Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Samacheer NotesTnpsc

தேர்தல் மற்றும் பிரதிநிதித்துவம் Notes 11th Political Science

11th Political Science Lesson 11 Notes in Tamil

தேர்தல் மற்றும் பிரதிநிதித்துவம்

வாக்குரிமை மற்றும் பிரதிநிதித்துவத்தின் பொருள் மற்றும் தன்மை

வாக்குரிமை மற்றும் தேர்தல் என்றால் என்னா?

இது பொதுத் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான ஒரு உரிமையாகும். ‘வாக்குரிமை’ எனும் சொல், ‘சுதந்திரம்’ என்று பொருள்படக் கூடிய ‘பிராங்க்’ என்ற ஆங்கிலோ-பிரெஞ்சு கலவைச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும்.

தேர்தல் என்பது தங்களின் சார்பாக யாரேனும் ஒருவரை அரசியல் தலைவராகவோ அல்லது பிரதிநிதியாகவோ அரசாங்கத்தில் பங்குபெற தேர்ந்தெடுப்பதற்காக வாக்களிக்கும் நடைமுறையாகும்.

  • இந்திய அரசமைப்பின் பகுதி XV, உறுப்புகள் 324 – 329 தேர்தலைப் பற்றியதாகும்.

பிரதிநிதித்துவம் என்றால் என்னா?

பிரதிநிதித்துவம் என்பது பிறருக்காக பேசும் நடவடிக்கை அல்லது பிறருக்காக செயல்படுதல் அல்லது பிரதிநிதித்துவம் பெறும் நிலையாகும்.

இந்திய அரசமைப்பில் “தேர்தல்கள்” என்னும் தலைப்பிலான பகுதி XV மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நமது அரசமைப்பினை உருவாக்கியவர்கள் இதில் உள்ள அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இதை அரசமைப்பின் ஓர் பகுதியாக இணைத்தனர். இம்முக்கிய காரணத்தினால் தான் ‘தேர்தல்’ என்னும் கருப்பொருளுக்கு நமது நாட்டில் அரசமைப்பிலான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னரே ‘தேர்தல்கள்’ என்பவை பண்டைய ஏதென்ஸ், ரோமாபுரி ஆகியவற்றிலும் போப் ஆண்டவர் மற்றும் ரோமானியப் பேரரசர்கள் தேர்வு ஆகியவற்றிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்கால தேர்தல்களின் தோற்றம் என்பது 17-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் படிப்படியாக எழுச்சி கண்ட பிரதிநிதித்துவ அரசாங்கங்கள் மூலமாகவும் பின்னர் வட அமெரிக்காவிலும் தோன்றியது. பிரதிநிதித்துவ மக்களாட்சியில் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவையாகும். உங்களது குரல் ஒங்கி ஒலிப்பதற்கு தேர்தலில் வாக்களிப்பதே சிறந்த வழியாகும். சட்டங்களின் மூலமாக அரசியல் கட்சிகள் மக்களை வாக்களிக்க விடாமல் செய்யும் போது தேர்தல்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன என்பது உண்மையாகும். தேர்தல்கள் மற்றும் பிரதிநிதித்துவம் ஆகியவை அரசாங்கத்தை உருவாக்குவதன் அடிப்படையாகும்.

மக்களாட்சியின் வாக்காளர் முறைமை

ஓர் மக்களாட்சியின் வாக்களர் முறைமையின் மிகவும் அடிப்படையான இயல்புகளைப் பற்றி நாம் கற்றுக்கொள்வோம். ஓர் மக்களாட்சியின் வக்காளர் முறைமை என்பது பின்வருமாறு உள்ளதாகும்.

  • மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என இந்திய அரசமைப்பின் உறுப்பு 326 விளக்குகிறது.

தேர்தல்கள் ஏன் நமக்கு தேவைப்படுகின்றன?

தேர்தல்கள் இல்லாத ஓர் மக்களாட்சியை நாம் கற்பனை செய்து பார்ப்போம். தேர்தல்களே இல்லாத மக்களாட்சி என்பது ஒருவேளை சாத்தியமாவதற்கு மக்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒன்று கூடி அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டும். ஓர் மிகப்பெரிய சமூகத்தில் இது சாத்தியமாகாது. மேலும் அனைத்து விவகாரங்களிலும் முடிவெடுப்பதற்கான நேரமும், அறிவுத்திறனும் அனைவருக்கும் இருப்பது சாத்தியமில்லை. இப்பிரச்சனைகளை மக்கள் தீர்ப்பதாக நாம் கருதுவோம் எனில் அங்கு தேர்தல்கள் தேவைப்படாது. அதனை நாம் மக்களாட்சி என அழைக்கலாமா?

மக்கள் தங்களின் பிரதிநிதிகளை விரும்புகின்றனரா? இல்லையா? என நாம் எவ்வாறு அறிந்து கொள்ளலாம்? மக்களின் விருப்பங்களுக்குத் தகுந்தவாறு பிரதிநிதிகள் ஆட்சி செய்கிறார்களா என்பதனை நாம் எவ்வாறு உறுதிப்படுத்தலாம்? மக்கள் விரும்பாத பிரதிநிதிகள் பதவியில் இருக்கிறார்களா என்பதனை நாம் எவ்வாறு உறுதிப்படுத்தலாம்? இதற்காக குறிப்பிட்ட இடைவெளிகளில் மக்கள் தங்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கும், விருப்பப்படி அவர்களை மாற்றுவதற்கும் தகுந்த வழிமுறைகள் தேவைப்படுகின்றன. அதுவே தேர்தலாகும் ஆகவே தற்காலத்தில் எவ்வகையான பிரதிநிதித்துவ அரசாங்கத்திற்கும் தேர்தல் அடிப்படையானதாகும். ஆகையால் பெரும்பாலான மக்களாட்சிகளில் மக்கள் தங்களின் பிரதிநிதிகள் மூலமாகவே ஆட்சி செய்கின்றனர்.

ஓர் தேர்தலில் வாக்காளர் பல்வேறு தேர்வுகளை மேற்கொள்கிறார். அவையாவன

  • தங்களுக்கான சட்டங்களை உருவாக்குபவரை தேர்வு செய்வர்.
  • அரசாங்கத்தை அமைத்து பெரும்பான்மை முடிவுகளை எடுப்போரைத் தேர்வு செய்வர்.
  • அரசாங்கம் மற்றும் சட்டமியற்றுதலில் வழிகாட்டக் கூடிய கொள்கைகளைக் கொண்ட கட்சியைத் தேர்வு செய்வர்.

எது தேர்தலை மக்களாட்சியிலானதாக ஆக்குகிறது?

  • அனைவருக்கும் தேர்வு செய்யும் வாய்ப்பு இருக்க வேண்டும். ஒருவருக்கும் ஒரு வாக்கு மற்றும் ஒவ்வொரு வாக்கிற்கும் சமமான மதிப்பு என்பது இதன் பொருளாகும்.
  • அரசியல் கட்சிகளால் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்கள் சுதந்திரமாகத் தேர்தலில் போட்டியிடுவதுடன் வாக்காளர்களுக்குத் தகுந்தவாறு உண்மையான தேர்வுகளுக்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
  • அத்தேர்வுகள் தகுந்த இடைவெளிகளில் வழங்கப்பட வேண்டும். ஒருசில ஆண்டுகளுக்கு ஒருமுறை தகுந்த இடைவெளியில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.
  • மக்களால் விரும்பப்படும் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
  • மக்கள் தங்களின் விருப்பங்களுக்குத் தகுந்தவாறு தேர்ந்தெடுக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.

தேர்தல் என்பது ஓர் முறையான முடிவாக்க நடைமுறையாகும். அதில் மக்கள் பொதுப்பதவி வகிப்பவர்களைத் தேர்தெடுக்கின்றனர். தேர்தலின் மூலமாக சட்டமன்றங்களில் உள்ள பதவிகள் மட்டுமல்லாமல் ஆட்சித்துறை, நீதித்துறை மற்றும் வட்டார, உள்ளாட்சி அரசாங்கங்களில் உள்ள பதவிகளும் நிரப்பப்படுகின்றன.

  • தேர்தல்கள் தொடர்பான புள்ளி விபரங்கள் மற்றும் முடிவுகளை கற்றறியும் கல்வே தேர்தலியல் ஆகும்.

பிரதிநிதித்துவத்தின் வகைகள்/ தொகுதிகளுக்கான இடஒதுக்கீடு

தேர்தல் முறைமை – பன்மைத்துவம் / பெரும்பான்மை முறைமைகள்

பன்மைத்துவம்/பெரும்பான்மை முறைமைகளின் கொள்கைகள் மிகவும் எளிமையானவையாகும். மக்கள் வாக்களித்தபிறகு வாக்குகள் எண்ணப்பட்டு அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் அல்லது கட்சிகள் வெற்றி பெற்றவையாக அறிவிக்கப்படுகின்றன. இருப்பினும் இதன் நடைமுறைகள் மாறுபடுகின்றது. ஆகையால் ஐந்து வகையான பன்மைத்துவ/ பெரும்பான்மை முறைமைகளை அடையாளப்படுத்தலாம்.

அ) முதலில் நிலையைக் கடந்து செல்லுதல் (FPTP)

ஆ) தொகுதி வாக்கு (BV)

இ) கட்சித் தொகுதி வாக்கு (PBV)

ஈ) மாற்று வாக்கு (AV)

உ) இரு சுற்று முறை (TRS)

அ) முதலில் நிலையைக் கடந்து செல்லுதல் (FPTP)

முதலில் நிலையைக் கடந்து செல்லுதல் என்பது பன்மைத்துவம்/ பெரும்பான்மை முறையின் எளிமையான வடிவமாகும். இது ஓர் உறுப்பினர் தொகுதிகள் மற்றும் வேட்பாளரை மையப்படுத்துவதுடன் வாக்களித்தலும் பயன்படுத்தப்படுகிறது. எப்.பி.டி.பி. முறைகள் அடிப்படையில் இங்கிலாந்தில் காணப்பட்டன. அது தவிர இங்கிலாந்தின் வரலாற்று அடிப்படையிலான ஆதிக்கத்தில் இருந்த நாடுகளிலும் காணப்படுகின்றன. இங்கிலாந்து தவிர அமெரிக்கா, கரீபிய நாடுகள், வங்கதேசம், மியான்மர், இந்தியா, மலேசியா, நேபாளம் மற்றும் தெற்கு பசிபிக் பகுதியில் உள்ள சில நாடுகளிலும் இம்முறை காணப்படுகிறது.

  • FPTP (எப்.பி.டி.பி) என்பது பன்மைவாத/ பெரும்பான்மைவாத வாக்காளர் முறையில் எளிமையான வடிவமாகும். இதில் ஒரு வேட்பாளர் செல்லத் தகுந்த வாக்குகளில் பிற வேட்பாளர்களை விட அதிக வாக்குகளை பெற்றிருந்தாலே வெற்றி பெற்றவர் ஆவார். அறுதிப் பெரும்பான்மை பெற வேண்டிய அவசியமில்லை. இந்த முறை ஒரு உறுப்பின் தொகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில் வாக்காளர்கள் கட்சிக்காக ல்லாமல் வேட்பாளருக்காகவே வாக்களிக்கின்றோம்.

ஆ. தொகுதி வாக்கு (BV)

தொகுதி வாக்கு என்பது அரசியல் கட்சிகளே இல்லாத அல்லது பலவீனமாக உள்ள நாடுகளில் காணப்படுவதாகும். கேமன் தீவுகள், பாக்லாந்து தீவுகள், கர்ன்சே குவைத், லாவோஸ் , லெபனான், மாலத்தீவுகள், பாலஸ்தீனம், சிரிய அரபுக் குடியரசு ஆகியவை தொகுதிவாக்கு முறையிலான வாக்காளர் முறைமைகளைப் பின்பற்றுகின்றன.

தனிப்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் திறனை வாக்காளர்கள் தக்கவைத்துக் கொள்வதால் தொகுதிவாக்கு முறை பாராட்டப்படுகிறது. அத்துடன் தகுந்த முறையில் நில அமைப்பின் அமைக்கப்பட்ட மாவட்டங்களும் அனுமதிக்கப்படுகின்றன. அதேநேரத்தில் எப்.பி.டி.பியுடன் ஒப்பிடுகையில் அரசியல் கட்சிகளின் பங்கு அதிகரிப்பதுடன் அதிக இணக்கம் மற்றும் அமைப்பு ரீதியான கட்சிகளை வலுப்படுத்துவதாக உள்ளது.

  • தொகுதி வாக்கு என்பது ஓர் பன்மைத்துவ/பெரும்பான்மை முறைமையில் பல்உறுப்பினர் மாவட்டங்களில் பயன்படுத்தப்படுவதாகும். இதில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய வேட்பாளர்களுக்குத் தகுந்த வாக்குகள் வாக்களர்களுக்கு இருக்கும். அதிகபட்ச எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் வெற்றி பெறுகிறார். பொதுவாக கட்சிகளைக் காட்டிலும் வேட்பாளருக்காக மக்கள் வாக்களித்தாலும் பெரும்பாலான முறைமைகளில் மக்கள் தங்களின் விருப்பத்திற்குத் தக்கவாறு வாக்களிக்கின்றனர்.

இ. கட்சித் தொகுதி வாகு (PBV)

பி.பி.வி என்பது பயன்படுத்துவதற்கு எளிதானதாகும். இது வலுவான கட்சி வேட்பாளர்களில் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் பெரும் வகையில் கலவையாக அமைந்துள்ளது. இது சமநிலையான இன அடிப்படை பிரதிநிதித்துவத்திற்கும் உதவுகிறது. டிஜிபௌடி, சிங்கப்பூர், செனகல், துனீசியா போன்ற நாடுகள் பி.பி.வி. முறையைப் பயன்படுத்துகின்றன.

ஈ. மாற்று வாக்கு (AV)

இம்முறையில் வாக்காளர்கள் தங்களின் முதல் விருப்பத்தேர்வை விட வேட்பாளர்களுக்கு இடையே முன்னுரிமை அளிக்கின்றனர். இதனால் இது ‘முன்னுரிமை வாக்கு’ எனவும் அழைக்கப்படுகிறது. மாற்றுவாக்கு முறை ஆஸ்திரேலியா, பிஜி, பாப்புவா கினியா ஆகிய நாடுகளில் பின்பற்றப்படுகிறது. பல வேட்பாளர்கள் மொத்தமாகப் பெற்ற வாக்குகளை மாற்றுவதன் மூலம் ஒட்டுமொத்த விருப்பமும் இணைக்கப்பட்டு பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.

  • இருசுற்று முறை என்பது ஓர் பன்மைத்துவ /பெரும்பான்மை முறையாகும். இதில் முதல் சுற்றில் எக்கட்சி அல்லது வேட்பாளருக்கும் அறுதிப்பெரும்பான்மை ( சதவீதத்திற்கு மேல் ஒரு சதவீதமேனும் பெற்றிருத்தல்) பெறாத நிலையில் இரண்டாவது சுற்று தேர்தல் நடைபெறும். இரு சுற்று முறை எப்போது பெரும்பான்மை, பன்மைத்துவ வடிவம் எடுக்குமெனில், ஒருவேளை இரண்டாம் சுற்றில் இரண்டு வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிடும் நிலையில் அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெறுபவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இதில் அவர்கள் அறுதிப்பெரும்பான்மை பெற்றிருந்தாலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.

உ. இரு சுற்று முறை (டி.ஆர்.எஸ்).

இரு சுற்று முறையின் முக்கிய இயல்பே அதன் பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது ஒரே தேர்தலாக அல்லாமல் ஒரு வாரம் அல்லது பதினைந்து நாட்கள் இடைவெளியில் இரு சுற்றுகளாக நடைபெறுகிறது. இது தேசிய சட்டமன்ற உறுப்பினர் தேர்விற்கும், குடியரசுத் தலைவருக்கான நேரடித் தேர்தலுக்கும் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. இம்முறை மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, காங்கோ, கபோன், மாலி மௌரிடானியா, ஹைதி, ஈரான், வியட்நாம், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளில் பின்பற்றப்படுகிறது.

சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தின் பல்வேறு முறைகள்

அரசியலில் போட்டி இருப்பது நன்மையானதா?

தேர்தல்கள் என்பவை அரசியல் போட்டி தொடர்பானவையாகும். இப்போட்டி பல்வேறு வடிவங்களை எடுக்கிறது. இதில் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான போட்டி மிகவும் வெளிப்படையான வடிவமாகும். தொகுதி அளவில் பல்வேறு வேட்பாளர்களுக்கு இடையேயான போட்டி எனும் அளவில் உள்ளது. போட்டிகள் இல்லையெனில் தேர்தல்கள் அர்த்தமற்றவையாகின்றன. தேர்தலில் ஏற்படும் போட்டியால் ஒவ்வொரு பகுதியிலும் ஒற்றுமையின்மை மற்றும் பிரிவினைவாத உணர்வுகள் தோன்றினாலும், சீன தேர்தல் போட்டிகள் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கிறது. மக்கள் எழுப்ப விரும்பும் பிரச்சனைகளைத் தாங்கள் எழுப்பினால், தாங்கள் பிரபலமடைவதுடன் வரக்கூடிய தேர்தலில் தங்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும் என்பதை அரசியல் தலைவர்கள் அறிவர். இருப்பினும் தங்களது பணியின் மூலமாக வாக்காளர்களை திருப்திப்படுத்தவில்லையெனில் மீண்டும் அவர்களால் வெற்றிபெற இயலாது.

நமது தேர்தல் முறை என்ன?

இந்திய தேர்தல்கள் மக்களாட்சி முறையிலானது என நாம் கூறலாமா? இக்கேள்விக்கு பதில் கூறுவதற்கு நாம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதைப் பார்க்க வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது. பின்னர் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை கலைக்கப்படுகிறது. அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே நேரத்திலோ, அதாவது ஒரே நாளிலோ அல்லது ஒருசில நாட்களிலோ தேர்தல் நடைபெறுகிறது. இதுவே பொதுத் தேர்தல் எனப்படுகிறது. சில நேரங்களிலோ ஒரு தொகுதியில் உள்ள உறுப்பினரின் மரணம் அல்லது பதவி விலகளால் ஏற்படும் காலியிடத்தை நிரப்ப தேர்தல் நடைபெறுகிறது. இது இடைத்தேர்தல் என அழைக்கப்படுகிறது.

  • ஆகா! தேர்தல்கள என்பவை தேர்தலைப் போலவா? அரசியல்வாதிகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் தாங்கள் வெற்றியடைவோமா? என்பது தெரிந்திருக்கிறதே! இருப்பினும் தேர்வை நடத்துபவர் யார்? !!!

தேர்தலுக்கான தொகுதிகள்

நீங்கள் தமிழக மக்கள் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இதனை எவ்வாறு செய்கிறார்கள் என நீங்கள் வியந்திருக்கலாம். தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மக்கள் ஒவ்வொருவரும் வாக்களித்து தேர்ந்தெடுக்கிறார்களா? நமது நாட்டில் இடம் சார்ந்த பிரதிநிதித்துவ முறையை நாம் பின்பற்றுகிறோம். தேர்தலுக்கான நம் நாடு பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளை நாம் தேர்தலுக்கான தொகுதிகள் என அழைக்கிறோம். ஓர் பகுதியில் வசிக்கும் மக்கள் வாக்களித்து தங்களுக்காக ஓர் பிரதிநிதியைத் தேர்தெடுக்கின்றனர்.

மக்களவைத் தேர்தலுக்காக நமது நாடு 543 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதி நாடாளுமன்ற உறுப்பினர் என அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு வாக்கிற்கும் சமமதிப்பு என்பது மக்களாட்சியிலான தேர்தலின் இயல்புகளில் ஒன்றாகும். இதனால் தான் ஒவ்வொரு தொகுதியும் கிட்டத்தட்ட சமமான மக்கள்தொகை உள்ளதாக இருக்க வேண்டும் என அரசமைப்பு கூறுகிறது. அதேபோல ஒவ்வொரு மாநிலமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அந்நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதி சட்டப்பேரவை உறுப்பினர் அல்லது எம்.எல்.ஏ. (M.L.A) என அழைக்கப்படுகின்றார். அதே கொள்கை பஞ்சாயத்து மற்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தல்களில் பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு கிராமம் அல்லது நகரமும் தொகுதிகளைப் போன்று வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டும் கிராமம் அல்லது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிற்கு ஓர் உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கிறது. சில சமயங்களில் இத்தொகுதிகள் ஓர் இடமாகக் கருதப்பட்டு, ஒவ்வொரு தொகுதியும் அவையில் ஓர் இடத்தின் மூலம் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.

தனித்தொகுதி

ஓர் குடிமகனுக்கு தனது பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதற்கும், தான் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் உள்ள உரிமையை அரசமைப்பு வழங்குகிறது. வெளிப்படையான தேர்தல் போட்டியில் சில நலிந்த பிரிவினருக்கு மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு வாய்ப்புகள் சிறப்பாக அமைவதில்லை. அவர்களுக்கு பிறருக்கு எதிராகத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வளங்கள், கல்வியறிவு மற்றும் போட்டியிடுவதற்குத் தேவையான தொடர்புகள் இருப்பதில்லை. இவ்வாறு இருப்பின் நமது மக்கள் தொகையில் குறிப்பிடத்தகுந்த பிரிவினருக்கு நமது நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் அனைவருக்கும் இடமில்லாத நிலை ஏற்படுகிறது. இது நமது மக்களாட்சியை பிரதிநிதித்துவம் வழங்காததாகவும் , கூறைந்த மக்களாட்சித் தன்மையுடையதாகவும் மாற்றுகிறது.

மேற்கூறியவற்றால் நமது அரசமைப்பினை உருவாக்கியவர்கள் நலிந்த பிரிவினருக்கு சிறப்பு அமைப்பாக தனித்தொகுதிகளைப் பற்றி சிந்தித்தனர். சில தொகுதிகள் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வகை இடஒதுக்கீடு முறை பின்னர் பிற நலிந்த பிரிவினருக்கும் மாவட்ட மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வரையறை

மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைக்கான தொகுதிகள் வரையறுக்கப்படுகின்றன. தொகுதிகளை வரையரை செய்யும்போது அதன் புவியமைப்பு, இயற்கையான இயல்புகள், நிர்வாக அமைப்புகளின் எல்லைகள், தகவல் தொடர்பு மற்றும் பொதுமக்களின் வசதி ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

தொகுதி வரையறை சட்டங்கள்

முதல் வரையறை ஆணையச் சட்டம்,. 1952.

இரண்டாவது வரையறை ஆணையச் சட்டம், 1963.

மூன்றாவது வரையறை சட்டம் , 1973.

நான்காவது வரையறை சட்டம், 2002.

வாக்காளர் பட்டியல்

தொகுதிகள் முடிவு செய்யப்பட்ட பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கையாக யார் வாக்களிக்கலாம், யாரொல்லாம் வாக்களிக்க முடியாது என்பதை முடிவு செய்ய வேண்டும். இம்முடிவினை யாரேனும் எடுப்பதற்கு கடைசி நாள் வரை காத்திருக்க இயலாது. ஆகவே மக்களாட்சி தேர்தலில் தகுதிவாய்ந்த வாக்காளர்களின் பட்டியல் தேர்தலுக்கு நெடுநாள் முன்னரே தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இதுவே அதிகாரப்பூர்வமாக ‘வாக்காளர் பட்டியல்’ என அழைக்கப்படுகிறது.

எவ்வகையான வேறுபாடுகளையும் தாண்டி தங்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சமவாய்ப்பு அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதே மக்களாட்சியிலான தேர்தலின் முதல் நிபந்தனையாகும். நமது நாட்டில் பதினெட்டு வயது நிரப்பிய குடிமக்கள் அனைவரும் தேர்தலில் வாக்களிக்கலாம். ஒருவரின் சாதி, மதம் மற்றும் பாலின பாகுபாடின்றி அனைத்து குடிமக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ளது.

அனைத்து குடிமக்களின் பெயர்களையும் கேட்டுப் பெறுவது, அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது ஓர் அரசாங்கத்தின் பொறுப்பாகும். இடம் பெயர்ந்தோர் மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்காளர் பட்டியல் திருத்தியமைக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் இதனை தாங்கள் வாக்களிக்கச் செல்லும்போது எடுத்துச் செல்ல வேண்டும். இருப்பினும் வாக்காளர் அடையாள அட்டை என்பது கட்டாய ஆவணமல்ல. இதனைத் தவிர ஆதார் அட்டை, குடிமை வழங்கல் அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றின் அசல் சான்று ஆகியவற்றினை வாக்களிப்பதற்கான ஆவணமாக காட்டலாம்.

இந்தியாவில் தேர்தல் நடைமுறை

  • தொகுதிகளை மறுவரையறை செய்தல்.
  • தேர்தல் அறிவிப்பு
  • வேட்பு மனுவினை தாக்கல் செய்தல் மற்றும் திரும்பப் பெறுதலைப் பற்றிய தேர்தல். ஆணையத்தின் அறிவிப்பு.
  • போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தல்.
  • வேட்பு மனுக்களை சரிபார்த்து ஏற்றல் அல்லது நிராகரித்தல்.
  • தேர்தல் பரப்புரை.
  • வாக்களித்தல் நடைமுறை.
  • வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகளை அறிவித்தல்.

இந்தியாவில் நடக்கும் தேர்தல்கள் பற்றிய அம்சங்கள்:

  • எந்த அரசமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலமாக இந்திய குடிமக்களின் வாக்களிக்கும் வயது இருபத்தி ஒன்றிலிருந்து பதினெட்டாகக் குறைக்கப்பட்டது?
  • பஞ்சாயத்துக்களைப் போன்று மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும் இருக்க வேண்டாமா?

வேட்பாளர்கள் நியமனம்

ஓர் மக்களாட்சி அடிப்படையிலான தேர்தலில் உண்மையான விருப்பத் தேர்வை மேற்கொள்ள மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். எவரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு எவ்விதத் தடையும் இல்லாத சூழலில் இது நிகழும். இதனயே நமது அமைப்பும் வழங்குகிறது. வாக்காளராக இருப்பதற்கு தகுதியுடைய எவரும் தேர்தலில் வேட்பாளராகலாம். தேர்தலில் வாக்களிப்பதற்கான குறைந்தபட்ச வயது பதினெட்டு எனில், வேட்பாளராவதற்கான குறைந்தபட்ச வயது இருபத்து ஐந்து என்றே ஒஇதிலுள்ள ஒரே வித்தியாசமாகும். அரசியல் கட்சிகள் வேட்பாளரை நியமிக்கும் போது அவர் கட்சியின் சின்னம் மற்றும் ஆதரவினைப் பெறுகிறார். கட்சியின் வேட்பாளர் நியமனத்தினை ‘கட்சியின் நியமனச்சீட்டு’ என அழைக்கின்றனர்.

வேட்பு மனு தாக்கல் செய்ய விரும்பும் ஒவ்வொருவரும் பிணைத்தொகையாகக் குறிப்பிட்ட தொகையினை செலுத்த வேண்டும். உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி கீழ்க்கண்ட முழு விபரங்களைக் கோண்ட சட்டப்பூர்வ பிரகடனத்தினை ஒவ்வொரு வேட்பாளரும் மேற்கொள்ள வேண்டும்.

  • வேட்பாளருக்கு எதிராக நிலுவையில் உள்ள கடுமையான குற்றவியல் வழக்குகள் ஏதேனும் இருந்தால் அவற்றின் விபரங்களைத் தருதல்.
  • வேட்பாளர்கள் தங்களுடைய அல்லது தங்களது குடும்பத்தாருடைய சொத்துக்கள் மற்றும் கடன்கள் பற்றிய விளக்கங்கள் தருதல்.
  • வேட்பாளரின் கல்வித் தகுதிகள்.

இத்தகவல்கள் மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும். இவ்வாறு வேட்பாளர்களால் தரப்படும் தகவல்களின் அடிப்படையில் வாக்காளர்கள் தங்களின் முடிவுகளை எடுப்பதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.

தேர்தல் பரப்புரை

தேர்தலின் முக்கிய நோக்கமே மக்கள் தங்களுக்கு விருப்பமான பிரதிநிதிகள், அரசாங்கம் மற்றும் கொள்கைகளை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பளிப்பதாகும். ஆகவே யார் சிறந்த பிரதிநிதியாக இருப்பர், எக்கட்சி சிறந்த அரசாங்கத்தை அமைக்கும் அல்லது எது சிறந்த கொள்கை ஆகியவற்றினைப் பற்றிய சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விவாதம் அவசியமாகும். இதுவே தேர்தல் பரப்புரையின் போது நிகழ்கிறது.

நமது நாட்டில் இத்தகைய பரப்புரைகள் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் நடக்கும் நாள் வரை இரு வாரகாலத்திற்கு நடைபெறுகிறது. இக்கால கட்டத்தில் வேட்பாளர்கள் வாக்காளர்களிடம் சென்று வாக்கு சேகரித்தல், அரசியல் தலைவர்கள் தேர்தல் பொதுக்கூட்டங்களில் உரையாற்றுதல் மற்றும் அரசியல் கட்சிகள் தங்களின் ஆதரவாளர்களைத் திரட்டுதல் ஆகியவை நிகழும். இக்காலக்கட்டத்தில் தான் நாளேடுகள், சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் தேர்தல் தொடர்பான செய்திகள் மற்றும் விவாதங்கள் இடம் பெறுகின்றன. தேர்தல் பரப்புரை என்பது இந்த இரு வாரங்களுடன் நிறைவு பெறுவதில்லை. அரசியல் கட்சிகள் தேர்தல்கள் நடைபெறுவதற்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே தங்களை தயார் செய்கின்றன.

தேர்தல் பரப்புரையின் போது அரசியல் கட்சிகள் முக்கியப் பிரச்சனைகளின் மீது பொது மக்களின் கவனத்தைத் திருப்புகின்றன. அவர்கள் மக்களிடம் அப்பிரச்சனைகளைப் பற்றி பேசுவதன் மூலம் அவர்களை ஈர்த்து அதனடிப்படையில் தங்கள் கட்சிக்கு வாக்களிக்குமாறு செய்வர். ஓர் மக்களாட்சியில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் விரும்பும் வகையில் தேர்தல் பரப்புரையை சுதந்திரமாக மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். இருப்பினும் சில நேரங்களில் ஒவ்வொரு அரசியல் கட்சியும், வேட்பாளரும் போட்டியிடுவதற்கு ஏற்ற நியாயமான மற்றும் சமமான வாய்ப்பினை உறுதி செய்யும் வகையில் பரப்புரைகளை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும்.

நமது தேர்தல் சட்டங்களின் படி ஓர் கட்சி அல்லது வேட்பாளர் கீழ்க்கண்டவற்றினை செய்ய முடியாது.

  • வாக்காளர்களுக்கு கையூட்டு அளித்தல் அல்லது அச்சுறுத்துதல்.
  • சாதி மற்றும் மதத்தின் பெயரால் வாக்களிக்கும்படி வேண்டுதல்.
  • தேர்தல் பரப்புரைகளுக்கு அரசாங்கத்தின் வளங்களை பயன்படுத்துதல்.

இவ்வாறு ஒருவேளை அவர்கள் செய்யும்போது, அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட பின்னரும் நீதிமன்றம் அத்தேர்தலை நிராகரித்து உத்தரவிடலாம். சட்டங்களுடன் மேலும் கூடுதலாக, நமது நாட்டிலுள்ள அரசியல் கட்சுகள் தேர்தல் பரப்புரைகளுக்கான நன்னடத்தை விதிமுறைகளை ஏற்றுக் கொண்டுள்ளன.

அதன்படி கீழ்க்கண்டவற்றினை ஓர் கட்சி அல்லது வேட்பாளர் செய்ய முடியாது.

  • தேர்தல் பரப்பரைக்காக மதவழிபாட்டுத் தலங்களைப் பயன்படுத்துதல்.
  • தேர்தலுக்காக அரசு வாகனங்கள், விமானங்கள் மற்றும் அரசு அலுவலர்களைப் பயன்படுத்துதல்.
  • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அமைச்சர்கள் எவ்வகைத் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுதல், முக்கிய கொள்கை முடிவுகளை எடுத்தல், பொது சேவை வசதிகளுக்கான வாக்குறுதி அறிவித்தல் போன்றவற்றினை செய்யக் கூடாது.

சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்கள்

சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல் நடைமுறையை உறுதிப்படுத்துவதே ஓர் அரசியல் முறைமையின் உண்மையான சோதனையாகும். நாம் மக்களாட்சியை நடைமுறைப்படுத்த விரும்பினால் அதற்கு தேர்தல் முறையானது நடுநிலையாகவும், வெளிப்படையானதாகவும் இருத்தல் முக்கியமானதாகும். வாக்காளர்களின் விருப்பங்கள் தேர்தல் முடிவுகளின் மூலம் சட்டப்பூர்வமாக வெளிப்படுவதற்குத் தேர்தல் முறை அனுமதிக்க வேண்டும். இந்தியாவில் நடைபெறும் தேர்தல்கள் அடிப்படையில் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறுகின்றன. தேர்தலில் வெற்றிபெறும் கட்சி ஆட்சி அமைக்கிறது. இதற்கு எதிர்க் கட்சிகளை விட இக்கட்சியினை மக்கள் தேர்தெடுத்ததே அதற்குக் காரணமாகும். ஒவ்வொரு தொகுதியிலும் இது உண்மையாக இருக்காது. ஒரு சில வேட்பாளர்கள் பண பலம் மற்றும் நியாயமற்ற வழிமுறைகளின் மூலமாக வெற்றி பெறுகின்றனர். இருப்பினும் பொதுமக்களின் விருப்பத்தை பிரதிபலிப்பதாகவே ஒட்டுமொத்த பொதுத்தேர்தல் முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இருப்பினும் மேலும் ஆழமான வினாக்கள் எழுப்பப்படின், அக்காட்சி வேறு மாதிரியாக உள்ளது. உண்மையான அறிவுத்திறன் அடிப்படையில் மக்களின் முன்னுரிமைகள் உள்ளனவா? வாக்காளர்கள் உண்மையாகவே தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகளைப் பெறுகின்றனரா? தேர்தல் என்பது உண்மையில் அனைவருக்கும் சமமான களமாக உள்ளதா? ஓர் சாதாரண முடிமகன் தேர்தலில் தான் வெற்றி பேறுவோம் என நம்பலாமா?

இவ்வகையான வினாக்கள் இந்திய தேர்தல்களில் உள்ள குறைபாடுகளையும், சவால்களையும் நமது கவனத்திற்கு கொண்டு வருகின்றன. அவையாவன:

  • அதிக பணபலமுள்ள வேட்பாளர்கள் மற்றும் கட்சிகள் தங்களின் வெற்றியைப் பற்றி உறுதியற்ற நிலையில் இருப்பினும் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளை விட மிகப்பெரிய மற்றும் நியாயமற்ற சாதகமான நிலையில் இருப்பர்.
  • குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் தேர்தல் போட்டியில் பிறரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பெரிய கட்சிகளின் சார்பாகப் போட்டியிடும் வாய்ப்பினைப் பெறுகின்றனர்.
  • சில குடும்பங்கள் அரசில் கட்சிகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதனால் அக்கட்சியின் சார்பாகப் போட்டியிடும் வாய்ப்புகள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் , உறவினர்களுக்கும் வழங்கப்படுகின்றன.
  • சாதாரண குடிமக்களுக்குத் தேர்தல்கள் குறைவான வாய்ப்புகளையே வழங்குகிறது. ஏனெனில் பெரும்பான்மையான கட்சிகள் ஏறத்தாழ ஒரேமாதிரியான கொள்கைகள் மற்றும் நடைமுறைகளைக் கொண்டுள்ளன.
  • பெரிய கட்சிகளை ஒப்பிடுகையில் சிறிய கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் பெரும் பின்னடைவைச் சந்திக்கின்றனர்.

இத்தகைய சவால்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் பல வலுவான மக்களாட்சிகளிலும் காணப்படுகின்றன. இவ்வாறான ஆழமான பிரச்சனைகள் பற்றி மக்களாட்சியின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் கவனம் செலுத்துகின்றனர். இதனால் தான் குடிமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புக்கள் நமது தேர்தல் மூறைமையில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ள கோரிக்கை வைக்கின்றன. ஓர் மக்களாட்சியில், தேர்தல் நடைமுறை என்பது யுக்தி அடிப்படையில் பங்காற்றுகிறது. ஓர் சாதாரண மனிதனுக்கு தனது பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்குச் சென்று தனது சுதந்திரம் மற்றும் சொத்துக்களை கட்டுப்படுத்தக்கூடிய வகையிலான சட்டங்களை இயற்றுபவரைப் பற்றிய முழுமையான தகவல்களை அறிந்து கொள்ளிம் அடிப்படையான உரிமை உள்ளது.

மக்களாட்சியில் தகவல்களைப் பெறும் உரிமை என்பது முழுவதுமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் அது மக்களாட்சி எனும் கருத்தாக்கத்திலிருந்து வெளிப்படக்கூடிய இயற்கை உரிமையாகும்.

இந்திய அரசமைப்பின் உறுப்பு 19(1) (அ) பேச்சு மற்றும் கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரத்திற்கான உரிமையினை வழங்குகிறது. வாக்காளர்களின் பேச்சு மற்றும் கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரமானது வாக்களித்தலின் மூலமாக வெளிப்படுகிறது. அதாவது வாக்காளர்கள் தங்கள் வாக்கினை செலுத்துவதன் மூலமாக தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்துகின்றனர். இதற்காக தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளரைப் பற்றிய தகவல்கள் அவசியமாகும். பொதுமக்கள் தங்களின் பிரதிநிதியாக சட்டத்தினை மீறுபவர்களை சட்டத்தினை உருவாக்குபவர்களாக தேர்ந்தெடுப்பதற்கு முன் சிந்தித்து செயல்பட வேண்டும்.

சமூக ஊடகங்கள்

சமூக ஊடகங்கள் மக்களின் சிந்தனை, எழுத்து மற்றும் செயல்படும் வழிமுறைகளை மாற்றியிருக்கிறது. இருப்பினும் இது மக்களின் வாக்களிக்கும் மூறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல்வாதிகள் நம்புகின்றனர். பெரும்பாலான தேசிய மற்றும் மாநில கட்சிகள் தேர்தலில் சமூக ஊடகங்களை தாக்கத்தினை அறிந்திருக்கின்றன. தேர்தலில் பரப்புரை மேற்கொள்பவர்கள் மின்னணு தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வியூகங்களை வகுப்பதன் மூலமாக வாக்காளர்கள், தங்களின் இலக்கான குறிப்பிட்ட மக்கள், மக்கள் தொகையியல் அடிப்படையில் ஆதரவு திரட்டுதல், மக்கள் பங்கேற்பு மற்றும் தங்களுக்கு ஆதரவளிக்குமாறு கோருதல் ஆகியவை நிகழ்கின்றன. மேலும் போன்மி (Memes), பண்பலை வானொலி, தொலைக்காட்சி, கைப்பேசி மற்றும் சமூக ஊடகங்கள் ஆகியவை வாக்காளர்களிடம் அரசியல் பரப்புரை மேற்கொள்வதற்கு முக்கியமான கருவிகள் ஆகும்.

  • இந்தியாவின் முதலாவது பொதுத் தேர்தல்கள் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை.

இந்தியா சுதந்திரமடைந்த பின்ன 1951-52ம் ஆண்டில் பொதுத்தேர்தல்கள் நடைபேற்று முதலாவது மக்களவை தேர்ந்தெடுக்கப்பட்டது. மொத்தமுள்ள 489 மக்களவை இடங்களில் காங்கிரஸ் கட்சி 364 இடங்களில் வெற்றி பெற்றது. இது மொத்த வாக்குப்பதிவில் 45 சதவீதமாகும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாமிடம் பெற்றது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவியேற்றார். இத்தேர்தலில் 67.6 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றது. 54 கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டன. ஏறத்தாழ நான்கு மாதங்கள் தேர்தல் நடைபெற்றது. அக்டோபர் 25, 1951, முதல் பிப்ரவரி 21, 1952 வரை இத்தேர்தல்கள் நடந்தன. 26 இந்திய மாநிலங்கள் மற்றும் 401 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்திய தேர்தல் ஆணையம்

இந்திய அரசமைப்பின் உறுப்பு 324 ஓர் தேர்தல் ஆணையத்தினை அமைப்பதை பற்றி விளக்குகிறது. இது சுதந்திரமாகவும், நடுநிலையாகவும், ஒழுங்கான முறையிலும் தேர்தல்களை நடத்துகிறது. இவ்வாணையமானது நாடாளுமன்றம், சட்டமன்றம் , குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்களை மேற்பார்வையிட்டு, வழிகாட்டுவதுடன் தேர்தலையும் நடத்துகிறது.

தேர்தல் ஆணையம் – ஓர் சுதந்திரமான அமைப்பு

இந்திய தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கமே ஓர் நிரந்தரமான மற்றும் சுதந்திரமான தேர்தல் அமைப்பு அவசியம் என்பதுடன் ஆட்சியாளர்கள் மற்றும் ஆளுங்கட்சியின் அரசியல் அழுத்தத்திலிருந்து விடுபட்டு சுதந்திரமாகத் தேர்தலை நடத்துவதற்காகும். அத்துடன் நாடாளுமன்றம், சட்டமன்றம், குடியரசுத்தலைவர் மற்றும் துணைக்குடியரசுத் தலைவர் தேர்தல்களை நடத்தும் பொறுப்பும் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

  • 2014ஆம் ஆண்டு நடைபெற்ற 16வது மக்களவைத் தேர்தலில் 9,30,000 வாக்குச் சாவடிகளில் 553 மில்லியன் வாக்காளர்களுக்கு மேல் வாக்களித்தனர். இந்தியாவிலுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையானது அமெரிக்க ஐக்கியநாடுகள் மற்றும் மேற்கு ஐரோப்பாவின் கூட்டு மக்கள் தொகையினை விட அதிகமாகும். இந்தியாவில் 30 வருடங்களுக்குப் பின்னர் முதன் முறையாக ஒரு கட்சி பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அமைப்பு

  • தலைமைத் தேர்தல் ஆணையாளர்.
  • இரண்டு தேர்தல் ஆணையாளர்கள்.
  • குடியரசுத் தலைவரால் நியமனம்.
  • ஆறு வருடங்கள் அல்லது 65 வயது (இதில் முந்தையது).
  • தலைமைத் தேர்தல் ஆணையாளர்கள் – பதவி நீக்க நடைமுறை
  • பிற தேர்தல் ஆணையாளர்கள் – தலைமைத் தேர்தல் ஆணையாளரின் பரிந்துரை.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் விவரங்கள்
தேர்தல்களின் எண்ணிக்கை சபையின் பதவிக்காலம் தேர்தல் தேதிகள்
1 1952 – 1957 1952 ஜனவரி 2, 5, 8, 9, 11, 12, 16, 21 மற்றும் 25 (9 நாட்கள்)
2 1957 – 1962 1957 மார்ச் 1, 4, 6, 8 மற்றும் 11 (5 நாட்கள்)
3 1962 – 1967 1962 பிப்ரவரி 17, 19, 21 மற்றும் 24 நாட்கள் (4 நாட்கள்)
4 1967 – 1971 1967 பிப்ரவரி 5, 16 மற்றும் 21 (3 நாட்கள்)
5 1971 – 1976 1971 மார்ச் 1,4 மற்றும் 7 (3 நாட்கள்)
6 1977 – 1980 1977 ஜூன் 12 மற்றும் 14 (2 நாட்கள்)
7 1980 – 1984 1980 மே 20 மற்றும் 31 (2 நாட்கள்)
8 1985 – 1986 1984 டிசம்பர் 24(1 நாள் மட்டும்)
9 1989 – 1991 1969 ஜனவரி 21 (1 நள் மட்டும்)
10 1991 – 1996 1991 ஜூன் 16 (1 நாள் மட்டும்)
11 1996 – 2001 1996 ஏப்ரல் 27 மற்றும் மே 2(2 நாட்கள்)
12 2001-2006 2001 மே 10 (1நாள் மட்டும்)
13 2006 – 2011 2006 மே 8(1 நாள் மட்டும்)
14 2011-2016 2001 ஏப்ரல் 13(1 நாள் மட்டும்)
15 2016- தற்போதுவரை 2016 மே 16 (1 நாள் மட்டும்)

இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்

  • வாக்காளர் பட்டியல் தயாரித்தல்.
  • வாக்காளர் பட்டியலைத் திருத்துதல்.
  • தொகுதிக்கான இடங்களை ஒதுக்கீடு செய்தல்.
  • தேர்தல் நடத்துதல்.
  • தேர்தலை மேற்பார்வையிட்டு வழிகாட்டுவதுடன் அது தொடர்பான அனைத்து விவகாரங்களையும் கட்டுப்படுத்துதல்.
  • அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் அளித்தல்.
  • கட்சிகளுக்கான சின்னங்களை ஒதுக்கீடு செய்தல்.
  • சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலை உறுதி செய்தல்.
  • தேர்தல் விவகாரங்கள் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் குடியரசுத் தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில ஆளுநர்களுக்குத் தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்குதல்.
  • நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதியிழப்பினை முடிவு செய்தல்.
  • இந்திய குடியரசுத் தலைவர் அல்லது மாநில ஆளுநரால் பரிசீலனைக்கு அனுப்பப்படும் மனுக்கள் மற்றும் பிரச்சனைகளைத் தீர்த்தல்.
  • ஓர் அரசியல் கட்சியில் பிளவு ஏற்பட்டால் எழும் தேர்தல் சின்னம் தொடர்பான சச்சரவுகளில் முடிவெடுத்தல்.
  • தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களைன் உச்சவரம்பினை இறுதி செய்யும் அதிகாரம்.
  • தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்துக்கள் தொடர்பான ஆவணப் பத்திரங்களை கேட்டுப் பெறும் பணி.
  • தேர்தல் செலவினக் கணக்கினை ஓர் வேட்பாளட் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கவில்லையெனில் அவரை தகுதியிழப்பு செய்யும் அதிகாரமும், கடமையும்.
  • தேர்தல் முடிந்த பின்னர் முறைப்படி அவை அமைக்கப்பட்டத்ற்கான அறிவிப்பினை வெளியிடுதல்.

தலைமைத் தேர்தல் அதிகாரி (CEO)

ஓர் மாநிலம்/ ஒன்றிய பிரதேசத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி அம்மாநில/ ஒன்றியப் பிரதேசத்தின் தேர்தல் பணிகளை மேற்பார்வையிடும் தேர்தல் பணிகளை மேற்பார்வை , வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டில் செயல்படுகிறார். இந்திய தேர்தல் ஆணையமே ஓர் மாநிலம்/ ஒன்றியப் பிரதேசத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியை நியமிக்கிறது. அந்நியமனத்தின் போது மாநில/ ஒன்றியப் பிரதேசத்தின் தேர்தல் அதிகாரியை நியமிக்கிறது. அந்நியமனத்தின் போது மாநில/ ஒன்றியப் பிரதேச அரசாங்கத்துடன் கலந்தாலோசித்த பின்னரே தேர்தல் ஆணையம் இறுதி முடிவெடுத்து செயல்படுகிறது.

  • அரசியலைத் தூய்மைப்படுத்துவதற்கான உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு.

ஜூலை 11, 2013ல் உச்சநீதிமன்றம் வெளியிட்ட ஓர் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பில் சிறை அல்லது காவல் துறையினரின் விசாரணையில் இருக்கும் ஒருவர் சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடமுடியாது என தீர்ப்பளித்துள்ளது. ஒரு நாள் முன்னதாக, ஜூலை 10, 2013-ல் அதே அமர்வு வழங்கிய தீர்ப்பில் தங்களின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பின், நாடாளுமன்ற, சட்டப்பேரவை அல்லது சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள் குற்றங்களுக்கான தண்டனை பற்றிய தீர்ப்பு வழங்கப்பட்டவுடன் அப்பொதுப் பதவிகளை வகிப்பதிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவர்.

இப்பிரிவு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தம்மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனைக்கான தீர்ப்பு வழங்கப்பட்டால் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8(4) ஐ இந்த அமர்வு நிராகரிப்பு.

மாவட்ட தேர்தல் அதிகாரி (DEO)

தலைமைத் தேர்தல் அதிகாரியின் மேற்பார்வை, வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் மாவட்ட தேர்தல் அதிகாரி செயல்படுவதுடன் மாவட்டத்தின் தேர்தல் பணிகளை மேற்பார்வையிடுகிறார். மாநில அரசாங்கத்துடன் கலந்தாலோசித்த பின்னர் ஓர் மாநில அரசு அதிகாரியை மாவட்ட தேர்தல் அதிகாரியாக நியமிக்கவோ அல்லது பதவியளிக்கவோ தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.

தேர்தல் நடத்தும் அலுவலர் (RO)

ஓர் நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அக்குறிப்பிட்ட நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற தொகுதியில் தேர்தலை நடத்தும் பொறுப்பு உள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட மாநில/ ஒன்றிய பிரதேச அரசாங்கங்களுடன் கலந்தாலோசித்து ஒவ்வொரு நாடாளுமன்ற / சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரை நியமிக்கிறது. அவர் அரசாங்க அதிகாரியாகவோ அல்லது உள்ளாட்சி அதிகாரியாகவோ இருக்கலாம். மேலும் கூடுதலாக அவருக்கு தேர்தல் பணிகளில் உதவுவதற்கு ஒன்று அல்லது இரண்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் ஒவ்வொரு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளிலும் நியமிக்கப்படுவதுடன் தேர்தல் நடத்தும் அலுவலரின் பணிகளை செயல்படுத்துவதில் பேருதவியாக இருப்பர்.

வாக்காளர் பதிவு அலுவலர் (ERO)

ஓர் நாடாளுமன்ற/ சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் பணி வாக்காளர் பதிவு அலுவலருடையதாகும். இந்திய தேர்தல் ஆணையம் மாநில/ ஒன்றியப் பிரதேச அரசாங்கங்களுடன் கலந்தாலோசித்த பின்னர் வாக்காளர் பதிவு அலுவலரை நியமிக்கிறது. இவர் அரசாங்க அல்லது உள்ளாட்சி அதிகாரியாக இருக்கலாம். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உதவி வாக்காளர் பதிவு அலுவர்கள் இவருக்கு உதவி செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்படுகின்றனர்.

வாக்குச்சாவடி தலைமை அலுவலர் (PO)

வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பிற வாக்குப்பதிவு அலுவலர்களின் உதவியுடன் வாக்குச் சாவடியில் தேர்தலை நடத்துகிறார். மாவட்ட தேர்தல் அதிகாரியே வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களை நியமிக்கிறார். ஒன்றியப் பிரதேசங்களைப் பொறுத்தவரை அந்நியமனங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் (RO) மேற்கொள்கிறார்.

தேர்தல் பார்வையாளர்கள் (EO)

இந்திய தேர்தல் ஆணையம் அரசாங்க அதிகாரிகளைத் தேர்தல் பார்வையாளராக நியமிக்கிறது. (பொதுப்பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் செலவினைப் பார்வையாளர்கள்). இவர்கள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்படுகிண்றனர். இவர்கள் தேர்தல் ஆணையத்தல தங்களுக்கு தரப்பட்ட பணிகளை நிறைவேற்றுகின்றனர். இவர்கள் ஆணையத்திற்கு நேரடி பொறுப்பாகிண்றனர்.

தேர்தல் சீர்திருத்தங்கள், கட்சித்தாவல் தடைச் சட்டம்

தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான குழுக்கள்

மேற்கண்ட குழுக்கள் மற்றும் ஆணையங்கள் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் நமது தேர்தல் முறைமையில் அவ்வப்போது பல்வேறு சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றினைப் பார்க்கலாமா?

  • 61வது அரசமைப்புச் சட்டத்திருத்தம், 1988-ன் மூலமாக வாக்களிக்கும் வயது இருபத்தி ஒன்றிலிருந்து பதினெட்டு ஆக குறைக்கப்பட்டது.
  • வாக்காளர் பட்டியல் தயாரித்தல், திருத்தியமைத்தல் போன்ற தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அயற்பணியில் சென்று தேர்தல் ஆணையத்தின் கீழ் பணிபுருதல்.
  • ஓர் தொகுதியில் வேட்பாளர்களை முன்மொழியும் நபர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் பத்து சதவீதம் அல்லது பத்து வாக்காளர்கள் இதில் எது குறைவானதோ அதனை அதிகரித்தல்.
  • 1989-ம் ஆண்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தேர்தலில் பயன்படுத்தப்படும் வகையில் அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டன.
  • 1989-ம் ஆண்டு வாக்குச்சாவடியைக் கைப்பற்றுவதனைத் தடுப்பதற்கு தேர்தலை ஒத்திவைக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது.
  • அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை என வகைப்படுத்தி வேட்பாளர்களை பட்டியலிடுதல்
  • வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 48 மணிநேரம் முன்பிருந்து அப்பகுதியில் மதுபான விற்பனையினைத் தடைசெய்தல்
  • தேர்தலில் போட்டியிடும் ஓர் வேட்பாளர் எதிர்பாராமல் மரணமடைந்தால் சம்பந்தப்பட்ட கட்சிக்கு மாற்று வேட்பாளரை பரிந்துரைப்பதற்கான வாய்ப்புடன் ஏழு நாட்கள் அவகாசம்.
  • தேர்தல் தினத்தன்று பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு ஊதியத்துடனான விடுமுறை.
  • ஆயுதங்கள் தடை.
  • 1998-இல் ஓர் அம்சம் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலமாக உள்ளாட்சி அதிகாரிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் பணியாளர்கள், மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களின் ஊழியர்கள் ஆகியோர் தேர்தல் தினத்தன்று பணியில் ஈடுபடுத்தப்பட பணிக்கப்பட்டனர்.
  • 1999-இல் வாக்காளர்களின் ஓர் பிரிவினர் தபால் வாக்கினைப் (Postal Ballot) பயன்படுத்தி வாக்களிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.
  • 2003-இல் இராணுவத்தில் பணிபுரிபவர்கள் தங்களின் சார்பாக பதிலி வக்கு (Proxy vote) அளிக்கும் முறை கொண்டு வரப்பட்டு இராணுவச் சட்டத்திற்கு இசைவான வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
  • 2003-இல் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் முந்தைய குற்ற சம்பவங்கள் மற்றும் சொத்துக்கள் பற்றிய விபரங்களை பிரகடனப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
  • 2003-இல் மாநிலங்களவைத் தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வேட்பாளரின் வசிப்பிடம் தொடர்பான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. மேலும் வெளிப்படையான வாக்கெடுப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 2003-ல் வேட்பாளரின் தேர்தல் செலவுக் கணக்கில் பயணச் செலவினங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.
  • அரசாங்கமே இலவசமாக வாக்காளர் பட்டியலை வழங்குதல்
  • 2009-ல் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்தி முடிவுகளை அறிவிப்பதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
  • 2009-இல் தேர்தலின் போது தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை தகுதியிழப்பு செய்வதுடன் மூன்று மாத காலத்திற்குள் குற்றம் சாட்டப்பட்டவரின் மீதான விபரங்களை குறிப்பிட்ட அதிகாரி சமர்ப்பிக்க வேண்டும்.
  • தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • பிணைத்தொகை அதிகரிக்கப்பட்டது.
  • மாவட்டத்தினுள் மேல் முறையிட்டு அதிகாரிகளை நியமித்தல்.
  • 2010-இல் வெளிநாடு வாழி இந்தியக் குடிமக்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.
  • 2011-இல் தேர்தல் செலவினங்களுக்கான உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டது.

கட்சித் தாவல் தடைச் சட்டம்

52வது அரசமைப்புச் சட்டத்திருத்தம் 1985-ன் மூலமாக ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு மாறும் நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினரைத் தகுதியிழப்பு செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டது. இதற்காக இந்திய அரசமைப்பில் பத்தாவது அட்டவணை இணைக்கப்பட்டது. இச்சட்டமே ‘கட்சித்தாவல் தடைச் சட்டம்’ என அழைக்கப்படுகிறது. பின்னர் 91வது அரசமைப்புச் சட்டத்திருத்தம் , 2003ன் மூலமாக ஓர் சிறுதிருத்தம் செய்யப்பட்டது. அதாவது கட்சி பிளவுறும் சூழலில் கட்சித் தாவலின் அடிப்படைகள் பொருந்தாது என்பதாகும்.

இச்சட்டத்தின் அம்சங்கள்

அ. தகுதியிழப்பு

எக்கட்சியினைச் சார்ந்தவராக இருப்பினும் அவையின் ஓர் உறுப்பினர் தனது விருப்பத்தின் அடிப்படையில் உறுப்பினர் பதவியை விட்டு விலகுதல் அல்லது தான் சார்ந்த கட்சியின் வழிகாட்டுதலுக்கு எதிராக வாக்களித்தல் அல்லது வாக்களிப்பிலிருந்து கட்சியின் முன் அனுமதியின்றி விலகியிருத்தல் ஆகியவற்றால் தகுதியிழப்பு செய்யப்படலாம்.

ஓர் சுயேட்சை வேட்பாளர் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் மற்றொரு அரசியல் கட்சியில் சேர்ந்தால் அவையிலிருந்து அவர் தகுதியிழப்பு செய்யப்படுவார்.

ஓர் நியமன உறுப்பினர் தான் பதவியேற்ற நாளிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் ஏதேனும் அரசியல் கட்சியில் சேர்ந்தால் அவையின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவார்.

ஆ. விதிவிலக்குகள்

ஓர் கட்சி மற்றொரு கட்சியுடன் இணைக்கப்படும் போது கட்சித்தாவலின் அடிப்படையில் ஓர் உறுப்பினரின் மீது நடவடிக்கை எடுப்பதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. சபையை வழிநடத்தும் பொறுப்பிற்கு ஓர் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தனது கட்சி உறுப்பினர் பொறுப்பிலிருந்து சுயவிருப்பத்தின் அடிப்படையில் வெளியேறினாலும் அப்பதவியிலிருந்து விடுபட்ட நிலையில் மீண்டும் கட்சியில் சேரலாம் என்பது மற்றொரு விதிவிலக்காகும்.

இ. தீர்மானிக்கும் அதிகாரம்

அவையை நடத்தும் பொறுப்பில் உள்ளவாரே கட்சித் தாவல் தொடர்பான தகுதியிழப்பு பிரச்சனைகளை இறுதி செய்வார்.

ஈ. விதியை உருவாக்கும் அதிகாரம்

இந்திய அரசமைப்பின் பத்தாவது அட்டவணையில் உள்ள அம்சங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் விதிமுறைகளை உருவாக்கும் அதிகாரம் அவையை நடத்துபவருகே உள்ளது. அத்தகைய விதிகள் நாட்களுக்குள் அவையில் தாக்கல் செய்யப்பட வேண்டும். அவற்றினை குறிப்பிட்ட அவை ஏற்றுக்கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ செய்யலாம். மேலும் ஓர் உறுப்பினர் தனது விருப்பத்தின் அடிப்படையில் அவ்விதிகளை மீறுவது என்பதனை அவையின் மரபுகளை மீறிய செயலாகக் கருதி நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவையை நடத்துபவருக்கு உள்ளது.

சட்டத்தினைத் திறனாய்வு செய்தல்

  1. பதவிகள் அல்லது பொருள் சார்ந்த ஆதாயங்களுக்காக அரசியலில் கட்சித்தாவலை மேற்கொள்ளும் செயல்களைத் தடுக்கும் வகையில் அரசமைப்பின் பத்தாவது அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
  2. கொள்கையற்ற மற்றும் அறநெறிக்குப் புறம்பான வகையில் மேற்கொள்ளும் கட்சித்தாவல்களைக் கட்டுப்படுத்துவதன் மூலமாக இந்திய நாடாளுமன்ற மக்களாட்சியின் மாண்பினை இது வலுப்படுத்துகிறது.
  3. சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சிமாறும் மனப்பாங்கினைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசியல் கட்டமைப்பினை உறுதியாக வலுப்படுத்துகிறது.
  4. கட்சிகளை இணைப்பதன் மூலம் சட்டமன்றத்தில் உள்ள கட்சிகளை மறுசீரமைப்பு செய்ய வாய்ப்பு ஏற்படுத்துகிறது.
  5. தற்போதுள்ள அரசியல் கட்சிகளுக்கு அரசமைப்பு அடிப்படையில் தெளிவாக அங்கீகாரம் வழங்குகிறது.

மாநிலங்களவைத் தேர்தலைப் பற்றி நாம் அறிந்து கொள்வோமஆ?

நமது மாநிலங்களவைத் தேர்தலில் மாற்றித்தரக்கூடிய வாக்கு முறை பின்பற்றப்படுகிறது. மாநிலங்களவையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறிப்பிட்ட ஒதுக்கீடு உள்ளது. மாநிலங்களவையின் உறுப்பினர்கள் மாநில சட்டப்பேரவையின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட மாநிலத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்களே வாக்காளர்களாவர். ஒவ்வொரு வாக்காளரும் தங்களுக்கு விருப்பமான வேட்பாளரை வரிசைப்படுத்த வேண்டும். வெற்றி பெறுவதற்கு ஒவ்வொரு வேட்பாளரும் குறிப்பிட்ட அளவிலான வாக்குகளைப் பெறவேண்டும்.

இதற்கென வகுக்கப்பட்ட விதிமுறை பின்வருமாறு:

+1

உதாரணமாக தமிழகத்தின் 200 சட்டப்பேரவை உறுப்பினர்களால் 4 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டுமெனில் அவர்கள் (200/ 4+1 = 40+1) 41 வாக்குகளைப் பெற வேண்டும். வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற முதல் முன்னுரிமை வாக்குகள் (First Preference votes) எண்ணப்படுகின்றன. இவ்வாறு முதல் முன்னுரிமை வாக்குகள் எண்ணப்பட்ட பின்னரும் சில வேட்பாளர்கள் குறிப்பிட்ட அளவிலான வாக்குகளைப் பெறவில்லையெனில் குறைவான முதல் முன்னுரிமை வக்குகளைப் பெற்ற வேட்பாளர் நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் பெற்ற வாக்குகளில், அதாவது வாக்குச் சீட்டில் குறிப்பிட்டுள்ள இரண்டாவது முன்னுரிமை வேட்பாளருக்கு அந்த வாக்குகள் மாற்றப்படுகின்றன. இந்நடைமுறை ஓர் வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படும் வரை தொடர்கிறது.

தேர்தலில் முதலில் நிலையை கடந்தவாரே வெற்றி பெற்றவர் என்ற முறையை இந்தியா பின்பற்றியது?

இதற்கான பதிலை சிந்திப்பது மிகவும் கடினமாகும். மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் முறையை நீங்கம் படிக்கும் போது அம்முறை எவ்வளவு கடினமானது என்றும், அது சிறிய நாடுகளில் சாத்தியமாகுமே தவிர இந்தியாவைப் போன்ற துணைக்கண்ட நாடுகளில் செயல்படுத்துவது மிகவும் கடினமான பணியாகும். ஆனால் முதலில் நிலையைக் கடத்தல் முறை (FPTP) என்பது மிகவும் பிரபலமாகவும், வெற்றிகரமாகவும் இருப்பதற்கு அதன் எளிமையே காரணமாகும். இத்தேர்தல் முறை முழுவதையும் புரிந்து கொள்வதற்கு மிகவும் எளிமையாகவும், தேர்தல் மற்றும் அரசியலைப் பற்றி தெரியாத பொதுவான வாக்காளர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் அமைந்துள்ளது. தேர்தலின்போது வாக்காளர்களுக்கு தெளிவான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன தேர்தலின் போது வாக்காளர்கள் ஓர் வேட்பாளர் அல்லது கட்சியை அங்கீகரிக்க வேண்டும் அப்போதைய அரசியலின் தன்மைக்குத் தக்கவாறு வாக்காளர்கள் கட்சி அல்லது வேட்பாளருக்கோ அல்லது இரண்டிற்கும் சமமாகவோ முக்கியத்துவம் தரலாம்.

முதலில் நிலையைக் கடந்து செல்லுதல் என்னும் முறையானது கட்சிகளுக்கிடையே தேர்வு செய்யும் முறையாக இல்லாமல் குறிப்பிட்ட வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் முறையாகும். ஆனால் பிற தேர்தல் முறைகளில் குறிப்பாக விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் வாக்காளர்கள் ஓர் ஆட்சியைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதுடன் பிரதிநிதிகளும் கட்சியின் பட்டியலில் இருந்தே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதன் விளைவாக, ஓர் குறிப்பிட்ட பகுதியைப் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய மற்றும் பொறுப்பான ஓர் பிரதிநிதி இல்லாத நிலை ஏற்படுகிறது. ஆனால் முதலில் நிலையைக் கடந்து செல்லுதல் முறையைப் போன்றேதொகுதி அடிப்படையிலான முறையிலும் வாக்காளர்களுக்குத் தங்களின் பிரதிநிதி யார் என தெரிவதுடன் அவர்கள் வாக்காளர்களுக்குப் பதில் சொல்ல கடமையும், பொறுப்பும் கொண்டுள்ளனர். முதலில் நிலையைக் கடந்து செல்லுதல் முறையில் பொதுவாக தனிப்பெரும் கட்சிக்கு அல்லது கூட்டணிக்கு சில இடங்கள் அதிகமாகக் கிடைக்கின்றன. இது அவர்களின் பங்கான வாக்குகளை விட அதிகமாக இருக்கும்.

இங்ஙனம் இம்முறையானது நிலையான அரசாங்கத்தை உருவாக்க வகை செய்வதுடன் நாடாளுமன்ற அரசாங்கம் அமைதியாகவும், திறம்பட செயலாற்றவும் வாய்ப்பளிக்கிறது. முதலில் நிலையைக் கடந்து செல்லுதல் (FPTP) முறையானது ஓர் பகுதியில் உள்ள சமூகக் குழுக்களைச் சேர்ந்த வாக்காளர்களை ஒன்றிணைத்து வெற்றி பெற வைக்கிறது. ஆகவே முதலில் நிலையைக் கடந்து செல்லுதல் (FPTP) முறையானது எளியதாகவும், சாதாரண வாக்காளர்களுக்கு அறிமுகமாகதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அரசின் நிதியுதவியுடனான தேர்தல்கள்.

அரசின் நிதியுதவி என்றால் என்ன?

  • அரசின் நிதியுதவுடனான தேர்தல்கள் என்னும் கருத்தாக்கமே ஊழலைக் குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்டதாகும். இதில் தனிநபர் நிதியளிப்புகளுக்கு மாற்றாக அரசாங்கமே தேர்தல்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறது.
  • அரசியல் கட்சிகளின் நிதியில் வெளிப்படைத் தன்மையை எட்டுவதற்குச் சிறந்த வழியாக அரசின் நிதியுதவியுடனான தேர்தல்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. அரசின் நிதியுதவி என்பது இயற்கையானதாகவும், மக்களாட்சிக்காக செய்யும் செலவினமாகவும் நம்பப்படுகிறது. இதன் மூலமாக புதிய மற்றும் வளரும் கட்சிகளுக்கு ஆதரவளிக்கப்படுவதுடன் தேர்தல்களும் நேர்மையான முறையில் நடக்கின்றன.
  • கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு தனியார் நிதியுதவி இருக்குமெனில் சமுதாயத்தில் உள்ள பொருளாதார சமத்துவமின்மை என்பது அரசாங்கத்தில் அரசியல் சமத்துவமின்மையாக உருமாறுகிறது.

அரசின் நிதியுதவியுடனான தேர்தல்கள் குறித்த இந்திரஜித் குப்தா குழு, 1998

அரசின் நிதியுதவியுடனான தேர்தல்கள் பற்றி ஆராய்வதற்காக இந்திரஜித் குப்தா தலைமையிலான குழு 1998-ல் நியமிக்கப்பட்டது. அக்குழுவானது அரசியல் கட்சிகளுக்கு அரசின் நிதியுதவியுடனான தேர்தல்களை நடத்துவதற்கான அரசமைப்பு அம்சங்கள், சட்டக் கூறுகள், பொது விருப்பம் போன்றவற்றினை கொள்கை அடிப்படையில் ஆராயும் அதிகார வரம்பினைக் கொண்டிருந்தது. இதன்மூலம் குறைவான நிதி ஆதாரங்களைக் கொண்ட கட்சிகளும் மிகுதியான நிதி ஆதாரங்களைக் கோண்ட கட்சியுடன் தேர்தலில் போட்டியிடும் சூழலை நிறுவுவதாகும்.

இரண்டு கூடுதல் வரையறைகள்

  1. அரசின் தேர்தல் நிதி சுயேட்சை வேட்பாளர்களுக்கு வழங்கப்படமாட்டாது. வாக்காளர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதுடன் தங்களுக்கென தேர்தல் ஆணையத்தால் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள தேசிய அல்லது மாநிலக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு மட்டுமே அரசின் தேர்தல் நிதியுதவி வழங்கப்படும்.
  2. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் வேட்பாளர்களுக்கு சில வகையினங்களில் மட்டுமே குறுகிய காலத்திற்கு நிதியுதவி வழங்கப்படும்.

மேலும் இக்குழு தனியாக தேர்தல் நிதியை உருவாக்க பரிந்துரைத்தது. இதற்கு மத்திய அரசின் சார்பாக வருடத்திற்கு கோடி ரூபாயும், அனைத்து மாநில அரசுகளும் அதற்கு நிகரான பங்களிப்பினை ஒட்டு மொத்தமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டது. மேலும் இக்குழுவின் பரிந்துரையில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் அரசிடமிருந்து தேர்தல் நிதியைப் பெறும் தகுதியுள்ளவர்களாவதற்கு கடந்த நிதியாண்டில் வருமான வரி செலுத்தியிருக்க வேண்டியது அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலில் இளைஞர்களின் பங்கு

தேர்தலில் வெற்றி பெற நினைக்கும் அனைத்து அரசியல் தலைவர்களும் சிந்திக்கக் கூடியதாக இத்தலைப்பு உள்ளது. ஒவ்வொரு ஆண்டிலும் வாக்காளர் பட்டியலில் பன்மடங்கிலான முதல் தலைமுறை வாக்காளர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த இளைய சமுதாயத்தினரின் வாக்கு என்பது தேர்தல் முடிவுகளை பெருமளவில் மாற்றியமைக்கிறது.

இன்றைய இளைய தலைமுறையினருக்கு நமது தேசத்தினை மாற்றும் வலிமை உள்ளதுடன் அது நிகழும் என்பதும் நிதர்சனமாகும். ஆகவே மாற்றம் முன்னேற்றம் மற்றும் புதுமையைப் புகுத்தல் ஆகியவை இளைஞர்கள் தங்களில் தோளில் சுமக்கும் பொறுப்பாகும்.

எவனொருவன் இளைஞர்களைத் தன்பக்கம் ஈர்க்கிறானோ, எதிர்காலம் அவன் வசமாகிறது. – அடால்ஃப் ஹிட்லர்

இளைஞர்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்?

  • பிரதிநிதித்துவ மக்களாட்சி முறையில் தேர்தல்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. இத்தேர்தல் நடைமுறையில் பங்குபெறும் இளைஞர்கள் அவர்கள் ஆதரவினை வழங்குவதன் மூலம் அரசியல் மற்றும் கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி பாராட்டுக்குரியவர்கள் ஆகின்றனர்.
  • ‘ஒரு நபர் ஒரு வக்கு’ என்ற அடிப்படையில் வாக்களிப்பதன் மூலமாக ஒவ்வொரு குடிமகனும் சமவாய்ப்புடன் தேர்தலில் பங்கேற்கின்றனர். வாக்களிப்பதன் மூலமாக இளைஞர்களும் பிறரைப் போன்றே அரசியல் செல்வக்கு மற்றும் அழுத்தத்தைத் தரும் திறனைப் பெறுகின்றனர்.
  • தேர்தல்களில் அனைவரும் பங்கேற்பதன் மூலமாக ‘மக்கள் விருப்பம்’ பிரதிநிதித்துவப்படுத்தப்படுவது உறுதி செய்யப்படுகிறது.
  • இளைஞர்கள் ஆரம்பத்திலிருந்தே தேர்தலில் வாக்களிக்கும் பழக்கத்தை கடைபிடிப்பதன் மூலமே அதிக வாக்குப்பதிவினை உறுதிசெய்யலாம்.
  • இளைஞர்கள் மற்றும் வயதான வாக்காளர்களின் அரசியல் விருப்பங்கள் மாறுபடுகிண்றன. இளைஞர்கள் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் அவர்களின் தனிப்பட்ட விருப்பங்கள், கொள்கையை உருவாக்குபவர்களால் புறந்தள்ளப்படுகிறது.

நோட்டா என்றால் என்ன?

மேற்கண்டவர்களுள் எவருமில்லை

தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளட்களையும் நிராகரிக்கும் வாக்காளரின் உரிமை.

நமது அரசியல் முறைமையத் தூய்மைப்படுத்தும் நோக்கில் உச்சநீதிமன்றம் கூறியது என்னவெனில் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமை வாக்காளர்களுக்கு உள்ளது என்பதாகும். இதனால் உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு வழிகாட்டும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ‘மேற்கண்ட எவருமில்லை’ (NOTA) எனும் வாய்ப்பினை வாக்காளர்களுக்கு வழங்கும்படி உத்தரவிட்டது.

‘நோட்டா’ அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்புவரை எதிர்மறை வாக்கினை செலுத்த விரும்பும் வாக்காளர்களுக்கு தனி வாக்குச் சீட்டு தரப்படுவதுடன் ஓர் பதிவேட்டில் அவர்களின் பெயரும் பதிவு செய்யப்படும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் 1961-ன் பிரிவு 49(0) கூறுவது என்னவெனில் ஓர் வாக்காளர் தனது வாக்காளர் வரிசை எண்ணை 17A படிவத்தில் பதிவு செய்த பின்னர் எதிர்மறை வாக்கினைச் செலுத்தலாம்.

  • ‘நோட்டாவைப்’ போன்று முன்னரே வேறொரு அம்சம் இருந்ததை நீங்கள் அறிவீர்களா?

அது ‘எதிர்மறை வாக்களித்தல்’ (Negative Voting) என அழைக்கப்படுகிறது.

  • மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்தில் தரப்பட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலின் இறுதியில் நோட்டா வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
  • மேற்கண்டவர்களுள் எவருமில்லை (None of the avove –NOTA) – தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களைடும் நிராகரிக்கும் வாக்காளரின் உரிமை.
  • நோட்டாவை அனுமதிக்கும் நாடுகள்:

கொலாம்பியா, உக்ரைன், பிரேசில்ம் வங்கதேசம், பின்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன், சிலி, பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகள் நோட்டாவைப் பின்பற்றின. சில சமயங்களில் அமெரிக்காவும் இதனை அனுமதித்தது. 1975-ஆம் ஆண்டு முதல் டெக்சாஸ் மாகானம் இந்த அம்சங்களைப் பின்பற்றி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!