்படாதவர்களாக , ஒருமித்த கருத்து அடிப்படையில் இயங்காத குழுக்களாக இருக்கலாம்.
  4. தேசிய சிறுபான்மை இனத்திற்குரிய அனைத்து குணங்களையும் உடையவர்களாக இருக்கலாம். பொதுவான மொழி, மதம், பண்பாடு மற்றும் இதர அடையாளங்களைப் பகிர்ந்துக்கொண்ட போதிலும் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் ஒரு ஆதிக்க சமூகம் மற்றும் பண்பாட்டினால் அடக்கி ஆளப்படுகிறது.

  1. ஒரு மாறுபட்ட உலக கண்ணோட்டம் கொண்டவர்களும் பூர்வக்குடி மக்களாக வரையறுக்கப்படலாம். இவர்கள் நிலம் மற்றும் இயற்கை மூல வளங்கள் மீது பொருளியல் அடிப்படை அல்லாத இரு பாரம்பரிய அணுகுமுறையைக் கொண்டிருக்கலாம். ஆதிக்க சமுதாயத்தின் ஆதாயத்திற்காக வளர்ச்சி என்ற பெயரில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கலாம்.
  2. சில தனிநபர்கள் அகவயக் காரணங்களுக்காக தங்களைத்தாமே பூர்வக்குடி மக்களாக அடையாளம் கண்டுகொண்டு பூர்வக்குடிகளாக அறிவித்துக் கொண்டிருக்கலாம்.
  • பொதுவாக தற்கால புரிதலில் பூர்வக்குடி மக்கள் என்போர் மிக குறைந்த ஆதிக்க உணர்வு, அரசியல் அதிகாரமின்மை, சமுதாயத்தில் உள்ளிணைக்கப்படாத தன்மை ஆகிய பண்புகளால் வரையறுக்கப்படுகின்றனர்.
  • வெளி சமுதாயத்தினரின் ஆதிக்கம் அல்லது இனரீதியான ஆதிக்கத்தின் கீழ் இரண்டாம் தர குடிமக்களாக வாழ்வோரும் பூர்வக்குடிகளாக வரையறுக்கப்படலாம். இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம் அதிகாரமின்மையால் மட்டும் பூர்வக்குடி மக்கள் அடையாளப்படுத்தப்படுவதில்லை.
  • மாறாக, தங்களது பூர்வக்குடித் தன்மையின் காரணமாக அதிகாரம் பறிக்கப்பட்டிருக்க வேண்டும். இனக்குழு மதிப்பீடுகள், மரபுகள் காரணமாகத் தமது பாரம்பரிய வாழ்க்கை முறையை விட்டு வாழும் இத்தகைய குழுக்கள் சமூகம், அரசியல், பொருளாதார நிறுவனங்கள் உதவியால் முன்னேற்றம் அடைந்துள்ள சமுதாயங்களிடமிருந்து விலகி வாழ்கிறார்கள். இந்த “முன்னேற்றத்தினை தங்களுக்கு எதிரான அச்சுறுத்தலாகவும் தமது வாழ்வு முறையை மாற்றிவிடக் கூடியதாகவும் காண்கிறார்கள்” . பூர்வக்குடி மக்கள் என்போர் “சமுதாய ரீதியாக நிலைத்த” அல்லது மாறாநிலை கொண்ட குழுக்களாக இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. ஆதிக்க –சமூக அமைப்புகள் அடைந்து வரும் முன்னேற்றத்தை ஏற்பதிலும் தகவமைத்துக் கொள்வதிலும் மிகவும் பின் தங்கியிருப்பதன் காரணமாகவே பூர்வக்குடி மக்களை பழமைவாதிகள் என்று குற்றம் சாட்டுவது உலக வழக்கமாக உள்ளது.

தன் – அடையாளமாக்கல்

பூர்வக்குடி மக்களை வரையறை செய்யும் பன்னாட்டு உடன்படிக்கை எதுவும் இதுவரை எட்டப்படவில்லை. பூர்வக்குடி சமுதாயங்களே தங்கள் பூர்வக்குடித் தன்மையை முடிவு செய்து கொள்ள வேண்டும். இதுவே தன் அடையாளமாக்கல் எனப்படும்.

பூர்வக்குடி மக்கள் நாள்

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9ஆம் நாளன்று உலக பூர்வக்குடி மக்கள் நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.

உலகில் வாழும் முக்கிய சமுதாயங்கள் குறித்து பார்க்கலாம்:

சமுதாயத்தின் பெயர் அவர்களின் பூர்விக நிலம்
ஹெய்டா கனடா மேற்குக் கடற்கரை
இனுயிட் / எக்ஸ்சிமோ கனடா / ஆர்டிக் / அலாஸ்கா/ கிரீன்லாந்து
யானோமணி அமோசான் படுகை
பிளாக்புட் கனடா/ ஐக்கிய மாநிலங்கள்
மஹாக் கனடா/ ஐக்கிய மாநிலங்கள்
இன்னு லாப்ரடார் /கியூபெக், கனடா
மாவோரி நியூசிலாந்து
சிட்டகாங் மலை மக்கள் வங்கதேசம்
சமி ஸ்காண்டிநேவியா
புஷ்மன் தென் ஆப்பிரிக்கா
அகா மத்திய ஆப்பிரிக்கா
ஓகியக் கென்யா
வெட்டா இலங்கை
ஜாரவா அந்தமான் தீவுகள்
அக்டா பிலிப்பைன்ஸ்
பெனம் போர்னியோ
ஜஹாய் வட மலேசியா
அபாரிஜின் ஆஸ்திரேலியா
அச்சே பராகுவே
யனமா டியரா டெல் பியூகோ
ஐனு ஜப்பான்
சுக்சி, யுபிக் கிழக்கு சைபீரியா
நியா / ஞானசன் வட மத்திய சைபீரியா
  • இந்தியாவில் பூர்விகக் குடித்தன்மையை வரையறைப்படுத்துவதில் கோட்பாடு அடிப்படையிலும் நேரடி அனுபவங்களிலும் பின்னடைவே நிலவுகிறது. இந்தியாவில் இதுவரை எந்த ஒரு பூர்வக்குடி மக்களும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. இருந்தபோதும், இந்திய பூர்வக்குடிகள் அடையாளச் சிக்கல்களுக்கு விடைகாண வல்லுநர்கள் மூன்று கணிப்புகளை வகுத்தளித்துள்ளனர்.

அ) ஒரு பகுதி அல்லது நாட்டில் காலனியாக்கம் அல்லது ஆக்கிரமிப்பு நடைபெறும் முன்பே அங்கு வாழும் மக்கள் குழுக்கள்

ஆ) ஒரு நாடு அல்லது பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு அல்லது காலனியாக்கம் காரணமாக ஒதுக்கப்பட்டுள்ள மக்கள் குழுக்கள்.

இ) ஒட்டுமொத்த சமூகம் வகுத்தளித்துள்ள பொது சட்டங்களைப் பின்பற்றாமல் தமக்கான சொந்த சமூக, பொருளாதார, பண்பாட்டு நிறுவனங்களைக் கொண்டு அவற்றின்படி வாழும் குழுக்கள் ஆகியோரை பூர்வக்குடிகள் என வரையறுக்கலாம்.

  • இந்தியாவில் வாழும் பூர்வக்குடி சமுதாயங்கள் எண்ணற்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். ஆதிவாசிகள், அபாரிஜின்கள், ஆதிம் சாதி (பண்டைய தொல்குடிகள்) அல்லது வனவாசி (வனவாசிகள்). அரசமைப்புச் சட்டப்படி அவர்கள் பட்டியலிடப்பட்ட பழங்குடிகள் என அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். அவர்களது வாழிடங்கள் பட்டியலிடப்பட்ட பகுதிகள் என அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
  • இந்திய அரசு முறையான வரையறை செய்யாவிட்டாலும், ‘புராதன குடிகள், தனித்த பண்பாடு, நிலவியல் தனிமைப்படுத்தல், பெரும் சமுதாயங்களுடன் பழகுவதில் கூச்சம், பின்தங்கிய நிலை’ போன்ற கூறுகளை உருவாக்கிக்கொள்வதன் மூலம் பழங்குடித்தன்மையை ஓராளவுக்குத் தளர்வாக வரையறுப்பதில் சட்டப்பூர்வ ஒருமித்த கருத்து உருவாக்கப்பட்டிருக்கிறது.
  • கோண்டா போன்ற லட்சக்கணக்கில் வாழும் நிலவியல் குழுக்கள் முதல் அந்தமான் தீவில் வாழும் நூற்றுக்கும் குறைவான எண்ணிக்கையில் வாழும் பீல் பழங்குடி மக்கள் வரை இந்த வரையறைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். மேலும் “இந்தியா” துணைக்கண்டத்தில் பூர்வக்குடி சமுதாயங்கள்’ (1988) எனும் புத்தகத்தில் சரத் குல்கர்னி இவ்வாறு கூறுகிறார்.
  • “இந்தியாவில் வாழும் பூர்வக்குடி மக்கள் பெரும்பாலும் தமது அமைதித்தன்மையை இழந்துவிட்டனர். அவர்கள் தமது தன்னம்பிக்கை மற்றும் அடையாளங்களிலும் சிறிது இழந்துவிட்டனர். அடக்குமுறைச் சக்திகள் மற்றும் சுரண்டல்காரர்களால், தொல்குடி வாழ்க்கை பெரும் ஆக்கிரமிப்புகளுக்கு ஆளாகி பூர்வக்குடி மக்களில் பலர் கீழான வாழ்க்கைநிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.
  • பூர்வக்குடி மக்களுக்காக இயற்றப்பட்ட சட்டங்கள் செயலற்ற நிலையிலேயே இருக்கின்றன. இருந்தபோதும் அவர்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் சிறுதி பயனளித்துள்ளன. தமது உரிமைகளுக்காகப் போராட அவர்களை அணி திரட்டுவதில் சில செயல்பாட்டாளர்கள் வெற்றிகண்டுள்ளனர். இதன் சித்திரம் தெளிவாக இல்லாவிட்டாலும் நம்பிக்கைக் கீற்றுகள் தென்படத் தொடங்கியுள்ளன”.
  • பூர்வக்குடித்தன்மை வரையறை குறித்த இந்திய நிலைபாடு பெரும்பாலும் உலக வரையறையை ஒட்டியே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எதிர்-காலனியாக்கக் கோட்பாடுகளின் அடிப்படையில் உலக விளிம்புநிலை மக்கள் வரையறை செய்யப்படுகிறார்கள். மேலும், இந்தியாவின் பூர்வக்குடி கருத்தாக்கம் ‘தொல்குடித் தன்மை’ என அழைக்கத்தக்கதையே பெரும்பாலும் ஒத்துள்ளது. உலக அளவில், பூர்வக்குடி குழுக்கள் பெரும் மாற்றங்களுக்கு ஆளாகி வருகின்றன. அவர்கள் பூர்வக்குடி மக்களின் ‘நீரூற்று’ என்று அழைக்கப்படுகிறார்கள். பூர்வக்குடி மக்கள் சந்தித்து வரும் பெரும் சவால்கள் பின்வருமாறு:

பூர்வக்குடிமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் சவால்களும்

  • பாகுபாடாக நடத்தப்படுதல் மற்றும் அமைப்பு ரீதியான வன்முறை.
  • தங்கள் பூர்விக நிலப்பகுதியில் இருந்து விரட்டப்படுவதால் நில உரிமை பறிக்கப்படுதல்.
  • தொழில்நுட்ப அறிவுப் பின்னடைவு காரணமாக மறு குடியமர்த்தப்படுதல்.
  • பாரம்பரிய கலைகள் மற்றும் புனைவுகள் போன்ற அறிவுச்செல்வங்கள் சுரண்டப்படுதல்.
  • பூர்விக நிலப்பகுதிகளில் இருந்து பலவந்தமாக அகற்றப்படுதல்.
  • பாரம்பரிய மூலவளங்களை அணுகும் உரிமை மறுப்பு.
  • அழிவை நோக்கிய வளர்ச்சியும் கட்டாய இட மாற்றமும்.
  • சுயாட்சி மற்றும் சுய நிர்ணயம் கேள்விக்குறியாக உள்ளது.
  • குடிமைச் சமுதாய மக்களின் நிராகரிப்பு
  • ஒரு நில நாடுகள் மட்டுமே பூர்வ குடிகளைச் சட்டப்பூர்வக் குழுக்களாக அங்கீகரித்துள்ளமை
  • குறைவான அரசியல் பங்கெடுப்பு
  • வறுமை
  • சுகாதாரப் பிரச்சனைகள்
  • வேலையின்மை

பூர்வக்குடி மக்கள் உரிமைகள்

  • ஐக்கிய நாடுகள் பூர்வக்குடி உரிமைகள் பிரகடனம் (UNDRIP) 2007ஆ ஆண்டு செப்டம்பர் 13 அன்று ஐக்கியநாடுகள் பொது அவையால் ஏற்றுக்கொள்லப்பட்டது. இது பூர்வக்குடி மக்கள் உரிமைகளுக்கான ஒருங்கிணைந்த பன்னாட்டு அமைப்பு ஆகும். அந்த வகையில் ‘உலகில் வாழும் பழங்குடி சமுதாயங்களின் நல்வாழ்க்கை, சுயமரியாதை, குறைந்தபட்ச வாழ்வாதரங்களை’ இப்பிரகடனம் உறுதிப்படுத்துகிறது.
  • பூர்வக்குடி மக்களுக்கான பணிக்குழு 1985 முதல் முயற்சிகள் மேற்கொண்டு நிறைவேற்றப்பட்ட இப்பிரகடனத்தில் 46 பிரிவுகள் உள்ளன. பழங்குடி சமுதாயங்கள் உரிமைகள் தொடர்பாக உலக நாடுகள் பின்பற்றுவதற்கான வழிகாட்டு ஆவணமாகவும் இது திகழ்கிறது.
  • சிறார் உரிமைகள் பிரகடனம், ஐ.எல்.ஓ சாசனம், பெண்களுக்கு எதிரான அனைத்து இழிவுகளை அகற்றக்கோரும் பிரகடனம் ஆகியனவற்றையும் இது உள்ளடக்கியதாகும்.
மனித உரிமைகள், சுய –நிர்ணயம் , தேசிய இனம்
உறுப்புகள் 1 – 6
  • அனைத்து மனித உரிமைகளுக்கான உரிமைகள்
  • சுதந்திரம், சமத்துவம் உரிமைகள் மற்றும் சுரண்டலுக்கு எதிரான உரிமைகள்
  • சுய-நிர்ணய உரிமைகள்
  • சுயாட்சிக்கான உரிமைகள்
  • தமக்கேயான தனித்த அரசியல் , சட்ட, சமூக, பண்பாட்டு அடையாளங்களைப் பராமரிக்கும் உரிமைகள்
  • தேசிய இன உரிமைகள்
வாழ்க்கை , விடுதலை, பண்பாடு, பாதுகாப்பு
உறுப்புகள் 7 – 10
  • வாழ்க்கை, விடுதலை, பண்பாடு, பாதுகாப்பு
  • வாழ்வதற்கும் விடுதலைக்கும் பாதுகாப்புக்குமான உரிமைகள்
  • கட்டாய அடையாள நீக்கத்துக்கு எதிரான உரிமைகள்
  • பூர்வக்குடி சமுதாயம் அல்லது நாட்டைச் சேர்ந்தவராக இருப்பதற்கான உரிமைகள்
  • விரட்டப்படுவது மற்றும் மறுகுடியேற்றத்துக்கு எதிரான உரிமைகள்
பண்பாடு, மதம், மொழி
உறுப்புகள் 11 – 13
  • பண்பாட்டுக்கான உரிமைகள்
  • ஆன்மிக, மத நம்பிக்கைகள், , பழக்க வழக்கங்களுக்கான உரிமைகள்
  • மொழி, வரலாறுகள், வாய்மொழி மரபுகளைப் பயன்படுத்தும் உரிமைகள்
கல்வி, ஊடகம், வேலைவாய்ப்பு
உறுப்புகள் 14 – 17
  • கல்வி அமைப்புகளை உருவாக்குதல் மற்றும் பண்பாட்டு நுண்ணுணர்வுக் கல்வியை அணுகும் உரிமைகள்
  • கல்வியில் பூர்வக்குடிப் பண்பாடுகளைப் பிரதிபலிக்கும் உரிமைகள்
  • தமது சொந்த மொழியில் ஊடகங்களை உருவாக்கி பூர்வக்குடி மக்கள் அல்லாத மக்களுக்கு பரப்பும் உரிமை
  • வேலைவாய்ப்பு உரிமை
பங்கேற்பு மற்றும் வளர்ச்சி
உறுப்புகள் 18 – 24
  • கொள்கை உருவாக்கத்தில் பங்கேற்கும் உரிமை
  • சட்டங்கள் கொள்கைகள் உருவாக்கத்தில் சுதந்திரமான கருத்து அளித்து முன் ஒப்புதல் அளிக்கும் உரிமை
  • தமது சொந்த அரசியல், பொருளாதாரம் சமூக அமைப்புகளை அமைத்துக்கொள்ளும் உரிமைகளும் மேம்பாட்டு உரிமைகளும்
  • பொருளாதார, சமூக நல் வாழ்வுக்கான உரிமை
  • பூர்வக்குடி மூத்தோர் , பெண்கள், குழந்தைகள் , இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் புறக்கணித்தல் மற்றும் வன்முறைக்கு எதிரான உரிமைகள்
  • மேம்பாட்டுக்கான முன் தகுதி மற்றும் செயல்திட்ட ஒதுக்கல் உரிமை
  • சுகாதாரத்துக்கான உரிமை
நிலம் மற்றும் மூல வளங்கள்
உறுப்புகள் 25 – 32
  • நிலம் மற்றும் தொன்மையான வளங்கள் மீது ஆன்மீக தொடர்புகொள்ளும் உரிமை
  • பாரம்பரிய நிலம் மற்றும் மூல வளங்களை உடமையாக்குதல், பயன்படுத்துதல், மேம்படுத்துதல் உரிமைகள்
  • நிலம் மற்றும் மூல வளங்கள் மீது பாரம்பரிய சட்டங்கள் கொண்டிருக்கும் உரிமை
  • முன் ஒப்புதல் இல்லாமல் நிலம் அபகரிக்கப்படுவதற்கு எதிரான உரிமை மற்றும் இழப்பீடு அல்லது திரும்பப்பெறும் உரிமை
  • முன் அனுமதி இல்லாமல் பாரம்பரிய நிலம் ராணுவமயமாக்கலுக்கு எதிரான உரிமை
  • பண்பாட்டு அறிவுசார் சொத்துரிமை உரிமைகள்
  • நிலம் மற்றும் மூல வளங்களின் மேம்பாட்டினை முடிவு செய்யும் உரிமை
தன் ஆட்சி மற்றும் பூர்வக்குடி சட்டங்கள்
உறுப்புகள் 33 – 37
  • அடையாளப்படுத்துதல், உறுப்பினராகுதல் மற்றும் குடிமகனாகும் உரிமை
  • தனி நிறுவனப்படுத்துதல், பழக்க வழக்கங்கள் உரிமை
  • தனிநபர் பொறுப்பளிப்பு உரிமை
  • தொடர்புகள், உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு உரிமை
  • உடன்படிக்கைகள் மற்றும் ஒப்பந்தங்களை அங்கீகரித்தல், கண்காணித்தல், அமலாக்கம் செய்தல் உரிமை
அமலாக்கம்
உறுப்புகள் 38 – 42
  • பிரகடனங்களின் இலக்குகளை எட்டுவதற்காக அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முன் கலந்தாலோசிக்கும் உரிமை
  • பிரகடனங்களில் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளை அனுபவிக்க அரசுகளால் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கும் உரிமை
  • அரசு மற்றும் இதர தரப்புகளுடன் பிரச்சனைகள் மற்றும் தகராறுகள் ஏற்படும் போது நியாயமான நேர்மையான விசாரணை பெறும் உரிமை
  • பிரகடனங்களை செயலாக்க அளிக்க வேண்டிய பங்களிப்புகளுக்கு ஐ.நா அமைப்பு மற்றும் அரசுகளுக்கு இடையிலான அமைப்புகள் பொறுப்பேற்றல்
  • பிரகடன விதிகள் அனைத்தையும் செயலாக்கம் செய்ய ஐ.நா மற்றும் பூர்வக்குடி பிரச்சனைகளுக்கான நிரந்தர அமைப்பு உள்ளிட்ட நிறுவனங்கள் பொறுப்பேற்றல்
உறுதிமொழியின் இயல்பு
உறுப்புகள் 43 – 44
  • உறுதியளிக்கப்பட்டுள்ள உரிமைகள் பூர்வக்குடி மக்கள் சுய-மரியாதையுடனும் நலத்துடனும் சக வாழ்வு வாழ்வதற்கான குறைந்தபட்ச தேவைகளாக கருதப்படுகின்றன.
  • பூர்வக்குடிகளைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் இருபாலர்களுக்கும் அனைத்து உரிமைகளும் சமமாக உறுதியளிக்கப்படுகின்றன.

சமகால வளர்ச்சித் திட்டங்களும் வளர்ச்சிக்கான உரிமையின் அவசியமும்

  • தற்போது நிலவும் உலகளாவிய சவால்கள் குறித்து முன்னர் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இவற்றின் வளர்ச்சிக்கான உரிமைகளைப் பெறுவதில் வர்த்தகம், முதலீடு, நிதி, உதவி (நல்கை), கடன், தொழில்நுட்பம், படைப்பாக்க உணர்வு, உலகளாவிய ஆளுகை என அனைத்திலும் தொடர் விளைவுகளைக் கொண்டுள்ளன. இத்தகைய சிக்கலான, பன்முகப்பட்ட பிரச்சனைகள் அச்சத்திலிருந்தும் தனிநபர் விருப்பு வெறுப்புகளிலிருந்தும் சுதந்திரத்தையும் பாதிகாப்பினையும் அளிக்கும் உச்சக் கொள்கை இலக்குகளைக்கொண்ட ஒருங்கிணைந்த, ஒத்திசைவான அணுகுமுறைகளுடன் கையாளப்பட வேண்டும். இந்த உச்ச நோக்கப் பார்வைகள் அனைத்து கொள்கை உருவாக்கங்களிலும் எதிரொலிக்க வேண்டும்.
  • உதாரணமாக, மர்ரகேஷ் உடன்படிக்கை உருவாக்கிய உலக வர்த்தக ஒப்பந்தம் இவ்வாறு கூறுகிறது. “வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு முயற்சிகள் வளம் குன்றா வளர்ச்சி எனும் இலக்குக்கு ஏற்ப உலகின் மூல வளங்களை மிகச் சிக்கனமாகப் பயன்படுத்துவதை அனுமதிப்பதுடன் மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தும் நோக்கிலும் , முழு வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்தும் வகையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்”.
  • இதேபோன்று, ஐக்கிய நாடுகள் பொது அவையும் தமது வளர்ச்சிக்கான உரிமை ஆண்டுத் தீர்மானத்தில், மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதுடன் பன்னோக்கு வர்த்தக பேச்சுவார்த்தைகளின் வழிகாட்டுதல்களின்படி மானுட மேம்பாட்டினையும் உறுதிப்படுத்தும்படியும், பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட உலகளாவிய பங்குதாரர்களை வலுப்படுத்தும்படியும் வலியுறுத்துகிறது.

  • மேலும் தமது உறுப்பு நாடுகள் வளர்ச்சிக்கான உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் தங்கள் கூட்டுத்தகுதிகளை மேம்படுத்தும் வண்ணம் உலக வர்த்தக அமைப்பு, பன்னோக்கு பன்னாட்டு வங்கிகள், உலகளாவிய வர்த்தகம், முதலீட்டு, நிதி அமைப்புகள் போன்ற அமைப்புகளுக்கான ஒரு செயல்திட்ட வரையறைகளை இத்தீர்மானம் வழங்குகிறது.
  • வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் பரவலாக நடைபெற்றுவரும் இச்சூழலிலும் வர்த்தக-முதலீட்டு உடன்படிக்கைகளால் மனித உரிமைகள் பாதிப்புக்குள்ளாகும். புரிதல் அதிகரித்துள்ள நிலையில் அரசுகள் புதிய வர்த்தக, முதலீட்டு உடன்படிக்கைகளில் கையெழுத்திடும்போது தமது மனித உரிமைகள் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும் அவற்றின் வளர்ச்சிக்கான உரிமைகளை உள்ளடக்கும் முயற்சிகளை எடுக்க வேண்டும்.
  • இதேபோல், பிரகடனத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கடமைகள் உள்நாட்டு வளங்களைத் திரட்டுவதில் கூட பலவீனமாக உள்ள நாடுகளுக்குள் மிகவும் தேவைப்படும் குழுக்கள், மக்கள் மற்றும் நாடுகளை இலக்காகக் கொண்டு, தேவையான அதிகாரப்பூர்வ உதவிகள் மற்றும் நிதி நல்கைகளுடன் பன்னாட்டு உதவிகளும் தேவையான அளவுக்கும் வெளிப்படையாகவும், பதில் சொல்லும் பொறுப்புகளுடனும் வழங்குவதையும் கோருகிறது.

உலகமயமாக்கல் : கருத்தியல், காரணங்கள், பின் விளைவுகள்

பொருள்

  • நாடுகளுக்கு இடையிலான ஒரு ஊடாட்ட அமைப்பை வலியுறுத்தும் உலகமயமாக்கல் ஒரு ஒருங்கிணைந்த உலகப்பொருளாதாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது. இந்த ஊடாட்டம் பல வகை வெளிப்பாடுகளில் செயல்படுகிறது; சமூகம் முதல் அரசியல் வரை; பண்பாடு முதல் பொருளாதாரம் வரை; தொடர்பு அமைப்புகளை மேம்படுத்தும் தொழில்நுட்பங்கள், உள்கட்டமைப்பு, போக்குவரத்து என பல வடிவங்களில் வெளிப்படுகின்றன.
  • ஒரு ஒருங்கிணைந்த உலக பொருளாதாரத்தினை உருவாக்குவதில் பன்னாட்டு வர்த்தகமும் எல்லை கடந்த முதலீடுகளும் முக்கிய விழுமியங்களாக ஏற்கப்பட்டுள்ளன. அதன் உள்ளார்ந்த கூட்டுத்தன்மையை எடுத்துக்கொண்டால் ஒருங்கிணைந்த ஊடாட்டங்கள் குறித்த கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. கோட்பாட்டளவில், அது எதிர்மறை ஊடாட்டம், நேர்மறை ஊடாட்டம் என இரு துணை உறுப்புகளைக் கொண்டுள்ளது.
  • முன் வர்த்தகத் தடைகள் மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை அகற்றக்கோரும் சுதந்திரம் வர்த்தகக் கொள்கையாகும். பின்னது, உலகளாவிய பொருளாதாரச் சட்டங்கள், கொள்கைகளைத் தரப்படுவதில் கவனம் செலுத்துகிறது.
  • எந்தவொரு கொடுக்கப்பட்ட வரையறையிலும் உலகமயமாக்கல் என்பது அதன் உண்மை அர்த்தத்தில் பொருளாதார, சமூக அடிப்படையிலான ஒரு பன்னாட்டு வலைப்பின்னலை உருவாக்குவது ஆகும்.
  • உலகமயமாக்கல் என்ற்ற சொல்லாடல் முதன்முதலில் எப்போது பயன்படுத்தப்பட்டது என்று பார்த்தால் 1930இல் கல்வியில் மனித அனுபவம் குறித்து சீராய்வு செய்யும் நூலான ‘புதிய கல்வியை நோக்கி’ எனும் புத்தகத்தில் கையாளப்பட்டுள்ளது. 1897இல் ‘பன்னாட்டு பெருநிறுவனங்கள்’ எனும் சொல்லாடல் சார்லஸ் ரஸ்ஸல் டாஜெல் என்பவரால் எழுதப்பட்ட பொருளாதார இலக்கியத்தில் கையாளப்பட்டுள்ளது.
  • பெரிய நிறுவனங்கள், பெரும் அறக்கட்டளைகளை அழைக்க இச்சொல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரு சொல்லாடல்களும் 1960 முதல் 1980 வரை பொருளாதாரம் மற்றும் பிற சமூக அறிவியல் துறைகளின் வல்லுநர்களால் மாற்றி, மாற்றி பயன்படுத்தப்பட்டு வந்தன.
  • உலக வங்கி , ‘உலகில் பொருளாதாரங்கள் மற்றும் சமுதாயங்கள் இடையே அதிகரிக்கும் ஒருங்கிணைப்பு’ என்று உலகமயமாக்கலை வரையறை செய்கிறது. உலகமயமாக்கல் என்ற சொல் கருத்தியல் சட்டகத்துக்குள் மாற்றம் பெற்று புதிய சிந்தனைகளை முடுக்கிவிட்டுள்ளது. இது உலக பொருளாதார உரையாடல்களில் புதிய வியாக்கியானங்களையும் விவாதங்களையும் தூண்டியுள்ளது.
  • பனிப்போர் முடியும் தருவாயில், பொருளாதாரம் மற்றும் தகவல் பரிமானத்தில் மேலும் மேலும் உள் இணைக்கப்படும் ஒரு உலகை பிரதிநிதித்துவப்படுத்த இக்கருத்தாக்கச் சொல்லாடல் பயன்படுத்தப்பட்டது. ஒரு தனி-உலகளாவிய செயல்முறை மாற்றங்களின் ஒரு மாதிரியாகச் செயல்பட்டு, உலகமயமாக்கல், இதுவரையான பன்னாட்டு பொருளாதார வடிவங்களை மாற்றி எழுதுவதும் ஒரு அடிப்படை வளர்சிதை மாற்றத்தை அவிழ்க்கிறது.
  • உலக வர்த்தக அமைப்பின் (WTO) படி, “உலகமயமாக்கல் அல்லது மக்கள் மற்றும் நாடுகளின் உள் இணைப்புகள், பரஸ்பர சார்பு நிலைகள் அதிகரிப்பு, பொதுவாக ஒரு ஒன்றுக்கொன்று சார்ந்த அங்கங்களால் புரிந்துகொள்ளப்படுகிறது: பொருட்கள், சேவைகள், நிதி, மக்கள் மற்றும் கருத்தாக்கங்கள் எல்லைகடந்து சுதந்திரமாகச் செல்வதை அதிகரிக்கச் செல்வதை ஆதரிக்கும் கொள்கைகள் மற்றும் நிறுவனமாற்றங்களை தேசிய, பன்னாட்டு அளவில் ஊக்குவிப்பது.
  • உலகமயமாக்கலால் நேர்மறை விளைவுகள் மட்டுமல்லாமல் எதிர்மறை விளைவுகளும் ஏற்படுகின்றன என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது”.
  • சமூக-பொருளாதார மற்றும் அரசியல்-தொழில்நுட்ப அடிப்படைகளில் உலகமயமாக்கல் கருத்தியலுக்கு விளக்கம் அளிப்பதில் உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒரு சிறந்த பார்வையை வழங்குகிறது.
  • கோட்பாடு மற்றும் நடைமுறைக்கான முக்கிய அங்கம் என்ற அளவில் உலகமயமாக்கல் பல்வேறு களங்களுக்கு இடையிலான ஒரு இணைப்பு கட்டமைக்கப்படுவதை முன்னிறுத்துகிறது.
  • பன்னாட்டு நிதியம் அமைப்பு 2002இல் உலகமயமாக்கலின் அடிப்படையான நான்கு கோட்பாடுகளை அடையாளப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உலகமயமாக்கல் சொல்லாடல் குறித்த ஐயங்கள் பெருமளவு தெளிவுக்குள்ளாகின்றன. அவை பின்வருமாறு: வர்த்தகமும், பரிவர்த்தனைகளும், மூலதன நகர்வுகளும், முதலீடுகளும், இடம்பெயர்தலும் மக்கள் நகர்வுகளும், அறிவுப் பரவலாக்கம் ஆகியன ஆகும்.

உலகமயமாக்கலின் திசை வழிகள்

உலகமயமாக்கல் செயல்முறை பல்வேறு மட்டங்களிலான அமைப்புகளின் தொகுப்பாகக் காணப்படுகிறது.

பொருளாதார பரிமாணம்

  • சுதந்திரமான வர்த்தகம் என்பதே உலகமயமாக்கலின் அச்சாணி ஆகும். இதில் மாற்றுக்கருத்துக்கே இடம் இல்லை. உலகமயமாக்கலின் உயர்மட்டச் செயலாக்கம் இதுதான்.
  • கடந்த அண்மைக்காலங்களில் பொருளியல் உலகமயமாக்கல் செயல்முறைகளில் ஐக்கிய மாநிலங்கள், ஜப்பான், சீனா போன்ற வளர்ந்த நாடுகளின் குழுவே ஆதிக்கம் செலுத்துகிறது என்பது கண்கூடு.
  • பன்னாட்டு நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், மெக்டொனால்ட் போன்றவையும் பன்னாட்டு அமைப்புகளான பன்னாட்டு நிதியம், உலக வங்கி போன்றவையுமே உலகச் சந்தையை நிர்ணயம் செய்பவதில் முன்னணி அமைப்புகளாக உள்ளன.
  • பாட்டரி கூற்றுப்படி, பொருளியல் உலகமயமாக்கல் என்பதை மூன்று மாறுபட்ட அம்சங்கங்களின் கூட்டிணைப்பாகக் கொள்ளமுடியும். அவை பின்வருமாறு:
  1. தகவல் மற்றும் தொழில்நுட்பம் மூலம் உலகம் முழுவதும் மூலதன நகர்வு அதிகரிப்பு.
  2. உலக வர்த்தக அமைப்பு, பன்னாட்டு நிதியம், உலக வங்கி போன்ற மீ-தேசிய அமைப்புகள் பரவலாக்கம்.
  3. நாடுகளுக்கிடையிலான நிறுவனங்களின் செல்வாக்கு அதிகரிப்பு.

பண்பாட்டுப் பரிமாணம்

  • பண்பாடுகள், கருத்தியல்களின் உலகப் பரிமாற்றங்களுக்கான முகவராக உலகமயமாக்கல் செயல்படுகிறது. உலகமயமாக்கல் எனும் சொல் பெரும்பாலும் நவீனத் தன்மை எனும் சொல்லாடலுடன் இணைத்துப் பயன்படுத்தப்படுகிறது.
  • பெரும்பாலும் இம்மாதிரியான செயல்முறைகள், ஒரு “ஒற்றைத் தரப்படுத்தப்பட்ட “நடவடிக்கைகள், கருத்தியல்கள், மதிப்பீடுகளைத் திணித்தல், ஒரு ஒற்றைப் பண்பாட்டு உலகை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கி முடுக்கிவிடப்படுவனவாகவே இருக்கும். உலக வர்த்தகம் உருவான காலத்தில் இருந்தே இதன் தடயங்களைக் காணலாம்.
  • ஒவ்வொரு நுகர்பொருளும் ஒரு பண்பாட்டை வெளிப்படுத்துகிறது. உதாரணமாக, உள்நாட்டு சந்தையில் மேற்கத்திய ஜவுளித்துறை பன்னாட்டு நிறுவனங்கள் வருகையைத் தொடர்ந்துதான் இந்திய ஆடை வடிவமைப்புத்துறை ‘டெனிம்’ ரக துணையை ஏற்றுக்கொண்ட்து. மேலும் தொடர்பு தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கும் நன்றி சொல்ல வேண்டும்.
  • குறிப்பாக முகநூல், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் பல பகுதிகள் மற்றும் மாறுபட்ட பண்பாடுகளைச் சேர்ந்த தனிநபர்களை ஒருங்கிணைப்பதால் இந்தப் பரிமாற்றம் எளிதாக நிகழ்கிறது. இவ்வாறு ரத்தமும் சதையுமாக நிகழ்ந்த ஊடாட்டங்கள் தற்போது புதிய செயற்கை மற்றும் மீ வெளி ஊடாட்டங்களில் நிகழ்கின்றன.
  • இது உலக துணைப் பண்பாடுகளின் புதிய ஒழுங்கை மாற்றி அமைப்பதில் பெரிதும் உதவுகிறது. இதன் பொருளில், சிலர் விமர்சிப்பதைப் போன்று பொருளில், சிலர் விமர்சிப்பதைப் போன்று உலகமயமாக்கல் என்பது அமரிக்கமயமாக்கல் அல்லது மேற்கத்தியமயமாக்கல் என்பதாகக் கொள்ள முடியாது.
  • பண்பாட்டுச் சொல்லாடலில் அது பரஸ்பர கொடுத்து வாங்கலுக்கான ஒரு சட்டகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. எனவே, மேற்கத்தியம் அல்லாத சமுதாயங்கள் எவ்வாறு மேற்கத்திய பண்பாட்டு அம்சங்களை எவ்வாறு தகவமைக்கிறது என்பதோடல்லாமல் மேற்கத்திய அமைப்புகள் அன்னிய மதிப்பீடுகளை அனுபவப்பூர்வமாகவோ இல்லாமலோ எவ்வாறு உள்ளீர்த்துக் கொள்கிறது என்பதையும் பொருத்து அமைகிறது.

அரசியல் பரிமாணம்

  • 1945இல் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததில் இருந்து குடிமக்கள் நலன்கள் மீதான அரசுக் கட்டுப்பாடுகள் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இக்காலகட்டம், மனித உறவுகள் புலத்தில் அரசு சாரா அமைப்புகள், மீ-தேசிய அமைப்புகள் போன்ற அரசு-சாரா நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றுவது அதிகரித்து வந்துள்ளதைக் குறிக்கிறது.
  • ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பன்னோக்கு அமைப்புகளின் உறுப்பினர்கள் அதிகரிக்கத் தொடங்கியது. சோவியத் யூனியன் போன்ற நாடுகளில் கம்யூனிசத்தின் வீழ்ச்சி, மண்டல நிறுவனங்களின் அதிகரிப்பு போன்றவை இக்காலகட்டத்தில்தான் உருவானது என்பதை ஒருவர் கவனிக்கலாம்.
  • கருத்தியல்ரீதியாக, தேசிய உணர்வுகளுக்குப் பதில் ஒரு பன்னாட்டுப் பண்பாடு அல்லது பெரு நகரப் பண்பாட்டை உலகமயமாக்கல் முன்வைக்கிறது. ஒரு ஒற்றை உலக அரசு சாத்தியமில்லை எனினும், யதார்த்தத்தில், நாடுகள் மத்தியிலான ஒத்துழைப்பு கணிசமான அளவு அதிகரிப்பது சாத்தியமே ஆகும்.
  • அரசு –சாரா பிரிவினரின் பங்கு தொடர்ந்து அதிகரிப்பதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகளின் மீதான தனது கட்டுப்பாடுகள் தளர்வதால் அரசு அமைப்புகள் தமது இறையாண்மையை இழக்க நேரிடும் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

உலகமயமாக்கலின் நிறைகள்

அ) பொருளாதாரம், சமூகம், அரசியல், பண்பாடு அடிப்படையில் உலக நாடுகள் ஒன்றையொன்று சார்ந்து ஒத்துழைக்க வேண்டிய நிலை உருவாகும்.

ஆ) சுதந்திர வர்த்தகத்தால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்; போட்டி உயரும்; உழைப்பு இடம்பெயரும்; பொருளாதார வளம்; பொருளாதார நடவடிக்கைகளில் அரசின் தலையீடு குறையும்,.

இ) தொழில்நுட்பம் மற்றும் அன்னிய மூலதன் ஊடுருவலால் ஏழை நாடுகளில் பொருளாதார சமநிலை உருவாகும்.

ஈ) வறுமையை ஒழிக்கவும் பொருளாதார வளம் பெருகவும் உதவும்.

உ) பண்பாடுகளுக்கு இடையில் பரிமாற்றமும், பல் பண்பாட்டுச் சூழலும் ஊக்கம் பெறும்.

உலகமயமாக்கலின் இடையூறுகள்

அ) உலகமயமாக்கல் கொள்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் மிக முக்கிய விமர்சனம் “உலகமயமாக்கலால் பணக்காரர்கள் மேலும் பணக்காரர் ஆவர்; ஏழைகள் மேலும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுவர்”. என்பதாகும்.

ஆ) அறிவுசார் சொத்துரிமைத் திருட்டு அதிகரிக்கும் அபாயம்

இ) மூல வளங்களின் சமத்துவமற்ற பகிர்வு.

ஈ) பன்னாட்டு குழும நிறுவனங்களின் விருப்பங்களை நிறைவேற்றும் நிலைக்கு அரசுகள் தள்ளப்படும்.

“முதல் இடத்துக்கான போட்டி : உலகமயமாக்கலின் உண்மைக் கதை” எனும் புத்தகத்தில், உலகமயமாக்கல் என்பது “உலகைச் சுருக்கி, தொலைவுகளைக் குறைத்து மூடிய ஒரு நிலையை உருவாக்குகிறது. பயன்கள் அடிப்படையில் மட்டும் உலகின் எந்த ஒரு மூலையில் உள்ள ஒருவருடன் தொடர்புகொள்வதை அனுமதிக்கிறது” என்று தாமஸ் லார்ஸன் கூறியுள்ளார்.

“மிக அண்மைக்காலமான 1960 முதல் 1998 வரையான காலக்கட்டத்தில் ஏற்பட்ட உலக வர்த்தக, முதலீடுகளின் துரித வளர்ச்சி நாடுகளுக்கு உள்ளும் நாடுகளுக்கு இடையிலும் என இரு பக்கங்களிலும் சமத்துவமின்மையை அதிகரிக்கச் செய்துள்ளது. உலக மக்கள் தொகையில் வெறும் 20 விழுக்காடாக உள்ள பணக்காரர்கள் உலகின் மொத்த செல்வத்தில் 86 விழுக்காட்டினை அனுபவிக்கின்றனர். ஆனால் 80 விழுக்காடு ஏழைகள் உலக செல்வத்தில் வெறும் 16 விழுக்காட்டினை மட்டுமே அடைகிறார்ஜள்” என்று யு.என்.டி.பி அறிக்கை கூறுகிறது.

இந்தியாவும் உலகமயமாக்கலும்

  • இந்தியாவைப் பொறுத்தவரை உலகமயமாக்கல் என்பது இந்தியப் பொருளாதாரத்தினை உலகப் பொருளாதாரத்துடன் ஒருங்கிணைப்பது என்ற அளவில் புரிந்து கொள்ளப்படுகிறது. எனவே, இந்தியாவின் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளில் அன்னிய நேரடி மூலதனத்தினை (எப்.டி.ஐ) அனுமதிப்பதை அடிநாதமாகக் கொண்ட ஒரு சூழலை உருவாக்கக்கூடிய வகையில் இந்திய பொருளாதாரம் திறந்து விடப்பட வேண்டும் என்பதை இக்கறுத்து வலியுறுத்துகிறது.
  • இதனால் உள் நாட்டுச் சந்தையில் பன்னாட்டு குழும நிறுவனங்கள் நுழைவதற்குத் தடையாக இருக்கும் கட்டுப்பாடுகளையும் தடைகளையும் அகற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
  • பொருளாதார திசைவழியில் இந்தியா அண்மைக்காலமாக காணும் ஏற்றம், 1991இல் பொருளாதார மந்தத்தைத் தொடர்ந்து, மிகப்பெரிய அளவில் நிதிநிலை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் கொண்டுவரப்பட புதிய பொருளாதாரக் கொள்கையினால் (நியு எக்கனாமிக் பாலிடி) விளைந்த ஏற்றம் ஆகும்.
  • அது, பொதுவுடமை மாதிரித் தடைகளில் இருந்து இந்தியப் பொருளாதாரத்தை விடுவித்து, இந்திய பொருளாதாரத்தின் அடித்தளக்கட்டமைப்பை மாற்றி அமைத்தது. இதனால் ஏழைகள் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. அன்னிய மூலதனத்துக்கு இடமளித்து ஒரு ஏற்றுமதிசார் சூழலை ஆதரிக்கும் கொள்கைகள் கொண்ட ஒருநாட்டில் வரவு செலவு சமநிலை (பேலன்ஸ் ஆஃப் பேமெண்ட்ஸ்) புதிய பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிப்பதாக அமையும்.
  • பணவீக்கம் ஆண்டுக்கு 17 விழுக்காடு அளவுக்கு உயரும்போதும் செலாவணி கையிருப்பு சுமார் பில்லியன் அளவை எட்டும்போதும் நெருக்கடி உருவாகிறது. மேலும், நிதிப் பற்றாக்குறை உருவாகி, பொருளாதாரம் நிலை குலையும்.
  • இந்தியா 1991 முதல் பின்பற்றும் புதிய பொருளாதாரக் கொள்கை தாராளவாதம் , தனியார்மயம், உலகமயமாக்கல் (எல்.பி.ஜி) என்றும் அழைக்கப்படுகிறது. தேசியப் பொருளாதாரத்தை வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் உலகளாவிய போட்டிக்கு ஏற்றவாறு மாற்றுவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
  • இதனால் ஏற்படும் அபரிமிதமான மாற்றத்துக்குத் தொழிற்துறை, வர்த்தகம், நிதி மூன்றும் உள்ளாகிறது. உள்நாட்டிலும் வெளி உலகிலும் ஏற்படும் பொருளாதார நிர்ப்பந்தங்கள் காரணமாக உலகச் சந்தையின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் வேகமான மாற்றங்களைக் கொண்டுவருவது அவசியமாகிறது.
  • எல்.பி.ஜி-யின் விளைவாக 1990-களில் மேற்கொள்ளப்பட்டமாற்றங்களால் ஏற்பட்ட விளைவுகளைக் கீழ்க்கண்டவாறு தொகுக்கலாம்:

பொதுத்துறையின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள மூன்று தொழிற்பிரிவுகள்

  1. ஆயுதங்கள், வெடிமருந்துகள், ராணுவத் தளவாடங்கள், ராணுவ விமானத் தளவாடங்கள், போர்க்கப்பல்கள்
  2. அணு ஆற்றல்
  3. ரயில் போக்குவரத்து

அ) மதிப்பிழப்பு (டிவேல்யுவேசன்):

18-19 என்ற அளவில் முக்கிய அன்னிய செலவாணிகளுக்கு எதிராக தேசிய செலவாணியின் மதிப்பு குறைக்கப்பட்டது உலகமயமாக்கலை நோக்கி மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கை ஆகும். வரவு செலவு சமநிலை நெருக்கடியைத் தீர்க்க இது உதவுகிறது.

ஆ) முதலீடுகளைத் திரும்பப் பெறுதல் (டி இன்வெஸ்ட்மென்ட்):

தனியார்மயத்தை ஊக்குவிக்கும் வகையில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை அரசு தனியாருக்கு விற்கத் தொடங்கியது.

இ) உரிமக் கட்டுப்பாடுகள் (லைசன்ஸ் ராஜ்) அகற்றம்:

தாராளச் சந்தையை ஊக்குவிக்கும் வகையில் தொழில்கள் தொடங்க விதிக்கப்பட்டிருந்த ஏராளமான உரிம முறைகள் அகற்றப்பட்டன.இதனால் ஏராளமான தொழில்கள் அரசின் உரிமக் கட்டுப்பாடுகளில் இருந்து விடுவிக்கப்பட்டன.

ஈ) அன்னிய நேரடி முதலீடு (எஃப்.டி.ஐ):

அன்னிய நிறுவனங்கள் இந்திய சந்தைகளில் நேரடியாக முதலீடுகள் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் அன்னிய முதலீடுகள் தாராளமாகத் திறந்து விடப்பட்டன. 2018இல் ஒற்றை வணிக முத்திரை சில்லறை வணிகம், கட்டுமானம் உள்ளிட்ட பல தொழில்களில் 100% அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது.

உ) ஏகபோக வர்த்தகத் தடைச் சட்டம் (எம்.ஆர்.டி.பி) நீக்கம்:

இந்தியாவில் நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளைத் தடுக்கவும் தொழில்களில் ஏகபோக ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும் ஏகபோக வர்த்தகத் தடைச் சட்டம், 1969 (எம்.ஆர்.டி.பி) கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் தாராளமயத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்திய அரசால் நீக்கப்பட்டது. இதற்குப் பதிலாக, அதாவது ஏகபோகங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பதிலாக போட்டியை ஊக்குவிக்கும் வகையிலான போட்டிகள் சட்டம், 2002 இல் கொண்டுவரப்பட்டது.

உரிமம் பெறுவது சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ள தொழில்கள் பின்வருமாறு

  • மது பானங்கள் வடிப்பு ஆலை
  • புகையிலைப் பொருள்கள் மற்றும் அதன் துணைபொருள்கள் உற்பத்தி
  • மின்னணு விண்வெளி மற்றும் ராணுவ தளவாடங்கள் : அனைத்து வகைகளும்
  • வெடி பொருள்கள், பாதுகாப்பு பியூஸ்கள், துப்பாக்கி பவுடர், நைட்ரோ செல்லுலோஸ், தீப்பெட்டிகள்
  • அபாய வேதிப்பொருள்க:
  • மருந்துகள், மருந்து பொருள்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!