Tnpsc

கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் Notes 8th Social Science Lesson 3 Notes in Tamil

கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் Notes 8th Social Science Lesson 3 Notes in Tamil

8th Social Science Lesson 3 Notes in Tamil

3. கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

அறிமுகம்

  • காலனி ஆதிக்கத்திற்கு முன் இந்தியப் பொருளாதாரமானது, வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமாக இருந்தது. இக்காலத்தில் வேளாண்மை மக்களின் முதல்நிலைத் தொழிலாக இருந்தது.
  • நெசவுத்தொழில், சர்க்கரை தொழில், எண்ணெய் தொழில் இன்னும் பிற தொழில்கள் வேளாண்மையைச் சார்ந்தே நடைபெற்றன.
  • ஆங்கில அரசானது இந்தியாவின் பழமையான வேளண்மை முறையையும் மற்றும் நிலவருவாய் கொள்கையையும் ஏற்றுக்கொள்ளவில்லை. நிலையான நில வருவாய் திட்டம், மகல்வாரி திட்டம், இரயத்துவாரித் திட்டம் என்னும் மூன்று பெரிய நிலவருவாய் மற்றும் நில உரிமை திட்டத்தை ஆங்கில அரசு இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.
  • இத்திட்டங்களின் மூலம் விவசாயிகளுக்கெதிரான பொருளாதார சுரண்டல் முறை பிற்காலத்தில் அவர்களை ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சியில் ஈடுபட வைத்தது.

8th Social Science Lesson 3 Notes in Tamil

கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் Online Test

8th Social Science Lesson 3 Questions in Tamil

ஆங்கிலேயர்களின் ஆட்சியின்கீழ் நிலவருவாய் கொள்கை

  • 1765ல் இராபர்ட் கிளைவ் வங்காளம், பீகார் மற்றும் ஒரிசா ஆகிய பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமையை பெற்ற பின்பு அங்கு அவர் ஓராண்டு நில வருவாய் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.
  • அதன் பிறகு வாரன் ஹேஸ்டிங்ஸ் தலைமை ஆளுநராக பதவியேற்ற பின்பு ஓராண்டு நிலவருவாய் திட்டத்தை ஐந்தாண்டு நில வருவாய் திட்டமாக மாற்றி பின்பு ஓராண்டுத் திட்டமாக மாற்றினார்.
  • ஆனால் காரன்வாலிஸ் பிரபு தலைமை ஆளுநரான பிறகு இத்திட்டத்தை பத்தாண்டு நில வருவாய் திட்டமாக 1793ல் மாற்றினார். இத்திட்டம் நிலையான நிலவருவாய் திட்டம் என்றழைக்கப்படுகிறது.

  • இத்திட்டம் வங்காளம், பீகார், ஒரிசா, உத்திர பிரதேசத்தில் வாரணாசி பகுதி மற்றும் வடக்கு கர்நாடகம் ஆகிய பகுதிகளில் கொண்டுவரப்பட்டது.
  • ஆங்கில இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 19% நிலப்பரப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த இத்திட்டம் ஜமீன்தாரி, ஜாகீர்தாரி, மல்குஜாரி மற்றும் பிஸ்வேதாரி என்னும் பல பெயர்களால் அழைக்கப்பட்டது.

நிலையான நிலவரி திட்டத்தின் சிறப்பு கூறுகள்

  • ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு முறையாக வரி செலுத்தும் வரை ஜமீன்தார்கள் நில உடைமையாளர்களாக அங்கீகரிக்கப்பட்டனர்.
  • விவசாயிகளிடமிருந்து வரியை வசூல் செய்யும் அரசின் முகவர்களாக ஜமீன்தார்கள் செயல்பாட்டனர்.
  • ஜமீன்தார்கள் வணிகக்குழுவிற்கு செலுத்தி வந்த வரி நிலையாக நிர்ணயிக்கப்பட்டு, எந்த சூழ்நிலையிலும் உயர்த்தப்படமாட்டாது என உறுதியளிக்கப்பட்டது.
  • விவசாயிகளிடமிருந்து வசூலித்த 10/11 பங்கு வரியினை ஜமீன்தார்கள் ஆங்கில அரசுக்கு செலுத்தினர்.
  • ஜமீன்தார்கள், விவசாயிக்கு பட்டா (எழுதப்பட்ட ஒப்பந்தம்) வழங்கினர். இதன் மூலம் விவசாயிகள் அந்நிலத்தை உழும் காலம் வரை குத்தகைதாரர்களக கருதப்பட்டனர்.
  • அனைத்து நீதித்துறை அதிகாரங்களும் ஜமீன்தார்களிடமிருந்து திரும்ப பெறப்பட்டது.

நிறைகள்

  • தரிசு நிலங்கள் மற்றும் காடுகல் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டன.
  • ஜமீன்தார்கள் நிலத்தின் உரிமையாளராயினர்.
  • நீதி வழங்கும் பொறுப்பிலிருந்து ஜமீன்தார்கள் விடுவிக்கப்பட்டனர்.
  • ஜமீன்தார்கள் ஆங்கில அரசுக்கு நம்பிக்கைக்குரியவர்களாக மாறினர்.
  • ஆங்கில அரசுக்கு நிலையான வருவாய் கிடைப்பதை உறுதி செய்தது.

குறைகள்

  • ஆங்கிலேய அரசு விவசாயிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவில்லை.
  • விவசாயிகளின் உரிமைகள் மறுக்கப்பட்டதோடு, ஜமீன்தார்களின் பொறுப்பில் விடப்பட்டனர்.
  • விவசாயிகள் பெரும்பாலும் அடிமைகளாகவே நடத்தப்பட்டனர்.
  • இந்த திட்டத்தினால் ஜமீன்தார்கள் சோம்பேறிகளாகவும், ஆடம்பரப் பிரியர்களாகவும் மாறினர்.
  • வங்காளத்தின் பல கிராமப்புறங்களில் ஜமீன்தார்களுக்கும், விவசாயிகளுக்குமிடையே பல மோதல்கள் ஏற்பட்டன.

இரயத்துவாரி முறை

  • இரயத்துவாரி முறை 1820ல் தாமஸ்மன்றோ மற்றும் கேப்டன் ரீட் என்பவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இம்முறை மதராஸ், பம்பாய், அசாம் பகுதிகள் மற்றும் கூர்க் ஆகிய இந்திய மாகாணங்களில் கொண்டுவரப்பட்டது.
  • இம்முறையின் மூலம் நிலத்தின் உரிமையானது விவசாயிகளின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் நிலத்தின் உரிமையாளராயினர்.
  • ஆங்கிலேய அரசு நேரடியாகவே விவசாயிகளிடமிருந்து வரிவசூலைப் பெற்றது. தொடக்கத்தில் நிலவருவாயானது விளைச்சலில் பாதி என நிர்ணயிக்கப்பட்டது.
  • பின்னர் இது தாமஸ் மன்றோ அவர்களால் விளைச்சலில் மூன்றில் ஒரு பங்காக குறைக்கப்பட்டது. இம்முறையில் நில வருவாயானது மண் மற்றுன் பயிரின் தன்மையின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது.
  • பொதுவாக 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிலத்தின் மீதான குத்தகை மாற்றியமைக்கப்பட்டது.
  • இத்திட்டத்தில் விவசாயிகளின் நிலைமை மிகவும் பாதுகாப்பானதாக இருந்தது. உண்மையில், அரசு விவசாயிகளிடமிருந்து நிலவருவாயை வரியாக அல்லாமல் குத்தகையாகவே பெற்றுக் கொண்டது.

இரயத்துவாரி முறையின் சிறப்பு கூறுகள்

  • வருவாய் ஒப்பந்தம் நேரடியாக விவசாயிகளுடன் செய்துகொள்ளப்பட்டது.
  • நில அளவு மற்றும் விளைச்சலின் மதிப்பீடு கணக்கிடப்பட்டது.
  • அரசு, விளைச்சலில் 45லிருந்து 50 சதவீதம் வரை வரியாக நிர்ணயம் செய்தது.

இரயத்துவாரி முறையால் ஏற்பட்ட விளைவுகள்

  • பெரும்பாலான பகுதிகளில் நிலவருவாய் மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டது. சிறப்பான பருவக் காலங்களில் கூட விவசாயிகள் நிலவரி செலுத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.
  • அரசு, ஜமீன்தார்களுக்குப் பதிலாக விவசாயிகளை சுரண்டியது.

மகல்வாரி முறை

  • மகல்வாரி முறை, என்பது ஹோல்ட் மெகன்சி என்பவரது சிந்தனையில் உதித்த, ஜமீன்தாரி முறையின் மாற்றியமைக்கப்பட்ட வடிவமே ஆகும்.
  • கங்கைச் சமவெளி , வடமேற்கு மாகானங்கள், மத்திய இந்தியாவின் சிலபகுதிகள் மற்றும் பஞ்சாப் போன்ற பகுதிகளில் 1822ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இராபர்ட் மெர்தின்ஸ் பர்ட் என்பவரின் வழிகாட்டுதலின்படி 1833ல் வில்லிய பெண்டிங் பிரபு, இம்முறையில் சில அடிப்படை மாற்றங்களை கொண்டு வந்தார்.
  • மகல் அல்லது கிராம விளைச்சலின் அடிப்படையில் இம்முறையில் வருவாய் மதிப்பீடு செய்யப்பட்டது. மகல் பகுதியின் அனைத்து உரிமையாளர்களும் நிலவருவாய் செலுத்துவதற்கு கூட்டு பொறுப்புடையவர்களாவர்.
  • தொடக்கத்தில், மொத்த விளைச்சலில் மூன்றில் இரண்டு பங்கு நிலவருவாய் அரசின் பங்காக நிர்ணயிக்கப்பட்டது.
  • பின்னர் வில்லியம் பெண்டிங் பிரபு மொத்த விளைச்சலில் நிலவருவாய் 50 சதவீதம் எனக் குறைத்தார்.
  • இம்முறையில் நிலவருவாயை கிராமம் முழுவதும் வசூல் செய்து அரசுக்கு செலுத்த ஒரு கிராமத் தலைவர் (Lambardar) நியமிக்கப்பட்டிருந்தார்.
  • இந்தமுறை முதலில் ஆக்ரா, அயோத்தி போன்ற இடங்களில் அமுல்படுத்தப்பட்டது.
  • பின்னர், ஐக்கிய மாகாணங்களின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்திலும் அதிகமான வரிச்சுமைகள் அனைத்தும் விவசாயிகள் மீதே விழுந்தது.

மகல்வாரி முறையின் சிறப்பு கூறுகள்

  • கிராமத் தலைவர் அரசுக்கும், கிராம மக்களுக்குமிடையே இடைத் தரகராக செயல்பட்டார்.
  • இத்திட்டம் கிராமவாரியான மதிப்பீடாக இருந்தது. ஒரே நபர் பல கிராமங்களை தன் வசம் வைத்திருந்தார்.
  • கிராம நிலங்களுக்கு, கிராமத்தை சேர்ந்த சமுதாயத்தினரே உரிமையளாராக இருந்தனர்.

மகல்வாரி முறையால் ஏற்பட்ட விளைவுகள்

  • கிராமத் தலைவர், சலுகைகளை தமது சொந்த விருப்பங்களின் அடிப்படையில் தவறாகப் பயன்படுத்தினார்.
  • இம்முறையானது விவசாயிகளுக்கு இலாபகரமானதாக இல்லை.
  • இம்முறையானது ஜமீன்தாரி முறையின் திருத்தியமைக்கப்பட்ட வடிவமாக இருந்தது. மேலும் இது கிராமத்தின் உயர் வகுப்பினருக்கு இலாபகரமானதாக அமைந்தது.

விவசாயிகளின் மீது ஆங்கில நிலவருவாய் முறையின் தாக்கங்கள்

  • அனைத்து நிலவரி முறைகளும் பொதுவாக, நிலத்திலிருந்து அதிகபட்ச வருமானம் பெறுவதாகவே இருந்தது. இதனால் நில விற்பனை அதிகரிப்பு மற்றும் விவசாயத் தொழில் அழிவிற்கு வழிவகுத்தது.
  • விவசாயிகள் அதிக வரிவிதிப்பினால் பாதிக்கப்பட்டனர். அதிக வரிச்சுமை மற்றும் பஞ்சத்தினால் மக்கள் வறுமையாலும், கடன்சுமையாலும் அவதிப்பட்டனர். இதனால் விவசாயிகள் நிலத்தை விலைக்கு வாங்குவோர் மற்றும் வட்டிக்குப் பணம் தருபவர்களை தேடிச் சென்றனர். அவர்கள் விவசாயிகளிடமிருந்தே நிலத்தை விலைக்கு வாங்கி பெரும் செல்வந்தர்களாயினர்.
  • ஜமின்தார்கள், வட்டிக்காரர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர்களால் ஏழை விவசாயிகள் சுரண்டப்பட்டனர்.
  • இந்திய கிராமங்களுக்கான நிலைப்புத் தன்மையும் தொடர்ச்சியான நிலையும் அசைக்கப்பட்டன.
  • ஆங்கிலேய இறக்குமதி பொருட்களால் இந்தியக் குடிசைத் தொழில்கள் மறைந்தன. விவசாயிகள் வருமானத்திற்கு வேறு வழியின்றி தவித்தனர்.
  • பழமையான பழக்க வழக்கங்கள் மாற்றப்பட்டு புதிய சட்ட அமைப்பு, நீதிமன்ற நடைமுறைகள் வழக்கத்திற்கு வந்தன.
  • நிலத்தின் உண்மையான உரிமையாளர்களாகவும், உற்பத்தியின் பெரும் பங்குதாரர்களாகவும் இருந்த விவசாயிகளுடைய உழைப்பின் பலனானது, ஆங்கிலேயரின் கொள்கையால், ஒரு குறிப்பிட்ட சலுகையை பெற்ற சமுதாயத்திற்கு மட்டுமே நன்மையளிப்பதாக இருந்தது.

விவசாயிகளின் புரட்சிகள்

  • இந்தியாவில் ஆங்கில ஆட்சியானது வேளாண்மை முறையில் பல மாற்றங்களை கொண்டு வந்தது.
  • புதிய வேளாண்மை யுக்திகளால் பழைய வேளாண்மை முறை மறைந்து போனது. ஜமீன்தார்கள் நில உரிமையாளர்களாக மாறினர்.
  • எந்தளவிற்கு முடியுமோ அந்தளவிற்கு, விவசாயிகளின் உழைப்பு ஜமீன்தார்களால் சுரண்டப்பட்டது.
  • மேலும் விவசாயிகளின் வாழ்க்கை முறை மிகவும் துயரமானதாக இருந்தது. தாங்கள் எல்லையில்லா அளவில் சுரண்டப்படுவதை உணர்ந்த விவசாயிகள், இந்த சுரண்டலில் இந்து பாதுகாத்துக் கொள்ள 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில், ஆங்கிலேயர்களுக்கும் ஜமீன்தார்களுக்கும் எதிராக பல புரட்சி இயக்கங்களிலும், கலகங்களிலும் ஈடுபட்டனர்.

சந்தால் கலகம் (1855-56)

  • 1855-56ல் விவசாயிகளின் எழுச்சியாகக் கருதப்பட்ட முதலாவது கலகம் சந்தால் கலகமாகும்.
  • பீகாரில் உள்ள ராஜ்மகால் குன்றுகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் சந்தால் மக்கள் வேளாண்மை செய்து வந்தனர்.
  • சந்தால்களின் அறியாமையை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட, நகர்ப்புற நிலக்கிழார்கள் மற்றும் வட்டிக்குப் பணம் தருவோர் சந்தால்களின் நிலங்களை அபகரித்துக் கொள்ள ஆரம்பித்தனர்.
  • இது அவர்களிடையே கசப்பான உணர்வை ஏற்படுத்தி 1856ல் ஆயுதம் ஏந்திய புரட்சிக்கு இட்டுச் சென்றது.
  • இதனைத் தொடர்ந்து, சந்தால்கள் தங்களை அன்னிய நாட்டு ஆக்கிரமிப்பு சக்திகளிலிருந்து விடுவித்து கொள்வது மட்டுமில்லாமல் தங்களுக்கென்று ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்திக்கொள்ள , சிந்து மற்றும் கங்கு என்ற இரண்டு சந்தால் சகோதரர்களின் தலைமையின்கீழ் 10,000 வீரர்கள் ஒன்று கூடினர்.
  • இக்கூட்டத்தினரின் புரட்சி ஒரு மாதத்திற்குள் வலிமையான சக்தியினை பெற்றது.
  • ஐரோப்பிய பண்ணையாளர்கள், ஆங்கிலேட அலுவலர்கள், இரயில்வே பொறியாளர்கள், ஜமீன்தார்கள் மற்றும் வட்டிக்குப் பணம் கொடுப்போர் ஆகிய அனைவரும் புரட்சியாளர்களால் தாக்கப்பட்டனர்.
  • புரட்சியானது பிப்ரவரி 1856 வரை தொடர்ந்தது. புரட்சியின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, கலகமானது கடுமையாக அடக்கப்பட்டது.
  • இதனைத் தொடர்ந்து சந்தால்கள் வசித்த பகுதிகளை சந்தால் பர்கானா என அரழு அறிவித்தது.
  • அதன்படி சந்தால்களின் நிலங்களும், அடையாளமும் அன்னிய ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதுகாக்கப்பட்டன.

இண்டிகோ கலகம் (அவுரி புரட்சி 1859 -60)

  • வங்காள அவுரி சாகுபடியாளர்களின் வேலை நிறுத்தம் அதிகளவில் பரவி தீவிர விவசாய புரட்சியாக மாறியது.
  • ஐரோப்பிய இண்டிகோ தோட்டக்காரர்கள், விவசாயிகளுக்கு மிகவும் தீமை தரும் வகையில் இண்டிகோவை வளர்ப்பதற்கு குத்தகை விவசாயிகளை கட்டாயப்படுத்தினர்.
  • மேலும் குத்தகை விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் அவுரியை தங்களுக்கு குறைந்த விலைக்கு விற்கும்படியும், குத்தகை முன்பணத்தை பின்னாளில் அவர்களுக்கு பயன்படும் வகையில் முன்கூட்டியே பெற்று கொள்ளும்படியும் வற்புறுத்தப்பட்டனர்.
  • மேலும் ஆள் கடத்தல் , கொள்ளையடித்தல், கசையடி கொடுத்தல், எரித்தல் போன்ற சம்பவங்களும் நடந்தன.
  • செப்டம்பர் 1859ல் திகம்பர் விஸ்வாஸ் மற்றும் பிஸ்னு சரண் பிஸ்வாஸ் ஆகியோரால் நாதியா மாவட்டத்தில் நடைபெற்ற கலகங்கள் ஐரோப்பிய பண்ணையாளர்களின் கடுமையான அடக்குமுறைகளால் கைவிடப்பட்டன.
  • அதன் பின்னர் ஐரோப்பிய தொற்ச்சாலைகள் எரிக்கப்பட்டு, கலகமானது வேறு இடங்களுக்குப் பரவியது.
  • நிலைமையை கட்டுக்கும் கொண்டு வர அரசு 1860ல் ஒரு அவுரி ஆணையத்தை அமைத்தது.
  • அந்த ஆணையத்தின் பரிந்துரையின்படி 1862 சட்டம் பாகம் ஆறினை (VI) (Part of the Act of 1862) உருவாக்கியது.
  • ஐரோப்பிய பண்ணையாளர்களின் அடக்கு முறைக்கு பயந்து வங்காளத்தின் அவுரி விவசாயிகள் பீகார் மற்றும் உத்திரப் பிரதேசத்தில் குடியேறினர்.
  • இந்து தேசபக்தன் என்ற செய்தித்தாள் சாகுபடியாளர்களின் துயரங்களை பலமுறை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.
  • அதேபோல, தீனபந்து மித்ரா என்பவர், வங்காள அவுரி சாகுபடியாளர்களின் துயரங்களை மக்கள் மற்றும் அரசின் கவனத்திற்குக் கொண்டுவர நீல் தர்பன் (Nil Darpan)என்ற ஒரு நாடகத்தை எழுதினார்.

பாப்னா கலகம் (1873 -76)

  • பாப்னா விவசாய எழுச்சி என்பது விவசாயிகளால் நடத்தப்பட்ட்ட, ஜமீன்தார்களின் அடக்கு முறைக்கு எதிரான இயக்கமாகும்.
  • இக்கலகம் வங்காளத்தின் பாப்னாவில் உள்ள யூசுப்சாகி பர்கானாவில் கேசப் சந்திரா ராய் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.
  • ஜமீன்தார்கள், விவசாயிகளிடமிருந்து, சட்டத்திற்கு புறம்பான முறையில், வற்புறுத்தி வரி வசூலித்தல், அதிகப்படியான வாரம் (வரி) வசூலித்தல், மற்ற பிற வரிகளையும் வழக்கமாக வசூல் செய்தனர்.
  • விவசாயிகள் வாடகை செலுத்தவில்லை என்ற போலி காரணங்களை கூறி அடிக்கடி நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
  • நாளடைவில் ஜமீன்தார்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெருங்கூட்டமாகக் கூடி கிராமங்கள் தோறும் சென்று ஜமீன்தார்களின் அச்சுறுத்தல்களை எடுத்துக்கூறி மற்ற விவசாயிகளும் தங்களுடன் இணையும்படி செய்தனர்.
  • போராட்ட செலவினங்களை கட்டுப்படுத்த விவசாயிகளிடமிருந்து நிதி திரட்டப்பட்டது.
  • போராட்டம் படிப்படியாக பாப்னா முழுவதும் பரவி, பின்னர் கிழக்கு வங்காளத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் பரவியது.
  • அப்பகுதி எங்கும் விவசாய சங்கங்கள் அமைக்கப்பட்டன. போராட்டத்தின் முதன்மை நோக்கம் சட்டத்தை எதிர்ப்பதாக இருந்தது.
  • ஜமீன்தார்கள் விவசாயிகளை கட்டாயப்படுத்திய போது மட்டும் மிகச் சிறிய அளவில் வன்முறை நடைபெற்றது.
  • போராட்டத்தில், ஜமீன்தார்களின் வீடுகளை, கொள்ளையடித்ததாக சில நிகழ்வுகளே இருந்தன. நீதிமன்ற ஆணைகளை காவல் நிலையங்கள் செயற்படுத்த முயன்றபோது அதனை எதிர்த்து விவசாயிகள், ஒரு சில தாக்குதல்களை காவல் நிலையங்கள் மீதும் கொடுத்தனர்.
  • ஜமீன்தார்களும் ஜமீன்தார்களின் முகவர்களும் மிகவும் அரிதாகவே கொல்லப்பட்டனர் அல்லது காயப்படுத்தப்பட்டனர்.
  • போராட்டத்தின் வாயிலாக விவசாயிகள் சட்ட விழிப்புணர்வு மற்றும் அவர்களது சட்ட உரிமைகளை மேம்படுத்தினர். மக்களை ஒருங்கிணைத்து சங்கங்களை உருவாக்கி அமைதியான முறையில் எதிர்க்கும் ஆற்றலையும் , வலிமையையும், விழிப்புணர்வையும் வளர்த்துக் கொண்டனர்.

தக்காண கலகம் (1875)

  • 1875ஆம் ஆண்டு பூனா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் ஒரு கலகத்தில் ஈடுபட்டனர். அது தக்கான கலகம் என்றழைக்கப்பட்டது.
  • அப்பகுதி விவசாயிகள், ஆரம்பத்தில் தொடர்ந்து தங்கள் நிலங்களை அபகரித்துக் கொண்டிருந்த உள்ளூர் வட்டிக்காரர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் புரட்சி செய்தனர்.
  • பூனா மாவட்டத்தின் ஒரு கிராமத்தில், ஒரு வட்டிக்காரரின் சொத்துக்களை கைப்பற்றி, அவரை கிராமத்திலிருந்து வெளியேற்றிய பொழுது புரட்சி தொடங்கியது.
  • மேலும் இப்புரட்சி படிப்படையாக 33 கிராமங்களுக்குப் பரவியது. விவசாயிகள் மார்வாரி சகுகாரர்களின் சொத்துகளை கொள்ளையடித்தனர்.
  • சகுகாரர்கள், காவலர்களின் உதவியை நாடியபோது போராட்டம் வன்முறையாக மாறியது. இராணுவம் வரவழைக்கப்பட்டு அப்புரட்சி கட்டுப்படுத்தப்பட்டது. இப்புரட்சியின் விளைவாக “தக்காண விவசாயிகள் மீட்புச் சட்டம்” நிறைவேற்றப்பட்டு அதன் மூலம் விவசாயிகளின் குறைகள் களையப்பட்டது.

பஞ்சாப் விவசாயிகள் இயக்கம் (1890-1900)

  • நகர்ப்புற வட்டிக்காரர்களிடம் கடனைப் பெற்று, கடனை திருப்பி செலுத்தத் தவறிய விவசாயிகள், தங்கள் நிலத்தின் மீது வட்டிக்கடைக்காரர்கள் மேற்கொண்ட ஒடுக்கு முறைகளை விரைந்து தடுக்கும் பொருட்டு பஞ்சாப் விவசாயிகள் புரட்சியில் ஈடுபட்டனர்.
  • ஆங்கிலேய அரசு இப்பகுதியில் எந்த ஒரு புரட்சி நடைபெறுவதையும் விரும்பவில்லை. ஏனெனில் அப்பகுதியில் இருந்துதான் ஆங்கிலேய இராணுவத்திற்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
  • பஞ்சாப் விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக 1900ல் “பஞ்சாப் நில உரிமை மாற்றுச் சட்டம்” நிறைவேற்றப்பட்டு சோதனை முறையில் செயற்படுத்தப்பட்டது.
  • பஞ்சாபில் இச்சட்டம் சிறப்பாக செயல்பட்டதால் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இச்சட்டத்தின்படு, பஞ்சாப் மக்கள் விவசாயிகள், சட்ட அங்கீகாரம் பெற்ற விவசாயிகள், வட்டிக்கடைக்காரர்கள் உட்பட இதர மக்கள் என்ற மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர்.
  • முதல் பிரிவு மக்களிடமிருந்து மற்ற இரண்டு பிரிவு மக்களுக்கும் நிலத்தை விற்பது மற்றும் அடமானம் வைப்பது மீதான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

சம்பரான் சத்தியாகிரகம் (1917 – 18)

  • பீகார் மாநிலத்தில் உள்ள சாம்பரான் என்ற இடத்தில் ஐரோப்பிய பண்ணையாளர்கள் சட்டத்திற்குப் புறம்பான மற்றும் மனிதத் தன்மையற்ற முறைகளில், மிகவும் நியாயமற்ற விலைக்கு அவுரி சாகுபடியை செய்தனர்.
  • சாம்பரான் இந்திய விவசாயிகள் (அவுரி சாகுபடியாளர்கள்), தங்களது மொத்த நிலத்தில் 20ல் 3 பங்கில் மட்டும் அவுரியை சாகுபடி செய்து, அதனையும் ஐரோப்பிய தோட்டக்காரர்களுக்கு அவர்கள் நிர்ணயித்த விலைக்கே விற்க சம்பரான் தீன்கதியா என்ற நடைமுறையின் கீழ் பிணைக்கப்பட்டிருந்தார்கள்.
  • மேலும் அவர்கள் ஐரோப்பிய பண்னையாளர்களால் சட்டவிரோத பணம் பறிப்பு, மற்றும் அடக்கு முறை போன்ற நிகழ்வுகளுக்கு ஆளாகினர்.
  • இந்த விவசாயிகளின் பிரச்சினையை அறிந்து கொண்ட மகாத்மா காந்தி அவர்களுக்கு உதவ முன்வந்தார். அரசு ஒரு விசாரணைக் குழுவை அமைத்து, மகாத்மா காந்தியை அக்குழுவின் ஓர் உறுப்பினராக சேர்த்துக் கொண்டது.
  • விவசாயிகளின் குறைகள் விசாரிக்கப்பட்டு இறுதியில் , மே 1918ல் “சம்பரான் விவசாயச் சட்டம்” நிறைவேற்றப்பட்டது.

கேடா (கைரா) சத்தியாகிரகம் (1918)

  • 1918ல் குஜராத்தின் கேடா மாவட்டத்தில், இடையராத பஞ்சத்தின் காரணமாக விவசாயம் பொய்த்தது. ஆனால் நிலவரி முழுவதையும் செலுத்த விவசாயிகளை அரசு அறிவுறுத்தியது.
  • இதன் விளைவாக கேடா மாவட்டத்தில் உள்ளூர் விவசாயிகள் வரிகொடா இயக்கத்தை தொடங்கினர். அவ்வியக்கத்திற்கு காந்தியடிகள் தலைமை ஏற்றார்.
  • பஞ்சத்தின் நிலைகளை அரசுக்கு எடுத்துக்கூறி முழு பலத்துடன் சத்தியாகிரக முறையில் போராடும்படி காந்திஜி விவசாயிகளை ஆயத்தப்படுகின்றனர்.
  • மேலும், விவசாயிகள் அச்சமின்றி எல்லா எதிர்ப்புகளையும் சந்திக்க ஊக்கமளித்தார். அவரது அழைப்புக்கு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விவசாயிகளின் ஆதரவு இருந்தது. மற்றும் அரசாங்கம் விவசாயிகளுடன் ஒரு தீர்வுக்கு வரவேண்டியிருந்தது.
  • இக்காலக் கட்டத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு முக்கியமான தலைவராக உருவானார்.

மாப்ளா கிளர்ச்சி (1921)

  • மாப்ளா என்று அழைக்கப்பட்ட முஸ்லீம் விவசாயிகள் (கேரளா), இந்து ஜமீன்தார்கள் (ஜென்மிஸ்) மற்றும் ஆங்கில அரசால் அடக்கப்பட்டு சுரண்டப்பட்டனர். இதுவே இப்புரட்சிக்கு முதன்மை காரணமாக இருந்தது.
  • ஏப்ரல் 1920ல் நடைபெற்ற மலபார் மாவட்ட மாநாட்டின் மூலம் மாப்ளா விவசாயிகள் உத்வேகம் அடைந்தனர். அம்மாநாடு குத்தகைகாரர்களுக்கு ஆதரவளித்து, நிலக்கிழார்-குத்தகைதாரர் இடையில் உள்ள உறவினை ஒழுங்குப்படுத்த சட்டம் இயற்ற கோரியது.
  • ஆகஸ்ட் 1921ல் மாப்ளா விவசாயிகள், ஜமீன்தார்களின் அடக்குமுறைக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
  • கிளர்ச்சியின் ஆரம்பத்தில் மாப்ளா விவசாயிகள் காவல் நிலையங்கள், பொது அலுவலகங்கள் , செய்தி தொடர்பு சாதனங்கள், அடக்கு முறையில் ஈடுபட்ட நிலக்கிழாரின் வீடுகள், வட்டிக்கடைக்காரர்கள் உட்பட அனைவரையும் தாக்கினார்.
  • ஆனால் 1921 டிசம்பர் வாக்கில் அரசு இரக்கமின்றி மாப்ளா கிளர்ச்சியை அடக்கியது. அரசின் அதிகாரப்பூர்வ மதிப்பீட்டின்படி, அரசு தலையீட்டின் விளைவாக 2337 மாப்ளா கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.
  • 1650 பேர் காயமடைந்தனர் மற்றும் 45,000க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டனர்.

பர்தோலி சத்தியாகிரகம் (1929-30)

  • 1928ல் 30% அளவிற்கு அரசு நிலவருவாயை உயர்த்தியது அதனால் பர்தோலி (குஜராத்) விவசாயிகள் சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையில் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
  • மேலும் விவசாயிகள், உயர்த்தப்பட்ட நிலவரியை செலுத்த மறுப்பு தெரிவித்து பிப்ரவரி 12, 1928ல் வரிகொடா இயக்கத்தைத் தொடங்கினர். இதில் பல பெண்களும் கலந்து கொண்டனர்.
  • 1930ல் பர்தோலியில் வரி செலுத்த மறுப்பு தெரிவித்த விவசாயிகள் தங்கள் நிலங்களை குறைந்த ஏலத்தில் விற்று இழப்பதற்கு தயாராக இருந்தாலும், நிலத்தை அரசுக்குத் தர மறுத்துவிட்டனர்.
  • ஆனாலும் அரசு அவர்கள் நிலத்தை கையகப்படுத்தி செய்து ஏலத்தில் விற்றது. இருப்பினும், 1937ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபொழுது விவசாயிகளின் நிலம் அனைத்தும் அவர்களுக்கே திருப்பி தரப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!