ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் Notes 8th Social Science Lesson 18 Notes in Tamil
8th Social Science Lesson 18 Notes in Tamil
18. ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்
அறிமுகம்
நகரங்களின் பரிணாமம் (நகர்ப்புற குடியேற்றங்கள்) பல்வேறு வழிகளில், பல்வேறு கட்டங்களில் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே நகரங்கள் செழித்து வளர்ந்தன. இந்தியாவில் உள்ள நகரங்களை பண்டைய கால நகரங்கள், இடைக்கால நகரங்கள் மற்றும் நவீன கால நகரங்கள் என வகைப்படுத்தலாம்.
பண்டைய கால நகரங்கள்
- பண்டைய காலங்களில் மன்னரின் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நகரங்கள் தோன்றியதோடு, அவற்றின் அமைப்பு வர்த்தகத்திற்கு ஏற்றார்போல் கடல் மற்றும் ஆறுகளை அடைவதற்கு ஏற்றதாக இருந்தது.
- பெரும்பாலானாவை நிர்வாக, சமய மற்றும் பண்பாட்டு மையங்களாக வளர்ந்தன.
- ஹரப்பா, மொகஞ்சதாரோ, வாரணாசி, அலகாபாத் மற்றும் மதுரை ஆகியவை புகழ்பெற்ற பண்டைய கால நகரங்கள் ஆகும்.
இடைக்கால நகரங்கள்
இடைக்காலத்தில் பெரும்பாலான நகரங்கள் மாநிலம் மற்றும் நாட்டின் தலைநகரங்களாக வளர்ந்தன. அவை கோட்டை நகரமாகவோ அல்லது துறைமுக நகரமாகவோ செயல்பட்டன. அவற்றில் முக்கியமானவை டெல்லி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், லக்னோ, ஆக்ரா மற்றும் நாக்பூர்.
நவீன கால நகரங்கள்
- ஐரோப்பியர்களின் வருகை நகரங்களின் வளர்ச்சியில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. அவர்கள் முதலில் சூரத், டாமன், கோவா மற்றும் பாண்டிச்சேரி போன்ற சில கடலோர நகரங்களை உருவாக்கினர்.
- இந்தியாவில் தங்களை நன்கு நிலைநிறுத்திக் கொண்ட பிரிட்டிஷார் மும்பை, சென்னை. கொல்கத்தா ஆகிய மூன்று நகரங்களை நிர்வாகத் தலைநகராகவும் வணிக மையங்களாகவும் வளர்த்தனர்.
- ஆளுமையின் பரப்பு விரிவடைய பல புதிய நகரங்களை அதன் அமைவிடத்திற்காகவும் தேவைக்காகவும் வளங்களுக்காகவும் உருவாக்கினர்.
- புதியதாக வளர்ச்சிபெற்ற நகரங்கள், மலை நகரங்கள், தொழில் நகரங்க:, நீதிமன்ற நகரங்கள், இருப்புப்பாதை நகரங்கள், இராணுவ குடியிருப்புகள் மற்றும் நிர்வாக நகரங்களாக விளங்கின.
ஆங்கிலேயரின் ஆட்சியில் நகரமயமாக்கலின் தனித்துவங்கள்
I. தொழில் முடக்கப்படுதல்
- 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயர்களின் கொள்கைகள் நகரமயமாக்கலுக்கு எதிராக இருந்தது நிரூபணமானது. பின்னர் ஆங்கிலேயர்கள் பின்பற்றியப் பொருளாதாரக் கொள்கைகள் இந்தியாவின் பொருளாதாரத்தை விரைவாக ஒரு காலனித்துவப் பொருளாதாரமாக மாற்றுவதற்கும் நகரங்களின் வளர்ச்சிக்கும் வழிவகுத்தன.
- பிரிட்டிஷாரின் ஒரு வழியிலான சுதந்திரமான வர்த்தகத்தின் விளைவாக இந்திய உற்பத்தித் தொழில்கள் அழிக்கப்பட்டன.
- இந்திய உற்பத்தித் தொழில்களின் மொத்த அழிவின் விளைவாக லட்சக்கணக்கான கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் நசிந்து போயினர்.
- பல நூற்றாண்டுகளாக நாகரிக உலகின் சந்தைகளில் கோலோச்சியிருந்த இந்தியாவின் நகர்ப்புற கைவினைத் தொழில்களில் திடீர் சரிவு ஏற்பட்டது.
- நீண்ட காலமாக சிறப்பான உற்பத்தி பொருளுக்காகப் புகழ்பெற்ற நகர்ப்புற சந்தைகள் தொடர்ந்து குறையலாயின.
- இதன் விளைவாக புகழ்பெற்ற பழைய உற்பத்தி நகரங்களான டாக்கா,மூர்ஷிதாபாத், சூரத் மற்றும் லக்னோ போன்றவை முந்தைய முக்கியத்துவத்தை இழந்தன.
- இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் கடுமையான போட்டியினால் ஒட்டுமொத்த தொழில்துறை கட்டமைப்பும் செயலிழந்து போயின.
- பாரம்பரியத் தொழில்களை அடிப்படையாகக் கொண்டிருந்த இந்திய கைவினைத் தொழில் பொருட்கள், உற்பத்தி செய்யும் நகரங்கள் தொழிற்புரட்சொயின் விளைவாக அழிந்தன.
- அதிகப்படியான இறக்குமதி வரி மற்றும் ஏற்றுமதி சார்ந்த பிற கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியப் பொருட்கள் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இறக்குமதி செய்யப்படுவது குறையலாயின. இவ்வாறு இந்தியா, பிரிட்டனின் வேளாண்மை குடியேற்றமாக மாறியது.
II. நகர்மயமாதல் குறைதல்
- இந்தியப் பொருளாதரம் காலனிய பொருளாதாரமாக மாறியதால் உற்பத்தியாளர்களின் சந்தையாகவும் தொழிற்சாலைகளுக்கு கச்சாப் பொருட்களை வழங்குமிடமாகவும் மாறியதோடு பல நகரங்களில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வணிகத்தளத்தை கடுமையாக பாதித்தது.
- மன்னர்களின் அதிகாரங்கள் படிப்படியாக சரியத் தொடங்கியதால் அவர்களது ஆட்சியுடன் தொடர்புடைய நகரங்களின் அழிவுக்கு அது வழிவகுத்தது.
- ஒரு காலத்தில் ஏகாதிபத்திய நகரமாக இருந்த ஆக்ரா 19ஆம் நூற்றாண்டின் முதல் காலாண்டில் அதனை பெரும் அழிவு சூழ்ந்தது.
- ஏகாதிபத்தியத்தின் பல்வேறு கொள்கையின் விளைவாக சுதேச அரசர்கள் தங்களது அரச ஆங்கிலேயரிடம் இழந்தனர்.
- பிரிட்டிஷ் காலத்திற்கு முந்தைய நகர்ப்புர மையங்களின் வீழ்ச்சிக்கு பங்களிக்க மற்றொரு காரணி 1853ஆம் ஆண்டு இந்தியாவில் இருப்புப் பாதைகளை அறிமுகப்படுத்தியதாகும்.
- இரயில்வே அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக வர்த்தகப் பாதைகள் திசைதிருப்பப்பட்டு ஒவ்வொரு ரயில் நிலையமும் மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்யும் மையமாக மாறியது.
- பிரிட்டிஷ் உற்பத்தியாளர்கள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் சென்றடைய இரயில்வே வழிவகுத்ததால் நாட்டின் கிராமங்களிலுள்ள பாரம்பரிய தொழில்கள் அடியோடு நசிந்தன.
III. புதிய நகர மையங்களின் வளர்ச்சி
- கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப் பகுதிகளிலுள்ள கல்கத்தா, மதராஸ் மற்றும் பம்பாய் போன்ற இடங்களில் பிரிட்டிஷ் புதிய வர்த்தக மையங்களை உருவாக்கியது.
- மதராஸ் (1639), பம்பாய் (1661) மற்றும் கல்கத்தா (1690) போன்ற நகரங்களை உருவாக்கி பிரிட்டிஷார் வலுப்படுத்தினர்.
- இவை அனைத்தும் முன்னர் மீன்பிடித்தல் மற்றும் நெசவு தொழில் செய்யும் கிராமங்களாகும்.
- இங்கு அவர்கள் வீடுகள், கடைகள் மற்றும் தேவாலயங்களைக் கட்டியதோடு வணிக மற்றும் நிர்வாக தலைமையகத்தையும் அமைத்தனர்.
- 18ஆம் நூற்றாண்டின் மையப்பகுத்iயில் மாற்றத்தின் ஒரு புதிய காலகட்டம் தோன்றியது.
- 1757ஆம் ஆண்டு பிளாசிப் போருக்குப் பின்னர் ஆங்கிலேயர்கள் படிப்படியாக அரசியல் ஆதிக்கம் பெற்றதால் ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்தின் வர்த்தகம் விரிவடைந்தது.
- 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கல்கத்தா, பம்பாய் மற்றும் மதராஸ் ஆகியவை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் மாகாண நகரங்களாக (நிர்வாக நோக்கத்திற்காக காலனித்துவ இந்தியா மூன்று மாகாணங்களாக பிரிக்கப்பட்டன) முக்கியத்துவம் பெற்றன.
- சூயஸ் கால்வாய் திறப்பு, நீராவிப் போக்குவரத்து அறிமுகம், ரயில்வே சாலைகள் அமைத்தல், கால்வாய்கள், துறைமுகங்கள், தொழிற்சாலைகள் வளர்ச்சி, நிலக்கரி சுரங்கம், தேயிலைத் தோட்டம், வங்கிப்பணி, கப்பல் போக்குவரத்து மற்றும் காப்பீடு வளர்ச்சியினால் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நகரமயமாக்கலில் புதிய போக்கு தொடங்கியது.
- வர்த்தக பிணைப்புகளில் ஏற்பட்ட மாற்றம் நகர்ப்புற மையங்களின் வளர்ச்சியில் பிரதிபலித்தது.
- ஒரு நகர்ப்புற பகுதி என்பது அதிக மக்கள் தொகை அடர்த்தியோடு உணவு உற்பத்தியல்லாத தொழில்களில் ஈடுபடுவதும் நன்கு கட்டமைக்கப்பட்ட சூழலில் வாழ்வதும் ஆகும்.
அ) துறைமுக நகரங்கள்
- ஆங்கிலேயர்கள் வர்த்தகத்திற்காக இந்தியா வந்தனர்.
- மதராஸ், கல்கத்தா மற்றும் பம்பாய் ஆகியவை முக்கிய துறைமுகங்களாக மாறின. இவை வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகித்தன.
- ஐரோப்பிய பாணியிலான உயரமான கட்டடங்களுடன் இந்த நகரங்கள் முக்கிய வணிகப் பகுதிகளாக மாறின.
- ஆங்கில கிழக்கிந்திய நிறுவனம் அதன் தொழிற்சாலைகளைக் அமைத்ததோடு குடியேற்றத்தின் பாதுகாப்பிற்காக கோட்டைகளையும் அமைத்தனர்.
- சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையும் கல்கத்தாவில் புனித வில்லியம் கோட்டையும் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
ஆ) இராணுவக் குடியிருப்பு நகரங்கள்
- ஆங்கிலேயர் தங்கள் இராணுவ பலத்தால் இந்தியப் பகுதிகளையும், அரசியல் அதிகாரத்தையும் கைப்பற்றினர்.
- எனவே வலுவான இராணுவ முகாம்கள் தேவைப்பட்டதால் இராணுவக் குடியிருப்புகளை ஏற்படுத்தினர்.
- இராணுவக் குடியிருப்புகள் முற்றிலும் புதிய நகர்ப்புற மையங்களாக இருந்தன. இராணுவ வீரர்கள் இந்த பகுதிகளில் வசிக்கத் தொடங்கினர். மேலும் இப்பகுதிகள் படிப்படியாக நகரங்களாக வளர்ந்தன. எடுத்துகாட்டு : கான்பூர், லாகூர்.
இ) மலைவாழிடங்கள்
- காலனித்துவ நகர்ப்புற வளர்ச்சியில் மலைவாழிடங்கள் தனித்துவம் வாய்ந்தவையாகும்.
- ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு மலைவாழிடங்கள் பற்றி அறியப்படவில்லை. அவை சிலவாக இருந்ததோடு குறைந்த மக்கள்தொகையைக் கொண்டிருந்தன.
- அவர்களும் குறிப்பிட்ட தேவைகளுக்காகவே அடிக்கடி வருகை புரிந்தனர்.
- எடுத்துக்காட்டாக ஸ்ரீநகர் ஒரு முகலாய பொழுதுபோக்கு மையமாகவும் கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகியவை இந்து சமய மையங்களாகவும் விளங்கின.
- குளிந்த காலநிலை பாதுகாப்பானதாக மற்றும் நன்மை அளிப்பதாக இருந்தது.
- இது வெப்பமான வானிலையிலிருந்தும் தொற்று நோயிலிருந்தும் ஐரோப்பியர்களைப் பாதுகாத்தது. ஆகையால் அவர்கள் மாற்றுத் தலைநகரங்களை குளிர்ந்த பகுதிகளில் கல்கத்தாவுக்கு மாற்றாக டார்ஜிலிங்கிலும் டெல்லிக்கு மாற்றாக டேராடூனிலும் ஏற்படுத்தினர்.
- மலைபிரதேசங்கள் படைகள் தங்குமிடமாகவும் எல்லைகளை பாதுகாக்கவும் தாக்குதலை தொடங்கும் இடமாகவும் இருந்தன.
- மலைவாழிடங்கள் வட மற்றும் தென் இந்தியாவில் வளர்ச்சி பெற்றன. எ.கா. சிம்லா, நைனிடால், டார்ஜிலிங், உதகமண்டலம், கொடைக்கானல்.
- கூர்க்கர்களுடன் (1814-16) நடைபெற்ற போரின் போது சிம்லா நிறுவப்பட்டது.
- டார்ஜிலிங் பகுதியானது சிக்கிம் ஆட்சியாளர்களிடமிருந்து 1835இல் கைப்பற்றப்பட்டது.
- இம்மலைப்பிரதேசங்கள் சுகாதார மையமாக வளர்ச்சி பெற்றன (படையினர் ஓய்வெடுப்பதற்கும், நோய்களிலிருந்து மீள்வதற்கான இடங்கள்).
- ரயில்வேயின் அறிமுக மலைவாழிடங்களை எளிதில் சென்றடைய வழிவகுத்தது.
ஈ) இரயில்வே நகரங்கள்
- ஆங்கிலேயர்களால் இரயில்வே 1853இல் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இரயில்வே நகரங்களும் ஒருவகை நகர்ப்புற குடியேற்றங்களாக ஏற்படுத்தப்பட்டன.
- இரயில் போக்குவரத்தின் இயல்பினால் அனைத்து நகரங்களும் சமவெளியில் அமைந்திருந்தன.
நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் தோற்றுவிக்கப்படுதல்
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்ச்யில் உள்ளாட்சி மன்றத்தின் வளர்ச்சியினை மூன்று வெவ்வேறு நிலைகளில் அறியலாம்.
அ) முதல் கட்டம் (1688 – 1882)
- இந்தியாவில் நகராட்சி அரசாங்கம் 1688ல் மதராஸ் மாநகராட்சி ஒரு மேயருடன் ஏற்பட்டதிலிருந்து உருவானது.
- கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர்களில் ஒருவரான சர் ஜோசியா சைல்டு மாநகராட்சி உருவானதற்கு காரணமாக இருந்தார்.
- மூன்று மாகாண நகரங்களில் 1793ஆம் ஆண்டின் பட்டயச் சட்டம் நகராட்சி நிர்வாகத்தை நிறுவியது.
- வடமேற்கு எல்லைப்புற மாகாணங்கள் , அயோத்தி மற்றும் பம்பாயில் நகராட்சிகள் 1850ஆம் ஆண்டு சட்டப்படி அமைக்கப்பட்டன.
- மேயோ பிரபுவின் 1870ஆம் ஆண்டின் புகழ்பெற்ற தீர்மானம் உள்ளாட்சி அரசாங்கத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
ஆ) இரண்டாம் கட்டம் (1882 – 1920)
உள்ளாட்சி அரசாங்கம் தொடர்பான ரிப்பன் பிரபுவின் தீர்மானம் உள்ளாட்சி அரசாங்கத்தின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக விளங்கியது. எனவே ரிப்பன் பிரபு இந்தியாவின் ‘உள்ளாட்சி அமைப்பின் தந்தை’ என்று அழைக்கப்படுவது பொருத்தமானதாகவும் அவரது தீர்மானம் ‘உள்ளாட்சி அரசாங்கத்தின் மாகாசாசனம்’ எனவும் கருதப்படுகிறது.
இ) மூன்றாம் கட்டம் (1920 – 1950)
மாகாணங்களில் இரட்டை ஆட்சியை 1919ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் அறிமுகப்படுத்தியது. மாகாண சுயாட்சியை 1935ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் அறிமுகப்படுத்தியது. 1947இல் சுதந்திரம் அடைந்தவுடன் சுதந்திர இந்தியாவின் தேவைகளைப் பூர்த்திசெய்ய உள்ளாட்சி அரசாங்கத்தை உருவாக்கி வடிவமைப்பதற்கான சிறப்பான வாய்ப்பை இந்தியா பெற்றது.
மாகாண நகரங்களின் நிர்வாகம்
- 18ஆம் நூற்றாண்டின் முடிவில் நாடாளுமன்றத்தின் ஒரு சட்டம் தலைமை ஆளுநருக்கு மாகாண நகரங்களில் அமைதியை ஏற்படுத்த நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை அளித்தது.
- பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு மூன்று மாகாண நகரங்களில் அரசாங்க அமைப்பு உருவாக்கப்பட்டது.
- அது பெரிய மாநகராட்சிகள் போல தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், சுதந்திரமான வலிமை பெற்ற நிர்வாக அமைப்பு, கணக்குகளை சரிபார்க்கப் போதுமான ஏற்பாடுகள், பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்கான சட்டப்பூர்வ பாதுகாப்புகள், சுகாதாரம், நீர் வழங்கல் மற்றும் வருவாய் வடூல் போன்ற முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
மதராஸின் தோற்றம் மற்றும் வளர்ச்சி
- மதராஸ் நகரத்தின் தொடக்கம் இந்தியாவில் பிரிட்டிஷ் வணிக நிறுவனத்திற்கு முன்பிருந்தே உள்ளது.
- ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழு கி.பி. (பொ.ஆ.) 1600 இல் தொடங்கப்பட்டது.
- 12 ஆண்டுகளுக்குப் பின்னர் மேற்கு கடற்கரையில் சூரத்தில் ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட்டது.
- பின்னர் ஆங்கில வணிகர்களின் ஜவுளி வர்த்தகத்தேடல் கிழக்கு கடற்கரையிலும் துறைமுகத்தைப் பெற வழிவகுத்தது.
- ஆங்கிலேயர்கள் சில முயற்சிகளுக்குப் பிறகு மசூலிப்பட்டினத்தில் ஒரு தொழிற்சாலையைக் கட்டும் உரிமையைப் பெற்றனர். இது பருவக்காற்று பாதிப்பிலிருந்து நன்கு பாதுகாக்கப்பட்டது.
- அதனால் பின்னர் மசூலிப்பட்டினம் பஞ்சத்தின் பிடியில் சிக்கியது. பாதுகாப்பின் ஒவ்வொரு உத்தரவாதமிருந்தும் மத்தியிலும், ஆங்கில வர்த்தகம் அவ்விடத்தில் செழிக்கவில்லை.
- பின்னர் ஆங்கில வணிகர்கள் புதிய தளத்தைத் தேடினர்.
- மசூலிப்பட்டின கழக உறுப்பினர் மற்றும் ஆர்மகான் தொழிற்சாலையின் தலைவரான பிரான்சிஸ் டே 1637 ஆம் ஆண்டு ஒரு புதிய குடியேற்றத்திற்கான தளத்தை தேர்ந்தெடுக்கும் நோக்கில் ஒரு ஆய்வு பயணத்தை மேற்கொண்டார்.
- இறுதியில் மதராசப்பட்டினத்தை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. பிரான்சிஸ் டே அந்த இடத்தை ஆய்வு செய்து, அது தொழிற்சாலை அமைப்பிற்கு ஏற்ற இடம் என்பதைக் கண்டறிந்தார்.
- சந்திரகிரி (திருப்பதிக்கு மேற்கே 12 கி.மீ) அரசரின் பிரதிநிதியான தமர்லா வெங்கடபதி அவர்களால் அதிகாரபூர்வமான மானியமாக நிலம் வழங்கப்பட்டது.
- கூவம் நதிக்கும் எழும்பூருக்கும் இடையில் ஒரு சிறுபகுதி நிலத்தை தமர்லா பிரிட்டிஷாருக்கு வழங்கினார்.
- ஒப்பந்த பத்திரம் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் பிரான்சிஸ் டே அவர்களால் 1639ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டபோது அவருடன் மொழிபெயர்ப்பாளரான பெரி திம்மப்பா மற்றும் உயர்அலுவலர் ஆண்ட்ரு கோஜன் (மசூலிப்பட்டினம் தொழிற்சாலையின் தலைவர்) உடனிருந்தனர்.
- பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரு கோகன் ஆகியோருக்கு வணிகதளத்துடன் கூடிய தொழிற்சாலைக்கும் மதராசபட்டினத்தில் ஒரு கோட்டையை அமைப்பதற்கும் 1639ஆம் ஆண்டில் அனுமதி வழங்கப்பட்டது. இக்கோட்டைகுடியிருப்பு பின்னர் புனித ஜார்ஜ் குடியிருப்பு எனப் பெயர் பெற்றது. இது வெள்ளை நகரம் எனவும் குறிப்பிடப்படுகிறது.
- இதன் அருகாமையில் உள்ள கிராமங்களில் மக்கள் வசித்த பகுதி கருப்பு நகரம் எனவும் அழைக்கப்பட்டது.
- மதராஸ் வெள்ளை நகரம் மற்றும் கருப்பு நகரம் எனவும் சேர்த்து அழைக்கப்பட்டது.
மதராசபட்டினம்
- தமர்லா வெங்கடபதி ஆங்கிலேயருக்கு மதராசபட்டினத்தை மானியமாக வழங்கினர். இவர் சந்திரகிரியின் அரசரான வெங்கடபதி ராயலுவின் கட்டுப்பாட்டி இருந்தார்.
- வெங்கடபதியை தொடர்ந்து 1642இல் ஸ்ரீரங்கராயலு பதவிக்கு வந்தார். அவர் ஆங்கிலேயருக்கு 1645இல் ஸ்ரீரங்கப்பட்டினம் எனும் புதிய மானியத்தை வழங்கினார்.
- வெங்கடபதி அவரது தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் ஆங்கிலேயர்களின் புதிய கோட்டை மற்றும் குடியேற்றங்கள் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட வேண்டும் என விரும்பினார். ஆனால் ஆங்கிலேயர் இரண்டு ஐக்கிய நகரங்களையும் மதராசபட்டினம் என்று அழைக்க விரும்பினார்கள்.
சென்னை உருவாதல்
- இரண்டு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி வணிகர்கள் வருகைபுரியும் வரை கிராமங்களின் தொகுப்பாகவும் பனைமரங்கள் மற்றும் நெல் வயல்களுக்கிடையேயும் சென்னை அமைந்திருந்தது.
- சந்திரகிரியின் ராஜா மஹால் அரண்மனையால் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த சர் பிரான்சிஸ் டேவிற்கு 1639இல் தொழிற்சாலை கட்டுவதற்காக நிலம் மானியமாக வழங்கப்பட்டு, அது பின்னர் மதராஸ் என பெயரிடப்பட்டது.
- புனித ஜார்ஜின் தினமான ஏப்ரல் 23, 1640 அன்று இதன் முதல் தொழிற்சாலை கட்டிமுடிக்கப்பட்டு அதற்கு புனித ஜார்ஜ் கோட்டை என்று பெயரிடப்பட்டது.
- புனித ஜார்ஜ் கோட்டையை கட்டப்பட்டதற்கு டே மற்றும் கோகன் ஆகிய இருவரும் கூட்டாக பொறுப்பாவார்கள். இது 1774 வரை கிழக்கிந்திய கம்பெனியின் முதன்மை குடியிருப்பாக இருந்தது.
- மதராஸ் மாகாணம் ஒரு நிர்வாக துணைப்பிரிவாகும். இது மெட்ராஸ் மாகாணம் என்று குறிப்பிடப்படுகிறது.
- சென்னை மாகாணம் என்பது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் தெற்குப் பகுதியில் பெரிய நிலப்பகுதிகளை உள்ளடக்கி தற்போதைய தமிழ்நாடு, லட்சத்தீவு, வடக்கு கேரளா, ராயலசீமா, கடலோர ஆந்திரா, கர்நாடக மாவட்டங்கள் மற்றும் தெற்கு ஒரிசாசின் பல்வேறு மாவட்டங்களை கொண்டிருந்தது.
- 1947ஆம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பிறகு மதராஸ் மாகாணமானது மதராஸ் மாநிலமாக மாறியது மற்றும் முந்தைய மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த பிற பகுதிகளும் 1956ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் ஆந்திரா, கேரளா மற்றும் மைசூர் மாநிலங்களாக என அமைக்கப்பட்டன.
- பின்னர் 1969இல் மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது.
- ஜூலை 17, 1996இல் மதராஸ் அதிகமாரப்பூர்வமாக சென்னை என மறு பெயரிடப்பட்டது
- கோட்டைக்குள் கடல் நுழைவாயில் வழியாக நுழைந்தால் முதலில் காணப்படும் கட்டடம் தமிழக அரசின் இருக்கையாகும். இந்த சுவாரசியமான கட்டடம் 1694 மற்றும் 1732க்கு இடையில் கட்டப்பட்டதோடு இது இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட மிகப் பழமையான கட்டுமானங்களில் ஒன்று என கூறப்படுகிறது.
- கல்கத்தாவில் உள்ள டல்ஹௌசி சதுக்கம் மற்றும் மதராஸில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை ஆகியவை மத்திய வணிகப் பகுதிக்கு அருகில் இருந்தன. மேலும் பிரம்மாண்டமான கட்டடங்களை கொண்டிருந்தன. அவை பிரிட்டிஷ் வகையிலான ரோமானிய பாணிகளில் அமைந்திருந்தன.
பம்பாய்
- பம்பாய் ஏழு தீவுகளைக் கொண்டதாகும். இது 1534லிருந்து போர்த்துகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
- இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ் போர்த்துக்கீசிய மன்னரின் சகோதரியை திருமணம் செய்து கொண்டதற்கு பம்பாய் பகுதியை 1661இல் சீதனமாகப் பெற்றார்.
- மன்னர் அப்பகுதியை கிழக்கிந்திய வணிகக்குழுவிற்கு குத்தகைக்கு அளித்தார்.
- கிழக்கிந்திய கம்பெனி மேற்கிந்தியாவில் அதன் முக்கிய துறைமுகமாக பம்பாயை பயன்படுத்தத் தொடங்கியபோது பம்பாய் நகரம் வளரத்தொடங்கியது.
- ஆங்கில கிழக்கிந்திய நிறுவனம் 1687ஆம் ஆண்டு அதன் தலைமையகத்தை சூரத்திலிருந்து பம்பாய்க்கு மாற்றியது.
கல்கத்தா
- ஆங்கில வணிகர்கள் சுதநூதியில் 1690ஆம் ஆண்டு இரு குடியேற்றத்தை நிறுவினர்.
- அவர்கள் சுதநூதி, கல்கத்தா மற்றும் கோவிந்தபூர் மீது ஜாமீன்தாரி உரிமைகளைப் 1698ஆம் ஆண்டில் பெற்றனர்.
- ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனம் கல்கத்தாவில் வில்லியம் கோட்டையை நிறுவியது.
- கல்கத்தா மாகாணமாக மாறியதோடு அதன் அலுவல்களை நிர்வகிக்க ஆளுநர் மற்றும் குழு இருந்தது.
முடிவுரை
பிரிட்டிஷ் பேரரசு படிப்படியாக நிலைநிறுத்தப்பட்டு நிர்வாகத்தில் இடம்சார்ந்த கட்டமைப்பை ஒருங்கிணைத்து சாம்ராஜ்யத்தின் தலைநகரம், மாநில தலைநகரம் மற்றும் மாவட்ட தலைநகரங்களை உருவாக்கியது. புதிய ஆட்சியாளர்கள், புதிய அலுவலர்களையும், புதிய நிறுவனங்கள் மற்றும் புதிய கட்டமைப்பை கொண்ட நகரங்கள் இராணுவ குடியிருப்பு, காவல்நிலையம், சிறை, கருவூலம், பொதுத் தோட்டம், அஞ்சல் அலுவலகம், பள்ளிகள், சிகிச்சை மையங்கள் கொண்டு வந்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக நகராட்சிக்குழு ஒன்றையும் கொண்டிருந்தது.
இவ்வாறு காலப்போக்கில் நிர்வாக தலைமையகம் நாட்டின் மிக முக்கியமான நகரங்கள் மற்றும் மாநகரங்களாகவும் உருவெடுத்தன. உதாரணமாக இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கல்கத்தா, பம்பாய் மற்றும் மதராஸ் இந்தியாவின் முதன்மை நிர்வாக, வணிக மற்றும் தொழில்துறை நகரங்களாக மாறியிருந்தன. இந்நகரங்கள் ஐரோப்பிய பாணியிலான கட்டடங்களுடன் வணிக மையமாக மாறின. துணை நகர்ப்புற இரயில்வே டிராம் வண்டி மற்றும் நகரப்பேருந்துகள் குடியேற்ற நகரங்களுக்கு புதிய தோற்றத்தையும் மதிப்பையும் அளித்தன.