TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 18th November 2023

1. ‘9ஆவது இந்திய சர்வதேச அறிவியல் விழா – 2023’ஐ நடத்துகிற மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. ஹரியானா 🗹

இ. கோவா

ஈ. மேற்கு வங்காளம்

  • 9ஆவது இந்திய சர்வதேச அறிவியல் விழா – 2023 ஆனது 2024 ஜன.17 முதல் ஜனவரி.20 வரை ஹரியானாவில் உள்ள பரீதாபாத்தில் நடைபெறவுள்ளது. “Science and Technology Public Outreach in Amrit Kaal” என்பது இந்தப் பதிப்பிற்கானக் கருப்பொருளாக உள்ளது. பங்கேற்பாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்மைகளை வழங்கும் அறிவியல் சாதனைகளை காட்சிப்படுத்தும் விதமாக மொத்தம் 17 கருப்பொருள்களை இவ்விழா கொண்டிருக்கும்.

2. அண்மையில் காலமான N சங்கரய்யாவுடன் சார்ந்தது எது?

அ. நிர்வாகம்

ஆ. அரசியல் 🗹

இ. விளையாட்டு

ஈ. அறிவியல்

  • விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய மார்க்சிஸ்ட் பொதுவுடைமைக் கட்சியின் நிறுவன உறுப்பினருமான N சங்கரய்யா அண்மையில் தனது 102ஆம் வயதில் காலமானார். இவர், இடதுசாரி இயக்கத்தில் மிகவும் தீவிரமாக செயலாற்றி வந்தவராவர். 1940களில் அவர் முதலில் இந்திய பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார். அதன்பின்னர் தமிழ்நாட்டில், 1944இல் அக்கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளராக பணியாற்றினார்.

3. வருடாந்திர பைங்குடில் வாயு குறித்த தகவலேட்டை வெளியிடுகிற நிறுவனம் எது?

அ. UNEP

ஆ. FAO

இ. WMO 🗹

ஈ. CPCB

  • 19ஆவது வருடாந்திர பைங்குடில் வாயு தகவலேட்டின்படி, வளிமண்டலத்தில் பைங்குடில் வாயுக்களின் செறிவு கடந்த 2022இல் முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ளது. இந்த அளவு குறைவதற்கான எந்த அறிகுறியும் இதுவரை தென்படவில்லை. ஐநா அவையின் கிளையான உலக வானிலை அமைப்பு (WMO), முந்தைய ஆண்டில், காலநிலை வெப்பமயமாதலுக்குக் காரணமான கரியமில வாயு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு ஆகிய மூன்று முதன்மை பைங்குடில் வாயுக்களின் அளவுகள் பேரளவை எட்டியதாக அறிவித்தது.

4. தேசிய உறுப்பு மற்றும் திசுமாற்று அமைப்பு (NOTTO) சேகரித்த தரவுகளின்படி, 1995 முதல் 2021 வரை நடந்த மொத்த உறுப்புமாற்று அறுவை சிகிச்சைகளில் 81% கீழ்காணும் எந்தப் பாலினத்திற்கு செய்யப்பட்டுள்ளது?

அ. ஆண்கள் 🗹

ஆ. பெண்கள்

இ. மூன்றாம் பாலினம்

ஈ. போதுமான தகவல் இல்லை

  • தேசிய உறுப்பு மற்றும் திசுமாற்று அமைப்பு சேகரித்த தரவின்படி, 1995 மற்றும் 2021க்கு இடையில், இந்தியாவில் உறுப்புதானம் பெற்றவர்களிடையே குறிப்பிடத்தக்க பாலின வேறுபாடு நிலவியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட மொத்தம் 36,640 நோயாளிகளில், 29,695 பேர் ஆண்களாவர். இது, சுகாதார அளவில் நிலவும் பாலின ஏற்றத்தாழ்வை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

5. 15ஆவது நிதி ஆணையத்தின் உறுப்பினரான அனூப் சிங், கீழ்காணும் எந்த நிறுவனத்தின் சிறப்புமிக்க உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்?

அ. RBI

ஆ. NITI ஆயோக் 🗹

இ. NABARD

ஈ. இந்திய தேர்தல் ஆணையம்

  • இந்திய அரசாங்கத்தின் மதியுரையகமான NITI ஆயோக், அண்மையில் 4 சிறப்புமிக்க உறுப்பினர்களை நியமித்து அறிவித்துள்ளது. இவ்வுறுப்பினர்களின் பதவிக்காலம் ஓராண்டாகும். அனூப் சிங், ஓபி அகர்வால், அஜய் சௌத்ரி மற்றும் வி இலட்சுமிகுமாரன் ஆகியோர் அந்நான்கு புதிய உறுப்பினர்களாவர். அனூப் சிங் பதினைந்தாவது நிதிக் குழுவின் உறுப்பினராகவும், பன்னாட்டு செலவாணி நிதியத்தில் (IMF) ஆசிய பசிபிக் துறையின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

6. ‘NISAR’ என்பது கீழ்காணும் எவ்விரு விண்வெளி முகமைகளுக்கு இடையேயான பூமியைக் கண்காணிக்கும் ரேடார் செயற்கைக்கோள் திட்டமாகும்?

அ. ESA மற்றும் NASA

ஆ. JAXA மற்றும் NASA

இ. ISRO மற்றும் NASA 🗹

ஈ. ESA மற்றும் ISRO

  • NASAஉம் இந்திய விண்வெளி ஆய்வுமையமும் (ISRO) இணைந்து பூமியைக்கண்காணிக்கும் ரேடார் செயற்கைக் கோளான NISARக்கான, தீவிர வெப்பநிலை மற்றும் விண்வெளியின் வெற்றிடத்தின்கீழ் அதன் செயல்திறனை மதிப்பிடுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கடுமையான 21 நாள் சோதனையை நிறைவுசெய்துள்ளது. இது NASA முகமையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வெப்ப வெற்றிடச் சோதனை பெங்களூருவில் உள்ள ISROஇன் செயற்கைக்கோள் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை நிறுவனத்தில் நடத்தப்பட்டது.

7. “புதுமை கைகுலுக்கல்” நிகழ்ச்சி நிரலுடன் தொடர்புடைய இரண்டு நாடுகள் எவை?

அ. சீனா மற்றும் அமெரிக்கா

ஆ. அமெரிக்கா மற்றும் இந்தியா 🗹

இ. இந்தியா மற்றும் சீனா

ஈ. இந்தியா மற்றும் பாகிஸ்தான்

  • வர்த்தகச் செயலாளர் ஜினா ரைமொண்டோ மற்றும் மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கூட்டாக ஒரு தொழிற்துறை வட்டமேசை மாநாட்டுக்கு தலைமைதாங்கி, “Innovation Handhake – புதுமை கைகுலுக்கல்” நிகழ்ச்சி நிரலை முறையாக தொடங்கினர். இது ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டது. “Innovation Handhake” என்பது துளிர் நிறுவல்கள் சூழலமைப்பை மேம்படுத்துவதற்கும், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான முக்கியமான மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

8. குழந்தைகளிடையே காசநோயை ஒழிப்பதற்கான செயல்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள அமைப்பு எது?

அ. UNICEF

. WHO 🗹

இ. NITI ஆயோக்

ஈ. UNEP

  • உலக சுகாதார அமைப்பானது (WHO) சிறார்களில் காணப்படும் காசநோயை ஒழிப்பதற்கான ஒரு செயல்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி மற்றும் பிரசவத்திற்குப் பிறகான பெண்களிடையே தனது கவனத்தைச் செலுத்துகிறது. 2027ஆம் ஆண்டிற்குள் காசநோய் வருவதற்கான அதிக ஆபத்தில் உள்ள 90% மக்களுக்கு தடுப்பு சிகிச்சைக்கான அணுகலை வழங்குமாறு WHO நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளது.

9. ஒருநாள் போட்டிகளில் 50 சதங்கள் அடித்த உலகின் முதல் கிரிக்கெட் வீரர் யார்?

அ. சச்சின் டெண்டுல்கர்

ஆ. விராட் கோலி 🗹

இ. டேவிட் வார்னர்

ஈ. மேத்யூ ஹைடன்

  • சச்சினின் 49 சதங்கள் என்ற சாதனையை முறியடித்ததன்மூலம் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் (ODI) 50 சதங்களை அடித்த உலகின் முதல் கிரிக்கெட் வீரரானார். நியூசிலாந்துக்கு எதிரான ICC ஆடவர் உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் விராட் கோலி 50ஆவது ஒருநாள் சதத்தை எட்டினார். 2003 உலகக்கோப்பையில் 673 ரன்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கரைவிட, ஒரே உலகக்கோப்பைப் பதிப்பில் 700 ரன்கள் எடுத்த முதல் கிரிக்கெட் வீரராகவும் அவரானார்.

10. எந்த மாநிலத்தில், பிரதமர் நரேந்திர மோடி, ஜனஜாதிய ஆதிவாசி நியாய மகாபியானை தொடங்கினார்?

அ. மத்திய பிரதேசம்

ஆ. சத்தீஸ்கர்

இ. பீகார்

ஈ. ஜார்கண்ட் 🗹

  • ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் நடந்த மூன்றாவது ஜனஜாதிய கௌரவ் திவாஸ் விழாவில் பிரதமர் மோடி, பிரதமர் ஜனஜாதிய ஆதிவாசி நியாய மகாபியானை (PM JanMan) தொடக்கி வைத்தார். `24,000 கோடி மதிப்பிலான இத்திட்டமானது குடும்பங்கள் மற்றும் குடியிருப்புகளை அடிப்படை வசதிகளுடன் பலனடையச் செய்வதை நோக்கம் எனக் கொண்டுள்ளது. பிரதமர்-கிசான் சம்மன் நிதியின்கீழ் சுமார் `18000 கோடி நீதியின் 15ஆம் தவணையையும் பிரதமர் இந்த நிகழ்ச்சியில் விடுவித்தார்.

11. காஷ்மீரின் குங்குமப்பூ முதன்முறையாக 2023இல் கீழ்காணும் எந்த மாநிலம்/யூனியன் பிரதேசத்தில் பூத்தது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா 🗹

இ. ஹிமாச்சல பிரதேசம்

ஈ. கோவா

  • கேரள மாநிலத்தில் இடுக்கியில் உள்ள ஒரு சிற்றூரான காந்தளூர் அதன் குளிர் தட்பவெப்பநிலையில் விளையும் காய்கறி மற்றும் பழங்களுக்கும் சுற்றுலாவிற்கும் பெயர்பெற்றதாகும். அங்கு சோதனைமுறையில் குங்குமப்பூ சாகுபடி செய்யப்பட்டு முதன்முறையாக அது பூத்துள்ளது. காஷ்மீர் குங்குமப்பூவுக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய சந்தை உள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR) மற்றும் இடுக்கியில் உள்ள கிருஷி அறிவியல் மையம் (KVK) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்கீழ் அது பயிர்செய்யப்பட்டது.

12. முதன்முதலாக, ‘வாழ்நாள் அமைதியை சீர்குலைக்கும்’ விருதைப் பெற்றுள்ளவர் யார்?

அ. சல்மான் ருஷ்டி 🗹

ஆ. அருந்ததி ராய்

இ. ஜோ பிடன்

ஈ. விளாடிமிர் புடின்

  • புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு வக்லாவ் ஹேவல் மையம் வழங்கும் முதல் ‘வாழ்நாள் அமைதியை சீர்குலைக்கும் விருது’ வழங்கப்பட்டுள்ளது. 2022 ஆகஸ்டில் நியூயார்க்கில் நடந்த இலக்கிய விழாவில் கத்தியால் குத்தப்பட்ட பிறகு சல்மான் ருஷ்டி கலந்துகொண்ட முதல் பொதுமக்கள் கூடும் விழா இதுவாகும். ஜெர்மன் புத்தக வர்த்தகத்தின் அமைதிப் பரிசையும் பெற்றவராவார் சல்மான் ருஷ்டி.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. விரைவில் பல்வேறு சலுகைகள் அடங்கிய புதிய ஜவுளிக்கொள்கை.

தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் அடங்கிய புதிய ஜவுளிக்கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்தார். சேலத்தில் 119 ஏக்கரில் `881 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா தொடங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2. பாம்பனில் புதிய இரயில் பாலம்: பிப்.24இல் பயன்பாட்டுக்கு வரும்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-இராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் கடந்த 1914ஆம் ஆண்டு கப்பல்கள் வந்துசெல்லும் வகையில் இரயில்வே தூக்குப்பாலம் அமைக்கப்பட்டது. இந்தப் பாலம் பழுதடைந்ததால், இரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து, பாம்பன் பழைய இரயில் பாலம் அருகே `525 கோடியில் புதிய இரயில் பாலத்துக்கான கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பாம்பன் புதிய இரயில் பாலத்துக்கான கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. அடுத்தாண்டு (2024) பிப்ரவரி.24ஆம் தேதி பணிகள் முழுமையாக நிறைவடைந்து, இந்தப் பாலம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

3. சென்னையில் பன்னாட்டு மருத்துவ சர்வதேச மாநாடு.

மருத்துவத்துறையின் எதிர்கால மேம்பாடுகுறித்த சர்வதேச மாநாடு முதன்முறையாக சென்னையில் நடக்கவுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி.19 முதல் 21ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு நடைபெறவுள்ளது. சமூகத்தில் எதிர்காலத்தில் அச்சுறுத்தலாக விளங்கும் நோய்த்தொற்றுகள் குறித்தும், அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.

4. புதிதாக 3,000 இரயில்கள்: 2027-க்குள் காத்திருப்போர் பட்டியல் இல்லாத நிலை உருவாகும்.

இந்திய இரயில்வேயில் 2027ஆம் ஆண்டுக்குள் காத்திருப்போர் பட்டியல் இல்லாத நிலையை உருவாக்க 3,000 புதிய இரயில்கள் இயக்கப்படும் என இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாட்டில் இரயில் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 800 கோடியிலிருந்து 1,000 கோடியாக அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போது புறநகர் இரயில்கள் உள்பட மொத்தம் 10,748 இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!