Samacheer NotesTnpsc

மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி : ஓர் அறிமுகம் Notes 10th Social Science Lesson 10 Notes in Tamil

10th Social Science Lesson 10 Notes in Tamil

10. மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி : ஓர் அறிமுகம்

GDP – மொத்த உள்நாட்டு உற்பத்தி

GDPயின் வரையறை / இலக்கணம்

இந்தியா எவ்வாறு செயல்படுகிறது என்பதனை GDP விளக்குகிறது. அதனால் GDP என்றால் என்ன என்பதைப் பற்றி முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு ஹோட்டலில் என்ன நடக்கிறது என்பதை கற்பனை செய்க. இரண்டு இட்லி மற்றும் ஒரு கோப்பை தேனீருக்கு நீங்கள் உத்திரவு இடுகிறீர்கள். இட்லி மற்றும் தேனீரை யாரோ ஒருவர் செய்யலாம் மற்றும் யாராவது கூட அதை உங்களுக்கு சேவையாக செய்யலாம்.

ஹோட்டலில் இரண்டு வகையான பண்டங்கள் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கலாம் என்று ஒரு பொருளியல் வல்லுநர் கூறலாம். வெளிப்படையாக இட்லி மற்றும் தேனீர் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது. அவைகளிஅ நீங்கள் தொடக்கூடியவை, பார்க்கக்கூடியவை மற்றும் தொட்டு உணரக்கூடியவைகளாகும். தொடக்கூடிய பொருள்களை “பண்டங்கள்” என்று பொருளியல் அறிஞர்கள் அழைக்கின்றனர். இந்த பண்டங்கள் இலவசம் அல்ல, ஏனெனில் அதற்கு பணம் செலுத்த வேண்டும்.

தொடக்கூடிய பொருட்களை , பண்டங்கள் என்று அழைத்தாலும், ஏதேனும் உற்பத்தி செய்யப்பட்டு இருந்தாலும் நீங்கள் அதை உணர முடியாது. சமையல்காரர்கள் செய்து முடித்த வேலை மற்றும் அந்த உணவைப் பரிமாறும் மக்கள், சமையல் மற்றும் சேவைநடவடிக்கைகளை பண்டங்கள் போல் யாரும் தொட்டு உணரக் கூடியது அல்ல. ஆனால் நீங்கள் உணவினை உண்டு அனுபவிக்கலாம். பொருளியல் வல்லுநர்கள் இந்த நடவடிக்கையை “பணிகள்” என்று அழைக்கின்றனர். பண்டங்கள் பொருத்தவரை, இவைகளும் மற்றும் பிற பணிகளும் இலவசம் அல்ல, ஏனெனில் அதற்கு பணம் செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஹோட்டலில் என்ன நடக்கிறதோ அதே போல் நாடு முழுவதும் நடக்கிறது. பண்டங்கள் மற்றும் பணிகள் உற்பத்தி செய்யப்பட்டு அதனை நாம் பணம் செலுத்தி பெறுகின்றோம். இவற்றையே மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அளவிடுகிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியை கீழ்க்கண்டவாறு வரையறுக்கலாம்.

ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற அனைத்து பண்டங்கள் மற்றும் பணிகளின் அங்காடி மதிப்பை மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்கிறோம்.

இந்த வரையறையில் ஒவ்வொரு பகுதியும் முக்கியமானதாகும்.

பண்டங்கள் மற்றும் பணிகள்: பண்டங்கள் என்பது தொடக் கூடிய பொருளும், பணிகள் என்பது தொட்டு உணர முடியாதததுமான நடவடிக்கைகள் என்று இப்போது தெரியும்.

அங்காடி மதிப்பு: அங்காடியில் விற்கக் கூடிய பண்டங்கள் மற்றும் பணிகளின் விலை.

  • ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற பண்டங்கள் மற்றும் பணிகளை அளவிடுவது மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும் (GDP).
  • இதற்காக உற்பத்தி செய்கின்ற அனைத்து பண்ட பணிகளையும் சேர்க்க வேண்டும். எனினும், ஒரு நாடு அரிசி, காலணிகள், ரயில்கள், பால், கடிகாரம், புத்தகம் மற்றும் மிதிவண்டி போன்ற பலதரப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்கிறது.
  • அளவை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால் இதை சேர்க்க அர்த்தமுள்ள வழிகள் ஏதுமில்லை. எடுத்துக்காட்டாக, எவ்வாறு 1000 லிட்டர் பாலுடன் 500 கடிகாரத்தை சேர்க்க முடியும்? இதைப்போல பணிகளின் அளவை சேர்க்க அர்த்தமுள்ள வழிகள் இல்லை. மருத்துவர்களின் பணிகள், காவலர்கள், தீயணைப்பு படை, ஆசிரியர்கள், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் போன்ற பரந்த பணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • ஒரு வகைப் பண்டத்தின் அளவை மற்றொரு வகையான பண்டத்தின் அளவுடனோ அல்லது ஒரு வகை பணியை மற்றொரு வகையான பணியுடனோ சேர்க்க முடியாது. கட்டாயமாக பண்டங்கள் உற்பத்தியையும், பணிகள் உற்பத்தியையும் கூட்டுவதற்கு எந்த ஒரு விவேகமான வழியுமில்லை. எப்படி ஒரு நாட்டில் உற்பத்தி செய்த பாலுடன் , ஆசிரியர் பணியை சேர்க்க முடியும்?
  • நம் நாட்டில் இந்திய செலாவணியான ரூபாயில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளை அளவிடுவதற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியை பயன்படுத்தி இம்மாதிரியான பிரச்சனைகள் தீர்க்கப்படுகிறது.
  • அங்காடியில் விற்கும் பண்டங்கள் மற்றும் பணிகளை பண மதிப்பால் அளவிடலாம். எந்த ஒரு பண்ட, பணிகள் அங்காடியின் மதிப்பில் சேர்க்கப்படுகிறதோ அது மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும் (GDP).
  • இது எதைக் குறிக்கிறது என்றால், ஒரு பண்டத்தையோ அல்லது பணியையோ அங்காடியில் விற்கவில்லையெனில் அதை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்ப்பதில்லை.
  • எடுத்துக்காட்டாக, ஒரு கணினி மையத்தில் ஒரு கையெழுத்து பிரதியை தட்டச்சு செய்ய நீங்கள் ₹50 கொடுக்கிறீர்கள் என வைத்துக்கொண்டால், அதன் பணியை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்த்திடலாம்.
  • ஏனெனில் அது அங்காடியில் விற்கப்படுகிறது. நீங்களே அந்த கையெழுத்து பிரதியை தட்டச்சு செய்தால், அந்த தட்டச்சு செய்யும் பணியை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்ப்பதில்லை. ஏனெனில் நீங்கள் அங்காடியில் விலை கொடுத்து அதை வாங்கவில்லை என்பதேயாகும்.

இறுதிநிலை பண்டங்கள் மற்றும் பணிகள்

  • “இறுதிநிலை பண்டங்கள் மற்றும் பணிகள்” என்பது நுகர்வுக்காக அல்லது பயன்பாட்டுக்காக உள்ள பண்டங்கள் மற்றும் பணிகள் ஆகும். இது மற்ற பண்ட பணிகளின் ஒரு பகுதியாக அமையாது.
  • எந்த பண்டங்கள் மற்றும் பணிகள் மற்றொரு பண்ட பணிகளை உற்பத்தி செய்ய பயன்படுகிறதோ மற்றும் மற்ற பண்ட பணிகளை உற்பத்தி செய்ய ஒரு பகுதியாகிறதோ அதை “இடைநிலை பண்டங்கள்” என்று டைலர் கோவன் மற்றும் அலெக்ஸ் டாபர்ராக் போன்ற பொருளியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இறுதிநிலை பண்டங்கள் மட்டும் சேர்க்கப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிட இடைநிலை பண்டங்களை கணக்கில் எடுப்பதில்லை.
  • ஏனெனில் அவற்றின் மதிப்பு இறுதிநிலை பண்டத்தில் சேர்க்கப்படுகிறது. ஆகவே இடை நிலை பண்டத்தின் மதிப்பை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்த்தால், அதன் விளைவை “இரு முறை கணக்கிடுதல்” என அழைக்கிறது.
  • எடுத்துக்காட்டாக, ஹோட்டலில் வாங்கும் ஒரு கோப்பை தேனீர் (Tea) இறுதிநிலை பண்டமாகும். ஏனெனில் இது நுகரப்படக்கூடியது. வேறு எந்த பொருளின் பகுதியாக இருக்காது. ஆகவே ஒரு கோப்பை தேனீரின் அங்காடி மதிப்பை இறுதிப் பண்டமாக இருப்பதால் அதை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்த்துள்ளனர். தேனீரில் கலக்கப்பட்ட சர்க்கரை ஒரு இறுதிநிலை பண்டம். இது தேனீர் உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்பட்டு தேனீரின் ஒரு பகுதியாக இருக்கிறது.
  • ஒரு கோப்பை தேனீரின் விலை ₹10/- என்றால் அதில் சர்க்கரையின் மதிப்பு ₹2/- ஆகவே ஒரு கோப்பை தேனீரின் விலையில், ஒரு தேக்கரண்டி சர்க்கரையில் விலை ₹2/- சேர்க்கப்பட்டுள்ளது. சர்க்கரையின் மதிப்பை GDP யில் கூட்டினால் ஒரு தேக்கரண்டி சர்க்கரை, மீண்டும் ஒரு கோப்பை தேனீர் என இரு முறை கணக்கிடப்படும். இதை “இருமுறை கணக்கிடுதல்” என்பர். இதை தவிர்ப்பதற்கு இடைநிலை பண்டமான சர்க்கரையை GDPயில் சேர்ப்பதில்லை.
  • கடைகளில் தேனீர் தயாரிக்க பயன்படுத்தப்படும் பாத்திரங்களின் சந்தை மதிப்பை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்க்கப்பட வேண்டுமா? பாத்திரங்கள் இறுதிநிலைப் பண்டங்கள் அல்ல, ஆனால் தேனீர் தயாரிக்க இது ஒரு இடைநிலை பண்டமாக கருதப்பட்டு GDPயில் சேர்க்கக் கூடாது. ஒரு கோப்பை தேனீரில் பாத்திரங்கள் இறுதிநிலை பண்டத்தின் ஒரு பகுதியாக அமையாது. அதன் காரணமாக சர்க்கரையை மட்டும் GDPயில் சேர்க்க வேண்டும்.

நாட்டு வருமானம்

நாட்டு வருமானம் என்பது ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பாகும். பொதுவாக நாட்டு வருமானத்தை மொத்த நாட்டு உற்பத்தி (GNP) அல்லது நாட்டு வருமான ஈவு எனப்படுகிறது.

நாட்டு வருமானத்தை அளவிட தொடர்புடைய பல்வேறு கருத்துக்கள்

1. மொத்த நாட்டு உற்பத்தி (GNP)

மொத்த நாட்டு உற்பத்தி என்பது அந்தநாட்டு மக்களால் ஒரு வருடத்தில் (ஈட்டிய வருமானம்) உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடுகளின் (பண்டங்கள் + பணிகள்) மதிப்பைக் குறிக்கும். வெளிநாட்டு முதலீடு மூலம் ஈட்டிய இலாபமும் இதில் அடங்கும்.

GMP = C + I + G + (X – M) + NFIA

C – நுகர்வோர்

I – முதலீட்டாளர்

G – அரசு செலவுகள்

X – M – ஏற்றுமதி – இறக்குமதி

NFIA – வெளிநாட்டிலிருந்து ஈட்டப்பட்ட நிகர வருமானம்

2. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)

ஒரு ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் உள்ள உற்பத்தி காரணிகளால் உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடு (பண்டங்கள் + பணிகள்)களின் மொத்த மதிப்பே மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும்.

3. நிகர நாட்டு உற்பத்தி (NNP)

மொத்த நாட்டு உற்பத்தியிலிருந்து மூலதன தேய்மானத்தின் மதிப்பை நீக்கிய பின் கிடைக்கும் பண மதிப்பு நிகர நாட்டு உற்பத்தியாகும்.

நிகர நாட்டு உற்பத்தி (NNP)= மொத்த நாட்டு உற்பத்தி (GNP) – தேய்மானம்

3. நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP)

நிகர உள்நாட்டு உற்பத்தி என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பகுதியாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து தேய்மானத்தைக் (தேய்மான செலவின் அளவு) கழித்து பின் கிடைப்பது நிகர உள்நாட்டு உற்பத்தியாகும்.

நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP) = மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) – தேய்மானம்

5. தலாவருமானம் அல்லது தனிநபர் வருமானம் (PCI)

தலா வருமானம் என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு கருவியாகும். நாட்டு வருமானத்தை மக்கள் தொகையில் வகுப்பதன் மூலம் தலா வருமானம் பெறப்படுகிறது.

தலா வருமானம் =

  • 1867-68 ல் முதன் முதலாக தாதாபாய் நௌரோஜி தனது “இந்தியாவின் வறுமை மற்றும் ஒரு பிரிட்டிஷ்யில்லா ஆட்சி” என்ற புத்தகத்தில் தனி நபர் வருமானத்தைப் பற்றி முதன் முதலாக கூறியுள்ளார்.

6. தனிப்பட்ட வருமானம் (PI)

நேர்முக வரிவிதிப்பிற்கு முன் தனி நபர்கள் மற்றும் ஒரு நாட்டின் குடும்பங்களின் மூலம் அனைத்து ஆதாரங்களிலிருந்து பெறப்படுகின்ற மொத்த பண வருமானத்தை தனிப்பட்ட வருமானம் எனலாம்.

தனிப்பட்ட வருமானம் = நாட்டு வருமானத்தில் பெறு நிறுவனங்களின் வருமான வரி – பெரும் நிறுவனங்களின் பகிர்ந்தளிக்கப்படாத வருவாய் – சமூக பாதுகாப்பு பங்களிப்பு + மாற்று வருவாய்.

7. செலவிடத் தகுதியான வருவாய் (DI)

தனி நபர்கள் மற்றும் குடும்பங்களின் உண்மையான வருமானத்தில் நுகர்வுக்கு செலவிடப்படுகின்ற வருமானத்தை செலவிடத் தகுதியான வருமானம் எனப்படுகிறது.

இதனை இவ்வாறு அழைக்கலாம்.

DPI = தனிப்பட்ட வருமானம் – நேர்முகவரி

(நுகர்வு முறையில் DI = நுகர்வுச் செலவு + சேமிப்பு)

மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)

நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது

  • இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற பண்டங்கள் மற்றும் பணிகளின் அங்காடி மதிப்பே இந்தியாவின் GDP என அழக்கப்படுகிறது.
  • எடுத்துக்காட்டாக காஷ்மீர் இந்தியாவில் உள்ளதால், காஷ்மீர் உற்பத்தி செய்யப்பட்ட ஆப்பிளின் அங்காடி மதிப்பு GDPயில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • கலிபோர்னியவைல் உற்பத்தி செய்யப்பட்ட ஆப்பிளின் அங்காடி மதிப்பு, இந்தியாவின் அங்காடியில் விற்பனை செய்தாலும், அதை GDPயில் சேர்ப்பதில்லை, ஏனெனில் கலிபோர்னியா அமெரிக்காவில் உள்ளது.

ஒரு காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டது

  • ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்ட பணிகளின் அங்காடி மதிப்பே, ஒரு நாட்டின் GDP யாகும்.
  • முந்தைய காலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட பண்ட பணிகளை சேர்த்துக்கொள்வதில்லை.
  • ஓர் ஆண்டு என்பது குறிப்பிட்ட காலமாக கருதினால், 2018 ல் உற்பத்தி செய்யப்பட்ட பண்ட பணிகளின் அங்காடி மதிப்பு 2018ன் GDPஆகும்.
  • 2017ல் உற்பத்தில் செய்யப்பட்ட மிதிவண்டியை 2018ன் GDPக்கு சேர்க்க முடியாது.
  • காலாண்டு மற்றும் ஆண்டுதோரும் என இரண்டு வகையிலும் இந்தியாவின் GDP கணக்கிடப்படுகிறது.
  • ஆண்டு GDPஎன்பது ஒரு நிதியாண்டு அதாவது ஏப்ரல் 2017 முதல் 31 மார்ச் 2018 வரையாகும். இதை 2017 – 18 என்று எழுதுவார்கள். இந்தியாவின் நிதியாண்டை நான்கு காலாண்டுகளாக GDP மதிப்பிடுகிறது.
  • முதல் காலாண்டு Q1 என குறிக்கப்படுகிறது : ஏப்ரல், மே, ஜூன்
  • இரண்டாம் காலாண்டு அல்லது Q2 : ஜூலை,ஆகஸ்ட், செப்டம்பர்
  • மூன்றாவது காலாண்டு அல்லது Q3 : அக்டோபர், நவம்பர், டிசம்பர்
  • நான்காவது காலாண்டு அல்லது Q4 : ஜனவரி, பிப்ரவரி, மார்ச்
  • 2017-18 ன் நிதியாண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்ட, பணிகளை அந்த ஆண்டில் GDPக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் முந்தைய ஆண்டில் உற்பத்தி செய்த பண்ட, பணிகளை எடுத்துக் கொள்வதில்லை.
  • அதைப்போல Q2 யின் GDP, Q2 யில் உற்பத்தி செய்யப்பட்ட பண்ட, பணிகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. Q1யில் உற்பத்தி செய்யப்பட்டதை எடுத்துக் கொள்வதில்லை.

மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வரையறை

மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு நாட்டின் பொருளாதார நலத்தை பிரதிபலிக்கிறது. தனி நபர்கள் , நிறுவனங்கள், வெளி நாட்டவர்கள் மற்றும் ஆளும் குழுக்கள் மூலம் அனைத்து பண்டங்கள் மற்றும் பணிகள் உள்ளடக்கிய நாடுகளின் மொத்த உற்பத்தியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டின் எல்லைக்கும் உற்பத்தி செய்கின்ற அனைத்து இறுதிப் பண்டப் பணிகளின் பணமதிப்பைக் குறிக்கும்.

GDP = C + I + G + (X – M)

C – நுகர்வோர் I – முதலீட்டாளர்

G – அரசு செலவுகள் (X –M) – ஏற்றுமதி – இறக்குமதி

  • 1934ஆம் ஆண்டின் காங்கிரஸ் அறிக்கையின் படி, சைமன் குஸ்நட் என்பவரால் GDPயின் நவீன கருத்து முதன் முதலில் உருவாக்கப்பட்டது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கணக்கீட்டு முறைகள்

1. செலவின முறை

இந்த முறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்த அனைத்து இறுதிப் பண்ட பணிகளுக்கு மேற்கொள்ளும் செலவுகளின் கூட்டுத் தொகையேயாகும். பல்வேறு வகையான செலவுகள் இச்சமன்பாட்டின் காணப்படுகிறது.

Y = C + I + G + (X – M)

2. வருமான முறை

பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் வருமானத்தை கணக்கிட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை இந்த முறை கூறுகிறது. வருமான முறையில் GDPஐ கணக்கிடும்போது

வருமானம் = கூலி + வாரம் + வட்டி + லாபம்.

3. மதிப்பு கூட்டு முறை

“இறுதிப்பண்டம்” என்பது ஹோட்டலில் ஒரு கோப்பை தேனீர் (Tea) உங்களுக்கு வழங்கப்படுவதாகும். அதை தயாரிக்க பயன்படுத்தப்படும் டீதூள், பால் மற்றும் சர்க்கரை “இடைநிலை பண்டங்கள்” ஆகும். ஒரு கோப்பை தேனீர் இறுதிப் பண்டமாக மாறுவதற்கு (தோன்றுவதற்கு) இவைகள் ஒரு பகுதியாக அமைகிறது. ஒரு கோப்பை தேனீர் தயாரிக்க பயன்படுத்திய ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பைக் கூட்டினால், தேனீரின் சந்தை மதிப்பை அளவிடலாம். ஒவ்வொரு இடைநிலை பண்டமான டீதூள், பால் மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் இறுதி வெளியீடு தேனீர் கோப்பையின் மதிப்பைச் சேர்க்கின்றது. மதிப்புக் கூட்டு முறையில், ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பை கூட்டினால், இறுதிப் பண்டத்தின் மதிப்பை அளவிடலாம். உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட அனைத்து இடைநிலை பண்டங்களின் மதிப்பை சேர்க்கும்பொழுது, பொருளாதாரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிப் பண்டங்களின் மொத்த மதிப்பு கிடைக்கிறது.

மதிப்புக் கூட்டு முறை

டீதூள் + பால் + சர்க்கரை = தேனீர்

இடைநிலை பண்டங்கள் = இறுதிப் பண்டம்

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் முக்கியத்துவம்

  1. பொருளாதார வளர்ச்சி பற்றிய ஆய்வு பற்றி அறிந்துகொள்ளப் பயன்படுகிறது.
  2. செல்வம் சமனற்ற முறையில் விநியோகம் செய்யப்படுவது குறித்து அறிந்துகொள்ள உதவுகிறது.
  3. பணவீக்கம் மற்றும் பணவாட்டத்தின் சிக்கல்கள் பற்றி அறிய உதவுகிறது.
  4. உலகின் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பீடு செய்வதற்கு பயன்படுகிறது.
  5. வாங்கும் திறன் மதிப்பீடு செய்வதற்கு உதவுகிறது.
  6. பொதுத்துறை பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள உதவுகிறது.
  7. பொருளாதார திட்டமிட வழிக்காட்டியாகவும் பயன்படுகிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் குறைபாடுகள்

ஒரு நாட்டின் பொருளாதார நிலையை அறிய மிகவும் பரவலாக பயன்படுத்தும் நடவடிக்கையே மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும் (GDP). இதனுடைய பயன்பாட்டினை ஏற்றுக்கொள்ளும் பொழுது நாம் அதன் சில குறைபாடுகளை அறிந்திருக்க வேண்டும்.

1. GDPயில் பல முக்கிய பண்டங்கள் மற்றும் பணிகள் சேர்க்கப்படவில்லை

  • சந்தையில் விற்கப்படும் பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பு மட்டுமே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அடங்கும்.
  • பெற்றோர்கள் அவர்களுடைய குழந்தைகளுக்கு செய்யும் பணிகள்/ சேவைகள் மிக முக்கியமானது. ஆனால், அதை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்க்கப்படுவதில்லை.
  • ஏனெனில், அது சந்தையில் விற்பனை செய்யப்படவில்லை. இதுபோலவே, சுத்தமான காற்று, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முக்கியமாகனது.
  • இதற்கு சந்தை மதிப்பு இல்லை. ஆகவே, இவை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வரம்புக்கு வருவதில்லை.

2. GDP அளவை மட்டும் அளவிடுகிறது தரத்தை அல்ல

1970 களில் பள்ளிகள் மற்றும் வங்கிகளில் பந்துமுனை பேனாக்கள் பயன்படுத்த அனுமதிக்கவில்லை. ஏனென்றால், இந்தியாவில் கிடைக்கக்கூடிய மிக தரமற்ற பொருளாக இருந்தது. அதன் பின்னர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பந்துமுனை பேனாக்களின் தரம் மேம்படுத்தப்பட்டதால், அவற்றின் உற்பத்தியும் குறிப்பிடத்தக்க அளவி அதிகரித்தது. எனவே, பண்டத்தினுடைய தரம் என்பது மிக முக்கியமானதாகும். ஆனால், அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பின்பற்றப்படுவதில்லை.

3. GDPயில் நாட்டு வருமான பகிர்ந்தளிப்பு பற்றி கூறவில்லை

ஒரு நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விரைவாக வளரலாம். ஆனால் வருமானம் சமனற்ற நிலையில் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதனால் ஒரு சிறிய சதவீத மக்களே பயன் அடைகிறார்கள்.

4. GDP மக்கள் வாழும் வாழ்க்கை முறையைப் பற்றி கூறவில்லை

GDP, மிகவும் குறைந்த சுகாராத நிலை, மக்கள் ஜனநாயகமற்ற அரசியல் அமைப்பு, அதிகமாக மற்றும் உயர் தற்கொலை விகிதம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உயர்மட்ட தனிநபர் வருமானத்துடன் கைகோர்த்து செல்கிறது.

GDP யின் மதிப்பீடு

புள்ளியியல் துறை அமைச்சரவையின் கீழேயுள்ள மத்திய புள்ளியியல் அமைப்பு (CSO), GDP சம்பந்தப்பட்ட ஆவணங்களை பாதுகாக்கிறது. தொழிற்துறையின் உற்பத்தியை ஆண்டு கணக்கெடுப்பு நடத்தி தொழில்துறை உற்பத்தி குறியீடு (IIP), நுகர்வோர் விலை குறியீடு (CPI) போன்ற குறியீடுகளை வெளியிடுகிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் இயைபு

இந்திய பொருளாதாரம் பரவலாக மூன்று துறைகளாகப் பிரிக்கப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம் அதை சார்ந்த நடவடிக்கை, தொழில்கள், பணிகள் ஆகிய துறைகள் பங்களிக்கின்றன.

1. முதன்மைத் துறை (விவசாயத்துறை)

வேளாண்மைத் துறையை முதன்மைத் துறை எனவும் அழைக்கலாம். இதில் வேளாண் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகள் அடங்கும், இவை , கால்நடை பண்ணைகள், மீன் பிடித்தல், சுரங்கங்கள் , காடுகள் வளர்த்தல், சோளம், நிலக்கரி போன்ற மூலப்பொருட்களை உற்பத்தி செய்கிறது.

2. இரண்டாம் துறை (தொழில்துறை)

தொழில்துறையை இரண்டாம் தூறை எனவும் அழைக்கலாம். மூலப்பொருட்களை மாற்றியமைப்பதன் மூலம் பண்டங்கள் மற்றும் பணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இரும்பு மற்றும் எஃகு தொழில், ஜவுளித் தொழில், சணல், சர்க்கரை, சிமெண்ட், காகிதம் , பெட்ரோலியம், ஆட்டோமொபைல்ஸ் மற்றும் சிறுதொழில்கள் முக்கிய தொழில்களாகும்.

3. மூன்றாம் துறை (பணிகள் துறை)

பணிகள் துறையை மூன்றாம் துறை எனவும் அழைக்கலாம். அவைகள் அரசு, அறிவியல் ஆராய்ச்சி, போக்குவரத்து, தகவல் தொடர்பு, வர்த்தகம், தபால் மற்றும் தந்தி, வங்கி, கல்வி, பொழுதுபோக்கு, சுகாதாரம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் போன்றவைகளாகும். 20ஆம் நூற்றாண்டில் பொருளாதார நிபுணர்கள் பாரம்பரிய மூன்றாம் நிலை பணிகளை “நான்காம் நிலை” மற்றும் “ஐந்தாம் நிலை” பணிகள் துறையிலிருந்து மேலும் வேறுபடுத்திட முடியும் என்றனர்.

இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெவ்வேறு துறைகளின் பங்களிப்பு

  • இந்தியாவில் பணிகள் துறை மிகப்பெரிய துறையாகும். நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதலில் (GVA) பணிகள் துறைகள் 2018-19ல் 92.26 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளன.
  • இந்தியாவில் மொத்த மதிப்பு கூடுதலான 169.61 லட்சம் கோடியில், 54.40% பணிகள் துறையின் பங்காகும்.
  • மொத்த மதிப்பு கூடுதலான ரூ. 50.43 லட்சம் கோடியில், தொழில் துறையின் பங்களிப்பு 29.74% ம் வேளாண்மை சார்ந்த சார்பு துறையின் பங்கு 15.87% ஆகும்.
  • விவசாய பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாகும். உலகின் மொத்த விவசாய பொருட்களின் வெளியீட்டில் 7.39% இந்தியாவினால் வெளியிடப்படுகிறது.
  • உலகில் இந்தியா தொழில்துறையில் எட்டாவது இடத்திலும், பணிகள் துறையில் ஆறாவது இடத்திலும் உள்ளது.
  • விவசாய துறையின் பங்களிப்பு, உலக சராசரி 6.4% விட அதிகமாக உள்ளது. ஆனால், தொழில்துறை மற்றும் பணிகள் தூறைகளின் பங்களிப்பு, உலக சராசரியை விட 30% தொழில் துறையிலும் மற்றும் 63% பணிகள் துறையிலும் குறைவாகவுள்ளன.

இந்தியாவில் GDPயின் துறை வாரியான பங்களிப்பு அட்டவணை

ஆண்டு விவசாயம் % தொழில்கள் பணிகள் %
1950 -51 51.81 14.16 33.25
1960 – 61 42.56 19.30 38.25
1970 – 71 41.95 20.48 37.22
1980 – 81 35.39 24.29 39.92
1990 – 91 29.02 26.49 44.18
2000 – 01 23.02 26.00 50.98
2010 – 11 18.21 27.16 54.64
2011 – 12 17.86 27.22 54.64
2012 – 13 17.58 26.21 56.27
2013 – 14 18.20 24.77 57.03
2015 – 16 17.07 29.08 52.03
2016 – 17 17.09 29.09 52.05
2017 – 18 17.01 29.01 53.09

மொத்த மதிப்பு கூடுதல்

ஒரு பொருளாதாரத்தில் ஒரு பகுதி, தொழில் அல்லது துறையில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பே மொத்த மதிப்பு கூடுதல் (GVA) ஆகும். தேசிய கணக்குகளில் மொத்த மதிப்பு கூடுதலின் வெளியீட்டை கழித்தால் கிடைப்பது இடைநிலை நுகர்வு. இது தேசிய கணக்குகள் மற்றும் உற்பத்தி கணக்குகளின் சமநிலை பொருளாகும்.

மொத்த மதிப்பு கூடுதலை, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவீடாக இணைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இரண்டும் வெளியீட்டு நடவடிக்கைகளை குறிக்கிறது. இந்த உறவை மொத்த மதிப்பு கூடுதல் + பண்டங்கள் மீது வரிகள் – பண்டங்கள் மீது மானியம் = மொத்த நாட்டு உற்பத்தி.

GVA = GDP + மானியம் – வரிகள் (நேர்முக வரி, விற்பனை வரி).

பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்

  • பொருளியல் அறிஞர் அமர்த்தியா சென் கருத்துப்படி, பொருளாதார வளர்ச்சி என்பது பொருளாதார முன்னேற்றத்தின் ஓர் அம்சமாகும்.
  • ‘பொருளாதார வளர்ச்சி மனிதனின் பொருள்சார் தேவைக்கு மட்டும் கவனம் செலுத்துகிறது. ஆனால், ஐக்கிய நாடுகளின் பார்வையில், பொருளாதார வளர்ச்சி என்பது வாழ்க்கை தரம் உயர்தல் அல்லது ஒட்டுமொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்துதலாகும்” என்று கூறுகின்றது.
  • ஒரு பொருளாதாரத்தில் அல்லது நாட்டின் உற்பத்தியில் அதன் குறிப்பிட்ட காலப் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்தி உயர்வு எனக் கருதப்படும் பண மதிப்பு அளவு கோல் ஆகும்.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஆகிய இரண்டும் பொருளாதார வளர்ச்சியை கணக்கிடும் முக்கிய அளவுகோல் மேலும் ஒரு பொருளாதாரத்தின் உண்மையான அளவை கணக்கிட இது உதவுகிறது.
  • எடுத்துக்காட்டாக இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 28 டிரில்லியன் USD (அமெரிக்க டாலரில்) பெற்று உலகத்தில் 6 வது தரவரிசையில் உள்ளது. அதே சமயத்தில் அமெரிக்க ஐக்கிய நாடு 19 டிரில்லியன் USD பெற்று 1வது தரவரிசையில் உள்ளது. இது சென்ற ஆண்டை விட எவ்வளவு பண்டங்கள் மற்றும் பணிகளின் உற்பத்தி அதிகரித்துள்ளன என்பதை ஒப்பீட்டளவில் அளவிட பயன்படுகிறது. அதனை அளவிடுவதற்கான அளவீடுகள், மனித வளம் இயற்கை வளங்கள், தொழில் நுட்பத்தில் முன்னேற்றம், மூலதன அமைப்பு அரசியல் மற்றும் சமூக பொருளாதார காரணிகள் போன்றவைகளாகும்.

பொருளாதார முன்னேற்றம்

  • பொருளாதாரத்தின் பரந்த முறையில் தெளிவான உருவத்தை பொருளாதார முன்னேற்றம் காண்பிக்கிறது. உற்பத்தி நிலையை அல்லது பொருளாதாரத்தின் வெளியீட்டை அதிகப்படுத்துவது , மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவது ஆகியவை இதில் அடங்கும்.
  • இது உற்பத்தி அளவு அதிகரிப்பதை மட்டுமில்லாமல். சமூக பொருளாதார காரணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. தொழில் நுட்ப மேம்பாடு, தொழிலாளர் சீர்திருத்தம், வாழ்க்கைத் தரத்தை அதிகப்படுத்துவது, பொருளாதார அமைப்புகளில் மாற்றத்தை ஏற்படுத்துவது ஆகிய தரமான அளவுகளை அளப்பதே பொருளாதார முன்னேற்றமாகும்.
  • ஒரு பொருளாதாரத்தின் உண்மையான முன்னேற்றத்தை அளப்பதற்கு மனிதவள மேம்பாடு குறியீடு (HDI) சரியானதாகும்.

பொருளாதார வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உள்ள வேறுபாடு

பொருளாதார வளர்ச்சி பொருளாதார முன்னேற்றம் ஒப்பீடு பொருளாதார வளர்ச்சி பொருளாதார முன்னேற்றம்
கருத்து பொருளாதார வளர்ச்சி ஒரு குறுகிய கருத்து பொருளாதார முன்னேற்றம் ஒரு “பரந்த கருத்து”
வரையறை / பொருள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு பொருளாதாரத்தில் வெளியிட்டில் இது நேர்மறை அளவு மாற்றத்தைக் கொடுக்கும். இது பொருளாதாரத்தில் வெளியீட்டுன் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, HDIயின் குறியீட்டின் முன்னேற்றம் வாழ்க்கைத் தரத்தில் உயர்வு, தொழில்நுட்ப முன்னேற்றம், மற்றும் ஒரு நாட்டின் ஒட்டு மொத்த மகிழ்ச்சி குறியீட்டைக் கருதுகிறது.
அணுகுமுறை இயல்பு அளவில் இயல்பு தரத்தின் இயல்பு
நோக்கம் GDP, GNP, FDI, FII போன்ற அளவுகள் அதிகரிக்கும் வாழ்க்கை எதிர்பார்ப்பு விகிதம், குழந்தை எழுத்தறிவு விகிதம் மற்றும் வறுமை விகிதத்தில் முன்னேற்றம்
கால வரம்பு இயற்கையில் குறுகிய காலத்தை உடையது இயற்கையில் நீண்ட காலத்தை உடையது.
பொருந்தும் தன்மை வளர்ந்த நாடுகள் வளர்ந்து வருகின்ற நாடுகள்
அளவீட்டு நுட்பங்கள் நாட்டு வருமானத்தை அதிகரித்தல் உண்மையான நாட்டு வருமானத்தை அதிகரித்தல் அதாவது, தனிநபர் வருமானம் போன்றவை
நிகழ்வின் அதிர்வெண் ஒரு குறிப்பிட்ட காலம் தொடர்ச்சியான செயல்முறை
அரசாங்க உதவி இது ஒரு தானியங்கி செயல்முறையாகும். எனவே அரசாங்க உதவி/ ஆதரவு அல்லது தலையீடு தேவைப்படாது அரசாங்க தலையீட்டை மிகவும் நம்பியுள்ளது. இது பரந்த கொள்கை மாற்றங்களை உள்ளடக்கியுள்ளது. எனவே, அரசாங்கத் தலையீடு இல்லாமல் அது சாத்தியமே இல்லை.
செல்வ பகிர்வு பொருளாதார வளர்ச்சி அனைத்து மக்களிடையேயும் செல்வம், வருமானத்தை நியாயமாக மற்றும் சமமாக விநியோகிக்கப்படுவதில்லை இது ஒரு சமநிலையில் கவனம் செலுத்துகிறது. அனைத்து தனிநபர்களிடையே செல்வத்தை சமமாக விநியோகிப்பது சமூகங்களை மேம்படுத்துவதற்கு முயற்சிக்கிறது.

வளர்ச்சிப் பாதையில் GDP மற்றும் வேலைவாய்ப்பு

  • இந்தியா தன் வளர்ச்சிப் பாதையில் முதலாவதாக நெருக்கமான வர்த்தகக் கொள்கையை எடுத்துக் கொண்டது.
  • இது உள்நாட்டு தொழில்களுக்கு ஒரு உந்துதலையும், வெளிநாட்டு பொருட்களையும், நிறுவனங்களையும் சார்திருத்தலைக் குறைக்கும் நிலையையும் ஏற்படுத்தியது.
  • இந்தியாவின் எல்லைகளைத் திறந்த வர்த்தகத்திற்குத் திறக்க முடிவு செய்து, அதன் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டு, வெளிநாட்டு நிறுவனங்களை இந்திய பொருளாதாரத்திற்குள் அனுமதிப்பதன் மூலம் 1991ஆம் ஆண்டு வரை இந்த பார்வை தொடர்ந்தது.
  • ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்கு ஒரு உந்துதல் வழங்கப்பட்டது.
  • இவை அதிகரித்து வரும் மக்கள் தொகை, வேலைவாய்ப்பினை அதிகரித்து அதன் மூலம் வேலை வாய்ப்பு பற்றாக்குறையை நீக்குதல் ஆகியவற்றை மேற்கொண்டது.
  • இந்தியாவில் நிலப்பரப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அங்கமாக இருப்பதால் கிராமப்புற மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
  • வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புற வளர்ச்சி இந்திய வளர்ச்சிப் பாதையின் ஒரு பகுதியாகும். பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இந்தியா வறுமையில் வாடும் பொருளாதாரமாக மரபுரிமை பெற்றது. அது வள ஆதாரங்களை முற்றிலும் அழித்தது.
  • பொதுத் துறைக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் கடுமையான ஒழுங்குமுறை மற்றும் தரநிலைக்கு உட்பட்டவை ஆயின. அரசாங்கமானது மக்களின் ஒரே பாதுகாப்பாளராகவும் சமூக நலத்திற்காகவும் செயல்படும் என்றும் நம்பப்பட்டது.
  • இந்தியாவில் கடந்த இரண்டு சகாப்தங்களாக GDPயின் நிலையான அதிக வளர்ச்சியால் தனிநபர் வருமானம் அதிகரித்தும், முழு வறுமை குறைந்தும் காணப்படுகின்றன.
  • 12 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இந்தியா தனி நபர் வருமானத்தில் நடுத்தர வருவாய் நாடுகளின் பிரிவில் இடம் பிடித்துள்ளது.
  • பிறப்பின் போது எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலம் 65 ஆண்டுகள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட 44% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளனர்.
  • 15வயதும் அதற்கு மேலும் உள்ள மக்கள் தொகையில் 63% பேர் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். இது ஒப்பீட்டளவில் குறைந்த நடுத்தர வருவாய் நாடுகளில் 71% ஆகும்.
  • மற்ற பிற நாடுகளைவிட, இந்தியா வெவ்வேறான வளர்ச்சி பாதையை பின்பற்றுகிறது. இந்தியா வேளாண்மையிலிருந்து மிக விரைவாக பணிகளுக்கு மாறியது.
  • இது கனரக தொழில் துறையை விட குறைவாக இறுக்கமாக கட்டுப்படுத்தப்படுகிறது. இந்திய பொருளாதாரத்தில் சில வளர்ந்து வரும் பெரும் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.

இந்திய முன்னேற்றத்தை ஆதரிக்கும் காரணிகள்

  • இந்தியாவில் 35 வயதிற்கு உட்பட்ட உழைக்கும் வயதில் வேகமாக வளரும் மக்கள் தொகையில் 700 மில்லியன் பேர் உள்ளனர்.
  • அடுத்து 20 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிக்கான மக்கள் தொகை குறைவாக உள்ளது.
  • இந்தியாவில் மக்கள் தொகை மாற்றத்தில், கடந்த இரண்டு சகாப்தங்களாக உழைக்கும் வயது மக்களின் பங்கு 58% லிருந்து 64% ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியா கடுமையான சட்ட முறையையும் , அதிகமான ஆங்கில மொழி பேசுபவர்களையும் கொண்டுள்ளது.
  • மேலும், தகவல் தொழில் நுட்பத்தில் நிபுணத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் நிறுவனங்களிடமிருந்து உள்நோக்கி முதலீடுகளை ஈர்க்கிறது.
  • இந்தியாவில் கூலிச்செலவு குறைவாக இருப்பதால், சமீப ஆண்டுகளில் இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு இடையேயான உற்பத்தி இடைவெளி சிலவற்றில் வளர்ச்சியடைந்த நாடுகளை விட இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது.
  • இந்தியாவின் பொருளாதாரம் தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகவும் முன்னேறிய மற்றும் கவர்ச்சிகரமான வெற்றியை உருவாக்கியுள்ளது.
  • எடுத்துக்காட்டாக, உலகளாவிய மென்பொருள் வணிகங்களுக்கான ஒரு மையமாக பெங்களூரின் விரைவான தோற்றம் சாட்சியாக உள்ளது.

மனித மேம்பாட்டுக் குறியீடு (HDI)

  • மனித மேம்பாட்டுக் குறியீடு என்பது 1990ம் ஆண்டு பாகிஸ்தானின் முகஹப்-உல்-ஹிக் என்ற பொருளியல் அறிஞரால் அறிமுகப்படுத்தப்பட்டது. பிறப்பின்போது வாழ்நாள் எதிர்பார்ப்பு, வயது வந்தோரின் கல்வியறிவு மற்றும் வாழ்க்கைத் தரம், GDPயின் மடக்கை செயல்பாடு என கணக்கிடப்பட்டு, வாங்கும் சக்தி சமநிலைக்கு (PPP) சரி செய்யப்படுகிறது.
  • UNPயில் வெளியிடப்பட்ட சமீபத்தில் மனித வளர்ச்சி மதிப்பீடுகளில் இந்தியா 189 நாடுகளில் 130 வது இடத்திற்கு உயர்ந்துள்ளது என வெளியிட்டுள்ளது. இந்தியாவின் 2017இன் HDIயின் மதிப்பு 0.640 இது நாட்டை நடுத்தர மனித மேம்பாட்டு பிரிவின் கீழ் இடம் பெற வைக்கிறது. 1990 – 2017 ன் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் HDIயின் மதிப்பு 0.427 லிருந்து 0.640 ஆக உயர்ந்தது. இது கிட்டத்தட்ட 50சதவீதம் அதிகரித்து, மில்லியன் மக்களின் வறுமையை போக்கி நாட்டின் குறிப்பிடத்தக்க குறியீடாக உள்ளது.
  • 1990-2017 ன் இடைப்பட்ட காலத்தில் பிறப்பின்போது வாழ்நாள் எதிர்பார்ப்பு 11 ஆண்டுகள் அதிகரித்து பள்ளியின் எதிர் பார்ப்பு ஆண்டுகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு சாதமாகயுள்ளது. 1990ம் ஆண்டுகளை விட இன்று இந்தியாவில் பள்ளி செல்லும் குழந்தைகள் 4.7 ஆண்டுகள் அதே சமயம் 1990 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் GSI 266.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

GDPயின் வளர்ச்சி மற்றும் பொருளாதார கொள்கைகள்

பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை அதிகரிப்பதற்கு சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்திய அரசு பல பொருளாதார கொள்கைகளை உருவாக்கியுள்ளது. முக்கியமான பொருளாதார கொள்கைகள் பின்வருமாறு

1. வேளாண் கொள்கை

  • உள்நாட்டு வேளாண்மை மற்றும் வெளிநாட்டு வேளாண்மை இறக்குமதி பொருட்கள் பற்றிய அரசின் முடிவுகளையும், நடவடிக்கைகளையும் பற்றியது வேளாண் கொள்கையாகும்.
  • உள்நாட்டு வேளாண் உற்பத்தி அங்காடிகளில் ஒரு குறிப்பிட்ட விளைவுகளை அடைவதற்கான இலக்கினை அடைய வேளாண் கொள்கைகளை பொதுவாக அரசாங்கங்கள் அமல்படுத்துகின்றன.
  • சில பரவலான கருப்பொருள்கள் இடர் மேலாண்மை மற்றும் சரிசெய்தல், பொருளாதார நிலைத்தன்மை, இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத் தன்மையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உள்நாட்டு பொருட்களுக்கான சந்தை அணுகல் ஆகியவை வேளாண் கொள்கையில் அடங்கும்.
  • சில வேளாண் கொள்கைகள், விலைக் கொள்கை நில சீர்திருத்த கொள்கை, பசுமைப் புரட்சி, பாசனக் கொள்கை, உணவுக் கொள்கை, விவசாய தொழிலாளர் கொள்கை மற்றும் கூட்டுறவு கொள்கை போன்றவைகளாகும்.

2. தொழில் துறை கொள்கை

  • தொழில் துறை முன்னேற்றம் எந்த ஒரு பொருளாதாரத்திற்கும் முக்கியமாக அம்சமாகும். இது வேலை வாய்ப்பை உருவாக்குகிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கிறது.
  • இதனால் நவீனமயமாக்கலுக்கு வழிவகுக்கப்பட்டு இறுதியில் பொருளாதாரம் தன்னிறைவு அடைகிறது. உண்மையில், தொழில் துறைவளர்ச்சி, விவசாயத் துறை (புதிய பண்ணை தொழில் நுட்பம்) மற்றும் பணிகள் துறை போன்ற துறைகளை ஊக்குவிக்கின்றன. இது பொருளாதார வர்த்தக வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
  • 1948லிருந்து பல தொழில் துறை கொள்கைகள் பெரிய அளவிலான தொழிற்சாலைகளுக்காக ஏற்படுத்தப்பட்டது.
  • எடுத்துக்காட்டாக, சில தொழில் கொள்கைகள், ஜவுளித் தொழில் கொள்கை சர்க்கரை தொழில் கொள்கை, தொழில் துறை வளர்ச்சி விலைக் கொள்கை, சிறு தொழில் தொழில் கொள்கை மற்றும் தொழில் துறை தொழிலாளர் கொள்கை போன்றவைகளாகும்.

மொத்த தேசிய மகிழ்ச்சி (GNH)

  • மொத்த தேசிய மகிழ்ச்சி (GNI) என்பது பூட்டானின் அரசாங்கத்தை வழிநடத்தும் ஒரு தத்துவமாகும். அது ஒரு மக்கள் தொகை கூட்டு மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வை அளவிடப் பயன்படும் குறியீட்டை உள்ளடக்கியது. GNH என்பது பூட்டான் அரசியலமைப்பு 18 ஜூலை 2008ல் சட்ட பூர்வமாக்கி, பூட்டான் அரசு அமைத்துள்ளது.
  • GNH என்ற வார்த்தையை 1972ல் உருவாக்கியவர் ஜிகமே சிங்கயே வாங்ஹக் என்ற பூட்டான் அரசர் பம்பாய் விமான நிலையத்தில் நிதிமுறை (Financial Times) என்ற பத்திரிக்கைக்கு பிரிட்டிஷ் பத்திரிக்கையாளரின் நேர்கானல் GNP ஐ விட GNH மிக முக்கிய என்றார்.
  • 2011ல் ஐக்கிய நாடு சபை “வளர்ச்சிக்கான ஒரு முழுமையான அணுகுமுறைக்கு – மகிழ்ச்சி” என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. உறுப்பு நாடுகள் பூட்டானை ஒரு எடுத்துக்காட்டாக பின்பற்றி மகிழ்ச்சியையும், நல்வழியையும் மகிழ்ச்சி என அழைத்தனர். (“அடிப்படை மனித குறிக்கோள்”)
  • GNH அல்லது GDPயிலிருந்து தனித்துவமான மகிழ்ச்சியை குறிப்பிடுகிறது. 9 மகிழ்ச்சியின் களங்கள் (domains) மற்றும் GNHயின் 4 தூண்களாக இலக்கு, இயல்புடன் கூடிய ஒத்திசைவு மற்றும் பாரம்பரிய மதிப்புகள் வெளிப்படுத்தப்படுகிறது. GNH யின் 4 தூண்களாக
  1. நிலையான மற்றும் சமமான சமூக பொருளாதார வளர்ச்சி
  2. சுற்றுச்சூழல் பாதுகாப்பு
  3. கலாச்சாரத்தை பாதுகாப்பதும், மேம்படுத்துவம் மற்றும்
  4. நல்ல ஆட்சி

உளவியல் நலன், உடல் நலம், நேரம் பயன்பாடு, கல்வி, கலாச்சார பன்முகத் தன்மை மற்றும் பின்னடைவு , நல்ல ஆட்சி, சமூகத்தின் உயர்வு , சுற்றுச் சூழல் பன்முகத் தன்மை மற்றும் பின்னடைவு மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவை GNHயின் 9 கலங்களாக கருதப்படுகிறது.

3. புதிய பொருளாதாரக் கொள்கை

  • 1990களின் ஆரம்பத்தில் இந்தியாவின் பொருளாதாரம் கணிசமான கொள்கை மாற்றங்களுக்கு உட்பட்டது. இந்த புதிய பொருளாதார சீர்திருத்தம் பொதுவாக , LPG அல்லது தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் மாதிரி என அழைக்கப்படுகிறது.
  • இந்த மாதிரியின் பிரதான குறிக்கோள், இந்திய பொருளாதாரம் உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களுடன் ஒப்பிடுவதற்கு உதவும் திறனுடன் கூடிய உலகில் வேகமாக வளரும் பொருளாதாரத்தை உருவாக்குவது ஆகும்.
  • இந்த பொருளாதார சீர்திருத்தங்கள், நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியை ஒரு குறிப்பிடத் தக்க வகையில் முன்னேற்றமடையச் செய்தது.

இந்தியாவில் – வேறு நில கொள்கைகள் வர்த்தக கொள்கைகள்

  • இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கை (சர்வதேச வர்த்தக கொள்கை)
  • உள்நாட்டு வர்த்தகக் கொள்கை
  • வேலை வாய்ப்புக் கொள்கை
  • நாணய மற்றும் வங்கிக் கொள்கை
  • நிதி மற்றும் பணவியல் கொள்கை
  • கூலிக் கொள்கை

இந்தியாவில் GDPயின் வளர்ச்சி

  • 1990 களிலிருந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது உறுதியான, நிலையான, வேறுபட்ட, நெகிழ்வினை மற்றும் வலுவான பேரியல் பொருளாதாரத்தின் அடிப்படைகளை பிரதிபலிக்கிறது.
  • சமீபத்திய காலாண்டுகளின் ஏற்ற இறக்கங்கள் இருந்த போதிலும், பண மதிப்பு குறைப்பு, பண்டங்கள் மற்றும் பணிகளின் வரி (GST) ஆகிய இரண்டு பிரதான சீர்திருத்தங்களை கொண்டு வந்தது. 2018-19ஆம் ஆண்டு 7.3% மற்றும் 2019-20ம் ஆண்டு 7.5% வளர்ச்சி விகிதம் என உலக வங்கி திட்டமிட்டுள்ளது.
  • 1970 மற்றும் 1980 ஆண்டிற்கு இடையில் இந்தியாவின் சராசரி பொருளாதார வளர்ச்சி 4.41 ஆக இருந்தது. இது 1999 -2000 ம் ஆண்டுகளுக்கு இடையே 1.0% உயர்ந்து 5.4% ஆக இருந்தது.
  • பன்னாட்டு நிதி நிறுவனத்தின் (IMF) ‘உலக பொருளாதாரக் கண்ணோட்டம்’ (அக்டோபர் 2018)ன் படி 2018 ல் இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதம் 7.3% ஆக இருக்கும் எனவும், மேலும் வங்க தேசத்திற்கு பிறகு இந்தியா உலகத்தில் 5வது மிக வேகமாக வளர்ந்து வருகின்ற நாடு எனவும் கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!