TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 11th & 12th January 2024

1. அண்மையில் புவிசார் குறியீடுபெற்ற சிவப்பு எறும்புச் சட்னி சார்ந்த மாநிலம் எது?

அ. ஒடிஸா

ஆ. பீகார்

இ. கோவா

ஈ. ஜார்கண்ட்

  • ஒடிஸா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்சில் தயாரிக்கப்படும் சிவப்பு எறும்புச் சட்னிக்கு அண்மையில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. பதிவுசெய்வதற்கான விண்ணப்பத்தை, தி மயூர்பஞ்ச் காய் சங்கம், கடந்த 2020ஆம் ஆண்டில் 30ஆம் வகுப்பின்கீழ், பொருட்களுக்கான புவிசார் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 1999இன்படி சமர்ப்பித்தது. ‘காய்’ சட்னி என்றும் அழைக்கப்படும் இந்தத் தனித்துவமான சட்னியில் மதிப்புமிக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. புரதங்கள், கால்சியம், துத்தநாகம், வைட்டமின் பி-12, இரும்பு, மக்னீசியம், பொட்டாசியம், சோடியம், தாமிரம் மற்றும் அமினோ அமிலங்கள் நோயெதிர்ப்பு ஆற்றலின் மேம்பாட்டிற்கு பங்களிக்கின்றன.

2. 2024இல் UNESCOஇன் உலக பாரம்பரியக் குழுவின் 46ஆவது அமர்வை நடத்தவுள்ள நாடு எது?

அ. இங்கிலாந்து

ஆ. சீனா

இ. இந்தியா

ஈ. நேபாளம்

  • UNESCOஇன் உலக பாரம்பரியக் குழுவின் தலைமைப் பொறுப்பில் இந்தியா உள்ளது. அந்தக்குழுவின் 46ஆவது அமர்வை 2024 ஜூலை.21 முதல் 31 வரை புதுதில்லியில் இந்தியா நடத்தவுள்ளது. UNESCOஉக்கான இந்தியாவின் நிரந்தரப்பிரதிநிதி விஷால் வி ஷர்மா இம்முடிவை அறிவித்தார். 21 உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய உலக பாரம்பரியக் குழு, உலகளாவிய கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியத்தை அங்கீகரிக்க ஆண்டுதோறும் கூடுகிறது.

3. ஸ்கைட்ராக்ஸின் மதிப்புமிக்க விருதுகளின்படி, 2023ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ள விமான நிலையம் எது?

அ. சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம்

ஆ. கத்தாரின் ஹமாத் சர்வதேச விமான நிலையம்

இ. இன்சியான் சர்வதேச விமான நிலையம்

ஈ. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், புது தில்லி

  • வான்போக்குவரத்து ஆராய்ச்சி நிறுவனமான ஸ்கைட்ராக்ஸ் வழங்கிய மதிப்புமிக்க விருதுகளின்படி, சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் 2023ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த விமான நிலையம் என்ற பட்டத்தை மீண்டும் பெற்றுள்ளது. கடந்த ஈராண்டுகளில் கத்தாரின் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தை பின்னுக்குத் தள்ளி, சாங்கி விமானநிலையம் பன்னிரண்டாவது முறையாக முதலிடம் பிடித்தது.

4. பாதுகாப்பு ஆராய்ச்சி & மேம்பாட்டு அமைப்பால் (DRDO) அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட தாக்கு துப்பாக்கியின் பெயர் என்ன?

அ. அக்னி

ஆ. நிர்பய்

இ. உக்ரம்

ஈ. தேஜஸ்

  • பாதுகாப்பு ஆராய்ச்சி & மேம்பாட்டு அமைப்பு (DRDO) “உக்ரம்” என்ற தாக்கு துப்பாக்கியை அறிமுகப்படுத்தியுள்ளது. DRDO அங்கமாக இருந்துவரும் ARDE என அழைக்கப்படும் ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நூறு நாள்களுக்கு குறைவாக இந்தத் துப்பாக்கியை உருவாக்கியுள்ளன. ‘உக்ரம்’ என்றால் ‘கடுமையான’ என்று பொருள். ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல்துறையின் தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் துப்பாக்கி உள்ளது.

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சந்துபி திருவிழா கொண்டாடப்படுகிற மாநிலம் எது?

அ. அஸ்ஸாம்

ஆ. கோவா

இ. கேரளா

ஈ. மணிப்பூர்

  • ஆண்டுதோறும் ஐந்து நாள் கொண்டாப்படும் சந்துபி திருவிழா, அண்மையில் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள சந்துபி ஏரியில் நடந்தது. புத்தாண்டின் முதல் நாளில் தொடங்கும் இக்கலாசார களியாட்டம், வளமான உள்ளூர் நாட்டுப்புற கலாச்சாரம், பாரம்பரிய உணவு வகைகள், பாரம்பரிய கைத்தறி மற்றும் ஆடைகள் மற்றும் படகு சவாரிபோன்ற செயல்பாடுகளை காட்சிப்படுத்துகிறது. இந்தத் திருவிழா நீர்நிலைகளை பாதுகாப்பதில் பங்களிப்பது மட்டுமல்லாமல், உள்ளூர் உணவுப்பொருட்கள், வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்கள் மற்றும் பாரம்பரிய உடைகளை விற்கும் ரபாஸ், கரோஸ், கோர்க்கா மற்றும் டீ பழங்குடியினர் உள்ளிட்ட பல்வேறு பழங்குடியினருக்கு வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

6. அதிபர் இம்மானுவேல் மக்ரோனால் பிரான்சின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. ஸ்டெக்கா ஃபோர்டு

ஆ. கேப்ரியல் அட்டல்

இ. பிராங்கோயிஸ் ஹாலண்ட்

ஈ. நிக்கோலஸ் சார்கோசி

  • பிரான்ஸின் புதிய பிரதமராக கேப்ரியல் அட்டலை (34) அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் நியமித்துள்ளார். முன்னாள் பிரதமர் எலிசபெத் போர்ன் பதவி விலகியதை அடுத்து, கேப்ரியல் அட்டல் நியமிக்கப்பட்டுள்ளார். கேப்ரியல் அட்டல் முன்னர் பிரெஞ்சு அரசாங்கத்தில் கல்வித்துறைக்குப் பொறுப்பேற்றிருந்தார்.

7. இந்திய கடற்படையின் P-8I விமானம் குவாமில் நடந்த எந்த இராணுவப்பயிற்சியில் பங்கேற்றது?

அ. பயிற்சி – சீ டிராகன் 24

ஆ. ஆபரேஷன் பாலைவனப் புயல்

இ. பயிற்சி – சிவப்புக் கொடி

ஈ. ஆபரேஷன் நெப்டியூன் ஸ்பியர்

  • ‘சீ டிராகன்-24’ பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய கடற்படையின் P-8I விமானம் குவாமில் தரையிறங்கியது. இப்பயிற்சியானது அமெரிக்க கடற்படையின் தலைமையிலான நீர்மூழ்கி எதிர்ப்பு போர்ப்பயிற்சியாகும். தரையிலும் வானிலும் தொழிற்முறை தொடர்புகள்மூலம் பங்கேற்கும் கடற்படைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு மற்றும் இயங்குநிலையை மேம்படுத்துவது இந்தப் பயிற்சியின் குறிக்கோளாகும். இந்திய கடற்படையின் P-8I விமானம் என்பது ஒரு நீண்டதூர கடற்புற ரோந்து விமானமாகும்.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பிலிகிரி அரங்கசுவாமி திருக்கோவில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. மத்திய பிரதேசம்

இ. பீகார்

ஈ. கர்நாடகா

  • கர்நாடக மாநில வனத்துறையானது பிலிகிரி அரங்கன் மலையில் குறிப்பாக பிலிகிரி அரங்கசுவாமி திருக்கோவில் புலிகள் காப்பகம் வழியாகச் செல்லும் வாகனங்களை குறிவைத்து பசுமை வரி வசூல்செய்யத் தொடங்கியுள்ளது. கர்நாடகாவின் சாமராஜ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிலிகிரி அரங்கசுவாமி திருக்கோவில் புலிகள் காப்பகம், 1974ஆம் ஆண்டு வனவிலங்கு சரணாலயமாக நிறுவப்பட்டது. அரங்கசுவாமி என்று அழைக்கப்படும் விஷ்ணுவின் கோவிலைக் கொண்டிருக்கும், ‘பிலிகிரி’ என்று அழைக்கப்படும் வெண்பாறை குன்றின் காரணமாக அது அந்தப் பெயரைப் பெற்றது. 574.82 சகிமீ பரப்பளவுகொண்ட இது, கடந்த 2011ஆம் ஆண்டில் புலிகள் காப்பகமாக மாறியது.

9. அண்மையில் கடற்படைத் தளபதியால் அறிமுகப்படுத்தப்பட்ட உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆளில்லா வான்வழி வாகனத்தின் பெயரென்ன?

அ. திரிஷ்டி 10 ‘ஸ்டார்ஷிப்’

ஆ. திரிஷ்டி 10 ‘ஸ்கைராக்கெட்’

இ. திரிஷ்டி 10 ‘ஸ்டார்லைனர்’

ஈ. திரிஷ்டி 10 ‘ஸ்டெல்லர்’

  • அண்மையில் கடற்படைத் தளபதியால், ‘திரிஷ்டி 10 ‘ஸ்டார்லைனர்’’ என்ற உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆள் இல்லா வான்வழி வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதானி டிபென்ஸ் & ஏரோஸ்பேஸ் நிறுவனத்தால் உருவாக்கம் செய்யப்பட்ட இந்த மேம்பட்ட நுண்ணறிவு, கண்காணிப்பு மற்றும் உளவு அறிவு உடைய ஆளில்லா வான்வழி வாகனத்தால் 36 மணிநேர இயங்க முடியும் மற்றும் 450 கிகி எடையைச் சுமந்து செல்லும்.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற INS கப்ரா, கீழ்காணும் எந்த வகையான கடற்படைக் கப்பலாகும்?

அ. விமானந்தாங்கிக் கப்பல்

ஆ. நீர்மூழ்கிக்கப்பல்

இ. கடற்புற ரோந்துக்கப்பல்

ஈ. அழிப்பான்

  • இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியின் ஒருபகுதியாக, கார் நிக்கோபார் வகுப்பின் விரைவுத் தாக்குதல் கப்பலான INS கப்ரா அண்மையில் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கூட்டத்தில் உள்ள ஒரு தீவின் பெயரால் அழைக்கப்படும் INS கப்ரா, இந்திய கடற்படைக்காக கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் மற்றும் பொறியாளர்களால் (GRSE) கட்டப்பட்ட அதிவேக கடல் ரோந்துக் கப்பல்களில் ஒன்றாகும். 10 விரைவுத் தாக்குதல் கப்பல்களின் வரிசையில் எட்டாவது கப்பலான இது, இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் செலவு குறைந்த ரோந்து, கடற்கொள்ளையர் எதிர்ப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

11. அண்மையில் மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட ISRO மற்றும் மொரிஷியஸ் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு கவுன்சில் (MRIC) ஆகியவற்றை உள்ளடக்கிய விண்வெளி ஒத்துழைப்பு தொடர்பானது எது?

அ. கூட்டு ஆராய்ச்சி வசதியை நிறுவுதல்

ஆ. செவ்வாய்க் கோளுக்கு மனிதர்களை அனுப்புதல்

இ. சிறிய செயற்கைக்கோளை கூட்டாக உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஈ. சர்வதேச விண்வெளி முகமையை உருவாக்குதல்

  • ISRO மற்றும் மொரிஷியஸ் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு கவுன்சில் (MRIC) ஆகியவற்றை உள்ளடக்கிய சிறிய செயற்கைக்கோளை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. கூட்டு செயற்கைக்கோளை உருவாக்குவதில் ISRO மற்றும் MRIC இடையே ஒத்துழைப்புக்கான கட்டமைப்பையும், MRICஇன் தரைநிலையத்தைப் பயன்படுத்துவதற்கான ஒத்துழைப்பையும், உருவாக்க இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும்.

12. இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமான நிகழ்வான விங்ஸ் இந்தியா-2024 நடைபெறும் இடம் எது?

அ. பேகம்பேட்டை விமான நிலையம், ஹைதராபாத்

ஆ. வாரங்கல் விமான நிலையம், ஹைதராபாத்

இ. இராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம், ஹைதராபாத்

ஈ. ஸ்ரீ சத்ய சாய் விமான நிலையம், ஆந்திர பிரதேசம்

  • இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமான நிகழ்வான விங்ஸ் இந்தியா-2024 ஆனது ஹைதராபாத் பேகம்பேட் விமான நிலையத்தில் 2024 ஜனவரி.18-21 வரை நடைபெறவுள்ளது. ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்வானது சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இந்திய வர்த்தகச்சங்கங்கள் மற்றும் இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்படுகிறது.

13. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற XRISM செயற்கைக்கோள் திட்டத்தின் முதன்மை நோக்கம் யாது?

அ. வெள்ளியின் மேகங்களை ஆராய்வது

ஆ. பூமியின் மேற்பரப்பை வரைபடமாக்குதல்

இ. X–கதிர் அண்டவெளியை கூர்நோக்குதல்

ஈ. காலநிலை மாற்றத்தைக் கண்காணித்தல்

  • ஜப்பானின் JAXA தலைமையிலானதும் NASA மற்றும் ESA ஆகியவற்றுடன் இணைந்த கூட்டு முயற்சியுமான XRISM (X-ray Imaging and Spectroscopy Mission) செயற்கைக்கோள் திட்டமானது X–கதிர் அண்டவெளியை கூர் நோக்கி ஆய்வுசெய்வதை முதன்மையாக நோக்கமாகக் கொண்டுள்ளது. 2023 செப்டம்பர்.06இல் ஏவப்பட்ட XRISM செயற்கைக்கோளின் நோக்கம் பிரபஞ்சத்தின் வெப்பமான பகுதிகள், மிகப்பெரிய கட்டமைப்புகள் மற்றும் வலுவான ஈர்ப்பு விசையுடன்கூடிய பொருட்களை ஆராய்வதாகும். 12,000 எலக்ட்ரான் வோல்ட் (V) வரை ஆற்றல்கொண்ட X-கதிர்களைக் கண்டறியும் திறன்கொண்ட மேம்பட்ட தொழில்நுட்பம் உடையது இது. இச்செயற்கைக்கோள் இரண்டு குறிப்பிடத்தக்க கருவிகளைக் கொண்டுள்ளது. அவை, RESOLVE மற்றும் XTEND ஆகும். இவையிரண்டும் பேரண்டத்தின் ஆய்வுக்கு தனித்துவமாக பங்களிக்கின்றன.

14. அண்மையில் குதிரையேற்ற விளையாட்டுக்காக அர்ஜுனா விருதைப் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி யார்?

அ. P V சிந்து

ஆ. மேரி கோம்

இ. சாய்னா நேவால்

ஈ. திவ்யகிருதி சிங்

  • ஜெய்ப்பூரைச் சேர்ந்த திவ்யகிருதி சிங் (23), குதிரையேற்ற விளையாட்டுக்காக அர்ஜுனா விருதைப் பெற்ற முதல் இந்தியப்பெண்மணி ஆnaaர். இந்த ஆண்டு இராஜஸ்தானில் இருந்து இவ்விருதைப் பெரும் ஒரே நபரான திவ்ய கிருதி சிங், ஜெர்மனியில் ஹேகனில் உள்ள ஹாஃப் காசல்மேன் டிரஸ்ஸேஜ் யார்டில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவராவார். சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த சர்வதேச குதிரையேற்றப் போட்டியில் அவர் ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்.

15. 2024 ஜன.10-18 வரை, ‘ஸ்டார்ட்அப் இந்தியா இன்னோவேஷன் வீக்-2024’ஐ நடத்தவுள்ள துறை எது?

அ. உணவு மற்றும் பொது வழங்கல் துறை

ஆ. தொழிற்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை

இ. நிதி சேவைகள் துறை

ஈ. கனரக தொழிற்துறை

  • நாட்டின் புத்தொழில் நிறுவனங்கள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்போர் & சம்பந்தப்பட்ட பிறதரப்பினரை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன், வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தொழிற்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை இந்திய புத்தொழில் சூழல் மற்றும் தேசிய புத்தொழில் தினத்தை 2024 ஜனவரி.16 அன்று கொண்டாடுகிறது. இதையொட்டி 2024 ஜனவரி 10 முதல் 18 வரை புத்தொழில் இந்தியா புதுமைக்கண்டுபிடிப்பு வாரம்-2024 என்ற ஒரு வார தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

16. ‘SVAMITVA’ திட்டத்தின்மூலம் நில நிர்வாக அமைப்புகளை டிஜிட்டல்மயமாகும் முயற்சிகளுக்கான செயல் விளக்கத்திற்காக, மதிப்புமிக்க முதற்பரிசை வென்ற மத்திய அமைச்சகம் எது?

அ. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

ஆ. நிதி அமைச்சகம்

இ. வெளியுறவு அமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம்

  • 2024 ஜன.03-05 வரை ஹைதராபாத்தில் நடந்த வருடாந்திர மூன்று நாள், “பொதுக்கொள்கை உரையாடல்கள்” மாநாட்டில், “SVAMITVA திட்டத்தின்மூலம் நில நிர்வாகத்தில் எண்ணிமமயமாக்கும் (digitization) முன்முயற்சிகள்” என்ற செயல்விளக்கத்திற்காக பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்திற்கு மதிப்புமிக்க முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அதி நவீன டிரோன் கணக்கெடுப்பு மற்றும் புவியியல் தகவலமைப்பு வரைபட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இத்திட்டம் நிலப்பகுதிகளை துல்லியமாக வரையறுப்பதை உறுதிசெய்கிறது. இதன்மூலம் சர்ச்சைகளைத் தடுக்கிறது. தனிநபர்களுக்கு உரிமைப்பதிவுகளை அதாவது SVAMITVA சொத்து அட்டைகளை இது வழங்குகிறது.

17. எந்த இரு நாட்டு அறிவியலாளர்கள், இந்தியாவின் 43ஆவது அண்டார்டிக் பயணத்தில் இணைந்துள்ளனர்?

அ. சிங்கப்பூர் மற்றும் மொரிஷியஸ்

ஆ. வங்கதேசம் மற்றும் பூட்டான்

இ. மொரீஷியஸ் மற்றும் வங்கதேசம்

ஈ. நேபாளம் மற்றும் மியான்மர்

  • துருவ & பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தின் தலைமையிலான இந்தியாவின் 43ஆவது அண்டார்டிக் அறிவியல் பயணத்தில், மொரீஷியஸ் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் இணைந்துள்ளனர். இது துருவ ஆராய்ச்சிக்கான உலகளாவிய ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இந்த ஒத்துழைப்பு, கடந்த 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் போது உருவானது.

18. 2024 – ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?

அ. 83ஆவது

ஆ. 80ஆவது

இ. 82ஆவது

ஈ. 90ஆவது

  • 2024-ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின்படி, இந்தியா 199 நாடுகளில் 80ஆவது இடத்தில் உள்ளது. 2023இல் இந்தியா 83ஆவது தரநிலையில் இருந்தது. ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு நாடுகளின் கடவுச்சீட்டுக்கு விசா இல்லாத நுழைவை அனுமதிக்கும் இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாடுகளை வரிசைப்படுத்துகிறது. இந்திய கடவுச்சீட்டு தாய்லாந்து, இந்தோனேசியா, மொரிஷியஸ், இலங்கை மற்றும் மாலத்தீவுகள் உட்பட 62 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்ல அனுமதிக்கிறது. 2024ஆம் ஆண்டில் உலகின் மிகவும் ஆற்றல்வாய்ந்த கடவுச்சீட்டாக ஜப்பான், சிங்கப்பூர், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி மற்றும் ஸ்பானிய நாடுகளின் கடவுச்சீட்டுக்கள் உள்ளன. இந்த நாடுகளின் குடிமக்கள் 194 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

19. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, Polygonum Chaturbhujanum’ சார்ந்த இனம் எது?

அ. இருவாழ்விகள்

ஆ. தாவரங்கள்

இ. பூஞ்சை

ஈ. விலங்குகள்

  • மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பெஞ்ச் புலிகள் காப்பகத்தில் உள்ள கோல் பஹாடி தீவில் நடத்தப்பட்ட அண்மைய கணக்கெடுப்பில், ‘Polygonum’ இனத்தைச் சேர்ந்த ஒரு புதிய தாவர இனம் கண்டுபிடிக்கப்பட்டது. ‘Polygonum Chaturbhujanum’ என்று பெயரிடப்பட்ட இந்த மூலிகைத் தாவரம் இப்பகுதியின் பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்கிறது. கூடுதலாக, பெஞ்ச் புலிகள் காப்பகத்தில் இந்தியாவில் உள்ள ஆறு மிகவும் அருகி வரும் தாவர இனங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது. அவை Aegineta indica, Boerhavia crispa, Habenaria gibsonii, Iphigenia pallida, Petalidium barlerioides மற்றும் Barleria gibsonii ஆகும்.

20. புதிய வானியல் செயற்கைக்கோளான ஐன்ஸ்டீன் புரோபை ஏவிய நாடு எது?

அ. சீனா

ஆ. இந்தியா

இ. ரஷ்யா

ஈ. இங்கிலாந்து

  • சீன அறிவியல் அகாதெமி உருவாக்கிய வானியல் செயற்கைக்கோளான ஐன்ஸ்டீன் புரோப் (EP) அண்மையில் ஏவப்பட்டது. 2024 ஜனவரி.09 அன்று சிச்சாங் (Xichang) செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து, “லாங் மார்ச்-2C” ஏவுகலத்தைப் பயன்படுத்தி அந்தச் செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது. EP ஆனது பேரண்டத்தில் உள்ள மர்மமான நிலையற்ற நிகழ்வுகளைக் கூர்நோக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேம்பட்ட எக்ஸ்-கதிர் வில்லைகள் மற்றும் உணரிகள் பொருத்தப்பட்ட EP ஆனது நிலையற்ற மற்றும் மாறக்கூடிய X-கதிர் வெளியை ஆராய்வதில் கவனம் செலுத்துகிறது.

21. பாரம்பரிய நாட்டுப்புற நடன வடிவமான, ‘யக்ஷகானா’ சார்ந்த மாநிலம் எது?

அ. ஆந்திர பிரதேசம்

ஆ. கர்நாடகா

இ. கேரளா

ஈ. பீகார்

  • தட்சிண கன்னடத்தில் கடீல் ஸ்ரீ துர்காபரமேஸ்வரி யக்ஷகானா தஷாவதார மண்டலி அல்லது கடீல் மேளா என அழைக்கப்படும் நூற்றாண்டு பழமையான யக்ஷகானா மேளா, கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தின் ஒப்புதலைத் தொடர்ந்து இரவுமுழுவதும் நிகழ்வுகளை மீண்டும் நடக்கவுள்ளது. 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தொடங்கிய இந்தப் புகழ்பெற்ற யக்ஷகானா குழு, யக்ஷகானா நிகழ்ச்சிகளை நடத்துவதன்மூலம் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றும், ‘ஹரகே சேவை’யில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. ‘யக்ஷகானா’ என்பது கடலோர கர்நாடக மாநிலங்களில் நிகழ்த்தப்படும் ஒரு பாரம்பரிய நாட்டுப்புற நடன வடிவமாகும்.

22. நாடு முழுவதும் மீன் நோய்களைக் கண்காணிப்பதற்காக, நீர்வாழ் உயிரிகளுக்கான தேசிய கண்காணிப்புத் திட்டத்தால் (NSPAAD) உருவாக்கப்பட்ட மொபைல் செயலியின் பெயர் என்ன?

அ. Report Fish Disease

ஆ. Disease Alert

இ. FishCare

ஈ. AquaTracker

  • நீர்வாழ் உயிரிகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தேசிய கண்காணிப்புத்திட்டம் (NSPAAD) நாடு முழுவதுமுள்ள மீன் நோய்களை திறம்பட கண்காணிப்பதற்காக, ‘Report Fish Disease’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம்போன்ற கூட்டாளர்களுடன் இணைந்து முன்னணி நிறுவனமான ICAR-NBFGRஇன்கீழ் உருவாக்கப்பட்ட இந்தச் செயலி, மீன் விவசாயிகளுக்கு அவர்களின் பண்ணைகளில் நோய்களைப் புகாரளிப்பதற்கான ஒரு தளத்தை வழங்குவதன்மூலம் அவர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

23. இந்தியாவின் எந்தப்பகுதியில், “இ-கவர்னன்ஸ்” என்ற கருப்பொருளில் பிராந்திய மாநாடு தொடங்கப்படுகிறது?

அ. கட்ச்

ஆ. கௌகாத்தி

இ. ஜெய்ப்பூர்

ஈ. பம்பாய்

  • அஸ்ஸாம் மாநில அரசுடன் இணைந்து நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறைதீர் துறை ஏற்பாடு செய்த, “மின்-ஆளுகை” என்ற தலைப்பிலான இரண்டு நாள் பிராந்திய மாநாடு கௌகாத்தியில் தொடங்கியது. அஸ்ஸாம் மாநில ஆளுநர், ஸ்ரீ குலாப் சந்த் கட்டாரியா மற்றும் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆகியோர் இதன் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

24. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஸ்ரீமந்திர் பரிக்கிரமா திட்டமானது கீழ்காணும் எந்தத் திருக்கோவிலின் நிர்வாகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது?

அ. பூரி ஜகந்நாதர் கோவில்

ஆ. மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

இ. காசி விஸ்வநாதர் கோவில்

ஈ. பத்மநாபசுவாமி கோவில்

  • ஒடிஸா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஜனவரி.17 அன்று ஸ்ரீமந்திர் பரிக்ரமா திட்டத்தின் ஒருபகுதியான பூரி ஜகந்நாதர் பாரம்பரிய வழித்தடத்தை திறந்துவைக்கவுள்ளார். இத்திட்டம் பூரி ஜகந்நாதர் கோவிலைச்சுற்றி வசதிகள் அனைத்தையும் மேம்படுத்துவதில் கவனஞ்செலுத்துகிறது. ஜகந்நாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தத் திருக்கோவில், ஒடிஸாவில் உள்ள ஒரு வரலாற்று இந்து புனித யாத்திரைத் தளமாகும்.

25. இந்தியக் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு அவர்களின் கைகளால் அர்ஜுனா விருது பெற்ற இந்திய பந்து வீச்சாளர் யார்?

அ. முகமது ஷமி

ஆ. ஜஸ்பிரித் பும்ரா

இ. அர்ஷ்தீப் சிங்

ஈ. தீபக் சாஹர்

  • இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு, தில்லியில் உள்ள குடியரசுத்தலையவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அர்ஜுனா விருது வழங்கி கௌரவித்தார். தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது உயரிய விளையாட்டு விருது, ‘அர்ஜுனா விருது’ ஆகும். 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் ஷமியின் சிறப்பான ஆட்டத்தை அடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) முகமது ஷமியின் பெயரை விருதுக்குப் பரிந்துரை செய்தது.

26. சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் தேசிய இளையோர் நாள் (National Youth Day) கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. ஜனவரி.12

ஆ. ஜனவரி.09

இ. ஜனவரி.13

ஈ. ஜனவரி.05

  • சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் ஜன.12 அன்று தேசிய இளைஞர் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இளம் மனங்களின் துடிப்பான ஆற்றலையும் திறனையும் கொண்டாடுகிறது. விவேகானந்தரின் பிறந்தநாளை நினைவுகூரும் இந்த நாள், எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் பங்கை வலியுறுத்துகிறது. இது உத்வேகம், அதிகாரமளித்தல் மற்றும் நேர்மறையான மாற்றம் மற்றும் புதுமைகளை வளர்ப்பதற்கு ஓர் ஊக்கியாக செயல்படுகிறது. நடப்பு 2024ஆம் ஆண்டில் தேசிய இளையோர் நாள் அபிலாஷைகள் மற்றும் கனவுகளின் கொண்டாட்டத்தைக் குறிக்கிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. முதல் உள்நாட்டு உயர்திறன் டிரோன் கடற்படையிடம் ஒப்படைப்பு.

நடுத்த உயரத்தில் நீண்டநேரம் செயல்படக் கூடிய முதல் உள்நாட்டு ஆளில்லா விமானமான, ‘திருஷ்டி 10’ இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. அனைத்துப் பருவகாலங்களிலும் செயல்படும் திறன்கொண்ட இந்த டிரோனை, அதானி டிஃபன்ஸ் & ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. தொடர்ச்சியாக 36 மணி நேரம் செயல்படும் இந்த டிரோன், 450 கிலோ எடையைச் சுமந்துசெல்லும் திறனுடையது.

2. சரிவைக்கண்ட சர்க்கரை உற்பத்தி!

நடப்பு 2023-24 சர்க்கரைப் பருவத்தில் நாட்டின் மொத்த சர்க்கரை உற்பத்தி 30.5 கோடி டன்னாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முந்தைய 2022-23 சர்க்கரைப் பருவத்தில் ஒட்டுமொத்த சர்க்கரை உற்பத்தி 33.09 கோடி டன்னாக இருந்தது. நாட்டில் அதிக அளவில் சர்க்கரை உற்பத்தி செய்யும் முதல் மூன்று மாநிலங்களில் மகாராஷ்டிரத்திலும், கர்நாடகாத்திலும் நடப்பு சர்க்கரைப் பருவத்தின் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் உற்பத்தி குறைவாகவே இருந்தது.

3. விண்வெளி ஆய்வைத் தொடங்கியது, ‘XPoSat’ செயற்கைக்கோள்!

விண்மீன் வெடிப்பில் வெளியாகும் பேரொளியை இந்தியாவின், ‘XPoSat’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஆய்வு செய்துள்ளதாக ISRO தெரிவித்துள்ளது. கருந்துளை, ஊடுகதிர் தன்மைகள், நியூட்ரான் விண்மீன்கள் உள்ளிட்ட விண்வெளி நிகழ்வுகளை ஆய்வுசெய்வதற்காக, ‘XPoSat’ என்னும் செயற்கைக்கோளை PSLV C-58 ஏவுகலம் மூலம் கடந்த 1ஆம் தேதி விண்ணில் செலுத்தியது ISRO.

பூமியிலிருந்து சுமார் 650 கிமீ தொலைவுகொண்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட, ‘XPoSat’ செயற்கைக் கோள்மூலம் காசியோபியா-ஏ என்ற விண்மீன் வெடிப்பின் (சூப்பர் நோவா) துகள்களில் இருந்து வெளிப்படும் ஒளியானது படம்பிடிக்கப்பட்டுள்ளதாக ISRO அறிவித்துள்ளது.

‘XPoSat’ மொத்தம் 469 கிகி எடைகொண்டது. இதில் XSPECT (X-ரே ஸ்பெக்ட்ரோகிராபி), POLIX (எக்ஸ்ரே போலரி மீட்டர்) ஆகிய இரண்டு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றை முறையே பெங்களூரில் உள்ள U R இராவ் செயற்கைக்கோள் மையமும், ராமன் ஆராய்ச்சி நிறுவனமும் உருவாக்கியுள்ளன. POLIX கருவி விண்வெளியில் உள்ள கருந்துளை, நியூட்ரான் விண்மீன்களில் இருந்து வெளியேறும் ஊடு கதிர்களின் (X-ரே) துருவ முனைப்பு அளவு, கோணத்தை அளவிடுதல், விண்மீன் வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் நிலைகுறித்து ஆராயும். அதேபோன்று, XSPECT சாதனம் எக்ஸ் கதிர்களின் நீண்டகால செயல்பாடுகளை புரிந்துகொள்ளும் வகையில் அதன் நிறமாலை மற்றும் துருவப்படுத்தல் செயல்பாடுகளை கண்காணிக்கும்.

4. நாட்டின் தூய்மை நகரம் இந்தூர்: தொடர்ந்து 7ஆவது ஆண்டாகத் தேர்வு.

நாட்டின் தூய்மையான நகரமாக தொடர்ந்து 7ஆவது ஆண்டாக மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்தூருடன் சூரத் முதலிடத்திலும் நவி மும்பை 3ஆவது இடத்திலும் உள்ளன. நாட்டின் 4,447 நகர உள்ளாட்சி அமைப்புகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 12 கோடி மக்களிடம் ஆய்வுநடத்தப்பட்டது.

ஆந்திரத்தில் விசாகப்பட்டினம் 4ஆவது இடத்தில் உள்ளது. 1 இலட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகைகொண்ட தூய்மை நகரங்களில், மகாராஷ்டிரத்தின் சாஸ்வத், முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் சத்தீஸ்கரின் பதான், மகராஷ்டிரத்தின் லோனாவாலா 3ஆம் இடத்தில் உள்ளன. கங்கைக்கரையோர தூய்மை நகரங்களில் வாரணாசி முதலிடத்திலும், பிரயாக்ராஜ் 2ஆம் இடத்திலும் உள்ளன. தூய்மையான கன்டோன்மென்ட் வாரியமாக மத்திய பிரதேசத்தின் மோவ் கன்டோன்மென்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

தூய்மைசார்ந்து சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரம் முதலிடத்திலும், மத்திய பிரதேசம் 2ஆம் இடத்திலும் சத்தீஸ்கர் 3ஆவது இடத்திலும் உள்ளன.

5. எண்ம முறையில் பயிர் அளவீட்டுப் பணி விரைவில் தொடக்கம்: தமிழ்நாடு அரசு.

எண்ம அடிப்படையிலான பயிர் அளவீட்டுப்பணி விரைவில் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. விவசாயிகளுக்கான பயிர்க்காப்பீடுபோன்ற திட்டங்கள் தகுதியான பயனாளிகளைச் சென்றடையும் வகையில் சாகுபடி பரப்புகளை எண்ம அடிப்படையில் அளவிட தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது.

6. கடலோர வளங்களை மீட்டெடுக்க, ‘நெய்தல் மீட்சி இயக்கம்’: தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

கடலோர வளங்களை மீட்டெடுத்து பாதுகாக்க, ‘நெய்தல் மீட்சி இயக்கம்’ தமிழ்நாடு அரசு சார்பில் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநில இயக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து, அரசின் நான்காவது திட்டமான தமிழ்நாட்டின் கடலோர வளங்களை மீட்பதற்காக நெய்தல் மீட்சி இயக்கம் தொடங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டின் பதினான்கு கடலோர மாவட்டங்களில், 1,076 கிமீ தூரத்தை மையமாகக்கொண்டு, அடுத்துவரும் 5 ஆண்டுகளில் உலக வங்கியின் நிதி உதவியுடன், ‘நெய்தல் மீட்சி இயக்கம்’ செயல்படுத்தப்படவுள்ளது.

இதில் கடற்கரையோர சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கம் மற்றும் கடலோரப்பகுதிகளில் மாசுக்கட்டுப்பாடு உள்ளிட்ட நான்கு முக்கிய கருப்பொருள்களை இத்திட்டம் கொண்டுள்ளது. மேலும், இந்தத் திட்டத்தின்கீழ் செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் பல்லுயிர் பாதுகாப்பு பூங்கா, நாகப்பட்டினம் மற்றும் சென்னையில் கடலாமை பாதுகாப்பு மையம், தஞ்சாவூர் மாவட்டம் மனோராவில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம், பள்ளிக்கரணை உள்ளிட்ட கடற்கரையோர ஈரநிலங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த முயற்சிகளால் கடற்கரையோர பல்லுயிர் பாதுகாப்புக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 11 கடற்கரைகளை நீலக்கொடி கடற்கரைகள் என சான்றளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டத்தின்கீழ் மறுசுழற்சி செய்து பொருள்களை மீண்டும் பயன்படுத்துதல், நெகிழிக்கழிவுமேலாண்மை, சுற்றுச் சூழலுக்கு உகந்த உட்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் செயல்படுத்தப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!