Samacheer NotesTnpsc

மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் Notes 8th Social Science Lesson 16 Notes in Tamil

8th Social Science Lesson 16 Notes in Tamil

16. மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள்

அறிமுகம்

பிறப்பால் அனைவரும் சமம். உலகில் உள்ள ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தன் விருப்பப்படி வாழ உரிமை உண்டு. மனித உரிமைகளானது தனிநபர்கள் மற்றும் சமூகம் தொடர்பானவை. மனித உரிமைகள் மகள் சுதந்திரமாக மற்றும் விருப்பப்படி வாழ்வதை உறுதிசெய்வதுடன் இயல்பாக பெறும் அனைத்து உரிமைகளையும் குறிப்பிடுகிறது. மக்களின் சமஉரிமைகளை ஒவ்வொரு நாடும் உறுதி செய்கிறது.

மனித உரிமைகள் என்றால் என்ன?

மனித உரிமைகள் என்பது இனம், பாலினம், தேசிய இனம், இனக்குழுக்களின் தன்மை, மொழி மற்றும் சமய வேறுபாடின்றி அனைத்து மனிதர்களுக்குமான இயல்பான உரிமைகள் ஆகும்.

மனித உரிமைகள் என்ற கருத்து எங்கிருந்து ஆரம்பித்தது?

அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களின் தொகுப்பானது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் வேரூன்றியிருந்தது.

அ) எழுதப்பட்ட மனித உரிமை ஆவணங்களின் முன்னோடி

மகா சாசனம் (The Magna Carta), 1215, இங்கிலாந்து – மக்களுக்கு புதிய உரிமைகளை வழங்கியதுடன் அரசரை சட்டத்திற்கு உட்படுத்தியது.

உரிமை மனு (The Petition of Right), 1628, இங்கிலாந்து – மக்கள் உரிமைகளின் தொகுப்பு

ஹேபியஸ் கார்பஸ் சட்டம், 1679, இங்கிலாந்து – மக்களின் சுதந்திரத்தை பாதுக்காப்பதற்கான சட்டம்.

ஆங்கில உரிமைகள் மசோதா, 1689 – சில அடிப்படை சமூக/குடிமக்கள் உரிமைகளை அமைத்தல்.

மனிதன் மற்றும் குடிமக்களின் உரிமைகள் பற்றிய பிரான்ஸ்சின் அறிவிப்பு, 1789 – சட்டத்தின் கீழ் அனைத்து குடிமக்களும் சமம் என்று கூறும் பிரான்சின் ஆவணம்.

அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் மற்றும் உரிமைகள் மசோதா, 1791 – குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கிறது.

ஆ) ஐக்கிய நாடுகள் சபையின் தோற்றம்

  • மனித உரிமைகள் பற்றிய சிந்தனை இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் வலுவாக எழுச்சி பெற்றது. இப்போர் கற்பனை செய்ய முடியாத வகையில் மனித உரிமை மீறலுக்கு வழிவகுத்தது.
  • போர்க் காலங்களில் மனித உயிர்கள் அதன் மதிப்பினை இழந்தன. மேலும் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்க்கையின் இறுதிவரை கடுமையாக போராட வேண்டியிருந்தது.
  • தனிநபர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் போதுமானதாக இல்லை என்பதை இரண்டாம் உலகப் போரின் போது நடந்த கொடுமைகள் தெளிவுபடுத்தின.
  • உலகின் பல பகுதிகளில் பல்வேறு காரணங்களால் மனித உரிமைகள் மறுக்கப்பட்டன மற்றும் நீக்கப்பட்டன. இது சில நாட்டின் அரசாங்கத்தால் மட்டுமே மனித உரிமைகளை பாதுகாக்க முடியாது என்பதை நிரூபித்தது.
  • வாழ்க்கை, சுதந்திரம், உணவு, இருப்பிடம், தேசம் ஆகியவை நியாயமற்ற முறையில் மறுக்கப்படமாட்டாது என்பதை மக்கள் உறுதிப்படுத்த விரும்பினர்.
  • 1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சாசனச் சட்டம் உருவாக்கப்பட்ட சான்பிரான்சிஸ்கோ மாநாட்டில் மக்களின் இத்தகைய விருப்பங்கள் ஒரு முக்கியப் பங்கினை வகித்தன.
  • இச்சூழ்நிலையில் 1945ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் நாள் நிறுவப்பட்ட அமைப்பான ஐக்கிய நாடுகள் சபை இந்தப் பிரச்சனையில் கவனம் செலுத்தியது.
  • அமைதி மற்றும் பாதுகாப்பு, மேம்பாடு, மனிதாபிமான உதவி மற்றும் சமூக, பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அனைத்துக் கொள்கையிலும் திட்டங்களிலும் முக்கிய கருப்பொருளாக இந்த மனித உரிமைகள் விளங்குகின்றன.

மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு – முகவுரை

மனிதர்கள் அனைவரும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர். அவர்கள் அறிவாற்றலையும் மனசாட்சியையும் இயற்பண்பாகக் கொண்டவர்களாகவும் எல்லா மக்களிடையேயும் பொதுவான சகோதரத்துவத்தின் உணர்வை வளர்க்க கடமைப்பட்டவர்களும் ஆவர்.

இ) மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு (UDHR)

ஐக்கிய நாடுகள் சபையின் மிகப்பெரிய சாதனைகளுள் ஒன்று மனித உரிமைகளுக்கான சட்டத்தை உருவாக்கியதாகும். இந்த இலக்குகளை அடைவதற்காக ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக்கான ஓர் ஆணையத்தை நிறுவியது.

  • எலினார் ரூஸ்வெல்டின் (முன்னாள் அமெரிக்க அதிபர் பிராங்களின் டிரூஸ்வெல்டின் மனைவி) வலுவான தலைமையால் வழிநடத்தப்பட்ட ஆணையம் உலகின் கவனத்தை ஈர்த்தது.
  • .இறுதியாக உலக மனித உரிமைகள் அறிவிப்பு ஐ.நா. பொதுச்சபையால் 1948இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அது மனித உரிமைகள் வரலாற்றில் ஒரு மைக்கல் ஆகும்.
  • இந்த அறிவிப்பு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஐ.நா. பொதுச்சபையால் 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. (பொதுச்சபை தீர்மானம் 217A).
  • இதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ஆம் நாள் மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இது 1950ஆம் ஆண்டிலிருந்து வழக்கமாக கடைபிடிக்கப்படுகிறது. இது மனித உரிமைகளின் நவீன சர்வதேச மகாசாசனம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • இதன் கொள்கைகள் பெரும்பாலான நாடுகளின் (185 நாடுகளுக்கும் மேல்) அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • உலக மனித உரிமைகள் அறிவிப்பு 500க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதுவே உலகில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட ஆவணம் ஆகும்.

சைரஸ் சிலிண்டர் கி.மு. (பொ.ஆ.மு. ) 539

பண்டைய பாரசீகத்தின் முதல் மன்னரான மகா சைரஸ், அடிமைகளை விடுவித்து மக்கள் அனைவரும் தங்கள் சொந்த மதத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு என்று அறிவித்தார். இன சமத்துவத்தை நிலைநாட்டினார். மேற்கூறியவைகளும், மற்ற ஆணைகளும் கியூனிபார்ஃம் எழுத்துக்களில் அக்காடியன் மொழியில் சிலிண்டர் வடிவிலான சுட்ட களிமண்ணில் பதிவு செய்யப்பட்டன. இது ஐக்கிய நாடுகள் சபையின் ஆறு அலுவல் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவை உலக மனித உரிமைகள் பிரகடனத்தின் முதல் நான்கு விதிகளுக்கு இணையாக உள்ளன.

மனித உரிமைகள் கொண்டுள்ள அடிப்படை மதிப்புகள்

அ. கண்ணியம் : வாழ்வாதற்கான உரிமை , ஒருமைப்பாட்டிற்கான உரிமை, கட்டாய தொழிலாளர் முறை, அடிமை முறை, இழிவான தண்டனை ஆகியவற்றிற்கான தடை.

ஆ. நீதி : நேர்மையான விசாரணைக்கான உரிமை, குற்றத்திற்கு ஏற்றாற்போல் தண்டனை, ஒரே குற்றத்திற்காக ஒன்றுக்கு மேற்பட்ட முறை விசாரணைக்குட்படுத்தாத உரிமை.

இ. சமத்துவம் : சட்டத்தின் முன் அனைவரும் சமம். இனம், மதம், பாலினம், வயது, திறமை மற்றும் இயலாமை ஆகியவற்றில் பாகுபாடின்மை.

மனித உரிமையின் அடிப்படைப் பண்புகள்

இயல்பானவை : அவை எந்தவொரு நபராலும் அதிகாரத்தாலும் வழங்கப்படுவதில்லை.

அடிப்படையானவை : இந்த அடிப்படை உரிமைகள் இல்லையென்றால் மனிதனின் வாழ்க்கையும், கண்ணியமும் அர்த்தமற்றதாகிவிடும்.

மாற்ற முடியாதவை : மற்ற உரிமைகளை ஏற்கனவே அனுபவித்துக் கொண்டிருந்தாலும் கூட இந்த அடிப்படை உரிமைகளை மறுக்க முடியாது.

உலகளாவியவை : இந்த உலகளாவிய உரிமைகள் ஒருவரின் தோற்றம் அல்லது நிலையைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் இந்த உரிமைகள் பொருந்தும். இந்த உரிமைகள் தேசிய எல்லையைத் தாண்டி அனைத்து நாடுகளிலும் அமல்படுத்தப்படுகின்றன.

சார்புடையவை : இவைகள் ஒன்றுக்கொன்று சார்புடையவைகள் ஆகும். ஏனென்றால் ஒரு உரிமையைப் பயன்படுத்தும் போது மற்றொன்றை உணராமல் இருக்க முடியாது.

  • ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆ நாள் உலக மனித உரிமைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. மனித உரிமைகளை உலக அளவில் அறிவித்த பெருமை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையையே சாரும்.

மனித உரிமைகளின் வகைகள்

மனித உரிமைகள் பிரகடனத்தில் 30 சட்டப்பிரிவுகள் உள்ளடங்கியுள்ளன. இந்த உரிமைகள் ஐந்து முதன்மைப் பிரிவுகளாக விரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவைகள் பின்வருமாறு.

அ. வாழ்வியல் உரிமைகள்

  • வாழ்வியல் (சிவில்) உரிமைகள் என்ற சொல் ஒவ்வொரு நபருக்கும் அரசாங்கத்தின் சட்டங்களால் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுகிறது
  • இந்த உரிமைகள் அனைவருக்கும் சமமாக கருதப்பட வேண்டியவைகள் ஆகும்,
  • இதில் வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம், அடிமைத் தளையிலிருந்து விடுபடுதல், நியாயமற்ற முறையில் கைது செய்யாமை ஆகிய உரிமைகள் அடங்கும்.

ஆ. அரசியல் உரிமைகள்

  • அரசாங்கத்தை அமைப்பதிலும், நிர்வகிப்பதிலும் அரசியல் உரிமைகள் பயன்படுத்தப்படுகின்றன.
  • வாழ்வியல் உரிமைகளும், அரசியல் உரிமைகளும் நவீன மக்களாட்சியுடன் நேரடி தொடர்புள்ளவைகள் ஆகும். அவைகள் அரசியல் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதிலிருந்து தனிநபரை பாதுகாக்கின்றன.
  • மேலும் ஒவ்வொரு தனிநபரையும் தங்கள் நாட்டின் அரசியல் செயல்பாட்டில் பங்கேற்க இவ்வுரிமைகள் வழிவகுக்கிறது.
  • கருத்துச் சுதந்திரம், அமைதியாக கூட்டம் நடத்துதல், தன் நாட்டின் அரசாங்கத்தில் பங்குகொள்ளும் உரிமை, வாக்களிக்கும் உரிமை, பேச்சுரிமை மற்றும் தகவல்களைப் பெறும் உரிமை ஆகியவைகள் அரசியல் உரிமைகளுள் அடங்கும்.

இ. சமூக உரிமைகள்

ஒரு தனிநபர் சமுதாயத்தில் முழுமையாக பங்கேற்பது அவசியமானது ஆகும். சமூக உரிமைகள் என்பது வாழ்க்கைத் தரத்திற்கு தேவையான கல்வி, சுகாதாரம், உணவு, உடை, தங்குமிடம் மற்றும் சமூக பாதுகாப்பு ஆகிய உரிமைகளை உள்ளடக்கியதாகும்.

ஈ. பொருளாதார உரிமைகள்

பொருளாதாரத்தில் பங்கேற்பதற்கான உரிமை என்பது அனைவருக்கும் பயனளிக்கக் கூடிய வகையில் விரும்பத்தக்க வேலைக்குச் செல்வதாகும். ஒவ்வொரு தனிநபரும் தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய நிலைமை இருப்பதை உறுதி செய்கிறது. வேலைவாய்ப்பு, நியாயமான வேலை நேரம், தங்குமிடம், கல்வி, போதுமான வாழ்க்கைத் தரம் மற்றும் சொத்துரிமை ஆகிய உரிமைகள் இதில் அடங்கும்.

உ. கலாச்சார உரிமைகள்

சமயச்சுதந்திரம், மொழியைப் பேசுவதற்கான உரிமை மற்றும் சமூகத்தின் கலாச்சார வாழ்க்கையை நடைமுறைப்படுத்துவதற்கான உரிமை, அறிவியல் முன்னேற்றத்தில் பங்கு பெறுவதற்கான உரிமை, தார்மீக மற்றும் பொருள் ஆர்வத்தைப் பாதுகாக்கும் உரிமை ஆகியவைகள் கலாச்சார உரிமைகள் ஆகும்.

மனித உரிமைகள் மற்றும் வாழ்வியல் உரிமைகளுக்கு இடையேயான வேறுபாடுகள்

மனித உரிமைகள் வாழ்வியல் (சிவில்) உரிமைகள்
மனித உரிமைகளானது தேசிய இனம், பாலினம், இன, மதம் மற்றும் வயது ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் எல்லா இடங்களிலும் அனைவருக்கும் உரித்தானது. சிவில் உரிமைகள் என்பத் ஒரு குறிப்பிட்ட நாட்டில் அல்லது மாநிலத்தில் குடியுரிமை பெறுவதன் மூலம் ஒருவர் அனுபவிக்கும் உரிமைகள் ஆகும்.
மனித உரிமைகள் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் மற்றும் அனைத்து நாடுகளுக்கும் உரியதாகும். சிவில் உரிமைகள் நாட்டிற்கு நாடு அல்லது அரசாங்கத்திற்கு அரசாங்கம் பெரிதும் வேறுபடுகின்றன, இவை அரசியலமைப்புச் சட்டத்துடன் தொடர்பானவை.
எந்த ஒரு தேசமும் தனிநபருக்கான மனித உரிமைகளை பறிக்க முடியாது. அந்தந்த நாடுகள் பல்வேறு வகையான சிவில் உரிமைகள் மூலம் சுதந்திரங்களை வழங்கவோ அல்லது மறுக்கவோ முடியும்.
மனித உரிமைகள் பிறப்பின் அடிப்படையில் இயற்கையாக அமையப்பெற்ற அடிப்படை உரிமைகள் ஆகும். சிவில் உரிமைகள் சமூகத்தினால் உருவாக்கப்படுகின்றன.

மனித உரிமைகள் ஆணையம்

மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக ஓர் ஆணையத்தை அமைக்க ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய அங்கமான பொருளாதார மற்றும் சமூக சபை (ECSOC) அதிகாரம் பெற்றது. மனித உரிமைகளின் பாதுகாப்பை இறுதி செய்வதற்காக தேசிய மற்றும் மாநில அளவிலான மனித உரிமை ஆணையங்கள் நிறுவப்பட்டன்.

அ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC)

  • இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) 1993 ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் நாள் நிறுவப்பட்டது.
  • இது சுதந்திரமான, சட்டப்பூர்வமான, அரசியலமைப்பு சாராத ஓர் அமைப்பாகும். இதன் தலைமையகம் புதுடெல்லியில் அமைந்துள்ளது.
  • தேசிய மனித உரிமைகள் ஆணையம் என்பது ஒரு தலைவரையும் பிற உறுப்பினர்களையும் உள்ளடக்கிட ஓர் அமைப்பாகும்.
  • தலைவரையும் உறுப்பினர்களையும் உள்ளடக்கிய ஓர் அமைப்பாகும்.
  • தலைவரையும் உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். அவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் (அ) 70 வயது வரை இதில் எது முன்னதாக வருகிறதோ அதுவரை பதவியில் நீடிப்பார்.
  • தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஐந்து பிரிவுகளைக் கொண்டுள்ளது.
  • சட்டப்பிரிவு, புலனாய்வுப் பிரிவு, ஆராய்ச்சி மற்றும் திட்டப் பிரிவு, பயிற்சி அளித்தல் பிரிவு மற்றும் நிர்வாகப் பிரிவு ஆகியனவாகும்.

ஆ. மாநில மனித உரிமைகள் ஆணையம்

  • தமிழ்நாட்டில் 1997ஆம் ஆண்டு ஏப்ரல் 17இல் மாநில மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்டது.
  • இது மாநில அளவில் செயல்படுகிறது.
  • இது ஒரு தலைவர் உட்பட மூன்று உறுப்பினர்களை உள்ளடக்கியது.
  • இந்திய அரசியலமைப்பின் 7வது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டிய, பொதுப்பட்டியல் ஆகியவற்றின் கீழுள்ள துறைகள் தொடர்பான மனித உரிமை மீறல் தொடர்பானவைகளை மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்கும் (NHRC ஏற்கனவே விசாரிக்கும் வழக்குகளைத் தவிர).

மனித உரிமை நிறுவனங்கள்

  • உலகெங்கிலும் பல நிறுவனங்கள் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் முயற்சிகளை எடுத்துள்ளன. இந்த அரசுசாரா நிறுவனங்கள் அரசாங்கங்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதுடன் மனித உரிமைக் கொள்கையின்படி செயல்படுமாறு வலியுறுத்துகின்றன.
  • அவைகளுள் ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் (Amnesty International), குழந்தைகள் பாதுகாப்பு நிதியம் (Children’s Defence fund), மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) ஆகியனவாகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகள்

பிரிவு 24 – குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடை செய்கிறது.

பிரிவு 39 (f) – ஆரோக்கியமாக குழந்தைகள் வளர வழிவகைச் செய்கிறது.

பிரிவு 45 – 6 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியை வழங்க அரசு முயல்கிறது.

குழந்தைக்கான உரிமைகள்

  • 1989ஆம் ஆண்டு நடைபெற்ற குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் பிரிவு 1 இன்படி பதினெட்டு வயதுக்குட்பட்ட அனைவரும் ‘குழந்தை’ எனப்படுவர்.
  • குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான மாநாட்டின் அறிக்கை 1989ஆம் ஆண்டு நவம்பர் 20இல் வெளியிடப்பட்டது.
  • குழந்தை ஒரு முக்கியமான தேசியச் சொத்தாக கருதப்படுகிறது.
  • தேசத்தின் எதிர்காலமானது அந்நாட்டின் குழந்தைகள் எவ்வாறு, வளர்ந்து முதிர்ச்சியடைகிறார்கள் என்பதைப் பொறுத்தது.
  • எனவே அனைத்து வகையான சுரண்டல்கள் மற்றும் தவறான பயன்பாட்டிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது நமது சமூகத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.
  • இந்தியாவில் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

1978 – சர்வதேச பெண்கள் ஆண்டு

1979 – சர்வதேச குழந்தைகள் ஆண்டு என ஐ.நா.சபை அறிவித்துள்ளது.

அ) கல்வி உரிமைச் சட்டம்

6 முதல் 14வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசமாக மற்றும் கட்டாயக் கல்வியை அரசு வழங்குவதற்கு சட்டப்பிரிவு 21A வழிவகைச் செய்கிறது.

ஆ) குழந்தைத் தொழிலாளர் சட்டம் (தடை மற்றும் சீரமைப்புச்சட்டம், 1986)

இது 15 வயது பூர்த்தியடையாத எந்த ஒரு குழந்தையையும் வேலைக்கு அமர்த்த தடை செய்கிறது.

இ) சிறார் நீதிச்சட்டம், 2000 (குழந்தைகளை பராமரித்தல் மற்றும் பாதுகாத்தல்)

இந்தச் சட்டம் போதுமான கவனிப்பு இல்லாமல் இருக்கும் குழந்தைகளை நட்பு ரீதியில் அணுகி அவர்களை சீர்திருத்த முயற்சி மேற்கொள்கிறது.

ஈ) போக்சோ (POCSO) சட்டம், 2012

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், குழந்தைகளின் நலனே மிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய அம்சம் எனக் கருதுகிறது.

1098 குழந்தைகளுக்கான உதவி மைய எண்:

இது இந்தியாவில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட 24 மணிநேர கட்டணமில்லா அவசரத் தொலைத் தொடர்பு சேவையாகும். குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தைத் திருமணம் மற்றும் ஏதேனும் வன்கொடுமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

பெண்கள் உரிமைகள்

  • பெண்கள் மற்றும் சிறுமியின் உரிமைகளும் மனித உரிமைகளாகும்.
  • பெண்களுக்கு தங்களது உரிமைகளை முழுமையாகவும் சமமாகவும் அனுபவிக்கவும், அனைத்து பாகுபாடுகளிலிருந்தும் விடுபடவும் உரிமை உள்ளது.
  • அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவைகள் மனித உரிமைகளுக்கான அடிப்படைகள் ஆகும்.
  • ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் சமமான உரிமைகளை உறுதிசெய்கிறது.
  • 1979ஆம் ஆடில் நடைபெற்ற மாநாட்டில் பெண்களுக்கெதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான மசோதாவை ஐ.நா. பாதுகாப்பு சபை ஏற்றுக்கொண்டது.
  • இது பெண்களுக்கான சர்வதேச உரிமைகள் மசோதா என அழைக்கப்படுகிறது.
  • 1995ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில் நடைபெற்ற நான்காவது உலக மகளிர் மாநாடு , பெண்களின் உரிமைகளை அங்கீகரிப்பதற்கும் உலகளவில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குமான ஒரு தளத்தை உருவாக்கியது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டங்கள் இந்த இலக்குகளை அடைவதற்கு தேவையானவற்றை கண்காணிக்கிறது.
  • மேலும் பெய்ஜிங் மாநாட்டின் இலக்குகளை நடைமுறைப்படுத்துவதற்காக யுனிபெம் (UNIFEM) என்றழைக்கப்படும் பெண்களுக்கான ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு நிதி அமைப்பு 1995 முதல் செயல்பட்டு வருகிறது.
  • பெண்களும் சிறுமிகளும் உரிமைகளை முழுமையாக அனுபவிக்கும் போதுதான் உண்மையான சமத்துவம் நிலவுகிறது.

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலவாழ்வுச் சட்டம்

இந்தச் சட்டம் மூத்த குடிமக்களுக்கும் பெற்றோர்களுக்கும் வழங்குவதற்கும் அவர்களின் குழந்தைகள் மற்றும் வாரிசுதாரர்களின் சட்டப்பூர்வமான கடமையாகிறது. முதுமை காலத்தில் பாதுகாப்பும் ஆதரவும் மனித உரிமைகளாக கருதப்படுகின்றன.

சட்டங்கள் விதிகள்
இந்து விதவை மறுமணச் சட்டம், 1856 விதவைகள் மறுமணத்தை சட்டப்பூர்வமாக்கியது.
இந்த வாரிசு சட்டம், 1956 பெண்கள் தங்கள் பெறோர்களின் சொத்தினை மரபுவழியாக பெறுவதை உறுதிசெய்கிறது.
வரதட்சணைத் தடைச் சட்டம், 1961 வரதட்சணை என்ற பெயரில் மருமகளை மோசமாக நடத்துவதற்கு கடுமையாக தண்டனை வழங்குகிறது.
பெண்களை கேலி செய்வதற்கு எதிரானச் சட்டம், 1997 பெண்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.
அநாகரிகமாக சித்தரித்தலுக்கெதிரான சட்டம், 1999 பத்திரிக்கைகள், செய்தித்தாள்கள் போன்றவற்றில் பெண்களை அநாகரிகமாக சித்தரித்தலைத் தடைசெய்கிறது.
தொழிற்சாலைச் சட்டம் , 1948

தோட்டத் தொழிலாளர்கள் சட்டம், 1951

சுரங்கச் சட்டம், 1952

மகப்பேறு நலச் சட்டம், 1961

பெண் தொழிலாளர்களைப் பாதுகாக்கிறது.
வன்கொடுமை தடுப்பு சட்டம், 2005 கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் பெண்கள் துன்புறுத்தப்படுவதிலிருந்து பாதுகாக்கிறது.

முடிவுரை

மனித உரிமைகள் ஒவ்வொருவருக்குமான சமத்துவம் மற்றும் நேர்மை பற்றியதாகும். மேலும் இது அனைவரையும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்படுவதை உறுதி செய்கிறது. மனித உரிமையைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும். மனித உரிமைகளுக்கான புரிதலும் மரியாதையையும் நமது சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம், பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்திற்கான அடித்தளத்தை வழங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!