Samacheer NotesTnpsc

உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் Notes 10th Social Science Lesson 11 Notes in Tamil

10th Social Science Lesson 11 Notes in Tamil

11. உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

அறிமுகம்

நவீன நாட்களில் அரசியல்வாதிகள், பொருளியல் வல்லுநர்கள் மற்றும் தொழிலதிபர்களிடையே அதிகமாக பேசக்கூடிய கருத்துக்களாக தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் (LPG) இருக்கின்றன. இந்த மூன்று வெளிப்பாடுகளும் புதிய பொருளாதார கொள்கையின் தூண்களாக ஆதரவு தெரிவித்து நமது அரசாங்கம் 1991லிருந்து இவற்றை அமைத்து நடைமுறைப்படுத்தியது.

உலகமயமாக்கல்

  • உலகமயமாக்கல் என்பது பண்டங்கள் மற்றும் பணிகள், தொழில்நுட்பம், மூலதனம் , உழைப்பு அல்லது மனித மூலதனம் ஆகியவற்றின் தடையில்லா ஓட்டத்தில், எந்த தடையும் ஏற்படாமல் உலகின் பல்வேறு பொருளாதாரங்களை ஒருங்கிணைப்பதற்கான செயல்முறையாகும்.
  • உலகமயமாக்கலின் கீழ் பண்டங்கள் மற்றும் பணிகளுக்கான சர்வதேச சந்தைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
  • உலகமயமாக்கல் என்பது உலக பொருளாதாரத்துவ நாடுகளை ஒருங்கிணைப்பதாகும். அடிப்படையில் உலகமயமாக்கல், சர்வதேசமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் செயல்முறையைக் குறிக்கிறது.

உலகமயமாக்கலின் வரலாறு

உலகமயமாக்கல் என்ற சொல் பேராசிரியர் தொயோடோர் லெவிட் என்பவர் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டது. உலகமயமாக்கள் வரலாற்று பின்னணியில் மூன்று நிலைகளில் விவாதிக்கப்பட்டது.

தொன்மையான உலகமயமாக்கல்

  • சுமர் மற்றும் சிந்து சமவெளி நாகரிகத்தின் இடையேயான வர்த்தக உறவுகள் உலகமயமாக்கல் என்ற ஒரு வடிவத்தை மூன்றாம் நூற்றாண்டுகளில் உருவாக்கியது என்று ஆண்ட்ரே குந்தர் ஃபிராங்க் வாதிட்டார்.
  • உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தின் ஆரம்ப வடிவத்தை தொன்மையான உலகமயமாக்கல் என்று கிரேக்க (Hellenistic Period) காலத்தின் போது அழைக்கப்பட்டது.
  • வணிக ரீதியாக நகர்ப்புற மையங்கள் கிரேக்க கலாச்சாரத்தின் மையத்தில் ஆர்வமாகச் சுற்றி வந்தன. இது இந்தியாவிலிருந்து ஸ்பெயினுக்கு பரந்து விரிந்து அலெக்ஸாண்டிரியா, ஏதென்ஸ் மற்றும் அந்தியோக்கி போன்ற நகரங்களில் அதன் மையத்தில் இருந்தது.
  • ரோம் பேரரசுக்கும், பார்த்தியன் பேரரசுக்கும் மற்றும் ஹன் வம்சத்துக்கும் இடையேயான வர்த்தக தொடர்பில் உலகமயமாக்கலின் ஆரம்ப வடிவம் இந்த பேரரசுகளுக்கு இடையேயான வணிக உறவுகளால் பட்டு சாலையின் (Silk Route) வளர்ச்சியை ஊக்கப்படுத்தியது.
  • இஸ்லாமிய பொற்காலம் கூட உலகமயமாக்கலில் ஒரு முக்கிய ஆரம்பகட்டமாக இருந்து வந்தது.
  • மங்கோலிய பேரரசின் வருகை, மத்திய கிழக்கு மற்றும் சீனாவின் வர்த்தக மையங்களுக்கு உறுதியற்றதாக இருந்தாலும் பட்டு சாலை வழியாக பயணிக்க வசதியாக இருந்தது.
  • இந்த நவீனத்திற்கு முந்தைய கால கட்டத்தில் நடந்த உலக பரிமாற்றத்தை நில நேரங்களில் தொன்மையான உலகமயமாக்கல் என்றழைக்கப்படுகிறது.

இடைப்பட்ட உலகமயமாக்கல்

  • உலகமயமாக்கலின் அடுத்த கட்டம் இடைப்பட்ட உலகமயமாக்கல் ஆகும். 16 மற்றும் 17ஆம் நூற்றாண்டுகளில், ஐரோப்பிய பேரரசுகளின் எழுச்சியால் முதலில் போர்ச்சுகீசியர்கள், ஸ்பானிஷ் பேரரசுகள், டச்சுக்காரர்கள் மற்றும் பிரிட்டிஷ் பேரரசுகளின் கடல் வழி வாணிபம் மேற்கொண்டனர்.
  • உலகமயமாக்கல், 17ம் நூற்றாண்டில் , பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் (1600) தனியார் வணிக நிறுவனம் போன்று உருவாக்கப்பட்டு முதல் பன்னாட்டு நிறுவனம் என அழைக்கப்பட்டது.
  • மேலும் முதல் டச்சு கிழக்கு இந்திய நிறுவனம் (1602) உருவாக்கப்பட்டு வாணிபம் நடைபெற்றது. 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியா மற்றும் பிரேசில் வரை வர்த்தக நிறுவனங்களை (தொழிற்சாலைகள்) நிறுவ ஆரம்பித்தனர்.

நவீன மயமாக்கல்

  • 19ம் நூற்றாண்டில் உலகமயமாக்கலின் வருகை நவீன வடிவத்தை நெருங்கியது. 19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளுக்கு இடையே நடைபெற்ற உலகமயமாக்கல் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை கொண்டிருந்தன.
  • அவை, இந்த நூற்றாண்டுகளில் நடைபெற்ற உலகளாவிய வர்த்தக பொருளாதாரத்தில் மூலதனம் மற்றும் முதலீடு செய்யப்பட்டது மற்றொன்று, 20ம் நூற்றாண்டில் வணிக உற்பத்தியில் அதிக பங்கினை பெற்றிருந்ததுடன், சேவைகள் வர்த்தகம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தி வணிகத்தில் எழுச்சியுற்றிருந்ததாகும்.
  • சுங்கவரி, வாணிபம் குறித்த பொது உடன்பாடு (GATT) மற்றும் உலக வர்த்தக அமைப்பு (WTO) போன்ற பன்னாட்டு வர்த்தக ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டுள்ளன.
  • 1890லிருந்து முதல் உலகப்போர் வரை நிலையற்ற வர்த்தகம் ஒரு பிரச்சினையாக இருந்தது. ஆனால் போருக்கு பிந்தைய காலத்தில் பெரும்பாலும் பொருளாதார விரிவாக்கத்தால் நிலைப்பு தன்மைக்கு வழிவகுத்தது.

வரலாற்றுப் பார்வையில் தென் இந்தியாவில் வர்த்தகம் மற்றும் வணிகர்கள்

வர்த்தக நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கவும், விரிவுபடுத்தவும் வணிகர்கள் தென்னிந்திய வர்த்தகக் குழுக்களை உருவாக்கினார்கள். இந்திய கலாச்சாரத்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வழிகளாக வர்த்தகக் குழுக்கள் இருந்தன. தென்னிந்தியாவில் வர்த்தகம் சோழர்கள் ஆதிக்கத்திலிருந்து பின்பு அது பல்லவர்கள் ஆதிக்கத்திற்கு மாறியது.

ஆரம்பகால வர்த்தகர்கள்

  • 1053 AD(CE) யில் கலிங்க வர்த்தகர்கள் (நவீன ஒரிசா) சிவப்பு வண்ண கல் அலங்கார பொருட்களை வர்த்தகத்திற்கு கொண்டு வந்தனர்.
  • மேலும் , ஆரம்ப நாட்களில் பருத்தி ஜவுளியை தென்கிழக்கு ஆசியாவிற்கும் கொண்டு வந்து வர்த்தகம் செய்தனர்.
  • மத்திய காலத்தில் தெற்குன் இந்தியாவில் வர்த்தகர்களாக கத்ரிகாஸ், நாகராஸ், மும்முரிதந்தாஸ், அய்யாவோலி 500, செட்டீஸ், பிருடாஸ், கோவாரஸ் போன்ற பல வர்த்தக குழுவினர் செயல்பட்டனர்.
  • தொகராஸ் , கோவாரஸ் போன்ற சில வர்த்தக குழுவினர் ஆலய வளாகத்தில் மட்டுமே சந்தித்து வர்த்தகத்தை மேற்கொண்டனர்.

தென் இந்தியாவில் ஐரோப்பிய வணிகர்கள்

இந்த காலத்தில் இந்தியாவிற்கு பல்வேறு ஐரோப்பிய நிறுவனங்கள் வருவதற்கு வர்த்தக நடவடிக்கைகள் காரணமாக இருந்தது. வாஸ்கோடாகாமாவால் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு நன்னம்பிக்கை முனை வழியாக புதிய கடல் பாதை கண்டுபிடிக்கப்பட்டது. அது நாகரீக உலகத்தின் மீது பல விளைவுகளை ஏற்படுத்தியது. இந்தியாவின் கடலோர மற்றும் கடல் வர்த்தகம் ஐரோப்பியர்களால் முற்றுரிமை பெற்றிருந்தது.

போர்ச்சுக்கீசியர்கள்

  • வாஸ்கோ-டா-காமாவின் தலைமையின் கீழ் போர்ச்சுகீசியர்கள் மே 17, 1498ல் கோலிக்கோட்டில் வாணிபத்திற்காக வந்தனர். வாஸ்கோ-டா- காமாவால் போர்ச்சுக்கல்லுக்கு கொண்டு வந்த பொருட்களின் லாபமானது, இந்தியா முழுவதும் பயணம் செய்த செலவைவிட 60 மடங்காகும்.
  • 1500 AD (CE)ல் பெட்ரோ ஆல்வாரேஸ் கபரல் இந்தியாவிற்கு வருகைப் புரிந்தார். மேலும் 1502ல், வாஸ்கோ-டா-காமாவின் இரண்டாவது பயணத்தினால் இந்தியாவில் காலிகட், கொச்சின் மற்றும் கண்ணனூர் ஆகிய இடங்களில் வர்த்தக நிறுவனங்கள் நிறுவுவதற்கு வழிவகுத்தது. ஆரம்பத்தில் இந்தியாவில் போர்ச்சுகீசியர்களின் தலைநகரமாக கொச்சின் இருந்தது.

தென்னிந்தியாவில் டச்சுக்காரர்கள்

  • 1596ல் இருந்து டச்சுக்காரர்கள் பல பயணங்கள் மேற்கொண்டு, டச்சு கிழக்கு இந்திய நிறுவனத்தை 1602 ல் உருவாக்கினார்.
  • அட்மிரல் ப்வான் டெர் ஹகேன் என்பவரால் டச்சு நிறுவனம் மசூலிப்பட்டினம், பெத்தபோலி (நிஜாம்பட்டினம்) , தேவனாம்பட்டினம் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டது.
  • 1610ம் ஆண்டில் சந்திரகிரி ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி புலிகாட்டில் மற்றொரு தொழிற்சாலையை நிறுவினர்.
  • இண்டிகோ, சால்ட்பேட்டர் மற்றும் வங்க கச்சா பட்டு போன்ற இதர பொருட்கள் டச்சுக்காரர்களால் ஏற்றுமதி செய்யப்பட்டது.
  • இந்தியாவில் டச்சுக்காரர்களின் தலைமையிடமாக புலிகாட் இருந்தது. 1659ல் போர்ச்சுக்கீசியர்களிடமிருந்து தஞ்சாவூர் கடற்கரையில் இருந்த நாகப்பட்டினத்தை கைப்பற்றியது.

பிரிட்டிஷ் நிறுவனம் (இங்கிலாந்து)

  • டிசம்பர் 31, 1600 அன்று கிழக்கு இந்திய கம்பெனிக்கு நிறுவனம் துவங்குவதற்கு எலிசபெத் ராணியால் பட்டயம் வழங்கப்பட்டது.
  • தென் கிழக்கு கடற்கரையில், ஆங்கிலேயர்கள் 1611ல் மசூலிப்பட்டினத்திலும், 1626ல் புலிகாட் அருகிலும் நிறுவினார்கள்.
  • கோல்கொண்டாவின் சுல்தான், ஆங்கிலேயர்களுக்கு “கோல்டன் ஃபயர்மேன்” என்ற பட்டத்தை வழங்கி , 1632ல் அவர்களை தங்கள் “ராஜ்ய துறைமுகங்களில்” இலவசமாக வர்த்தகம் செய்யவும் அனுமதி வழங்கினார்.
  • 1639ஆம் ஆண்டுல் ஆங்கிலேயர்களால் சென்னையில் ஒரு வலுவான நிறுவனம் கட்டப்பட்டது. பின்பு அது செயின்ட் ஜார்ஜ் கோட்டை என அழைக்கப்பட்டது.
  • கோரமண்டல கடற்கரையிலுள்ள மசூலிப்பட்டினம் விரைவில் ஆங்கில குடியேற்றத்தின் தலைமையகமாக மாறியது.

டேனிஷ்காரர்கள்

  • டேனிஷ்காரர்கள் 16169ஆன் ஆண்டில் இந்தியாவிற்கு வருகை புரிந்து டேனிஷ் கிழக்கு இந்திய நிறுவனம் ஒன்றை உருவாக்கினார்.
  • 1620ம் ஆண்டில் டேனிஸ், இந்தியாவில் டேனிஷ் குடியேற்றங்களால் டிராங்குபாரை (தமிழ்நாடு) தலைமையிடமாக நிறுவியது.
  • ஆனால், அவர்கள் இந்தியாவில் தங்களை வலுப்படுத்த தவறியதால், 1845ல் அனைத்து குடியேற்றங்களையும் ஆங்கிலேயர்களால் கட்டாயப்படுத்தப்பட்டு அவர்களுக்கே விற்றுச் சென்றனர்.

பிரெஞ்சுக்காரர்கள்

  • இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்கள், 1668ம் ஆண்டுல் கோல்கொண்டாவின் சுல்தானிடம் அனுமதி பெற்று, முதல் பிரெஞ்சு தொழிற்சாலையை நிறுவினர்.
  • 1693ம் ஆண்டு டச்சுக்காரர்கள் பாண்டிச்சேரியை கைப்பற்றி மீண்டும் பிரெஞ்சுக்காரர்களிடமே ஒப்படைத்தனர்.
  • 1701ல் பாண்டிச்சேரி பிரெஞ்சின் தலைமையிடமாக மாறியது. 1742ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரசியல் நோக்கங்களைத் தொடர்ந்து கிழக்கு மாகாணங்களில் குடியேற்றங்கள் வணிக ஆதாயத்திற்கான விருப்பத்தை மறைக்கத் தொடங்கியது.
  • சமீபத்தில் இந்திய அரசு, தென்னிந்தியாவில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை (SEZ) குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் ஏற்படுத்தியது.
  • ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் நாங்குனேரி SEZ , எண்ணூர் SEZ, கோயம்புத்தூர் SEZ என தமிழ்நாட்டில் சில SEZ கள் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தியாவில் உலகமயமாக்கல்

  • இந்தியாவில் 1980-81க்கு பிறகு 1990-91களில் நடைபெற்ற வளைகுடா போரின் காரணமாக எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் மேற்கு ஆசியாவில் போர்க்குகணம் ஆகியவற்றின் காரணமாக கடுமையான அயல்நாட்டு வாணிபச் செலுத்து சமநிலையின் சிக்கல்கள் குறிப்பிடத்தக்கது.
  • புதிய அரசு ஜூன்1991ல் பொறுப்பு ஏற்றவுடன் இந்திய அயல்நாட்டு செலுத்து சமநிலையில் முன் எப்போதும் இல்லாத நெருக்கடியை சந்தித்தது.
  • மத்திய, மாநில அரசுகளின் நிதி கிட்டதட்ட ஒரு நிதியில்லா நிலைமையை அடைந்தது என்றும் கூறலாம்.
  • சில சர்வதேச நிறுவனங்களால் இந்தியாவின் கடன் மதிப்பீடு குறைந்ததுடன், இங்கிருந்து அதிகமான மூலதனமும் வெளியே சென்றது.
  • இந்தியா சர்வதேச சந்தையில் தனது கடன் தரும் தகுதியை இழந்ததால், இங்கிலாந்து வங்கியில் (Bank of England) 40 டன் தங்கத்தை அடமானம் வைத்தது.
  • இந்த சூழ்நிலையில், 1991-92ல் அரசாங்கம் ஜூலை 1991ல் தனது வரவு செலவுத் திட்டத்தை தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் (LPG) ஆகியவற்றின் தொடர்ச்சியான கொள்கை மாற்றங்களுடன் வழங்கியது.
  • இந்த கொள்கைகள் இந்தியாவில் 1994ம் ஆண்டில் “டங்கல் வரைவை” கையெழுத்திட்ட போது பலப்படுத்தப்பட்டது.

உலகமயமாக்கல் சார்ந்த சீர்திருத்தங்கள்

(இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை)

  1. சில தொழிற்சாலைகளை தவிர, தொழில் உரிமம் பெறுவதை நீக்கியது.
  2. பொதுத்துறை நிறுவனத்திற்காக ஒதுக்கப்பட்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
  3. இந்தியாவின் பொருட்களின் ஏற்றுமதி பரிமாற்றத்தில் நிலையான பணத்தின் மாற்று வீதத்தை சரி செய்தது.
  4. வெளிநாட்டு தனியார் துறை நடப்பு கணக்கில் இறக்குமதி வரியை குறைப்பதன் மூலம் வர்த்தகத்துக் ரூபாய் மாற்றத்தை உருவாக்கியது.
  5. அயல்நாட்டு செலவாணி ஒழுங்குமுறை பொருத்தமாக திருத்தப்பட்டது.
  6. இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட சட்ட ரீதியான நீர்மை விகிதம் (SLR) அதிகரிக்கப்பட்டது.

பன்னாட்டு நிறுவனம் (MNC)

நாட்டில் பண்டங்களையும் அல்லது பணிகளையும் உற்பத்தி செய்யும் அல்லது கட்டுப்படுத்தும் ஒரு பெருநிறுவனமாகும். பன்னாட்டு நிறுவனங்களை (Multi National Company) சர்வதேச நிறுவனங்கள் (Trans National Corporation) அல்லது பன்னாட்டு அமைப்பு (Multi National Enterprise) எனவும் கூறலாம்.

MNC யின் பரிமான வளர்ச்சி

  • கிழக்கு இந்திய நிறுவனம், இந்தியாவை ஒரு வர்த்தக நிறுவனமாகக் கொண்டு வந்தது. அதன் பிறகு அரசியல் ரீதியாக நாடெங்கிலும் பரவலாக ஆதிக்கம் செலுத்தியது.
  • 1920களில் பன்னாட்டு நிறுவனங்கள் முதலில் பிரித்தெடுக்கப்பட்ட தொழில்களில் அல்லது தொழில் நடத்தும் நாடுகளின் மூலப்பொருட்களை கட்டுப்படுத்தி மெதுவாக இந்தியாவினுள் நுழைந்தன.
  • 1950களுக்கு பிறகு உற்பத்தி மற்றும் பணிகள் துறையிலும் ஈடுபட்டது. தற்போது, இந்தியாவில் நான்கு பெரிய ஏற்றுமது நாடுகளாக அமெரிக்க, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு சொந்தமான பன்னாட்டு நிறுவனங்கள் பெரும்பான்மையாக உள்ளது. இவற்றில் மிகப்பெரியது அமெரிக்காவாகும்.
  • இந்தியாவிலுள்ள 15 பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் , 11 அமெரிக்காவை சேர்ந்ததாகும். 1971 ஆன் ஆண்டில் அமெரிக்க நிறுவனங்கள் மொத்த உலக பங்குகளில், வெளிநாட்டு நேரடி முதலீட்டில் (FDI) 52 சதவீதத்தைக் கொண்டிருந்தன.
  • மேலும் , இங்கிலாந்து 14 சதவீதம், பிரான்ஸ் 5.0 சதவீதம் ஜெர்மனி 4.4 சதவீதம் மற்றும் ஜப்பான் 2.7 சதவீதம் பங்கினையும் கொண்டிருந்தன.
  • 1969ம் ஆண்டு அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் மட்டும் தோராயமாக 140 பில்லியன் டாலர் மதிப்புள்ள பண்டங்களை உற்பத்தி செய்தது.
  • ஆசிய நாடுகளில் 34 சதவிகிதமும் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் 22 சதவிகிதமும் கணிசமான வருமானம் பெறப்படுவதை அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் உணர்ந்தது.
  • பின்னர் அவை புரவல நாடுகளின் பெரும் அதிகாரங்களைப் பெற்றனர். இது சர்வேத எல்லைகளுக்குள் சுதந்திரமான நிதி ஓட்டத்தை சீராக்கியது. அவர்கள் இந்த நாடுகளின் சிறந்த அறிவாளிகளை (ஆற்றல் மிகுந்தவர்கள்) பெற்றுக்கொண்டு நியாயமற்ற நடைமுறைகளை மேற்கொண்டனர்.
  • அவர்களின் பெரிய ஆதாரங்களைப் பயன்படுத்தி பன்னாட்டு நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்யவும், புதிய தயாரிப்புகளை உருவாக்கவும், தொழில்நுட்ப முன்னேற்றங்களை சுரண்டிக்கொள்ளவும் மற்றும் புதிய செயல்முறையை கண்டறியவும் செய்தனர்.

இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சி

  • இந்திய தொழில்துறையில் பன்னாட்டு நிறுவனம் நிறுவனம் ஒரு பொதுவான வடிவத்துடன், இந்திய தொழிலதிபர்களின் ஒத்துழைப்புடன் நுழைந்தது.
  • 1980 களில் தாராளமயமாக்களின் போக்குகள் வெளிநாட்டு ஒத்துழைப்புக்கு கணிசமான பங்கினை அளித்தன.
  • 1948 -1988ஆம் ஆண்டிற்கு இடையில் 40 ஆண்டுகளில் கையெழுத்தான 12,760 மொத்த வெளிநாட்டு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் இருந்து இது தெளிவாகிறது.
  • சூலை –ஆகஸ்ட் 1991ல் அறிவிக்கப்பட்ட தாராளமயமாக்கப்பட்ட வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கையினால் (FIP) வெளிநாட்டு ஒத்துழைப்புகள் அதிகரித்து வெளிநாட்டு நேரடி முதலீடும் (FDI) அதிகரித்துள்ளது.

MNC யின் வளர்ச்சிக்கான காரணங்கள்

1. சந்தை நிலப்பரப்பின் விரிவாக்கம்

பெரிய அளவிலான நிறுவனங்களின் விரிவாக்கங்கள் விரிவடைந்து வருவதால், அந்த நிறுவனம் உள்ள நாட்டின் புவியியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளை மேலும் விரிவாக்குகிறது.

2. சந்தைப்படுத்தும் மேன்மை

ஒரு பன்னாட்டு நிறுவனம், தேசிய நிறுவனங்களின் மீது சந்தைப்படுத்தும் மேன்மையைக் கொண்டுள்ளது. இது சந்தை மதிப்பினைப் பெற்று, அதன் தயாரிப்புகளை விற்பனை செய்வதில் குறைவான சிரமங்களை எதிர் கொள்கிறது. மேலும் பயனுள்ள விளம்பர மற்றும் விற்பனை ஊக்குவிப்பு தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்கிறது.

3. நிதி மேன்மை

இதில் நிதி வளங்களும், உயர்நிதி பயன்பாடுகளும் உள்ளன. அதனால் , வெளிப்புற மூலதன சந்தைகளை எளிதில் அணுகமுடியும் மற்றும் அதன் சர்வதேச புகழ் காரணமாக வளங்களை அதிகரிக்கவும் முடியும்.

4. தொழில்நுட்ப மேன்மை

பின்தங்கிய நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்க, ஊக்கமளித்ததற்கான முக்கிய காரணம் தேசிய தொழிற்துறைகளுடன் ஒப்பிடுகையில், இந்த நிறுவனங்கள் தொழில் வளர்ச்சியில் தொழில்நுட்ப மேம்பாட்டுடன் காணப்படுவதேயாகும்.

வெளிநாட்டிலுள்ள இந்தியாவின் பன்னாட்டு நிறுவனங்கள்
வ.எண் நிறுவனம் தலைமையகம் தொழிலின் வகை நிறுவனம் இயங்கும் நாடுகள்
1 ஹரோ மோட்டோகார்ப் புதுடில்லி ஆட்டோமொபைல் கொலம்பியா, பங்களாதேஷ், ஆப்பிரிக்கா
2 பஜாஜ் பூனா ஆட்டோமொபைல் கொலம்பியா, பங்களாதேஷ், ஆப்பிரிக்கா
3 டி.வி.எஸ்(TVS) சென்னை ஆட்டோமொபைல் ஐக்கிய அரபு நாடுகள், பங்களாதேஷ்
4 பாரத ஸ்டேட் வங்கி மும்பாய் வங்கி பிரேசில், சிலி, கொலம்பியா, மெக்ஸிகோ, பெரு
5 பாரத் ஏர்டெல் புதுடில்லி தகவல் தொடர்பு தென் ஆசியா, ஆப்பிரிக்கா
6 மைக்ரோ மேக்ஸ் இன்டர்மேட்டிக்ஸ் கூர்கான் மின்னணு பொருட்கள் நேபால், ஸ்ரீலங்கா, பங்களாதேஷ்
7 அமுல் ஆனந்த் (குஜராத்) உணவுப் பொருள் ஐக்கிய நாடுகள், தாய்லாந்து, மலேசியா, ஹாங்காங், ஜப்பான்
8 ஓ.என்.ஜி.சி. (ONGC) புதுடில்லி எரிவாயு பிரேசில், கொலம்பியா, ஈரான்
9 Dr.ரெட்டி மருத்துவ ஆய்வகம் ஹைதராபாத் மருத்து பொருட்கள் பிரேசில், மெக்ஸிகோ, ஜமாலிகா
10 இன்போசிஸ் பெங்களூரு மென்பொருள் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா

5. பண்டங்களின் கண்டுபிடிப்புகள்

பன்னாட்டு நிறுவனங்கள், புதிய தயாரிப்புகள் மற்றும் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை உயர்ந்த வடிவமைப்புகளாக உருவாக்குவதற்கான பணியில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுடன் ஈடுபட்டுள்ளன.

MNC யின் நன்மைகள்

  1. பன்னாட்டு நிறுவனங்கள் குறைந்த விலையில் பொருட்களை தரமாகவும் மற்றும் பரிவர்த்தனை செலவு இல்லாமலும் உற்பத்திசெய்கிறது.
  2. பன்னாட்டு நிறுவனங்கள் விலைகளை குறைப்பதால் உலகளாவிய நுகர்வோரின் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது.
  3. பன்னாட்டு நிறுவனங்கள் வரி மாறுபாட்டை பயன்படுத்துக் கொள்ளமுடியும்.
  4. பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளூர் பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பினை ஊக்குவிக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களின் தீமைகள்

  1. பன்னாட்டு நிறுவனங்கள் முற்றுரிமையை (சில தயாரிப்புகளுக்கு) வளர்ப்பதற்கான ஒரு வழியாகும்.
  2. பன்னாட்டு நிறுவனங்களினால் சுற்றுச்சூழலில் தீங்கினை உருவாக்க வாய்ப்புள்ளது.
  3. ஒரு புரவலன் நாட்டின் பொருளாதாரத்தில் பன்னாட்டு நிறுவனத்தின் அறிமுகம் சிறிய உள்ளூர் வணிக வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
  4. பன்னாட்டு நிறுவனங்கள் ஒழுக்க நெறிமுறைகளை மீறுவதோடு, தார்மீக சட்டங்களை அவர்களை குற்றம் சாட்டி, மூலதனத்துடன் தங்கள் வணிக செயல்பாட்டினை திருப்பிக் கொள்வதற்கும் முனைவர்.

நியாயமான வர்த்தக நடைமுறைகள் மற்றும் உலக வர்த்தக அமைப்பு (WTO)

  • நியாயமான வர்த்தகமானது, சிறிய விவசாயிகளை உலகளாவிய சந்தை இடத்தில் ஒரு சுறுசுறுப்பான பகுதியாக வைத்திருப்பதோடு நுகர்வோருக்கு அதிகாரம் அளிகவும், கொள்முதல் செய்யவும், அவர்களின் மதிப்பை அதிகரிக்கவும் நோக்கமாகக் கொள்ளும் ஒரு வழி முறையாகும்.
  • நியாயமான வர்த்தகம் என்பது விவசாயப் பொருட்கள் மற்றும் முன்கூட்டியே வடிவமைக்கப்பட்டகைவினைப் பொருட்களின் உற்பத்தியாளரும் மற்றும் வாங்குவோரும் தானாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பல பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் குறிக்கோள்களை முன்னெடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட வணிக நடைமுறைகளேயாகும். அவைகள்,
  • சிறிய அளவிலான விவசாயிகள், பண்ணை தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் வருமானத்தை உயர்த்துவது மற்றும் உறுதிப்படுத்துதல்.
  • பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையுடன் தொடர்புடைய பொருளாதார லாபங்கள், வாய்ப்புகள் மற்றும் இடர்பாடுகளை சமமாக விநியோகித்தல்.
  • உற்பத்தியாளர் குழுக்களின் நிறுவன மற்றும் வர்த்தக திறன்களை அதிகரித்தல்.
  • தொழிலாளர் உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் தொழிலாளர்கள் சரியான முறையில் ஒருங்கிணைக்க ஏற்பாடு செய்தல்.
  • பாதுகாப்பான மற்றும் நிலையான விவசாய முறைகள் மற்றும் பணி நிலைமைகளை ஊக்குவித்தல்.
  • நியாயமான வணிகம் என்பது விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு சிறந்த விலை, சிறந்த வேலைவாய்ப்பளித்தல் மற்றும் வர்த்தகம் தொடர்பான நியாயமான விதிமுறைகளை அளிப்பதாகும்.
  • இவற்றின் ஆதரவு, வளர்ந்து வரும் விவசாயிகள் மற்றும் தொழிலாளி வர்க்கத்தின் வாழ்விற்கும் மற்றும் அவர்கள் எதிர்காலத்தையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் மையமாகக் கொண்டிருக்கும்.

நியாயமான வணிக நடைமுறைகளின் பயனாளிகள்

1. நுகர்வோர்

நுகர்வோர், நியாயமான வர்த்தக அமைப்பை ஆதரித்தும் மற்றும் சர்வதேச வர்த்தக விதிகளின் பரந்த சீர்திருத்தத்தை ஒப்பிட்டும், அவர்கள் சிறந்த தயாரிப்புகளை வளர்ந்து வரும் வரம்பிலிருந்து தேர்வு செய்யலாம். நியாயமான வர்த்தக பெயரிட்ட தயாரிக்களை நுகர்வோர் வாங்குவதன் மூலம், தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த போராடும் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கலாம்.

2. வர்த்தகர் / நிறுவனங்கள்

2002ஆம் ஆண்டு முதல், இது வர்த்தகத்தில் மிகவும் பரவலாக அங்கீகரிக்கப்பட்டு சமூக மற்றும் முன்னேறிய அடையாளமாக மாறியுள்ளது. நியாயமான வர்த்தக நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்திற்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு நம்பகமான வழியை வழங்குகிறது.

3. உற்பத்தியாளர்கள்

நிலையான விலையில் நிலையான உற்பத்தி செலவுகளை கட்டுப்படுத்தலாம். சந்தை அணுகுதல் என்பது சந்தையில் இருந்து வெளியேற்றப்பட்ட உற்பத்தியாளர்களிடம் வர்த்தகம் செய்ய வாங்குபவர்கள் உதவுதலாகும். பங்குதாரர், (உற்பத்தியாளர்கள் தங்கள் எதிர்கால முடிவுகளில் ஈடுபடுதல்) விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

நியாயமான வர்த்தக அமைப்பின் கோட்பாடுகள்

  • பொருளாதார ரீதியில் பின்தங்கிய உற்பத்தியாளர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குதல்.
  • வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு.
  • நியாயமான வர்த்தக/ நடைமுறைகள் மற்றும் நியாயமான விலையில் கொடுப்பது.
  • குழந்தை தொழிலாளர் மற்றும் கட்டாயத் தொழிலாளர் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
  • பாகுபாடு அல்லாத, பாலின சமபங்கு மற்றும் சங்க சுதந்திரம் ஆகியவற்றுக்கு அர்ப்பணித்தல்.
  • திறனை வளர்த்தல் மற்றும் நியாயமான அமைப்பினை மேம்படுத்துதல்.
  • சுற்றுச்சூழலுக்கு மதிப்பளித்தல்.
  • காப்பி, டீ, கோகோ, தேன் மற்றும் வாழைப்பழம் போன்றவை நியாயமான வர்த்தக உணவுப் பொருட்களாகும். கைவினைப்பொருட்கள், ஜவுளி மற்றும் பூக்கள் போன்றவை உணவு அல்லாத பொருட்களாகும்.

GATT (காட்) (General Agreement of Trade and Tariff):

சுங்கவரி, வாணிபம் குறித்த பொது உடன்பாடு:

  • 1947இல் 23 நாடுகள் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. காட்டின் நிறுவன உறுப்பினர்களின் இந்தியாவும் ஒன்றாக இருந்தது.
  • ஏழாவது சுற்றில் 99 நாடுகள் பங்கேற்றது. 1986ஆம் ஆண்டின் எட்டாவது சுற்றில்(உருகுவே சுற்று) 117 நாடுகள் பங்கேற்றன. காட்டின் இயக்குநர் ஜெனரல் ஆர்தர் டங்கல் கொண்டு வந்த இறுதி சட்ட/ ஒப்பந்த வரைவு “டங்கல் வரைவு” என்று அழைக்கப்பட்டது.
  • டங்கல் வரைவிற்கு ஏப்ரல் 15, 1994 அன்று இறுதியாக, சட்டம்/ ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • காட்டின் முக்கிய நோக்கம், அர்த்தமுள்ள விதிமுறைகளை பின்பற்றி பலவிதமான கட்டணங்களையும், ஒதுக்கீடுகளையும், மானியங்களையும் குறைப்பதன் மூலம் சர்வதேச வர்த்தகத்தை அதிகரித்தல் ஆகும்.

காட்டின் (GATT) சுற்றுகள்

  • I வது ஜெனிவா (சுவிசர்லாந்து) – 1947
  • II வது அன்னிசி (பிரான்ஸ்) – 1949
  • III வது டார்க்குவே (இங்கிலாந்து) – 1950-51
  • IV, V மற்றும் VI ஜெனிவா (சுவிசர்லாந்து) – 1956, 1960-61, 1964 – 67
  • VII வது டோக்கியோ (ஜப்பான்) – 1973-79
  • 1986 – 1994ல் VIII வது மற்றும் இறுதிச் சுற்று பன்டாடேல் எஸ் டீ (உருகுவே). இதை “உருவே சுற்று” என அழைத்தனர்.

உலக வர்த்தக அமைப்பு (WTO):

  • 1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உலக வர்த்தக அமைப்பை (WTO) அமைப்பதற்கு காட் உறுப்பு நாடுகள் உருகுவே சுற்றின் இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த அமைப்பை அமல்படுத்திட உடன்படிக்கையை ஏற்று 104 உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்டது.
  • WTO உடன்படிக்கை ஜனவரி 1, 1995 முதல் நடைமுறைக்கு வந்தது. (தற்போது உலக வர்த்தக அமைப்பில் 164 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்)

உலக வர்த்தக அமைப்பு (World Trade Organisation)

தலைமையகம் : ஜெனிவா, சுவிசர்லாந்து

நோக்கம் : வணிகத்தினை கட்டுப்படுத்துதல், அயல்நாட்டு வாணிபம்

WTO உறுப்பினர்கள்: தலைமை இயக்குநர், துணை தலைமை இயக்குநர் – 4 மற்றும் 80 உறுப்பு நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 600 அலுவலக ஊழியர்கள்.

WTO ஐந்து வகையான மானியங்களை குறிப்பிடுகிறது

  1. பண மானியங்கள் அளித்தல்
  2. விதிவிலக்குகள், கடன்கள் அல்லது இடைநிறுத்தல் போன்ற வரி சலுகைகள் அளித்தல்.
  3. கடன் உத்தரவாதங்கள் போன்ற அபாயத்தை ஊகித்தல்.
  4. அரசு கொள்முதல் கொள்கைகள் சுதந்திர சந்தை விலையை விட அதிகமாக செலுத்துதல்.
  5. பங்கு கொள்முதல் சந்தை பங்குகளை விட ஒரு நிறுவனத்தின் பங்கு விலை அதிகமாக இருத்தல்.

இவை அனைத்தும் மானியங்கள் எனக் கருதப்படுகின்றன, ஏனென்றால் அவை வணிகம் செய்வதற்கான செலவினை குறைக்கின்றன.

WTO வின் குறிக்கோள்கள்

  • அயல்நாட்டு வாணிபத்திற்கான விதிகள் அமைத்தல் மற்றும் செயல்படுத்தல்.
  • வர்த்தக தாராளமயமாக்கலுடனான பேச்சு வார்த்தை மற்றும் கண்காணிப்பதற்கான ஒரு மன்றத்தை வழங்குதல்.
  • வர்த்தக தகராறுகளைக் கையாளுதல்.
  • நிலையான முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டையும் ஒன்றிணைத்து அறிமுகம் செய்தல்.
  • உலக வர்த்தகத்தில் வளர்ந்துவரும் நாடுகளின் ஒரு சிறந்த வளர்ச்சிக்கு பாதுகாப்பாக இருத்தல்.
  • முடிவெடுக்கும் செயல்களின் வெளிப்படைத் தன்மையை அதிகரித்தல்
  • முழு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் பயனுள்ள தேவையை அதிகரித்தல்

அறிவுசார் சொத்துரிமை தொடர்பான வர்த்தக உரிமைகள் (TRIPs – Trade Related aspects of Intellectual Property Rights)

அறிவுசார் பண்டங்களின் உரிமைகள் என்பது “ஒரு வணிக மதிப்புடன் கூடிய தகவல்” என வரையறுக்கலாம்.

TRIPs ன் கீழ், பண்டங்கள் அல்லது செயல்முறைகள் , அனைத்து துறைகளின் தொழில் நுட்பங்களில், எந்தவொரு கண்டுபிடிப்புக்கும் காப்புரிமை வழங்குகிறது. TRIPs ஒப்பந்தத்தில் ஏழு பகுதிகள் அறிவார்ந்த சொத்து உரிமைகளை உள்ளடக்கியுள்ளது. அதாவது, நகல் உரிமைகள், வர்த்தக சந்தை, வர்த்தக ரகசியங்கள், தொழில் வடிவமைப்பு, புவியியல் முகவர்களின் ஒருங்கிணைந்த சுற்றுகள் மற்றும் காப்புரிமைகள் போன்றவைகள் ஆகும்.

வர்த்தக தொடர்புடைய முதலீட்டு நடவடிக்கைகள் (TRIMs – Trade Related Investment Measures)

உள்நாட்டு தொழில்களின் வளர்ச்சிக்காக தேவையான வசதிகளை வழங்குவதற்கு அந்நாட்டில் செய்யப்படும் வெளிநாட்டு முதலீட்டிற்கு சில நிபந்தனைகள் அல்லது கட்டுப்பாடுகளை அட்ரசு விதிக்கும் என்பதையே TRIMs குறிக்கிறது என உருகுவே சுற்று உடன்படிக்கை கூறுகிறது.

உலகமயமாக்கலின் தாக்கமும் மற்றும் சவால்களும்

நேர்மறைத் தாக்கம்

  • ஒரு சிறந்த பொருளாதாரம், மூலதன சந்தையின் விரைவான வளர்ச்சியை அறிமுகப்படுத்துகிறது.
  • வாழ்க்கைத் தரம் அதிகரித்துள்ளது.
  • உலகமயமாக்கல் வேகமாக வர்த்தகத்தை அதிகரித்து, அதனால் அதிக மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது.
  • புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய அறிவியல் ஆராய்ச்சி முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • உலகமயமாக்கல் ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும்.
  • இது பண்டங்களின் ஓட்டத்தை தாராளமாக அதிகரிக்கவும், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (FDI) அதிகரிக்கவும் உதவுகிறது.

எதிர்மறைத் தாக்கம்

  • நாடுகளுக்கிடையே மிக அதிகமான மூலதனம், வருமானத்தின் நியாயமற்ற மற்றும் ஒழுக்கமற்ற விநியோகிப்பாளர்களை அறிமுகப்படுத்துகிறது.
  • தேசிய ஒருமைப்பாட்டை இழந்து வருவதோடு, மிக அதிகமான வர்த்தக பரிமாற்றம் இருப்பதால், சுதந்திரமான உள்நாட்டுக் கொள்கைகள் இழக்கப்படுகின்றன என்பது அச்சத்திற்குரியதாகும்.
  • முக்கிய உள்கட்டமைப்பும் மற்றும் வளங்களை பிரித்தெடுத்தலும் ஒரு பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சிக்கு தேவை என்றாலும், இது எதிர்மறை சுற்றுச்சூழல் மற்றும் சமூக செலவுகளை அதிகரிக்கும்.
  • அந்நிய செலாவணியை பெறுவதற்காக, இயற்கை வளங்கள் மிக அதிகமாக விரைவாக சுரண்டப்படுகிறது.
  • சுற்றுச்சூழல் பற்றிய தரங்களும், கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

உலகமயமாக்கலின் சவால்கள்

  • உலகமயமாக்கலில் நன்மைகள் அனைத்து நாடுகளுக்கும் நீடிக்கப்படவேண்டும். அவை தன்னிச்சையாக செயல்படாது.
  • வளர்ந்து வரும் உலகில் உலகமயமாக்கல், உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும் என்பது அச்சத்திற்குரியதாகும்.
  • உலகமயமாக்களினால் உலகளாவிய போட்டி அதிகரித்த தொழில்துறை உலகில், ஊதியங்கள், தொழிலாளர் உரிமைகள், வேலைவாய்ப்பு நடைமுறைகள் ஆகியவற்றை அடிமட்டத்திற்கு கொண்டு செல்ல இது வழிவகுக்கும்.
  • இது உலகளாவிய சமத்துவமின்மைக்கு வழிவகுக்கிறது.
  • உலகமயமாக்கல் ஒரு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
  • உலகமயமாக்களால் குழந்தை தொழிலாளர் மற்றும் அடிமைத்தனம் போன்ற நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது.
  • மக்கள் அதிகமாக துரித உணவுகளை உட்கொள்கிறார்கள். இதனால் உடல்நலக் குறைவு மற்றும் நோய் பரவுதலுக்கு இது வழிவகுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!