Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Samacheer NotesTnpsc

பண்டைய இந்தியா : செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள் Notes 11th History

11th History Lesson 15 Notes in Tamil

15] பண்டைய இந்தியா : செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

அறிமுகம்

  • வழக்கமான நேர்க்கோட்டு முறையிலான இந்திய வரலாறு, சிந்து நாகரிகம் குறித்த தகவல்களை வழங்கி, பின் வேதகாலத்திற்கு நகர்ந்து, அதன் பின்னர் மகாஜனபதங்கள் குறித்த விளக்கங்களைத் தருகின்றது.
  • ஆனால் சிந்துப் பண்பாட்டின் சரிவுக்குப் பின்னர் பொ.ஆ.மு. 2000 முதல் பொ.ஆ.மு. 600 வரையிலுமான காலகட்டத்தையும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலுமான, அருணாசலப் பிரதேசத்திலிருந்து குஜராத் வரையிலுமான நிலப்பரப்பு முழுவதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொண்டால், பழங்கால இந்தியாவில் பல்வேறு மொழிகளைப் பேசிய பல்வகைப்பட்ட பண்பாடுகளைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்தனர் என்பது தெளிவாக விளங்கும்.
  • இப்பாடம் பிந்தைய ஹரப்பா காலகட்டம், செம்புக்காலம், பெருங்கற்காலம், இரும்புக்காலம், வேதகாலப் பண்பாடுகள் மற்றும் ஆரியர்கள் குறித்து விவரிக்கின்றது.
  • சிந்துப் பண்பாடு குறித்து முந்தைய பாடத்தில் கற்றோம். இப்பாடம் சுமார் பொ.ஆ.மு. 3000த்திற்கும், மகாஜனபதங்கள் தோற்றத்திற்கும் இடையேயான வரலாறு, குறிப்பாக சமூகப் பொருளாதார மாற்றங்கள் குறித்து விளக்குகின்றன.

சான்றுகள்

  • பொ.ஆ.மு. 1900 காலகட்டத்தில் சிந்து நாகரிகம் மறைந்ததைத் தொடர்ந்து இந்திய வரலாறு புதிய கற்காலம், செம்புக்காலம், பெருங்கற்காலம், இரும்புக்காலம், வேதகாலம் ஆகிய பண்பாடுகளைச் சேர்ந்த நாடோடிச் சமூகங்கள், வேட்டையாடும், உணவு சேகரிக்கும் சமூகங்கள், நிரந்தரமற்ற, ஓரளவு நிரந்தரமான இடத்தில் தங்கி வாழ்ந்த வேளாண் – மேய்ச்சல் சமூகங்களைக் கொண்டிருந்தது.
  • இந்திய வரலாற்றில் பொ.ஆ.மு. 3000 முதல் பொ.ஆ.மு. 600 வரையிலான நீண்ட கால வரலாறு தொடர்பாக இருவகைப்பட்ட முக்கிய வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. அவற்றில் ஒன்று அகழ்வாய்வு செய்யப்பட்ட இடங்கள், களிமண் பாண்டங்கள், மக்கிய தாவரங்கள், உலோகப் பொருள்கள் ஆகியன உள்ளடக்கிய சான்றுகளாகும். மற்றொன்று வேதகால இலக்கியங்களாகும். இக்கால கட்டத்திற்கு எழுதப்பெற்ற சான்றுகள் இல்லை. ஏனெனில் வேத இலக்கியங்கள் வழிவழியாக வாய்மொழி மூலம் பயிலப்பட்டு நினைவில் கொள்ளப்பட்டவை ஆகும்.
  • இக்குறிப்பிட்ட காலத்தில் சிந்துப் பண்பாடு சார்ந்த குறியீடுகள் (இவை இன்றளவும் வாசித்து அறியப்படவில்லை) தவிர வேறு எழுத்து முறையை மக்கள் வளர்த்துக்கொள்ளவில்லை.
  • வேத நூல்களில் சொல்லப்பட்டுள்ள பல குழுக்களைச் சேர்ந்த மக்களைப் பற்றிய செய்திகளையும் தொல்லியல் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்ட பண்பாடுகளையும் ஒன்றோடொன்று ஒப்பிட்டு தொடர்புபடுத்துவது எளிதான பணியல்ல.
  • சிந்து நாகரிகத்தைத் தோற்றுவித்தவர்கள் யார் என்பது குறித்தும் பிற தொல்லியல் பண்பாடுகள் குறித்தும் பல கருத்துக்கள் நிலவுகின்றன. இந்தக் காலவெளிக்குள் வெவ்வேறான பண்பாடுகளும், பல்வேறு வகைப்பட்ட வாழ்க்கை முறைகளை மேற்கொண்ட சமூகங்களும் இந்தியாவில் வாழ்ந்தன.
  • தொடக்ககால வேதப் பண்பாடு இந்தியாவின் சில செம்புக்கால பண்பாடுகளின் கூறுகளோடு பொருந்துகிறது. அதைப் போலவே பிற்கால வேதப் பண்பாடு இந்தியாவின் இரும்புக்காலத்தைச் சேர்ந்த ஓவியங்கள் தீட்டப்பட்ட சாம்பல் நிறப் பாண்டப் பண்பாட்டோடு பொருந்தி உள்ளது.
  • சிந்து நாகரிகக் காலத்தில் குறிப்பிட்ட நிலப் பகுதிகளில் மட்டும் நிலவிய நகர்ப்புறம் சார்ந்த பண்பாடுகள் போல் இல்லாமல், இக்காலகட்டத்தில் இந்தியாவின் பல பகுதிகளிலும், வேளாண்மை மற்றும் தொழில்நுட்பங்களின் விரிவாக்கத்தையும் வளர்ச்சியையும் காண முடிகிறது.
  • இக்காலத்தில் , கைவினைப்பொருள் உற்பத்திப் பெருக்கமும் மக்கட்தொகைப் பெருக்கமும் ஏற்பட்டன. இந்தியா முழுவதிலும் ஒரு வலுவான பண்பாட்டு அடித்தளம் உருவாக்கப்பட்டதும் இக்காலகட்டத்திலேதான் ஆகும்.
  • இன்றளவும் வேளாண்மையும் கால்நடை மேச்சலும் ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவின் கிராமக் குடியிருப்புகளுக்கான விரிவான அடித்தளம் இக்காலகட்டத்திலேயே அமைக்கப்பட்டது.

வேதகால இலக்கியங்கள்

  • இந்தியாவின் பழம்பெரும் சமயநூல்களில் வேதங்களும் அடங்கும் (வேதங்கள் ; வித் – தெரிந்துகொள்ளல், வித்யா).
  • வேதங்கள் நான்காகும். அவை ரிக், யஜூர், சாம, அதர்வ வேதங்களாகும். இவற்றில் ரிக் வேதம் பழமையானதாகும். இவை மனப்பாடம் செய்யப்பட்டு வாய்வழி வாயிலாக, தலைமுறை தலைமுறையாக பிராமணர்களால் போதிக்கப்பட்டது.
  • எழுதும் முறை அறிமுகமான பின்னர் பிற்காலத்தில் இவை எழுத்து வடிவம் பெற்றன. பொ.ஆ. 10 – 11 ஆம் நூற்றாண்டுகளில்தான் வேதப்பாடல்கள் முதன் முதலாக எழுதப்பெற்றதாக அறியப்படுகிறது. அப்பாடல்கள் அரசியல், சமூகம், மதம், தத்துவம் சார்ந்த செய்திகளைக் கொண்டிருப்பதால், அவை வரலாறு எழுதுவதற்கான சான்றுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
  • வேதப்பாடல்களின் முக்கியத் தொகுப்புகள் சம்ஹிதைகள் என்றழைக்கப்படுகின்றன. இவற்றில் பழமையானது ரிக் வேத சம்ஹிதை ஆகும். இது பொ.ஆ.மு. 1500க்கும் பொ.ஆ.மு. 1000 க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது.
  • ரிக் வேதம் மொத்தம் 10 காண்டங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் இரண்டிலிருந்து ஏழு வரையிலான காண்டங்கள் முதலில் எழுதப்பெற்றன எனவும், 1, 8, 9, 10 ஆகிய காண்டங்கள் பிற்காலத்தைச் சேர்ந்தவை எனவும் கருதப்படுகின்றன.
  • ஒவ்வொரு சம்ஹிதையும் பிராமணங்கள் என்னும் இணைப்புக் குறிப்புகளைக் கொண்டுள்ளன. இவை பாடல்கள் மற்றும் சடங்குகள் குறித்த விளக்கவுரைகளாகும்.
  • சம்ஹிதைகள் இயற்றப்பட்ட பின்னரே பிராமணங்கள் இயற்றப்பட்டன. இவை சடங்குகள் பற்றிய பாடங்களாகும். இவை சடங்குகளின் மத சமூக முக்கியத்துவத்தை விளக்குகின்றன.
  • ஒவ்வொரு பிராமணமும், ஓர் ஆரண்யகம், ஓர் உபநிடதம் கொண்டுள்ளது. ஆரண்யகங்கள் என்பவை காடுகளில் வாழும் முனிவர்கள் ரகசியமாக மேற்கொள்ள வேண்டிய மந்திரச் சடங்குகள் குறித்த குறிப்புகளைக் கொண்டுள்ளன. உபநிடதங்கள் தத்துவக் கருத்துகளையும் வினாக்களையும் கொண்டுள்ளன.
  • யஜூர், சாம, அதர்வ வேதங்கள் சற்றே பிற்காலத்தைச் சேர்ந்தவையெனக் கணக்கிடப்பட்டுள்ளன. யஜூர், சாம, அதர்வ வேதங்களின் சம்ஹிதைகளும் இவ்வேதங்களோடு இணைக்கப்பட்டுள்ள பிராமணங்களும், ஆரண்யகங்களும் உபநிடதங்களும் வேத காலத்தின் இறுதியில் இயற்றப்பட்டவையாகும்.
  • சாமவேதம் இசைப்பாடல்களாக அமைந்துள்ளது. யஜூட் வேதம் சடங்குகளையும் பாடல்களையும் கொண்டுள்ளது. அதர்வ வேதமானது, மாய மந்திர ஜாலங்கன் அடங்கியது.

ஜென்ட் அவெஸ்தா:

ஜென்ட் அவெஸ்தா எனப்படும் இப்பாரசீக / ஈரானிய நூல் ஜொராஸ்டிரிய மதத்தைச் சேர்ந்த நூலாகும். இந்தோ –ஈரானிய மொழிகளைப் பேசிவந்த மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு, அவர்களின் கடவுள்கள் குறித்து இந்நூல் பல செய்திகளைக் கூறுகிறது. இந்தியாவின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளைப் பற்றிய குறிப்புகளும் இந்நூலில் உள்ளன. இந்நூலில் இடம் பெற்றுள்ள சொற்களோடு மொழி ஒப்புமை கொண்டுள்ளன. இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியே அமைந்திருந்த ஆரியர்களின் தொடக்ககால வாழிடங்கள் பற்றி அறிந்துகொள்ள ஏதுவான துணைச்சான்றுகளை இந்நூல் கொண்டுள்ளது.

இந்தியாவில் ஆரியருக்கு முந்தைய – ஹரப்பாவிற்கு பிந்தைய, செம்பு காலகட்ட பண்பாடுகள்

  • ஹரப்பா பண்பாட்டிற்கு முந்தைய பண்பாடுகளே இந்தியாவின் மிகப் பழமையான செம்புக்காலப் பண்பாடுகளாகும். இவை முதிர்ந்த நிலை ஹரப்பா நாகரிக காலகட்டம் தொடங்குவதற்கு முன்பும் அதற்குப் பின்னரும் தொடர்ந்து நீடித்தன.
  • இந்தியாவில் காணப்படும் பிற செம்புக்காலப் பண்பாடுகளும் இதன் சமகாலத்தவை. ஹரப்பா பண்பாட்டின் சரிவுக்குப் பின்னரும்கூட அவை தொடர்ந்தன.
  • இந்தியாவின் புதிய கற்காலப் பண்பாடுகள் சில ஹரப்பா பண்பாட்டின் சமகாலத்தவையாகவும், அதற்குப் பின்னரான காலங்களைச் சேர்ந்தவையாகவும் உள்ளன.
  • முதிர்ந்த நகர்ப்புறம் சார்ந்த ஹரப்பா பண்பாட்டைப் போல் இல்லாமல் , இச்செம்புக்காலப் பண்பாடுகள் பொதுவாக கிராமப்புற தன்மை கொண்டவையாகவும், வேளாண்மை மற்றும் மேய்ச்சல் தொழில் பண்பாடுகளாகவும் இருந்தன.
  • செம்புக்காலப் பண்பாட்டினைச் சேர்ந்த மக்கள் செம்பினால் செய்யப்பட்ட பொருள்களையும், கற்களாலான கூரான கருவிகளையும் மட்பாண்டங்களையும் பயன்படுத்தினர். மேலும், பிற்காலத்தில் குறைந்த தரம் கொண்ட இரும்பையும் பயன்படுத்தியுள்ளனர்.
  • இக்கால மக்கள் நிலையற்ற அல்லது ஓரளவு நிலையான குடியிருப்புகளில் வாழ்ந்தார்கள் என்பதற்கு இந்தியாவின் மேற்கு, வடமேற்குப் பகுதிகளின் தொடக்ககால வேளாண் பண்பாடுகள், புதிய கற்காலப் பண்பாடுகளைக் காட்டிலும் செம்புக்காலப் பண்பாடுகளுடனே அதிகம் தொடர்புடையவையாகும்.
  • செம்புக்காலப் பண்பாட்டினைச் சேர்ந்த மக்கள் வேளாண்மை செய்தார்கள். விலங்குகளைப் பழக்கப்படுத்தினார்கள். எருது, எருமை, வெள்ளாடு, செம்மறியாடு, பன்றி ஆகியவற்றை வளர்த்தார்கள்.
  • ஆமைகளும் கோழிகளும் இவர்களின் வாழ்விடங்களில் இருந்தன என்பதற்குச் சான்றுகள் உள்ளன. இவர்கள் வாழ்ந்த வீடுகள் கல்லாலும், சுடாத மண் கற்களாலும், களிமண்ணாலும், மரப்பொருள்களினாலும் கட்டப்பட்டவையாகும்.
  • இவற்றின் சுவர்கள் மூங்கில் தட்டிகளால் ஆனது. தானியங்களைச் சேகரித்து வைக்கும் குதிர்கள் கண்டறியப்பட்டுள்ளன, மக்கள் கருப்பு மற்றும் சிவப்பு நிற மட்பாண்டங்களையும், செந்நிறத்தின் மீது கருமை நிறை ஓவியம் தீட்டிய மட்பாண்டங்களையும் பயன்படுத்தினர்.
  • இவ்விடங்களில் அதிகமான எண்ணிக்கையில் செம்பினாலான பொருள்கள் கிடைக்கின்றன. செம்பினாலான தட்டையான கோடாரிகள், வளையல்கள், மோதிரங்கள், வெட்டுக்கத்திகள், உளிகள், கூராக்கப்பட்ட அம்பு முனைகள், கத்திகள், பொருத்து குழியில்லா கோடாரிகள் ஆகியவற்றை மக்கள் பயன்படுத்தினர்.

பழுப்பு மஞ்சள்நிற பாண்டப் பண்பாடு

  • ஹரப்பா பண்பாட்டிற்கு முந்தைய பண்பாடுகளே இந்தியாவின் மிகப் பழமையான செம்புக்காலப் பண்பாடுகளாகும். இவை முதிர்ந்த நிலை ஹரப்பா நாகரிக காலகட்டம் தொடங்குவதற்கு முன்பும் அதற்குப் பின்னரும் தொடர்ந்து நீடித்தன.
  • இந்தியாவில் காணப்படும் பிற செம்புக்காலப் பண்பாடுகளும் இதன் சமகாலத்தவை. ஹரப்பா பண்பாட்டின் சரிவுக்குப் பின்னரும்கூட அவை தொடர்ந்தன.
  • இந்தியாவின் புதிய கற்காலப் பண்பாடுகள் சில ஹரப்பா பண்பாட்டின் சமகாலத்தவையாகவும், அதற்குப் பின்னரான காலங்களைச் சேர்ந்தவையாகவும் உள்ளன.
  • முதிர்ந்த நகர்ப்புறம் சார்ந்த ஹரப்பா பண்பாட்டைப் போல் இல்லாமல், இச்செம்புக்காலப் பண்பாடுகள் பொதுவாக கிராமப்புற தன்மை கொண்டவையாகவும், வேளாண்மை மற்றும் மேய்ச்சல் தொழில் பண்பாடுகளாகவும் இருந்தன.
  • செம்புக்காலப் பண்பாட்டினைச் சேர்ந்த மக்கள் செம்பினால் செய்யப்பட்ட பொருள்களையும், கற்களாலான கூரான கருவிகளையும் மட்பாண்டங்களையும் பயன்படுத்தினர்.
  • மேலும், பிற்காலத்தில் குறைந்த தரம் கொண்ட இரும்பையும் பயன்படுத்தியுள்ளனர். இக்கால மக்கள் நிலையற்ற அல்லது ஓரளவு நிலையான குடியிருப்புகளில் வாழ்ந்தார்கள் என்பதற்கு இந்தியாவின் மேற்கு, வடமேற்குப் பகுதிகளின் தொடக்ககால வேளாண் பண்பாடுகள், புதிய கற்காலப் பண்பாடுகளைக் காட்டிலும் செம்புக்காலப் பண்பாடுகளுடனே அதிகம் தொடர்புடையவையாகும்.
  • செம்புக்காலப் பண்பாட்டினைச் சேர்ந்த மக்கள் வேளாண்மை செய்தார்கள். விலங்குகளைப் பழக்கப்படுத்தினார்கள். எருது, எருமை, வெள்ளாடு, செம்மறியாடு, பன்றி ஆகியவற்றை வளர்த்தார்கள்.
  • ஆமைகளும் கோழிகளும் இவர்களின் வாழ்விடங்களில் இருந்தன என்பதற்குச் சான்றுகள் உள்ளன. இவர்கள் வாழ்ந்த வீடுகள் கல்லாலும், சுடாத மண் கற்களாலும், களிமண்ணாலும், மரப்பொருள்களினாலும் கட்டப்பட்டவையாகும். இவற்றின் சுவர்கள் மூங்கில் தட்டிகளால் ஆனது.
  • தானியங்களைச் சேகரித்து வைக்கும் குதிர்கள் கண்டறியப்பட்டுள்ளன. மக்கள் கருப்பு மற்றும் சிவப்பு நிற மட்பாண்டங்களையும், செந்நிறத்தின் மீது கருமை நிற ஓவியம் தீட்டிய மட்பாண்டங்களையும் பயன்படுத்தினர்.
  • இவ்விடங்களில் அதிகமான எண்ணிக்கையில் செம்பினாலான பொருள்கள் கிடைக்கின்றன. செமினாலான தட்டையான கோடாரிகள், வளையல்கள், மோதிரங்கள், வெட்டுக்கத்திகள், உளிகள், கூராக்கப்பட்ட அம்பு முனைகள், கத்திகள், பொருத்து குழியில்லா கோடாரிகள் ஆகியவற்றை மக்கள் பயன்படுத்தினர்.

பழுப்பு மஞ்சள்நிற பாண்டப் பண்பாடு

  • வட இந்தியாவில், செம்புக்காலப் பண்பாட்டுடன் தொடர்புடைய பழுப்புமஞ்சள்நிற மட்பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இம்மட்பாண்டங்கள் சிவப்பு நிற அடிப்புறத்தின் மேல் பழுப்புமஞ்சள் நிறத்தைக் கொண்டுள்ளதாகக் காட்சியளிக்கும். (மட்பாண்டங்களைத் தொட்டவுடன் பழுப்புநிறம் விரல்களில் ஒட்டிக்கொள்ளும்.)
  • எனவேதான் இவை பழுப்புமஞ்சள்நிற மட்பாண்டங்கள் என்றழைக்கப்படுகின்றன. இவை கருப்புநிற ஓவியங்களைக் கொண்டுள்ளன. பழுப்புமஞ்சள்நிறை மட்பாண்டங்களில் ஜாடிகள், கொள்கலன்கள், தட்டுக்கள் அகலமான கிண்ணங்கள் ஆகிய வகைகள் உள்ளன.

  • பழுப்புமஞ்சள்நிற மட்பாண்டப் பண்பாட்டின் காலம் பொ.ஆ.மு. 2600 முதல் பொ.ஆ.மு. 1200 வரையாகும், சிந்து-கங்கைச் சமவெளிப் பகுதிகளில் காணப்படும் இப்பண்பாடு தொடக்க வேதகால பண்பாட்டோடு தொடர்புகளைக் கொண்டுள்ளது. இப்பண்பாடு நலிந்த ஹரப்பா பண்பாடாக பார்க்கப்படுகிறது.
  • சில அறிஞர்கள் இப்பண்பாட்டிற்கும் ஹரப்பா பண்பாட்டிற்கும் இடையே எவ்வித உறவும் இல்லை எனக் கருதுகின்றன. பழுப்புமஞ்சள்நிற மட்பாண்டப் பண்பாடு தொடர்பான ஆய்விடங்களில் செம்பினால் செய்யப்பட்ட உருவங்களும் ஏனைய பொருள்களும் அதிகம் கிடைப்பதால், இது ‘செம்புப் பொருட்குவியல் பண்பாடு’ என்றும் அறியப்படுகிறது. இப்பண்பாடு ஒரு கிராமியப் பண்பாடாகும். இப்பண்பாட்டு இடங்களில் நெல், பார்லி, பட்டாணி, காய்வகைகள் ஆகியன விளைவிக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.
  • நாட்டுப்புற வாழ்க்கையை மேற்கொண்ட இப்பண்பாட்டு மக்கள் எருது, பசு, வெள்ளாடு, செம்மறியாடு, குதிரை, நாய், பன்றி ஆகியவற்றை வளர்த்துள்ளார்கள்.
  • கிராமங்கள் மரதட்டிகளின் மேல் களிமண் பதிக்கப்பட்ட சுவர் மேல்கூரை கொண்ட வீடுகளைக் கொண்டிருந்தன. செம்பிலும், சுட்ட களிமண்ணிலும் செய்யப்பட்ட அணிகலன்களைப் பயன்படுத்திய அவர்கள் விலங்குகளின் சுடுமண் உருவங்களையும் செய்தனர்.

தென் இந்தியச் செம்புக்காலப் பண்பாடுகள்

  • ஒரு முழுமை பெற்ற செம்புக் கற்காலப் பண்பாடு தென்னிந்தியப் பகுதிகளில் நிலவியதற்கான சான்றுகள் இல்லை. சில இடங்களில் துளையிட்ட பாண்டங்களும், கெண்டி வடிவிலான பாண்டங்களும் கிடைத்துள்ளன.
  • செம்பினாலும் வெண்கலத்திலுமான கலிகள், கோடரிகள் இங்கு கிடைக்கின்றன. இப்பகுதிகளில் கல்லினாலான கருவிகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் இக்கால மக்களின் வாழ்வாதாரமாக இருந்துள்ளன. சிறுதானியங்கள், பயறு வகைகள், கொள்ளு போன்றவற்றைச் சாகுபடி செய்த இம்மக்கள் பழங்களையும் இலைகளையும் கிழங்குகளையும் சேகரித்து உண்டு வாழ்ந்தனர்.

வட இந்தியாவில் இரும்புக்காலம்

  • வட இந்தியாவின் இரும்புக் காலமானது ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்ட பண்பாட்டோடு ஒத்துப்போகிறது. ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல்நிற மட்பாண்டப் பண்பாட்டின் காலம் பொ.ஆ.மு. 1100 முதல் பொ.ஆ.மு. 800 வரையாகும்.
  • வட இந்தியாவில் ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டப் பண்பாட்டோடு ஒத்துப்போகிறது. ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல்நிற மட்பாண்டப் பண்பாட்டின் கால பொ.ஆ.மு. 1100 முதல் பொ.ஆ.மு. 800 வரையாகும்.
  • வட இந்தியாவில் ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல்நிற மட்பாண்டங்கள் கிடைப்பதாக 1000க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் அதிகமானவை கங்கை – யமுனை சமவெளிப் பகுதிகளில் உள்ளன.
  • மத்திய இந்தியாவிலும் கிழக்கு கங்கைப் பகுதியிலும் கருப்பு – சிவப்பு மட்பாண்டப் பண்பாட்டிற்குப் பின்னர் இம்மட்பாண்டப் பண்பாடு தோன்றியது எனலாம்.
  • இக்கால மட்பாண்டங்களில் நேர்த்தியான சாம்பல் நிறத்தில் வடிவியல் வடிவங்கள் வரையப்பட்டுள்ளன. ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டங்கள் தொடக்ககால அரசியல் உருவாக்க காலத்தைச் சேர்ந்தவை.
  • வேதநூல்கள் மூலம் அறியப்படும் குருபாஞ்சால அரசுகளோடு இவை தொடர்பு கொண்டவையாகும். ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல்நிற மட்பாண்டப் பண்பாட்டைத் தொடர்ந்து வட இந்தியாவில் மெருகேற்றப்பட்ட கருப்புநிற மட்பாண்டப் பண்பாடு தோன்றியது. இது மௌரியர் காலத்து மகாஜனபதங்களோடு தொடர்புடையதாகும்.
  • ஓவியம் தீட்டிய சாம்பல்நிற மட்பாண்டங்கள் கிடைக்கின்ற இடங்கள் நாட்டுப்புற வாழ்வையும் வேளாண்மையில் ஏற்பட்ட வளர்ச்சியையும் வெளிப்படுத்துகின்றன. இக்காலகட்டத்தின் குடியிருப்புகள் அளவில் பெரிதானவை. அவை வட இந்தியப் பகுதிகளில் ஏற்பட்ட பெருமளவிலான மக்கள்தொகைப் பெருக்கத்தைக் காட்டுகின்றன.
  • ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்ட பண்பாடு வட இந்தியாவின் இரும்புக் காலப் பண்பாடாக கணக்கிடப்படுகிறது. தென் இந்தியாவில் இரும்புக்காலம் ஈமச் சின்னங்களுடன் கூடிய பெருங்கற்காலப் பண்பாடாக உள்ளது.

தமிழகத்தில் பெருங்கற்காலம் / இரும்புக்காலம்

  • தமிழகத்தில் புதிய கற்காலத்தில் பழக்கத்தில் இருந்த இறந்தவர்களைப் புதைக்கும் முறை பெருங்கற்காலத்திலும் தொடர்ந்தது. ஈமச் சடங்கின்போது பெரிய கற்பலகைகளைப் பயன்படுத்தி வட்ட வடிவம், குத்துக்கல் எனப் பலவகையான கல்லறைகளை உருவாக்குதல் பெருங்கற்காலப் பண்பாட்டுக் கூறாக அறியப்படுகிறது. இத்தகைய பெருங்கற்காலச் சான்றுகள் தமிழகத்தில் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன.
  • தாழியில் புதைக்கும் வழக்கம் மற்றொரு முறையாகும். இதற்கான சான்றுகள் ஆதிச்சநல்லூரில் (தற்போதைய தூத்துக்குடி மாவட்டம்) அகழ்ந்தெடுக்கப்பட்டன.
  • தமிழகத்தில், இறந்தவர்கள் புதைக்கப்பட்ட புதைமேடுகளில் மட்டுமே கருப்புநிற மட்பாண்டங்கள் அதிகம் கிடைக்கின்றன. அக்கால மக்கள் வாழ்ந்த குடியிருப்பு பகுதிகளில் அவை காணப்படவில்லை. முதுமக்கள் தாழியைப் பொறுத்தமட்டில் பெரும்பாலும் கற்கள் பயன்படுத்தப்படவில்லை. இருப்பினும் முதுமக்கள் தாழிகள் பெருங்கற்காலத்தவை என்றே வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • ஏனெனில், மட்பாண்டங்கள், இரும்புப் பொருள்கள், மணிக்கற்கள் போன்ற ஈமக்காரியங்களில் பயன்படுத்திய பொருள்கள் பெருங்கற்காலக் கல்லறைகளில் காணப்படும் பொருள்கள் போன்றே உள்ளன.
  • பெருங்கற்கால ஈம நடைமுறைகள் பொ.ஆ. இரண்டு – மூன்றாம் நூற்றாண்டுகள் வரை தொடர்ந்தாக மதிப்பிடப்படுகிறது. இக்காலகட்டத்தில் அசோகர் பிராமி எழுத்து முறை போன்ற தமிழ் பிராமி எழுத்துமுறை இருந்துள்ளது என்பது கொடுமணல் (ஈரோடு மாவட்டம்) அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • பெருங்கற்கால மரபு பிந்தைய நூற்றாண்டுகளில் தொடர்ந்திருப்பதற்கான சான்றுகளும் காணப்படுகின்றன. சங்க காலம் வரையிலும் இதுபோன்ற ஈமக்குழிகள் மக்களால் நினைவு கூறப்பட்டுள்ளன.
  • வைகை ஆற்றுப்படுகையின் மேல்பகுதிகளில் காணப்பட்ட பழைய காலத்தைச் சேர்ந்த நான்கு நடுகற்கள் தமிழ் பிராமி எழுத்துகளுடன் காணப்படுகின்றன. இவை ஏறத்தாழ பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டு அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம்.
  • ஆநிரை கவர்தல் தொடர்பாகச் சங்க இலக்கியங்களில் விவரிக்கப்படும் நடுகல் நடும் மரபினை நிறுவும் சான்றுகளாக இந்த நடுகற்கள் காணப்படுகின்றன. இதன் காரணமாக, சங்க காலம் என்பது பொ.ஆ.மு. முதல் நூற்றாண்டு அல்லது அதற்குச் சற்று முன்னதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
  • போரில் இறந்த வீரர்கள் நினைவாக நடுகல் நடும் மரபு ஈமக் குத்துக்கல் மரபின் தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது. ஈமக் குத்துக்கல், நினைவுக்கல், கல்திட்டை போன்றவை தமிழகத்தில் காணப்படும் பெருங்கற்கால ஈமச்சின்னங்களாகும்.
  • கருப்பு, சிவப்பு வண்ண மட்கலன்கள், மனித எலும்புச் சான்றுகள் மற்றும் இரும்புப் பொருட்களுடன் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி அருகில் உள்ள வடமலைக்குண்டா எனும் இடத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகள் பழமையான குத்துக்கல் திருப்பூர் மாவட்டம் சிங்காரிபாளையம் குந்தலம் அருகே நடந்த அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது; இது, உப்பாறு நதிக்கரையில் பண்டைய கால மனிதர்களின் வாழிடங்கள் இருந்ததைச் சுட்டிக்காட்டுகிறது.

தமிழகத்தில் பெருங்கற்கால அகழ்வாய்விடங்கள்

ஆதிச்சநல்லூர்

ஆதிச்சநல்லூர் திருநெல்வேலியிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. 1876ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த இயற்கைவியலாளரும், இன வரைவியலாளருமான ஆண்டிரு ஜாகர் ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வை மேற்கொண்டார். அங்கிருந்து சுடப்பட்ட மட்பாண்டங்கள் பல அளவுகளிலும் வடிவங்களிலுமான பாத்திரங்கள் ஆகியவற்றின் மாதிரிகளையும் கணிசமான எண்ணிக்கையில் இரும்புக் கருவிகள், ஆயுதங்கள், பெருமளவிலான எலும்புகள், மண்டையோடுகள் ஆகியவற்றையும் தன்னோடு எடுத்துச் சென்றால். தற்போது அவையனைத்தும் பெர்லின் அருங்காட்சியகத்தில் உள்ளன.

  • இதனைத் தொடர்ந்து, அன்றைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரான ஏ.ஜே.ஸ்டூவர்ட், புகழ்பெற்ற மொழியியல் அறிஞரான ராபர்ட் கால்டுவெல் ஆகிய இருவரும் ஆதிச்சநல்லூர் சென்றனர்.
  • அப்பகுதியில் படிகக் கற்கள் நிறைந்திருப்பதைக் கண்டனர். உடனடியாக, கற்களை வெட்டியெடுப்பது அங்கு தடை செய்யப்பட்டு, அலெக்ஸாண்டர் ரீ என்பாரின் மேற்பார்வையில் அகழ்வாய்வுப் பணிகள் தொடங்கின. தன்னுடைய கண்டுபிடிப்புகள் தொடர்பாக புகைப்படங்களோடு கூடிய விரிவான அறிக்கையைத் தயார் செய்து, இந்திய தொல்லியல் துறையின் (ASI) 1902 – 03 ஆண்டறிக்கையில் வெளியிட்டார்.
  • சற்றேறக்குறைய நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், இந்தியத் தொல்லியல் துறை மேலும் ஒரு அகழ்வாய்வை இங்கு நடத்தியது. பல புதிய செய்திகள் கண்டறியப்பட்டன. அதன் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

ஆதிச்சநல்லூரிலுள்ள புதைமேட்டிலிருந்து கிடைத்தவை

  • அதிக எண்ணிக்கையில் கிடைக்கும் பல்வகைப்பட்ட தாழிகளும் மட்பாண்டங்களும்
  • ஆணிகள், ஆயுதங்கள் உள்ளிட்ட இரும்புக் கருவிகள் (கத்தி, வாள், ஈட்டி, அம்பு), சில கல்மணிகள், ஒரு சில தங்க நகைகள்
  • வெண்கலத்தால் செய்யப்பட்ட வீட்டு விலங்குகளான எருமை, வெள்ளாடு, செம்மறியாடு, சேவல், காட்டு விலங்குகளான புலி, மிளா (மான் வகை), யானை ஆகியன.
  • துணி, மரப் பொருள்களின் எச்சங்கள்

வெண்கலப் பொருள்களின் மீதும் அணிகலன்களின் மீதும் விலங்கு உருவங்களைப் பொறிப்பது பழங்கால கைவினைத் தொழில் நுட்பத்தைக் குறிப்பதாகும். (கால்டுவெல் இவ்விடத்திற்கு வந்திருந்தபோது செம்பிலான வளையல் ஒன்றையும் கண்டெடுத்தார்) மட்பாண்டங்கள் செய்வதிலும் பித்தளையை உருவாக்குவதிலும், நெசவு , கல், மர வேலைப்பாடுகளிலும் ஆதிச்சநல்லூர் மக்கள் சிறந்து விளங்கினர். நெல் மற்றும் பிற தானியங்களின் உமியும் கண்டெடுக்கப்பட்டது. இத்தானியங்கள் அக்காலத்தில் புழக்கத்திற்கு வந்துவிட்டதை இது குறிக்கின்றது. போர்களிலும் விலங்குகளை பலி கொடுக்கும்போதும் பயன்படுத்தப்பட்ட கருவிகளும் கண்டெடுக்கப்பட்டன. இது ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் வேத மதங்களைப் பின்பற்றியவர்கள் அல்ல என கால்டுவெல்லை எண்ண வைத்தது.

பையம்பள்ளி

பையம்பள்ளி, வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவைச் சேர்ந்த கிராமமாகும். 1960களில் இந்தியத் தொல்லியல் துறை பெருங்கற்காலத்தோடு தொடர்புடைய இவ்விடத்தில் அகழ்வாய்வை நடத்தி கருப்பு மற்றும் சிகப்பு நிற மட்பாண்டங்களை வெளிக் கொணர்ந்தது. மேலும் இப்பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான ஈமத் தாழிகளும் கண்டறியப்பட்டன. இப்பண்பாட்டின் காலம் ரேடியோ கார்பன் பரிசோதனை மூலம் பொ.ஆ.மு 1000 என்று கணிக்கப்பட்டுள்ளது.

கொடுமணல்

  • ஈரோட்டிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் , காவிரியாற்றின் கிளை நதியான நொய்யல் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது கொடுமணல். 1980களிலும் 1990 களிலும் தொடர்ந்து இங்கு அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
  • அண்மை அகழ்வாய்வு 2012இல் நடைபெற்றது. பழங்கால மக்கள் வாழ்விடங்களிலும், பெருங்கற்காலப் புதை மேடுகளிலும் மட்பாண்டங்கள், ஆயுதங்கள், கருவிகள், அணிகலன்கள், மணிகள் குறிப்பாக மொகஞ்சதாரோ அகழ்வாய்வில் கண்டறியப்பட்டதைப் போன்ற செம்மணிக்கற்கள் ஆகியவை அகழ்ந்தெடுக்கப்பட்டன.
  • செம்மணிக் கற்கள் இப்பகுதியைச் சார்ந்தவை அல்ல என்பதால் தற்போது கொடுமணலில் கண்டெடுக்கப்பட்டுள்ள செம்மணிக்கற்கள் வேறு பகுதிகளிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம்.
  • சங்க நூலான பதிற்றுப்பத்தில் சேர அரசனுக்குச் சொந்தமான கொடுமணம் என்ற ஊர் அங்கு கிடைக்கும் விலை மதிப்புமிக்க கற்களுக்காகப் புகழப்படுகிறது.
  • சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் கொடுமணம் தான் இன்றைய கொடுமணல் எனச் சில தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இங்கு ரோமானிய நாணயக் குவியல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், ரோமப் பேரரசிற்கு விலை மதிப்புமிக்க கற்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் இவை இப்பகுதியை வந்தடைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

  • சிப்பிகள், வளையல்கள், உலைக்கள எச்சங்கள், சூளைச் சாம்பல், தமிழ் பிராமி பொறிப்புகளைக் கொண்ட மட்பாண்டக் குவியல்கள் போன்றவை இங்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட ஏனைய பொருள்களாகும்.
  • ஈமக் குழிகள், ஈமத் தாழிகள், கற்படுக்கைப் புதைப்பு எனப் பலவகைப்பட்ட புதைக்கும் முறைகள் கொடுமணலில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவற்றோடு மட்பாண்டங்களின் மீது பொறிக்கப்பட்டிருக்கும் சில மனிதர்களின் பெயர்கள் பல்வேறு இனக் குழுக்களைச் சேர்ந்த மக்கள் இங்கு வாழ்ந்ததைச் சுட்டுகின்றன.
  • மட்பாண்டங்களின் மீது பொறிக்கப்பட்டிருக்கும் வண்ணக் கலைகள் மக்களைக் குறித்தும் அவர்தம் நடவடிக்கைகள் குறித்தும் பல தகவல்களை தருகின்றன. ஒரு புதைகுழி அருகே காணப்படும் நடுகல் பெருங்கற்காலத்தைச் சேர்ந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது.
  • கொடுமணல் அகழ்வாய்வில் கிடைத்தவை சங்கத் தொகை நூல்கள் காலத்தைச் சேர்ந்தவையாகும் (பொ.ஆ.மு. இரண்டாம் நூற்றாண்டு – பொ.ஆ. இரண்டாம் நூற்றாண்டு) என எ.சுப்பராயலு கூறுகிறார்.

ஆரியர்களும் ரிக் வேதகால சமூகமும்

இதுவரை நாம் பிற்கால ஹரப்பா பண்பாடு, செம்புக்காலப் பண்பாடு, ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல்நிற மட்பாண்டப் பண்பாடு ஆகியன குறித்து பார்த்தோம், இனி வேதநூல்களிலிருந்து பெறப்பட்ட சான்றுகள் குறித்து நோக்குவோம். பொருட் பண்பாடுகளைப் பற்றி மட்டுமே தெரியப்படுத்தும் தொல்லியல் இடங்களைப் போலல்லாமல், வேதங்கள், மக்களின் இனக்குழு மற்றும் பண்பாட்டு அடையாளங்களைப் பற்றி பேசுகின்றன. வேதங்களில் காணப்படும் குறிப்புகளின் காரணமாக, தொடக்ககால இந்திய வரலாற்றில், ஆரியர்கள் குறித்து எழும் விவாதங்கள் முக்கியத்துவம் கொண்டவையாக ஆகியுள்ளன.

ஆரியர்கள்

  • ஐரோப்பியர்கள் இந்தியாவில் காலனியாதிக்கம் செலுத்தத் தொடங்கிய பின்னரே இந்திய வரலாற்றை எழுதும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்கள் இந்தியாவின் வரலாறு, தொல்லியல் ,இலக்கியச் சான்றுகளையும், இந்திய மக்களின் வாய்மொழி மரபுகளையும் தொகுத்தனர்.
  • அப்போது ஆசியா, ஆப்பிரிக்கா கண்டங்கள் ஐரோப்பிய ஆட்சி அதிகாரத்தின் கீழ் இருந்தன. இக்காலகட்டத்தில்தான் காலனியச் சூழலில் காலனியாளர்கள் பயன்படுத்திக் கொள்வதற்காக, ‘ஆரியர்’ போன்ற சில கருத்தாக்கங்கள் உருவாக்கப்பட்டன.
  • இக்காலகட்டத்தில்தான் மக்களை வகைப்படுத்துவதற்கும், பிரித்தறிவதற்கும் ‘இனம்’ என்னும் கோட்பாடு பரவலாக்கப்பட்டது. இவற்றில் ஒரு சில கருத்துக்கள் காலனியகால இனவெறிக் கருத்துக்களை எதிரொலிப்பதாக இருந்தன. ‘ஆரியர் கருத்தியல்’ நீலநிறக் கண்களையுடைய வெள்ளையின மக்களோடு இணைக்கப்பட்டு பின்னர் ஐரோப்பியரோடு தொடர்புபடுத்தப்பட்டது. இந்த ஆரியக் கோட்பாட்டை நாஜிகள் தங்கள் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டனர். இது இறுதியில் மாபெரும் இனஅழிப்புக்கு இட்டுச் சென்றது.
  • ஆரியர் என்ற சொல் இனத்தைக் குறிக்கவில்லை எனவும், ஆனால் இந்தோ-ஆரிய மொழிகளைப் பூர்விகமாகப் பேசுபவர்களையே குறிக்கிறது எனவும் அண்மைக்கால ஆய்வுகள் நிறுவியுள்ளன.
  • ரிக் வேதம் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டிருந்தாலும், முண்டா மற்றும் திராவிட மொழிகளைச் சேர்ந்த சொற்கள் அதில் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது முந்தையகால மக்களுடனான பண்பாட்டுக் கலப்புகளைக் குறிக்கிறது.
  • ஆரியர்கள் பழக்கப்படுத்தப்பட்ட குதிரைகள் பூட்டிய தேர்களைப் பயன்படுத்தினார்கள் என்பது ரிக் வேதத்தின் மூலம் உறுதியாகிறது. அவற்றின் சக்கரங்கள் ஆரக்கால்களைக் கொண்டிருந்தன.
  • ஆரியர்கள் வில்லையும் அம்பையும் பயன்படுத்தினர். அவர்கள் வேளாண்மை, கால்நடை மேய்த்தல் ஆகிய தொழில்களைச் செய்தனர். இறந்தவர்களைப் புதைக்கவும் எரிக்கவும் செய்தனர். இந்தோ-ஆரிய மொழிகளைப் பேசிய இவர்களிடையே சோமபானம் அருந்தும் பழக்கமும், நெருப்பைப் புனிதமாக நினைத்து வழிபடுவதும் பரவலாக இருந்துள்ளது.
  • இந்தோ-ஐரோப்பிய, இந்தோ –ஆரிய மொழிகளின் பிறப்பிடம் எது என்பது இன்றளவும் விவாதத்திகுரியதாகவே உள்ளது. ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து குடிபெயர்ந்து இந்தியாவிற்கு வந்தனர் என்பது பல அறிஞர்களின் கருத்தாகும்.
  • பல்வேறு காலகட்டங்களில் ஆரியர்கள் அலையலையாக இந்தியாவிற்கு வந்தனர் என்றும் நம்பப்படுகிறது. இக்கருதுகோளுக்கு ஆதரவாகப் பல சான்றுகள் காணப்படுகின்றன. ஆரியர்களின் பண்பாட்டுக் கூறுகள் பரவியுள்ள கிழக்கு ஐரோப்பிய, மத்திய ஆசியப் பகுதிகள் புவியியல் ரீதியில் இந்தியா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பியப் பகுதிகளோடு இணைந்துள்ளன.
  • கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியா, கருங்கடலுக்கு வடக்கேயுள்ள பகுதிகளே அறிஞர்களால் இப்புக்கொள்ளப்பட்ட ஆரியர்களின் தாயகமாகும். ‘பாக்ட்ரியா மார்ஜினா தொல்லியல் வளாகம்’ ஆரியப் பண்பாட்டோடு நெருங்கிய தொடர்புடையதாகும். இதனுடைய காலம் பொ.ஆ.மு. 1900 முதல் பொ.ஆ.மு. 1500 ஆகும்.
  • இந்தோ –ஐரோப்பிய மொழிகள் பற்றிய குறிப்புகள் இன்றைய நவீன ஈராக் பகுதியில் கண்டறியப்பட்ட பொ.ஆ.மு, 2200 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது. வேதகால கடவுள்களின் பெயர்களைப் போலுள்ள பெயர்களைக் குறிப்பிடும் அனதோலியா கல்வெட்டு (பொ.ஆ.மு. 1900 – 1700), ஈராக்கைச் சேர்ந்த காஸ்சைட் கல்வெட்டு (பொ.ஆ.மு. 1600), சிரியாவின் மிட்டானி கல்வெடுகள், போகஜ் கல்வெட்டுகள் (பொ.ஆ.மு. 1400) ஆகியன இந்தோ –ஐரோப்பிய மொழிகளின் பொது இயல்புகளைப் பெற்றுள்ளன, அவ்வாறான கல்வெட்டுகள் இந்தியாவில் கிடைக்கவில்லை என்பதால், ஆரியர்கள் இந்தியாவில் குடியேறியவர்களே என வலுவாகக் கூற இயலும்.
  • ‘அஸ்வா’ என்னும் சொல்லும் வேறு பல சொற்களும், பல இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் பொதுவான வேர்ச்சொற்களைக் கொண்டுள்ளன. ரிக் வேதத்தில் ‘அஸ்வா’ (குதிரை) என்னும் சொல் 215 முறை இடம் பெற்றுள்ளது.
  • அதைப் போலவே ரிஷபா (காளை) என்னும் சொல் 170 முறை இடம்பெற்றுளது. வெப்பமண்டல விலங்குகளான புலி, காண்டாமிருகம் ஆகியன ரிக் வேதத்தில் காணப்படவில்லை. மேலும் ரிக் வேதத்தில் நகர்ப்புற வாழ்க்கை முறை குறித்து எந்தத் தடயமும் இல்லை.
  • ஹரப்பா பண்பாட்டில் குதிரை இருந்ததற்கான சான்றுகளில்லை. எனவே ஆரியர்களை ஹரப்பா பண்பாட்டோடு தொடர்புபடுத்துவது பொருந்திப்போவதாயில்லை. பண்டையகாலக் குடிபெயர்வுகளைக் கண்டறிய தற்போது மரபணு அறிவியலும் பயன்படுத்தப்படுகிறது எம்.17 (M.17) எனப்படும் மரபணு (DNA) இந்தோ-ஐரோப்பிய மொழிகளைப் பேசுபவர்களிடம் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
  • மொழியியல் ஆய்வாளர்கள் வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் மொழியை , அது எழுதப்பட்ட வடிவத்திலும் வாய்மொழி வடிவத்திலும் ஆய்வு செய்கின்றனர். சொற்பிறபியல் , வரலாறு, மொழியியல், ஒப்பீட்டு மொழியியல், இலக்கிய விமர்சனம் ஆகியவற்றை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

ரிக் வேதகாலப் பண்பாடு

ரிக்வேத சம்ஹிதையே பழமையான நூலாகும். அது தொடக்க வேத காலத்தோடு தொடர்புடையதாகும். பல அறிஞர்கள் தொடக்க வேதகாலப் பண்பாடு பொ.ஆ.மு. 1500க்கும் பொ.ஆ.மு. 1000 க்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்ததெனக் கணக்கிடுகின்றனர். இக்காலகட்ட அரசியல், சமூக, பொருளாதார வாழ்க்கைக் கூறுகள் ரிக் வேதப் பாடல்களில் எதிரொலிக்கின்றன.

புவியியல்

இந்தியத் துணைக் கண்டத்தில், தொடக்க வேதகால ஆரியர்கள் கிழக்கு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பஞ்சாப், மேற்கு உத்திர பிரதேசத்தின் சில பகுதிகளில் வாழ்ந்தனர்.

தாசர்களும் தசயுக்களும்

  • ரிக் வேதம் ஆரியர்களைக் குறித்து மட்டும் பேசவில்லை. இந்தியாவில் ஆரியர்கள் எதிர்கொண்ட ஆரியர் அல்லாத மக்களைப் பற்ரியும் பேசுகிறது. ரிக்வேதகால ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தபோது தாசர்ஜள், தசயுக்கள் என்று ஆரியர்களால் அழைக்கப்பட்ட மக்களோடு மோதினர். வெவ்வேறான பண்பாடுகளைப் பின்பற்றும் கருப்பு நிறம் கொண்ட இம்மண்ணின் மக்களிடமிருந்து ஆரியர்கள் தங்களை மிகத் தெளிவாக வேறுபடுத்திக் கொண்டனர்.
  • வேறுபல மக்கள் குழுக்களைப் பற்றிய குறிப்புகளும் ரிக்வேதத்தில் உள்ளன. சிம்பு, கிக்கடா எனப்பட்டவரும் தசயுக்களுடன் சேர்க்கப்பட்டனர். குலிதாரா என்பவரின் மகனான சம்பரா என்பவர் 90 கோட்டைகள் அல்லது குடியிருப்புகளின் தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
  • மற்றொரு தலைவரான வர்சின் பெரும் படையொன்றிற்குத் தலைவராக இருந்துள்ளார். சம்பரா என்னும் தலைவன் பரத குலத்தைச் சார்ந்த திவோதசா என்பவரால் தோற்கடிக்கப்பட்டதாக ரிக்வேதம் குறிப்பிடுகிறது.

அரசு முறையும் அரசியல் மோதல்களும்

  • அரசுமுறை என்னும் கோட்பாடு ரிக்வேத காலத்தில் உருவாக்கம் பெற்றது. ரிக் வேதத்தில் மக்களின் வாழ்விடங்களும் நிலப்பகுதிகளும் ஜனா, விஷ், கணா, கிராம, குலா எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆரியர்களின் பகைவர்களையும் அவர்களோடு ஆரியர்கள் மேற்கொண்ட போர்களையும் நிர்க்வேதம் கூறுகின்றது.
  • கால்நடைகளுக்காகவும் ஏனைய செல்வங்களுக்காகவும் போர்கள் செய்யப்பட்டுள்ளன. போர்களின் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட செல்வங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. ஆரியர்கள், ஆரியர் அல்லாதவரோடு மட்டும் போர் புரியவில்லை; தங்களுக்குள்ளும் மோதிக் கொண்டார்கள்.
  • தாங்கள் மேற்கொண்ட போர்களில் தங்களுக்கு ஆதரவாகத் தெய்வங்களின் அருளாசியையும் பெற்றார்கள். வழிபாடுகளும் சடங்குகளும் பலியிடுதலும் தங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தெய்வங்களின் ஆதரவைப் பெற்றுத்தருமென அவர்கள் உறுதியாக நம்பினர். இந்திரன் ‘புரந்தரா’ என்றழைக்கப்பட்டார். ‘புரந்தரா’ என்பதன் பொருள் குடியிருப்புகளை அழிப்பவன் என்பதாகும், அக்குடியிருப்புகள் ஒருவேளை வேலிகளைக் கொண்டதாக இருக்கலாம் அல்லது திட்டமிட்டு கட்டப்பட்ட நகரங்களாக இருக்கலாம்.
  • பரத, திரிசு ஆகியன அரசாட்சி செய்த ஆரியக் குலங்களாகும். வசிஷ்ட முனிவர் இவர்களுக்கு ஆதரவாக இருந்தார். பரத குலத்தின் பெயரை ஒட்டியே இந்தியப் பகுதிகளுக்கு ‘பாரதவர்ஷா’ எனும் பெயர் சூட்டப்பட்டது.
  • பரத குலமானது பத்து தலைவர்களால் எதிர்க்கப்பட்டது. அவர்களுள் ஐவர் ஆரியர்களாவர். மற்றுமுள்ள ஐவர் ஆரியர் அல்லாதோர் இவர்களிடையே நடைபெற்ற போர் ‘பத்து அரசர்களின் போர்’ என அறியப்படுகிறது. புருசினி ஆற்றங்கரையில் இப்போர் நடைபெற்றது.
  • புருசினி ஆறு இன்றைய ரவி ஆறு என அடையாளங் காணப்பட்டுள்ளது. இப்போரில் சுதா என்பவன் பெற்ற வெற்றி பரத குலத்தின் மேலாதிக்கத்திற்கு வழி கோலியது. தோற்கடிக்கப்பட்ட குழுக்களில் ‘புரு’வும் ஒன்றாகும்.
  • புரு மற்றும் பரத குலத்தவர் ஒன்றிணைந்து குரு குலத்தைத் தோற்றுவித்தனர். பின்னாளில் குரு குலத்தவர் பாஞ்சாலர்களோடு இணைந்து மேலை கங்கைச்சமவெளியில் தங்கள் ஆட்சியை நிறுவினர்.

சமூகப் பிரிவுகள்

  • வேதகால ஆரிய மக்கள் ஆரியர் அல்லாத ஏனைய மக்களிடமிருந்து தங்களை மேம்படுத்திக் காட்டிக்கொண்டனர். நிறத்தையும் வகையையும் சுட்டிக்காட்டுவதற்காக ஆரியர்கள் ‘வர்ண’ என்ற சொல்லைப் பயன்படுத்தினர்.
  • ரிக் வேதம் ‘ஆரிய வர்ண’, ‘தச வர்ண’ என்று குறிப்பிடுகின்றது. தாசர்களும் தசயுக்களும் அடிமைகளாகக் கருதப்பட்டு பிடிக்கப்பட்டனர். பிற்காலத்தில் இவர்கள் சூத்திரர் என்ரு அறியப்பட்டனர். சமூகத்தில் போர் புரிபவர்கள், மத குருமார்கள், சாதாரண மக்கள் என்னும் பிரிவுகள் தோன்றின. ரிக் வேத காலத்தின் கடைப்பகுதியில் சூத்திரர் என்போர் தனிவகைப்பட்ட பிரிவாயினர்.
  • பொதுவாக அடிமை முறை இருந்தது. அடிமைகள் மதகுருமார்களுக்கு பரிசாக வழங்கப்பட்டனர். ஆனால் கூலித் தொழிலாளர் பற்றிய குறிப்புகள் ஏதும் காணப்படவில்லை.
  • அடிமைகள் மத குருமார்களுக்குப் பரிசாக வழங்கப்பட்டனர். குதிரைகளால் இழுக்கப்பட்ட தேர்களையும், வெண்கலத்தாலான சில பொருள்களையும் சமூகத்தில் சிலர் மட்டுமே பெற்றிருந்தது சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் தோன்றியதை உணர்த்துகிறது.
  • தொடக்க காலத்தில் சமூகம் சமத்துவத் தன்மை கொண்டதாகவே இருந்துள்ளது. சமூக வேறுபாடுகள் பிற்காலத்தில் தோன்றியுள்ளன. ரிக் வேதத்திலுள்ள ‘புருஷசுக்தம்’ என்னும் பகுதியில் கூறப்பட்டுள்ளவாறு பல வர்ணங்கள் இவ்வாறு தோன்றியுள்ளன.
  • புருஷ பலியிடப்பட்டபோது அவனுடைய வாயிலிருந்து தோன்றியவர்கள் பிராமணர்கள், இரண்டு கைகளிலிருந்து தோன்றியவர்கள் சத்திரியர்கள், தொடைகளிலிருந்து பிறந்தவர்கள் வைசியர்கள், கால்களிலிருந்து தோன்றியவர்கள் சூத்திரர்கள் என்ரு கூறுகிறது. இந்தச் சமூக வேறுபாடுகள் தொடக்க வேதகாலத்தின் கடைசிப்பகுதியில் தோன்றியிருக்க வேண்டும் என கருதப்படுகிறது.
  • மேலும் தொழில் அடிப்படையில் போர் புரிவோர், மத குருமார்கள், கால்நடை வளர்ப்போர், வேளாண்மை செய்வோர், சிகை அலங்காரம் செய்வோர் போன்றோரும் குறிப்பிடப்படுகின்றனர்.
  • பானிகள் என்போர் மாடுகள் பூட்டப்பட்ட வண்டிகளில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு பல்வேறு இடங்களுக்குச் சென்று வணிகம் செய்தவர்கள் ஆவர். சில பாடல்களில் பானிகள் பகைவர்களாகப் பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இனக்குழுக்களும் குடும்பங்களும்

இரத்த உறவின் அடிப்படையிலேயே ரிக்வேத சமூகம் கட்டமைக்கப்பட்டிருந்தது. மக்கள் குறிப்பிட்ட குலங்களோடு இனங்காணப்பட்டனர். குலங்கள் ஒன்றிணைந்து ‘ஜனா’ எனும் சமூகம் ஆனது. ஜனா என்ற சொல்லுக்கு பழங்குடி , சமூகம் எனப் பொருள். ரிக் வேதத்தில் ‘ஜனா’ என்னும் சொல் 21 முறை இடம் பெற்றுள்ளது. ஆனால் ஜனபதா என்னும் சொல் ஒருமுறைகூட இடம்பெறவில்லை. சாதாரண மக்களைக் குறிப்பிடக் கூடிய ‘விஷ்’ என்னும் சொல் 170 முறை இடம் பெற்றுள்ளது. இவர்கள் கிராமங்களில் வாழ்ந்தனர். ‘கிருஷா’ எனும் சொல்லுக்கு குடும்பம் என்று பொருள். ஒரு இனக்குழுவினுள் குடும்பமே முக்கியமான சமூக அலகாகும். குடும்பத்திற்குத் தலைமையேற்றவன் ‘கிருகபதி’ ஆவான். அவன் மனைவி ‘ஸபத்தினி’ ஆவாள். இக்காலத்தில் குடும்பம் என்பது ஒருவேளை கூட்டுக்குடும்பமாக இருந்திருக்கலாம்.

பெண்கள்

பெண்கள் சமூகத்தில் மரியாதைக்குரிய இடத்தை வகித்தனர் என்ற போதிலும், அதைப் பொதுமைப்படுத்த முடியாது. சமூகம் தந்தைவழிச் சமூகமாக இருந்ததால் ஆண் குழந்தைகளுக்குச் சமூகத்தில் முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

ஆண் குழந்தையின் பிறப்பும், கால்நடைகளின் பிறப்பும் பெரிதும் விரும்பப்பட்டது. அக்காலச் சமூக அமைப்பு இராணுவத்தன்மை கொண்டதாக இருந்ததால் போர்புரிவதற்கும் நிலங்களின் மேல் ஆதிக்கம் செலுத்துவதற்கும் ஆண் மக்கல் தேவைப்பட்டிருக்கலாம். பெண்கள் கிராமக் கூட்டங்களில் கலந்துகொண்டனர். வேள்விகளில் பங்கெடுத்தனர். திருமணம் செய்துகொள்வது நடைமுறையில் இருந்தாலும் புராதன மணமுறைகலும் பின்பற்றப்பட்டன. பலரைக் கணவராய் கொள்வது நடைமுறையில் இருந்ததாகத் தெரிகிறது. மறு மணமும் பழக்கத்தில் இருந்துள்ளது. பதினாறு – பதினேழு வயதில் திருமணம் நடைபெற்றதாக அறிஞர்கள் கருதுகின்றனர். வரலாற்று அறிஞர்கள் கருத்துப்படி அப்போது குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றதாகத் தெரியவில்லை.

பொருளாதாரம்

வேளாண்மை

ரிக்வேத மக்களிடையே வேளாண்மை வளர்ந்திருந்ததைத் தொல்லியல் சான்றுகள் சுட்டுகின்றன. கலப்பையின் கொழுமுனை ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேளாண் நிலம் க்ஷேத்ரா என்று அறியப்பட்டிருந்தது. கிரிஷி என்ற சொல் உழவைக் குறிப்பதாகும். லங்லாம் சுரா ஆகிய சொற்கள் கலப்பையைக் குறிப்பனவாகும். சீத்தா என்ற சொல் கலப்பையின் கொழுமுனையைக் குறிப்பதாகும். எருதுகளைக் கொண்டும் சக்கரங்களின் துணையோடும் கிணறுகளிலிருந்து நீர் இறைத்து வேளாண்மை செய்யப்பட்டிருக்கலாம். பல்வேறு பருவ காலங்களையும் விதைத்தல், அறுவடை செய்தல், பதர் நீக்குதல் ஆகியன குறித்தும் அவர்கள் அறிந்திருந்தனர். அவர்கள் பார்லியையும் (யவம்) கோதுமையையும் (கோதுமா) பயிரிட்டார்கள்.

கால்நடை வளர்ப்பு

ஆரியர்கள் வேளாண்மை செய்தபோதிலும் கால்நடை வளர்ப்பையும் பொருளாதாரத்திற்காய் மேற்கொண்டனர். கால்நடைகள் சொத்தாகக் கருதப்பட்டன. ரிக் வேதத்தில் போர்களைக் குறிக்கப் பயன்பட்ட சொல்லான காவிஸ்தி என்னும் சொல்லின் பொருள் பசுக்களைத் தேடுவதாகும். தற்காலத்தில் மருவி பகைக்குழு என பொருள்படும் சொல் ‘கோஷ்டி’ ஆகும். மதகுருமார்களுக்குப் பெரும்பாலும் பசுக்களையும் பெண் அடிமைகளையுமே நன்கொடையாக வழங்கினார்கள். நிலக்கள் கொடையாக வழங்கப்படாதது மேய்ச்சல் பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. நிலத்தைப் பொருத்தமட்டிலும் தனியுடைமை என்பது இருக்கவில்லை.

கைவினைத்தொழில்

மரவேலை செய்வோர், தேர்களைச் செய்வோர், துணி நெய்வோர், தோல் வேலை செய்வோர் ஆகியோரை ரிக்வேதம் குறிப்பிடுகின்றது. இக்காலத்தில் ஏற்பட்ட முக்கியமான வளர்ச்சிகளில் ஒன்று செம்பு உலோகவியலாகும். ரிக் வேதத்தில் இடம்பெறும் அயஸ் என்னும் சொல் செம்பையும் வெண்கலத்தையும் குறிக்கும். இரும்பைப் பற்றிய குறிப்புகள் ஏதும் ரிக் வேதத்தில் காணப்படவில்லை. உலோக வேலை செய்வோரைக் குறிக்கும் கர்மரா என்னும் சொல் ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைப்போலவே நூலைக் குறிக்கும் ஸ்ரி என்னும் சொல்லும், மரவேலை செய்வோரைக் குறிக்கும் தச்சன் என்ற சொல்லும் இடம் பெற்றுள்ளன. கம்பளி ஆடைகள் நெய்யப்பட்டத்ற்கான குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. குளிர் காலத்திற்கு அவை நிச்சயம் தேவைப்பட்டிருக்கும். சில தொழில்கள் சிறப்பு நிபுணத்துவம் கொண்டவர்களைக் கொண்டு முழுநேரப் பணியாக செய்யப்பட்டது.

வணிகம், பரிமாற்றம் , மறு விநியோகம்

தொடக்க வேதகாலத்தில் வணிகர்கள் இருந்தபோதிலும் வணிக நடவடிக்கைகள் அதிகமாக இல்லை. பானி என்போர் வணிகர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றனர். பான் என்ற சொல்லுக்கு பண்டமாற்று என்று பொருளாகும். அவர்கள் ஒருவேளை வணிகர்களாக இருந்திருக்கலாம். நிஷ்கா என்பது தங்க அல்லது வெள்ளி அணிகலனாகும். இது பண்டமாற்றுப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டது. பண்டமாற்றே பரிவர்த்தனைக்கான வழியாகும். ஒரு மதகுரு தான் நடத்திக் கொடுத்த வேள்விக்காக 100 குதிரைகளையும் 100 நிஷ்காக்களையும் பெற்றுள்ளார். மற்றவர்களுக்கு வழங்கப்பட்ட தானங்களும் தட்சிணைகளும் செல்வத்தை மறுவிநியோகம் செய்வதற்கான வழிகளாகும். தக்சிணா என்பது குறிப்பிட்ட சேவைக்காக வழங்கப்பட்ட கட்டணமாகும். அதுவே செல்வ விநியோகத்திற்கான வழியுமாகும். பசுக்களை விநியோகம் செய்தது மேய்ச்சல் தொழில் பரவுவதற்கும் பொருளாதார உற்பத்தி பெருகுவதற்கும் உதவியது.

போக்குவரத்து

போக்குவரத்திற்குக் குதிரைகளே பெரிதும் பயன்படுத்தப்பட்டன. மாட்டு வண்டிகளும் குதிரை பூட்டிய தேர்களும் பயன்படுத்தப்பட்டன. கடல் (சமுத்ரா), படகுகள் (நாவ்) குறித்த குறிப்புகள் உள்ளன. 100 துடுப்புகளால் ஓட்டப்பட்ட படகுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

அரசுமுறையும் நிர்வாகமும்

  • ரிக்வேத கால அரசுமுறை என்பது இனக்குழு சமூகத்தின் அரசியலே ஆகும். இனக்குழுவின் தலைவரே அனைத்து நடவடிக்கைகளின் மையமாக இருந்துள்ளார். அவரே அரசியல் தலைமையாக இருந்தார். அவர் ராஜன் (அரசன்) என்றழைக்கப்பட்டார்.
  • அரசர்கள் பல தூண்களைக் கொண்ட அரண்மனைகளில் வாழ்ந்தனர். அவர்கள் மத குருமார்களுக்குக் கால்நடைகளையும் தேர்களையும் தங்க அணிகலன்களையும் பரிசாக வழங்கினர்.
  • ராஜன் ஒரு பாரம்பரியத் தலைவனாவார். ஒருவேளை அவர் சமிதி என்ற சபையினாலும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். அரசருடைய மிக முக்கியப் பணி இனக்குழுவைக் காப்பதாகும். அவர் சொத்துக்களைப் பாதுகாத்தார், எதிரிகளோடு போரிட்டார், மக்களுக்காகக் கடவுளிடம் பிராத்தனை செய்தார். நிலப் பரப்பின் மீதும் மக்களின் மீதும் அவருக்கு அதிகாரமிருந்தது.
  • வேத சமூகம் இராணுவ இயல்பைக் கொண்டிருந்தது. வில் அம்புகளும், கோடரி, ஈட்டி, வாள் ஆகியவையே முக்கியப் போர்க்கருவிகளாயிருந்தன.
  • போர்களின்போது சூறையாடிய செல்வமும் எதிரிகளிடமிருந்து பெற்ற கப்பமும் அரசனால் மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டதின் மூலம் மறுவிநியோகம் நடந்தது. தாசர்களும் அடிமைகளும் பரிசுப் பொருள்களாகக் கொடுக்கப்பட்டதாகக் குறிப்புகள் உள்ளன.
  • புருக்களின் அரசர் திரசதஸ்யு 50 பெண்களைப் பரிசாகக் கொடுத்துள்ளார். இனக்குழுத் தலைவர்கள் ‘கோபா’ என்றும் ‘கோபதி’ என்றும் அழைக்கப்பட்டுள்ளனர். அவற்றின் பொருள் கால்நடைகளின் தலைவர் என்பதாகும்.
  • ரிக் வேதத்தில் சபா, சமிதி, விததா, கணா என்றழைக்கப்பட்ட அமைப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ‘சபா’ என்பது வயதில் மூத்தோர் அல்லது செல்வர்கள் பங்கேற்ற அமைப்பாகும். ‘சமிதி’ என்பது மக்கள் கூடும் இடமாகும். விததா என்பது இனக்குழுக்களின் அமைப்பாகும். இராணுவம் மற்றும் மதம் சார்ந்த பணிகளை இவை மேற்கொண்டன.
  • சபா மற்றும் ‘விததா’க்களில் பெண்கள் பங்கேற்றனர். அரசர்கள் தங்களுடைய செயல்பாடுகளுக்கு சமிதி, சபா ஆகிய அமைப்புகளின் ஆதரவை நாடினர். இத்தகைய அமைப்புகளின் உண்மையான இயல்புகள், அவை மேற்கொண்ட பணிகள் குறித்துக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. வேதகால சமுதாயத்தைப் பற்றிய நம்முடைய புரிதலானது பெருமளவிற்கு, இது போன்ற பல சொற்களுக்கு அக்காலத்தில் தரப்படும் விளக்கங்களைச் சார்ந்தே அமைந்துள்ளது. சில சமயங்களில் உண்மையான பொருளை மீட்டுருவாக்கம் செய்வது கடினமாக உள்ளது.
  • மதகுருமார்கள் அரசருக்கு அறிவுரை வழங்கினர். வேதகால மத குருக்கள் அரசருக்கு ஆலோசனை வழங்கி, ஊக்கப்படுத்தி, புகழ்ந்து அரசர்களின் செல்வாக்கைப் பெற்றனர். இதற்காக அவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
  • சேனானி என்பவர் படைத் தலைவராவார். வரிவசூல் செய்யும் அதிகாரிகளைப் பற்றிய சான்றுகள் இல்லை. ஒரு வேளை மக்கள் தாமாகவே அரசனுக்கு வரி வழங்கியிருக்கலாம். அது ‘பலி’ எனப்பட்டது. சில அறிஞர்கள் பலி என்பது கட்டாயப்படுத்தி பெறப்பட்ட வரியே; தன்னார்வத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டதல்ல என்கிறார்கள். நீதி நிர்வாகம் குறித்துக் குறிப்புகள் ஏதுமில்லை.
  • நிலப்பரப்பைக் கட்டுப்படுத்திய அதிகாரி விராஜபதி எனப்பட்டார். படைக்குழுக்களின் தலைவர்களான கிராமணி என்பவர்களுக்கு விராஜபதி உதவி செய்வார். கிராமங்களின் தலைவர் கிராமணியே ஆவார்.

வேதகால மதமும் சடங்குகளும்

  • வேதகாலச் சமூகத்தில் மதமும் சடங்குகளும் முக்கிய இடம் வகித்தன. ரிக்வேதத்தில் கால இயற்கை சக்திகளான சூரியன், சந்திரன், ஆறுகள், மலைகள், மழை ஆகியன தெய்வீகமானவையாகக் கொள்ளப்பட்டன. அவர்களின் மதம் இயற்கைத் தன்மையும்பல கடவுள்வழிபாடும் கொண்ட்து.
  • இந்திரனே மிக முக்கியக் கடவுளாவார். அவர் ‘புரந்தரா’ என்றழைக்கப்பட்டார். நெருப்பு என்பது கடவுளுக்கும் மக்களுக்கும் இடையிலான தூதுவன் எனக் கருதப்பட்டது. இருளை அகற்றும் கடவுள் சூரியன், ‘உஷா’ எனும் பெண்கடவுள் விடியலின் கடவுளாவார். அதிதி, பிரித்வி, சினிவளி ஆகியோர் ஏனைய கடவுள்களாவர்.
  • நீர்க்கடவுள் ‘வருணா’ அடுத்த முக்கிய இடத்தை வகிக்கிறார். இயற்கையின் விதிகளை உயர்த்திப்பிடிப்பவர் இவரே. தாவரங்களின் கடவுள் ‘சோமா’. அவற்றிலிருந்து பெறப்படும் பானம் அவர் பெயரிலேயே அழைக்கப்பட்டது.
  • சோமபானம் அருந்துவது சடங்குகளின் ஒரு பகுதியாக குறிப்பிடப்படுகிறது. போதை தரும் சோமபானம் தயாரிக்கப்படும் முறைகளை விளக்கும் பல பாடல்கள் ரிக் வேதத்தில் உள்ளன.
  • ‘மாருத்’ வலிமையின் கடவுள் ஆவார். வேறு நில கடவுளர்களைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அவை முன்னர் குறிப்பிடப்பட்டுள்ள கடவுளர்களைப் போல் முக்கியக் கடவுள்கள் அல்லர். ‘ருத்ரா’ அல்லது ‘சிவன்’ குறித்தும் சில குறிப்புகள் காணப்படுகின்றன.
  • அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளப்படும் பிரச்சனைகள் இடர்ப்பாடுகள் ஆகியவற்றுக்குத் தீர்வாக சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் சமூகத்தில் மதகுருமார்கள் முக்கியப் பங்கு வகித்தனர்.

சமூகத்தின் சிறப்பியல்புகள்

  • தொடக்க வேத காலத்தில் குலங்களும் இனக்குழுக்களும் சமூகத்தைக் கட்டமைத்தன. அரசர் ஒருசில அதிகாரங்களையே பெற்றிருந்தார். நிலப்பகுதிகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஆரியப் பழங்குடிகளும் ஆரியர் அல்லாத பழங்குடி இனக்குழுக்களும் போர்களில் ஈடுபட்டனர்.
  • வர்ணக் கோட்பாடும் ஆரியர்களின் அடையாளப் பெருமிதங்களும் இருந்தபோதிலும் பொதுவாகச் சமூகத்தில் பாகுபாடுகள் ஆழமாக வேரூன்றவில்லை. கால்நடை மேய்ச்சல் வாழ்க்கைமுறை முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது.
  • கால்நடைகளை மையப்படுத்திய மோதல்கள் அன்றாடம் நடந்தன. கால்நடை வளர்ப்பு, மேய்ப்பு ஆகியவற்றுக்கு அடுத்த நிலையில் வேளாண்மை முக்கிய இடம் வகித்தது. உலோகத்தினாலான பொருள்களும், மரத்தினாலான பொருள்களும் மட்பாண்டங்களும், துணிகளும் , இன்னும் பல பொருள்களும் உற்பத்தி செய்யப்பட்டதைத் தொல்லியல் ஆய்வு உணர்த்துகின்றது.

பிற்கால வேதப் பண்பாடு

பிற்கால வேதப்பண்பாட்டின் காலம் பொ.ஆ.மு, 1000 முதல் பொ.ஆ.மு. 700 – 600 வரை ஆகும். இரும்புக் காலத்தைச் சேர்ந்த வண்ணம் தீட்டிய சாம்பல்நிற மட்பாண்டப் பண்பாடு பிற்கால வேதப் பண்பாட்டோடு தொடர்புடையதாகும். இதனை அகழ்வாய்வு நடைபெற்ற இடங்களில் கிடைத்த சான்றுகளைக் கொண்டு தொல்லியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். இக்காலம் அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகிய துறைகளின் கலப்பினையும் வளர்ச்சியினையும் எதிர் கொண்டது.

பிற்கால வேத நூல்கள்

பிற்கால வேத நூல்கள் ரிக்வேத சம்ஹிதைகளுக்குப் பின்னர் இயற்றப்பட்டனவாகும். ரிக் வேதத்திற்குப் பின்னரே யஜூர், சாம, அதர்வ வேதங்கள் இயற்றப்பட்டன.

ஆரியர்களின் கிழக்கு நோக்கிய பரவல்

  • பின்வேதகாலத்தில், ஆரியர்கள் பஞ்சாபிலிருந்து மேற்கு உத்திரப்பிரதேசத்தின் கங்கை – யமுனை சமவெளியை நோக்கித் தமது வாழ்விடங்களை விரிவுபடுத்தினர். பண்டைய இந்தியாவின் வரலாறு, பண்பாடுகளின் பரவல்களாலும் பரிமாற்றங்களாலும், பல குழுவினர்க்கிடையே, நிலப்பகுதிகளுக்காகவும் செல்வ ஆதாரங்களுக்காகவும் நடைபெற்ற போர்களாலும் சுட்டப்படுகின்றன. ஆரியர்கள் கங்கை நதியின் கிழக்குப் பகுதிகளுக்குக் குடிபெயர்ந்த நிலையில், இந்தோ- ஈரானியர்கள் ஈரானிலிருந்து குடிபெயர்ந்து பஞ்சாபில் குடியேறினர்.
  • சிந்து கங்கை நதிகளுக்கு இடைப்பட்ட மேலை கங்கைச் சமவெளியே குரு மற்றும் பாஞ்சாலர்களின் பகுதிகளாக இருந்ததெனப் பிற்கால வேதநூல்கள் கூறுகின்றன. ரிக்வேதத்தில் ஆரியர்களின் தெற்கு எல்லை எனக் குறிக்கப்படும் பகுதிகள் அய்த்ரேய பிராமணத்தில் (சம்ஹிதைகள் பற்றிய விளக்கங்கள்) பட்டியலிடப்பட்டு ஆரியர்களின் மத்தியப் பகுதி எனக் கூறப்பட்டுள்ளது. இது பின் வேதகாலத்தில் ஆரியர்கள் கங்கைச் சமவெளியில் குடியேறியதை உறுதி செய்கின்றது.
  • ஆரிய மக்கள் தொகைப் பெருக்கம் புதிய, அதிகம் ஆக்கிரமிக்கப்படாத பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கம், நீர் மற்றும் நிலங்களுக்கான தேவை ஆகியவற்றால் இந்த இடப்பெயர்வு தூண்டப்பட்டிருக்கலாம்.
  • குரு , பாஞ்சாலர், வாஸ்கர்கள், உசிநரர்கள் ஆகியோர் இக்காலத்தைச் சேர்ந்த இனக்குழுக்கள் ஆவர். பிற்கால வேத நூல்களில் சரஸ்வதி, திரிஸ்தவதி ஆகிய நதிகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
  • பொ.ஆ.மு. 1000 வாக்கில் வேதகால ஆரியர்கள் கிழக்கு உத்திரப்பிரதேசத்திலுள்ள கோசலம், வடக்கு பீகாரில் உள்ள விதேஹா ஆகிய பகுதிகளை நோக்கி நகர்ந்தனர். அப்பகுதிகளில் இந்த ஆரியர்கள் செம்புக்காலப் பண்பாட்டைப் பின்பற்றி வரும் அப்பகுதி வாழ் மக்களை எதிர்கொள்ள நேர்ந்தது.
  • மேல் கங்கைச் சமவெளியில்தான் வேதங்கள் முண்டா மொழி சொற்களைப் பெற்றன. கங்கைச் சமவெளிப் பகுதிகளில் முண்டா மொழியின மக்கள் வாழ்ந்ததை இது உணர்த்துகின்றது. இக்காலத்தில் கோசலமும் விதேஹமும் ஆரியர்களின் கிழக்கு எல்லைப் பகுதிகளாக இருந்தன. வேத காலத்தின் இறுதியில் கோசலமும் விதேஹமும் ஆரிய மயமாயின. அவற்றுக்கும் அப்பால் கிழக்கேயிருந்த பகுதிகள் அந்நிய தேசங்களாகவே கருதப்பட்டன.
  • அதர்வ வேதத்தில் அங்க , மகத (பிகார்) நாடுகளைச் சேர்ந்த மக்கள் எதிரிகளாகவே பார்க்கப்பட்டனர். இதைப் போலவே அய்த்ரேய பிராமணத்தில் வங்காளத்தைச் சேர்ந்த புந்த்ராக்களும் ஆந்திரர்களும் ஆரிய அடையாளங்களுக்கு அப்பாற்பட்டவர்களாகவே கருதப்பட்டுள்ளனர். இப்பகுதிகள் ஆரியப் பண்பாட்டின் செல்வாக்கிற்கு உள்ளாகவில்லை என்பதை இதன்மூலம் அறியலாம்.
  • ஆரிய மயமாதல் என்பது வடமேற்கிலிருந்து படிப்படியாகத் தென்கிழக்கு நோக்கி முக்கியமாக கங்கை சமவெளியில் பரவியது என்பது புலப்படுகிறது.

பிற்கால வேதப்பண்பாடும் இரும்பும்

இக்காலத்தில் கருவிகள் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட மற்றொரு முக்கிய உலோகம் இரும்பாகும், இது ‘சியாமா – அயஸ்’ அல்லது ‘கிருஷ் அயஸ்’ என்றழைக்கப்பட்டது. கருப்பு உலோகம் என்பது இதன் பொருள். கங்கைச் சமவெளிப் பகுதிகளிலிருந்த காடுகள் அழிக்கப்பட்டு வேளாண் நிலங்களாக மாற்றப்பட்டதில் இரும்பு முக்கியப் பங்கு வகித்தது. வேதகாலத்தின் இறுதியில் இரும்பைப் பற்றிய அறிவு கிழக்கு உத்திரபிரதேசத்திலும் விதேகத்திலும் பரவியது. இரும்பானது பொ.ஆ.மு. 700 வாக்கில் அறிமுகமானதாகக் கருதப்படுகிறது. ஆனால், அண்மைக்கால ஆய்வுகள் பொ.ஆ.மு. 1200 வாக்கிலேயே இரும்பு அறிமுகமாயிற்று என்று கூறுகின்றன. தொடக்ககால ஆய்வுகள் கங்கைப் பகுதியின் காடுகள் திருத்தப்பட்டதில் இரும்பின் பங்கிற்கு அதிக அழுத்தம் கொடுத்தன. ஆனால் தற்போதைய ஆய்வுகள் அது மட்டுமே காரணமாக இருக்க முடியாது; வேறு காரணங்களும் உண்டென வாதிடுகின்றன.

குடியேற்றங்களும் நிலப்பகுதிகளும்

  • வேளாண்மை தீவிரமடைந்த பின்னர் பின் வேதகால மக்கள் ஓரிடத்தில் நிலையாகக் குடியேறி வாழத் துவங்கியபோது எல்லைகள் வரையறை செய்யப்பட்ட நிலப்பகுதிகள் உருவாயின. ‘ஜனபதம்’ என்னும் ‘நிலத்தைக் குறிக்கும்’ சொல் பொ.ஆ.மு, 800ஐச் சேர்ந்த பிராமணத்தில் காணப்படுகிறது.
  • வட இந்தியப்பகுதியில் சுமார் 1000 இடங்களில் ஓவியம் தீட்டிய சாம்பல்நிற பாண்டப் பண்பாட்டுச் சின்னங்கள் கிடைக்கின்றன. இது மேலை கங்கைச் சமவெளியில் புதிய குடியேற்றங்கள் உருவாகி மக்கள் தொகைப் பெருக்கம் ஏற்பட்டதை மெய்ப்பிக்கிறது. மக்கள் சுடாத களிமண் கற்களால் கட்டிய வீடுகளிலோ அல்லது மரத்தட்டிகளையும் களிமண் சாந்தையும் கொண்டு கட்டிய வீடுகளிலோ வாழ்ந்தனர்.
  • வேதகாலத்தின் பிற்பகுதியில்தான் நகரங்கள் உருவாகி இருக்க வேண்டும். பின் வேதகாலம் தீவிரப் பண்பாட்டு ஊடாட்டங்கள் நடைபெற்ற காலமாகும்.
  • பிற்கால வேதநூல்களில் ‘நகர’ என்ற சொல் இடம் பெறுகிறது. அது வணிகர்கள் தங்கியிருந்த இடங்களைக் குறிப்பனவாகவே உள்ளன. இருந்தபோதிலும் வேதகாலத்தின் இறுதிப் பகுதியில்தான் பெரிய நகரங்கள் உருவாயின. ஹஸ்தினாபுரம், கோசோம்பி ஆகியவை நகரங்களின் முன் மாதிரிகளாக (நகரங்களைப் போன்ற) கருதப்பட்டன.
  • இக்காலப் பொருண்மைப் பண்பாடானது பல்வகைத் தன்மைகள் கொண்டதாகவும் முந்தைய வேதகால பொருள்களைக் காட்டிலும் நேர்த்தியாகவும் மாறியது.
  • உற்பத்தியில் உபரி இருந்தது எனவும் இனக்குழுத் தலைவர்கள், இளவரசர்கள் மத குருமார்கள் போன்ற சமூகப் பிரிவினருக்கு அவ்வுபரி உதவுவதாய் அமைந்தது எனவும் யூகிக்கலாம்.
  • ஒரு பொதுமூதாதையரிடமிருந்து உருவாகும் தலைமுறைகள் வம்சாவளி/ கொடிவழி / பரம்பரை எனப்படும்.

அரசியல் நிறுவனங்கள்

  • முற்கால வேத காலத்தில் இனக்குழு அரசியலே மேலாதிக்கம் செலுத்தியது. அரசர் மக்கள் பிரதிநிதி மன்றங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் வேதகாலத்தில் இவ்வமைப்புகள் முக்கியத்துவம் இழந்தன.
  • அரசரின் அதிகாரம் பெருகியது. விததா என்ற அமைப்பு செல்வாக்கு இழந்தது. சபா, சமிதி ஆகிய அமைப்புகள் தொடர்ந்து இயங்கின. பேரரசுகளின் தோற்றத்தைத் தொடர்ந்து இவ்வமைப்புகளின் அதிகாரம் மென்மேலும் குறைந்தது.
  • ராஜன் என்பவரே இனக்குழுவின் தலைவர். போர்க்களத்தில் அவர் படைகளுக்குத் தலைமை தாங்கினார். சாம்ராட், சாம்ராஜ் போன்ற கோட்பாடுகள் வளர்ச்சி பெற்றன. இவை அரசருடைய அதிகாரம் பெருகியதை உணர்த்துகின்றன.
  • குடும்ப உரிமைகளை சட்டப்பூர்வமாக்க அரசர் வாஜ்பேய, ராஜசூயயாகங்களை நடத்தினார். நிலப்பகுதியின்மீதும் மக்களின் மீதும் செல்வ ஆதாரங்களின் மீதும் அரசரின் கட்டுப்பாடு பெருகியது. “அரசரை முன்னிருத்தக் கூடியவர்” என்ற பெயர்ப்பொருள் கொண்ட புரோகிதர் அரசு நிர்வாகத்திலும் குடும்ப உறவுகளிலும் முக்கிய இடம் வகித்தார்.
  • முடியாட்சிமுறை வலுப்பெற்றது. ராஜன் சமூக ஒழுங்கைக் கட்டுப்படுத்துபவரானார். செல்வ ஆதாரங்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஸ்ராதா (சில நன்மைகளைப் பெறுவதற்காக செய்யப்படுவது) என்னும் யாகங்கள் நடத்தப்பட்டன. அரசர் புரோகிதர்க்குப் பசு, குதிரை, தேர், ஆடை ஆகியவற்றைப் பரிசாக அளித்தார்.
  • பெண்ணடிமைகளும் பரிசுப்பொருள்களாக வழங்கப்பட்டனர். அரசப் பதவியேற்பின் போது செய்யவேண்டிய சடங்குகளைச் செய்த ஒரு புரோகிதர்க்கு 1000 தங்கக்கட்டிகளும் கால்நடைகளும் பரிசளித்தாக அய்த்ரேய பிராமணம் குறிப்பிடுகின்றது. புரோகிதர் அரசியல் உருவாக்கத்திலும் அரச குடும்பத்திலும் முக்கியப் பங்கு வகித்தார்.
  • மாநிலத்தைக் குறிக்கும் ராஷ்ட்ர என்ற சொல்லும், இறையாண்மை உடைய நாட்டினைக் குறிக்கும் ராஜ்ய என்ர சொல்லும் பிறந்தன. அரசர் மக்களிடமிருந்து (விஷ்) ‘பலி’ என்ற வரியைப் பெற்றார். அது மக்கள் தாமாகவே மனமுவந்து வழங்கியதாகவோ அல்லது கட்டாய வசூலாகவோ இருந்தது.
  • தன்னார்வ அடிப்படையில் கொடுக்கப்பட்டது காலப்போக்கில் கப்பமாக மாறியது போலும். மகாபாரதம் அதிகாரப் போட்டிகளையும் நாடுகலைக் கைப்பற்ற நடந்த போர்களையும் சித்தரிக்கிறது. இராமாயணமும் ஆரியர்களின் விரிவாக்கத்தையும் காடுகளில் வாழ்ந்த மக்களோடு ஏற்பட்ட மோதல்களையும் விவரிக்கிறது.
  • நாடுகளின் உருவாக்கமும் மரபுவழி அரசாட்சியும் பின் வேதகாலத்தில் வலிப்பெற்றன. பொ.ஆ.மு. முதல் ஆயிரமாண்டு காலத்தில் ஏற்பட்ட இப்போக்கை ரோமிலா தாப்பர் ‘குல உரிமையிலிருந்து அரசுக்கு’ என்று கூறுகிறார்.
  • நாடுகளின் அளவிலான அரசியல் நிறுவனங்கள் பொ.ஆ.மு. 500க்குப் பின்னரே உருவாயின. ஆகவே பின் வேதகாலச் சமூகம் மாறுதல்களுக்கு உள்ளாகிக் கொண்டிருந்தது தெளிவாகின்றது.
  • பல மரபினர் நிலங்களைக் கொண்டவர்களாக மாறி பின்வேதகாலத்தில் நிலையான வாழ்க்கையை மேற்கொண்டனர். இதற்கான சான்று ‘ஜனபதம்’ என்ற சொல்லாகும். பொ.ஆ.மு. முதல் ஆயிரமாண்டுகளின் இடைப்பகுதியில், பின் வேதகாலத்தில் ராஜிய, கணசங்கா எனப்படும் அரசியல் நிறுவனங்கள் உருவாயின.
  • நாம் முன்னர் பார்த்ததுபோல் பரத, புரு இனக்குழுக்கள் இணைந்து குரு குழு உருவாகி அது பாஞ்சாலர் இனக்குழுவோடு இணைந்து கங்கை –யமுனை சமவெளியின் மத்தியப் பகுதியை கைப்பற்றின.
  • பாஞ்சாலப் பகுதி உத்திரப்பிரதேசத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இக்குரு பாஞ்சாலர்கள் ஒரு பெரும் இனக் குழுவாக உருவானது. ஹஸ்தினாபுரம் அவர்களின் தலைநகரானது.
  • மகாபாரதத்தில் போரிட்டுக் கொள்ளும் பாண்டவர்களும் கௌரவர்களும் குரு இனக்குழுவைச் சேர்ந்தவர்களே. ஹஸ்தினாபுரம் வெள்ளத்தில் மூழ்கியதால் குரு இனக்குழுக்கள் வெளியேறி அலகாபாத்திற்கு அருகேயுள்ள கௌசாம்பியில் குடியேறியதாக மரபுக் கதைகள் கூறுகின்றன.
  • பின் வேத காலத்தில் வேள்விகளும் சடங்குகளும் முக்கியத்துவம் பெற்றன. அரசர் மேலும் அதிக சுதந்திரம் பெற்றவரானார். மக்களிடமிருந்து விலகினார். குடும்பங்களில் சடங்குகள் மேலாதிக்கம் செலுத்தின. இது அரசர்கள், மதகுருமார்களின் அதிகாரமும் செல்வாக்கும் பெருகுவதற்கு வழி வகுத்தது.
  • அரசர் அஸ்வமேதயாகம் நடத்தினர். அதன்படி அரசருடைய குதிரை அவிழ்த்து விடப்படும். அது பற்பல இடங்களுக்குச் செல்லும். அக்குதிரையை எவரும் பிடித்துக்கட்டவில்லை என்றால் அப்பகுதிவாழ் மக்கள் இவ்வரசனை அங்கீகரித்துவிட்டனர் என்று பொருள்.
  • குதிரையை மறுத்தால் அரசருடைய அதிகாரம் எதிர்க்கப்படுவதாகப் பொருள் கொள்ளப்படும். இது போர்களுக்கு இட்டுச்செல்லும். வாஜபேய என்னும் சடங்கு தேர்களின் போட்டியை உள்ளடக்கியதாகும். இதைப் போன்ற புதுமையான சடங்குகள் அரசருடைய அதிகாரத்தை மேலும் வளர்க்க உதவின.

சமூக அமைப்பு

  • பின் வேதகாலத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்களை வேத நூல்கள் , மிகத் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன. வர்ணத்தின் அடிப்படையிலான சமூகப் பிரிவுகள் உறுதி பெற்றன. கற்பித்தல் பிராமணர்களின் தொழிலானது. பிராமணர்களின் மனைவியரும், அவர்கள் வீட்டு பசுக்களும் உயர் தகுதியைப் பெற்றனர்.
  • ராஜன்யா என்னும் சொல் சத்தியரைக் குறிப்பதாகும். ஆட்சியாளர்களாகவும் போர் செய்பவர்களாகவும் இருந்த அவர்கள் பலி என்னும் வரியை வசூலித்தனர்.
  • வர்ண முறையில் பளிச்செனப் புலப்படும் மாற்றங்கள் ஏற்பட்டன. சமூகத்தில் மேல் மட்டத்தில் இரு பிரிவினரான பிராமண, சத்திரியர் ஆகியோரின் அதிகாரம் பெருகியது.
  • நால்வர்ணமுறை ஆழமாக வேர் கொண்டு காலப்போக்கில் மேலும் இறுகியது. பஞ்சவம்ச பிராமணத்தில் சத்திரியர்களே பிராமணர்களைக் காட்டிலும் உயர்ந்தவர் என முதலிடத்தில் வைக்கப்பட்டனர். ஆனால் சதபத பிராமணம் சத்திரியர்களைவிடப், பிராமணர்களே உயர்ந்தவர்கள் எனக் கூறுகிறது.
  • பின் வேத காலத்தில் வேத நூல்களில் குறிப்பிட்டுள்ளதைப்போல் புரோகிதர்களின் முக்கியத்துவத்திற்கு அதிக அழுத்தம் தரப்பட்டது. சத்திரியர்கள் பிராமணர்களின் மேலாதிக்கத்தைக் குறிப்பாக கோவில் கருவறைக்குள் நுழையும் அவர்களின் தனிப்பட்ட உரிமையை எதிர்த்தனர். வாழ்க்கை பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வனப்பிரஸ்தம், சன்யாசம் என நான்கு கட்டங்களாக (ஆசிரமங்கள்) பிரிக்கப்பட்டது. இதன் காரணமாய் சமணம், பௌத்தம், ஆசீவகம் போன்றவை தோன்றின.
  • வர்ண அடிப்படையிலான சமூகப் படிநிலை சமுதாயத்தில் ஆழமாகக் காலூன்றியது. சமூகத்தில் சடங்குகள் பரவலானதன் விளைவாக பிராமணர்கள் தங்கள் அதிகாரத்தை வளர்த்துக் கொண்டனர்.
  • ராஜன்யர்கள் எனப்பட்ட போர்ப் பிரபுக்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையே மோதல்கள் இருந்தபோதிலும், பிராமணர்கள் முக்கியமானவர்களாக ஆகிவிட்டதால் அரசர்கள் அவர்களை ஆதரித்தனர்.
  • இருபிறப்பாளர் (துவிஜா) எனும் கோட்பாடு வளர்ச்சி பெற்றது. அதனுடன் தொடர்புடைய உபநயனச்சடங்கு சமூகத்தின் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே உரியதானது. இச்சடங்கு கல்வி கற்பதன் தொடக்கத்தைக் குறிப்பதாகும்.
  • சமூகத்தின் நான்காவது பிரிவினருக்கு இவ்வுரிமை மறுக்கப்பட்டது. சூத்திரர்கள் காயத்ரி மந்திரத்தை ஓதுதல் கூடாது என்று வரையறுக்கப்பட்டது. பெண்களுக்கு உபநயனமும் காயத்ரி மந்திரமும் மறுக்கப்பட்டன.
  • அரசர் ஏனைய மூன்று வர்ணத்தார் மீதும் தனது அதிகாரத்தை நிலை நிறுத்தினர். பிராமணர்கள் ஆதரவை நாடுபவர்கள் எனவும், அவர்கள் அரசர்களால் பதவிநீக்கம் செய்யப்படலாம் எனவும் அய்த்ரேய பிராமணம் குறிப்பிடுகிறது.
  • சில தொழில்களைச் செய்யக்கூடிய தொழிற்பிரிவினரும் சமூகத்தில் மேல்நிலையை அடைந்தனர். எடுத்துக்காட்டாக தேர்களைச் செய்யும் ‘ரதகாரர்கள்’ மேல்நிலையின் அடையாளமாகப் பூணூல் அணியும் உரிமையைப் பெற்றிருந்தனர்.
  • வைசியர்கள் சாதாரண மக்களாகவே குறிப்பிடப்படுகின்றனர். வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, கைத்தொழில் போன்றவற்றைச் செய்துவந்த அவர்கள் பின்னர் வணிகர்களாக மாறினர். அவர்கள் அரசர்களுக்கு வரி செலுத்தினர். சமூகப் படிநிலையில் சூத்திரர்களுக்கும் கீழாக சில சமூகக் குழுக்கள் வைக்கப்பட்டனர்.
  • ‘கோத்திரம்’ என்னும் கோட்பாடு பின் வேதகாலத்தில் தோன்றியது. கோத்திரம் என்னும் சொல்லுக்கு ‘கிடை’ (ஆட்டுக்கிடை, மாட்டுக்கிடை) என்று பொருள். ஒரு குறிப்பிட்ட மூதாதையரின் தொப்புட்கொடி வழிவந்த நபர்களை இது குறிக்கின்றது.
  • ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் உடன்பிறப்புகளாவர். எனவே அவர்கள் தங்களுக்குள்ளே திருமணம் செய்யலாகாது. ஒரே மூதாதைய வம்சாவளியைச் சேர்ந்த குடும்பங்களைக் கொண்ட குழுக்கள் இருந்தன. இவை ஒன்றிணைந்து ஓர் இனக்குழுவாயின.

குடும்பம்

  • குடும்பம் வரையறை செய்யப்பட்ட உறவு முறைகளோடு நன்கு கட்டமைக்கப்பட்டிருந்தது. குடும்பம் என்பது ஒரு முக்கியமான சமூக அலகாகும். தந்தை வழிப்பட்டதாகவும் அவரின் ஆண் வாரிசுகள் வழிப்பட்டதாகவும் குடும்ப வம்சாவளி அமைந்திருந்தது.
  • குடும்பத்தினுள் உறவுகள் படிநிலைகளைக் கோண்டிருந்தன. பலதார மணம் நடைமுறையில் இருந்தது. குடும்பத்தின் நன்மைக்காகக் குடும்பம் சார்ந்த பல சடங்குகள் நடத்தப்பட்டன. திருமணமான மகன் தனது மனைவியோடு இச்சடங்குகளுக்குத் தலைமையேற்றார் (யஜமானன்)
  • இக்காலகட்டத்தில் வாழ்வின் வெவ்வேறு நிலைகளைக் குறிக்கக்கூடிய ஆசிரமக் கோட்பாடு வலுவாகக் காலூன்றவில்லை. பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வனப்பிரஸ்தம் ஆகியன குறிப்பிடப்பட்டிருந்தாலும் சந்நியாசம் என்ற நிலை பெரிதாகப் பேசப்படவில்லை.

பெண்கள்

சமூகம் பல்வேறு பிரிவுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் கொண்டதாக மாறியதாலும், தந்தை வழிக் குடும்ப அமைப்புகள் முக்கியம் பெற்றதாலும் சமூகத்தில் பெண்களின் நிலை கீழிறக்கப்பட்டது. தந்தை குடும்பத்தின் தலைவனாக இருந்தார். அடுத்த நிலையில் மூத்தமகன் முக்கியத்துவம் பெற்றிருந்தான். ரிக் வேத காலத்தில் பெண்கள் யாகங்களிலும் சடங்குகளிலும் கலந்து கொண்டனர். பின் வேதகாலத்தில் அவ்வுரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டது. பெண் குழந்தைகள் பிரச்சனைகளின் தோற்றுவாயாகக் கருதப்பட்டனர். பெண்கள் கால்நடைகள் வளர்ப்பது, பால்கறப்பது, தண்ணீர் இறைப்பது போன்ற பணிகளைச் செய்தனர்.

பொருளாதாரம்

இக்காலத்தில் பொருளாதார நடவடிக்கைகள் பெருமளவில் பன்முகத் தன்மை கொண்டதாக மாறின. வேளாண்மை, கால்நடை மேய்ச்சல், பொருள் உற்பத்தி, வணிகம் ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச் சென்றன.

வேளாண்மை

பின் வேதகாலத்தில் வேளாண்மைச் செயல்பாடுகள் அதிகரித்தன. ‘சதபத பிராமணம்’ அரசர்கள் மேற்கொண்ட கலப்பையோடுச் தொடர்புடைய சடங்குகளைப் பற்றி கூறுகிறது. இக்குறிப்பானது அரசர்கள் வேளாண்மைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தையும், பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டிய காரணத்தினால் மேய்ச்சல் பொருளாதாரத்திலிருந்து வேளாண்மைக்கு மாறியதையும் கோடிட்டுக் காட்டுகின்றன. பலராமன் கலப்பையோடு காட்சிப்படுத்தப்படுவது வேளாண்மைக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. வேதகால மக்கள் பார்லி, அரிசி, கோதுமை ஆகியவற்றைப் பயிரிட்டனர். பஞ்சாப் பகுதியின் பிரதான உணவுதானியம் கோதுமையாகும். கங்கை – யமுனை நதிக்கரைப் பகுதிகளில் வாழ்ந்த வேதகால மக்கள் அரிசியைப் பயன்படுத்தினர். வேதச் சடங்குகளில் கோதுமையைக் கட்டிலும் அரிசி அதிகம் பயன்படுத்தப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

கால்நடை வளர்ப்பு

கால்நடை வளர்ப்பு முக்கியத் தொழிலாகத் தொடர்ந்தது. கால்நடை புனிதமானதாகக் கருதப்பட்டது. பண்ட பரிமாற்றத்திலும் மறு விநியோகத்திலும் ஒரு பகுதியாக அது விளங்கியது. கால்நடைகளை ‘தட்சிணை’யாக வழங்கும் பழக்கம் தொடர்ந்தது. கால்நடை மேய்ச்சல் வேளாண்மையின் துணைத் தொழிலானது.

கைவினைப்பொருட்கள் உற்பத்தி

  • கலைகளும் கைவினைத்தொழில்கள் மூலம் பொருள் உற்பத்தியும் பின் வேதகாலத்தில் வெகுவாகப் பரவின. தொழில் நிபுணத்துவம் ஆழமாக வேரூன்றியது. தொழில் சார்ந்து பல சமூகக் குழுக்கள் உருவாயின. பொ.ஆ.மு. 1200 இல் இரும்புத் தொழில் நடைபெற்றதாகக் கண்டறியப்படுள்ளது. செம்பு, ஈயம், தங்கம், காரீயம், வெண்கலம் ஆகியனவும் குறிப்பிடப்பட்டுள்ளன. இப்புலோகங்கள் உருக்கப்பட்டு நிபுணத்துவம் வாய்ந்தவர்களால் பொருள்களாக உருவாக்கப்பட்டன. போருக்கும் வேட்டைக்கும் தேவைப்படும் ஆயுதங்கள் செய்ய செம்பு பயன்படுத்தப்பட்டது. பெண்கள் துணி நெய்தனர் மர வேலைகளும், மண்பாண்டத் தொழிலும், தோல் பொருள்கள் பணியும் நன்கு அறியப்பட்டன.
  • மண்பாண்டங்கள் செய்வோரைக் குறிக்கும் ‘குலாலா’ என்னும் சொல்லும், கம்பளி நெய்வோரைக் குறிக்கும் ‘உர்னாசூத்ரா’ என்னும் சொல்லும் காணப்படுகின்றன. வில், அம்பு செய்கின்றவர்கள், கயிறு திரிப்பவர்கள், தோலாடை செய்பவர்கள், கல்லுடைப்போர், தங்க வேலை செய்வோர் போன்ற நிபுணத்துவம் வாய்ந்த பணிகளை மேற்கொண்டோர் குறித்த குறிப்புகளும் வேதப்பாடல்களில் உள்ளன.
  • மருத்துவர், சலவை செய்வோர், வேட்டையாடுவோர், படகோட்டிகள், சமையல் செய்வோர், ஆரூடம் கூறுவோர் ஆகியோர் குறித்த குறிப்புகளும் உள்ளன,.
  • யானை, யானைப் பாகர் பற்றிய குறிப்புகள் அதர்வ வேதத்தில் பல இடங்களில் தென்படுகின்றன. மேற்சொல்லப்பட்ட செய்திகள் மாறுதலுக்கு உள்ளாகிக்கொண்டிருந்த ஒரு சமூகத்தைக் குறிப்பதாக அமைகின்றன.
  • வேத வேள்விகளையும் சடங்குகளையும் செய்வோரும் ஒருவகைப்பட்ட சேவைக் குழுவினரே. பல்வேறு சடங்குகளை நடத்துவதன் மூலம் மதகுரு அரசனுடைய நடவடிக்கைகளைச் சட்டப்பூர்வமாக்கினார். கால்நடைகள் மற்றும் ஏனைய விலங்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் சொத்துக்கள் மதிப்பிடப்பட்டன. தட்சிணை வழங்கியதைப் பற்றிய ஒரு குறிப்பு 20 ஒட்டகங்களையும் 100 தங்க கழுத்தணியையும் 300 குதிரைகளையும் 10,000 பசுக்களையும் தட்சிணையாக வழங்கியதாகக் கூறுகிறது.

வணிகமும் பரிவர்த்தனையும்

வணிகமும் பண்டப் பரிவர்த்தனையும் பின் வேத காலத்தில் வளர்ச்சி பெற்றது. தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்பட்ட இடங்களில் கிடைத்த பொரூள்கள் சரக்குகள் ஓரிடம் விட்டு வேறிடம் கொண்டு செல்லப்பட்டதைக் காட்டுகின்றன. குறிப்பிட்ட பொருள்களில் வணிகம் செய்த கவிகைவண்டி வணிகக் குழுக்கள் இருந்துள்ளன. நாணயங்கள் புழக்கத்தில் இருந்ததற்கான சான்றுகள் இல்லை என்பதால் பண்டமாற்று முறையே நடைமுறையில் இருந்திருக்க வேண்டும் எனலாம். பொ.ஆ.மு. 600 வாக்கில்தான் நாணயங்கள் அறிமுகமாயின.

மதப் பற்றும் நம்பிக்கையும்

பின் வேதகாலத்தின்போது மேல் கங்கைப் பகுதியானது ஆரியப் பண்பாட்டின் மையமாக விளங்கியது. இப்பகுதியே குரு பாஞ்சாலர்களின் பகுதியாக விவரிக்கப்பட்டுள்ளது. வேதக் கடவுள்களான அக்னி, இந்திரன் ஆகியோர் தங்கள் செல்வாக்கை இழந்தனர். பிரஜாபதி முக்கியக் கடவுளானார். சிவனின் மற்றொரு வடிவமாகக் கருதப்படும் சடங்குகளின் கடவுளான ருத்ரன் முக்கியக் கடவுளானார். சதபதபிராமணம் ருத்ரனுடைய வேறு பெயர்களை பசுனம்பதி, சர்வா, பவா, பகிகா என பட்டியலிடுகிறது. மக்களைக் காக்கும் கடவுளாக விஷ்ணு குறிப்பிடப்படுகிறார். விஷ்ணுவின் அவதாரங்கள் குறித்த குறிப்புகள் ஏதுமில்லை. ஒவ்வொரு வர்ணத்தாரும் தங்களுக்கான கடவுளர்களைப் பெற்றிருந்தனர்.

சடங்குகள்

சமுதாயத்தில் சடங்குகள் முக்கியமாயின. சடங்குகளும் வேள்விகளும் பலியிடுதலும் தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் என மக்கள் நம்பினர். காலப்போக்கில் இச்சடங்குகள் அதிக செல்வத்தையும் நேரத்தையும் எடுத்துக்கொள்வதாக மாறின. இம்மாற்றம் சடங்குகளுக்கான தேவை அதிகமானதையும் அதிகம் செலவழிக்கத் தயாராக இருந்த செல்வம் படைந்த பிரிவு சமூகத்தில் உருவானதையும் சுட்டிக்காட்டுகிறது. சடங்குகள் மிகச் சரியாக நடத்தப்பட வேண்டுமென வற்புறுத்தப்பட்டது. காணிக்கைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் வற்புறுத்தப்பட்டது. சடங்குகளை நடத்துவதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற மனப்போக்கு, செல்வமிருந்தால் எதையும் சாதிக்கலாம் எனும் எண்ணத்தை உருவாக்கியது. இப்படிப்பட்ட பார்வையை உபநிடதங்கள் மறுக்கின்றன. மாறாக ஆன்மாவை உணர வேண்டுமென அழுத்தம் கொடுக்கின்றன. சடங்குகளின் இப்படிப்பட்ட சீர்கேடும் செல்வத்தின் மீதான மத குருமார்களின் ஆசையும் எதிர்ப்புகளை ஏற்படுத்தின. அதன் விளைவாக பௌத்த சமண ஆசீவக மதங்கள் தோன்றின. அவை ஒழுக்கத்தையும் சரியான மனித நடவடிக்கைகளையும் முன்னிறுத்தின.

தத்துவமும் கல்வியும்

  • தத்துவம், இலக்கியம், அறிவியல் ஆகிய அறிவுத் துறைகளும் இக்காலத்தில் வளரலாயின. கற்றலின் பல பிரிவுகளான இலக்கணம், கணிதம், நன்னெறி, வானியல் போன்றவையும் வளர்ந்தன.
  • கல்வியானது ஆண்களுக்கு மட்டுமே உரியதானது. வேத நூல்கள் உருவாக்கம், உச்சரிப்பிற்கும் இலக்கணத்திற்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், வாய்மொழி பரிவர்த்தனை ஆகியவை வேதகால கல்வியில் மனப்பாடம் செய்வதும், ஒப்புவித்தலும் அதன் ஒரு பகுதியாக இருந்ததை தெரிவிக்கிறது.
  • பல்வேறு வகையான நூல்களின் உருவாக்கம் வளர்ச்சியையும் அறிவுக்கான தேடல் ஏற்பட்டிருந்ததையும் உணர்த்துகின்றன. காடுகளில் தங்கி தவம் இயற்றும் முனிவர்களோடு ஆரண்யகங்கள் தொடர்புடையனவாகும்.
  • உபநிடத (உபநிசத் = அருகே அமர்) நூல்கள் இக்காலத்தில் இயற்றப்பட்டன. அவை தத்துவ விசாரணை நூல்களாகும். வேத நூல்களின் இறுதிப்பகுதியாக அவை இணைக்கப்பட்டதால் அவை வேதாந்தங்கள் எனவும் அழைக்கப்பட்டன.
  • அவை அறிவு, தன்னை உணர்தல், ஆன்மா, தியானம், பிறப்பு இறப்பு எனும் சுற்றுவட்டம் என்பனவற்றைக் கோடிட்டுக் காட்டின. கர்மா, நன்னடத்தை , சுயகட்டுப்பாடு, இரக்கம், கொடை ஆகியவற்றை நல்லொழுக்கங்கள் என்று சுட்டிக் காட்டின.
  • வேதகாலச் சமூகத்தில் சடங்குகள் ஆதிக்கம் பெற்றிருந்த வாழ்க்கைமுறை இருந்தபோதிலும் சில ஞானிகள் அறிவையும் நல்லொழுக்கத்தையும் பின்பற்றுபவர்களாக இருந்தனர்.
  • சத்யமேவ ஜயதே (வாய்மையே வெல்லும்) என்ற சொற்றொடர் முண்டக உபநிஷத் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
  • காலனிய கால அறிஞர்கள் பண்டைய இந்திய இலக்கியங்களின்மீது ஆர்வம் கொள்வதற்கு வெகுகாலத்திற்கு முன்னரே, 1657இல் மொகலாய இளவரசரான தாராசுகோ உபநிடதங்களை பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார்.

வாழ்க்கையின் ஏனைய கூறுகள்

பின் வேதகாலத்தில் இசையும் கவின்கலைகளும் செழித்ததற்கான சான்றுகள் உள்ளன. இசைக்கருவிகளான புல்லாங்குழல், மேளம், வீணை ஆகியவை பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. வேளாண்மை, கால்நடை மேய்ச்சல் ஆகியவற்றின் விரிவாக்கம், வளர்ச்சி போன்றவற்றின் காரணமாக மக்கள் தானியம், மரக்கறி, வெண்ணெய், நெய் ஆகியவை கொண்டு செய்யப்பட்ட வகைவகையான உணவுகளையும் பானங்களையும் உண்டனர். பட்டு பயன்பாட்டில் இருந்தமைக்கும் தங்கத்தாலும், செம்பினாலும் செய்யப்பட்ட அணிகலன்கள் பயன்படுத்தப்பட்டமைக்கும் சான்றுகள் உள்ளன. உலோகத்தினாலான கண்ணாடிகள் பயன்படுத்தப்பட்டன. தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட இடங்களில் (கல் மணிகளும்) கண்ணாடி மணிகளும் கிடைத்துள்ளன. வேதகாலத்தின் பிற்பகுதியில் இத்தொழில்கள் மேலும் வளர்ந்தன.

பின்வேதகாலத்தின் தனிச்சிறப்பியல்கள்

இனக்குழுக்களின் வம்சாவளித் தோன்றல்கள், கங்கைச் சமவெளியில் பல குறுஅரசுகளின் ஆட்சி உருவாகியது. வளர்ச்சிப் போக்கில் பொ.ஆ.மு. 600 க்குப் பின்னர் அவை அரசுகளாக வளர்ந்தது என்பதே பின் வேதகாலத்தின் சிறப்பியல்புகளாகும். ஜனபதங்கள், ராஷ்டிரங்கள் எனும் பெயர்களில் நிலப்பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டன. அரசர் அதிக அதிகாரங்களைப் பெற்றார். சமூகப் பாகுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் ஆழமாக வேர்கொண்டன. வர்ணமுறை வளர்ச்சியடைந்தது.

One Comment

  1. புரட்டு வரலாறு . பழந்தமிழர் வரலாறு சீற்குறைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!