Samacheer NotesTnpsc

பணம் மற்றும் கடன் Notes 9th Social Science

9th Social Science Lesson 11 Notes in Tamil

11. பணம் மற்றும் கடன்

‘பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்லது இல்லை பொருள்’

ஒரு பொருளாக மதிக்கப்படாதவரையும் பிறர் மதிக்கும்படிச் செய்வது பொருளே ஆகும்.

  • மனிதர்களாகிய நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் பெரும்பான்மையான பொருள்கள் பணத்தால் மதிப்பிடப்படுகின்றன.
  • மக்களின் உழைப்பிற்கான ஊதியம், கூலி, சேவைக் கட்டணங்கள் முதலியன பணத்தின் மதிப்பில்தான் நிர்ணயிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் நாம் செலுத்தும் வரிகள், தீர்வைகள் ஆகியவையும் பணத்தின் மதிப்பிலேயே செலுத்தப்படுகின்றன.

ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை

போகாறு அகலாக் கடை

பொருள் வருகின்ற வழி சிறியதாயினும் கேடு இல்லை. போகின்றவழி அதனைவிடப் பெருக்க கூடாது என்பது வள்ளுவர் காட்டும் வழி.

  • வீடு மட்டுமல்லாமல் ஒரு நாட்டின், மாநிலத்தின் நிதிநிலை அறிக்கைகள்கூட பணத்தின் அடிப்படையில்தான் தயாரிக்கப்படுகின்றன.
  • அரசு மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவைகூட தமது நிதிநிலையைப் பணத்தின் அடிப்படையில் கணக்கிடுகின்றன. இவ்வாறு பணம் என்பது நமது வாழ்வில் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.

பண்டமாற்று முறை

  • பண்டைக் காலத்தில் மனிதர்கள் வேட்டையாடுபவர்களாகவும் உணவு சேகரிப்பவர்களாகவும் தமக்கான உணவைப் பெற்றனர்.
  • அவர்கள் குகைகள், காடுகளில் வாழ்ந்தனர். படிப்படியாக வேட்டையாடுவதற்காகவும் உணவு சேகரிப்பதற்காகவும் கருவிகளைக் கண்டுபிடித்தனர்.
  • தொடர்ந்து நெருப்பின் பயனையும் வேளாண்மை செய்யவும் கற்றுக்கொண்டனர். மண்ணைப் பயன்படுத்தித் தமக்கான வீடுகளைக் கட்டிக்கொண்டு, ஒரே இடத்தில் வாழத் தொடங்கினர். மேலும் மண்ணைப் பயன்படுத்தி மட்பாண்டங்களையும் தயாரித்தனர்.
  • வேளாண்மை மூலம் உற்பத்தி அதிகரித்ததால் கைவினைப் பொருள் தயாரிப்பதிலும் ஈடுபட்டனர்.
  • இவ்வாறு உபரியாக மீதமாகும் உணவுப்பொருள்களையும் தாங்க தயாரித்த மண்பாண்டம் போன்ற பொருள்களையும் அவை தேவைப்படும் மனிதர்களுக்குப் பரிமாற்றம் செய்தனர்.
  • எடுத்துக்காட்டாக, ஒரு சமுதாயத்திடம் அதிக உணவுப்பொருட்கள் இருந்தால், அவற்றை மண்பாண்டங்கள் உபரியாக வைத்திருப்பவர்களிடம் பண்ட மாற்றம் செய்தனர்.
  • அதேபோல, ஒரு பகுதியில் அதிக உற்பத்தியாகும் தானியம் இன்னொரு பகுதியில்அதிகம் காணப்படும் விளைபொருளுக்குப் பண்டமாற்றம் செய்யப்பட்டது. இவ்வாறு பண்டமாற்றம் செய்யப்பட்ட பொருள்களே வணிகத்தின் முதல் வடிவம் என்று கூறலாம்.

நறுமணப்பாதை

தமிழகத்தின் கிழக்குக் கடலில் இருந்து மிளகு மற்றும் நறுமணப்பொருள்கள் , முத்து, ரத்தினங்கள், மாணிக்கம் மற்றும் மென்மையான பருத்தி ஆடைகள் போன்ற பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. இவற்றில் மிளகு மற்றும் நறுமணப்பொருட்கள் அதிகம் இடம் பெற்றதால் இந்த வணிகப்பாதை நறுமணப்பாதை என்றே அழைக்கப்பட்டது.

  • தனது அரசாட்சியில், ஷெர்ஷா சூரி (1540 – 1546) குடிமக்களுக்கும், இராணுவத்திற்குமான ஒரு புதிய நிர்வாக முறையை அமைத்தார். அவர் காலத்தில் அறிமுகப்படுத்தப்ப்பட்ட 178கிராம் எடை கொண்ட வெள்ளி நாணயம் ‘ருபியா’ என்றழைக்கப்பட்டது. அந்நாணயம் முகலாயர், மராத்தியர் மற்றும் ஆங்கிலேயர் காலம் வரை புழக்கத்தில் இருந்தது.

நாணயங்கள்

  • நாகரிகங்கள் உருவான அனைத்துப் பகுதிகளிலும் பண்டமாற்று முறை செல்வாக்குப் பெற்றிருந்தது.
  • ஒரே நாகரிகத்திற்குள் மட்டுமல்லாமல் வேறுவேறு நாகரிகங்களுக்கு இடையிலும் பண்டமாற்று முறையில் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது. இதுவே பன்னாட்டு வணிகத்தின் முதல் வடிவம் எனலாம்.
  • சிந்து வெளி நாகரிகக் காலகட்டத்தில் காணப்பட்ட பொருள்கள் எகிப்து, ஈராக் (மெசபடோமியா) பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகாளில் கண்டெடுக்கப்பட்டன.

  • இவ்வாறு பொருள்களைப் பண்டமாற்றம் செய்வதிலும் காலப்போக்கில் சிக்கல்கள் உருவாகின. எடுத்துக்காட்டாக, தமக்குத் தேவையான பொருளுக்குப் பண்டமாற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
  • ஒருவரிடம் நெல் உள்ளது. அவருக்கு மண்பாண்டம் தேவை. ஆனால் மண்பாண்டம் வைத்திருந்தவருக்கு நெல் தேவையில்லை. இவ்வாறு பலருக்கும் தமது தேவை நிறைவேறவில்லை.
  • பண்டமாற்றுப் பொருள்களின் அளவு மற்றும் மதிப்பை கணக்கிடுவதில் பிரச்சனைகள் இருந்தன.
  • இப்பிரச்சனைகளுக்கு விடை காண பண்டங்களை மாற்றிக்கொள்ளப் பொதுவான மதிப்புள்ள ஒரு பொருளை நிர்ணயம் செய்தனர். இது பெரும்பாலும் உலோகமாக இருந்தது.
  • ஆகவே இந்த உலோகங்களே முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட பணம் எனலாம். உலோகம் அப்போது அரிய பொருளாகவும் நீண்ட காலம் பராமரிக்கக்கூடியதாகவும் மதிப்பு மாறாததாகவும் இருந்தது, இதற்குக் காரணமாக இருக்கலாம்.
  • தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்கள் இவ்வாறு பண்டமாற்று முறைக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டன. இவை புராதன பணம் என்றும் அழைக்கப்படுகின்றன.
  • இதுபோல தோல், மணிகள், ஓடுகள், புகையிலை, உப்பு, சோளம், ஏன் அடிமைகள் கூட பண்டமாற்றாகக் கொடுக்கப்பட்டதாகப் பொருளாதார அறிஞர்கள் கருதுகின்றனர்.
  • பிற்காலச் சோழர் காலத்தில் வணிகக்குழுக்கள் தமக்கெனப் படைகள் வைத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டனர்.
  • மேலும், பிற்காலச் சோழர்கள் ஆட்சியின்போது தமிழக வணிகர்களின் ஏற்றுமதித் தேவையை ஈடுசெய்ய சிறு வணிகர்களுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் கடன் உதவி அளித்ததற்கான வரலாற்றிச் சான்றுகளும் காணப்படுகின்றன.

பணத்தின் வரலாறு

  1. பண்டமாற்று முறை கி.மு.(பொ.ஆ.மு.) 90000

இந்த கால கட்டத்தில் மனிதன் பண்டமாற்று முறையைத்தான் கையாண்டான். தன்னிடம் மிகுதியாக உள்ள பொருளைக் கொடுத்து தனக்குத் தேவையான இன்னொரு பொளைப் பெற்றுக் கொண்டான்.

தானியங்கள் கால்நடைகள், உப்பு ஆகியவைதான் பண்டமாற்றாகப் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

  1. நாணயங்கள் கி.மு.(பொ.ஆ.மு.) 1100

சீனர்கள் இந்த காலக் கட்டத்தில் சிறு நாணயங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த நாணயங்கள் வெண்கலத்தில் செய்யப்பட்டிருந்தன.

இந்திய பெருங்கடலை ஒட்டியுள்ள நாடுகளில் சோழிகள், பணமாகப் பயன்படுத்தப்பட்டன.

  1. காகிதப் பணம் கி.மு. (பொ.ஆ.மு.) 600

மத்திய தரைக்கடல் பகுதி முழுவதும் இந்த பணப்பரிவர்த்தனை பரவத் தொடங்கியது.

விதியா நாட்டு அரசர் அலியாதீஸ், வணிகபரிமாற்றத்திற்கு பணத்தை பயன்படுத்த போவதாக அதிகார பூர்வமாக அறிவித்தார். இந்த நாடு இப்போது துருக்கியின் ஒரு பகுதியாக உள்ளது.

  1. தங்க நாணயம் கி.பி.(பொ.ஆ) 1250

பரிவர்த்தனைகளுக்காக தங்க முலாம் பூசப்பட்ட நாணயம் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

  1. மார்கோ போலோ கி.பி.(பொ.ஆ) 1290

மார்கோ போலோ பயணத்தால் காகிதப் பணம் ஐரோப்பிய நாடுகளில் பரவியது.

  1. காகிதப் பணம் அச்சடித்தல் கி.பி.(பொ.ஆ) 1661

காகிதப்பணத்தை சுவீடம் வங்கிகள் அச்சடித்த புதிதில் அதற்கு பெரியதாக வரவேற்பு இல்லை.

  1. மின்னணு பணமாற்றம் கி.பி.(பொ.ஆ) 1860

நந்தி மூலமான மின்னணு பணப் பரிவர்த்தனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

  1. கடன் அட்டை கி.பி(பொ.ஆ) 1946

ஜான் பிக்கின்ஸ் , கிரெடிட் கார்டை உருவாக்கினார்.

  1. அலைபேசி –வங்கிச் செயல்பாடு கி.பி.(பொ.ஆ) 1999

ஐரோப்பிய வங்கிகள் மொபைல் பேங்கை அறிமுகம் செய்தன.

  1. NFC கி.பி. (பொ.ஆ) 2008

Near Field Communication(NFC)

பணப்பரிவர்த்தனை முறை பிரிட்டனில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த முறை 2016ல் தான் இந்தியாவிற்கு வந்தது. இந்த முறையில் பணபரிவர்த்தனைக்கு 7 முதல் 8 நொடிகள் மட்டுமே ஆகும்.

இயற்கையான பணம்

படிப்படியாகத் தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்கள் உலகம் முழுவதும் மதிக்கப்படும் உலோகங்களாக ஏற்கப்பட்டன. இதையொட்டி, இந்த இரு உலோகங்கள் நாடுகளுக்கு இடையிலான பண்டமாற்றத்தில் பொது மதிப்பீடாகப் பயன்படுத்தப்பட்டன. இவையே இயற்கையான பணம் என்றும் அழைக்கப்பட்டன.

காகிதப்பணம்

  • நாளடைவில் இயற்கையான பணத்திலும் சிக்கல்கள் உருவாயின. வணிகத்தின் விரிவாக்கத்துக்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளி இருப்பு இருப்பதில்லை. அதே நேரத்தில் சுரங்கங்களிலும் தங்கம், வெள்ளி வரம்புக்குள் தான் இருந்தன.
  • இதனால் குறைந்த மதிப்பு கொண்ட உலோகங்களைக் கொண்டு நாணயங்கள் தயாரிக்கப்பட்டன. இவை சிறிய மதிப்பிலான பொருள்கள் வாங்கவும் விற்கவும் பயன்படுத்தப்பட்டன. ஏழை எளிய மக்களின் பணமான இவை பயன்படுத்தப்பட்டன.
  • இதனால், இந்தக் குறைந்த மதிப்பு நாணயங்கள் அதிகமாகத் தயாரிக்கப்பட்டன. இதன் அடுத்த கட்டமாகத்தான் காகிதப் பணம் புழக்கத்துக்கு வந்தது.
  • இந்த உருவமற்ற பணமும் வங்கிகளில் அதனைச் சேமிக்கும் வழக்கமும் வெகுவாகப் புழக்கத்திற்கு வந்தன. அப்போது உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார மந்தமும் இதற்கான காரணங்களில் ஒன்று.
  • பணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் பிரிக்க முடியாத பகுதியாக மாறிவிட்டது. உலகப் பொருளாதாரச் சூழலில் பணம் பல வடிவங்களில் மாறியுள்ளது. மின்னனு உலகில் பணப்பரிமாற்றங்கள் பல முறைகளில் நடைபெறுகின்றன.

‘சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமட்

கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று’

தீமையான வழியில் சேமித்த செல்வம் பச்சை மண்கலத்தினுள் நீரைச் சேமித்து வைப்பதுபோன்று வீணாகிவிடும்.

மின்னணுப் பரிமாற்றங்கள்

  • வங்கிச் சேமிப்பில் உள்ள பணத்தை எடுப்பதற்ல்கு நேரடியாக வங்கிக்குச் சென்று படிவம் நிரப்பி அல்லது காசோலை வழங்கி, பெறுவதற்குப்பதிலாக , பணம் எடுக்கும் இயந்திரம் மூலம் தேவையான பணத்தை எடுக்க தானியங்கி பணம் வழங்கும் அட்டை பயன்படுகிறது.
  • இதன்மூலம் ஆங்காங்கு நிறுவப்பட்டுள்ள பணம் எடுக்கும் இயந்திரம் மூலம் எந்த நேரமும் நமக்குத்தேவையான பணத்தினை நமது கணக்கிலிருந்து நாம் எடுத்துக்கொள்ளலாம்.
  • இதேபோல வங்கிக்குச் செல்லாமலேயே நமது கணக்கில் பணம் செலுத்தும் வசதி சில வங்கிகளில் உள்ளது.
  • இதேபோல முன்னதாகப் பணம் பெற்று, பின்னர் செலுத்தும் வகையில் கடன் அட்டை (Creadit Card) பயன்படுத்தப்படுகிறது.
  • பணப்பரிமாற்றம் செய்வதற்குக் காசோலை (Cheque) அல்லது கேட்பு வரைவோலை (DemandDraft) போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கு மாற்றாக இணைய வழி பரிமாற்றங்கள் தற்போது நடைமுறையில் உள்ளன.
  • இதன் மூலம் நினைத்த நேரத்தில் உலகின் எந்த மூலையில் இருப்பவருக்கும் நொடியில் பணப்பரிமாற்றம் செய்யலாம்.
  • இதேபோல் அலைபேசிமூலமும் மின்னணு பரிமாற்றம் செய்யும் தொழில்நுட்பமும் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது.

ரிசர்வ் வங்கியின் பங்கு

  • பணப்பரிமாற்றத்தைப் பராமரிக்கும் பொறுப்பும் கண்காணிக்கும் கடமையும் ஓர் அரசுக்கு இருக்கிறது.
  • பொதுவாகப் பணம் பதுக்கி வைக்கப்படுவது பொருளியலில் தவிர்க்கப்பட வேண்டும். இதனால் வங்கிகளில் பணம் சேமிக்கப்படுகிறது.
  • வங்கிகளில் சேமிக்கப்படும் பணத்தில் பெரும் பங்கு தொழில் வளர்ச்சிக்கும் பொருளியல் வளர்ச்சிக்கும் ஏழைகளின் நலனுக்கும் பயன்படுத்தப்படுகிறது..
  • இந்தியாவில் அனைத்து வங்கிகளும் நாட்டுமையாக்கப்பட்டுள்ளதை (1969) அறிவோம். இந்தியாவில் பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தும் பணியினை இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்கிறது.
  • இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1, 1935 முதல் செயல்பட தொடங்கியது. 1937 லிருந்து நிரந்தரமாக மும்பையில் இயங்கி வருகிறது.
  • இது 1949இல் நாட்டுடைமையாக்கப்பட்டது அச்சடிக்கப்பட்டப் பணத்தில் 85% புழக்கத்தில் விடப்படுகிறது. ஆகஸ்ட் 2018 நிலவரப்படி இந்தியாவில் ரூபாய் 19 லட்சம் கோடி மதிப்பிலான பணம் புழக்கத்தில் உள்ளது.

ஆதாரம்; இந்திய ரிசர்வ் வங்கி

கல்வி கடன்

  • கல்விக் கடன்கள், சமுதாயத்தின் கல்வி கற்கும் ஆர்வத்தினைப் பூர்த்தி செய்ய உதவுகின்றன.
  • மாணவர் முதன்மைப் பயனாளி ஆவார்.
  • பெற்றோர், இணையர் அல்லது உடன்பிறந்தோர் ஆகியோர் இணை விண்ணப்பத்தாரர்.
  • உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ மேற்படிப்பைத் தொடர முனைவோருக்கு வழங்கப்படுகிறது.
  • இவை முழு நேர மற்றும் பகுதி நேர பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு அல்லது தொழில் படிப்புகளுக்காக வழங்கப்படுகின்றன.
  • ரூபாய் 4 லட்சம் வரை கல்வி கடன் பெறுவதற்ல்கு எவ்வித பிணையும் கேட்கப்படாது.
  • பொதுவாக படிப்பு முடித்த பிறகு, வேலை வாய்ப்பு பெற்றவுடன் கடனைத் திரும்ப செலுத்த வேண்டும்.
  • “வித்யா லட்சுமி கல்வி கடன் திட்டம்” என்ற இணையதளத்தின் மூலமாக மாணவர்கள் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

பணம் – விலைத் தொடர்பு

  • பணத்துக்கும் பொருள்களின் விலைக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது. ஏனெனில் தற்போது உலகில் தயாரிக்கப்படும் பொருள்களில் 90 விழுக்காடு விற்பனை அல்லது சேவைத்தொழிலை இலக்காகக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.
  • வேளாண்மையிலும் சொந்தத் தேவைக்காக விளைவிப்பதை விட பணப் பயிர்களைஅதிகம் உற்பத்தி செய்யப்படுவது சந்தை மற்றும் பணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.
  • பணத்துக்கும் விலைக்கும் உள்ள தொடர்பு பணவியல் கொள்கையோடு தொடர்புடையது.
  • பண விநியோக வளர்ச்சிக்கும் நீண்ட கால விலை வீழ்ச்சிக்கும் இடையிலான நெருங்கிய உறவினை நாம் காணமுடியும்.
  • ஒரு நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையில் விலைக் கட்டுபாட்டுக்கு முக்கியப் பங்களிப்பு உள்ளது. இந்தியாவில் ரிசர்வ் வங்கி இதனைக் கண்காணித்து வருகிறது.
  • நாடுகளுக்கு இடையிலான பணம் செலாவணி என அழைக்கப்படுகிறது. இந்தியாவின் செலாவணி ரூபாய் என்று அழைக்கப்படுகிறது.
  • உள்நாட்டில் அன்னிய நாட்டுச் செலாவணி வெளிநாட்டுச் செலாவணி என அழைக்கப்படுகிறது.
  • உலக நாடுகளுக்கு இடையிலான செலாவணி அமெரிக்க டாலர் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. இந்த மதிப்பு நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. உலக வணிகத்தின் பெரும்பகுதி அமெரிக்க டாலர் மதிப்பிலேயே நடைபெறுகிறது.
  • பணம் என்பது அதாவது காகிதப்பணம் என்பது ஒரு மதிப்பு ஆகும். எந்த ஒரு பொருள் அல்லது சேவைக்கான கட்டணமாகவும் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதிலும் ஒரு குறிப்பிட்ட நாடு முழுவதும் பொதுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரு சரிபார்க்கப்பட்ட ஆவணம் ஆகும்.
  • இந்தியப் பணத்தில் (இதனைக் கொண்டிருப்பவரிடம் ———- தொகை அளிப்பதற்கு உறுதி அளிக்கிறேன் I promise to pay the bearer the sum of —- rupees) என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உறுதி அளிப்பதாக ஆங்கிலத்தில்ச் பொறிக்கப்பட்டு அதில் அவரது கையொப்பமும் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
  • இதேபோன்று அந்தந்த நாட்டுப் பணத்தில் உயர் அலுவலர் கையொப்பமும் உறுதிமொழியும் இடம் பொற்றிருக்கும்.

  • டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் ‘பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும்’ (The Problem of the rupee and its Solution) என்ற ஆராய்ச்சிக் கட்டுரையின் அடிப்படையில் தான் இந்திய ரிசர்வ் வங்கியின் அடிப்படைச் சட்டம் 1934ல் உருவாக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் பணம் எவ்வாறு அச்சிடப்படுகிறது?

  • இந்தியாவில் 1917-ல்தான் முதன் முதலில் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நோட்டுகள் தயாரித்து வெளியிடப்பட்டன.
  • 1935-ல் பணப் பொறுப்பு அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கி கைக்கு வந்தது. அதன்பிறகு 5000 ரூபாய் நோட்டு பணத்தை அறிமுகப்படுத்தியது.
  • 1940-ல் மீண்டும் ஒரு ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. 1947-ஆம் ஆண்டுவரை ஆறாம் ஜார்ஜின் உருவம் பொறித்த பணமே புழக்கத்தில் இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசால் நோட்டுகள் வெளியிடப்பட்டன.
  • ஆங்கிலேயஅரசு, 1925ல் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக்கில் ஒரு அச்சகத்தை அமைத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க தொடங்கியது.
  • மத்தியப்பிரதேசத்திலுள்ள தேவாஸில் 1974-ல் ஓர் அச்சகம் தொடங்கப்பட்டது. இந்த இரு அச்சகங்களைத் (Security Printing and Minting Corporation of India Ltd.,) தவிர,1990களில் கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூரிலும், மேற்கு வங்காளத்திலுள்ள சல்பானியிலும் ரூபாய் மற்றும் வங்கிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அச்சடிக்க மேலும் இரு அச்சகங்களை இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கியது.
  • எவ்வளவு பணம் அச்சடிக்க வேண்டும் என்பதையும், எப்படிப் பாதுகாப்பாக உரிய இடங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் இந்திய ரிசர்வ் வங்கியே முடிவு செய்கிறது.
  • இங்கு சுமார் 10,000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இலங்கை, பூடான், ஈராக், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கும் ஒப்பந்த அடிப்படையில் அந்தந்த நாட்டுப் பணம் இந்த அச்சகங்களில் அச்சடிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன.
  • பத்தாயிரம் ரூபாய் மதிப்புடைய நோட்டுகள் அச்சடிக்க இந்திய ரிசர்வ் அங்கிக்கு அதிகாரம் இருந்தாலும், தற்போது அதிகபட்சம் இரண்டாயிரம் ரூபாய் மதிப்பு வரையிலான பணத்தை மட்டுமே அச்சடிக்கிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான அந்நியச் செலாவணி மதிப்பு
நாடு செலாவணியின் பெயர் ஒரு (1) அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு (ஜுலை 2018)
இந்தியா ரூபாய் 68.72 ரூபாய்
இங்கிலாந்து பவுண்டு 0.76 பவுண்டு
ஐரோப்பிய ஒன்றியம் யுரோ 1.14 யூரோ
கனடா டாலர் 1.31 டாலர்
ஜப்பான் யென் 111.15 யென்
சீனா யுவான் 6.76 யுவான்
சவுதி அரேபியா ரியால் 3.765 ரியால்
ஆஸ்திரேலியா டாலர் 1.35 டாலர்
மலேசியா ரிங்கிட் 4.05 ரிங்கிட்
பாகிஸ்தான் ரூபாய் 124.2 ரூபாய்
இலங்கை ரூபாய் 159.8 ரூபாய்

பணத்தின் செயல்பாடுகள்

  • பண்டமாற்று முறையினால் உருவாகும் சிக்கல்களுக்கு மாற்றாக பணத்தின் வரவு பெரிதும் உதவி வருகிறது.
  • பணம் என்பது ஒரு பரிமாற்ற ஊடகமாகவும், ஒரு கணக்கின் அலகாகவும் மதிப்புச் சேமிப்பாகவும் மாறுபடும் பண வழங்கீடுக்கான தரப்படுத்தலாகவும் செயல்பட வேண்டும் எதிர்பார்க்கப்படுகிறது.

பரிமாற்ற ஊடகம்

ஒரு நாட்டில் அனைத்துப் பொருள்கள் மற்றும் சேவைகளுக்குப் பணம் தடையின்றி ஏற்கப்பட வேண்டும்.

கணக்கு அலகு

  • ஒரு நாட்டில் அனைத்து நுகர்பொருள்கள், தயாரிப்புகள், சேவைகள் என அனைத்துக்குமான மதிப்பினைக் கணக்கிடுவதில் பணம் பொதுவான, தரப்படுத்தப்பட்ட அலகாக இருக்க வேண்டும்.
  • எடுத்துக்காட்டாக, ஒரு புத்தகத்தின் விலை ₹50 என்றால் அப்புத்தகத்தின் விலை 50 பண அலகுகளுக்கு இனையானது என்று பொருள்.
  • ஒரு நாட்டில் நடைபெறும் நிதி பரிவர்த்தனைகளை அளவிடவும் கணக்குகளாக பராமரிக்கவும் பணம் பயன்படுகிறது.

மதிப்பீட்டினைச் சேமித்தல்

பணத்தினைச் சேமிப்பதன் மூலம் எதிர்காலத்துக்கான வாங்கும் ஆற்றலைச் சேமிப்பதாகும்.

கடன்

விவசாயிகள் தங்களுக்குத் தேவையான விதை, இடுபொருள்கள் மற்றும் செலவுகளுக்காக பருவகாலங்களின்போது கடன் பெறுவதைக் காணலாம். அதேபோல சிறு தொழில்களில் ஈடுபடுபவர்கள், வணிகர்கள் தங்கள் தேவைகளுக்குக் கடன் பெறுவதைக் காணலாம். அதேபோல சிறு தொழில்கலில் ஈடுபடுபவர்கள், வணிகர்கள் தங்கள் தேவைகளுக்குக் கடன் பெறுகிறார்கள். பெரிய தொழில் நிறுவனங்கள்கூட தங்கள் புதிய திட்டங்களுக்காகக் கடன் பெறுகின்றன.

கடன் கிடைக்கப்பெறும் நிறுவனங்கள்

  • முறைப்படி நிதி நிறுவனங்களான நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள்
  • முறைசாரா நிதி நிறுவனங்கள்
  • சுய உதவிக்குழுக்கள் மூலம் பெறப்படும் நுண்கடமைகள் என மூன்று வழிகளில் கடன் பெறப்படுகின்றன.

நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகளைப் பொறுத்தவரை கடனுக்கான வட்டி குறைவு. ஈடு வைக்கப்படும் பொருளுக்கான பாதுகாப்பு அதிகம்.

  • பணம் விநியோகம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
  • 1 = மக்களிடம் புழக்கத்தில் உள்ள பணம் மற்றும் நாணயங்கள் + அனைத்து வணிக , கூட்டுறவு வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள வைப்புத்தொகை + ரிசர்வ் வங்கி வைப்புத்தொகை
  • 2 = ப1 + அஞ்சலகசேமிப்பு வங்கிக் கணக்குகளில் சேமிக்கப்பட்டுள்ள தொகை
  • 3 = ப1 + அனைத்து வணிக , கூட்டுறவு வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள கால வைப்புத்தொகை
  • 4 = ப3 + அஞ்சல் அலுவலகங்களின் மொத்த வைப்புத்தொகை

முறைசாரா நிதி நிறுவனங்கள்

  • முறைசாரா தனியார் நிறுவனங்களை வாடிக்கையாளர்கள் அணுக எளிதாக இருப்பதும் ஏதுவாக உள்ளதும் சாதகமான அம்சங்களாகக் கருதப்படுகிறது.
  • அதே சமயத்தில் அதிக வட்டி, ஈடு வைக்கப்படும் பொருளின் பாதுகாப்பு மற்றும் வசூலிக்கும் முறைகள் ஆகியவற்றில் பல சிக்கல்கள் காணப்படுகின்றன.
  • குறிப்பிட்ட பகுதியில் வாழ்பவர்கள் அல்லது குறிப்பிட்ட தொழிலில் ஈடுபடுபவர்கள் குழுவாக அமைந்து சிறு சேமிப்பில் ஈடுபடுகின்றனர் இவர்கள் சுய உதவி குழுக்கள் எனப்படுகின்றனர்.
  • இவ்வாறு செயல்பாடும் சுயஉதவிக் குழுக்களுக்கு அரசு வங்கிகள் கடனுதவி அளிக்கின்றன. சுய உதவிக்குழுக்கல் நடைபாதை வியாபாரிகள், மீனவர்கள், குறிப்பாகப் பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்குப் பயன் அளிப்பதாக உள்ளது.
  • தமிழ்நாட்டில் 10,612 வங்கிக் கிளைகள் உள்ளன. 2017-2018 நிதியாண்டில் ஏறத்தாழ 15 லட்சம் கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நடைபெறுகிறது.

இவற்றின் சில கூறுகள் கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு – வங்கி புள்ளியியல் தரவுகள்

வங்கிச் செயல்படுகள் (ஏப்ரல் 2017 – மார்ச் 2018) ரூபாய் (தோராயமாக)
பெறப்பட்ட வைப்புத்தொகை 7.17 லட்சம் கோடி
வழக்கப்பட்ட மொத்த கடன் 7.84 லட்சம் கோடி
சிறு குறு நிறுவனங்களுக்கான கடன் 1.40 லட்சம் கோடி
வேளாண்மை உள்ளிட்ட முன்னுரிமைத் துறைகளுக்கான கடன் 3.56 லட்சம் கோடி
நலிவடைந்தோருக்கான கடன் 1.04 லட்சம் கோடி
கல்விக் கடன் 1.67 லட்சம் கோடி
கடன் வைப்புத்தொகை விகிதம் 109.34%

மூலம்: 154வது மாநில அளவிலான வங்கி அதிகாரிகளின் குழு கூட்ட அறிக்கை – 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!