TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 17th & 18th December 2023

1. சமீப செய்திகளில் இடம்பெற்ற பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்புடன் (RATS) தொடர்புடைய சர்வதேச அமைப்பு எது?

அ. ஐக்கிய நாடுகள் சபை (UN)

ஆ. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO)

இ. வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (NATO)

ஈ. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN)

  • பயங்கரவாத, பிரிவினைவாத மற்றும் தீவிரவாத நோக்கங்களுக்காக இணையத்தை பயன்படுத்துவதை எதிர்த்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) கூட்டு பயங்கரவாத எதிர்ப்புப்பயிற்சியை நடத்தியது. புதுதில்லியில் இந்தியா நடத்திய இப்பயிற்சியானது, SCO உறுப்புநாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. SCOஇன் பயங்கரவாத எதிர்ப்புத் திறன்களை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படியாக இந்தப் பயிற்சி பார்க்கப்பட்டது.

2. கல்விக்காக வழங்கப்படும் மதிப்புமிக்க இராயல் வேதியியல் சங்கத்தின் நைகோம் பரிசானது அண்மையில் யாருக்கு வழங்கப்பட்டது?

அ. சவிதா லடேஜ்

ஆ. சஞ்சீவ பிரசாத்

இ. இராஜேஸ்வரி ஸ்ரீதர்

ஈ. புஷ்பக் பட்டாச்சார்யா

  • மும்பையில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி மையத்தின் ஹோமி பாபா அறிவியல் கல்வி மையத்தைச் சேர்ந்த பேராசிரியை சவிதா லடேஜ், வேதியியல் கல்விக்கான அவரது சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் கல்விக்கான மதிப்புமிக்க இராயல் வேதியியல் சங்கத்தின் நைகோம் பரிசைப்பெற்றுள்ளார். இப்பரிசுடன் கூடுதலாக, பேராசிரியை சவிதா லடேஜ் 5,000 பவுண்டுகள் ரொக்கப் பரிசையும் பதக்கத்தையும் ஒரு பாராட்டுச் சான்றிதழையும் பெறுவார். நைகோம் பரிசு என்பது கல்வியின் பல்வேறு நிலைகளில் பணிபுரியும் தனிநபர்களை அங்கீகரிக்கிறது.

3. ஆண்டுதோறும் டிச.16ஆம் தேதியன்று கொண்டாடப்படும் விஜய் திவாஸ், 1971 போரின்போது பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய இராணுவத்தின் வெற்றியை நினைவுகூருகிறது. இந்த நாளில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து சரணடைவதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டவர் யார்?

அ. ஜெனரல் டிக்கா கான்

ஆ. ஜெனரல் அயூப் கான்

இ. ஜெனரல் யாஹ்யா கான்

ஈ. ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாசி

  • ஒவ்வோர் ஆண்டும் டிச.16ஆம் தேதியன்று கொண்டாடப்படும் விஜய் திவாஸ், 1971 போரின்போது பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய இராணுவத்தின் வெற்றியை நினைவுகூருகிறது. இது கீழைப்பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம் உருவானதைக் குறிக்கிறது. இந்த நாளில், தேசத்தைக் காக்க தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு இந்தியா மரியாதை செலுத்துகிறது.
  • பாகிஸ்தானின் இராணுவத்தின் தலைவரான ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாசி, இந்திய இராணுவம் மற்றும் வங்காளதேசத்தின் முக்தி பாஹினியின் கூட்டுப்படைகளிடம் சரணடைந்தார். 1971 போரின்போது இராணுவத் தளபதியாக இருந்த சாம் மானெக்ஷா இந்தியாவின் வெற்றியின் சிற்பியாகக் கருதப்படுகிறார்.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற EKAMRA திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. மேற்கு வங்காளம்

ஆ. மத்திய பிரதேசம்

இ ஒடிசா

ஈ. கர்நாடகா

  • ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக், அதன் கலாச்சார அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக ஒடிசா மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களை மறுசீரமைக்க முடிவெடுத்து அறிவித்துள்ளார். இந்தத்திட்டம், பூரியில் உள்ள 12ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த ஜெகநாதர் திருக்கோவிலுக்குச் செல்லும் வழிபாட்டாளர்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், பல்வேறு சிறிய மற்றும் பெரிய வழிபாட்டுத்தலங்கள், இந்தத் திட்டம்மூலம் `4,000 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. ஒடிசா மாநில அரசு புவனேசுவரத்தில் Ekamra Kshetra Amenities and Monuments Revival Action (EKAMRA) திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

5. சமீபத்தில், இந்திய வழக்கறிஞர் உமா சேகர் தனியார் சட்டத்தை ஒன்றிணைப்பதற்கான பன்னாட்டு நிர்வாகக் குழுவிற்குத் (UNIDROIT) தேர்ந்தெடுக்கப்பட்டார். UNIDROIT அமைந்துள்ள நகரம் எது?

அ. ஜெனீவா

ஆ. பாரிஸ்

இ. ரோம்

ஈ. வாஷிங்டன் டிசி

  • தனியார் சட்டத்தை ஒன்றிணைப்பதற்கான பன்னாட்டு நிறுவனமானது (UNIDROIT) இத்தாலியின் ரோமில் உள்ளது. இந்திய வழக்கறிஞரான உமா சேகர், அண்மையில் UNIDROITஇன் நிர்வாகக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். UNIDROITஇன் 25 உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் குழுவிற்கு நடந்த தேர்தலில் 59க்கு 45 வாக்குகள் பெற்று அவர் வென்றார். UNIDROITஇன் கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவின் முதல் பெண்மணி இவராவார். UNIDROIT நிறுவனமானது பல்வேறு நாடுகளிலும் குழுக்களிலும் உள்ள வணிக மற்றும் தனியார் சட்டங்களைப் ஆய்ந்து நவீனமயமாக்குகிறது.

6. அண்மையில் USFDAஇன் அனுமதியைப் பெற்ற சைடஸ் லைஃப் சைன்சஸின் வைரஸ் தடுப்பு மருந்தின் பெயர் என்ன?

அ. தருணவிர்

ஆ. டெனோஃபோவிர்

இ. ரால்டெக்ராவிர்

ஈ. டோலுடெக்ராவிர்

  • இந்திய மருந்து நிறுவனமான சைடஸ் லைப் சைன்சஸ், HIV-1 நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்ப -டும், ‘Darunavir’ மாத்திரைகளுக்கு அமெரிக்க உணவு & மருந்து நிர்வாகத்தின் (USFDA) அனுமதியைப் பெற்றது. ‘தருணாவிர்’ என்பது ஒரு வைரஸ் தடுப்பு மருந்து ஆகும், இது HIV மனித உடலில் பெருகுவதைத் தடுக்கிறது.

7. அண்மையில் அண்டார்டிகாவிற்கு அருகிலுள்ள ராஸ் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட Austropallene halanychi என்பது எவ்வகை உயிரினமாகும்?

அ. கணவாய் மீன்

ஆ. மாண்டிஸ் இறால்

இ. கடல் சிலந்தி

ஈ. ஆக்டோபஸ்

  • அண்டார்டிகாவிற்கு அருகில் உள்ள ராஸ் கடலில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட வெளிர் மஞ்சள் நிற கடல் சிலந்திக்கு Austropallene halanychi என்று பெயரிடப்பட்டுள்ளது. இது தனித்துவமான கண்கள் மற்றும் இரையைப் பிடிக்கப் பயன்படும் பெரிய கையுறை வடிவ நகங்களைக் கொண்டுள்ளது. 1,000க்கும் மேற்பட்ட கடல் சிலந்தி இனங்கள் பெருங்கடல்களில் வாழ்கின்றன. ஆனால் இது அவற்றிலிருந்து வேறுபட்டு தனித்துவ அம்சங்களுடன் உள்ளது.

8. DRDOஇன் செயற்கைக்கோள் அடிப்படையிலான பெருக்க முறையான GAGANஇன் விரிவாக்கம் என்ன?

அ. Geospatial Analysis and Geotagging Access Note

ஆ. Gyroscopic Aviation Guidance and Navigation

இ. Graphical Atmosphere Grid and Analysis Nexus

ஈ. GPS Aided GEO Augmented Navigation

  • GAGAN என்பது GPS Aided GEO Augmented Navigation என்பதன் சுருக்கமாகும். இந்திய விண்வெளி ஆய்வு மையமானது (ISRO) இந்த உள்நாட்டு செயற்கைக்கோள் அடிப்படையிலான GPS பெருக்க மற்றும் ஒருமைப்பாடு கண்காணிப்பு அமைப்பை உருவாக்கியது. இது இந்தியா மற்றும் அதன் அண்டைப்பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட ஊடுருவல் துல்லியத்தை வழங்குகிறது. அண்மையில் இந்தியாவின் DRDOஆல் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட ஆளில்லா மறைந்திருந்து தாக்கும் டிரோன் வாகனமான Autonomous Flying Wing, அதன் உணரிகளைப் பயன்படுத்தி தானாகவே பறக்கவும் தரையிறங்குவதற்கும் GAGAN ரிசீவர்களைப் பயன்படுத்தியது.

9. ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் கிடங்கு வசதியின் முன்மொழியப்பட்ட பெயர் என்ன?

அ. பாரத் ஹப்

ஆ. பாரத் மார்ட்

இ. இந்துஸ்தான் டிப்போ

ஈ. இந்தியா நூக்

  • 2025ஆம் ஆண்டளவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 100,000 சதுர மீட்டர் பரப்பளவில், ‘பாரத் மார்ட்’ என்ற பெயரில் ஒரு பொருட்காட்சி மற்றும் விநியோக வசதியை நிறுவ இந்தியா திட்டமிட்டுள்ளது. சீன நிறுவனங்களைப் போல, இது ஜெபல் அலி இலவச வர்த்தக மண்டலத்தில் ஒரே கூரையின்கீழ் கிடங்கு, சில்லறை மற்றும் விருந்தோம்பல் சலுகைகளை ஒருங்கிணைக்கும். இது மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு இந்திய தயாரிப்புகளின் ஏற்றுமதியை அதிகரிப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது.

10. சமீபத்தில் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆர்கானிக் கோ-கிரிஸ்டல் சிஸ்டம்களை உருவாக்கியுள்ள ஐஐடி எது?

அ. ஐஐடி பாம்பே

ஆ. ஐஐடி கௌகாத்தி

இ. ஐஐடி மெட்ராஸ்

ஈ. ஐஐடி பெங்களூரு

  • கௌகாத்தி – இந்திய தொழில்நுட்பக் கழக (IIT-G) ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு செயல்பாட்டு பயன்பாடுகளுடன் 4 ஃப்ளோரசன்ட் ஆர்கானிக் கோ-கிரிஸ்டல் அமைப்புகளை உருவாக்கியுள்ளனர். அவர்களின் இக்கண்டுபிடிப்புகள் மதிப்புமிக்க நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. இணை-படிகங்கள் என்பது மேம்பட்ட பொருள் பண்புகளை அனுமதிக்கும் ஒரு பல-கூறு கட்டமைப்புகள் ஆகும். IIT-G குழுவானது ஒளியைத் திறம்பட வெளியிடக்கூடிய இணை-படிகங்கள், படமாக்கக்கூடிய அணுக்கள் ஆகியவற்றை உருவாக்கியது. இவை இணை -படிக பொறியியலில் இந்தியாவின் நிபுணத்துவம் அதிகரித்து வருவதை காட்டுகிறது.

11. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற DRDO ஏரோநாட்டிக்கல் டெஸ்ட் ரேஞ்ச் ஆனது கீழ்காணும் எந்த நகரத்திற்கு அருகில் அமைந்துள்ளது?

அ. செகந்திராபாத்

ஆ. சித்ரதுர்கா

இ. புவனேசுவரம்

ஈ. ஜோத்பூர்

  • இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள வானூர்திகள் சோதனை தளத்திலிருந்து, ‘Autonomous Flying Wing Technology Demonstrator’ என்ற உள்நாட்டில் உருவாக்கப்பட்ட மறைந்திருந்து தாக்கும் டிரோனை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.

12. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய காடு மற்றும் மரக்கட்டைகள் சான்றளிப்புத் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனம் எது?

அ. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம்

ஆ. இந்திய வன மேலாண்மை நிறுவனம்

இ. இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில்

ஈ. இந்திய வன ஆய்வு நிறுவனம்

  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் இந்திய வனம் மற்றும் மரக்கட்டைகளுக்கான சான்றிதழ் அளிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தன்னார்வ தேசிய சான்றளிப்பு முயற்சியானது இந்தியாவில் நிலையான வன மேலாண்மை மற்றும் வேளாண் காடு வளர்ப்பு நடைமுறைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது வன மேலாண்மைச் சான்றளிப்பு மற்றும் அதற்கு அப்பால் உள்ள சான்றளிப்பு முறைகளையும் உள்ளடக்கியது. இந்திய வனம் மற்றும் மரக்கட்டைகள் சான்றளிப்பு குழுமம் இந்தத் திட்டத்தை மேற்பார்வையிடும். போபாலில் உள்ள இந்திய வன மேலாண்மை நிறுவனம் இத்திட்டத்தின் இயக்க முகமையாக இருக்கும்.

13. கிழக்குத்தொடர்ச்சிமலையின் இயற்கை விளக்க மையம் திறக்கப்படவுள்ள கம்பலகொண்டா வனவிலங்குகள் சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. கேரளா

ஈ. கர்நாடகா

  • கம்பலகொண்டா வனவிலங்குகள் சரணாலயத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் இயற்கை விளக்க மையம் திறக்கப்படவுள்ளது. இது ஆந்திர பிரதேசத்திற்கு அருகில் விசாகப்பட்டினத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு காடாகும். இந்தச் சரணாலயம் ஒரு வெப்பமண்டல இலையுதிர் காடுகள் சூழ்ந்த இடமாகும். இங்கு புதர் நிலங்கள் மற்றும் புல் வெளிகள் கலவையாகக் காணப்படுகின்றன. இது மேற்கில் சிம்மாச்சலம் மலைத்தொடர் மற்றும் வடகிழக்கில் கம்பீரம் நீர்த்தேக்கத்தை எல்லையாகக் கொண்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஒரே நேரத்தில் 4 இலக்குகளைத் தாக்கிய, ‘ஆகாஷ்’ ஏவுகணை: இந்தியா புதிய சாதனை.

வானில் 25 கிமீ தொலைவில் உள்ள 4 இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கி இந்தியாவின், ‘ஆகாஷ்’ ஏவுகணை புதிய சாதனை படைத்துள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்தது. இதன்மூலம் உலகில் முதல்முறையாக இத்திறன் படைத்த ஏவுகணையைக்கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. கடந்த டிச.12ஆம் தேதி நடைபெற்ற, ‘அஸ்த்ர சக்தி’ ராணுவ பயிற்சியின்போது ஆகாஷ் ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. இப்பயிற்சியை இந்திய விமானப்படையினர் மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!