TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 13th October 2023

1. ஐரோப்பாவின் முதல் முழுமையான தனியார் ஏவுகலமான ‘மியுரா-1’ஐ ஏவிய நாடு எது?

அ. இத்தாலி

ஆ. ஸ்பெயின் 🗹

இ. ஜெர்மனி

ஈ. நார்வே

  • ஸ்பெயினின் PLD ஸ்பேஸ் மியுரா-1 ஏவுகலத்தை வெற்றிகரமாக ஏவியது; இது ஐரோப்பாவின் முதல் முழுமையான தனியார் ஏவுகலமாகும். மியுரா-1 என்பது தென்மேற்கு ஸ்பெயினில் உள்ள ஒரு ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட திரும்பி பூமிக்கு வரும் திறன்படைத்த ஒரு ஏவுகலமாகும்.

2. உலோகம் நிறைந்த சிறுகோள் ‘16 சைக்’ பற்றி ஆய்வுசெய்ய விண்கலத்தை அனுப்பவுள்ள நாடு எது?

அ. இந்தியா

ஆ. அமெரிக்கா 🗹

இ. ரஷ்யா

ஈ. சீனா

  • ‘16 சைக்’ எனப் பெயரிடப்பட்டுள்ள சிறுகோள் குறித்து ஆய்வுசெய்வதற்காக ‘சைக்’ என்ற அதிநவீன விண்கலத்தை விண்ணில் செலுத்த NASA தயாராகி வருகிறது. இம்முயற்சியானது, உலோகம் நிறைந்த சிறுகோளை ஆய்வதோடு, நமது சூரிய குடும்பத்தில் பாறைப்பொருள்களின் உருவாக்கம் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கும்.

3. 2023 – ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப்பட்டியலில் இந்தியா பிடித்துள்ள இடம் என்ன?

அ. முதலாவது

ஆ. மூன்றாவது

இ. நான்காவது 🗹

ஈ. ஆறாவது

  • இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா முதன்முறையாக 100 பதக்கங்களைக் கடந்துள்ளது. இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி மற்றும் 41 வெண்கலப் பதக்கத்துடன் போட்டியை நிறைவு செய்தது. இந்தியா 107 பதக்கங்களுடன், பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. சீனா 201 தங்கப்பதக்கங்கள் உட்பட 383 பதக்கங்களுடன் முதலிடத்திலும், ஜப்பான் மற்றும் கொரியா முறையே 188 மற்றும் 190 பதக்கங்களைப் பெற்றன.

4. அக்.08 அன்று தனது 91ஆம் ஆண்டு விழாவில் தனது புதிய கொடியை வெளியிட்ட இந்திய ஆயுதப்படை எது?

அ. இந்திய இராணுவம்

ஆ. இந்திய கடற்படை

இ. இந்திய வான்படை 🗹

ஈ. இந்திய கடலோர காவல்படை

  • வான்படைத்தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி ஆர் சௌதாரி, படையின் 91ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், படைக்கான புதிய கொடியை வெளியிட்டார். அக்.08ஆம் தேதி வான்படை நாளாகவும் கொண்டாடப்படுகிறது. புதிய கொடியில் கொடியின் மேல் வலது மூலையில், பறக்கும் பக்கத்தை நோக்கி வான்படையின் இலச்சினை உள்ளது. இந்த நாளைக் குறிக்கும் வகையில், உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் வான்படை நாள் அணிவகுப்பு மற்றும் வானூர்தி கண்காட்சியை IAF ஏற்பாடு செய்தது.

5. ‘ஜீவிதபுத்ரிகா விழா’ கொண்டாடப்படுகிற மாநிலம் எது?

அ. உத்தரப்பிரதேசம்

ஆ. இராஜஸ்தான்

இ. பீகார் 🗹

ஈ. ஜார்கண்ட்

  • பீகார் மாநிலத்தில் ஆறுகள் மற்றும் குளங்களில் நீராடியபோது, நீரில் மூழ்கியதால், தனித்தனி சம்பவங்களில் குறைந்தது இருபத்தி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ‘ஜீவிதபுத்ரிகா’ பண்டிகைக்காக ஆறுகள் மற்றும் குளங்களில் குளித்தபோது இத்துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இப்பண்டிகையின்போது பீகாரில் உள்ள பெண்கள் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக விரதம் மேற்கொள்கின்றனர்.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘Watermeal’ என்பது என்ன?

அ. மிகச்சிறிய பூக்கும் தாவரம் 🗹

ஆ. மிகப்பெரிய பூக்கும் தாவரம்

இ. மிகச்சிறிய பழம்

ஈ. மிகப்பெரிய பழம்

  • தாய்லாந்தில் உள்ள மஹிதோல் பல்கலைக்கழக அறிவியலாளர்கள், விண்வெளி வீரர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜனின் ஆதாரமாக விளங்கும், பூமியின் மிகச்சிறிய பூக்கும் தாவரமான வாட்டர்மீலின் திறனை ஆராய்ந்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சி நெதர்லாந்தில் உள்ள ஐரோப்பிய விண்வெளி முகமையின் ESTEC தொழில்நுட்ப மையத்தில் நடத்தப்பட்டது.

7. இந்தியா, கீழ்காணும் எந்த நாட்டுடன் இணைந்து 10ஆவது புத்தாக்க நாளைக் கொண்டாடியது?

அ. சுவிட்சர்லாந்து

ஆ. பின்லாந்து

இ. ஸ்வீடன் 🗹

ஈ. இங்கிலாந்து

  • இந்தியா ஸ்வீடன் புத்தாக்க நாள் சந்திப்பின் 10ஆவது பதிப்பு சமீபத்தில் புது தில்லியில் நடைபெற்றது. இந்த ஆண்டு, ஒன்பது ஸ்வீடன் நிறுவனங்கள் இந்தியா-ஸ்வீடன் கண்டுபிடிப்புகள் முடுக்கியின்கீழ் இந்தியாவிற்கு வருகை தந்தன. நடப்பு 2023இல், இருநாடுகளும் தூதரக உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றன. மேலும் நிலையான எதிர்காலத்திற்கான கண்டுபிடிப்பு கூட்டாண்மை குறித்த ஸ்வீடன்-இந்தியா கூட்டு பிரகடனத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவையும் அவை கொண்டாடுகின்றன.

8. ‘தேசிய தற்போதைய நல்லுற்பத்தி நடைமுறை நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. 10 அக்டோபர் 🗹

ஆ. 12 அக்டோபர்

இ. 14 அக்டோபர்

ஈ. 15 அக்டோபர்

  • இந்திய அரசாங்கமானது இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் (IDMA) இணைந்து, உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆணைப்படி, அக்.10 அன்று முதல் தேசிய தற்போதைய நல்ல உற்பத்தி நடைமுறை நாளைக் (CGMP நாள்) கொண்டாடியது. இந்தியாவில் சுமார் 10,500 மருந்து உற்பத்தி அலகுகள் உள்ளன, அவற்றில் 2000 மட்டுமே ‘WHO GMP’ சான்றிதழைப் பெற்றுள்ளன.

9. சமீப செய்திகளில் இடம்பெற்ற மான்ட் பிளாங்க் என்பது கீழ்காணும் எந்த நாட்டின் மிகவுயரமான மலையாகும்?

அ. இங்கிலாந்து

ஆ. பிரான்ஸ் 🗹

இ. இத்தாலி

ஈ. அர்ஜென்டினா

  • பிரான்ஸின் மிகவுயரமான மலையான மான்ட் பிளாங்கின் உயரம் குறைந்துள்ளது. இது ஆல்ப்சின் மிகவுயரமான சிகரமும் காகசஸ் மலைத்தொடருக்கு வெளியே ஐரோப்பாவின் மிகவுயர்ந்த மலையாகும். இது கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு மீட்டர் (6.5 அடி) உயரத்தை இழந்துள்ளது. இந்த உயரம் குறைவது, இப்பகுதியை பாதிக்கும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் ஏற்பாட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

10. “Together for Trust: Collaborating for a safe and connected future” என்பது அக்.9 அன்று கொண்டாடப்பட்ட எந்த நாளின் கருப்பொருள் ஆகும்?

அ. உலக தொலைத்தொடர்பு தினம்

ஆ. உலக அஞ்சல் தினம் 🗹

இ. உலக இணைய தினம்

ஈ. உலக தொலைபேசி தினம்

  • உலக அஞ்சல் தினமானது ஒவ்வோராண்டும் அக்.09 அன்று கொண்டாடப்படுகிறது. 1874ஆம் ஆண்டு யுனிவர்சல் போஸ்டல் யூனியன் உருவாகிய ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 1969ஆம் ஆண்டு டோக்கியோவில் நடந்த யுனிவர்சல் போஸ்டல் மாநாட்டில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 2023ஆம் ஆண்டு உலக அஞ்சல் தினத்திற்கான கருப்பொருள், “Together for Trust: Collaborating for a Safe and Connected Future” என்பதாகும்.

11. சக்ரவத்-2023 பயிற்சியானது கீழ்காணும் எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் இந்திய கடற்படையால் நடத்தப்படுகிறது?

அ. தமிழ்நாடு

ஆ. ஆந்திரப் பிரதேசம்

இ. கோவா 🗹

ஈ. கேரளா

  • சக்ரவத்-2023 என்பது முப்படைகள், துணை இராணுவப் படைகள் மற்றும் பல்வேறு பேரிடர் மீட்பு நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பங்கேற்பை உள்ளடக்கிய ஒரு வருடாந்திர கூட்டு மனிதநேய அடிப்படையிலான உதவி மற்றும் பேரிடர் நிவாரண பயிற்சியாகும். இந்நிகழ்வானது தேசிய பங்கேற்பாளர்களிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள எட்டு நாடுகளின் பங்கேற்பையும் உள்ளடக்கும்.

12. காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பின் ஆண்டறிக்கையை வெளியிடுகிற நிறுவனம் எது?

அ. பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு

ஆ. NITI ஆயோக்

இ. தேசிய புள்ளியியல் அலுவலகம் 🗹

ஈ. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு

  • காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பின் 2022-2023 ஆண்டறிக்கையை தேசிய புள்ளியியல் அலுவலகம் சமீபத்தில் வெளியிட்டது. 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான வேலையின்மை விகிதத்தில் குறைந்து வரும் போக்கு காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில், தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 2017-18 இல் இருந்த 50.7%இலிருந்து 2022-23இல் 60.8%ஆக அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் இது 47.6%இலிருந்து 50.4%ஆக அதிகரித்துள்ளது.
  • கிராமப்புறங்களில், தொழிலாளர் மக்கள்தொகை விகிதம் 2017-18இலிருந்த 48.1%இலிருந்து 2022-23இல் 59.4% ஆக அதிகரித்துள்ளது; நகர்ப்புறங்களில் இது 43.9%இலிருந்து 47.7%ஆக அதிகரித்துள்ளது.

13. சமீப செய்திகளில் இடம்பெற்ற நௌகா, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள எந்நாட்டின் ஆய்வகமாகும்?

அ. ரஷ்யா 🗹

ஆ. அமெரிக்கா

இ. இஸ்ரேல்

ஈ. சீனா

  • பல்நோக்கு ஆய்வக தொகுதி-மேம்படுத்துதல் என்றும் அறியப்படும் நௌகா, சர்வதேச விண்வெளி நிலையத்தின் ரஷ்ய சுற்றுப்பாதை பிரிவில் முதன்மை ஆய்வகமாக செயல்படுகிறது. இது பரிசோதனைகள், அறிவியல் கருவிகளின் சேமிப்பு மற்றும் ISS-க்கான காப்புப்பிரதி சேவை தொகுதியாக செயல்படும். ‘நௌகா’ என்பதற்கு ரஷ்ய மொழியில் ‘அறிவியல்’ என்று பொருள். சமீபத்தில், ‘நௌகா’ தொகுதியின் வெளிப்புற காப்பு ரேடியேட்டர் சுற்றிலிருந்த குளிரூட்டி ஒன்றில் கசிவு ஏற்பட்டதன் காரணமாக அது சமீபத்திய செய்திகளில் இடம்பிடித்தது.

14. பேராசிரியர் கிளாடியா கோல்டின் 2023ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை எது குறித்த ஆராய்ச்சிக்காக பெற்றார்?

அ. தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்களிப்பு 🗹

ஆ. நடத்தை பொருளாதாரம்

இ. வறுமை

ஈ. பெண்கள் மத்தியில் வேலையின்மை

  • பேராசிரியர் கிளாடியா கோல்டினுக்கு அண்மையில் 2023ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்களிப்பு குறித்த அவரது விரிவான ஆராய்ச்சியை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது. கிளாடியா கோல்டின் ஒரு அமெரிக்க பொருளாதார வரலாற்றாசிரியர் மற்றும் தொழிலாளர் பொருளாதார நிபுணராவார். அவர் தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக உள்ளார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ககன்யான் திட்டம்: அக்.21-இல் முதல்கட்ட சோதனை.

மனிதர்களை விண்கலம்மூலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையின் 400 கிலோ மீ தொலைவுக்குக் கொண்டுசென்று, பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு கொண்டுவரும் ககன்யான் திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான பல்வேறுகட்ட சோதனைகளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) மேற்கொண்டு வருகிறது.

ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ககன்யான் திட்ட விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும் முதல்கட்ட சோதனை அக்.21இல் நடைபெறுகிறது. ககன்யான் விண்கலம் ஏவுகலம்மூலம் விண்வெளிக்குக் கொண்டுசெல்லப்பட்டு, மீண்டும் பூமிக்கு கொண்டுவரப்படும். வங்கக்கடல் பகுதியில் விழும் இந்த விண்கலம், இந்திய கடற்படையினர்மூலம் மீட்கப்படும்.

‘ககன்யான் திட்டம்’மூலம் வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவதற்கு முன்பாக, ‘வாயுமித்ரா’ என்ற ரோபோவை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விண்கலம்மூலம் விண்ணுக்கு அனுப்பி சோதனை செய்யப்படவுள்ளது.

2. தஞ்சை வேளாண் கல்லூரிக்கு எம் எஸ் சுவாமிநாதன் பெயர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையிலுள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் பெயர்சூட்டப்படும் என்று சட்டப்பேரவையில் விதி-110இன்கீழ் மாண்புமிகு தமிழ்நாட்டு முதலைமைச்சர் அறிவித்துள்ளார்.

‘பசுமைப்புரட்சியின் தந்தை’ எனப்போற்றப்படும் M S சுவாமிநாதன், பத்ம விபூஷண், ரமோன் மகசேசே உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளம் வேளாண் அறிவியலில் பயிர்ப்பெருக்கம், மரபியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்று முன்னிலையில் வரும் மாணவருக்கு, டாக்டர் M S சுவாமிநாதன் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

3. இஸ்ரேலிலிருந்து இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் அஜய்’.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே மோதல் தீவிரமாகி உள்ள நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களைத் தாயகம் அழைத்துவர ‘ஆபரேஷன் அஜய்’ தொடங்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

4. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: மயிலாடுதுறை மாவட்டம் சேர்ப்பு.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதியில் மயிலாடுதுறை மாவட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. வேளாண் மண்டலச் சட்டத்துக்குள் வேளாணுடன் கால்நடை பராமரிப்பு மற்றும் உள்நாட்டு மீன்வளமும் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. இதற்கு சட்ட மசோதா வழிவகை செய்கிறது எனக்கூறப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவிக்கப்பட்ட இடத்தில் உள்ள வேளாண் நிலங்களை வேறு எந்தப் பயன்பாட்டுக்கும் மாற்ற இயலாத அளவுக்கு வகைப்பாடு செய்யப்படும். வேளாண் சாராத வேறு எந்தத்திட்டத்தையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் செயல்படுத்த முடியாது. இந்தியாவின் முதல் வேளாண் மண்டலம் 2011ஆம் ஆண்டில் உத்தரகண்டில் அமைக்கப்பட்டது.

5. 2022ஆம் ஆண்டுக்கான, ‘சரஸ்வதி சம்மான்’ விருது எழுத்தாளர் சிவசங்கரிக்கு வழங்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான ‘சரஸ்வதி சம்மான்’ இலக்கிய விருதை எழுத்தாளர் சிவசங்கரி பெற்றுக் கொண்டார். கடந்த 2019ஆம் ஆண்டு எழுதிய ‘சூரிய வம்சம்-நினைவலைகள்’ என்ற நூலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றில் சிறந்த இலக்கிய படைப்பாளிக்கு ‘சரஸ்வதி சம்மான்’ இலக்கிய விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் வழங்கப்படும் மிகவுயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விருதை கே கே பிர்லா அறக்கட்டளை கடந்த 1991ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. இந்த விருது `15 லட்சம் பரிசுத்தொகை, பாராட்டுப் பத்திரம், பாராட்டுச்சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது.

6. வரையாடுகளைப் பாதுகாக்கும் முன்னோடித் திட்டம்.

தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாட்டைக் காப்பதற்கான முன்னோடித் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் தொடக்கிவைத்தார்.

‘வரையாடு’ என்று மக்களால் பரவலாக அழைக்கப்படும் ‘நீலகிரி வரையாடு’ என்பது மேற்குத்தொடர்ச்சி மலையில் காணப்படும் அழிந்துவரும் இனமாகும். புவிஈர்ப்பு விசைக்கெதிராக கடினமான குன்றின்மீது ஏறும் திறன்களுக்காக புகழ்பெற்ற வரையாடு தமிழ்நாட்டின் மாநில விலங்காகவும் திகழ்கிறது. இது ‘மௌன்டைன் மோனார்க்’ என்று அழைக்கப்படுகிறது. வரையாடு நாள்: நீலகிரி வரையாடு இனங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் அக்.7ஆம் தேதி வரையாடு நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வரையாடுகள் குறித்த ஆய்வுகளில் முன்னோடியாக விளங்கும் டாக்டர் ஈ ஆர் சி டேவிதாரின் பிறந்தநாள் அக்டோபர்.07 ஆகும். இதையொட்டியே வரையாடு விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!