TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 11th March 2024

1. UDGAM இணையதளத்தை உருவாக்கிய நிறுவனம் எது?

அ. RBI

ஆ. NABARD

இ. SIDBI

ஈ. SBI

  • இந்திய ரிசர்வ் வங்கி (RBI) UDGAM இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. முப்பது வங்கிகளில் கோரப்படாத வைப்புகளைத் தேடுவதற்கு பயனர்கள் இது உதவுகிறது. இது 90% வைப்பாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி வைப்புத்தொகையை உள்ளடக்கியது. UDGAM, அதாவது Unclaimed Deposits-Gateway to Access inforMation என்பது தனிநபர் மற்றும் தனிநபர் அல்லாத வகைகளுக்கு தேடல்களை அனுமதிக்கிறது. பயனர்கள் கணக்கு வைத்திருப்பவரின் பெயர், வங்கிப்பெயர் மற்றும் தேடலுக்குத் தொடர்புடைய அடையாளம் போன்ற குறிப்பிட்ட விவரங்களை வழங்குவதன் மூலம் தேடல்களை மேற்கொள்ளலாம். ரிசர்வ் வங்கியின் வைப்பாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி வைப்புத்தொகையில் கோரப்படாத வைப்புகள்குறித்த வெளிப்படைத்தன்மை & விழிப்புணர்வை மேம்படுத்துவதை இந்த முன்னெடுப்பு தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

2. அண்மையில், இந்தியாவின் முதல் அரசாங்க ஆதரவுபெற்ற OTT தளத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. பஞ்சாப்

ஈ. மத்திய பிரதேசம்

  • கேரள மாநில அரசு கைராலி திரையரங்கில் வைத்து தனது முதல் அரசாங்க ஆதரவிலான OTT தளமான CSpaceஐ அறிமுகப்படுத்தியது. இத்தளமானது தகவல் மற்றும் பொழுதுபோக்கு உள்ளடக்கத்தின் தனித்துவமான கலவையை வழங்குகிறது. ‘Cspace’ ஆனது ஒரு பார்வைக்கு ஒரு கட்டணம் என்ற மாதிரியில் செயல்படுகிறது. பயனர்கள் முழு நீளத்திரைப்படத்தை `75க்கு வாங்கிப்பார்க்கலாம். ஒருமுறை வாங்கியபின், பார்வையாளர்கள் அவ்வுள்ளடக்கத்தை பார்க்காமல் விட்டால் மூன்று மாதங்கள் வரை அவ்வுள்ளடக்கத்தை எப்போது வேண்டுமானாலும் அணுகிப் பார்த்துக் கொள்ளலாம். ஒருமுறை பார்த்தவுடன், அவ்வுள்ளடக்கம் 72 மணிநேரத்திற்குள் காலாவதியாகிவிடும்.

3. முதல் 2024 – பாரத் கொதிநீராவிக்கலன் கண்காட்சி நடைபெற்ற இடம் எது?

அ. கௌகாத்தி, அஸ்ஸாம்

ஆ. வாரணாசி, உத்தர பிரதேசம்

இ. புனே, மகாராஷ்டிரா

ஈ. இந்தூர், மத்திய பிரதேசம்

  • 2024 – பாரத் கொதிநீராவிக்கலன் கண்காட்சியானது, இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தின் கௌகாத்தியில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி மைதானத்தில் 2024 மார்ச்.05-07 வரை நடைபெற்றது. இந்தக் கண்காட்சியானது அஸ்ஸாமின் கொதிகலன் ஆய்வாளர் அலுலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு அஸ்ஸாம் அரசாங்கத்தின் தொழிலாளர் நலத்துறையின் ஆதரவில் நடத்தப்பட்டது. இந்தக் கண்காட்சி கொதிநீராவிக்கலன்களைப் பயன்படுத்தும் பல்வேறு துறைகளின் செயல்திறன் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

4. ‘உலக வறுமைக் கடிகாரத்தின்’படி, இந்திய மக்கள்தொகையில் எத்தனை சதவீதத்தினர் தீவிர வறுமையில் உள்ளனர்?

அ. 3%

ஆ. 4%

இ. 5%

ஈ. 6%

  • ஐநாஇன் நீடித்த வளர்ச்சி இலக்குளுக்கு (SDGs) இணங்க, மக்கள்தொகையில் 3 சதவீதத்துக்கும் குறைவான மக்கள் மட்டுமே வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ளனர். IFAD மற்றும் ஜெர்மனியின் பொருளியல் கூட்டுறவு & வளர்ச்சிக்கான மத்திய அமைச்சகம் போன்ற அமைப்புகளின் ஆதரவில் தயாரிக்கப்படும் உலக வறுமைக் கடிகாரத்தின் அண்மைய தரவு, 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா தீவிர வறுமை நிலையை முடிவுக்குக் கொண்டுவரும் எனக் கணிக்கிறது.

5. 2024 – தேசிய இளையோர் நாடாளுமன்ற விழாவில் முதல் பரிசை வென்றவர் யார்?

அ. வைஷ்ணா பிச்சை

ஆ. யத்தின் பாஸ்கர் துக்கல்

இ. கனிஷ்கா சர்மா

ஈ. ஆஸ்தா சர்மா

  • அரியானாவைச் சேர்ந்த யதின் பாஸ்கர் துக்கல், 2024 – தேசிய இளையோர் நாடாளுமன்ற விழாவில் முதல் பரிசை வென்றார். தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷ்னா பிச்சை இரண்டாம் இடத்தையும், இராஜஸ்தானின் கனிஷ்கா சர்மா மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

6. சமீபத்தில், அணைகளுக்கான சர்வதேச சிறப்பு மையத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் ஜல் சக்தி அமைச்சகம் கீழ்காணும் எந்த நிறுவனத்துடன் கையெழுத்திட்டது?

அ. ஐஐடி கான்பூர்

ஆ. ஐஐஎம் அகமதாபாத்

இ. ஐஐஎஸ்சி பெங்களூரு

ஈ. ஐஐடி பம்பாய்

  • மத்திய நீர்வள ஆணையம், நீர்வளம், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கையாறு தூய்மைப்படுத்துதல் துறை, நீர்வள அமைச்சகம், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்துடன் அணைகளுக்கான சர்வதேச சிறப்பு மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டு, மூன்றாம் கட்டத்தின்கீழ், இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நாளிலிருந்து பத்து ஆண்டுகள் அல்லது அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டங்களின் காலம்வரை, இதில் எது முன்கூட்டியே நிறைவடைகிறதோ அதுவரை செல்லுபடியாகும்.

7. 2024 – உலக பெண்கள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Invest in Women: Accelerate Progress

ஆ. Gender equality today for a sustainable tomorrow

இ. DigitALL: Innovation and technology for gender equality

ஈ. Think equal, build smart, innovate for change

  • உலக பெண்கள் நாள் என்பது சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் அரசியல் துறைகளில் பெண்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் ஓர் உலகளாவிய நிகழ்வாகும். நடப்பு 2024ஆம் ஆண்டில் வரும் உலக பெண்கள் நாளுக்கானக்கருப்பொருள், “Invest in Women: Accelerate Progress” என்பதாகும். ஐநா அவையின் இக்கருப்பொருள் பாலின சமத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக உள்ளது.

8. அண்மையில், உலக பொருளாதார மன்றத்துடன் இணைந்து AI மையத்தை நிறுவிய மாநில அரசு எது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ. கேரளா

ஈ. மகாராஷ்டிரா

  • கர்நாடக மாநில அரசு உலக பொருளாதார மன்றத்துடன் இணைந்து ஓர் அதிநவீன AI மையத்தை நிறுவியது. இந்த உத்திசார் கூட்டணியானது கர்நாடக மாநிலத்தை செயற்கை நுண்ணறிவுக்கான (AI) உலகளாவிய மையமாக நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகளாவிய எண்ம (டிஜிட்டல்) மற்றும் தொழில்நுட்ப சூழலில் மாநிலத்தை ஒருங்கிணைக்கும் ஒரு முக்கியமான நகர்வாக இது பார்க்கப்படுகிறது.

9. தபால் வாக்குமூலம் வாக்களிக்க தகுதியுள்ள மூத்த குடிமக்களுக்கான புதிய குறைந்தபட்ச வயது என்ன?

அ. 83

ஆ. 85

இ. 87

ஈ. 90

  • இந்திய அரசானது இந்தியத் தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்து, மூத்த குடிமக்கள் தபால் வாக்குகளைச் செலுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை 80இலிருந்து 85ஆக உயர்த்தியுள்ளது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவின் வாக்காளர் எண்ணிக்கை 96.88 கோடியாக உள்ள நிலையில், 1.85 கோடி குடிமக்கள் 80 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். கடந்த 1961ஆம் ஆண்டு திருத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகளின்படி, முந்தைய 80 ஆண்டுகளுக்குப்பதிலாக 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் ஓட்டுப் பதிவு செய்யத் தகுதியான “மூத்த குடிமக்கள்” என வரையறுக்கப்பட்டுள்ளது.

10. CSIR-இந்திய பெட்ரோலிய நிறுவனமானது முதிர்ந்த பைன் இலைகளிலிருந்து எரிபொருளை உருவாக்கும் தொழினுட்பத்தை பயன்படுத்துவதற்காக எம்மாநிலத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?

அ. தமிழ்நாடு

ஆ. உத்தரகாண்ட்

இ. இராஜஸ்தான்

ஈ. குஜராத்

  • CSIR-இந்திய பெட்ரோலிய நிறுவனம் உத்தரகாண்ட் மாநில அறிவியல் & தொழில்நுட்பக் கவுன்சிலுடன் (UCOST) முதிர்ந்த பைன் இலைகள் அடிப்படையிலான எரிபொருள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை அம்மாநிலத்தின் சம்பாவத் மாவட்டத்தில் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. சம்பாவத்தில் முதிர்ந்த பைன் இலைகள் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு 50 கிலோகிராம் எரிகட்டி உற்பத்தித்திறன்கொண்ட ஓர் அலகை நிறுவுவதும் கிராமப்புற வீடுகளுக்கு 500 எண்ணிக்கையிலான மேம்படுத்தப்பட்ட சமையல் அடுப்புகளை வழங்குவதும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.

11. அண்மையில், 17ஆவது வருடாந்திர சர்வதேச உயிரியல் மாநாட்டை நடத்திய நாடு எது?

அ. மியான்மர்

ஆ. நேபாளம்

இ. இந்தியா

ஈ. வங்காளதேசம்

  • 17ஆவது வருடாந்திர சர்வதேச உயிரியல் மாநாடானது (AIBC-2024) இந்தியாவின் பரிதாபாத்தில் உள்ள உயிரித் தொழில்நுட்ப அறிவியல் தொகுப்பில் நடைபெறவுள்ளது. இந்திய உயிரியல் தரவு மையம் (IBDC) மற்றும் உயிரித் தொழில்நுட்பத்திற்கான பிராந்திய மையம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த இடம், மாநாட்டின்போது அறிவியல் விவாதங்கள் மற்றும் கூட்டாண்மைக்கான விரிவான தளத்தை வழங்குகிறது.

12. ஒவ்வோர் ஆண்டும், ‘ஜன ஔஷாதி’ நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. மார்ச்.06

ஆ. மார்ச்.07

இ. மார்ச்.08

ஈ. மார்ச்.09

  • ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.07ஆம் தேதி ஜன ஔஷாதி நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஜெனரிக் மெடிசின் நாள் என்றும் அழைக்கப்படுகிறது. ஜன ஔஷாதி நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம், ஜெனரிக் மருந்துகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிப்பதும், ஜெனரிக் மருந்துகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதும் ஆகும். ஜன ஔஷாதி நாளானது முதன் முதலில் 2019ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. இது அரசாங்கத்தின் திட்டமாகும். பொதுவான மருந்துகளை சாதாரண மக்களுக்கும் கிடைக்கச்செய்வதே இதன் நோக்கமாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தனியார் வடிவமைத்த ஏவுகணை: இம்மாத இறுதியில் ஏவத்திட்டம்.

தனியார் புத்தாக்க நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட அக்னிபான் ஏவுகணை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இந்த மாத இறுதிக்குள் ஏவப்படவுள்ளது. புவியின் துணைவட்டப் பாதையில் செலுத்தப்படவுள்ள இந்த ஏவுகணை, தனியார்மூலம் அனுப்பப்படும் நாட்டின் இரண்டாவது ஏவுகணை திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏவுகணை, செயற்கைக்கோள் மட்டுமல்லாது விண்வெளி ஆய்வுத்திட்டங்களுக்கான கட்டமைப்பு வசதிகளையும் தனியார் நிறுவனங்கள் மேற்கொள்வதற்கான சிறப்புத்திட்டமான, ‘INSPACE’ 2020இல் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!