TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 14th October 2023

1. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘பூஜா சிறப்பு டிராம்’ என்பதுடன் தொடர்புடைய மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. மகாராஷ்டிரா

ஆ. மத்திய பிரதேசம்

இ. குஜராத்

ஈ. மேற்கு வங்காளம் 🗹

  • UNESCO பாரம்பரிய பட்டியலில் உள்ள துர்கா பூஜையை நினைவுகூரும் வகையிலும் கொல்கத்தா டிராம்வேகளின் 150ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையிலும் ‘பூஜா சிறப்பு டிராம்’ உருவாக்கப்பட்டுள்ளது. இது துர்கா பூஜை முதல் புத்தாண்டு வரை டோலிகஞ்ச்-பாலிகஞ்ச் பாதையில் இயக்கப்படும். கொல்கத்தாவின் தனித்துவமிக்க அடையாளமாக விளங்கும் டிராம்கள் கடந்த 1873ஆம் ஆண்டு முதல் அந்நகரத்தில் இயங்கி வருகின்றன.

2. ‘ரோஜ்கர் பிரயாக் தளம்’ தொடங்கப்பட்டுள்ள மாநிலம் எது?

அ. அஸ்ஸாம்

ஆ. உத்தரகாண்ட் 🗹

இ. பீகார்

ஈ. ஒடிசா

  • டேராடூனில் நடைபெற்ற 2023-உத்தரகாண்ட் இளையோர் மகோவத்சவ நிகழ்வின்போது உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ‘ரோஜ்கர் பிரயாக் தளத்தைத்’ திறந்து வைத்தார். இளையோருக்கு மாநிலத்திற்குள் வேலைவாய்ப்புகளை வழங்குவதை இலக்காகக்கொண்டு அரசாங்கம் இந்த வலைதளத்தை உருவாக்கியுள்ளது.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘SHRESHTA திட்டத்தை’ தொடங்கிய மத்திய அமைச்சகம் எது?

அ. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் 🗹

ஆ. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

இ. MSME அமைச்சகம்

ஈ. மின்துறை அமைச்சகம்

  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது கல்வி பயில்வதை ஊக்குவிக்கவும், பட்டியல் சாதியினரின் (SC) சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்தும் ஒரு முன்னெடுப்பாக, “இலக்குப்பகுதிகளில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான உறைவிடக் கல்வித்திட்டம்” (Scheme for Residential Education for Students in High Schools in Targeted Areas – SHRESHTA) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • உயர்தரக் கல்வியை வழங்கும் மானிய உதவி நிறுவனங்கள், உறைவிட உயர்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றின் முயற்சிகள்மூலம் கல்வித்துறையில் சேவைக் குறைபாடுள்ள ஆதிதிராவிடர்கள் பெருமளவில் உள்ள பகுதிகளில் காணப்படும் இடைவெளியை நிரப்புவதும், ஆதிதிராவிடர்களின் சமூகப்பொருளாதார மேம்பாடு மற்றும் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கான சூழலை வழங்குவதும் SHRESHTAஇன் நோக்கமாகும்

4. இந்தியாவில், ‘ஒன்பதாவது P20 உச்சிமாநாடு’ நடைபெறும் நகரம் எது?

அ. மும்பை

ஆ. சென்னை

இ. புது தில்லி 🗹

ஈ. கொல்கத்தா

  • 9ஆவது P20 நாடாளுமன்ற அவைத்தலைவர்கள் உச்சிமாநாட்டை (P20) பிரதமர் நரேந்திர மோதி புது தில்லியில் உள்ள யஷோபூமியில் தொடக்கிவைத்தார். ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலத்திற்கான நாடாளுமன்றங்கள்’ என்ற கருப்பொருளுடன் இந்தியாவின் G20 தலைமைத்துவத்தின் கட்டமைப்பின்கீழ் இந்த உச்சிமாநாடு இந்திய நாடாளுமன்றத்தால் நடத்தப்பட்டது.

5. NLC இந்தியா நிறுவனமானது கீழ்காணும் எந்த மாநிலத்தில் 810 MW சூரியவொளி மின்னழுத்த மின் திட்டத்தை உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ளது?

அ. உத்தரப்பிரதேசம்

ஆ. இராஜஸ்தான் 🗹

இ. பீகார்

ஈ. ஜார்கண்ட்

  • மத்திய நிலக்கரி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் மத்திய பொதுத்துறை நிறுவனமான NLC இந்தியா லிமிடெட் இராஜஸ்தான் இராஜ்ய வித்யுத் நிகம் லிட் (RRVUNL) உடன் இணைந்து 810 மெகாவாட் சோலார் PV திட்டத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. இராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்திலுள்ள புகல் தேசில் பகுதியில் அமைந்துள்ள RRVUNLஇன் மிகப்பெரிய 2000 MW பிரம்மாண்ட சூரியவொளிப் பூங்காவின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில், 2022 டிசம்பரில் RRVUNLஆல் ஒப்பந்தப்புள்ளி விடப்பட்ட 810 மெகாவாட் திட்டத்தின் முழு ஒதுக்கீட்டையும் NLC இந்தியா நிறுவனம் அடைந்துள்ளது.

6. மத்திய ஆடுகள் ஆராய்ச்சி நிறுவனம் (CIRG) அமைந்துள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. ஜம்மு காஷ்மீர்

ஆ. உத்தரப்பிரதேசம் 🗹

இ. ஹிமாச்சல பிரதேசம்

ஈ. சிக்கிம்

  • மத்திய ஆடுகளின் ஆராய்ச்சி நிறுவனம் என்பது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் (ICAR) முதன்மையான ஆராய்ச்சி நிறுவனமாகும். இது வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறையின்கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சிமிகுந்த அமைப்பாகும். இது உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. ICAR-CIRG ஆனது, ஆடுகள் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், இனப்பெருக்கம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளில் மேம்பட்ட பயிற்சியை வழங்கவும், ஆடுகளின் மதிப்புச்சங்கிலி முழுவதும் நிலைப்புத் தன்மையை மேம்படுத்தவதற்குமாக, Heifer இந்தியா என்கிற நிறுவனத்துடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

7. எந்த நாட்டில் உள்ள டால்ஸ்டாய் பண்ணையில், எட்டடி உயர மகாத்மா காந்தி சிலை திறக்கப்பட்டுள்ளது?

அ. சுவிட்சர்லாந்து

ஆ. பின்லாந்து

இ. தென்னாப்பிரிக்கா 🗹

ஈ. இங்கிலாந்து

  • தென்னாப்பிரிக்காவில் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வழக்கறிஞராக ‘மகாத்மா’ காந்தியால் நிறுவிய கம்யூன் டால்ஸ்டாய் பண்ணையில் ‘மகாத்மா’ காந்தியின் 8 அடி உயரசிலை திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவேயுள்ள நெல்சன் மண்டேலாவின் சிலைக்கு அருகிலேயே ‘மகாத்மா’ காந்தியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இந்தியாவின் சேவாகிராம் ஆசிரமத்தின் சிற்பி ஜலந்தர்நாத் ராஜாராம் சன்னோலேவால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

8. ‘குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாட்டை அடையாளம் கண்டு மேலாண்மை செய்வதற்கான நெறிமுறையை’ அறிமுகப்படுத்திய நாடு எது?

அ. இந்தியா 🗹

ஆ. இலங்கை

இ. வங்காளதேசம்

ஈ. நேபாளம்

  • ‘குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாட்டைக் கண்டறிந்து மேலாண்மை செய்வதற்கான நெறிமுறை’ சமீபத்தில் இந்திய அரசால் வெளியிடப்பட்டது. இது மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகம் ஆகியவற்றின் ஒத்துழைப்பின் விளைவாக உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது அங்கன்வாடி மட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை அடையாளம் கண்டு நிர்வகிப்பதற்கான விரிவான வழிமுறைகளை வழங்குகிறது.

9. ‘தேர்தல் பத்திரங்கள் திட்டமானது’ இந்தியாவில் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

அ. 2016

ஆ. 2018 🗹

இ. 2021

ஈ. 2023

  • தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை எதிர்த்து வரும் மனுக்களை அக்டோபர்.31ஆம் தேதி பரிசீலிப்பதாக உச்சநீதிமன்றம் அண்மையில் அறிவித்தது. கடந்த 2018இல் தொடங்கப்பட்ட இந்தத்திட்டம், தேர்தல் பத்திரங்களை வழங்குவதற்கான முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகளுக்கு அநாமதேயமாக பணத்தை நன்கொடையாக வழங்க இது வழிவகை செய்கிறது.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பைகா பழங்குடியினர் வாழ்கின்ற மாநிலம் எது?

அ. பீகார்

ஆ. கர்நாடகா

இ. மத்திய பிரதேசம் 🗹

ஈ. கேரளா

  • பைகா பழங்குடியினர் குழுவானது வாழ்விட உரிமைகளை அடைந்துள்ளது. கமர் பழங்குடியினரைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்தில் அத்தகைய உரிமைகளைப்பெறும் இரண்டாவது குழுவாக பைகா உருவாகியுள்ளது. பைகா பழங்குடியினர் சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் காணப்படும் இனக்குழுக்களாகும். 2,085 குடும்பங்களைச் சேர்ந்த 6,483 தனிநபர்களை உள்ளடக்கிய மொத்தம் 19 பைகா கிராமங்களுக்கு வாழ்விட உரிமை கிடைத்துள்ளது.

11. ‘பார்க்கர்’ என்ற சூரிய ஆய்வுக்கருவியுடன் தொடர்புடைய நாடு எது?

அ. அமெரிக்கா 🗹

ஆ. இந்தியா

இ. இஸ்ரேல்

ஈ. ரஷ்யா

  • NASAஇன் ‘பார்க்கர்’ என்ற சூரிய ஆய்வுக்கருவி சூரிய குடும்பத்தின் வழியாக மணிக்கு 635,266 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து ஒரு அசாதாரண சாதனையை படைத்துள்ளது. இந்தச் சாதனை சூரியனைச் சுற்றியுள்ள 17ஆவது சுற்றுப்பாதையை எட்டியபோது அடையப்பட்டது. சூரியனின் மின்னேற்றம் செய்யப்பட்ட துகள்வளி மற்றும் காந்தப்புலங்கள் பற்றிய அத்தியாவசிய தரவுகளை அது தொடர்ந்து சேகரித்து வருகிறது.

12. இந்தியாவில், ‘தேசிய ஆயுர்வேத நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. 10 அக்டோபர்

ஆ. 10 நவம்பர் 🗹

இ. 10 டிசம்பர்

ஈ. 10 ஜனவரி

  • நாடு முழுவதும் எட்டாவது தேசிய ஆயுர்வேத நாளை முன்னிட்டு ஒருமாதகால இயக்கத்தை மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் தொடக்கி வைத்தார். ஆயுர்வேத நாளானது 10 நவம்பர் அன்று “Ayurveda for Everyone on Everyday” என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது. ஆயுர்வேதத்தின் கடவுளான தன்வந்திரிக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாடு முழுவதும் ஆயுர்வேத நாள் கொண்டாடப்படுகிறது.

13. தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தால் (NSCS) ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய சைபர் பாதுகாப்பு பயிற்சியின் பெயர் என்ன?

அ. பச்சாவோ 2023

ஆ. பாரத் NCX 2023 🗹

இ. காஷன் NCX 2023

ஈ. அவேர் NCX 2023

  • தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் ‘பாரத் NCX 2023’ எனப் பெயரிடப்பட்ட தேசிய சைபர் பாதுகாப்பு பயிற்சியின் இரண்டாவது பதிப்பைத் தொடங்கியுள்ளது. பாரத் NCX 2023, இந்தியாவின் இணையப் பாதுகாப்பு உட்கட்டமைப்பு மற்றும் தயார்நிலையை வலுப்படுத்த, பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் அதோடு இணைந்து, அரசு மற்றும் முக்கியமான துறை நிறுவனங்களின் மூத்த மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு விரிவான பயிற்சியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

14. அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட Sparambabus Sindhudurg என்பது?

அ. பாம்பு

ஆ. சிலந்தி 🗹

இ. மரப்பல்லி

ஈ. தவளை

  • Sparambabus Sindhudurg என்பது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குதிக்கும் சிலந்தி இனமாகும். இது மகாராஷ்டிராவில் உள்ள சிந்துதுர்க் மாவட்டத்தில் கூடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Sparambabus Sindhudurg என்பது Sparambabus இனத்தில் கண்டறியப்பட்ட இரண்டாவது உயிரினமாகும். தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த சிலந்தி, இந்தியாவில் இந்த இனத்தில் கண்டறியப்பட்ட முதல் உயிரினம் ஆகும்.

15. இந்தியாவின் முதல் மூங்கில் சார்ந்த உயிரி சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. மேற்கு வங்காளம்

ஆ. கேரளா

இ. அஸ்ஸாம் 🗹

ஈ. மகாராஷ்டிரா

  • அஸ்ஸாம் உயிரி சுத்திகரிப்பு நிலையம் என்பது அஸ்ஸாமில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான நுமாலிகர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அதன் ஃபின்னிஷ் பங்காளர்களான கெம்போலிஸ் மற்றும் ஃபார்டம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட ஒரு நிலையமாகும். மொத்தம் `40 பில்லியன் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த உயிரி சுத்திகரிப்பு ஆலை, ஆண்டுக்கு 50,000 டன் எத்தனால், 16,000 டன் ஃபர்பியூரல் மற்றும் 11,000 டன் அசிட்டிக் அமிலம் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று தொடக்கம்.

நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமர் நரேந்திர மோதி காணொலிக் காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். நாகையில் இருந்து சுமார் 60 கடல்மைல் தொலைவில் உள்ள இலங்கை காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் ‘செரியபானி’ என்ற இந்தப் பயணிகள் கப்பல் 3 மணி நேரத்தில் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2. உலக பட்டினி குறியீடு – 111ஆவது இடத்தில் இந்தியா.

ஒவ்வொரு நாட்டிலும் பட்டினி அளவு எந்த அளவில் உள்ளது என்பதை கண்டறிந்து, உலகளாவிய பட்டினி குறியீட்டு எண் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில், நூற்று இருபத்தைந்து (125) நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், உலகளாவிய பட்டினி குறியீட்டு எண்ணில் இந்தியா 28.7 புள்ளிகள் பெற்று 111ஆவது இடத்தில் உள்ளது. இது, பட்டினி அளவு தீவிரமாக உள்ளது என்பதை குறிக்கிறது. கடந்த ஆண்டு, இந்தியா 107ஆவது இடத்தில் இருந்தது.

3. காமராஜர் துறைமுகம்: `1,800 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.

தொழில் வளர்ச்சி என்னும் நோக்த்திற்காக `1,800 கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை காமராஜர் துறைமுகம் மேற்கொண்டுள்ளது. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்போக்குவரத்து அமைச்சகம் சார்பில் மூன்றாவது உலகளாவிய கடல்சார் உச்சிமாநாடு அக்.17 அன்று மும்பையில் தொடங்கவுள்ளது. மாநாட்டின் முதல் நாளான அக்.17ஆம் தேதி தமிழ்நாடு அரசுடன் சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்கள் இணைந்து நடத்தும் முதலீடுகளுக்கான சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!