Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Samacheer NotesTnpsc

நிதிப்பொருளியல் Notes 12th Economics Lesson 7 Notes in Tamil

12th Economics Lesson 7 Notes in Tamil

7. நிதிப்பொருளியல்

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை

போகாறு அகலாக் கடை

– திருக்குறள் 478

அறிமுகம்

  • நிதிப் பொருளியல் , என்ற பதம் புதிய ஒன்றாகும். இதன் பழைய மற்றும் பிரசித்தி பெற்ற பாடம் ‘பொது நிதி’ என்பதாகும். பொது நிதி என்ர பாடம் அரசு நிதி பற்றிய செயல்பாடுகளோடு தொடர்புடையது.
  • அரசு கருவூலத்தின் நிதி செயல்பாடுகள் பற்றி விவாதிக்கிறது. “பிசிகல்” என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையான ‘கூடை’ என்ற பொருள்படும். இது “பொதுவான பை” என்பதை குறிக்கிறது. எனவே “பொதுநிதி” – என்பதை “நிதிப் பொருளியல்” என அழைக்கப்படுகிறது.
  • பொதுநிதி என்பது ஓர் அரசு தனது நிதி வளங்களை உருவாக்குவது மற்றும் செலவழிப்பது பற்றி கூறுகிறது. குடிமக்களின் மொத்த விருப்பங்கள் பற்றி அரசு கருத்தில் கொள்கிறது.
  • தற்கால அரசு நலம் பேனும் அரசாகும். தற்போது அரசின் செயல்பாடுகள் உள்ளார்ந்து பறந்து விரிந்து காணப்படுகிறது. இச்செயல்பாடுகளை செய்வதற்கு அரசுக்கு நிதி தேவைப்படுகிறது. இந்தப்பாடம் பொது வருவாய். பொதுச் செலவு, பொதுக்கடன், வரவு செலவுத் திட்டம், கூட்டரசு நிதி மற்றும் உள்ளாட்சி நிதி ஆகியவற்றை பற்றி விளக்குகிறது.

பொதுநிதி – பொருள்

பொது நிதி என்பது அரசின் நிதி சார்ந்தவை பற்றி படிக்கக்கூடியதாகும். இது அரசின் வருவாய் மற்றும் செலவுகளைப் பற்றியும், அவை ஒன்றோடொன்று எவ்வாறு சரி செய்து கொள்கிறது என்பதை பற்றியும் விளக்குகிறது.

வரைவிலக்கணங்கள்

“பொதுநிதி என்னும் பாடம் அரசியலுக்கும் பொருளியலுக்கும் இடையே எல்லைக்கோடாக திகழ்கிறது. இது பொது அதிகார அமைப்பின் வரவு செலவுகளைப் பற்றியும், அது ஒன்றோடொன்று சரிசெய்து கொள்வதைப் பற்றியும் கருத்தில் கொள்கிறது”. – டால்டன்

“அரசின் வருவாய் மற்றும் செலவுகளின் இயல்பையும், கொள்கைகளையும் ஆராய்வதே பொது நிதியியல் ஆகும்”.

  • ஆடம் ஸ்மித்

பொது நிதியியலின் பாடப் பொருள்/ எல்லை

பொதுநிதியின் எல்லை

  1. பொது வருவாய்
  2. பொதுச் செலவு
  3. பொதுக்கடன்
  4. நிதி நிர்வாகம்
  5. நிதிக் கொள்கை

நவீன காலத்தில் பொது நிதியியல் ஐந்து துணைப்பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. அவை பொது வருவாய், பொதுச்செலவு, பொதுக்கடன், நிதி நிர்வாகம், நிதிக்கொள்கை.

  1. பொது வருவாய்

பொது வருவாய் என்பது வருவாயைப் பெருக்கக் கூடிய முறைகளான வரி மற்றும் வரியல்லா வருமானங்கள் பற்றியும், வரிக்கொள்கை , வரிவிகிதம், வரியின் பளுச், வரியின் தாக்கம் மற்றும் அவற்றின் விளைவுகள் ஆகியவற்றையும் விளக்குகிறது.

2. பொதுச்செலவு

இப்பகுதி அரசின் செலவு, பொதுச் செலவின் விளைவுகள் மற்றும் பொதுச் செலவைக் கட்டுத்துதல் போன்றவை சார்ந்த அடிப்படைக் கோட்பாடுகளைக் கொண்டுள்ளது.

3. பொதுக் கடன்

பொதுக்கடன் என்ற பகுதியில் உள்நாடு மற்றும் வெளிநாட்டின் மூலம் பெறக்கூடிய கடன்களுக்கான வளங்களைப் பற்றி படிக்கிறது. இதில் பொதுக்கடன்களின் சுமை, அதன் விளைவுகள் மற்றும் திரும்பச் செலுத்தும் முறை பற்றி இத்தலைப்பின் கீழ் வருகிறது.

4. நிதி நிர்வாகம்

இப்பகுதி அரசின் வரவு செலவு திட்டத்தின் பல்வேறு பகுதிகளைப் பற்றி படிக்கிறது. வரவு செலவு திட்டம் என்பது ஓராண்டிற்கான அரசின் பேரளவு நிதி திட்டமாகும். வரவு செலவு திட்டத்தின் பல்வேறு நோக்கங்கள் மற்றும் அதனைத் தயாரிப்பதற்கான வழிமுறைகளை, நிதி ஒதுக்கீடு , மதிப்பீடு மற்றும் தணிக்கை போன்றவைகள் நிதி நிர்வாகத்தின் கீழ் வருகிறது.

5. நிதிக் கொள்கை

வரிகள், மானியங்கள், பொதுக்கடன் மற்றும் பொதுச்செலவு ஆகியவைகள் நிதிக்கொள்கையின் கருவிகளாகும்.

பொதுநிதி மற்றும் தனியார் நிதி

பொது நிதி என்பது அரசின் வருவாய், செலவு, கடன்கள் மற்றும் நிதி நிர்வாகம் பற்றி விளக்குகிறது. தனியார் நிதி என்பது தனிநபர் அல்லது தனியார் நிறுவனங்களின் வருவாய், செலவு, கடன் மற்றும் அதன் நிதி நிர்வாகம் ஆகியவற்றைப் பற்றி படிக்கிறது. பொதுநிதி மற்றும் தனியார் நிதி அடிப்படையில் ஒன்றுபோல் இருந்தாலும் அவற்றின் அளவு, நோக்கம், விளைவு, தாக்கம் ஆகியவற்றில் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன.

ஒற்றுமைகள்

  1. பகுத்தறியும் தன்மை

பொது மற்றும் தனி நிதி பகுத்தறிவை அடிப்படையாக கொண்டவை. இரண்டும் குறைந்த செலவில் அதிக நலத்தைப் பெறுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

2. கடனுக்கான வரையறை

இரண்டுக்குமான கடன்கள் வரையரைக் கொண்டுள்ளது. தனது வருவாய்க்கு அப்பால் அரசு, செல்வதில்லை. அரசின் பற்றாக்குறை வரவு செலவு, திட்டத்திற்கும் எல்லை இருக்கிறது.

3. வளங்களின் பயன்பாடு

தனி மற்றும் பொது துறைகள் வரையறுக்கப்பட்ட வளங்களையே கொண்டுள்ளது. இவ்விரண்டும் உத்தம அளவில் வளங்களைப் பயன்படுத்த முனைகிறது.

4. நிர்வாகம்

நிர்வாகத் திறனானது அரசு மற்றும் தனியாரின் செயல்திறனைப் பொருத்து அமைகிறது. செயல்திறன் இன்மை மற்றும் ஊழல் ஆகியவை நிர்வாகத்தில் காணப்பட்டால் விரயங்கள் மற்றும் நட்டங்கள் ஏற்படும்.

வேற்றுமைகள்

  1. வருமான மற்றும் செலவு சரிகட்டல்

அரசு செலவினை மதிப்பீடு செய்து, அதற்கேற்ப வருவாயை எழுப்ப முயற்சிக்கிறது. தனிநபர்கள் வருவாய்க்கு ஏற்ப செலவினை வைத்துக் கொள்வார்கள். எடுத்துக்காட்டாக தனியார் நிதி என்பது இருக்கக்கூடிய துணி அளவிற்கு மேலங்கி (Coat) தைப்பது போன்றும், பொதுநிதி என்பது மேலங்கியின் தேவைக்கேற்ப துணி அளவை முடிவு செய்வது போன்றதாகும்.

2. கடன்

அரசானது உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு வழிகள் மூலம் கடன்களை பெறலாம். மேலும் அரசானது, பத்திரங்களை வெளியிட்டு மக்களிடம் கடனைப் பெறலாம். ஆனால் தனியார் இவ்வாறு அவர்களிடம் கடனைப் பெறமுடியாது.

3. பணம் அச்சடிக்கும் உரிமை

அரசு வேண்டுமெனில் பணத்தை அச்சடிக்கலாம். இது பணத்தை உருவாக்குதல், பகிர்வு செய்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். தனியார் பணத்தை உருவாக்க இயலாது.

4. நடப்பு மற்றும் எதிர்கால முடிவுகள்

அரசானது எதிர்காலத் திட்டங்களை கருத்தில் கொண்டு நீண்டகால முடிவினை மேற்கொள்கிறது. அரசின் முதலீடானது பள்ளிகளுக்கான கட்டிடங்கள் கட்டுதல், மருத்துவமனை மற்றும் அடிப்படை வசதிகளை மேற்கொள்வது ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. ஆனால் தனியார் நிதியானது குறுகிய கால திட்டங்களுக்கான நிதியைக் கொண்டவை ஆகும்.

5. நோக்கம்

பொதுத்துறையின் முக்கிய நோக்கம், பொருளாதாரத்தில் சமூக நன்மையை வழங்குவதாகும். தனியார் துறையின் நோக்கம் சொந்த நன்மை உயர்த்துவது, அதாவது இலாபத்தை உச்சப்படுத்துவதாகும்.

6. கட்டாய வருவாய் பெறுவதற்கான வழிகள்

தனிநபரின் வருமானத்திற்கான ஆதாரங்கள் குறைவாகும். ஆனால் அரசுக்கு அதிகமாகும். அரசு தனது அதிகாரவரம்பை பயன்படுத்தி வருவாயைப் பெறலாம்.

7. பெரிய அளவிலான மாற்றங்களை கொண்டுவருவதற்கான திறன்

பொதுநிதிக்கு வருவாய் சார்ந்த பெரிய முடிவுகளை எடுப்பதற்கான திறன் உண்டு. தனது வருவாயை திறமையாக மற்றும் வெளிப்படையாக அரசால் சரிகட்ட இயலும். ஆனால் தனி நபர்கள் அவ்வாறான பெரிய முடிவுகளை எடுக்க இயலாது.

தற்கால அரசின் பணிகள்

தற்கால அரசானது காவல் அரசாக மட்டுமில்லாமல் நலம் பேணும் அரசாக உள்ளது. இது பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்புகளை உருவாக்குவதையும் , நாட்டிற்கு உள்ளேயும், வெளியிலும் நிலைத்தன்மையை உறுதி செய்தல், நீடித்த நெடுநாள் வளர்ச்சிக்கான காரணிகளை பாதுகாத்தல் ஆகியவற்றில் பெரிய அளவிலான பங்கினை ஆற்றுகிறது. அரசின் முக்கியப் பணிகள் பின்வருவனவாகும்.

  1. பாதுகாப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழிவிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதே அரசின் முக்கியப் பணியாகும். அரசு போதுமான அளவில் காவல் மற்றும் ராணுவ நிலைகளை பராமரித்து பாதுகாப்பு பணிகளைச் செய்கிறது.

2. நீதி

நீதியை பரிபாலனம் செய்தல் மற்றும் தகராறுகளைத் தீர்த்தல் ஆகியவை அரசின் பணியாகும். அரசானது, அனைத்து வகுப்பினரும் சமநீதி பெறும் வகையில் நீதி அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

3. நிறுவனங்கள்

தனி நிறுவனங்கள் மீதான ஒழுங்குமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தற்கால அரசின் பனியின் கீழ் வருகிறது. அரசானது சில நிறுவனங்களின் சொந்தமாகக் கொண்டு அவற்றினை வெற்றிகரமாக செயல்படுத்துவதும் அரசின் பொறுப்புகளாகும்.

4. சமூக நலன்

நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக கல்வி, சமூக பாதுகாப்பு, சமூக காப்பீடு, உடல்நலம் மற்றும் துப்புரவு போன்றவை ஏற்படுத்துவது அரசின் கடமையாகும்.

5. கட்டமைப்பு

தற்கால அரசுகள் சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பினை உருவாக்குவதன் மூலம் பொருளாதார முன்னேற்றத்திற்கான அடித்தளத்தை அமைக்கிறது.

6. பேரின பொருளாதாரக் கொள்கை

பேரின பொருளாதார நோக்கங்களை அடைவதற்காக நிதிக் கொள்கை மற்றும் பணக்கொள்கை ஆகியவற்றை அரசு மேற்கொள்கிறது.

7. சமூக நீதி

  • பொருளாதாரத்தின் வளர்ச்சி நிலையின் போது சமூகத்தின் சில பிரிவினர் மற்றவர்களைவிட கூடுதல் நன்மை அடைகின்றனர். நிதித் தீர்வை மூலம் வருவாயை மறுபகிர்வு செய்வதற்கு அரசானது தேவைப்படுகிறது.
  • ஒரு சிலரிடம் பொருளாதார சக்தி குவிந்து காணப்படும் தீமையை களைவது அரசின் முக்கியப் பணியாகும். இதனை களைவதற்காக முற்றுரிமை மற்றும் வாணிப கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது.
  • அரசு மூன்று விதமான வழிகளில் பங்காற்றுகிறது.
  1. பொருட்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்பவராக
  2. பொது மற்றும் சமூக பண்டங்களை அளிப்பவராக
  3. பொருளாதார முறையை ஒழுங்குபடுத்துபவராக.

பொதுச்செலவு

பொருள்

மக்களின் சமூகத் தேவையை நிறைவேற்றுவதற்காக மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும் செலவினமே பொதுச் செலவாகும்.

வரைவிலக்கணம்

“பொது அமைப்புகளான மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், சமூகத்தின் பொதுவான விருப்பங்களை நிறைவு செய்வதற்காக மேற்கொள்ளக் கூடிய செலவுகள் பொதுச் செலவாகும்” – என வரையரை செய்யப்படுகிறது.

பொதுச் செலவின் வகைப்பாடு பின்வருவனவாகும்

  1. நன்மை அடிப்படையிலான பாகுபாடு

கான் மற்றும் பிளின் ஆகியோர் பொதுச் செலவை நன்மை அடிப்படையில் நான்கு வகைகளாக வகைப்படுத்துகிறார்கள். அவை:

அ) அனைத்து சமூகத்திற்கும் பலன் அளிக்கிற பொதுச்செலவு உதாரணமாக, பொது நிர்வாகம், இராணுவம், கல்வி, பொதுச் சுகாதாரம் மற்றும் போக்குவரத்து போன்றவற்றிற்கான செலவுகள்.

ஆ) சில மக்களுக்கான சிறப்பு நன்மை தரக்கூடிய மற்றும் முழு சமுதாயத்திற்கும் பொது நன்மை தரக்கூடிய செலவுகள். உதாரணமாக, நீதி நிர்வாகம்.

இ) ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு நேரடியாக நன்மை தரக்கூடிய மற்றும் சமுதாயத்திற்கு மறைமுகமாக நன்மை தரக்கூடிய செலவுகள். உதாரணமாக சமூக பாதுகாப்பு, பொது நலன் , ஓய்வூதியம் மற்றும் வேலையின்மைக்கான நிவாரணம் ஆகியவற்றிற்கான செலவுகள்.

இ) சில நபர்களுக்கு சிறப்பு நன்மை பயக்கும் வகையிலான செலவு உதாரணமாக ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கான மானியம் வழங்குதல்.

2. பணி அடிப்படையிலான வகைப்பாடு

ஆடம்ஸ்மித் பொதுச் செலவினை அரசின் பணிகள் அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்தியுள்ளார்.

அ) பாதுகாத்தல் பணிகள்

இது நாட்டின் குடிமக்களை அந்நிய ஆக்கிமிப்பு மற்றும் உள்நாட்டுச் சீரழிவு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதற்கான செலவை உள்ளடக்கியுள்ளது. உதாரணமாக பாதுகாப்பு, காவல்துறை, நீதிமன்றங்கள் போன்றவற்றிற்கான செலவுகள்.

ஆ) வணிக பணிகள்

வணிகம் மற்றும் வியாபார வளர்ச்சிக்காக மேற்கொள்ளக் கூடிய பொதுச் செலவை உள்ளடக்கியது. உதாரணமாக போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு மேம்படுத்துவதற்கான செலவுகள்.

இ) வளர்ச்சி பணிகள்

இது கட்டமைப்பு மற்றும் தொழில் மேம்பாட்டிற்கான பொதுச் செலவை உள்ளடக்கியுள்ளது.

பொதுச்செலவு அதிகரிப்பதற்கான காரணங்கள்

தற்கால அரசு என்பது நலம் பேணும் அரசாகும். இதில் அரசானது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சார்ந்த பணிகளை செய்துதர வேண்டியுள்ளது. இவைகள் பொதுச் செலவு அதிகரிப்பதற்கான காரணங்களாக உள்ளது.

  1. மக்கள்தொகை வளர்ச்சி

67 ஆண்டு கால திட்டங்களில் , இந்தியாவின் மக்கள்தொகை 1951-ல் 36.1 கோடியிலிருந்து 2011-ல் 121 கோடியாக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை வளர்ச்சியினால் உடல்நலம், கல்வி, சட்ட ஒழுங்கு போன்றவற்றிற்காக பேரளவு முதலீடு செய்ய வேண்டியிருக்கிறது. இளைஞர்களுக்கான கல்வி மற்றும் சேவைகளுக்காகவும், முதியோர்களுக்கான ஓய்வூதியம், சமூக பாதுகாப்பு மற்றும் உடல் நலத்திற்கான வசதிகள் ஏற்படுத்தவும் பொதுச்செலவு அதிகமாகிறது.

2. பாதுகாப்புச் செலவு

இந்தியாவில் பாதுகாப்பிற்கான செலவு அதிகரித்தவண்ணம் உள்ளது. இராணுவ தளவாடங்களை நவீனமயமாக்குவதால் இராணுவ செலவு பலமடங்கு அதிகரித்துள்ளது. 1990-91ல் 10,874 கோடியாக இருந்த அரசின் பாதுகாப்புச் செலவு 2018-19ல் 2,95,511 கோடியாக அதிகரித்துள்ளது.

3. அரசு மானியங்கள்

இந்திய அரசானது, உணவு, உரங்கள், முன்னுரிமை துறைக்கான கடன் வழங்கல், ஏற்றுமதி மற்றும் கல்வி போன்ற பல இனங்களுக்கு மானியங்களை வழங்குகிறது. மானியங்களுக்கான தொகை மிக அதிகமாக இருப்பதால் பொதுச் செலவு பலமடங்கு அதிகரித்துள்ளது.

1991-ம் ஆண்டில் மத்திய அரசின் மான்யத்திற்கான செலவு 9581 கோடியிலிருந்து 2,29,715.67 கோடியாக 2018-19ல் அதிகரித்துள்ளது. மற்றொருபுறம் பெரும் நிறுவனங்களுக்கு மானியமாக (ஊக்கத்தொகை) 5-இலட்சம் கோடிக்கு மேல் வழங்கியுள்ளது.

4. கடன் சேவைகள்

அரசானது அதிகமான அளவில் உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு ஆதாரங்கள் மூலம் கடன் பெற்றுள்ளன. அதன் விளைவாக அரசு கடனை திருப்பி செலுத்துவதற்காக அதிக பணம் தேவைப்படுகிறது.

மத்திய அரசின் வட்டி செலுத்தல்களுக்கான தொகை 1990-91ல் 21500 கோடியிலிருந்து 2018-19ல் 5,75,794 கோடியாக அதிகரித்துள்ளது.

5. வளர்ச்சித் திட்டங்கள்

அரசு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்கிறது. அவையாவன நீர்ப்பாசனம், இரும்பு மற்றும் எஃகு , கனரக எந்திரங்கள், எரிசக்தி, தொலைதொடர்பு போன்றவையாகும். இந்த வளர்ச்சித் திட்டங்களுக்கு அதிகளவு முதலீடு தேவைப்படுகிறது.

6. நகரமயமாக்கல்

நகரங்களில் மக்கள் தொகை விரைவாக அதிகரித்து வருகிறது. 1950-51ல் மொத்த மக்கள் தொகையில் 17சதவீதம் பேர் நகர்புறத்தில் வாழ்ந்தனர். தற்போது நகர மக்கள் தொகை 43% அளவிற்கு அதிகரித்துள்ளது. தற்போது 1 மில்லியன் மக்கள் தொகைக்கு மேல் சுமார் 54 நகரங்கள் உள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்கு, கல்வி மற்றும் குடிமை வசதிகளை மேற்கொள்ள அதிக அளவில் செலவுகள் ஏற்படுகின்றது.

7. தொழில் மயமாக்கல்

அடிப்படை மற்றும் கனரக தொழில்களுக்கு அதிக அளவு மூலதனம் தேவைப்படுகிறது. மேலும் இது உற்பத்திக்கு நீண்ட காலத்தையும் எடுத்துக்கொள்ளும். அரசானது இத்தகைய தொழிற்சாலைகளை திட்டமிட்ட பொருளாதாரத்தில் துவங்கவேண்டியுள்ளது. மேலும் வளர்ச்சி குன்றிய நாடுகளில் போக்குவரத்து, தகவல்தொடர்பு, எரிசக்தி, எரிபொருள் போன்ற அடிப்படை வசதிகள் தேவைப்படுகிறது.

8. மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான மானியங்கள் அதிகரிப்பு

இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்வதற்கு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான வழங்கப்படும் மானியங்கள் உதவித்தொகை பெருமளவுல் அதிகரித்துள்ளது.

பொது வருவாய்

பொது வருவாய் என்பது பொது நிதியியலில் முக்கிய இடம் வகிக்கிறது,. மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. பொதுச் செலவுகள் உயர்ந்து வருவதால் அதனை பொது வருவாயின் மூலமே சரிசெய்ய முடியும். பொது வருவாயை அதிகரிப்பது என்பது பொதுச் செலவின் அவசியம் மற்றும் மக்களின் செலுத்தும் திறன் அடிப்படையில் அமையும்.

பொருள்

  • பொது வருவாய் அல்லது பொது வருமானம் என்பது அனைத்து மூலங்களின் வழியாக அரசு பெரும் வருமானத்தைக் குறிக்கும்.
  • டால்டன் கூற்றுப்படி “பொது வருமானம்” என்பதை குறுகிய மற்றும் பரந்த பொருளில் விளக்கப்படுகிறது. பரந்த பொருளில் பொதுவருவாய் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் பொது அதிகார அமைப்பினர் பெரும் அனைத்து வருவாய் அல்லது கடன் உட்பட உள்ள பெறுதல்களைக் குறிக்கும்.
  • குறுகிய கண்ணோட்டத்தில் பொது அதிகார அமைப்பின் வருமான வளங்களை மட்டும் உள்ளடக்கியுள்ளது. இதனை வருவாய் வளங்கள் எனக் கூறப்படுகிறது.
  • குழப்பத்தை தவிர்ப்பதற்காக, பரந்த பொருளில் பொதுப் பெறுதல்கள் எனவும், குறுகிய கண்ணோட்டத்தில் பொது வருவாய் எனவும் அழைக்கப்படுகிறது.
  • குறுகிய பொருளில், பொது வருவாய் என்பது அரசின் வருவாய். இது ‘வருவாய் சாதனம்’ என்றும் பரந்த பொருளில் அரசு கடன் வழியாக பெறுவதும் ஆகும்.

பொது வருவாயின் வகைப்பாடு

பொது வருவாய் இருவகையாக வகைப்படுகிறது.

வரி வருவாய்

பொருள்

வரி என்பது குடிமக்கள் எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் அரசுக்கு கட்டாயமாக செலுத்தக்கூடியதாகும். இது அரசால் சட்டப்படி வரி செலுத்துவோர் மீது விதிக்கப்படுகிறது. இதனை வரி செலுத்துபவர் மறுக்காமல் செலுத்த வேண்டியதாகும்.

வரைவிலக்கணம்

“ஒரு நபர் அல்லது ஒரு நிறுவனம் அரசிடமிருந்து எந்தவிரு நன்மையும் எதிர்பாராமல் அரசுக்கு கட்டாயம் செலுத்தக்கூடியதாகும்”

  • அனடோல் முராட்

“வரி என்பது பொது அதிகார அமைப்பினால் விதிக்கப்பட்டதை செலுத்த வேண்டிய ஒரு கட்டாய பங்களிப்பாகும். செலுத்தப்பட்ட தொகைக்கு சமமான பலனை எதிர்பாராமல் செலுத்த வேண்டியதாகும். இது தண்டத்தொகை அல்லது சட்டபூர்வமான குற்றத்திற்காக விதிக்கப்படுவதல்ல”

  • டால்டன்

வரியின் அம்சங்கள்

  1. வரி என்பது அரசுக்கு கட்டாயமாக செலுத்தப்படக்கூடிய ஒன்றாகும். மக்கள் மீது சுமத்தப்படுகிற வரியை கட்டாயம் செலுத்த வேண்டும். வரியைச் செலுத்த மறுப்பது தண்டிக்கப்படக் கூடிய குற்றமாகும்.
  2. பொதுநிர்வாகத்தினரிடம் வரி செலுத்துவோர் எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் செலுத்த வேண்டியது. இதன் பொருளாவது என்னவென்றால் வரிசெலுத்துவோர், வரிசெலுத்துவதால் தனக்கு குறிப்பிட்ட நன்மை ஏதும் எதிர்பாராமல் செலுத்தக் கூடியது.
  3. ஒவ்வொரு வரியும் வரி செலுத்துவோரின் தியாகத்தை உள்ளடக்கியது.
  4. வரியானது சட்டத்தை மீறியதற்காக சுமத்தப்படும் தண்டத்தொகை போன்று விதிக்கப்படுவதல்ல.

சில வரி வருவாய் மூலங்கள்

  • வருமான வரி
  • நிறுவன வரி
  • விற்பனை வரி
  • கூடுதல் கட்டணம்
  • செஸ் (வரிக்கு வரி)

வரிசாரா வருவாய்

வரியல்லாத ஆதாரங்களிலிருந்து அரசினால் பெறப்படுகிற வருவாயை வரிசாரா வருவாய் என அழைக்கப்படுகிறது. வரிசாரா வருவாயின் ஆதாரங்களாவன:

  1. கட்டணம்

அரசிற்கான மற்றொரு முக்கியமான வருவாய் ஆதாரம் கட்டணம் ஆகும். பொது நிர்வாகத்தில் செய்யும் சேவைக்காக கட்டணம் விதிக்கப்படுகிறது. கட்டணம் என்பது வரியைப் போல் கட்டாயம் செலுத்தக்கூடியது அல்ல. அரசானது சில சேவையைச் செய்வதற்காக கட்டணங்களை வசூலிக்கிறது. எடுத்துக்காட்டாக, கட்டணம் என்பது பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமங்கள் போன்றவற்றை வழங்குவதற்காக விதிக்கக்கூடியது.

2. தண்டத்தொகை

சட்டத்தை மீறுவோர் மீது சுமத்தப்படுவது தண்டத் தொகை ஆகும். எடுத்துக்காட்டாக, சாலை விதிகளை மீறுதல், வருமான வரியை உரிய காலத்தீற்குள் செலுத்தாமல் தாமதமாக செலுத்துவோர் மீது விதிக்கப்படுவது.

3. பொதுத்துறை நிறுவனங்களின் வருவாய்கள்

அரசானது பொதுத் துறை நிறுவன அமைப்புகளில் உள்ள உபரியை வருமானமாகப் பெறும். சில பொதுத்துறை நிறுவனங்கள் பெரிய அளவில் இலாபம் ஈட்டுகிறது. அதன் இலாபம் மற்றும் பங்காதாயங்களை பொதுச் செலவிற்காக அரசு பயன்படுத்திக் கொள்கிறது.

4. மேம்பாட்டுக்கான சிறப்புத் தீர்வைகள்

இது ஒரு குறிப்பிட்ட பகுதியில் அரசு மேற்கொண்ட பொதுத் திட்டத்திற்காக அப்பகுதியினர் மீது சிறப்புத் தீர்வைகள் விதிக்கப்படுகிறது. ஒரு பகுதியில் பொது புங்காக்கள் அல்லது சாலை வசதி செய்வதால் அப்பகுதியில் நிலத்தின் மதிப்பு உயர்வதால் அப்பகுதியில் சிறப்புத் தீர்வைகள் விதிக்கப்படுகிறது.

5. அன்பளிப்புகள் , மான்யங்கள் மற்றும் உதவிகள்

  • தற்காலத்தில் ஒரு அரசிடமிருந்து மற்றொரு அரசுக்கு வழங்கப்படுவது உதவித்தொகை ஆகும். மத்திய அரசு மாநில அரசுக்கும் மற்றும் மாநில அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அவற்றின் பணிகளை மேற்கொள்வதற்காக வழங்கப்படும் உதவியாகும்.
  • வெளிநாடுகளிலிருந்து பெறக்கூடிய உதவியை அயல்நாட்டு உதவி என அழைக்கப்படுகிறது. வளரும் நாடுகள் இராணுவ உதவி, உணவுப் பொருட்கள் உதவி, தொழில்நுட்ப உதவி போன்றவற்றை இதர நாடுகளிலிருந்து பெறுகின்றது.

6. மரண தீர்வை

ஒருவர் வாரிசு இல்லாமலோ அல்லது உயில் ஏற்படுத்தாமல் மரணமடைந்தால், அவர் மரணத்திற்குப் பிறகு விட்டுச் சென்ற உடைமைகளை அரசு எடுத்துக்கொள்ளும்.

வரி விதிப்பின் புனித விதிகள்

ஒரு நல்ல வரியில் இருக்க வேண்டிய அம்சங்கள் மற்றும் தன்மைகளை புனித விதிகள் என விவரிக்கப்படுகிறது. புனித விதிகள் என்பது அனைத்து வரிகளுக்கும் பொதுவானதாக இல்லாமல் தனிப்பட்ட வரிக்கு மட்டும் அதன் தரத்தைக் குறிக்கிறது. ஒரு நல்ல வரி அமைப்பு என்பது அனைத்து வகை வரிகளை சரியாக இணைத்து புனித விதிகளை பெற்றிருக்க வேண்டும்.

ஆடம் ஸ்மித் கருத்துப்படி நான்கு புனித விதிகள் உள்ளன. அவையாவன:

வரி விதிப்பு விதிகள்

  1. சிக்கன விதி
  2. சமத்துவ விதி
  3. வசதி விதி
  4. உறுதி விதி
  5. திறன் மற்றும் நெகிழ்வு விதி

 

1. செலுத்தும் திறன் பற்றிய விதி

மக்களின் வரி செலுத்தும் திறனுக்கு ஏற்ப அரசானது வரி விதிக்க வேண்டும். ஏழை அல்லது நடுத்தர வர்க்கத்தினரை ஒப்பிடும் போது செல்வந்தர் அதிக வரி செலுத்தும் வகையில் இருக்க வேண்டும்.

2. நிச்சயத்தன்மை விதி

வரி வீதம் அல்லது செலுத்தும் காலம் குறித்து நிச்சயமற்ற தன்மை இல்லாத வகையில் அரசு வரியினை விதிக்க வேண்டும். வண்ணம் உறுதிப்படுத்த வேண்டும். அரசு தன் போக்கிற்கு வரிகளை விதித்தால் அது மக்களின் செலுத்தும் திறன் மற்றும் வேலை செய்யும் திறனையும் பாதிக்கும்.

3. வசதி விதி

வரி வசூலிக்கும் முறை மற்றும் வரி செலுத்தும் காலம் மக்களின் வசதிக்கேற்ப அமைய வேண்டும். வரி செலுத்துவோர்கள் வரியை சிரமமின்றி செலுத்தும் வண்ணம் வசதியான ஏற்பாட்டை செய்ய வேண்டும்.

4. சிக்கன விதி

அரசு வரிகளை வசூலிப்பதற்கு பணம் செலவிடுகிறது. உதாரணமாக, வரிகளை வசூலிப்பவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. வசூலிப்பதற்கான செலவு வரிகளை விட அதிகமாக இருந்தால் அவை மோசமான வரிகளாகும். எனவே, ஆடம்ஸ்மித் கருத்துப்படி வசூலிக்கும் செலவுகள் குறைவாக இருக்கும் வரிகளை மட்டுமே அரசு விதிக்க வேண்டும் என்பதாகும்.

நேர்முக வரி மற்றும் மறைமுக வரி

நேர்முக வரி

நேர்முக வரி என்பது நபரின் வருமானம் மற்றும் செல்வம் மீது விதிக்கப்பட்டு அரசுக்கு நேரடியாக செலுத்தக்கூடியதாகும். அவ்வரியின் சுமையை பிறருக்கு மாற்ற இயலாது. வரி வளர்வீத தன்மை கொண்டது. ஒரு நபரின் செலுத்தும் திறனுக்கு ஏற்றவாறு வரி விதிக்கப்படும். அதாவது , பணக்காரர்களிடமிருந்து அதிகமான வரியும் மற்றும் ஏழை மக்களிடமிருந்து குறைவான வரியும் வசூலிக்கப்படும்.

நேரடி வரி சார்ந்த திட்டங்கள் மற்றும் கொள்கைகளை இந்திய அரசு, நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய நேர்முக வரி வாரியத்தால் பரிந்துரை செய்யப்படுகிறது.

நேர்முக வரிகளின் நன்மைகள்

  1. சமத்துவம்:

நேர்முக வரிகள் வளர்வீதம் கொண்டவை. அதாவது, வரி அடிப்படையைப் பொறுத்து வரிவீதம் மாறும். எடுத்துக்காட்டாக வருமான வரி சமத்துவ விதி அடிப்படையில் அமைந்துள்ளது.

2. நிச்சயத்தன்மை:

நேர்முக வரி நிச்சயத்தன்மை விதியை உறுதி செய்கிறது. உதாரணமாக, வருமான வரி செலுத்துபவர் எங்கு, எப்பொழுது, எவ்வளவு வரியை செலுத்த வேண்டும் என அறிந்துள்ளார்.

3. நெகிழும் தன்மை

நேர்முக வரிகள் நெகிழும்தன்மை திருப்தி செய்கிறது. வருமான வரியானது வருமானத்தின் நெகிழ்ச்சியைப் பொருத்து அமையும். வருமான மட்டம் உயரும் போது, அரசிற்கான வரிவருவாயும் உயரும்.

4. சிக்கனம்

நேர்முக வரிகளை வசூலிப்பதற்கான செலவு மற்ற வரிகளை ஒப்பிடுகையில் குறைவாகும். ஏனெனில் வரி செலுத்துபவர்கள் நேரடியாக அரசிற்கு வரி செலுத்துகின்றனர்.

நேர்முக வரிகளின் தீமைகள்

  1. பிரபலமின்மை

நேர்முக பிரபலமில்லாமல் உள்ளது. மேலும் இது வசதிக்குறைவானதாகவும் நெகிழ்ச்சி குறைவானதாகவும் உள்ளது.

2. உற்பத்தித்திறன் பாதிக்கப்படுகிறது

பல்வேறு பொருளாதார வல்லுனர்கள் கருத்துப்படி நேர்முக வரி உற்பத்தித்திறனை பாதிக்கிறது. குடிமக்கள் அதிக வரித் தொகையை செலுத்த வேண்டியதால், வருமானம் அதிகம் ஈட்ட வேண்டும் என்ற விருப்பம் இல்லாமல் உள்ளனர்.

3. வசதிகுறைவு

கணக்கு பராமரித்தல் மற்றும் வரி தாக்கல் செய்வதிலும், மொத்தமாக வரி செலுத்துதல் போன்றவற்றிலும் வரி செலுத்துபவருக்கு வசதி குறைவாக உள்ளது.

4. வரி ஏய்த்தல்

நேர்முக வரியின் சுமை அதிகமாக இருப்பதால் வரி செலுத்துபவர்கள் வரியை ஏய்ப்பதற்கு முயல்கின்றனர். இது கறுப்புப் பணம் உருவாவதற்கு வாய்ப்பாவதால் அது பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மறைமுக வரி

மறைமுக வரி எனப்படுவது பொருட்களையோ அல்லது பணிகளையோ வாங்கும் நபர் மீது விதிக்கப்படுகிற வரியாகும் மேலும் இது அரசுக்கு மறைமுகமாக செலுத்தப்படுகிறது. இவ்வரிச்சுமை எளிதாக மற்றொரு நபர் மீது மாற்ற முடியும். ஏழை அல்லது பணக்காரர் என யாராக இருந்தாலும் அந்நபர்கள் மீது சமமாக சுமத்தப்படும்.

பல்வேறு மறைமுக வரிகள் உள்ளன. அவை

உற்பத்தி வரி: உற்பத்தியாளர் வரியை செலுத்தினாலும் பளுவை மொத்த அல்லது சில்லறை விற்பனையாளரிடம் மாற்றிவிடுவார்.

விற்பனை வரி: கடை உரிமையாளர் அல்லது சில்லறை விற்பனையாளர்களில் முதலில் செலுத்தப்பட்டு வரிச்சுமையை பண்டங்கள் மற்றும் பணிகளுக்கான விற்பனை வரியுடன் நுகர்வோர்களுக்கு மாற்றப்படுதல் ஆகும்.

சுங்கத் தீர்வை: வெளிநாடுகளிலிருந்து பெறக்கூடிய பொருட்களுக்கு இறக்குமதி தீர்வை செலுத்தப்படும். ஆனால் இதனை இறுதியாக நுகர்வோர்கள் மற்றும் சில்லரை வர்த்தகர்கள் மீது மாற்றப்படும்.

கேளிக்கை வரி: திரையரங்கு உரிமையாளர் மீது உள்ள பொறுப்பை திரைப்படம் காண வருபவர்கள் மீத மாற்றுகின்ற வரியாகும்.

சேவை வரி: தொலைபேசி, காப்பீட்டு, உணவு விடுதி போன்ற சேவைகளுக்காக செலுத்தக்கூடிய கட்டணங்களாகும்.

மறைமுக வரிகளின் நன்மைகள்

  1. பரந்து காணப்படுதல்

எல்லா நுகர்வோர்களும் அவர்கள் ஏழை அல்லது பணக்காரர்களாக இருந்தாலும் மறைமுக வரிகளை செலுத்த வேண்டும். இதனால்தான் நேர்முகவரிகளை விட மறைமுக வரிகள் அதிக நபர்களை உள்ளடக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக, இந்தியாவில் 2 சதவீத நபர்கள் மட்டுமே வருமான வரி செலுத்துகிற நிலையில் மறைமுக வரியை அனைவரும் செலுத்துகின்றனர்.

2. சமத்துவம்

பணக்காரர்களால் பயன்படுத்தப்படக் கூடிய ஆடம்பர பொருட்கள் மீது அதிக வரி சுமத்தப்படுவதால் மறைமுக வரி சமத்துவ விதியின் அடிப்படையில் அமைகிறது.

3. சிக்கனத் தன்மை

உற்பத்தியாளர்களும், சில்லறை விற்பனையாளர்களும் வரியை வசூலித்து அரசுக்கு செலுத்துவதால் வசூலிப்பதற்கான செலவு குறைவாகிறது. வணிகர்கள் மதிப்புமிக்க வரி வசூலிப்பவர்களாக செயலாற்றுகின்றனர்.

4. உடலுக்கு தீங்கான பொருட்களின் நுகர்வை குறைக்கிறது

அரசானது உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பொருட்கள் மீது மறைமுக வரியை விதிக்கிறது. எடுத்துக்காட்டாக ஒஉகையிலை, மது போன்ற பொருட்கள் மீதான வரி. இது பாவ வரி என அழைக்கப்படுகிறது.

5. வசதியானது

மறைமுக வரியானது பண்டங்கள் மற்றும் பணிகள் மீது விதிக்கப்படுகிறது. நுகர்வோர் இதனை வாங்கும்போது விலையுடன் சேர்த்து செலுத்திவிடுவதால், வரி செலுத்துவதை உணர்வதில்லை.

மறைமுக வரியின் தீமைகள்

  1. வசூலிக்கும் செலவு அதிகம்

நேர்முக வரியை ஒப்பிடும்போது மறைமுக வரியை வசூலிக்க ஆகும் செலவு அதிகமாகும். அரசு பெரும் தொகையை மறைமுக வரி வசூலுக்காக செலவு செய்கிறது.

2. நெகிழ்ச்சியற்ற தன்மை

நேர்முக வரிகளை ஒப்பிடும் போது மறைமுக வரிகள் குறைவான நெகிழ்ச்சி தன்மை கொண்டதாகும். மறைமுக வரிகள் எப்போதும் சமமான விகிதாச்சார வீதத்தில் அமையும்.

3. தேய்வீதம்

மறைமுகவரிகள் சில நேரங்களில் நீதியற்ற மற்றும் தேய்வீத தன்மை கொண்டதாகும். வருமான மட்டத்திற்கு அப்பாற்ப்பட்டு ஏழை மற்றும் பணக்காரர்கள் ஆகிய இருவரும் ஒரே மறைமுக வரித் தொகையைச் செலுத்த வேண்டும்.

4. உறுதியின்மை

மறைமுக வரிகள் உயரும்போது விலை உயர்வதால் பொருட்களுக்கான தேவையை குறைகிறது. ஆகையால் அரசு எதிர்பார்க்கக்கூடிய வருவாய் வசூல் பற்றி உறுதியற்று காணப்படுகிறது. எனவே தான் டால்டன் 2 + 2 என்பது 4 – அல்ல, அது 3 அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் என மறைமுக வரியைக் குறிப்பிடுகிறார்.

5. குடிமை உணர்வின்மை

விலையுடன் வரி மறைந்திருப்பதால், நுகர்வோர்கள் வரி செலுத்துவது பற்றி விழிப்புணர்வு பெற்றிருக்கவில்லை.

ஒப்பீட்டு வரைபடம்

ஒப்பீட்டிற்கான அடிப்படை நேர்முகவரி மறைமுகவரி
பொருள் நேர்முக வரி என்பது ஒரு நபரின் வருமானம் மற்றும் செல்வத்தின் மீது விதிக்கப்பட்டு நேரடியாக அரசுக்கு செலுத்துவதாகும். மறைமுக வரி என்பது ஒருவர் நுகரும் பண்டங்கள் மற்றும் பணிகள் மீது விதிக்கப்பட்டு மறைமுகமாக அரசுக்கு செலுத்துவதாகும்.
இயல்பு வளர்வீதம் தேய்வீதம்
சுமை மற்றும் தாக்கம் ஒரே நபர் மீது வரி விழுகிறது பல்வேறு நபர்கள் மீது வரி விழுகீறது.
வரி அடிப்படை வரி செலுத்துபவரின் வருமானம் மற்றும் செல்வம் பண்டங்கள் மற்றும் பணிகள் வாங்கும்போது/ விற்கும்போது./ உற்பத்தியின்போது
வரி ஏய்ப்பு வரி ஏய்த்தலுக்கு வாய்ப்பு உள்ளது பொருளின் விலையிலேயே வரி சேர்ந்திருப்பதால் வரி ஏய்ப்பு கடினமாகும்.
பணவீக்கம் நேர்முக வரி பணவீக்கத்தை குறைப்பதற்கு உதவுகிறது. மறைமுக வரி விலை உந்து பணவீக்கத்தை ஏற்படுத்துகிறது.
விதிக்கப்படுதல் மற்றும் வசூலித்தல் தனிநபர் மற்றும் இந்து கூட்டு குடும்பம், நிறுமம் ஆகியோரிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. பண்டங்கள் மற்றும் பணிகளை நுகரும் நுகர்வோர் மீது விதிக்கப்பட்டு, மதிப்பீட்டாளரால் செலுத்தப்படுகிறது.
சுமை மற்றவர் மீது மாற்றமுடியாதது. மற்றவர் மீது மாற்றிவிடக் கூடியது.

சரக்கு மற்றும் சேவை வரி

  • இந்தியாவில் காணப்பட்ட பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக சரக்கு மற்றும் சேவை வரி கொண்டு வரப்பட்டது. சரக்கு மற்றும் சேவைகள் வரிச் சட்டம் பாராளுமன்றத்தில் 2017 மார்ச் 29-ல் நிறைவேற்றப்பட்டு, 2017 ஜூலை 1 முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் சரக்கு மற்றும் சேவைகள் வரிவிரிவான, பல படிநிலைகளில் இலக்கு அடிப்படையில் ஒவ்வொரு மதிப்புக்கூட்டின் போது விதிக்கப்படுகிறது.
  • சுருங்க்க்கூறின் சரக்கு மற்றும் சேவை வரியானது பண்டங்கள் மற்றும் பணிகள் அளிப்பின் மீது விதிக்கப்படும் மறைமுக வரியாகும்.
  • நாடு முழுவதற்குமான ஒரே மறைமுக வரியாக GST-உள்ளது.

  • GST-யின் கீழ், இறுதி விற்பனையின் மேல் சுமத்தப்படுகிற வரியாகும். மாநிலத்திற்குட்பட்ட விற்பனையில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST), மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST) விதிக்கப்படுகிறது. மாநிலங்களுக்கிடையேயான விற்பனையில் ஒருங்கிணைந்த GST விதிக்கப்படுகிறது

இட அடிப்படையிலானது

சரக்குகள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு, கர்நாடகாவில் இறுதியாக நுகர்வோருக்கு விற்கப்படுவதாக கொள்வோம். இந்த சூழ்நிலையில் முழு வரி வருவாயும் கர்நாடகாவிற்கே செல்லும் தமிழ்நாட்டிற்கல்ல.

GST -ன் உள்ளடக்கங்கள்

GST மூன்று வகைப்படும். அவையாவன:

CGST, SGST மற்றும் IGST.

CGST : மாநிலத்திற்குள்ளே நடைபெறுகிற விற்பனையில் மத்திய அரசால் வசூலிக்கப்படுவதாகும். (உ.ம். மாநிலத்திற்குள்/ யூனியன் பிரதேசம்)

SGST : மாநிலத்திற்குள் நடைபெறும் விற்பனையில் மாநில அரசால் வசூலிக்கப்படுவதாகும். (உ.ம். மாநிலத்திற்குள்/யூனியன் பிரதேசம்)

IGST : மாநில அரசுகளுக்கிடையேயான விற்பனையில் மத்திய அரசால் வசூலிக்கப்படுவதாகும். (உ.ம். மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு பொருள் விற்பனை).

பெரும்பாலான நேரங்களில் இந்த வரி அமைப்பு கீழ் உள்ளவாறு அமைகிறது.

பேர நடவடிக்கை புதிய ஆளுகை பழைய ஆளுகை
மாநிலத்திற்குள்ளேயான விற்பனை CGST + SGST VAT + மத்திய ஆயத்தீர்வை/ சேவை வரி வருவாயை மத்திய மற்றும் மாநில அரசுகள் சமமாக பகிர்ந்து கொள்ளும்.
மற்ற மாநிலத்தில் விற்பனையின் போது IGST மத்திய விற்பனை வரி + ஆயத்தீர்வை / சேவை வரி மாநிலங்களுக்கிடையேயான விற்பனையில் ஒரே ஒரு வரி மட்டும் விதிக்கப்பட்டு, மத்திய அரசு அந்த வருவாயை இட அடிப்படையில் பகிர்ந்து கொள்ளும்.

விற்பனை வரியின் இயல்பு, VAT மற்றும் GST:

  1. GST வரியானது சரக்கு மற்றும் சேவை விற்பனையில் உள்ள அடித்தள விளைவை நீக்கியது. இது பொருட்களுக்கான செலவில் நேரடி விளைவை ஏற்படுத்தியது. இது வரிக்கு வரி என்பதை நீக்கியதால் பொருட்களுக்கான செலவு குறைந்தது.
  2. VAT எனப்படுவது அடித்தள விளைவில்லாத பல்முனை வரியாகும்.
  3. GST என்பது அடித்தள விளைவில்லாத ஒரு முனை வரியாகும்.

GST –ன் நன்மைகள்

  1. வரி மீதான வரி இம்முறையில் நீக்கப்படுவதால் பொருட்களுக்கான செலவு குறைகிறது. இது நேரிடையாக பொருட்களின் செலவில் பிரதிபலிக்கிறது.
  2. GST எனப்படுவது தொழில்நுட்ப ரீதியில் அமைந்ததாகும். பதிவு செய்தல், வரித் தாக்கல் செய்தல் கூடுதலாக செலுத்தியதை திரும்பப்பெருதல், கோரிய விளக்கங்களுக்கு பதிலளித்தல் போன்றவற்றை GST இணையத்தில் செய்யப்படுகிறது. இதனால் அனைத்து செயல்பாடுகளும் விரைவாக நடைபெறுகிறது.

பொதுக்கடன்

18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் அரசின் செயல்பாடானது குறைவானதாகும். ஆனால் 20ம் நூற்றாண்டிலிருந்து அரசிற்கான பொறுப்புகள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. எனவே அரசானது ஏற்கனவே உள்ள பாரம்பரியமான வருவாயுடன் தனிநபர் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களிடம் கடன்கள் வாங்குகிறது. வளர்ச்சி குன்றிய நாடுகள், வளர்ச்சித் திட்டங்களுக்காக அதிகமான கடன் பெறுகிறது. சில நாடுகள் இத்தகைய கடன்களினால் கடன் பொறியியல் சிக்கியுள்ளது.

வரைவிலக்கணம்

“கடன் என்பது அரசு கருவூலத்தால் கடன் வழங்கியவர்களுக்கு வட்டியும், அசலும் கொடுக்கப்பதற்கான உத்தரவாதம் ஆகும். நடப்பு நிதி பற்றாக்குறையைச் சரிசெய்வதற்காக திரட்டப்படும் நிதி ஆகும்” – பிலிப் E.டெய்லர்.

“பொதுக்கடன் என்பது நிதிக் கருவிகள் வாயிலாக அரசானது தனியார் துறையிலுள்ள தனிநபர்கள் அல்லது நிறுவனங்களிடம் பெறுவதாகும். இதனைக் கொண்டு தனியார் துறையைத் தூண்டி அதன் மனிதவளங்கள் மற்றும் உண்மையான வளங்களைப் பெருக்குவதற்கும் மற்றும் அந்த நிதியினைக் கொண்டு வளங்களை வாங்குதல் அல்லது நலத்தை உருவாக்குதல் அல்லது மானியங்களை வழங்குதல் ஆகியவற்றை செய்தலைக் குறிப்பதாகும்”- கார்ல் எஸ்.ஷோப்

பொதுக்கடனின் வகைகள்

  1. உள்நாட்டு பொதுக்கடன்

உள்நாட்டுக் கடன் என்பது, ஒரு நாட்டிற்குள் குடிமக்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து அரசினால் பெறப்படும் கடனாகும். உள்ளாட்டு பொதுக்கடன் என்பது செல்வத்தை மாற்றிக் கொள்வது பற்றியதாகும்.

உள்நாட்டு பொதுக்கடனின் முக்கிய ஆதாரங்களாவன

  • அரசு பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை தனிநபர்கள் வாங்குதல்
  • அரசிடமிருந்து பத்திரங்களை தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் பெறுதல்.
  • அரசு பத்திரங்களை நிதிசாரா நிறுவனங்களாகிய UTI, LIC, GIC போன்றவைகள் பெறுதல்.
  • பண அளிப்பு வாயிலாக அரசிற்கு மைய வங்கி கடன் வழங்குகிறது. அரசின் செலவுகளை சந்திப்பதற்காக மைய வங்கி பணமாகவும் வழங்குகிறது.

2. வெளிநாட்டு பொதுக்கடன்

பன்னாட்டு நிறுவனம் மற்றும் வெளிநாட்டிலிருந்து பெறப்படும் கடன், அயல்நாட்டு கடன் என அழைக்கப்படுகிறது. IMF, உலக வங்கி, IDA, ADB போன்ற அமைப்புகளிடமும், வெளிநாட்டு அரசுகளிடம் கடன் பெறுவது அயல்நாட்டுக் கடன்களுக்கான முக்கிய ஆதாரமாக உள்ளது.

வெளிநாட்டுக் கடன் – ஜூன் 2018 – நிலவரப்படி
தரவரிசை நாடுகள் வெளிநாட்டுக் கடன் (மில்லியன் டாலரில்) தலா வீத கடன் அளவு (US டாலரில்) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கடன் சதவீதம் (GDP)
1 அமெரிக்கா 21,171,000 58,200 98
2 இங்கிலாந்து 8,475,956 127,000 313
3 பிரான்சு 5,689,745 87,200 213
4 ஜெர்மனி 5,398,267 65,600 141
7 ஜப்பான் 3,586,817 28,200 74
13 சீனா 1,710,625 1,200 14
21 ரஷ்யா 537,458 3,700 40
22 இந்தியா 529,000 380 20

ஆதாரம் : உலக வங்கி அறிக்கை மற்றும் இந்தியாவின் கடன் சார்ந்த அறிக்கை – மார்ச் 2018 (RBI – அறிக்கை – நாள் – 29.06.2018)

பொதுக்கடன் அதிகரிப்பதற்கான காரணங்கள்

பின்வரும் துணைத் தலைப்புகளில் பொதுக்கடன் அதிகரிப்பதற்கான காரணங்களைக் காணலாம்.

  1. போர் மற்றும் போர்கால ஆயத்தம்

போர் நெருக்கடி தான் அரசின் பொதுக் கடனை அதிகரிப்பதற்கான முக்கிய காரணியாக இருக்கின்றது. இன்றைய நாளில் போருக்கு ஆயத்தம் செய்தல் மற்றும் அணு ஆயுததிட்டங்கள் ஆகியவற்றிற்கு அரசு பெருவாரியான செலவு செய்கிறது. இதனால் கடன் ஏற்படுகிறது.

2. சமுதாயத் தேவைகள்

தற்கால அரசானது நல அரசாக செயல்படுவதால் சமுதாய தேவைகளான பொது சுகாதாரம், தூய்மை, கல்வி, காப்பீடு, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு போன்றவற்றை மேற்கொள்வதற்கும், இதர குறைந்தபட்ச தேவைகளை மக்களுக்கு செய்கிறது. இதற்கான செலவினை மேற்கொள்ள பொதுக்கடனை பெற வேண்டியுள்ளது.

3. பொருளாதார முன்னேற்றம் மற்றும் நிதி பற்றாக்குறை

அரசு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை மேற்கொள்கிறது. இரயில்வே கட்டுமானம், மின்சாரத் திட்டங்கள், நீர்பாசனத் திட்டகள், கனரக தொழிற்சாலைகள் அமைத்தல் போன்றவற்றிற்கு தேவையான வளங்களை பொதுக்கடன் வாயிலாக அரசு பெருகிறது. அதிகளவில் பொதுச் செலவின் காரணமாக அரசு எப்பொழுதும் பற்றாக்குறை வரவு செலவுத் திட்டத்தை எதிர்கொள்கிறது. இந்த பற்றாக்குறையை கடன்களால் மட்டுமே சரிசெய்ய முடியும்.

4. வேலைவாய்ப்பு

தற்காலத்தில் அரசு வேலையின்மை பிரச்சனையை எதிர்கொள்கிறது. பொதுச் செலவின் வாயிலாக இது போன்ற சிக்கல்களை தீர்ப்பது அரசின் கடமையாக உள்ளது. இதற்காக அரசு பெரிய தொகையினை செலவு செய்ய வேண்டியுள்ளது. இதனை பொதுக்கடன் வாயிலாகவே மேற்கொள்கிறது.

5. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல்

புழக்கத்தில் உள்ள பணத்தை அரசு திரும்ப பெற பொதுக்கடன் வழிமுறையை கையாளுகிறது. இதனால் விலை ஏற்றத்தைத் தடுக்கிறது.

6. மந்தத்தை தடுத்தல்

மந்த காலங்களில் தனியார் முதலீடு குறைவாக இருக்கும். அதனை ஈடுகட்ட அரசானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலங்களின் மூலம் கடன் பெறுவதை மேற்கொள்ளும்.

பொதுக்கடனை திரும்ப செலுத்தும் முறைகள்

பொதுக்கடன் தீர்வு என்பது பொதுக்கடனை திரும்பச் செலுத்தும் வழிமுறையைக் குறிப்பதாகும். அரசு விற்பனை செய்துள்ள பத்திரங்களை பொதுமக்கள் அதன் முதிர்வு காலத்தில் பத்திரங்களை ஒப்படைத்து அதற்கான தொகையை வட்டியுடன் பெறுவர்.

பொதுக்கடன் பின்வரும் வழிகளில் கடன் தீர்க்கப்படுகிறது.

  1. மூழ்கும் நிதி

கடனுக்கென அரசு தனியொரு நிதியினை ஏற்படுத்தும் அதனை ‘மூழ்கும் நிதி’ என்பர். அரசு ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட நிலையான தொகையை செலுத்துகிறது. கடன் முதிர்ச்சியடையும் போது வட்டியோடு அசலையும் சேர்த்து வழங்கும் வகையில் இந்நிதி பெருகிவிடும். இந்த முறை முதன்முதலில் இங்கிலாந்தைச் சேர்ந்த வால்போல் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

2. கடனை மாற்றுதல்

பொதுக்கடன் திரும்பச் செலுத்தப்படும் மற்றொரு முறை கடன் மாற்றுதல் ஆகும். இம்முறையில் பழைய கடனை புதிய கடனாக மாற்றப்படுகிறது. இம்முறையின் கீழ் அதிக வட்டி கொண்ட பொதுக்கடன் குறைவான வட்டி கொண்ட பொதுக்கடனாக மாற்றப்படுகிறது. டால்டன் கடன் மாற்றுதல் கடன் பளுவை குறைக்கிறது என்கிறார்.

3. வரவு செலவு திட்ட உபரி

உபரி வரவு செலவு திட்டத்தை அரசு தாக்கல் செய்யும்போது அந்த உபரியை கடனைத் திருப்பிச் செலுத்த பயன்படுத்திக் கொள்ளும். பொது வருவாய், பொதுச் செலவை விட அதிகரிக்கும் போது உபரி ஏற்படுகிறது. இது எப்போதாவது தான் பயன்படுத்தப்படுகிறது.

4. பகுதியாகச் செலுத்தல்

இந்த முறையின் கீழ் அரசு பொதுக்கடனை சம வருடாந்திர தவணைகளாக செலுத்துகிறது. இது பொதுக் கடனைச் செலுத்தும் மிகச் சுலபமான முறையாகும்.

5. கடன் மறுப்பு

அது அரசு கடன் செலுத்தும் சுமையிலிருந்து வெளி வருவதற்கான எளிமையான முறையாகும். இதில் அரசானது ஏற்கனவே செலுத்துவதாக உறுதியளித்த கடமையை மறுக்கும். இது கடனை திரும்ப செலுத்துவதாகாது, அதனை அழிப்பதாகும். சாதாரண சூழ்நிலைகளில் கடனை மறுக்க இயலாது ஏனெனில் அது அரசின் நாணயத்தன்மையை பாதித்து விடும்.

6. வட்டி வீதத்தை குறைத்தல்

நிதிச் சிக்கல் ஏற்படும் நேரங்களில் கட்டாயமாக வட்டியை குறைத்து கடனை செலுத்துவதும் ஒரு வகையான கடன் தீர்வு முறையாகும்.

7. மூலதனத் தீர்வை

ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் அல்லது வளர்ச்சி போக்கில் உள்ள மூலதன சொத்துக்கள் பெற்றிருப்பின் அதன் மீது அரசு வரி விதித்து, அதனை போர்க்கால கடனை செலுத்துவதற்கு பயன்படுத்துவதாகும். ஆனால் இது சர்ச்சைக்குரிய கடன் தீர்வை முறையாகும்.

வரவு செலவு திட்டம்

‘பட்ஜெட்’ என்ற பதம் ‘பொளஜெட்’ என்ற பிரெஞ்ச் வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாகும். இதன் பொருளாவது “சிறிய தோல் பை” என்பதாகும். வரவு செலவு திட்டம் என்பது எதிர்நோக்குகிற நிதி ஆண்டிற்குரிய அரசின் மதிப்பிடப்பட்ட வருமானம் மற்றும் செலவு ஆகியவற்றைக் காட்டும் வருடாந்திர நிதி அறிக்கை ஆகும்.

வரைவிலக்கணங்கள்

“முதல் நிலையிலான ஏற்றுக் கொள்ளப்பட்ட பொது வருவாய் மற்றும் செலவு திட்டத்தை உள்ளடக்கிய ஆவணமாகும்” – ரேனி ஸ்டோன்

“வரவு செலவுத் திட்டமானது குறிப்பிட்ட காலத்தின் நிதி ஏற்பாடுகளை வெளிப்படுத்துகிறது. இது, வழக்கமான ஒப்புதலுடன் சட்டமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படுகிறது” – பாஸ்டபிள்

மத்திய மாநில வரவு செலவு திட்டம்

இந்தியா ஓர் கூட்டரசு பொருளாதாரமாக விளங்குவதால் அரசின் வரவு செலவு திட்டம் அரசின் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசு வருடாந்திர நிதி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். ஷரத்து 112ன் படி மத்திய வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்திலும், ஷரத்து 202ன் படி ஒவ்வொரு மாநில அரசும் சட்டமன்றத்திலும் தாக்கல் செய்ய வேண்டும்.

வரவு செலவு திட்டத்தின் வகைகள்

வருவாய் மற்றும் மூலதன வரவு செலவு திட்டம்.

வருவாய் கணக்கு மற்றும் பிற கணக்குகளின் மீதான செலவு அடிப்படையில் வரவு செலவு திட்டம் இரு வகைகளில் சமர்ப்பிக்கப்படுகிறது.

  1. வருவாய் வரவு செலவுத்திட்டம்: இது வருவாய் வரவுகள் மற்றும் வருவாய் செலவினங்களைக் கொண்டது. இது வரி வருவாய் மற்றும் வரி சாரா வருவாய் என வகைப்படுத்தப்படுகிறது. வருவாய் செலவினங்களை திட்டம் சார்ந்த செலவினம் மற்றும் திட்டம் சாரா செலவினங்களாக வகைப்படுத்தப்படுகிறது.
  2. மூலதன வரவு செலவு திட்டம்: அது மூலதன வரவுகள் மற்றும் மூலதனச் செலவுகளை உள்ளடக்கியதாகும். மூலதன வரவின் முக்கிய ஆதாரங்களாக கடன்கள், முன்பணம் போன்றவை உள்ளது. மூலதன செலவினத்தை திட்டம் சார் செலவினம் மற்றும் திட்டம் சாரா மூலதனச் செலவு என வகைப்படுத்தப்படுகிறது.

  1. துணை வரவு செலவுத் திட்டம்: போர்காலம் மற்றும் சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் போது செலவுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை போதுமானதாக இருப்பதில்லை. இந்த எதிர்பாராத சூழ்நிலையை சமாளிப்பதற்காக அரசினால் துணை வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும்.
  2. நிதிக்கு வாக்கெடுப்பு வரவு செலவுத் திட்டம்: இந்திய அரசியலமைப்பு ஷரத்து 116ன் படி, பட்ஜெட் வருட மத்தியில் சமர்ப்பிக்கப்படும் இதற்கு அரசியல் காரணம் இருக்கிறது. இருக்கக்கூடிய அரசானது தேர்தல் காரணமாக அந்த வருடம் முழுவதும் தொடர்ந்தோ தொடராமலோ இருக்கலாம். இதனால் அந்த அரசு தாக்கல் செய்யும் வரவு செலவுத் திட்டம் “நொண்டி ஷரத்து வரவு செலவுத் திட்டம்” என அழைக்கப்படுகிறது. இது நிதிக்கு வாக்கெடுப்பு வரவு செலவுத் திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது.

சிறப்பு நிகழ்வாக நிதிக்கு வாக்கெடுக்கும் வரவு செலவுத் திட்டமான அவசியமான இனங்களுக்கு பாராளுமன்ற ஒப்புதல் பெறும்வரை செலவு மேற்கொள்ள அனுமதி உள்ளது. வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறும் வரை தொகுப்பு நிதியிலிருந்து பணம் பெற்றுக்கொள்ள சட்டரீதியான அனுமதி உள்ளதை வாக்கெடுக்கும் வரவு செலவுத் திட்டம் என அழைக்கப்படுகிறது. இத்தகைய அனுமதி அதிகப்ட்சம் இரண்டு மாதங்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

  1. பூஜ்ய வரவு செலவுத் திட்டம் இந்திய அரசு 1987-88ல் பூஜ்ய வரவு செலவுத்திட்டத்தை தாக்கல் செய்தது. இதில் ஒவ்வொரு செலவினமும் புதியதாகக் கருதப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீடுகள் செய்யப்படும். புதிய இனமாக கருதப்பட்டு அரசு பட்ஜெட்டில் புதிதாக செலவு மதிப்பீட்டை கொண்டுள்ளது. சமூகத்தின் முந்தைய முன்னுரிமைகளை சமூக பொருளாதார நோக்கங்களின் பார்வையில் மறு ஆய்வு செய்யப்பட்டு நியாயப்படுத்தும்.
  2. செயல்திறன் வரவு செலவுத்திட்டம் எந்த ஒரு வரவு செலவு திட்டத்தின் வெளியீட்டின் அடிப்படையில் வரவு செலவுத்திட்டம் அமைந்தால் அது செயல்திறன் வரவு செலவுத்திட்டம் என அழைக்கப்படுகிறது. இது உலகில் முதன் முதலில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. சர்உப்பர் தலைமையில் அமெரிக்காவில் 1949-ல் நிர்வாக சீர்திருத்தக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரையின்படி செயல்திறன் வரவு செலவுத் திட்டம் அமெரிக்காவில் அமைக்கப்பட்டது. மக்களின் நலனுக்காக இந்த வரவு செலவுத் திட்டத்தில் “என்ன செய்தோம்”. “எவ்வளவு செய்தோம்” என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இந்தியாவில் செயல்திறன் வரவு செலவுத் திட்டத்தை “சாதனைத் திட்டம்” என அழைக்கப்படுகிறது.
  3. சமநிலை மற்றும் சமனற்ற வரவு செலவுத் திட்டம்

அ. சமநிலை வரவு செலவுத் திட்டம்

ஒரு குறிப்பிட்ட ஆண்டில் அரசு எதிர்பார்க்கிற வருவாயும் திட்டமிடப்பட்டுள்ள செலவும் சமமாக இருந்தால் அது சமநிலை வரவு செலவுத் திட்டம் எனப்படும்.

அரசின் திட்டமிட்ட வருவாய் = அரசின் எதிர்நோக்கும் செலவுகள்

ஆ. சமநிலையில்லா வரவு செலவுத் திட்டம்

அரசு எதிர்பார்க்கிற வருவாயும் திட்டமிடப்பட்டுள்ள செலவும் சமமாக இல்லாது இருந்தால் அது சமநிலையில்லா வரவு செலவுத் திட்டமாகும்.

சமநிலையற்ற வரவு செலவுத் திட்டம் இருவகைப்படும்

  1. உபரி வரவு செலவுத் திட்டம்.
  2. பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம்
  3. உபரி வரவு செலவுத் திட்டம்.

ஒரு குறிப்பிட்ட ஆண்டில் அரசு எதிர்பார்க்கிற வருவாய் திட்டமிடப்பட்டுள்ள செலவைவிட அதிகமாக இருந்தால் அது உபரி வரவு செலவுத் திட்டம் எனப்படும்.

உபரி வரவு செலவுத் திட்டம் = அரசு எதிர்பார்க்கிற வருவாய் > திட்டமிடப்பட்டுள்ள செலவு

  1. பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம்

ஒரு குறிப்பிட்ட ஆண்டில் அரசு எதிர்பார்க்கிற வருவாய் திட்டமிடப்பட்டுள்ள செலவைவிட குறைவாக இருந்தால் அது பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம் எனப்படும்.

பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம் = அரசு எதிர்பார்க்கிற வருவாய் < திட்டமிடப்பட்டுள்ள செலவு.

வரவு செலவு திட்ட செயல்முறைகள்

வரவு செலவு திட்ட செயல்முறைகள் என்பது வரவு செலவு திட்டத்தை தயாரிப்பது, தாக்கல் செய்வது மற்றும் செயல்படுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

அ) வரவு செலவுத் திட்டம் தயாரித்தல்

மைய அரசு வரவு செலவு திட்டத்தை மத்திய நிதி அமைச்சகம் தயாரிக்கிறது. மாநில அரசு வரவு செலவுத் திட்டத்தை மாநில நிதித்துறை தயாரிக்கிறது. வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை கவனத்தில் கொள்ளப்படுகிறது.

  • பேரியல் பொருளாதார கொள்கை இலக்குகளை திட்ட காலத்திற்குள் அடைதல்.
  • வரவு செலவுத் திட்டத்தின் யுக்திகள்
  • பல்வேறு திட்டங்களுக்கான நிதித் தேவைகள்.
  • வருவாய் செலவினத்தின் மதிப்பீடு (பாதுகாப்பு செலவினம், மானியம், கடனுக்கான வட்டி செலுத்தல்கள் போன்றவை).
  • மூலதன செலவினத்தின் மதிப்பீடு (இரயில்வே, சாலை, பாசன வளர்ச்சி போன்றவற்றிற்காக).
  • வரி மற்றும் வரியற்ற வருவாய் வரவுகளின் மதிப்பீடு.
  • கடன்களின் திரும்ப செலுத்தல்கள், பொதுத்துறையின் முதலீட்டு குறைப்பு, அங்காடி பெறுதல்கள் போன்ற மூலதன வரவுகளின் மதிப்பீடு.
  • வருவாய் வரவுகளுக்கும் வருவாய் செலவுகளுக்கும் இடையேயான இடைவெளியின் மதிப்பீடு.
  • நிதிபற்றாக்குறை, முதன்மை பற்றாக்குறை, மற்றும் வருவாய் பற்றாக்குறையின் மதிப்பீடு.

வரவு செலவுத் திட்டம் தயாரிக்கும் வழிமுறைகள்

நிதி அமைச்சகம் வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டை தயார் செய்யும்
பல்வேறு துறைகள் வருமானம் மற்றும் செலவு மதிப்பீடுகளை நிதி அமைச்சகத்திற்கு அனுப்பும்
வரவு செலவுத் திட்டம் தயாராகும்
மந்திரி சபை ஒப்புதலுக்கு, நிதி அமைச்சர் தாக்கல் செய்வார்.
பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு தயார் நிலையில் இருக்கும்.

ஆ) வரவு செலவு திட்டம் தாக்கல் செய்தல்

நடுவன் அரசின் அங்கத்தினராக, நிதி அமைச்சர் மைய அரசின் வரவு செலவுத் திட்டத்தை புதிய நிதி ஆண்டு துவங்கும் முதல் நாள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வார். மாநில அரசுகளின் நிதி அமைச்சர்களும் அவ்வாறே அங்காங்கே செய்வார்கள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, பண மசோதா (Money Bill) கீழ்சபையில் தொடங்கப்படும். மைய அரசில், எல்லா பண மசோதாக்களும் முதலில் மக்களவையிலும், மாநிலங்களில் சட்டப்பேரவையிலும் தாக்கல் செய்யப்படும். வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு வரி சார்ந்த கருத்துருக்களும் இடம் பெற்றிருக்கும். நிதி மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர், வாக்களிப்பிற்குப்பின் சட்ட வடிவம் கொடுக்கப்படும். இதனடிப்படையில் செலவுகளை அங்கீகரிக்கப்படும். இந்த வழிமுறையில் தான் இந்தியாவில் வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுகிறது.

இ) வரவு செலவுத் திட்டத்தை செயல்படுத்துதல்

வரவு செலவுத் திட்டத்தை அரசின் பல்வேறு துறைகள் செயல்படுத்துகிறது. வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதுதான் மிக முக்கியமானதாகும்.

வரவு செலவு திட்டத்தில் பாராளுமன்றக் கட்டுப்பாடுகள்

இந்தியாவில் அரசுக் கணக்குகள் கீழ்க்கண்ட மூன்று முறைகளில் பராமரிக்கப்படுகிறது.

  1. தொகுப்பு நிதி
  2. அவசர நிதி
  3. பொதுக் கணக்கு

வரவு செலவுத் திட்டத்தை கட்டுப்படுத்தும் பாராளுமன்ற குழுக்கள்

  1. பொதுக் கணக்கு குழு
  2. மதிப்பீட்டுக் குழு

இந்தக் குழுக்கள் எந்த அமைச்சகமும் அல்லது துறையும் அனுமதிக்கப்பட்ட தொகையைவிட அதிகமாக செலவிடாமல் தொடர்ந்து கண்காணிக்கும்.

வரவு செலவுத் திட்ட பற்றாக்குறைகள்

வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை என்பது வரவு செலவு திட்டத்தில் உள்ள வருவாய் செலவைவிட குறைவாக இருப்பதாகும். இந்த நிலையை அரசு பற்றாக்குறை எனவும் அழைக்கப்படும்.

இந்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தில் நான்கு வகையான பற்றாக்குறைகள் உள்ளன.

அ) வருவாய் பற்றாக்குறை

ஆ) வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை

இ) நிதிப் பற்றாக்குறை

ஈ) முதன்மைப் பற்றாக்குறை

ஆ) வருவாய் பற்றாக்குறை

அரசின் ப்வருவாய் செலவினம், வருவாய் வரவைவிட அதிகமாக இருந்தால் அது வருவாய் பற்றாக்குறை எனப்படும். இதில் மூலதன வரவு மற்றும் மூலதனச் செலவை கணக்கில் கொள்ளப்பட மாட்டாது. வருவாய் பற்றாக்குறை என்பது அரசின் அன்றாட பணிகளை நடத்துவதற்கு தேவையானதைவிட குறைவாக உள்ளதைக் காட்டுவதாகும்.

வருவாய் பற்றாக்குறை (RD) = மொத்த வருவாய் செலவினம் (RE) – மொத்த வருவாய் வரவுகள் (RR)

RE – RR > 0 ஆக இருக்கும்.

ஆ. வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை

வருவாய் மற்றும் மூலதனக் கணக்குகளின் மொத்த வரவுக்கும் செலவுக்கும் உள்ள இடைவெளியே வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையாகும்.

வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை = மொத்தச் செலவு – மொத்த வரவு

இ. நிதிப் பற்றாக்குறை

நிதிப்பற்றாக்குறை = வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை – அரசின் அங்காடிக் கடன்களும் ஏனைய பொறுப்புக்களும்

எனவே நிதிப் பற்றாக்குறை என்பது வரவு செலவு பற்றாக்குறையைவிட அதிகமானதாகும்.

ஈ. முதன்மைப் பற்றாக்குறை

முதன்மைப் பற்றாக்குறையானது நிதி பற்றாக்குறையிலிருந்து வட்டி செலுத்தலை கழித்த பின் உள்ள பற்றாக்குறையாகும். இது அரசின் உண்மையான சுமையை காட்டும். மேலும் இதில் முன்னர் வாங்கிய கடனுக்கான வட்டியை கணக்கில் கொள்ளாது. எனவே முதன்மைப் பற்றாக்குறை என்பது அரசின் கடனுக்கான குறிப்பாக வட்டி செலுத்தலுக்கான தேவையைக் குறிக்கும்.

எனவே நிதிப் பற்றாக்குறை முதன்மைப் பற்றாக்குறையைவிட அதிகமாக இருக்கும்.

முதன்மைப் பற்றாக்குறை (PD) = நிதிப்பற்றாக்குறை (FD) – வட்டி செலுத்துதல் (IP)

கூட்டமைப்பு நிதி

கூட்டாட்சி நிதி என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே வருவாய் வளங்களை ஒதுக்கீடு குறித்த தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கும். இது மத்திய மாநில அரசுகள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பணியினை திறமையாக செய்ய வளங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

  • அதிகாரங்கள் பிரிவு : நமது அரசியலமைப்பில், அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே அதன் வரம்புகளை மீறுவதும், மற்றவர்களின் செயல்பாடுகளை ஆக்கிரமிப்பதை தவிர்த்து அவரவர் சொந்த பொறுப்புகளில் செயல்படுவதற்கும் வழிவகை செய்யப்படுகிறது. அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் மூன்று பட்டியல்கள் உள்ளன. அவை: மத்திய பட்டியல், மாநில பட்டியல் மற்றும் இணைப்புப் பட்டியல்.
  • மத்திய பட்டியலில் பாதுகாப்பு, ரயில்வே, தபால் மற்றும் தந்தி முதலிய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 100 இனங்களைக் கொண்டுள்ளது.
  • மாநில பட்டியலில் பொது நலன், காவல் போன்ற 61 இனங்களைக் கொண்டுள்ளது.
  • இணைப்புப் பட்டியலில் 52-இனங்கள் மத்திய மற்றும் மாநிலங்களுக்கு பொதுவாக உள்ளது. இதில் மின்சாரம், தொழிற் சங்கம், பொருளாதார மற்றும் சமூகத் திட்டங்கள் போன்றவை உள்ளடங்கும்.

மத்திய, மாநில அரசின் பணபங்களிக்கும் உறவு வருமான வழிகள்

  1. மைய அரசின் வருவாய் மூலங்கள்

மைய அரசின் வரி மற்றும் வரியில்லா வருமான வழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் மிக முக்கியமானவை.

  1. தொழில் நிறுவனங்கள் மீதான வரி
  2. பணம், நாணயங்கள் மற்றும் அந்நியச் செலவாணி
  3. சுங்க வரி ஏற்றுமதி வரி உட்பட
  4. புகையிலை மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஏனைய பொருட்களுக்கான கலால் வரி.
  5. வேளாண்மை நிலங்கள் தவிர்த்த பண்ணை வரி
  6. நீதிமன்றங்கள் விதிக்காக மத்திய பட்டியலில் உள்ள இதர கட்டணங்கள்.
  7. அயல்நாட்டு கடன்கள்.
  8. இந்திய அரசால் அல்லது மாநிலங்களால் அமைக்கப்பட்ட லாட்டரி சீட்டுகள்.
  9. தபால் துறையின் சேமிப்பு வங்கி
  10. தொலை தொடர்பு துறையின் வருவாய்கள்
  11. மத்திய அரசுக்கு சொந்தமான சொத்துக்கள்
  12. மத்திய அரசின் பொதுக்கடன்
  13. இரயில்வே
  14. மாற்றுச் சீட்டுகள், காசோலைகள் மற்றும் உறுதிமொழி பத்திரங்கள் மீதான வில்லைக் கட்டணம்.
  15. இந்திய ரிசர்வ் வங்கி
  16. வருமான வரி (வேளாண் வருவாய் தவிர்த்து)
  17. சொத்துக்களின் மூலதன மதிப்பில் விதிக்கப்படும் வரி (தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் விவசாய நிலம் தவிர)
  18. பங்குச் சந்தை மற்றும் எதிர்கால சந்தை பரிவர்த்தனைகளில் முத்திரை வரிகளை தவிர வேறு வரி.
  19. செய்திதாள் மீதான வரி (அதில் வெளியிடும் விளம்பரம் உட்பட)
  20. இரயில், கடல் வழி மற்றும் ஆகாய மார்க்கமாக செல்லும் பயணிகள் மற்றும் சரக்குகள் மீதான வரி.
  21. மாநில வளங்கள்
  22. தல வரி.
  23. வேளாண் நிலங்கள் மீதான வரி
  24. மது மற்றும் போதைப் பொருட்கள் மீதான கலால் வரி
  25. பண்ணை வரி (விவசாய நிலங்கள்)
  26. நீதிமன்றங்கள் விதிக்காக மாநில பட்டியலில் உள்ள இதர கட்டணங்கள்
  27. நில வருவாய்
  28. மத்தியப் பட்டியலில் இல்லாத ஆவணங்களுக்கான வில்லைக் கட்டணம்.
  29. வேளாண் வருமான வரி
  30. நிலம் மற்றும் கட்டிடங்கள் மீதான வரி
  31. கனிம வளங்கள் எடுப்பதற்கான உரிம வரி.
  32. மின்சார நுகர்வு மற்றும் விற்பனைக்கான வரி
  33. உள்ளூர் பகுதியில் நுகர்வு மற்றும் விற்பனை பொருட்களுக்கான நுழைவு வரி.
  34. செய்தித்தாள் தவிர்த்த இதர பொருட்கள் மீதான விற்பனை வரி
  35. செய்தித்தாள் தவிர்த்த இதர விளம்பரங்கள் மீதான வரி.
  36. சாலை மற்றும் நீர்வழி மார்க்கமாக எடுத்துச் செல்லப்படும் பொருட்கள் மற்றும் பயணிகள் மீதான வரி.
  37. வாகன வரி.
  38. விலங்குகள் மற்றும் படகுகள் மீதான வரி.
  39. வியாபாரம் மற்றும் தொழிலாளர்கள் மீதான தொழில் வரி.
  40. பொழுதுபோக்குகள் மற்றும் சூதாட்டங்கள் மீதான வரி.
  41. சாலை சுங்க கட்டணம்.
  42. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு மாநிலங்களுக்கு ஒதுக்கக்கூடிய வளங்கள் (சரத்து 269-ன் படி)
  43. விவசாய நிலம் தவிர்த்த இதர சொத்துகள் மீதான வரி
  44. பண்ணை வரி (வேளாண்மை நிலம் தவிர்த்த)
  45. இரயில்வே கட்டணங்கள் மற்றும் சரக்கு கட்டணங்கள்.
  46. பங்கு சந்தை மற்றும்ம் எதிர்கால சந்தை பரிவர்த்தனைகளில் முத்திரை வரிகளை தவிர வேறு வரி.
  47. செய்தித்தாள் மீதான வரி (அதில் வெளியிடும் விளம்பரம் உட்பட)
  48. இரயில், கடல் வழி மற்றும் ஆகாய மார்க்கமாக செல்லும் பயணிகள் மற்றும் சரக்குகள் மீதான வரி.
  49. மாநிலங்களுக்கிடையேயான பண்டங்கள் விற்பனை மற்றும் வாங்குதல் மீதான வரி (செய்தித்தாள் தவிர)
  50. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, ஆனால் மாநில அரசு வசூலிப்பது மற்றும் பயன்படுத்துவது (ஷரத்து 268)

வில்லைக்கட்டணம் மற்றும் சுங்கவரி மருத்துவ மற்றும் கழிவறை மீதான வரி (மத்திய பட்டியலில் குறிப்பிட்டுள்ளது) இந்திய அரசு விதிக்கும். ஆனால்

  1. யூனியன் பிரதேசங்களில் இந்திய அரசே வசூலிக்கும்.
  2. மற்ற வகையில், மாநிலங்களே அவைகளை விதிக்கும்.
  3. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய வரிகள் (சரத்து 270 மற்றும் 272-ன் படி)
  4. வேளாண்மை வருவாய் தவிர்த்த இதர வருமான வரி வருவாய்.
  5. இந்திய அரசின் மத்தியப் பட்டியலில் உள்ள மத்திய கலால் வரி (மருத்துவ மற்றும் கழிவறை மீதான வரி தவிர்த்த)

வருமான வரியில் நிறுவனங்கள் மீதான வரி உள்ளடகப்படவில்லை.

வருமான வரி மாநகராட்சி வரியை உள்ளடக்கியது அல்ல. நிதிக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் வருமான வரி மத்திய மற்றும் மாநிலங்களிடையே பகிர்ந்தளிக்கப்படுகிறது.

கூட்டரசு நிதியின் கொள்கைகள்

கூட்டரசு நிதியில் கீழ்க்காணும் முக்கிய கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன.

  1. சுதந்திரம்
  2. சமத்துவம்
  3. ஒரே மாதிரியான தன்மை
  4. போதுமான வளங்களைப் பெற்றிருத்தல்
  5. நிதி வசதி
  6. ஒருங்கிணைத்தல் மற்றும் ஒன்றுபடுதல்
  7. செயல்திறன்
  8. நிர்வாகச் சிக்கனம்
  9. பொறுப்பேற்பு
  10. சுதந்திரம்

கூட்டரசு நிதி முறையின் கீழ் , ஒவ்வொரு அரசும் தன்னுடைய நிதியில் தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும். அதன் பொருளாவது ஒவ்வொரு அரசும் வருவாய் ஆதாரங்கள், வரி விதிப்பதற்கான அதிகாரம், பணத்தை கடன் வாங்குவது மற்றும் செலவினை சமாளிப்பது போன்றவை பற்றி தன்னாட்சி பெற்றிருக்க வேண்டும்.

2. சமத்துவம்

சமத்துவ நீதியின் அடிப்படையில், மாநிலங்கள் நியாயமான வருவாய் பங்கினை பெறும் வண்ணம் வளங்கள் பங்கீடுசெய்யப்பட வேண்டும்.

3. ஒரே மாதிரியான தன்மை

கூட்டரசு முறையில், ஒவ்வொரு மாநிலமும் கூட்டாட்சி நிதிக்கு சம வரி செலுத்தல்களை செய்ய வேண்டும். ஆனால் வரி செலுத்தும் திறன் ஒவ்வொரு பகுதிக்கும் சமமாக இல்லாததால் இந்த கொள்கையை பின்பற்றப்பட இயலாது.

4. போதுமான வளங்களைப் பெற்றிருத்தல்

போதுமான வளங்களைப் பெற்றிருத்தல் கொள்கை என்பது மத்திய மற்றும் மாநில அரசுகள், அவற்றின் பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் போதுமான அளவில் வளங்களைப் பெற்றிருக்க வேண்டும். போதுமான வளம் என்பது தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவையைக் கொண்டு குறிக்கப்படுகிறது. இவை அதிகரித்து வரும் தேவையையும் எதிர்பாராத செலவுகளான போர் மற்றும் வெள்ளம் ஏற்படும் சூழ்நிலைகளை சமாளிக்க நெகிழ்ச்சியுள்ளதாக இருக்க வேண்டும்.

5. நிதி வசதி

கூட்டரசு நிதி முறையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் புதிய வரி ஆதாரங்களை தங்களது நிதி தேவைக்கேற்றவாறு பெருக்கி கொள்ள முடியும். சுக்கமாக கூறின், அரசின் பெருகிவரும் பொறுப்புகளுக்கேற்றவாறு வளங்களை வளர்த்து கொள்ள வேண்டும்.

6. ஒருங்கிணைப்பு மற்றும் ஒன்றுபடுதல்

அனைத்து நிதிமுறைகளும் முழுவதும் நல்ல முறையில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். நாட்டின் பல்வேறு அடுக்குகளுக்கிடையே உள்ள நிதி முறைகளில் ஒருங்கிணைப்பு அவசியமாகிறது. அப்பொழுதுதான் கூட்டரசு மூறை பிழைக்கும் இவை நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு உதவும்.

7. செயல்திறன்

நிதிமுறைகளை ஒன்றாக ஒருங்கிணைத்து மற்றும் தீறமையான முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும். ஏய்ப்பு மற்றும் மோசடிக்கான வாய்ப்புகள் இருக்கக் கூடாது. ஓர் ஆண்டில் ஒரு முறைக்கு மேல் ஒருவரும் வரி விதிப்பிற்குட்படுத்தக் கூடாது. இரட்டைவரி முறை கூடாது.

8. நிர்வாகச் சிக்கனம்

எந்த ஒரு கூட்டரசு முறைக்கும் சிக்கனம் என்பது முக்கிய பண்பாக உள்ளது. வசூலிக்கும் செலவு குறைவாக இருப்பதோடு அதிக வருவாய் பெற்று அரசின் பிற துறைகளுக்கு செலவிடுவதற்கு ஏதுவாக அமைய வேண்டும்.

9. பொறுப்புணர்வு

நிதிசார் முடிவுகளுக்கு ஒவ்வொரு அரசும் பொறுப்பேற்க வேண்டும். அதாவது மத்திய அரசு பாராளுமன்றத்திற்கும், மாநில அரசு சட்டசபைக்கும் பொறுப்பேற்க வேண்டும்.

நிதிக்குழுவின் வரலாறு

நிதிக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு தலைவர் செயல்படும் காலம்
முதலாவது 1951 K.C. நியோகி 1952 – 57
இரண்டாவது 1956 K. சந்தானம் 1957 – 62
மூன்றாவது 1960 A.K. சந்தா 1962 – 66
நான்காவது 1964 P.V.ராஜ்மன்னார் 1966 – 69
ஐந்தாவது 1968 மகாவீர் தியாகி 1969 – 74
ஆறாவது 1972 K. பிரமானந்த ரெட்டி 1974 – 79
ஏழாவது 1977 J.M.சாலட் 1979 – 84
எட்டாவது 1983 Y.B.சவான் 1984 – 89
ஒன்பதாவது 1987 N.K.P.சால்வே 1989 – 95
பத்தாவது 1992 K.C.பந்த் 1995 – 2000
பதினொன்று 1998 A.M.குஸ்ரோ 2000 – 05
பன்னிரெண்டு 2002 C.ரங்கராஜன் 2005 – 10
பதிமூன்று 2007 Dr. வஜய் L.கேல்கார் 2010 – 15
பதிநான்கு 2013 Dr.Y.V.ரெட்டி 2015 – 20
பதினைந்து 2017 N.K.சிங் 2020 – 25
  • இந்திய அரசியலமைப்பு ஷரத்து 280-ன் படி நிதிக்குழு பகுதி சட்டபூர்வ அமைப்பாகும். இது 1951-ம் ஆண்டு மத்திய மற்றும் மாநிலங்களுக்கிடையே நிதி உறவை வரையறுப்பதற்கு அமைக்கப்பட்டது.
  • நிதிக்குழுமத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான சமநிலையின்மையைக் குறைப்பதற்கும் (செங்குத்து சமநிலையின்மை) மற்றும் மாநிலங்களுக்கிடையேயான சமமின்மையைக் குறைப்பதற்கும் (படுகிடை சமநிலையின்மை) முயல்கிறது. இது உள்ளுணர்வினை ஊக்குவிக்கிறது.
  • நிதிக்குழு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அது அமைக்கப்படுகிறது. இது ஒரு தற்காலிக அமைப்பாகும்.
  • 14வது நிதிக்குழு 2013-ல் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் ஏப்ரல் 1, 2015 முதல் மார்ச் 2020 வரை செல்லத்தக்கதாகும்.
  • 15-வது நிதிக்குழு நவம்பர் 2017-ல் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் ஏப்ரல் 1, 2020 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

இந்திய நிதிக்குழுவின் பணிகள்

ஷரத்து 280 (3) நிதிக்குழுவின் பணிகள் பற்றி கூறுகிறது. இச்சரத்தின்படி இக்குழு குடியரசுத் தலைவருக்கு பின்வருவனவற்றை பரிந்துரை செல்கிறது.

  1. மத்திய மற்றும் மாநிலங்களுக்கிடையே நிகரவரி வருவாய்களை ஒதுக்கீடு செய்து, மாநிலங்களுக்கு அவற்றிற்குரிய பங்கை பகிர்ந்தளித்தல்.
  2. மத்திய அரசு மாநிலத்திற்கு வழங்கவுள்ள மானிய அளவு பற்றியும் (ஷரத்து 275 (1)) மற்றும் அம்மானியம் பெறுவதற்கு மாநில அரசின் தகுதி குறித்து கொள்கைகளை உறுதி செய்தல்.

வரி எவ்வாறு பிரிக்கப்படுகிறது?

  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு -280ன் கீழ் நிதிக்குழு 5 ஆண்டுக்கு ஒருமுறை ஏற்படுத்தப்பட்டு, அது மத்திய மற்றும் மாநில அரசின் வரி பகிர்வை பரிந்துரை செய்யும்.
  • 15-வது நிதிக்குழு மத்திய மற்றும் மாநில அரசின் நிதிப்பகிர்வு சார்ந்த பரிந்துரை 2020-முதல் நடைமுறைக்கு வரும்.
  1. நல்ல திடமான நிதியை நிலைநாட்டும் வண்ணம் இந்திய குடியரசு தலைவரால் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டிய விபரங்கள். ஏனைய பிரச்சனைகளாகிய கடன் நிவாரணம், மாநிலங்களுக்கு வழங்குகிற இயற்கை சீற்றத்திற்கான நிதி, துணை ஆயத்தீர்வைகள் போன்றவைகள்.

உள்ளாட்சி நிதி

உள்ளாட்சி நிதி எனப்படுவது இந்தியாவில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் நிதி பற்றியதாகும். இந்தியாவில் பல்வேறு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. நம் நாட்டில் தற்போது செயல்பாட்டில் இருக்கக்கூடிய முக்கியமான நான்கு உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.

உள்ளாட்சி அமைப்பின் வகைகள்

  1. கிராம ஊராட்சி
  2. மாவட்ட வாரியங்கள் அல்லது ஜில்லா அமைப்பு
  3. நகராட்சி
  4. மாநகராட்சி
  5. கிராம ஊராட்சி

  • தோற்றம்: ஊராட்சியின் எல்லைவரம்பு என்பது ஒரு வருவாய் கிராமமாகும். சில சமயங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறிய கிராமங்கள் ஒரு ஊராட்சியின் கீழ் குழுவாக செயல்படுகிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் பஞ்சாயத்து ராஜ் நிறுவப்பட்டுள்ளது.
  • பணிகள்

அ) ஒரு ஊராட்சியின் செயல்பாடுகள் குடிமை, பொருளாதார மற்றும் பலவற்றை உள்ளடக்கியிருக்கும். இதனால் சிறிய இடர்பாடுகள் ஊராட்சியிலேயே அகற்றப்படும்.

ஆ) சாலைகள் , தொடக்க பள்ளிகள், கிராம சுகாதார நிலையங்கள் ஆகியவைகள் பஞ்சாயத்துக்களால் நிர்வகிக்கப்படுகிறது.

இ) குடிநீர் மற்றும் வேளாண்மைக்கு நீர் வழங்கல் அவைகளின் எல்லைக்குள் பொறுப்பாகும் மற்றும் பண்ணை பராமரிப்பு, சந்தை, சேமிப்பு கிடங்கு ஆகியவற்றையும் மேலாண்மை செய்கிறது.

கிராம ஊராட்சிகளின் வருவாய் ஆதாரங்கள்

கிராம ஊராட்சிகளின் வருவாய் ஆதாரங்கள் பின்வருவனவாகும்.

  1. பொது சொத்து வரி
  2. நிலம் மீதான வரி
  3. தொழில் வரி
  4. விலங்குகள் மற்றும் வாகனங்கள் மீதான வரி

பிற வரிகளாக சேவை வரி, நுழைவு வரி, திரையரங்கு வரி, புனிதஸ்தலங்கள் வரி, திருமணம் மீதான வரி, பிறப்பு மற்றும் இறப்பு மீதான வரி மற்றும் உழைப்பாளர் மீதான வரி போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது. உண்மையில், மாநில அரசின் அனுமதியுடன் மட்டுமே கிராம ஊராட்சிகளால் வரி விதிக்கப்படுகிறது. இந்த அமைப்பு வரி விதிப்பதற்கு சில வரம்புகள் உள்ளன.

2. மாவட்ட வாரியங்கள் அல்லது ஜில்லா அமைப்புகள்:

தோற்றம் : அனைத்து கிராமப் பகுதிகளையும் உள்ளடக்கி மாவட்ட வாரியங்கள் மற்றும் ஜில்லா அமைப்புகள் மாவட்ட அளவில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியத்தின் வரம்பெல்லை வருவாய் மாவட்டம் ஆகும்.

பணிகள்: தமிழ்நாட்டில், ஜில்லா அமைப்பு என்பது மாவட்ட அளவில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியத்தின் பணிகளாக கிராம ஊராட்சிகளுக்கு உதவி செய்வது மற்றும் வளர்ச்சி திட்டங்களை நடைமுறைப்படுத்துவது போன்றவையாகும்.

மாவட்ட வாரியங்களின் வருவாய் ஆதாரங்கள்

  1. மாநில அரசிடமிருந்து பெறும் மானிய உதவி
  2. நில தீர்வைகள்
  3. சுங்க கட்டணம்
  4. சொத்திலிருந்து பெறுகிற வருமானம் மற்றும் மாநில அரசுகளிடமிருந்து பெறக்கூடிய கடன்கள்
  5. வளர்ச்சிப் பணிகளுக்காக மத்திய அரசு மேற்கொள்ளும் திட்டங்களுக்கான மானியங்கள்
  6. பொருட்காட்சிகள் மற்றும் கண்காட்சிகளிலிருந்து பெறப்படுகிற வருமானம்
  7. மாநில அரசு ஏற்றுக்கொள்கிற சொத்துவரி மற்றும் பிற வரிகள்

3. நகராட்சி அமைப்புகள்

தோற்றம் மற்றும் பணிகள்: நகரப் பகுதிகளில் ஏற்படுத்தப்படுகிற இவ்வமைப்புகள் அப்பகுதியில் உள்ள துப்புரவு, பொது சுகாதாரம், சாலைகள், விளக்குகள், குடிநீர் வினியோகம், சாலைகளை தூய்மைப்படுத்துதல், பூங்காக்களை பராமரித்தல், சுகாதார நிலையங்கள் மற்றும் கால்நடை மருத்துவமனைகள், பாதாள சாக்கடை வசதி, தொடக்க கல்வி வசதி, பொருட்காட்சி மற்றும் கண்காட்சிகளை அமைத்தல் ஆகிய பணிகளைச் செய்து வருகிறது. ஆயினும், அனைத்து பணிகளும் மாநில அரசின் கட்டுப்பாட்டிற்குள் செயல்படுகின்றது.

நகராட்சி அமைப்புகளின் வருவாய் ஆதாரங்கள்

  1. சொத்து மீதான வரிகள்
  2. பொருட்கள் மீதான வரிகள், குறிப்பாக நுழைவு வரி.
  3. தனிப்பட்ட வரிகள், தொழில்வரி, வியாபாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றின் மீதான வரிகள்.
  4. வாகனங்கள் மற்றும் விலங்குகள் மீதான வரிகள்
  5. திரையரங்கு வரி
  6. மாநில அரசிடமிருந்து பெறுகிற மானிய உதவி.

4. மாநகராட்சி

தோற்றம் மற்றும் பணிகள்: நகராட்சியை ஒப்பிட்டு பார்க்கும்போது, இவைகள் பரந்த அதிகாரங்களையும், அதிக சுதந்திரத்தையும் பெற்றுள்ளது. குடிநீர் வினியோகம் மற்றும் பாதாள சாக்கடை, தெரு விளக்குகள், சேரிகளை பண்படுத்துதல், நகர் திட்டமிடல் போன்ற பணிகளை செய்கிறது. நகர மக்கள் தொகை அதிகரித்து வருகிற நிலையில் மாநகராட்சியின் பணிகளும் பெருகிக் கொண்டே வருகிறது.

மாநகராட்சியின் வருவாய் ஆதாரங்கள்

  1. சொத்து மீதான வரி
  2. வாகனங்கள் மற்றும் விலங்குகள் மீதான வரி
  3. வாணிபம் மற்றும் வேலைவாய்ப்பு மீதான வரி
  4. திரையரங்கு வரி மற்றும் காட்சி வரி
  5. நகரத்திற்குள் கொண்டு வரும் பொருட்கள் மீதான வரிகள்
  6. விளம்பரங்கள் மீதான வரிகள்
  7. நுழைவு வரி மற்றும் முனைம வரி

சட்டத்திற்குட்பட்டு தங்கள் விருப்பப்படி அதிகபட்சமாகவோ அல்லது குறைந்த பட்ச விகிதமாகவோ ஒரு நியாயமான அளவில் வரி விதிக்க மற்றும் மாற்றியமைக்க சுதந்திரம் உள்ளது.

நிதிக் கொள்கை

பொதுவான கண்ணோட்டத்தில் நிதிக் கொள்கை என்பது உற்பத்தி, வேலைவாய்ப்பு, சேமிப்பு மற்றும் முதலீடு ஆகிய பேரின பொருளாதார மாறிகளைப் பாதிக்கும் வரவு செலவு திட்ட மதிப்பாகும்.

வரைவிலக்கணங்கள்

“நிதிக் கொள்கை எனப்படுவது தேசிய வருமானத்தின் மீது விரும்பத்தகுந்த விளைவை ஏற்படுத்தவும் மற்றும் விரும்பத்தகாத விளைவுகளை தவிர்க்கவும் அரசின் வருவாய் மற்றும் செலவினங்கள் பற்றிய கொள்கையாகும்”.

  • ஆர்தர் ஸ்மிதீஸ்

“நிதிக் கொள்கை என்பது நாட்டின் பொருளாதார நோக்கங்களை அடைவதற்கு பயன்படுத்தப்படும் பொது நிதி அல்லது செலவு, வரி, பெறுதல்கள் மற்றும் நிதி நிர்வாகம் சார்ந்த கொள்கையாகும்”. – பியுளெர்

நிதிக் கருவிகள்

நிதிக் கொள்கையை சில நிதிக் கருவிகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. அரசின் செலவுகள் , வரிவிதிப்பு மற்றும் கடன் பெறுதல் போன்றவை நிதிக் கருவிகள் ஆகும்.

  1. வரிவிதித்தல்: வரிகள் மக்களிடமிருந்து வருமானத்தை அரசிற்கு மாற்றுகிறது. வரிகள் நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கும். வரி அதிகரிப்பு செலவிடத்தக்க வருமானத்தை குறைக்கிறது. எனவே பணவீக்கத்தை கட்டுப்படுத்த வரியை அதிகப்படுத்த வேண்டும். மந்த காலத்தில் வரிகள் குறைக்கப்பட வேண்டும்.
  2. பொதுச் செலவு: பொதுச் செலவு பணியாளர்களின் கூலி மற்றும் சம்பளங்களை அதிகரிக்கும்போது பண்டங்கள் மற்றும் பணிகளுக்கான மொத்த தேவை உயருகிறது. ஆகையால் பொதுச் செலவு பின்னிறக்கம் மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
  3. பொதுக்கடன்: அரசு, கடன் மூலம் பொது மக்களிடமிருந்து அரசிற்கு பணத்தை மாற்றம் செய்கிறது. அது பின்னர் மக்களுக்கு திரும்ப வட்டியோடு செலுத்தப்படுகிறது. இதனால் அரசிடமிருந்து பணம் மக்களுக்கு மாற்றப்படுகிறது.

நிதிக்கொள்கையின் நோக்கங்கள்

நிதிக் கொள்கை பின்வரும் நோக்கங்களை அடைவதற்கு உதவுகின்றது.

  1. முழு வேலைவாய்ப்பு

முழு வேலைவாய்ப்பு என்பது வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் முக்கிய நோக்கமாகும். சமூக மேல் முதலீட்டில் பொதுச் செலவை மேற்கொள்வதால் வேலைவாய்ப்பை உருவாக்க முடியும். இந்தியாவில் ஊரக வேலைவாய்ப்பு திட்டங்களாகிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் போன்ற திட்டங்கள் வேலைவாய்ப்பு பெருக்கத்தை உருவாக்கம் நோக்கமாக கொண்டுள்ளது.

2. விலை நிலைத்தன்மை

விலை நிலையற்றதன்மை மொத்த தேவை மற்றும் அளிப்புக்கிடையே சமமின்மையை ஏற்படுத்துகிறது, பொருட்களுக்கான தேவை அதிகரிப்பதால் பணவீக்கம் ஏற்படுகிறது. பொதுச் செலவு மூலம் உண்மை உற்பத்தி அதிகரித்து தேவையும் அளவுக்கு அதிகமாக அதிகரித்தால் பொதுச் செலவைக் குறைப்பதன் மூலம் இதனைத் தவிர்க்கலாம். தேவைக்கு மேல் உள்ள தேவையை வரிவிரிப்பதன் மூலம் தனிநபர் செலவு செய்யவதைக் குறைக்கலாம். வரிக்குறைப்பு மற்றும் பொதுச்செலவு மூலம் மந்தத்தை எதிர்கொள்ளலாம். மந்தகாலத்தில் அரசு செலவை அதிகரித்து வரிவிதிப்பைக் குறைத்துக் கொள்ளும்.

3. பொருளாதார வளர்ச்சி:

ஒரு பொருளாதாரத்தின் உற்பத்தி திறனை பெருக்க நிதிக் கொள்கை பயன்படுகிறது. வரியானது முதலீட்டை ஊக்குவிக்கும் கருவியாக பயன்படுகிறது. வரி விடுமுறை மற்றும் வரி தள்ளுபடிகள் புதிய தொழிற்சாலைகள் மூலம் முதலீட்டை தூண்டுகிறது. பொதுத்துறை முதலீடு அதிகரிக்கப்படும்போது தனியார் துறையினரால் நிரப்ப முடியாத இடைவெளியை நிரப்புகிறது. வரிகள் மூலம் வளங்களைத் திரட்டுவதில் பற்றாக்குறை ஏற்பட்டால் அரசு உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு கடன் மூலம் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி அளிக்கிறது.

4. சமமான பகிர்வு:

வளர்வீத வரி முறை பணக்கார மற்றும் ஏழை ஆகியோருக்கிடையே உள்ள இடைவெளியை குறைக்க உதவுகிறது. வளர்வீதத்தில் பொதுச்செலவு அதிகரிப்பதன் மூலம் நலத்திட்டங்களாகிய இலவச கல்வி, பள்ளி குழந்தைகளுக்கான மதிய உணவு மற்றும் மான்யங்கள் போன்றவைகள் மூலம் ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துகிறது.

5. நாணய மாற்று வீத சமநிலை

நாணய மாற்றுவீதத்தின் நகர்விற்கு ஏற்ப பன்னாட்டு வாணிபத்தின் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகிறது. வரி சலுகைகள் மற்றும் உதவித் தொகை வழங்குவதன் மூலம் ஏற்றுமதியை அதிகரிக்கிறது. அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு சுங்க வரி விதிப்பதன் மூலம் இறக்குமதி செலவைக் குறைக்கிறது. கச்சாப்பொருட்கள் மற்றும் இயந்திரங்களுக்கான இறக்குமதி வரியைக் குறைப்பதன் மூலம் செலவைக் குறைத்து ஏற்றுமதியில் நிறுவனங்கள் போட்டியிட உதவுகிறது.

6. மூலதனம் உருவாக்கம்

விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு மூலதனத்திரட்சி மிக முக்கியமானதாகிறது. வரிச்சுமை குறைப்பானது, செலவிடத்தக்க வருமானத்தை அதிகரிக்கிறது மற்றும் சேமிப்பு மூலம் மூலதனதிரட்சியை ஏற்படுத்துகிறது. அரசானது மின்சாரம் மற்றும் போக்குவரத்து போன்ற அடிப்படைத் துறைகளில் செலவிடும்போது அது தனியார் முதலீட்டைத் தூண்டுகிறது.

7. சமவட்டார வளர்ச்சி

பின்தங்கிய பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு நிதி ஊக்கம் வழங்கும் போது வட்டார வேறுபாடு குறைகிறது. பின்தங்கிய பகுதியில் தொழிற் பேட்டைகள் துவங்க பொதுச் செலவினை மேற்கொண்டால் அப்பகுதியின் வளர்ச்சி தூண்டப்படுகிறது.

தொகுப்புரை

மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய் மற்றும் செலவினங்களைப் பற்றி ஆராயும் அறிவியல் பொதுநிதியாகும். நவீன காலத்தில் இந்த பாடமானது பொது வருவாய், பொதுச் செலவு, பொதுக் கடன், நிதி நிர்வாகம், மற்றும் நிதிக் கொள்கை ஆகிய ஐந்து முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது. எனவே பொதுநிதியானது வளர்ந்த மற்றும் பின்தங்கிய நாடுகளில் முக்கிய பங்காற்றுகிறது. முன்னேறிய நாடுகளில் தேவைக் குறைவினாலோ அல்லது அதிக தேவையினாலோ நிலையற்ற தன்மை என்னும் பிரச்சினைகள் காணப்படும். பின்தங்கிய நாடுகளில் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு நிதிக் கொள்கை முக்கிய கருவியாக உள்ளது.

நிதிக் கொள்கை உலக பொருளாதார பெருமந்தத்திற்குப்பின் மிகவும் பிரபலமானது. மந்தத்திலிருந்து விடுபட அரசின் தலையீடு தேவையென J.M.கீன்ஸ் வலியுறுத்தினார். அரசின் செலவிற்கும், தனியாரின் முதலீடு , வட்டி வீதம் , நுகர்வு மற்றும் வருமான வளர்ச்சி ஆகியவற்றிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!