TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 10th October 2023

1. புள்ளிவிவர செயல்திறன் குறிகாட்டிகளின் தொகுப்பை வெளியிடுகிற நிறுவனம் எது?

அ. IMF

ஆ. உலக வங்கி 🗹

இ. WEF

ஈ. ADB

  • உலக வங்கியின் புள்ளிவிவர செயல்திறன் குறிகாட்டிகளின் தொகுப்பானது இந்தியாவை 2019ஆம் ஆண்டில் 174 நாடுகளில் 67ஆம் இடத்தில் வைத்துள்ளது. புள்ளிவிவர செயல்திறன் குறிகாட்டிகள் கட்டமைப்பானது ஒரு நாட்டின் புள்ளிவிவர செயல்திறனின் 5 முக்கிய கூறுகளில் கவனம் செலுத்துகிறது: (i) தரவு பயன்பாடு, (ii) தரவு சேவைகள், (iii) தரவு தயாரிப்புகள், (iv) தரவு மூலங்கள் மற்றும் (v) தரவு உட்கட்டமைப்பு. 2004ஆம் ஆண்டு முதல் உலக வங்கி வெளியிட்டு வரும் புள்ளியியல் திறன் காட்டிக்கு மாற்றாக இது வெளியிடப்பட்டுள்ளது.

2. 2023ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கேட்டலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோருக்கு அவர்களின் எந்தப் பணிக்காக வழங்கப்பட்டுள்ளது?

அ. ஹெபடைடிஸ் சி வைரஸ்

ஆ. mRNA தடுப்பூசிகள் 🗹

இ. மனித பரிணாமம்

ஈ. வெப்பநிலை ஏற்பிகள்

  • கேட்டலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோர் நியூக்ளியோசைட் அடிப்படை மாற்றங்களில் அவர்கள் மேற்கொண்ட பணிக்காக 2023ஆம் ஆண்டு உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றுள்ளனர். அவர்களின் ஆராய்ச்சி கோவிட்-19க்கு எதிராக மிகவும் வெற்றிகரமான mRNA தடுப்பூசிகளை உருவாக்க வழி வகுத்தது. எதிர்காலத்தில், இந்தத் தொழில்நுட்பம் சிகிச்சை புரதங்களை வழங்கவும் சில புற்றுநோய் வகைகளுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படலாம்.

3. அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட R21/Matrix-M என்பது கீழ்காணும் எந்த நோய்க்கு எதிரான தடுப்பூசியாகும்?

அ. COVID-19

ஆ. மலேரியா 🗹

இ. காசநோய்

ஈ. குளிர் காய்ச்சல்

  • உலக சுகாதார நிறுவனமானது (WHO) குழந்தைகளுக்கு மலேரியாவைத் தடுப்பதற்காக R21/Matrix-M என்ற புதிய தடுப்பூசியை பரிந்துரைத்துள்ளது. இதனை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இந்திய சீரம் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளன. 2021இல் WHO பரிந்துரையைப் பெற்ற RTS, S/AS01 தடுப்பூசியைத் தொடர்ந்து WHOஆல் பரிந்துரைக்கப்பட்ட இரண்டாவது மலேரியா தடுப்பூசி R21 தடுப்பூசி ஆகும். இரண்டு தடுப்பூசிகளும் குழந்தைகளுக்கு மலேரியாவைத் தடுப்பதில் பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் உள்ளன.

4. இந்தியாவிற்கு வெளியே B R அம்பேத்கரின் மிகப்பெரிய சிலையான, ‘சமத்துவ சிலை’ கீழ்காணும் எந்த நாட்டில் திறக்கப்படவுள்ளது?

அ. இங்கிலாந்து

ஆ. அமெரிக்கா 🗹

இ. ஜெர்மனி

ஈ. பிரான்ஸ்

  • அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையம்மூலம் ‘சமத்துவ சிலை’ திறக்கப்படவுள்ளது. இந்தியாவுக்கு வெளியே அம்பேத்கரின் மிகவுயரமான சிலையாக இது விளங்கும். இந்தச் சிலை ஹைதராபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலையின் பிரதியாகும்; இது 125 அடி உயரம் கொண்டது. இது குஜராத்தில் சர்தார் படேலின் ‘ஒற்றுமை சிலை’யை உருவாக்கிய இராம் சுதாரால் வடிவமைக்கப்பட்டது.

5. ‘SAMPRITI-XI’ என்பது இந்தியாவும் கீழ்காணும் எந்த நாடும் இணைந்து நடத்தும் கூட்டு இராணுவப் பயிற்சி ஆகும்?

அ. வங்காளதேசம் 🗹

ஆ. இலங்கை

இ. இந்தோனேசியா

ஈ. ஈரான்

  • இந்தியாவும் வங்கதேசமும் மேகாலயாவின் உம்ரோய் நகரில் தங்கள் வருடாந்திர கூட்டு இராணுவப் பயிற்சியான ‘SAMPRITI’இன் 11ஆவது பதிப்பைத் தொடங்கியுள்ளன. இருநாடுகளுக்கிடையே மாறி மாறி நடக்கும் இந்தப் பயிற்சி, அவைகளுக்கு இடையேயான வலுவான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை எடுத்துக்காட்டுகிறது. 2009இல் தொடங்கப்பட்ட SAMPRITI, இந்திய மற்றும் வங்கதேசப்படைகளுக்கு இடையே இயங்குதன்மை, நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்வது மற்றும் சிறந்த நடைமுறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

6. 2023ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு, கீழ்காணும் எத்துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டமைக்காக மூன்று அறிவியலாளர்களுக்கு வழங்கப்பட்டது?

அ. மிகக்குறுகிய நேரத்து ஒளியில் எலக்ட்ரான்களின் செயல்பாடு 🗹

ஆ. மிகக்குறுகிய நேரத்து ஒளியில் ஃபோட்டான்களின் செயல்பாடு

இ. மிகக்குறுகிய நேரத்து ஒளியில் நியூட்ரான்களின் செயல்பாடு

ஈ. மிகக்குறுகிய நேரத்து ஒளியில் ஃபைட்டான்களின் செயல்பாடு

  • 2023ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு பெரெங்க் கிராஸ், பியர் அகோஸ்டினி மற்றும் ஆன் எல்’ஹுல்லியர் ஆகியோருக்கு அவர்கள் மேற்கொண்ட பரிசோதனைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது; இது ஒளியின் அட்டோசெகண்ட் துடிப்புகளை உருவாக்க வழிவகுத்தது.
  • எலக்ட்ரான்களை பொறுத்த வரை அட்டோசெகன்ட் பொழுதில் மாற்றங்கள் நிகழ்கின்றன. அட்டோ செகன்ட் என்பது ஒரு விநாடியில் மிகமிகச்சிறிய பகுதியாகும். மூன்று அறிவியலாளர்களின் ஆய்வால் அட்டோசெகன்ட் பொழுதில் எலக்ட்ரான்களில் ஏற்படும் மாற்றத்தை மிகத்துல்லியமாக கணக்கிட முடியும். இதன்மூலம் எலக்ட்ரான்களின் உலகத்தில் நுழைவதற்கான கதவு திறந்துள்ளது.

7. இந்திய வான்படையானது MiG-21 விமானங்களுக்கு மாற்றாக கீழ்காணும் எந்த விமானத்தை பயன்படுத்த உள்ளது?

அ. LCA Mark 1A 🗹

ஆ. LCA Mark-2

இ. SU-30 MKI

ஈ. HTT-40

  • இந்திய வான்படையானது (IAF) இரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட அனைத்து MiG-21 விமானங்களையும் 2025ஆம் ஆண்டளவில் LCA Mark 1A இரகத்துடன் மாற்றவுள்ளது. வரவிருக்கும் விமானப்படை தின கொண்டாட்டத்தை முன்னிட்டு வான்படைத்தளபதி VR சௌதாரி இதை அறிவித்தார். இந்திய வான்படை தனது 91ஆவது ஆண்டு விழாவை அக்.08 அன்று “IAF-airpower beyond boundaries” என்ற கருப்பொருளின் கீழ் கொண்டாடியது.

8. பழங்குடி இசுலாமிய சமூகங்களின் சமூகப் பொருளாதார மதிப்பீட்டை மேற்கொள்ளவுள்ள மாநிலம் எது?

அ. மேற்கு வங்காளம்

. அஸ்ஸாம் 🗹

இ. குஜராத்

ஈ. பீகார்

  • அஸ்ஸாம் அரசாங்கம் மாநிலத்திலுள்ள ஐந்து பழங்குடி இசுலாமிய சமூகங்களின் சமூக-பொருளாதார மதிப்பீட்டை மேற்கொள்வதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த மதிப்பீட்டின் முடிவுகள், அப்பழங்குடியின சிறுபான்மை குழுக்களின் விரிவான சமூக-அரசியல் மற்றும் கல்வித் தேவைகளை பூர்த்தி செய்வதற்குத் தேவையான முயற்சிகளை அரசாங்கத்திற்குத் தெரிவிக்கும்.

9. 2023இல், ‘IEA முக்கியமான கனிமங்கள் மற்றும் தூய ஆற்றல் உச்சிமாநாடு’ நடைபெறும் நகரம் எது?

அ. லண்டன்

ஆ. பாரிஸ் 🗹

இ. ரோம்

ஈ. வியன்னா

  • IEAஇன் முக்கியமான கனிமங்களின் சந்தை மதிப்பாய்வு-2023 சமீபத்தில் பாரிஸில் நடந்த IEA கிரிட்டிகல் மினரல் மற்றும் கிளீன் எனர்ஜி உச்சிமாநாட்டில் வெளியிடப்பட்டது. முக்கியமான கனிமங்களுக்கான சந்தை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது; கடந்த 5 ஆண்டுகளில் அளவு இரட்டிப்பாகி 2022இல் $320 பில்லியனை எட்டியுள்ளது.

10. காற்று மாசுபாட்டை நிவர்த்தி செய்ய சமீபத்தில் ‘பசுமை கட்டளை மையத்தை’ திறந்துள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. மகாராஷ்டிரா

ஆ. புது தில்லி 🗹

இ. குஜராத்

ஈ. பீகார்

  • பசுமை கட்டளை மையமானது தில்லி அரசால் சமீபத்தில் திறக்கப்பட்டது. குளிர்கால செயல்திட்டத்தை தொடர்ந்து கண்காணித்து செயல்படுத்துவதன்மூலம் தேசிய தலைநகரில் காற்று மாசுபாட்டை குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், 13 இடங்களில் தூசி மாசுபாட்டைத் தடுக்க 530 தண்ணீர் தெளிப்பான்களை அரசாங்கம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. மேலும் 385 குழுக்கள் வாகனங்களின் மாசு சான்றிதழ்களை சரிபார்த்து, அதிக வயதுடைய வாகனங்கள் சாலையின் செல்வதை தடுக்கும் பணியில் ஈடுபடும்.

11. ‘குவாண்டம் புள்ளிகளை’ உருவாக்கியதற்காக 2023ஆம் ஆண்டில் எந்தத் துறை அறிவியலாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது?

அ. இயற்பியல்

ஆ. வேதியியல் 🗹

இ. உடலியல்

ஈ. மேற்கூறிய எதுவும் இல்லை

  • குவாண்டம் புள்ளிகளைக் கண்டுபிடித்து உருவாக்கியமைக்காக Moungi G. Bawendi, Louis E. Brus மற்றும் Alexei I. Ekimov ஆகியோர் 2023ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றுள்ளனர். குவாண்டம் புள்ளிகளின் ஒளிரும் பண்புகள் QLED தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் கணினி மற்றும் தொலைக்காட்சித் திரைகளில் பயன்படுத்தப்படுகின்றன. QLEDஇல் Q என்ற எழுத்து குவாண்டம் புள்ளியைக் குறிக்கிறது.

12. ‘வேலி குயின்’ என்பது எந்த மாநிலத்தின் முதல் பாரம்பரிய இரயிலாகும்?

அ. தமிழ்நாடு

ஆ. கோவா

இ. இராஜஸ்தான் 🗹

ஈ. பீகார்

  • ராஜஸ்தானின் முதல் பாரம்பரிய இரயிலான ‘வேலி குயின்’ பாரம்பரிய இரயிலை பிரதமர் நரேந்திர மோதி தொடக்கி வைத்தார். 150 ஆண்டுகளாக இருக்கும் நீராவி எஞ்சின் வடிவமைப்பை ஒத்துள்ள இந்த பாரம்பரிய இரயில் ஒரு பாரம்பரிய அனுபவத்தை வழங்குகிறது. இந்த இரயில் இந்தியாவில் இருக்கும் இதுபோன்ற ஆறாவது இரயிலாகும்.

13. ‘UMMEED’ வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அமைச்சகம் எது?

அ. MSME அமைச்சகம்

ஆ. நிதி அமைச்சகம்

இ. கல்வி அமைச்சகம் 🗹

ஈ. சிறுபான்மை விவகார அமைச்சகம்

  • மத்திய கல்வி அமைச்சகமானது Understand, Motivate, Manage, Empathise, Empower, Develop (UMMEED) எனப்படும் வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. நலக்குழுக்களை உருவாக்குதல், ஆசிரியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான பயிற்சி மற்றும் எச்சரிக்கை அறிகுறிகளைக் காண்பிக்கும் மாணவர்களுக்கு உடனடி பதில்களைப் பரிந்துரைப்பதன்மூலம் தற்கொலைகளைத் தடுக்கும் நோக்கோடு அவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

14. JuMBOs (Jupiter Mass Binary Objects) ஐ கண்டுபிடித்த நாடு எது?

அ. இந்தியா

ஆ. எகிப்து

இ. அமெரிக்கா 🗹

ஈ. ஆஸ்திரேலியா

  • NASAஇன் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, JuMBOs (Jupiter Mass Binary Objects) எனப்படும் விண்வெளியில் வியாழன் அளவிலான பொருட்களைக் கண்டறிந்து ஒரு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பை செய்துள்ளது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஓரியன் நெபுலா குறித்த ஆய்வினை மேற்கொண்டிருந்தபோது அவை கண்டுபிடிக்கப்பட்டன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தன்னம்பிக்கைக்கான விருது.

மருத்துவத்துறைக்கான நோபல் விருது, COVID-19 கொள்ளை நோய்த்தொற்றுக்கான, ‘mRNA’ தடுப்பூசியை உருவாக்கிய பேராசிரியர் கேத்தலின் கரிக்கோவுக்கும், அவருடன் இணைந்து ஆராய்ச்சி மேற்கொண்ட ட்ரூ வைஸ்மனுக்கும் இந்த ஆண்டு வழங்கப்பட்டிருக்கிறது.

இதுவரை நோபல் விருதுபெற்ற ஆண்கள் 894 பேர் என்றால், அவர்களில் பெண்கள் 62 பேர் மட்டுமே. மருத்துவத்துக்கான நோபல் விருது என்று எடுத்துக்கொண்டாலும், 225 பேரின் தேர்வில் கரிக்கோவையும் சேர்த்து 13 பேர்தான்.

மெசஞ்சர் ரிபோநியூக்ளிக் ஆசிட் எனப்படும் ‘mRNA’ மனித உடலில் புரத உருவாக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. அந்த ‘mRNA’ஐ எப்படி பயன்படுத்த முடியும்? என்பதுதான் கரிக்கோவின் ஆராய்ச்சி. 1980ஆம் ஆண்டில் ‘mRNA’ அடிப்படையில் தடுப்பூசி தயாரித்து, எதிர்வினைகள் ஏற்பட்டதால் கைவிடப்பட்டது. அப்படி இருந்தும் தளர்ந்துவிடாமல் தனது ஆய்வைத் தொடர்ந்தார் கரிக்கோ. இறுதியில் தடுப்பூசியை உருவாக்கினார்.

2. இந்தியா – தான்ஸானியா பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு

இரு நாடுகளிடையே எண்மமயமாக்கல், கலாசாரம், விளையாட்டு, கடல்சார் தொழில்கள், வர்த்தக கப்பல் பயண தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பிரிவுகளில் ஆறு ஒப்பந்தங்களும் கையொப்பமாகின. கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்ஸானியாவின் முதல் பெண் அதிபரான சாமியா சுலுஹு ஹசன், நான்கு நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்திருந்தபோது இந்த ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

3. தென்பெண்ணை ஆற்றுப்படுக்கையில் பழங்கால நாணயங்கள் கண்டெடுப்பு!

கடலூர் மாவட்டம், உளுந்தாம்பட்டு பகுதி தென்பெண்ணை ஆற்றுப்படுகையில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் 3 பழங்கால செப்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.

2 நாணயங்கள் இராஜராஜன் பெயர் பொறித்த சோழர் காலத்தைச் சேர்ந்தவை. மற்றொன்று விஜயநகர பேரரசு கால நாணயம். சோழர்கால நாணயங்களில் தேவநாகரி எழுத்துகளில் ‘ஸ்ரீராஜராஜ’ எனப் பொறிக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் மற்றொருபுறம் கையில் மலர் ஏந்தியவாறு ஒருவர் நிற்க, அவரது இடப்பக்கம் 4 வட்டங்கள் உள்ளன. அவற்றின் மேலே பிறையும் கீழே மலரும் உள்ளன. விஜயநகர பேரரசு கால நாணயத்தின் ஒருபுறம் தேவநாகரி எழுத்தில் ‘ஸ்ரீநீலகண்டா’ என்று பொறிக்கப்பட்டுள்ளது. மற்றொருபுறம் காளை உருவமும், பிறையும் உள்ளன.

4. சூரை மீன்பிடித் துறைமுகம் டிசம்பரில் திறக்கப்படும்.

திருவொற்றியூரில் கட்டமைக்கப்பட்டு வரும் சூரை ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகம் வரும் டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இதன் மொத்த மதிப்பீடு `210 கோடியாகும்.

தற்போது விவசாயிகளைப் போலவே மீனவர்களுக்கும் கிசான் கடன் அட்டை வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு மீனவர்கள் வாங்கும் கடனுக்கு 7.5 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும். கடனை குறித்த காலத்தில் திருப்பிச்செலுத்தும் நபர்களுக்கு 3 சதவீதம் ஊக்கத்தொகையாகத் திருப்பியளிக்கப்படும்.

5. சூரிய தகடுகள் பொருத்திய மரம்.

சென்னை பெரம்பூரில் செயல்பட்டுவரும் ஒருங்கிணைந்த இரயில்பெட்டித் தொழிற்சாலை (ICF) சுற்றுச்சூழலை மேம்பாடுத்தும் நோக்கத்தில் இயற்கை வளங்களை பயன்படுத்தி பசுமை மின்சக்தியை தயாரித்து வருகிறது. இந்திய இரயில்வேயின் முதல் ‘கார்பன் நெகடிவ்’ தகுதி பெற்ற தொழிற்சாலை என்ற சான்றிதழை பெற்றதுடன் சமீபத்தில் மத்திய மின்சக்தி மேம்பாட்டு அமைப்பின்சிறந்த மின்சக்தி சேமிப்புக்கு ‘சூண்யா பிளஸ்’ சான்றிதழையும் பெற்றுள்ளது. ICF காற்றாலைகள், சூரிய தகடுகள்மூலம் ஓராண்டிற்கு 2.22 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரித்த போதிலும் அதில் 1.89 மில்லியன் யூனிட் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் பெரம்பூரில் உள்ள ICF இந்திய இரயில்வேயின் முதல் நேர்மறை மின்சக்தி பயன்பாட்டு தொழிற்சாலையாக மாறியுள்ளது.

இதனை நினைவுகூரும் வகையில் ICF அலுவலக வளாகத்தில் ‘IICF’ என்ற வாசகங்கள் போன்று வடிவமைக்கப்பட்ட சூரிய தகடுகள் பொருத்திய சூரிய மரம் வைக்கப்பட்டுள்ளது.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!