Samacheer NotesTnpsc

தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் Notes 10th Social Science Lesson 16 Notes in Tamil

10th Social Science Lesson 16 Notes in Tamil

16. தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

அறிமுகம்

  • பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பாதியில் ஐரோப்பியர்கள் இந்தியத் துணைக் கண்டத்தின் மீது தங்கள் அரசியல் அதிகாரத்தை நிறுவினர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவை இணைப்பதில் அக்கறை செலுத்திய அவர்கள் இந்தியச் சமூகத்தை மறு ஒழுங்கமைவு செய்தனர். புதிய வருவாய் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.
  • ஆங்கிலேயரின் பயன்பாட்டுக் கோட்பாடுகள், கிறித்தவ சமய நெறிகள் ஆகியவற்றின் செல்வாக்கிற்கு உட்பட்டிருந்த அவர்கள், இந்திய மக்களின் மீது தங்களது பண்பாட்டு மேலாதிக்கத்தைத் திணிக்கவும் முயன்றனர்.
  • இந்தியாவின் உள்நாட்டு மரபுகள், நாகரிகம் பழமையானவைகளாகக் கருதப்பட்டன. இந்தியச் சமூகமானது பழமையானதொன்றும் அதில் மனிதர்கள் சாதி, பாலினம், மொழி, நம்பிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபடுத்தப்படுவதாகவும் சித்தரிக்கப்பட்டது.
  • இந்நிலை இந்தியர்களிடையே எதிர்விளைவினை ஏற்படுத்தியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கல்வியறிவு பெற்ற இந்தியர்கள் இந்த அவமானத்தை உணர்ந்தனர்.
  • இதற்குப் பதிலளிக்கும் வகையில் தங்கள் சமூகப் பண்பாட்டு அடையாளங்களைக் கடந்த காலத்தினுள் தேடினர். இருந்தபோதிலும் காலினிய விவாதங்களில் சில நியாயங்கள் இருப்பதை உணர்ந்த அவர்கள் சீர்திருத்திக் கொள்ளவும் தயாராயினர்.
  • இச்செயல்பாட்டின் முன்னோடிகளுள் ராஜாராம் மோகன்ராயும் ஒருவராவார். ராய் மற்றும் அவரைப் போன்ற பலரும் சமூகச் சீர்திருத்தவாதிகள் என அறியப்பட்டனர்.
  • ஐரோப்பிய பண்பாட்டு மேலாதிக்கத்திற்கு எதிராக அவர்கள் ஒரு சமூகப் பண்பாட்டுச் செயற்களத்தை உருவாக்கிக் கொண்டிருந்தனர். இதன் விளைவே நவீன இந்தியாவின் சமய, சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கு வழிகோலியது. இக்குறிப்பிட்ட வரலாற்று வளர்ச்சி நிகழ்வு “இந்திய மறுமலர்ச்சி” என அழையாளப்படுத்தப்பட்டது.
  • மறுமலர்ச்சியானது ஒரு கருத்தியல் பண்பாட்டு நிகழ்வாகும். அது நவீனம், பகுத்தறிவு, சமூகத்தின் முற்போக்கான இயக்கம் ஆகியவற்றுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது.
  • திறனாய்வுச் சிந்தனை அதன் வேர்களில் உள்ளது. மானுடப் பகுத்தறிவுடைமையையும் சமத்துவத்தையும் மையமாகக் கொண்ட ஒரு தத்துவ மரபாக இருப்பது அதன் சிறப்பியல்பாகும்.
  • மனிதநேயமும் , மனிதர்களுக்கு அவர்களின் கண்ணியத்தை மறுக்கிற அடிப்படைவாத மத நடவடிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்குவதும் மறுமலர்ச்சியின் அகத்தூண்டுதல்களாகும்.
  • மனிதநேயம் எனும் இச்சித்தாந்தம், சமூக வாழ்வு மற்றும் அறிவு ஆகிய துறைகளோடு மொழி, இலக்கியம், தத்துவம், இசை, ஓவியம், கட்டடக்கலை இன்னபிற போன்ற அனைத்துத் துறைகளிலும் படைப்பாற்றலைத் தூண்டி எழுப்பியது.

தமிழ் மறுமலர்ச்சி

  • காலனியத்தின் பண்பாட்டு ஆதிக்கமும் மனிதநேயத்தின் எழுச்சியும் இந்தியத் துணைக் கண்டத்தின் சமூகப்-பண்பாட்டு வாழ்வில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது. நவீன தமிழ்நாடும் அத்தகைய வரலாற்று மாற்றத்தை அனுபவித்தது.
  • தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் அவர்களின் அடையாள கட்டுமானத்தில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தன.
  • அச்சு இயந்திரத்தின் அறிமுகமும், திராவிட மொழிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட மொழியியல் ஆய்வுகளும் மற்றும் பலவும் தமிழ்மறுமலர்ச்சி செயல்பாடுகளுக்கு அடியுரமாய் விளங்கின.
  • அச்சு இயந்திரத்தின் வருகைக்குப் பின்னர் வந்த தொடக்க ஆண்டுகளில் சமயம் சார்ந்த நூல்களை வெளியிடும் முயற்சிகளே பெருமளவில் மேற்கொள்ளப்பட்டன. நாளடைவில் படிப்படியாக நிலைமைகள் மாறின. சமயச்சார்பற்ற எனச் சொல்லத்தகுந்த நூல்களும் வெளியிடுவதற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

அச்சுத் தொழில்நுட்பத்தின் வருகை

  • ஐரோப்பிய மொழிகள், தவிர்த்து அச்சில் ஏறிய மொழிகளில் முதல் மொழி தமிழ் மொழியாகும். மிக முன்னதாக 1578இல் தம்பிரான் வணக்கம் எனும் தமிழ் புத்தகம் கோவாவில் வெளியிடப்பட்டது.
  • 1709இல் முழுமையாக அச்சகம் சீகன்பால்கு என்பவரால் தரங்கம்பாடியில் நிறுவப்பட்டது. தொடக்ககால தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் 1812இல் வெளியிடப்பட்டது.
  • இதன் விளைவாக இக்காலப் பகுதியில் மிகவும் பழமையான செவ்வியல் தமிழ் இலக்கியங்களை வெளியிடுவதில் தமிழ் அறிஞர்களிடையே புத்தெழுச்சி ஏற்பட்டது.
  • பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அறிஞர்களான சி.வை. தாமோதரனார் (1832 – 1901) உ.வெ.சாமிநாதர் (1855 – 1942) போன்றவர்கள் தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்களை மீண்டும் கண்டறிவதற்காகத் தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவழித்தனர்.
  • சி.வை. தாமோதரனார் பனையோலைகளில் கையால் எழுதப்பெற்றிருந்த பல தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களைப் பதிப்பித்தார். அவர் பதிப்பித்த நூல்களில் தொல்காப்பியம், வீரசோழியம், இறையனார் அகப்பொருள், இலக்கண விளக்கம், கலித்தொகை மற்றும் சூளாமணி ஆகியவை அடங்கும்.
  • தமிழறிஞர் மீனாட்சி சுந்தரனாரின் மாணவரான உ.வே. சாமிநாதர் செவ்வியல் தமிழ் இலக்கிய நூல்களான சீவகசிந்தாமணி (1887), பத்துப்பாட்டு (1889), சிலப்பதிகார்ம (1892), புறநானூறு (1894), புறப்பொருள் வெண்பா மாலை (1895), மணிமேகலை (1898), ஐங்குறுநூறு (1903), பதிற்றுப்பத்து (1904) ஆகியவற்றை வெளியிடும் முயற்சிகளை மேற்கொண்டார்.
  • இது தமிழ் மக்களுக்கு தங்களது பாரம்பரியம் குறித்து வியப்பைத் தந்தது. ஆகவே பண்டைய செவ்வியல் இலக்கியங்கள் மீண்டும் கண்டறியப்பட்டதையும் அவை வெளியிடப்பட்டதையும் தமிழ் மறுமலர்ச்சியின் அடித்தளமாகக் கருதலாம்.
  • இவ்வாறு பழம்பெரும் நூல்கள் வெளியிடப்பட்டது. தமிழ் மக்களிடையே தங்கள் வரலாறுமரபு, மொழி, இலக்கியம் மற்றும் சமயம் ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏர்படுத்தியது.
  • நவீனத் தமிழர்கள் தங்களது சமூகப் பண்பாட்டு அடையாளங்களை, பண்டைய தமிழ் செவ்வியல் இலக்கியங்கள் வாயிலாக கண்டறிந்தனர். அவை மொத்தத்தில் சங்க இலக்கியங்கள் என்றழைக்கப்படுகின்றன.
  • மொழியியலாளர்கள், வரலாற்று அறிஞர்களும் தமிழ் அறிஞர்களும் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையை அங்கீகரித்துள்ளனர். அவை தமிழ் நிலப்பகுதிக்குள் ஆரியர்கள் வருவதற்கு முன்பாகவே ஒரு தனியான, சுதந்திரமான இருப்பைப் பெற்றிருந்தது.
  • 1816இல் புனித ஜார்ஜ் கோட்டையில் கல்லூரியினை நிறுவிய F.W.எல்லிஸ் (1777 – 1819), தென்னிந்திய மொழிகள் தனிப்பட்ட மொழிக்குடும்பத்தை சார்ந்தவை, அவை இந்தோ-ஆரியக்குடும்ப மொழிகளோடு தொடர்பில்லாதவை எனும் கோட்பாட்டை உருவாக்கினார்.
  • ராபர்ட் கால்டுவெல் (1814 – 1981) திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம் எனத் தலைப்பிடப்பட்ட நூலில் இக்கோட்பாட்டை 1856இல் விரிவுபடுத்தினார்.
  • திராவிட மொழிகளுக்கிடையில் நெருக்கமான ஒப்புமை இருப்பதையும் அப்படியான ஒப்புமை சமஸ்கிருதத்துடன் இல்லை என்பதையும் நிறுவினார். மேலும் தமிழின் தொன்மையையும் நிலைநாட்டினார்.
  • இக்காலகட்டத்தைச்ச் சேர்ந்த அறிவார்ந்த தமிழர்கள் தமிழ்/ திராவிட/ சமத்துவம் மற்றும் சமஸ்கிருதம்/ஆரியம்/பிராமணியம் ஆகிய இரண்டுக்குமிடையேயுள்ள அடிப்படை வேறுபாடுகளை அடையாளம் கண்டுகொண்டனர்.
  • அவர்கள் தமிழ் மொழியே திராவிடர்களின் மொழியென்றும் தமிழர்கள் பிராமணர்கள் அல்ல என்றும் அவர்களின் சமூக வாழ்வில் சாதிகளில்லை, பாலின வேறுபாடில்லை, சமத்துவம் நிலவியது எனவும் வாதிட்டனர்.
  • தமிழ்நாட்டில் திராவிட உணர்வு தோன்றி வளர்வதற்கு தமிழ் மறுமலர்ச்சி பங்களிப்பைச் செய்தது. இச்சிந்தனைகள் பி.சுந்தரனாரால் (1855 – 1897) எழுதப்பெற்ற மனோன்மணியம் எனும் நாடக நூலில் இடம் பெற்றுள்ள தமிழ்மொழி வாழ்த்துப் பாடலில் மொழியர்க்கப்பட்டுள்ளது.
  • தமிழ் மறுமலர்ச்சி பிராமணியத்தின் பண்பாட்டு மேலாதிக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கினார்.
  • ஆபிரகாம் பண்டிதர் (1859 – 1919) தமிழ் இசைக்குச் சிறப்புச் செய்த்தோடு தமிழ் இடை வரலாறு குறித்து நூல்களையும் வெளியிட்டார்.
  • சி.வை. தாமோதரனார், உ.வே.சாமிநாதர். திரு.வி.கல்யாண சுந்தரம் (1883 – 1953) , பரிதிமாற் கலைஞர் (1870 -1903), மறைமலையடிகள் (1876 – 1950) , சுப்பிரமணியபாரதி (1882 – 1921), ச.வையாபுரி (1891 – 1956). கவிஞர் பாரதிதாசன் (1891 – 1964) ஆகியோர் தங்களுக்கே உரித்தான வழிகளில், தங்களின் எழுத்துக்கள் மூலம் தமிழ் இலக்கியத்தின் புத்தெழுச்சிக்குப் பங்களிப்பு செய்தனர்.
  • இதே சமயத்தில், பௌத்தத்திற்குப் புத்துயிரளித்த ஒரு தொடக்ககால முன்னோடியான M.சிங்காரவேலர் (1860 – 1946) காலனிய சக்தியை எதிர்கொள்வதற்காக பொதுவுடமைவாதத்தையும் சமத்துவத்தையும் வளர்த்தார்.
  • பண்டிதர் அயோத்திதாசரும் (1845 – 1914) பெரியார் ஈ.வெ.ராமசாமியும் (1879 – 1973) சமூகரீதியாக உரிமைகள் மறுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்கள் பிரிவினரின் உரிமைகளுக்காகப் பகுத்தறிவுச் சித்தாந்தத்தை உயர்த்திப் பிடித்தனர். இத்துடன் இருபதாம் நூற்றாண்டின் தமிழ்மொழி இயக்கங்களான தனித்தமிழ் இயக்கம் மற்றும் தமிழ் இசை இயக்கம் போன்றவைகள் சமஸ்கிருதத்தின் செல்வாக்கிற்கு ஆட்படாத தூய தமிழை உருவாக்குவதில் தாக்கத்தை ஏற்படுத்தின.

பரிதிமாற் கலைஞர் (வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரி)

  • வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரி (1870 – 1903) மதுரை அருகே பிறந்தார். சென்னை கிறித்தவக் கல்லூரியில் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றினார்.
  • தமிழின் மீது சமஸ்கிருதம் கொண்டிருந்த செல்வாக்கை அடையாளம் கண்ட தொடக்க காலத் தமிழ் அறிஞர்களில் ஒருவர். அதனால் தனக்கே பரிதிமாற் கலைஞர் என தூய தமிழ்ப் பெயரைச் சூடிக் கொண்டவர். தமிழ் மொழி ஒரு செம்மொழி என்றும், எனவே சென்னைப் பல்கலைக்கழகம் தமிழை ஒரு வட்டாரமொழியென அழைக்கக் கூடாதென முதன்முதலாக வாதாடியவர் அவரே.
  • மேற்கத்திய இலக்கிய மாதிரிகள் மீது இவர் கொண்டிருந்த தாக்கத்தின் விளைவாக 14 வரிச்செய்யுள் வடிவத்தை தமிழுக்கு அறிமுகம் செய்தார்.
  • மேலும் இவர் நாவல்களையும் நாடகங்களையும் அதிக எண்ணிக்கையிலான அறிவியல் கட்டுரைகளையும் எழுதினார். ஆனால் வருந்தத்தக்க முறையில் 33 ஆண்டுகளே நிறைவு பெற்றிருந்த அவர் இளம் வயதில் இயற்கை எய்தினார்.

மறைமலை அடிகள்

  • மறைமலை அடிகள் (1876 – 1950) தமிழ் மொழியியல் தூய்மைவாதத்தின் தந்தை என்றும் தனித்தமிழ் இயக்கத்தை (தூய தமிழ் இயக்கம்) உருவாக்கியவர் எனவும் கருதப்படுகின்றார்.
  • சங்க இலக்கிய நூல்களான பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு ஆகியவற்றிற்கு விளக்கவுரை எழுதியுள்ளார்.
  • அவர் இளைஞராக இருந்தபோது சித்தாந்த தீபிகா எனும் பத்திரிகையில் பணிபுரிந்தார். பின்னர் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார்.
  • பிராமணர் அல்லாதோர் இயக்கத்தின் மீது பற்றுக்கொண்டார். அவருடைய ஆசிரியர்களாக பி.சுந்தரனார், சோமசுந்தர நாயகர் ஆகிய இருவரும் அவருடைய வாழ்க்கையில் முக்கியச் செல்வாக்கு செலுத்தியோராவர்.

தனித்தமிழ் இயக்கம்

  • தூய தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும் சமஸ்கிருதத்தின் செல்வாக்கு தமிழ் மொழியிலிருந்து அகற்றப்படுவதையும் மறைமலை அடிகள் ஊக்குவித்தார். இவ்வியக்கம் தமிழ்ப் பண்பாட்டின் மீது குறிப்பாக தமிழ் மொழி, இலக்கியம் ஆகியவை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • தமிழ் மொழியின் மீது செல்வாக்குச் செலுத்தும் வேற்று மொழி வார்த்தைகளை அடையாளங்கண்டு அவற்றை அகற்றுகின்ற செயல்பாடு பத்தொன்பதா, நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே தொடங்கப்பட்டிருந்தாலும் தனித் தமிழ் இயக்கம் தொடங்கியது 1916 எனப் பொதுவாகக் கூறப்படுகிறது.
  • மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை இவ்வியக்கம் உருவாக்கப்பட்டதில் முக்கியப்பங்கு வகித்தார். வேதாச்சலம் என்ற தனது பெயரை அவர் தூய தமிழில் மறைமலை அடிகள் என மாற்றிக்கொண்டார். அவருடைய ஞானசாகரம் எனும் பத்திரிகை அறிவுக்கடல் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  • அவருடைய சமரச சன்மார்க்க சங்கம் எனும் நிறுவனம் பொது நிலைக் கழகம் என்று பெயரிடப்பட்டது. இவ்வியக்கம் தமிழ் சமுதாயத்திலிருந்த இந்தி, சமஸ்கிருதம் மற்றும் பிராமண மேலாதிக்கத்தை விமர்சித்தது.
  • தமிழ் சொற்களுக்குள் புகுந்துவிட்ட சமஸ்கிருதச் சொற்களுக்கு இணையான பொருள்தரக்கூடிய தமிழ் சொற்களடங்கிய அகராதி ஒன்றை நீலாம்பிகை தொகுத்தார்.
  • இவ்வியக்கம் பிற்காலத்தில் தமிழ் சமூகத்திலிருந்த பிராமணிய மற்றும் சமஸ்கிருத மரபுகளை எதிர்கொண்ட சமூக இயக்கங்களுக்கு வழிவகுத்தது.

திராவிட இயக்கத்தின் எழுச்சி

  • இந்தியாவில் பிராமணர்கள் தங்களது பிறப்பின் அடிப்படையில் சிறந்த சமூக அந்தஸ்தை அனுபவித்தனர். மேலும் மிகப்பெரும் சமூக முன்னுரிமைகளையும் பெற்றிருந்தனர்.
  • சென்னை மாகாணத்தில் சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் குறிப்பாக அரசியல், கல்வி மற்றும் அரசாங்க வேலைவாய்ப்புகளிலும் அவர்களே ஆதிக்கம் செலுத்தினர்.
  • 1911ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி சென்னை மாகாண மக்கள் தொகையில் பிராமணர்களின் எண்ணிக்கை 3 விழுக்காட்டிற்கு சற்றே அதிகமாயும் பிராமணரல்லாதோரின் எண்ணிக்கை 90 விழுக்காடெனவும் காட்டியது.
  • மேலும் 1901 முதல் 1911 வரையிலான பத்தாண்டுகளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்த பிராமணர் எண்ணிக்கை 4071ஆகவும் அதே பிராமணமரல்லாதோரின் எண்ணிக்கை 1035 ஆகவும் இருந்தது.
  • அன்று எவ்வாறு மக்கள் தொகை வகைப்படுத்தப்பட்டிருந்ததோ அதனடிப்படையில் ஏனைய குழுக்களைச் சார்ந்த 306 இந்தியக் கிறித்தவர்களையும் 69 முகமதியர்களையும் 225 ஐரோப்பிய மற்றும் யுரேசியர்களையும் உள்ளடக்கியிருந்தது.
  • இத்தகைய சூழலில் திராவிட இயக்கம் பிராமண மேலாதிக்கத்திற்கு எதிராகப் பிராமணர் அல்லாதவர்களைப் பாதுகாக்கும் இயக்கமாக உதயமானது.
  • 1909இல் பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக மதராஸ் பிராமணரல்லாதோர் சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
  • 1912இல் டாக்டர் சி.நடேசனார் எனும் மருத்துவர் மதராஸ் ஐக்கிய கழகம் எனும் அமைப்பை உருவாக்கினார் இது பின்னாளில் மதராஸ் திராவிடர் சங்கம் என்று மாறியபின் திராவிடர்களின் மேம்பாட்டிற்கான உதவிகளைச் செய்தது.
  • பிராமணர் அல்லாத பட்டதாரிகளுக்கு உதவுவது அவர்களைக் கற்கவைப்பது ஆகியவற்றோடு அவர்களது குறைபாடுகள் குறித்து விவாதிக்க முறையான கூட்டங்களையும் நடத்தியது.
  • இதே சமயத்தில் நடேசனார் தங்கும் விடுதி வசதியில்லாததால் பிராமணரல்லாத மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்ட்தால் அதைச் சரிசெய்யும் வகையில் திருவல்லிக்கேணியில் (சென்னை) ஜூலை 1916இல் திராவிடர் இல்லம் என்ற பெயரில் ஒரு தங்கும் விடுதியை நிறுவினார். மேலும் பிராமணர் அல்லாத மாணவர்களின் நலன் கருதி இவ்வில்லம் ஒரு இலக்கிய அமைப்பையும் கொண்டிருந்தது.

தென்னிந்திய நல உரிமைச்சங்கம் (நீதிக்கட்சி)

  • முதல் உலகப்போர் நடந்துகொண்டிருந்த நிலையில் ஆங்கில அரசாங்கம் போருக்குப் பின்னர் இந்தியாவில் பிரதிநிதித்துவ அமைப்புகளை அறிமுகம் செய்வது குறித்து பரிசீலனை செய்து கொண்டிருந்தது.
  • அப்படிப்பட்ட அரசியல் சீர்திருத்தங்கள் பிராமணர்களின் அரசியல் அதிகாரத்தை மேலும் வலுவடையச் செய்யும் என அஞ்சிய கல்வி கற்ற பிராமணர் அல்லாதவர்கள் தங்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டிக் கொள்ள முடிவு செய்தனர்.
  • 1916 நவம்பர் 20இல் டாக்டர் நடேசனார், சர்வ் பிட்டி தியாகராயர், டி.எம். நாயர் மற்றும் அலமேலுமங்கை தாயாரம்மாள் உட்பட 30 முக்கிய பிராமணர் அல்லாத தலைவர்கள் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை (South Indian Liberal Federation) உருவாக்க ஒருங்கிணைந்தனர்.
  • இதேசமயம் 1916 டிசம்பரில், விக்டோரியா பொது அரங்கில் நடைபெற்ற கூட்டமொன்றில் பிராமணரல்லாதோர் அறிக்கை வெளியிடப்பட்டது. இவ்வறிக்கை பிராமணரல்லாத சமூகங்களின் கருத்துக்களைத் தெளிவுபடக் கூறியது. மேலும் சென்னை மாகாணத்தின் பிராமணரல்லாதோர்களின் பொதுவான நிலையை அளவீடு செய்தது.
  • இவ்வமைப்பு தொடங்கி வெளியிட்ட மூன்று செய்தித்தாள்களாவன; கட்சியின் கொள்கைகளைப் பரப்புரை செய்வதற்காகத் தமிழில் திராவிடன், ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ், தெலுங்கில் ஆந்திர பிரகாசிகா ஆகிய பத்திரிகைகளை வெளியிட்டது.
  • மாகாண அரசுகளில் இரட்டையாட்சி முறையை அறிமுக செய்த பின்னர் மாண்டெகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையில் 1920இல் முதல் தேர்தல் நடைபெற்றது.
  • நீதிக்கட்சி தேர்தலில் வெற்றிபெற்று இந்தியாவின் முதல் அமைச்சரவையை சென்னையில் அமைத்தது. A.சுப்பராயலு சென்னை மாகாணத்தின் முதலமைச்சரானார்.
  • மேலும் நீதிக்கட்சி 1920 – 1923 மற்றும் 1923 – 1926 ஆகிய ஆண்டுகளில் அரசமைத்தது. காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தைப் புறக்கணித்த சூழலில் நீதிக்கட்சி 1937 இல் தேர்தல் நடைபெறும் வரை ஆட்சி தொடர்ந்து நீடித்தது.
  • 1937 தேர்தல்களில், முதன் முதலாகப் பங்கேற்ற இந்திய தேசிய காங்கிரஸ் நீதிக்கட்சியை படுதோல்வி அடையச் செய்தது.
  • பிராமணர் அல்லாதோர் அறிக்கையில் “சென்னை மாகாணத்திலுள்ள 4 கோடியே 1 ½ லட்சம் மக்களில் 4 கோடிகளுக்கு குறைவில்லாதவர்கள் பிராமணர் அல்லாதவர்களே, சென்னை மாகாணத்தின் அரசியல் சூழல் அவர்களை தங்களுக்கு உரிமையுள்ள பங்கினை எடுத்துக் கொள்ள இடமளிக்கவில்லை” என சுட்டிக் காட்டியது. மேலும் “ஆங்கில அரசின் உண்மையான நீதி மேலும் வாய்ப்புகளுக்கான சமத்துவம்” எனும் ஆங்கிலேயக் கொள்கைகளின்படி நடைபெறும் அரசே இந்தியர்கள்களின் நலன்களுக்கு உகந்தது என வாதிட்டு “நாங்கள் ஆங்கிலேய அரசை ஆழமாக நேசிக்கிறோம் விசுவாசத்துடன் பற்றுக் கொண்டுள்ளோம்” என்று அறிவித்தது.

திட்டங்களும் செயல்பாடுகள்

  • நீதிக்கட்சியே நாட்டில் பிராமணர் அல்லாதவர்களின் மூலாதாரமாய் விளங்கிற்று. நீதிக்கட்சி அரசாங்கம் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்தி அரசியல் தளத்தில் அவர்களுக்கென இடத்தை உருவாக்கியது.
  • தமிழ்நாட்டினுடைய சமூகநீதி மரபுத்தொடர்ச்சியானது தனது இருப்புக்கு, நீதிக்கட்சி உருவாகி வளர்ந்து ஆட்சியிலிருந்த ஆண்டுகளுக்குக் கடமைப்பட்டுள்ளது.
  • சாதி மறுப்புத் திருமணங்களைக் கட்டுப்படுத்திய சட்டச் சிக்கல்களை நீதிக் கட்சியினர் அகற்றியதோடு பொதுக் கிணறுகளையும் நீர் நிலைகளையும் ஒடுக்கப்பட்ட பிரிவு மக்கள் பயன்படுத்துவதை தடுத்த தடைகளைத் தகர்த்தனர்.
  • ஒடுக்கப்பட்ட பிரிவு குழந்தைகள் பொதுப்பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டுமென நீதிக்கட்சியின் அரசு ஆணை பிறப்பித்தது. இச்சமூகக் குழுக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கென 1923இல் தாங்கும் விடுதிகள் உருவாக்கப்பட்டன.
  • நீதிக்கட்சியின் கீழிருந்த சட்டமன்றம் தான் முதன் முதலாக தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை 1921இல் அங்கீகரித்தது. இத்தீர்மானம் பெண்களுக்கென இடத்தை ஏற்படுத்தியதால் 1926இல் முத்துலட்சுமி அம்மையார் இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராக முடிந்தது.
  • பல்வேறு சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக நீதிக்கட்சி வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தொடர்பான சட்டங்களை இயற்றும் பணிகளை மேற்கோண்டது. சமூக நீதியை நிலைநாட்டுவதின் ஒரு பகுதியாக பல்வேறு சாதிகளையும் சமூகங்களையும் சார்ந்தவர்களுக்கு அரசுப் பணிகளில் சேர்வதற்கு சமமான வாய்ப்புகளை உறுதி செய்யும் பொருட்டு இரண்டு வகுப்புவாரி அரசாணைகள் (1921 செப்டம்பர் 16 மற்றும் 1922 ஆகஸ்ட் 15) இயற்றப்பட்டன.
  • நிர்வாக அதிகாரங்களை அனைத்து சமூகத்தினரும் பங்கிட்டுக் கொள்வதை ஊக்குவிக்கும் வண்ணம், அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய 1924இல் பணியாளர் தேர்வு வாரியத்தை நீதிக்கட்சி அமைத்தது. இம்முறையைப் பின்பற்றி பிரிட்டிஷ் இந்திய அரசு 1929இல் பொது பணியாளர் தேர்வாணையத்தை உருவாக்கியது.
  • இவைகள் தவிர சமய நிறுவனங்களை சீர்திருத்துவதிலும் நீதிக்கட்சி கவனம் செலுத்தியது. தமிழ்நாடு பெரும் எண்ணிக்கையிலான கோவில்களைக் கொண்டுள்ளது, அவை பெரும் செல்வத்தைப் பெற்றிருந்தன.
  • பொதுவாக இச்சொத்துக்கள் அனைத்தும் சமூகத்தின் உயர்சாதியினரின் முற்றுரிமையில் சுரண்டப்பட்டன. மேலும் இது பொதுச்சொத்துக்கள் தவறாக நிர்வகிக்கப்படுவதற்கு வழிகோலியது.
  • நீதிக்கட்சி 1926இல் இந்து சமய அறநிலையச் சட்டத்தை இயற்றியது. அதன்படி எந்தவொரு தனிநபரும், சாதிவேறுபாடின்றி கோவில்களின் நிர்வாகக் குழுக்களில் உறுப்பினராகவும் கோவிலின் சொத்துக்களை நிர்வகிக்கவும் வழிவகை செய்யப்பட்டது.

சுயமரியாதை இயக்கம்

  • சுயமரியாதை இயக்கம் (Self Respect Movement) அன்று நிலவிய சமூக, அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளில் இருந்த சீர்கேடுகளை விமர்சனம் செய்ததோடு தமிழ்நாட்டில் பிராமணர் அல்லாதவர்களின் மேம்பாட்டிற்கான ஒரு திட்டத்தையும் அறிமுகம் செய்தது.
  • சமூகத்தின் ஒதுக்கப்பட்ட மக்கள் பிரிவினரின் மீது அக்கறை கொண்ட இவ்வியக்கம் பிராமணர்களையும் அவர்களின் பண்பாட்டு மேலாதிக்கத்தையும் விமர்சனம் செய்தது.
  • சடங்குகளும் சம்பிரதாயங்களும் இல்லாத சடஹிகளற்ற பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடற்ற ஒரு சமூகத்தை இவ்வியக்கம் ஆதரித்தது. பகுத்தறிவும் சுயமரியாதையும் அனைத்து மனிதர்களின் பிறப்புரிமை எனப் பிரகடனம் செய்த இவ்வியக்கம் சுயாட்சியைக் காட்டிலும் இவை முக்கியமானவை எனும் கருத்தை உயர்த்திப் பிடித்தது.
  • பெண்களின் தாழ்வான நிலைக்கு எழுத்தறிவின்மையே காரணம் என அறிவித்த அவ்வியக்கம் அனைவருக்கும் கட்டாயத் தொடக்கக் கல்வியை வழங்கும் பணிகளை மேற்கொண்டது. பெண்களை அதிகாரம் உள்ளவர்களாக மாற்றுவதற்கு இயக்கம் நடத்திய சுயமரியாதை இயக்கத்தினர் சமூகத்தில் நிலவிய மூடநம்பிக்கைகளைக் கேள்விகளுக்கு உட்படுத்தினர்.
  • இவ்வியக்கம் பெண் விடுதலை கோருதல், மூடநம்பிக்கைகளை நீக்குதல் மற்றும் பகுத்தறிவை வலியுறுத்துதல் போன்ற கோரிக்கைகளை கோரியது. மேலும் இவ்வியக்கம் சீர்திருத்தத் திருமணம் அல்லது சுயமரியாதைத் திருமணங்களை ஆதரித்தது.
  • சுயமரியாதை இயக்கச் சொற்பொழிவுகளின் மையப் பொருளாக இருந்தது ‘இனம்’ ஆகும்.
  • திராவிட மக்களுடைய நீண்டகால வரலாற்றின் போக்கில் திராவிட மக்கள் ஆரிய பிராமணர்களால் திட்டமிட்டு ஒடுக்கப்பட்டதாக அச்சொற்பொழிவுகளில் விவாதிக்கப்பட்டன.
  • சுயமரியாதை இயக்கம் பிராமணர் அல்லாத இந்துக்களின் நலன்களுக்கான மட்டுமல்லாமல் இஸ்லாமியர்களின் நலனுக்காகவும் போராடியது.
  • இஸ்லாமின் மேன்மை மிகுந்த கோட்பாடுகளான சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை சுயமரியாதை இயக்கம் பாராட்டியது. இந்து சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் இஸ்லாத்தில் இணைவதன் மூலம் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் அடைகிறார்கள் என்று கருதியது.
  • முஸ்லிம் உயர்குடியினர் தமிழ்நாட்டு முஸ்லிம்களை திராவிடர்களாகவே கருதினர். இருந்தபோதிலும் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது போன்ற சில பழக்கங்களை பெரியார் விமர்சனம் செய்யத் தயங்கவில்லை.
  • இஸ்லாம் சமூகத்தில் சீர்திருத்த முன்முயற்சிகள் மேற்கொண்ட துருக்கியைச் சேர்ந்த முஸ்தபா கமால் பாட்சா, ஆப்கானிஸ்தானத்தைச் சேர்ந்த அமானுல்லா ஆகியோரை திராவிட முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டுமென பெரியார் கூறினார்.

பெரியார் ஈ.வெ.ரா

  • பெரியார் ஈ.வெ.ராமசாமி (1879 – 1973) சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர் ஆவார். இவர் ஈரோட்டை சேர்ந்த செல்வந்தரும் வணிகருமான வெங்கடப்பர் , சின்னத்தாயம்மாள் ஆகியோரின் மகனாவார்.
  • ஓரளவு முறையான கல்வியைக் கற்றிருந்தாலும் தன் தந்தையால் ஆதரிக்கப்பட்ட அறிஞர்களுடன் விமர்சன விவாதங்களில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
  • இளைஞராக இருந்தபோது ஒருமுறை வீட்டைவிட்டு வெளியேறிய அவர் பல மாதங்கள் வாரணாசியிலும் ஏனைய சமயம் சார்ந்த மையங்களிலும் தங்கியிருந்தார். வைதீக இந்து சமயத்துடன் ஏற்பட்ட நேரடி அனுபவங்கள் இந்து சமயத்தின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கைகளைத் தகர்த்தன.
  • வீடு திரும்பிய அவர் சில காலம் குடும்பத் தொழிலான வணிகத்தை கவனித்து வந்தார். அவருடைய சுயநலமற்ற பொதுச் சேவைகளும், தொலைநோக்குப் பார்வையும் அவரை புகழ்பெற்ற ஆளுமை ஆக்கின. ஈரோட்டின் நகரசபைத் தலைவர் பதவி (1918 – 1919) உட்பட பல பதவிகளையும் அவர் வகித்தார்.
  • 1917க்குப் பின்னர் பிராமணரல்லாத நீதிக்கட்சியின் எழுச்சிக்குப் பின்னர் சி.ராஜாஜியின் முன் முயற்சியினால் பெரியார் மற்றும் பி.வரதராஜுலு போன்ற பிராமணரல்லாத தலைவர்களும் காங்கிரஸ் கட்சியில் சேர்க்கப்பட்டனர்.
  • ஒத்துழையாமை இயக்கத்திற்கு (1920 -1922) ஆதரவாகத் தான் வகித்துவந்த அனைத்து அரசுப் பொறுப்புகளையும் அவர் ராஜினாமா செய்தார். லாபம் தரும் தனது வணிகத்தைக் கைவிட்டு செயலார்வமிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஆனார்.
  • காதிக்கு துணைநின்ற அவர் தமிழகத்தின் வீதிகளிலே கதர் விற்பனை செய்தார். மது விலக்கு இயக்கத்திற்கு ஆதரவாகத் தனது தோப்பிலிருந்த 500 தென்னை மரங்களை வெட்டினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலராகவும் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.
  • தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பெரியார் பதவி வகித்தபோது ஒடுக்கப்பட்ட மக்களின் கோவில் நுழைவு உரிமை குறித்த தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார்.
  • சாதி தர்மம் என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்குள்ளும் அதைச் சுற்றியுள்ள வீதிகளிலும் நுழைவது மறுக்கப்பட்டிருந்தது.
  • இப்படிப்பட்ட நடைமுறையினை வைக்கம் (திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு சுதேசி அரசு, தற்போது கேரள மாநிலத்திலுள்ள ஒரு நகரம்) மக்கள் எதிர்த்தனர்.
  • எதிர்ப்பின் தொடக்கக் கட்டங்களில் மதுரையைச் சேர்ந்த ஜார்ஜ் ஜோசப் பெரும்பங்கு வகித்தார். உள்ளூர் தலைவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் பெரியார் இந்த இயக்கத்திற்கு தலைமையேற்றதால் சிறையிலடைக்கப்பட்டார். மக்கள் அவை வைக்கம் வீரர் எனப் பாராட்டினர்.
  • இதேசமயத்தில் சேரன்மாதேவி குருகுலப் பள்ளியில், உணவு உண்ணும் அறையில் சாதி அடிப்படையிலான பாகுபாடு நிலவுவதைக் கேள்வியுற்று மனவருத்தமடைந்தார்.
  • இக்குருகுலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிதியுதவியின் வ.வே.சுப்பிரமணியம் எனும் காங்கிரஸ் தலைவரால் நடத்தப் பெற்றது. இதனைப் பெரியார் கண்டித்து எதிர்த்த பின்னரும் , குருகுலத்தில் நடைபெறும் சாதிப்பாகுபாட்டை காங்கிரஸ் தொடர்ந்து ஆதரித்ததால் மனமுடைந்தார்.
  • சட்டசபை போன்ற பிரதிநிதித்துவ அமைப்புகளில் பிராமணர் அல்லாதவர்களுக்கு இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதில் பெரியார் முனைப்புடன் இருந்தார். இது தொடர்பான ஒரு தீர்மானத்தை 1925இல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் குழுவின் வருடாந்திர மாநாட்டில் நிறைவேற்ற முயற்சி செய்து தோல்வியடைந்தார்.
  • இதுபோன்ற பிரச்சனைகளால் 1925இல் காங்கிரசை விட்டு வெளியேறினார். அந்த ஏமாற்றத்தைத் தொடர்ந்து, பெரியார் 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.
  • பகுத்தறிவுக் கருத்துகளை மக்களிடையே பரப்புவதில் மக்கள் தொடர்புச் சாதனங்களின் முக்கியத்துவத்தைப் பெரியார் புரிந்து கொண்டார்.
  • குடிஅரசு (1925), ரிவோல்ட் (1928), புரட்சி(1933), பகுத்தறிவு (1934), விடுதலை (1935) போன்ற பல செய்தித்தாள்களையும் இதழ்களையும் பெரியார் தொடங்கினார்.
  • சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள் குடிஅரசு ஆகும். பிராமணரல்லாதோர், பெண்கள், சமயத்தில் சிறுபான்மையினர் ஆகியோரின் எண்ணங்களை அது வெளிக்கொணர்ந்தது.
  • ஒவ்வொரு இதழிலும் சமூகம் பிரச்சனைகள் தொடர்பான தனது கருத்துகளைப் பெரியார் வழக்கமாக கட்டுரையாக எழுதினார். அவ்வப்போது சித்திரபுத்திரன் எனும் புனைப் பெயரில் கட்டுரைகளை எழுதினார்.
  • காலவோட்டத்தின் ஊடாகப் பெரியார் பல நாடுகளுக்குச் சென்றார். அந்நாடுகளைச் சேர்ந்த அறிவார்ந்த மக்களோடு உரையாடினார்.
  • சிங்கப்பூர் , மலேசியா (1929 – 30, 1954) எகிப்து, சோவியத் ரஷ்ய குடியரசு (தற்போதைய ரஷ்யா), கிரிஈஸ், துருக்கி, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் போர்த்துகல் (1931 – 1932) மற்றும் பர்மா (1954இல் நடைபெற்ற புத்தரின் 2500 வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளச் சென்றார்) ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்தார்.
  • சோவியத் ரஷ்யாவிலும் ஐரோப்பாவிலும் அவர் பெற்ற பயண அனுபவங்கள் அவரை சமதர்மக் கருத்துக்களின்பால் நாட்டம்கொள்ள வைத்தன.
  • பௌத்த சமய முன்னோடியும், தென்னிந்தியாவின் முதல் பொதுவுடைமைவாதியுமான சிங்காரவேலருடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தார்.
  • B.R.அம்பேத்கார் எழுதிய சாதி ஒழிப்பு (Annihilation of caste)எனும் நூலை, அந்நூல் வெளிவந்தவுடன் 1936இல் தமிழில் பதிப்பித்தார். B.R.அம்பேத்கார் அவர்களின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தனித்தேர்தல் தொகுதிக் கோரிக்கையை பெரியாரும் ஆதரித்தார்.
  • 1937இல் ராஜாஜின் தலைமையிலான அரசின் செயல்பாட்டினை எதிர்க்கும் விதமாக, பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக அறிமுகம் செய்ததற்கு எதிராகப் பெரியார் மக்கள் செல்வாக்கு பெற்ற இயக்கத்தை நடத்தினார்.
  • இந்தி எதிர்ப்புப் போராட்டமானது (1937 -39) தமிழ்நாட்டு அரசியலில் மிக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் போராட்டத்துக்காக பெரியார் சிறையில் அடைக்கப்பட்டார்.
  • பெரியார் சிறையில் இருந்தபோதே நீதிக்கட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்னர் நீதிக்கட்டி சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்தது. அதற்கு 1944 இல் திராவிடர் கழகம் (திக) எனப் புதுப்பெயர் சூட்டப்பெற்றது.
  • சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த ராஜாஜி (1952 – 54) பள்ளிக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்திய தொழில் கல்வி பயிற்சித் திட்டமானது, மாணவர்களுக்கு அவர்களின் தந்தையர்கள் செய்து வந்த தொழில்களில் பயிற்சியளிப்பதாக அமைந்தது.
  • இதை குலக்கல்வித் திட்டம் (சாதியை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறை) என விமர்சித்த பெரியார் இத்திட்டத்தை முழுமையாக எதிர்த்தார். இதற்கு எதிராக பெரியார் மேற்கொண்ட போராட்டங்கள் ராஜாஜியின் பதவி விலகலுக்கு இட்டுச் சென்றது.
  • கு.காமராஜ் சென்னை மாநிலத்தின் முதலமைச்சரானார். பெரியார் தன்னுடைய தொன்னூற்று நான்காவது வயதில் (1973) இயற்கை எய்தினார். அவரது உடல் சென்னையில் பெரியார் திடலில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பெரியாரின் இந்தி எதிர்ப்பு நிலைப்பாடு

  • தென்னிந்தியாவிலுள்ள சாதிமுறையானது வடஇந்தியப் பிராமணர்களின் வருகையோடு தொடர்புடையது என பெரியார் வலியுறுத்தினார். பண்டையத் தமிழ்ச் சமூகம் திணைகளை (நிலப்பகுதிகள்) அடிப்படையாகக் கொண்ட வேறுவகைப்பட்ட அடுக்கமைவைக் கொண்டிருந்ததாக அவர் கூறினார்.
  • அம்முறை சுற்றுச்சூழல், வாழ்வாதாரத்திற்கான வழிகள், மக்கள் மேற்கொண்ட தொழில் ஆகியவற்றால் தீர்மானிக்கப்பட்டிருந்தது என்றும் கூறினார். வட இந்திய எதிர்ப்பானது பெரியாரை இந்தி எதிர்ப்பு நிலைபாட்டை மேற்கொள்ள வைத்தது.

சமயம் குறித்து பெரியார்

  • முன்னேற்றமும் நீதியும் வழங்கப்பட வேண்டுமாயின் சமயம் ஒழிக்கப்பட வேண்டியதன் தேவையைப் பெரியாரின் அனுபவங்கள் அவருக்குக் கற்றுக் கொடுத்தன. ஏற்கனவே நிறுவப்பட்டிருந்த நடைமுறைகளான, நம்பிக்கை பண்பாடு, மரபு போன்றவற்றை கட்டுடைப்பதற்குப் பெரியார் நாத்திகவாதத்தை (கடவுள் மறுப்பு) முன் வைத்தார்.
  • சமயத்தின் இடத்தில் பகுத்தறிவு வைக்கப்பட வேண்டுமென்றார். “சமயம் என்றால் நீங்கள் மூட நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று பொருள்” என உறுதிபடக் கூறினார்.
  • பெரியார் தம் வாழ்நாள் முழுவதையும் தான் நிறுவிய சிந்தனையாளர்கள் அல்லது பகுத்தறிவாளர்கள் அமைப்புகள் மூலமாக மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் பரப்புரை செய்வதில் செலவழித்தார்.
  • கோவில்களில் நிலவிய பரம்பரை அர்ச்சகர்கள் முறையை அவர் எதிர்த்தார். சாதி அடிப்படையில் இல்லாமல், முறையான சமய அறிவைப் பெற்றுள்ள தகுதியுடைய தனி நபர்களும் அர்ச்சகர் ஆகலாம் என அவர் வாதிட்டார்.
  • பிராமண அர்ச்சகர்களையும் வேதச் சடங்குகளையும் புறக்கணிக்கும்படி அவர் மக்களை ஊக்குவித்தார். சடங்குகளற்ற சாதிமறுப்பு, சுயமரியாதை திருமணங்களைப் பரிந்துரைத்தார்.

பெரியார், ஒரு பெண்ணியவாதி

  • பெரியார் ஆணாதிக்க சமூகத்தை விமர்சித்தார். குழந்தைத் திருமணத்தையும் தேவதாசி முறையையும் கண்டனம் செய்தார். 1929 முதல் சுயமரியாதை மாநாடுகளில் , பெண்களின் மோசமான நிலை குறித்து குரல் கொடுக்கத் தொடங்கியதிலிருந்து, பெண்களுக்கு விவாகரத்து பெறுவதற்கும் சொத்தில் பங்கு பெறுவதற்கும் உரிமை உண்டு என ஆணித்தரமாக வலியுறுத்தினார்.
  • “திருமணம் செய்து கொடுப்பது” எனும் வார்த்தைகளை மறுத்த அவர் அவை பெண்களைப் பொருட்களாக நடத்துகின்றன என்றார். அவைகளுக்கு மாற்றாக திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்ட வாழ்க்கைத்துணை என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டினார். பெண்ணியம் குறித்து பெரியார் எழுதிய மிக முக்கியமான நூல் பெண் ஏன் அடிமையானாள்? என்பதாகும்.
  • பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப்படுவது அவர்களுக்குச் சமூகத்தில் நன்மதிப்பையும், பாதுகாப்பையும் வழங்கும் என பெரியார் நம்பினார். சொத்துக்கள், பாதுகாவலர்களாக இருத்தல் மற்றும் தத்தெடுத்தல் ஆகியவற்றில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை வேண்டுமென்றார்.
  • குடும்பக் கட்டுப்பாடு, கருத்தடை ஆகியவற்றை வலுவாக ஆதரித்த அவர் தாய்மை என்பது பெண்ணுக்கு பெருஞ்சுமையாக உள்ளது என்றார்.
  • 1989இல் தமிழக அரசு, மாற்றங்களை விரும்பிய சீர்த்திருத்தவாதிகளின் கனவை நனவாக்கும் வகையில் 1989ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து வரிசுரிமைச் சீர்திருத்தச் சட்டத்தை அறிமுகம் செய்தது.
  • அச்சட்டம் முன்னோர்களின் சொத்துக்களை உடைமையாகப் பெறுவதில் பெண்களுக்குச் சம உரிமை உண்டென்பதை உறுதிப்படுத்தியது. முன்மாதிரியாக அமைந்த இந்தச்சட்டம் தேசிய அளவிலும் இதுபோன்ற சட்டங்கள் இயற்றப்படுவதற்கு அடிப்படையாக அமைந்தது.

இரட்டைமலை சீனிவாசன்

  • இரட்டைமலை சீனிவாசன் (1859 -1945) தாத்தா எனப் பரவலாக அறியப்பட்ட இவர் 1859ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பிறந்தார். சாதிப்படிநிலைகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதி, சமத்துவம், சமூக உரிமைகள் ஆகியவற்றுக்காகப் போராடினார்.
  • அவருடைய தன்னலமற்ற சேவைக்காக ராவ்சாகிப் (1926), ராவ் பகதூர் (1930), திவான் பகதூர் (1936) ஆகிய பட்டங்களால் அவர் சிறப்புச் செய்யப்பட்டார்.
  • அவரது சுயசரிதையான ஜீவிய சரித சுருக்கம் 1939இல் வெளியிடப்பட்டது. இந்நூல் முதன்முதலாக எழுதப்பெற்ற சுயசரிதை நூல்களில் ஒன்றாகும்.
  • தீண்டாமையின் கொடுமைகளை அனுபவித்த இரட்டைமலை சீனிவாசன் உரிமைகல் மறுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தார். 1893இல் ஆதிதிராவிட மகாஜன சபை எனும் அமைப்பை உருவாக்கினார். ஒடுக்கப்பட்ட மக்களின் கூட்டமைப்பு மற்றும் சென்னை மாகாண ஒடுக்கப்பட்ட வகுப்பாரின் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளின் தலைவராகப் பணியாற்றினார்.
  • ஒடுக்கப்பட்ட மக்களோடு தொடர்புடைய கேள்விகள், பிரச்சனைகள் குறித்து இந்திய தேசியக் காங்கிரஸ் மற்றும் நீதிக்கட்சி தலைவர்களுடன் தொடர்ந்து விவாதித்தார். தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகளைச் சந்தித்த இரட்டைமலை சீனிவாசன் அவருடன் நெருக்கமானார்.
  • 1923இல் சென்னை மாகாண சட்டசபை உறுப்பினரான அவர் நீதிக்கட்சியில் தனது செல்வாக்கினை ஏற்படுத்தி ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் உரிமைக௳இயும் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்தார்.
  • B.R.அம்பேத்காரின் நெருக்கமானவரான அவர், லண்டனில் (1930 மற்றும் 1931) நடைபெற்ற முதல், இரண்டாம் வட்டமேஜை மாநாடுகளில் கலந்து கொண்டு சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் கருத்துக்களுக்காகக் குரல் கொடுத்தார். 1932இல் செய்துகொள்ளப்பட்ட பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களுள் அவரும் ஒருவர்.

மயிலை சின்னதம்பி ராஜா

  • மயிலை சின்னதம்பி ராஜா (1883 -1943) மக்களால் எம்.சி.ராஜா என அழைக்கப்பட்ட அவர் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலைவர்களில் முக்கியமானவர். ஒரு ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கிய அவர் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றுக்கான பல்வேறு பாடப்புத்தகங்களை எழுதினார்.
  • தென்னிந்திய நல உரிமைச் சங்கஹ்தை (நீதிக்கட்சி) உருவாக்கியவர்களில் ஒருவராவார். சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து சட்டமேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் உறுப்பினராவார் (1920 -1926). சென்னை சட்டசபையில் நீதிகட்சியின் துணைத் தலைவராகச் செயல்பட்டார்.
  • பின்னாளில் அவர் நீதிக்கட்சியிலிருந்து விலகினார். தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் எனக் கோரிய அவர் பொது நீர்நிலைகள், பாதைகள் முதல் இடுகாடுகள் வரைப் பயன்படுத்தும் உரிமை ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தோருக்கும் வேண்டுமெனக் கோரி பல பொதுக் கூட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தினார். மேலும் ஆதிதிராவிடர், ஆதிஆந்திரர் எனும் வார்த்தைகளைப் பயன்படுத்துமாறு பரிந்துரைத்தார்.
  • 1928இல் அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம் எனும் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக நீண்டகாலம் பணியாற்றினார்.
  • தொடக்கத்தில் தனித் தேர்தல் தொகுதி வேண்டுமெனக் கோரிய அவர் பூனா உடன்படிக்கைக்குப் பின்னர் அந்நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டு கூட்டுத்தொகுதி முறையை ஆதரித்தார்.

தமிழ்நாட்டில் தொழிலாளர் இயக்கங்கள்

  • இந்தியாவில் தொழில்கள் வளர முதல் உலகப்போர் (1914 – 1918) உத்வேகம் அளித்தது. போர்க்காலத்தேவைகளை நிறைவு செய்துவந்த இத்தொழிற்சாலைகள் மிக அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தியிருந்தன.
  • போர் முடிவடைந்ததால் போர்காலத் தேவைகளும் குறைந்தன. எனவே, அனைத்து தொழிற்சாலைகளிலும் ஆட்குறைப்பு செய்யப்பட்டன.
  • இத்துடன் ஏற்பட்ட விலைவாசி ஏற்றமும் தொழிலாளர் இயக்கங்கள் தோன்றுவதற்கு உந்து சக்தியாக அமைந்தன. அணி திரட்டப்பட்டத் தொழிலாளர்களின் பலத்தை உணர்ந்திருந்த தேசியவாதிகள் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு நல்கத் தொடங்கினர்.
  • சென்னை மாகாணத்தில் பி.பி.வாடியா, ம. சிங்காரவேலர், திரு.வி.கல்யாணசுந்தரம் போன்றவர்கள் தொழிலாளர் சங்கங்களை அமைப்பதில் முன்முயற்சி மேற்கொண்டனர்.
  • 1918இல் இந்தியாவின் முதல் தொழில் சங்கமான சென்னை தொழிலாளர் சங்கம் (Madras Labour Union) உருவாக்கப்பட்டது.
  • அகில இந்திய தொழிலாளர் சங்கத்தின் முதல் மாநாடு 1920 அக்டோபர் 31இல் பம்பாயில் நடைபெற்றது. பல தீர்மானங்கள் குறித்து பிரதிநிதிகள் விவாதித்தனர்.
  • தொழிலாளர்களின் பிரச்சனைகளில் காவல்துறை தலையிடுவதிலிருந்து பாதுகாப்பு, வேலையில்லாதவர்களுக்கென ஒரு பதிவேட்டைப் பராமரித்தல், உணவுப் பண்டங்களின் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடு, காயமடைந்தோருக்கு ஈட்டுத்தொகை மற்றும் உடல்நலக் காப்பீடு ஆகியவை இவற்றில் அடங்கும். இவைகளைத் தவிர தொழில் முதலாலிகளுக்கு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருப்பது போல தொழிலாளர்களுக்கும் அரசாங்கத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டுமெனப் பிரதிநிதிகள் கோரினர்.
  • சென்னை மாகாண தொழிலாளர் இயக்க நடவடிக்கைகளில் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார். ம.சிங்காரவேலர் (1860 – 1946) ஆவார்.
  • சென்னையில் பிறந்த அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மாநிலக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். இளமைக் காலத்தில் பயின்று பட்டம் பெற்றார்.
  • இளமைக் காலத்தில் பௌத்தத்தைப் பரிந்துரை செய்தார். அவர் தமிழ், ஆங்கில, உருது, இந்தி, ஜெர்மன், பிரெஞ்ச் மற்றும் ரஷ்யன் என பல மொழிகள் அறிந்திருந்ததோடு காரல் மார்க்ஸ், சார்லஸ் டார்வின் , ஹெர்பர்ட் ஸ்பென்சர், ஆல்பர்ட் ஐன்ஸ்டின் ஆகியோரின் கருத்துக்களைத் தமிழில் வடித்தவர்.
  • 1923இல் முதல் முதலாக மே தின விழாவை ஏற்பாடு செய்தவரும் அவரே. அவர் இந்திய பொதுவுடைமை (கம்யூனிஸ்ட்) கட்சியின் ஆரம்பகால தலைவர்களில் ஒருவராக இருந்தார்.
  • தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சனைகளைப் வெளிப்படுத்துவதற்காக தொழிலாளன் (Worker)என்ற பத்திரிக்கை வெளியிட்டார். பெரியாரோடு சுயமரியாதை இயக்கத்தோடும் நெருக்கமாக இருந்தார்.

இந்திய விடுதலைக்கு முன்பு மொழிப் போராட்டம்

  • பொதுவாக, மொழி என்பது அடையாளத்தின் வலிமையான குறியீடாகும், உணர்வுகளுடன் இயைந்து நிற்பது.
  • தமிழ்மொழி பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தனது மேன்மையை மீட்டுப் பெற்றது. மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்கம், பெரியாரின் மொழிச் சீர்திருத்தம் மற்றும் தமிழிசை இயக்கம் ஆகியவை தமிழுக்கு வலுச்சேர்த்தன. திராவிட உணர்வுக்கு இட்டுச் சென்ற தமிழ் மறுமலர்ச்சி நவீனத் தமிழ் மொழியின் வளர்ச்சியிலும் பெரும் பங்களிப்பைச் செய்தது.
  • ஆகம கோவில்களில் செய்யப்படும் சடங்குகள் தமிழில் செய்யப்படுவதில்லை. இசை நிகழ்ச்சிகளிலும் தமிழ் பாடல்கள் ஓரளவிலான இடத்தையே பெற்றிருந்தன.
  • ஆப்ரகாம் பண்டிதர் தமிழ் இசை வரலாற்றை முறையாகக் கற்றாய்ந்து, பழந்தமிழர் இசை முறையை மீட்டுருவாக்கம் செய்ய முயன்றார்.
  • 1912இல் தஞ்சாவூர் ‘சங்கீத வித்யா மாகாஜன சங்கம்’ எண்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதுவே தமிழிசை இயக்கத்தின் கருமூலமானது. இசை நிகழ்வுகளில் தமிழில் பாடல்கள் பாடப்படுவதற்கு இவ்வியக்கம் முக்கியத்துவம் வழங்கியது. தமிழிசையின் நிலை குறித்து விவாதிக்க 1943இல் முதல் தமிழிசை மாநாடு நடத்தப்பட்டது.
  • தமிழ்நாட்டில் வெவ்வேறு காலப்பகுதிகளில் இந்தி கட்டாயமொழியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. தமிழ்மொழிக்கும், பண்பாட்டிற்குமான அச்சுறுத்தலாகவே கருதப்பட்டது.
  • சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த ராஜாஜி இந்தி மொழியைப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக அறிமுகம் செய்தார். இது சென்னை மாகாணத்தில் கடுமையான எதிர்ப்பை உருவாக்கியது.
  • தமிழுக்கு மேலாஜ இந்தியை அறிமுகம் செய்வது திராவிடர்களுக்கான வேஎலைவாய்ப்பைகளை மறுப்பதாக அமையுமென பெரியார் அறிவித்தார்.
  • இந்திமொழி அறிமுகம்செய்யப்பட்டால் தமிழ்மொழி பாதிப்புள்ளாகும் என மறைமலை அடிகள் சுட்டிக் காட்டினார். இட்ந்ஹி எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் போராட்டத்தை பிராமணியத்திற்கும் தமிழின் மீதான சமஸ்கிருதத்தின் ஆதிக்கத்திற்கும் எதிரான கருத்தியல் போராகவே கருதினர்.
  • பிரமாணியத் தத்துவத்தைப் பரப்புவதற்கும் அதன்மூலம் சாதிப்படிநிலைகளையும், பாலின சமத்துவமின்மையையும் பாதுகாப்பதற்குமான வாகனமே சமஸ்கிருதம் என அவர்கள் கருதினர்.
  • போராட்டத்தின்போது பெருவாரியான மக்கள் கலந்துகொண்ட பொதுக்கூட்டங்களும் , பேரணிகளும், உண்ணாவிரதங்களும் அரங்கேறின. பல்லாயிரக்கணக்கான மக்கள் இப்போராட்டங்களில் பங்கேற்றனர்.

பெண்கள் இயக்கங்கள்

  • இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சென்னை மாகாணத்தில் பெண்களை வலிமையுள்ளவர்களாக மாற்றுதல் எனும் நோக்கத்துடன் பல பெண்ணிய இயக்கங்கள் நிறுவப்பெற்றன. அவைகளுள் தமிழ் நாட்டில் உருவான இந்தியப் பெண்கள் சங்கம் (Women’s India Association – WIA) அகில இந்தியப் பெண்கள் மாநாடு (All India Women’s conference – ALWC) ஆகியவை முக்கியமானவையாகும். இந்தியப் பெண்கள் சங்கம் (WIA) என்பது 1917இல் அன்னிபெசன்ட், டோரதி ஜின்னராஜதாசா, மார்கரெட் கசிண்ஸ் ஆகியோர்களால் சென்னை அடையாறு பகுதியில் தொடங்கப்பெற்றது.
  • இவ்வமைப்பு தனிநபர் சுகாதாரம், திருமணச் சட்டங்கள், வாக்குரிமை, குழந்தை வளர்ப்பு மற்றும் பொது வாழ்வில் பெண்களின் பங்கு ஆகியவை குறித்து பல்வேறு மொழிகளில் துண்டுப்பிரசுரங்களையும் செய்தி மடல்களையும் வெளியிட்டன. இதே சமயத்தில் இதியப் பெண்கள் சங்கம், பெண்கல்வி குறித்த பிரச்சனைகளைக் கையாள்வதற்காக 1927இல் அகில இந்திய பெண்கள் மாநாட்டை நிறுவியது.
  • மேலும் அரசு பெண்களின் மேம்பாட்டிற்காகப் பல கொள்கைகளை நடமுறைப்படுத்த வேண்டுமெனப் பரிந்துரை செய்தது.
  • பெண்களின் விடுதலை என்பது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். பெரியாரின் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தோர், பாலின சமத்துவம் மற்றும் பாலினம் குறித்த சமூகத்தின் உணர்வுகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காகப் பணியாற்றினர்.
  • தங்களுடைய கருத்துகளைப் பங்கிட்டுக் கொள்வதற்கான ஒரு இடத்தை பெண்களுக்கு இவ்வியக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. இவ்வியக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றிய பெண்கள் பலர் இருந்தனர்.
  • முத்துலட்சுமி அம்மையார், நாகம்மை, கண்ணம்மா, நீலாவதி, மூவலூர் இராமாமிர்தம், ருக்மணி அம்மாள். அலமேலு மங்கை தாயாரம்மாள், நீலாம்பிகை மற்றும் சிவகாமி சிதம்பரனார் ஆகியோர் அவர்களுள் முக்கியமானவர்கள் ஆவர்.
  • கடவுளுக்கு இறைப்பணி செய்யும் சேவகர்களாக இளம் பெண்களை இந்து கோவில்களுக்கு அர்ப்பணிக்கும் வழக்கம் இருந்தது அவ்வாறு அர்ப்பணிக்கப்பட்டோர் தேவதாசி என்று அறியப்பட்டனர்.
  • கடவுளுக்குச் செய்யப்படும் சேவை எனும் நோக்கில் அமைந்திருந்தாலும் நாளடைவில் இம்முறை பெரும் ஒழுக்கக்கேட்டிற்கும் பெண்களைத் தவறாகப் பயன்படுத்துவதற்கும் இட்டுச்சென்றது.
  • இத்தேவதாசி மூறையை ஒழிப்பதற்காகச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதற்காக நடைபெற்ற இயக்கத்தில் டாக்டர். முத்துலட்சுமி அம்மையார் முதலிடம் வகித்தார். ‘மதராஸ் (அர்பணிப்பைத் தடுத்தல்) தேவதாசி சட்டம் 1947’ எனும் சட்டம் அரசால் இயற்றப்பட்டது.
  • 1930இல் சென்னை சட்டமன்றத்தில் முத்துலட்சுமி அம்மையார் “சென்னை மாகாணத்தில் இந்து கோவில்களுக்குப் பெண்கள் அர்ப்பணிக்கப்படுவதை தடுப்பது” எனும் மசோதாவை அறிமுகப்படுத்தினார். பின்னர் தேவதாசி ஒழிப்புச் சட்டமாக மாறிய இம்மசோதா , இந்து கோவில் வளாகங்களிலோ அல்லது வேறு வழிபாட்டு இடங்களிலோ “பொட்டுக் கட்டும் சடங்கு” நடத்துவது சட்டத்திற்குப் புறம்பானதாகும் என அறிவித்தது. தேவதாசிகள் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டப்பூர்வமான அனுமதியை வழங்கியது. மேலும் தேவதாசி முறைக்கு உதவிசெய்கிற தூண்டிவிடுகிற குற்றத்தை செய்வோர்க்கு குறைந்தபட்சம் ஐந்தாண்டு சிறை தண்டனை என ஆணையிட்டது. இம்மசோதா சட்டமாக மாறுவதற்கு 15 ஆண்டுகள் காத்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!