Samacheer NotesTnpsc

வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் Notes 12th Economics Lesson 3 Notes in Tamil

12th Economics Lesson 3 Notes in Tamil

3. வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள்

“புகுத்தப்பட்ட சோம்பேறித்தனத்தினால், வேலையில்லாதவர்கள், ஒழுக்கச்சிதைவு, நம்பிக்கையின்மை, வெறுப்பு உணர்வு மற்றும் சுய மரியாதை இழப்பு ஆகியவற்றால் துன்புறுகிறார்கள்”.

  • ஒனாகாட்.P மற்றும் ஒனாகாட்.R

அறிமுகம்

பல நாடுகள் பொருளாதாரப் பிரச்சனைகளைச் சந்தித்துள்ளதை பொருளாதார வரலாறு கண்டுள்ளது. பல்வேறு பிரச்சனைகளுள் வேலைவாய்ப்பின்மை என்பது ஒரு அபாயகரமான ஒன்றாக இருக்கிறது. வேலைவாய்ப்புக்கும் வருமானத்திற்கும் உள்ள உறவைத் தொன்மைப் பொருளாதார அறிஞர்களும் J.M.கீன்சும் (J.M.Keynes) விளக்கியுள்ளனர். பிரென்ஞ் பொருளியல் அறிஞரான J.B. சேயின் (Say) சந்தை விதியின் (Law of Markets) மேல் தொன்மைப் பொருளியல் அறிஞர்கள் அபாரமான நம்பிக்கை வைத்திருந்தனர். 20 ஆம் நூற்றாண்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் J.M.கீன்ஸ்.

முழு வேலை வாய்ப்பின் பொருள்

  • நல்ல உடல் நலம் உள்ள தனிநபர்கள் மற்றும், நிலவுகின்ற கூலி விகிதத்தில் வேலை செய்யத் தயாராக இருப்பவர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கிறதெனில் அதனை முழு வேலை வாய்ப்பு என்கிறோம். அதாவது முழுவேலை நிலை என்பது வேலை செய்ய விருப்பமும் திறமையும் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் வேலை நிலையை குறிக்கும்.
  • கீன்ஸின் கூற்றுப்படி முழு வேலைநிலை என்பது விருப்பமில்லா வேலையின்மை (Involuntary Unemployment) இல்லாமல் இருப்பது ஆகும். உதாரணம் : சில செல்வந்தர்களின் குழந்தைகள் வேலைக்கு செல்ல விரும்புவது இல்லை (Voluntary Unempolyment).
  • லர்னரின் கூற்றுப்படி, முழு வேலை எஇலை என்பது “கூலியும் எந்த வேலைநிலையில் மாறிமாறி அதிகரிக்கின்றதோ அங்கு முழு வேலைவாய்ப்பு நிலவுகிறது” என்கிறார்.
  • உலகில் ஒவ்வொரு நாடும் முழு வேலை நிலையை அடைவதை குறிக்கோளாக கொண்டிருக்கின்றன. இதற்காக தங்கள் நாட்டில் இருக்கும் வளங்களை முழுமையாக பயன்படுத்தி உத்தம அளவு உற்பத்தியை அடைய முயல்கின்றன. ஆனால் நடைமுறையில் முழு வேலைவாய்ப்பு என்பது நாட்டின் உழைப்பாளர்களை முழுமையாக பயன்படுத்துவது ஆகும்.

வேலையின்மையின் வகைகள் (Types of Unemployment)

வேலையின்மை என்பது நல்ல உடல் நலம் உள்ள தனிநபர்கள், நிலவுகின்ற கூலி விகிதத்தில் வேலை செய்யத்தயார இருப்பவர்கள் அனைவருக்கும் தகுந்த வேலையில்லாத சூழ்நிலை வேலையின்மை ஆகும்.

  • இந்தியாவில் வேலையின்மை பிரச்சனையைச் சமாளிக்க கொள்கைகள் உருவாக்கும் போது வேலையின்மையின் வகைகளையும் தன்மைகளையும் அறிய வேண்டும். இந்திய கிராமப்புறங்களில் வேலையின்மையும் குறைவான வேலைவாய்ப்பும் (Underemployment) காணப்படுகின்றன கிராமங்களில் மறைமுக வேலையின்மை நிலவுகிறது.
  • நகர்புறங்களில் பிறழ்ச்சி வேலையின்மை, அமைப்புசார் வேலையின்மை மற்றும் திறந்த வேலையின்மை நிலவுகிறது. நகர்மயமாதல் காரணமாக கிராமப்புற வேலையாட்கள் நகர்ப்புறங்களை நோக்கி செல்கின்றனர். இவ்வாறு கிராமபுற மக்கள் நகர்ந்து செல்வதால் நகர்புறங்களில் வேலையின்மை அதிகரிக்கிறது.

வேலையின்மையின் வகைகள்

வளர்ந்த நாடுகளில் வேலையின்மை என்பது தற்காலிகமாகவோ அல்லது பிறழ்ச்சியாகவோ இருக்கலாம். ஆனால் வளர்கின்ற நாடுகளில் மூலதன உருவாக்கம் குறைவாக இருப்பதால் அமைப்புசார்ந்த வேலையின்மை அதிகமாக இருக்கும். கீழ்க்கண்டவை வேலையின்மையின் வகைகள் ஆகும்.

  1. வாணிபச் சூழல் வேலையின்மை (Cyclical Unemployment)

கீழ்நோக்கிய பகுதியில் ஒரு பொருளாதாரம் இருக்கும் போது நிகழ்கின்ற வேலையின்மைக்கு சுழல் வேலையின்மை (Cyclical Unemployment) என்று பெயர். வாணிப சூழலின் பின்னிறக்க பகுதியில் , உற்பத்தி மற்றும் குறைந்து வேலையின்மை அதிகரிக்கும். இது போதுமான அளவு விளைவுத் தேவை இல்லாத போது நிகழ்வதாகும். அரசு முதலீட்டை அதிகரிப்பதன் மூலமும், விரிவான பணவியல் கொள்கைகளைக் கடைப்பிடித்தும் இந்த சுழல் வேலையின்மையைக் குறைக்கலாம்.

2. பருவகால வேலையின்மை (Seasonal Unemployment)

ஒரு வருடத்தின் சில காலங்களில் மட்டும் நிலவும், வேலையின்மைக்கு பருவகால வேலையின்மை என்று பெயர். விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் (கரும்பு, பருத்தி) போன்றவை குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே நடைபெறும். இத்தகைய தொழில்களில் குறிப்பிட்ட காலங்களில் மட்டும் வேலைவாய்ப்பு இருக்கும். மற்ற பருவங்களில் வேலையிருக்காது. எனவே அவற்றை நம்பி செயல்படும், வேளாண்மை மற்றும் தொழிற்சாலைகளிலும் வேலையின்மை நிலை நிலவும். மக்களின் தேவை கூடுவதாலும் குறைவதாலும் பருவகால வேலையின்மை தோன்றும், உதாரணம், ஐஸ்கீரிம், விடுமுறைகால சுற்றுலாவின் தேவை குறைவதாலும் வேலைவாய்ப்பு குறையலாம்.

3. தற்காலிக அல்லது உடன்பாடில்லா (பிறழ்ச்சி) வேலையின்மை (Temporary Unemployment or Frictional Unemployment)

உழைப்பாளர்களின் தேவை மற்றும் அளிப்பில் சமநிலையற்ற தன்மை நிலவுவதால் தற்காலிக அல்லது பிறழ்ச்சி வேலையின்மை ஏற்படுகிறது. உழைப்பாளர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயராமை, திறமை பற்றாக்குறை, இயந்திரங்களில் பழுது ஏற்படுதல், மூலப்பொருட்களின் பற்றாக்குறை போன்ற காரணங்களால் உடன்பாடில்லா (பிறழ்ச்சி) வேலையின்மை ஏற்படுகிறது. வேலையை இழந்து புதிய வேலை தேடும் உழைப்பாளர்களும் இவ்வகையில் அடங்குவர்.

4. கற்றோர் வேலையின்மை (Educated Unemployment)

சில நேரங்களில் படித்து கல்வி தகுதி பெற்றவர்களுக்கு வேலைகிடைப்பது இல்லை அல்லது பகுதி நேர வேலை செய்கின்றனர். இத்தகைய வேலையின்மைக்கு கற்றோர் வேலையின்மை என்று பெயர். தவறான கல்வி முறை, வேலைக்கான திறன் பற்றாக்குறை அதிக அளவு மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பட்டங்களை முடித்து வெளிவருதல், இலகுவான வேலையை மட்டுமே விரும்புதல் போன்ற காரணங்களால் பட்டம் பெற்றவர்களின் வேலையின்மை கூடுகிறது.

5. தொழில் நுட்ப வேலையின்மை (Technical Unemployment)

புதிய தொழில்நுட்பம் மூலதன செறிவு உடையதாக இருப்பட்ஜால் , குறைந்த எண்ணிக்கையில் உழைப்பாளர்கள் தேவைப்படுகின்றனர். புதியன கண்டுபிடித்தலும் புதிய கருத்துக்களும் வேலைவாய்ப்பினை உருவாக்கும். ஆனால் உழைப்பை சேமின்னின்ற புதிய கண்டுபிடிப்புகள் தொழில்நுட்ப வேலையின்மையை உருவாக்கும்.

6. அமைப்புசார் வேலையின்மை (Structural Unemployment)

சமூக அமைப்பில் ஏற்படும் பெரிய மாற்றங்களால் அமைப்புசார் வேலையின்மை உருவாகிறது. ஒரு பொருளுக்கான தேவை குறைதல் (Eg. Type Machine, Taperecordeas, Radios, Camera etc) அல்லது பிற பொருள்களின் தேவை அதிகரித்தல் இடு பொருட்கள் இன்மை, முதலீடு பற்றாக்குறை ஆகியவையும் இவ்வகை வேலையின்மைக்கு காரணமாகிறது. உதாரணமாக, கைபேசியின் தேவை அதிகரித்ததால், கேமராவின் தேவை மற்றும் டேப் ரெக்கார்டர்களின் தேவை குறைந்துள்ளது. இந்தியாவில் மூலதன பற்றாக்குறையால் மக்கள் வேலையின்றி இருக்கின்றனர்.

7. மறைமுக வேகையின்மை (Disguised Unemployment)

  • தேவைக்கு அதிகமானவர்கள் ஒரு வேலையில் இருந்தால் அது மறைமுக வேலையின்மையாகும். (உதாரணம் – விவசாயத்துறை). இவ்வேலைகளில் சிலர் வேலையைவிட்டு விலகினாலும், உற்பத்தி பாதிக்காது. உற்பத்தியில் அவர்களின் பங்கு குறைவாக இருக்கும்.
  • வேலையில்லாததாலேயே, தெரிந்தும் அதிகமானோர் ஒரு வேலையில் ஈடுபட்டிருப்பார்கள். இத்தகைய வேலையின்மையால் உழைப்பாளரின் இறுதிநிலை உற்பத்திதிறன் பூஜ்யமாகவோ, குறைவாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருக்கும்.

வேலைவாய்ப்பு பற்றிய தொன்மைக் கோட்பாடு (Classical Theory of Employment)

  • வேலை பற்றிய தொன்மைக் கோட்பாடு எந்த ஒரு தனிகோட்பாட்டையும் பெற்று இருக்கவில்லை. நாட்டில் வருமானம் மற்றும் வேலை பற்றி பன்முக பார்வையில் வேலை பற்றிய தொன்மைக் கோட்பாடுகள் இருந்தன.
  • ஆடம் ஸ்மித் என்ற பொருளியல் வல்லுநர் 1776ம் ஆண்டு “நாடுகளின் செல்வம் பற்றிய இயல்பு மற்றும் காரணங்கள் அடங்கிய விசாரணை” என்ற புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் டேவிட் ரிக்கார்டோ, J.S.மில், J.B.சே மற்றும் A.C.பிகு ஆகியோரால் தொன்மைக் கோட்பாடு வளர்ச்சி பெற்றது.
  • ஒரு பொருளாதாரம் நீண்டகாலத்தில் பணவீக்கம் இன்றி முழு வேலைநிலையுடன் இயங்கும் என்று தொன்மை பொருளிய அறிஞர்கள் அனுமானித்தனர். மேலும் பொருளாதாரத்தில் கூலியும் விலையும் நெகிழ்ச்சி உடையதாக இருக்கும் எனவும், சந்தையில் போட்டி நிலவும் எனவும், அரசு தலையிடாக் கொள்கையை (Laissez – faire ewconomy) பின்பற்றும் என்றும் நம்பினர்.

சேயின் சந்தை விதி (Say’s Law of Market)

  • வேலைவாய்ப்பு பற்றிய தொன்மைக் கோட்பாட்டின் முக்கிய அங்கமாக சேயின் சந்தை விதி திகழ்கிறது. பிரென்ச் (French) பொருளியலறிஞரான J.B.சே (1776 – 1832) ஒரு தொழிலதிபர் ஆவர். ஆடம்ஸ்மித் மற்றும் டேவிட் ரிக்கார்டோ போன்றவர்களின் எழுத்துக்களினால் கவரப்பட்டார். J.B.சேயின் கருத்துப்படி, “அளிப்பு அதன் தேவையை தானே உருவாக்கும்” (Supply Creates its own demand). சேயின் கருத்துப்படி, பொருளாதாரத்தில், நிறுவனங்கள் பொருட்களை உற்பத்தி செய்ததற்கு உற்பத்திக்காரணிகளுக்கு ஊதியத்தை அளிக்கப்படுகின்றனது. அந்த ஊதியத்தைக் கொண்டு குடும்பங்கள், நிறுவனங்கள் செய்த உற்பத்தி செய்த பொருட்கள் மற்றும் பணிகளை வாங்குகின்றன. ஆகவே ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அதற்கான தேவையை அங்காடி மதிப்பில் தானே உருவாக்கும் என்று J.B.சே கருதினார். ஒரு உழைப்பாளி பெறும் ஊதியத்தை கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை வாங்குவதால், உற்பத்தி செய்த அனைத்தும் விற்கப்பட்டுவிடும் என்று சேயின் சந்தை விதி கூறுகிறது. சேயின் கருத்துப்படி, ஒரு பொருளாதாரத்தில் மொத்த உற்பத்தியும் மொத்த வருவாயும் சமமாக இருக்கும்.
  • சுருக்கமாக, வேலைவாய்ப்பு பற்றிய தொன்மைக் கோட்பாட்டின்படி “உற்பத்தியின் மூலம் ஒரு நபர் அவர் வருவாயை ஈட்டுகிறார், அது மற்றவர் உற்பத்தி செய்யும் பண்டங்கள் மற்றும் பணிகளை வாங்குவதற்கு செலவிடப்படுகிறது. நாடு முழுவதிலும் மொத்த உற்பத்தி மொத்த வருவாய்க்கு சமமாக இருக்கும்”.

சேயின் விதி

சேயின் அங்காடி விதியில் முந்தைய பிந்தைய கருத்துக்கள்

அளிப்பு அதன் தேவையை தானே உருவாக்கும் அல்லது தொகு முதலீடு, தொகு சேமிப்புக்கு சமம் என்ற விதிகள் பிந்தைய கருத்துக்கு உகந்ததாக இருக்கும். இது சாதாரணமாக கணக்கியல் நோக்கிறகு மட்டும் அமையும். சேயின் அங்காடி விதி, தொகு அளிப்பு அதாவது உற்பத்தியாளர் உற்பத்தி செய்யும் மொத்த உற்பத்தை அதை வாங்குபவரின் தொகு தேவைக்கு சமம் என்பது முந்தைய கருத்துக்கு உகந்ததாகும்.

சேயின் சந்தை விதியின் எடுகோள்கள்

சேயின் சந்தைவிதி கீழ்க்கண்ட எடுகோள்களை அடிப்படையாக கொண்டுள்ளது.

  1. ஒரு தனி வாங்குவோரோ, விற்பவரோ அல்லது உள்ளீடோ பொருளின் விலையை மாற்ற முடியாது.
  2. முழு வேலை நிலை நிலவும்.
  3. மக்கள் அவர்களின் சுய விருப்பங்களால் உந்தப்படுகிறார்கள். அவர்களின் விருப்பங்கள் பொருளாதார முடிவுகளை நிர்ணயிக்கின்றன.
  4. சந்தைச் சக்திகளே அனைத்தையும் நிர்ணயிக்கின்றன. ஒரு பொருளாதாரம் தானே சரிசெய்து கொள்ளும் சூழல் பெற்று முழு வேலைநிலை சமநிலை அடைய அரசின் தலையிடாக் கொள்கை அவசியமாக உள்ளது.
  5. உழைப்பு மற்றும் பண்டங்களின் சந்தையில் நிறைவுப்போட்டி நிலவும்.
  6. கூலி மற்றும் விலையில் நெகிழ்வுத் தன்மை உண்டு.
  7. பரிவர்த்தனைக்கு மட்டுமே பணம் உதவுவும்.
  8. இது நீண்ட கால பகுத்தாய்வை அடிப்படையாக கொண்டது.
  9. அதிக உற்பத்திக்கோ வேலையின்மைக்கோ வாய்ப்பில்லை.
  10. பயன்படுத்தப்படாத வளங்கள் இருந்தால், முழு வேலைவாய்ப்பு வரை அவற்றை பயன்படுத்துவது இலாபகரமாக இருக்கும். உற்பத்திக்காரணிகள் அவற்றின் உற்பத்தித் திறனுக்கேற்ப ஊதியம் பெற விருப்பமுடன் இருப்பார்கள் என்ற நிபந்தனை இவ்விதியில் இருக்கும்.
  11. விலைக் கடுவி (Price mechanism) தானாக இயங்குதால் அங்கு அரசின் தலையீடு தேவை இருக்காது.
  12. வட்டிவீத நெகிழ்வுத் தன்மை, சேமிப்பிற்கும் முதலீட்டிற்கும் சமநிலையை உருவாக்கும்.

சே- விதியின் விளைவுகள்

  1. அதிக உற்பத்திக்கோ, வேலையின்மைக்கோ வாய்ப்பில்லை.
  2. பயபடுத்தாத வளங்கள் நாட்டில் இருந்தால், முழுவேலை வாய்ப்பு வரை அவற்றை பயன்படுவது இலாபகரமாக இருக்கும். உற்பத்தி காரணிகள் அதன் உற்பத்தி திறனுக்கு இணையாகும் வரை ஏற்றும் கொள்ளும்.
  3. விலைக் கருவி தானாக இயங்குவதால் அங்கு அரசின் தலையீடு தேவை இருக்காது.
  4. வட்டி வீத நெகிழ்வுத்தன்மை, சேமிப்பிற்கும் முதலீட்டிற்கும் சமநிலையை உருவாக்கும்.
  5. பரிவர்த்தனைக்கு மட்டுமே பணம் செயல்படும். பணத்தை மக்கள் கையிருப்பாக வைத்திருக்க மாட்டார்கள்.

சேயின் விதி பற்றிய திறனாய்வு (Criticism of Say’s Law)

கீழ்க்கண்டவை J.B.சேயின் சந்தை விதியின் திறனாய்வு ஆகும்.

  1. கீன்ஸின் கருத்துப்படி, அளிப்பு அதற்கான தேவையை உருவாக்காது. உற்பத்தி அதிகரிக்கும் அளவிற்கு தேவை அதிகரிக்காவிட்டால் இந்த விதி செயல்படாது.
  2. பொருளாதாரத்தில் தானாக சரி செய்து கொள்ளும் அமைப்பு வேலையின்மையைக் குறைக்காது. மூலதனவிகிதத்தை அதிகரித்து வேலையின்மையைக் குறைக்கலாம்.
  3. தனிநபர்கள் எதிர்பாராத சூழ்நிலைகளுக்காகவும், வியாபாரிகள் எதிர்கால நடவடிக்கைகளுக்காகவும் பணத்தை இருப்பாக வைத்திருப்பார்கள். ஆகவே பணம் நடுநிலையாக இருக்காது.
  4. சேயின் சந்தை விதி, அளிப்பு தன் தேவை தானே உருவாக்கும் என்ற அடிப்படையில் செயல்படுவதால், அதிக உற்பத்திக்கு வாய்ப்பு இல்லை என்று கூறுகிறது, ஆனால் கீன்ஸீன் கூற்றுப்படி அளவுக்கு அதிகமான உற்பத்திக்கு வாய்ப்பு உள்ளது.
  5. முதலாளித்துவ நாடுகளில் குறைவான வேலை (Underemployment) உள்ளதால், முழு வேலை வாய்ப்புக்குச் சாத்தியமில்லை என கீன்ஸ் கூறுகிறார்.
  6. அளவுக்கு அதிகமான உற்பத்தியும், அதிக வேலையின்மையும் பல முதலாளித்துவ நாடுகளில் காணப்படுவதால் அரசுத் தலையீடு அவசியம் எனக் கீன்ஸ் கருதுகிறார்.

வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் பற்றிய கீன்ஸின் கோட்பாடு (Keynes’ Theory of Employment and Income)

  • நவீனப் பொருளாதாரக் கோட்பாடுகளின் வளர்ச்சியில், கீன்ஸ் எழுதிய புத்தகமான ‘வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுகோட்பாடு”
  • ஒரு திருப்புமுனையாக இருக்கிறது. அதிக தாக்கத்தை ஏற்படுத்திய இந்த நூல் 1936இல் வெளியிடப்பட்டது.
  • தொன்மைப் பொருளாதார அறிஞர்கள் ஒரு முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் சந்தை சக்திகளே மாற்றங்களை ஏற்படுத்தி சமநிலையை உருவாக்கும் என நம்பினர். இதற்கு எதிர்மறையான கருத்தை கீன்ஸ் கொண்டிருந்தார், எனவே அதில் உள்ள குறைகளை களைய தன்னுடைய புதிய வேலைவாய்ப்பு கோட்பாட்டை உருவாக்கினார்.
  • கீன்ஸின் கோட்பாடு, முழுவேலைவாய்ப்பு கருத்தை மட்டும் விளக்காமல், குறைந்த வேலை நிலைக்கும் (Underemployment) வாய்ப்பு இருப்பதை சுட்டிகாட்டுகிறது. கீன்ஸின் கோட்பாடு ஒரு பொதுக்கோட்பாடாகவே திகழ்ந்தது. இது எல்லாவகைச் சூழ்நிலைகளுக்கும் பொருந்துவதாக இருக்கிறது.
  • கீன்ஸின் கருத்துக்கள் குறுகிய காலத்தை அடிப்படையாக கொண்டு இருந்தன. அவரது கருத்துப்படி, வேலை வாய்ப்பின் அளவு நிர்ணயிக்கப்படும் போது உற்பத்திக் காரணிகளான மூலதனம், உழைப்பு, திறன், தொழில்நுட்பம் ஆகியவை மாறாமலேயே இருக்கும்.
  • J.M.கீன்ஸ் 20ஆம் நூற்றாண்டில் ஒரு தாக்கத்தை உருவாக்கிய ஒரு பொருளியல் அறிஞர். 1883ல் Cambridgeல் இவர் பிறந்தார். அவர் பொருளாதார அறிஞராகப் பணியாற்றினார். அத்துடன் ஒரு குடிமைப் பணியாளராகவும் (Civil Servant), Bank of Englandல் இயக்குநராகவும் Bretton woods மாநாட்டில் ஒரு முடிவை எடுப்பதற்கான ஒரு குழுவுக்குத் தலைவராகவும் இருந்தார். அவருடைய கருத்தின் அடிப்படையில் அமைந்த பொருளாதாரக் கருத்துக்கள் கீன்ஸியன் பொருளாதாரம் என அழைக்கப்படுகின்றன. இன்றைய காலகட்டத்திலும் அதிக தாக்கத்தை பேரியல் பொருளியலில் ஏற்படுத்துகிறது.

விளைவுத் தேவை (Effective Demand)

  • வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் பற்றிய கீன்ஸ் கோட்பாட்டின் ஆரம்பப் புள்ளியே “விளைவுத் தேவை” கருத்தாகும். விளைவுத்தேவை என்பது உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் மீது உண்மையிலேயே செலவு செய்கிற பணத்தின் அளவு ஆகும். தொழில் முயல்வோர்கள், வட்டி, வாடகை, கூலி மற்றும் இலாபம் போன்றவற்றை பணமாகவே கொடுப்பார்கள்; எனவே விளைவுத் தேவை தேசிய வருவாய்க்குச் சமமாக இருக்கும்.
  • மொத்த விளைவுத் தேவை (Aggregate effective demand) அதிகரிக்கும் போது வேலை வாய்ப்பின் அளவிலும் ஏற்றம் வரும். மொத்த விளைவுத் தேவை குறையும் போது வேலையின்மை சிக்கல் தோன்றும். ஆகவே நாட்டின் மொத்த வேலை வாய்ப்பு, தொகு தேவையின் உதவியுடன் தீர்மானிக்கப்படுகிறது.
  • கீன்ஸின் வேலைவாய்ப்பு கோட்பாட்டின்படி, பொருட்கள் மற்றும் பணிகளின் நுகர்வு மற்ரும் மூலதனத்திற்காக செலவு செய்யப்பட்ட பணமே விளைவுத் தேவை ஆகும். எனவே மொத்தச் செலவு, தேசிய உற்பத்திக்கும், தேசிய வருவாய்க்கும் சமமாக இருக்கும்.
  • ஒரு நாட்டில் உற்பத்திக்கும் வேலைவாய்ப்பிற்கும் இடையே உள்ள தொடர்பு அமைகிறது. விளைவுத் தேவையின் அளவு தொகு அளிப்பையும் தொகு தேவையையும் சார்ந்து உள்ளது.

ED = Y = C + I = வெளியீடு = வேலைவாய்ப்பு

விளைவுத் தேவை

  • “விளைவுத் தேவை” ஒரு பொருளாதாரத்தின் வேலைநிலையை நிர்ணயிக்கிறது. விளைவுத் தேவை அதிகரிக்கும் போது, வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். மாறாக, விளைவுத்தேவை குறைந்தால் வேலைவாய்ப்பும் குறையும்.
  • நுகர்வு மற்றும் முதலீட்டுச் செலவு ஆகிய இரண்டு காரணிகளும் விளைவுத் தேவையின் அளவை நிர்ணயிக்கின்றன. தொகுத் தேவையில், நுகர்வுச் சார்பை மக்களின் வருமானமும் இறுதிநிலை நுகர்வு விருப்பமும் (Marginal Propensity to Consume: MPC) நிர்ணயிக்கின்றன. கீன்ஸின் கூற்றுப்படி, வருமானம் கூடினால் நுகர்வும் கூடும். ஆனால் வருமானம் கூடுகின்றன அதே விகிதத்தில் நுகர்வு விகிதம் அதிகரிக்காது.
  • முதலீட்டு அளவை, வட்டிவீதம் மற்றும் மூலதனத்தின் இறுதிநிலை ஆக்க திறன் (Marginal Efficiency of Capital : MEC) ஆகிய இருகாரணிகளும் நிர்ணயிக்கின்றன. வட்டி வீதமானது, பண அளிப்பு மற்றும் பணத்தின் ரொக்க இருப்பு விருப்பம் ஆகிய இரண்டையும் சார்ந்துள்ளது. ரொக்க இருப்பு விருப்பத்திற்கு கீன்ஸ் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளார்.
  • ரொக்க இருப்பு விருப்பம் மூன்று நோக்கங்களை அடிப்படையாக கொண்டுள்ளது. அவை: பேரநோக்கம், முன்னெச்சரிக்கை நோக்கம் மற்றும் ஊக நோக்கம் ஆகும். மூலதன சொத்திலிருந்து கிடைக்கின்ற வருமானம் மற்றும் மூலதனத்தின் அளிப்பு விலை ஆகிய இரண்டு காரணிகளையும் MEC சார்ந்து உள்ளது.

தொகு தேவைச் சார்பு (Aggregate Demand Function : ADF)

  • கீன்ஸ் கோட்பாட்டின் படி, ஒரு பொருளாதாரத்தின் தொகு தேவை தான் உற்பத்தியை நிர்ணயிக்கிறது. உழைப்பாளர்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்பதால் எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்று தொழில் முனைவோர்கள் எதிர்பார்க்கிறார்களோ அதுவே மொத்த தேவை. அதாவது, வேறுபட்ட வேலை நிலையில் உற்பத்தி செய்ததை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாய் அல்லது எதிர்பார்க்கும் வருவாய் எனலாம்.

தொகுத் தேவை கீழ்க்காணும் நான்கு பகுதிகளைக் கொண்டது.

  1. நுகர்வுத் தேவை
  2. முதலீட்டுத் தேவை
  3. அரசுச் செலவு
  4. நிகர ஏற்றுமதி – இறக்குமதி (Export – Import)

விரும்புகிற அல்லது திட்டமிடுகிற தேவை (செலவு) என்பது குடும்பங்கள், நிறுவனங்கள், அரசு மற்றும் வெளிநாட்டிலிருந்து வாங்குவோர் (ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இடையே உள்ள வித்தியாசம்) ஆகியோர் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை வாங்குவதற்காக செய்கின்ற செலவு தொகையாகும். விரும்புகிற செலவு என்பது மொத்தச் செலவு (தேவை) என்றும் அழைக்கப்படுகிறது. இதனை கீழ்க்கண்ட வாய்ப்பாட்டின் மூலம் குறிப்பிடலாம்.

AD = C + I + G + (X – M)

கீழ்க்கண்ட வரைபடம் தொகுத் தேவைக்கும், வேலைவாய்ப்புக்கும் உள்ள தொடர்பை காட்டுகிறது.

  • வேலைவாய்ப்பு அதிகரித்தல் மற்றும் குறைதல் ஆகியவற்றிற்கு ஏற்ப மொத்த தேவை கூடும் அல்லது குறையும். வரைபடத்தில் முதலில் மொத்த தேவை வளைகோடு அதிகரிக்கும் விகிதத்தில் அதிகரிக்கின்றது.
  • பின்பு இவ்வளைகோடு குறையும் விகிதத்தில் அதிகரிக்கிறது. அதாவது வேலைவாய்ப்பு அதிகரித்தால் வருமானம் அதிகரிக்கும். ஆனால் வருமானம் அதிகரித்த வீதத்தில் பொருளாதாரத்தில் செலவு அதிகரிப்பது இல்லை. மாறாக, குறைந்த விகிதத்தில் அதிகரிக்கிறது என்பதை வரைபடம் விளக்குகிறது.

தொகு அளிப்புச் சார்ப்பு (Aggregate Supply Faction: ASF)

  • தொகு அளிப்புச் சார்பு என்பது அதிகரிக்கும் வேலைவாய்ப்பை குறிப்பிடுகிறது. ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் தொகு மதிப்பே தொகு அளிப்பு எனப்படும்.
  • எனவே தொகு அளிப்பு என்பது தேசிய உற்பத்தியின் மதிப்பு அல்லது தேசிய வருமானத்திற்குச் சமமாக இருக்கும். தொகு அளிப்புச் சார்பு வேலைவாய்ப்பு அளவோடு சேர்ந்து அதிகரிக்கும்.
  • தொகு அளிப்பு என்பது தேவையான உற்பத்தியை நாட்டில் அதிகரிப்பதற்கு பயன்படுத்தப்படும் தேவையான உழைப்பாளர்கள் தேவையான உழைப்பாளர்கள் எண்ணிக்கை மற்றும் பிற பொருட்கள் பயன்படுத்துவதை குறிக்கும்.
  • உற்பத்திக்காக முதலாளிகள், உழைப்பாளர்கள் இடு பொருட்கள் போன்ற பலவற்றை விலைகொடுத்து வேலைக்கு அமர்த்துவார்கள். ஆகவே உற்பத்தில் செலவும் அடங்கும். ஒரு குறிப்பிட்ட இடத்தில், நிறுவனத்தின் உற்பத்திச் செலவைவிட, சரக்குகளை விற்பதால் கிடைக்கும் வருவாய் அதிகமாக இருந்தால், நிறுவனங்கள், மேலும் அதிகமான உழைப்பாளர்களையும் மற்ற இடுபொருள்களையும் வாங்குவதற்கு முனைவார்கள்.
  • தொகு அளிப்பு விலை என்பது ஒரு குறிப்பிட்ட அளவு உழைப்பையும் இடுபொருட்களையும் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட, பொருள்களை விற்ற பிறகு கிடைக்கும், ‘எதிர்பார்க்கப்படும் (வருமானம்) மொத்த தொகை’ ஆகும். இங்கு “விலை” என்பது விற்பனையால் கிடைத்த வருவாயை குறிப்பிடுகிறது.

தொகு அளிப்பின் கூறுகள்:

தொகு அளிப்பில் கீழ்க்கண்ட நான்கு பகுதிகள் உள்ளன.

  1. மொத்த (விரும்பப்படுகிற) நுகர்வுச் செலவு (C)
  2. மொத்த (விரும்பப்படுகிற) தனியார் சேமிப்பு (S)
  3. நிகர வரி வசூல் (T). அரசுபெற்ற மொத்த வரிவருமானத்தில் இருந்து மாற்றுச் செலுத்தல்கள் (Transfer Payments), ஓய்வூதியம், மானியம், அரசு செலுத்தவேண்டிய வட்டி ஆகியவற்றைக் கழித்த பிறகு கிடைக்கும் தொகையாகும். மற்றும்
  4. தனிநபர் (விரும்பப்படுகிற) வெளிநாட்டவர்க்கு (உறவினர் மற்றும் நண்பர்கள்) கொடுக்கின்ற மாற்று செலுத்துதல்கள் மற்றும் உதவித்தொகை. இது Rf (வெளிநாட்டிற்கு வழங்கிய நிவாரண தொகை) என குறிக்கப்படுகிறது.

மொத்த அளிப்பு = C + S + T + Rf

ஆக, ஒரு பொருளாதாரத்தில் உருவாக்கப்பட்ட மொத்த வருமானம்.

கீழ்க்கண்ட வரைபடம், தொகு அளிப்பை கோட்டை விளக்குகிறது. வரைபடத்தில், நிலையான பணக்கூலி மற்றும் மாறும் கூலி நிலவும் என்ற எடுகோளை அடிப்படையாகக் கொண்டு இரண்டு அளிப்புக் கோடுகள் வரையப்பட்டுள்ளன.

மொத்த அளிப்பு வளைகோடு

  • வரைபடம் வேலைவாய்ப்புக்கும், எதிர்பார்க்கும் வருமானத்திற்கும் உள்ள தொடர்பை விளக்குகிறது. பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட Z நேர்கோடு என்பது பணக்கூலி மாறாமல் இருக்கும் போது உள்ள நிலையையும் மற்றொன்று (Z1) வேலைவாய்ப்பைப் பொறுத்து பணக்கூலி மாறும்போது உள்ள நிலையையும் விளக்குகின்றன.
  • Z கோடு நேர்கோடாகவும், Z1 கோடு குறிப்பிட்ட நிலைக்கு பிறகு வளைகோடாகவும் இருக்கிறது ONf அளவில் பொருளாதாரம் முழுவேலை நிலையை அடைகிறது. அதற்குப் பின்பு உழைப்பினை அதிகப்படுத்தி உற்பத்தியை அதிகப்படுத்த இயலாது. எனவே, Nf க்குப் பின்னர், தொகு அளிப்புக்கோடு செங்குத்தாக, நெகிழ்வற்றதாக உள்லது.
  • தொகு அளிப்பு கோட்டின் சாய்வு (Slope) என்பது வேலைவாய்ப்புக்கும் உற்பத்தித் திறனுக்கும் இடையே உள்ள தொடர்பைப் சார்ந்து அமைந்துள்ளது. மூலதன இருப்பு மாறாமல் இருக்கும்போது அதிக உழைப்பாளர்களை பணியிலமர்த்துவதால் குறைந்துசெல் இறுதிநிலை விளைவு செயல்படுகிறது.
  • பொதுவாக தொகு அளிப்பு வளைகோடு Z1 போன்று இருக்கும். ஆகவே விலைக்கும் கூலிக்கும் உள்ள தொடர்பை சார்ந்துதான் தொகு அளிப்பு இருக்கும். பொருளின் விலை அதிகமாக இருந்து கூலிகுறைவாக இருந்தால், உற்பத்தியாளர்கள் கூடுதலாக உழைப்பாளர்களை வேலைக்கு அமர்த்துவார்கள்.
  • மாறாக பொருட்களின் விலை குறைவாக இருந்து கூலி அதிகமானால், முதலீடு குறையும். இதனால் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனும் குறையும். எனவே பொருளாதார நடவடிக்கையை தீர்மானிக்கும் காரணிகளில் தொகு அளிப்பு முக்கியப்பங்கு வகிக்கிறது.

ADF மற்றும் ASF-ன் சமநிலை (Equilibrium between ADF and ASF)

  • கீன்ஸின் வேலைவாய்ப்பு கோட்பாட்டில், ADF மற்றும் ASF சமநிலையை விளக்க, குடும்பங்கள் மற்றும் வியாபாரம் ஆகிய இரு துறைகள் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
  • நுகர்வு செலவு தொடர்பான முடிவுகளை குடும்பங்களும், முதலீடு தொடர்பான முடிவுகளை வியாபார நிறுவனங்களும் எடுக்கின்றன. மேலும் நுகர்வுச் சார்பு நேர்கோடு ஆகவும், முதலீடு தன்னிச்சையானது (Autonomous) எனவும் கீன்ஸின் கோட்பாடு அனுமானிக்கிறது.
  • கீன்ஸின் கோட்பாட்டில் வருமான சமநிலையை நிர்ணயிக்க இரு அணுகுமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை:
  1. தொகுத் தேவை மற்றும் தொகு அளிப்பு அணுகுமுறை
  2. சேமிப்பு மற்றும் முதலீடு அணுகுமுறை

இந்த அத்தியாயத்தில் மொத்த தேவை மற்றும் மொத்த அளிப்பு அணுகுமுறை மட்டும் விளக்கப்பட்டுள்ளது.

வரைபடத்தில் தேவை கருத்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தொகுத் தேவை மற்றும் தொகு அளிப்பு ‘E’ என்ற புள்ளியில் சமநிலை அடைகிறது. இப்புள்ளியில் வேலை வாய்ப்பு N0 ஆக இருக்கும். ON1 அளவு வேலைவாய்ப்பில், தொகு அளிப்பு N1R1 ஆக இருக்கும். ஆனால் M1N1 அளவு உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களால் முடியும். எதிர்பார்க்கும் இலாபத்தை அடைய வேண்டிய உற்பத்தியின் அளவு M1R1 ஆகும். இந்த இலாப நிலையில் முதலாளி அதிக உழைப்பாளர்களை வேலைக்கு அமர்த்துவார். சமநிலை ‘E’ என்ற புள்ளியை அடைந்தபிறகு உழைப்பாளர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்துவர். ஏனெனில் N0 நிலைக்கு பிறகு வேலைவாய்ப்பு அதிகரித்தால் தொகுத்தேவை, தொகு அளிப்பைவிட குறைவாக இருக்கும். எனவே முதலாளித்துவ பொருளாதாரம் அல்லது திறந்த வெளிசந்தை பொருளாதாரத்தில் (கீன்ஸ் கோட்பாட்டின்படி) உற்பத்தி சமநிலையை தீர்மானிப்பதில் தொகுத் தேவை கருத்து அதிக முக்கியத்துவம் வகிக்கிறது.

கீன்ஸின் வேலைவாய்ப்பு கோட்பாட்டின் மைய கருத்து என்னவெனில், சமநிலை வேலைவாய்ப்பு என்பது ஒரு நாட்டின் பொருளாதாரம் முழுவேலை நிலையில் இருக்க வேண்டும் என்பதில்லை. வரைபடத்தில் N0 மற்றும் Nf க்கும் இடையே உள்ள வித்தியாசம் வேலையின்மையை காட்டுகிறது. ஆகவே வேலை சமைந்லையை விளக்குவதில் விளைவுத்தேவை கருத்துமுக்கியப்பங்கு வகிக்கிறது.

தொன்மையியம் மற்றும் கீன்ஸியம் – ஓர் ஒப்பீடு

(Comparison of Classicism and Keynesianism)

வ.எண் கீன்ஸியம் தொன்மையியம்
1 குறுகிய காலச் சமநிலை நீண்ட காலச் சமநிலை
2 சேமிப்பு கெடுதல் சேமிப்பு நல்லது
3 பணத்தின் பணி என்பது ஒருபுறம் பரிமாற்றத்திற்கு உதவவும், மறுபுறம் சேமிக்க கூடியதாகவும் செயல்படும். பரிவர்த்தனைக்கு மட்டுமே பணம் உதவும்
4 நாட்டின் பிரச்சனைகளை தாக்க பேரியல் அணுகுமுறை தேவை நுண்ணின் அடிப்படையில் பெரிய சிக்கல்களுக்கு தீர்வு காணுதல் அணுகுமுறை
5 அரசுத்தலையீடு அனுமதிக்கப்படுகிறது தலையிடாக் கொள்கை வலியுறுத்தப்படுகிறது
6 எல்லா சூழ்நிலைக்கும் முழு வேலைவாய்ப்பு மற்றும் குறைமுழு வேலை வாய்ப்பு பொருத்தமானது. முழு வேலை வாய்ப்புச் சூழலுக்கு மட்டுமே பொருந்தக் கூடியது
7 முரண்பாடுகளைக் கொண்டது முதலாளித்துவம் முதலாளித்துவம் சரியானது
8 பொருளாதாரத்தின் தேவைக்கு ஏற்ப வரவு-செலவு அறிக்கையை மாற்றிக் கொள்ளலாம் சமநிலை வரவு –செலவு அறிக்கை ஆதரிக்கப்படுகிறது.
9 வருமான மாற்றம் மூலம் சேமிப்பு-முதலீடு சமநிலை முன் வைக்கப்படுகிறது வட்டிவீத மாற்றம் மூலம் சேமிப்பு – முதலீடு சமத்துவம் முன் வைக்கப்படுகிறது.
10 பணத்திற்கான தேவை மற்றும் அளிப்பே வட்டி வீதத்தை நிர்ணயிக்கிறது சேமிப்பு மற்றும் முதலீடு ஆகிய இரண்டும் வட்டி வீதத்தை நிர்ணயிக்கிறது.
11 வட்டி வீதம் மாறிக்கொண்டே உள்ளது (Flow) வட்டி வீதம் மாறாதது (Stock)
12 தேவையே அதன் அளிப்பை உருவாக்குகிறது அளிப்பு தன் தேவையை தானே உருவாக்குகிறது.
13 வட்டி என்பது ரொக்க இருப்பை விட்டுக் கொடுப்பதற்கான வெகுமதி வட்டி என்பது சேமிப்பிற்கான வெகுமதி

தொகுப்புரை

தொன்மைப் பொருளியல் கோட்பாட்டுக்கு கீன்ஸ் மறுப்புரை வழங்கினார். அவர் அரசுத் தலையீடு அவசியமென்று தன் கோட்பாட்டில் விளக்கியுள்ளார். இரண்டாம் உலகப்போருக்குப் பின் பல நாடுகள் அவரின் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!