TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 1st 2nd & 3rd October 2023

1. சமீபத்தில், ‘தாதாசாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்ட திரைக்கலைஞர் யார்?

அ. வஹீதா ரஹ்மான் 🗹

ஆ. மதுபாலா

இ. ஸ்ரீதேவி

ஈ. ஷபானா ஆஸ்மி

  • பழம்பெரும் இந்தி நடிகை வஹீதா ரஹ்மானுக்கு 2021ஆம் ஆண்டிற்கான “இந்திய சினிமாவின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான சிறந்த பங்களிப்புக்காக” வழங்கப்படும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. இது மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் திரைப்பட இயக்குநரகத்தால் வழங்கப்பட்டது. தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவின்போது இவ்விருது வழங்கப்பட்டது. கோவிட்-19 தொற்றுநோய் பரவல் காரணமாக 2021ஆம் ஆண்டில் வழங்கப்பட வேண்டிய விருதுகள் தாமதமாக இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது.

2. சர்வதேச டென்னிஸ் வாழ்த்தரங்கத்திற்கு (Hall of Fame) பரிந்துரைக்கப்பட்ட முதல் ஆசியர் யார்?

அ. லியாண்டர் பயஸ் 🗹

ஆ. மகேஷ் பூபதி

இ. ரோஹன் போபண்ணா

ஈ. யூகி பாம்ப்ரி

  • பல கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற லியாண்டர் பயஸ், சர்வதேச டென்னிஸ் வாழ்த்தரங்கத்திற்கு ‘விளையாட்டு வீரர்’ என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட முதல் ஆசியராக உருவெடுத்துள்ளார். 50 வயதான லியாண்டர் பயஸ், 2024ஆம் ஆண்டுக்கு இவ்வகுப்பிற்கென அறிவிக்கப்பட்ட ஆறு பரிந்துரையாளர்களில் ஒருவர் ஆவார். காரா பிளாக், அனா இவானோவிக், கார்லோஸ் மோயா, டேனியல் நெஸ்டர் மற்றும் பிளாவியா பென்னெட்டா ஆகியோர் ‘விளையாட்டு வீரர்’ பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட பிற நபர்கள் ஆவர். சீன வீராங்கனையான லீ நா, 2019ஆம் ஆண்டு சர்வதேச டென்னிஸ் வாழ்த்தரங்கத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் ‘ஆசிய வீராங்கனை’ என்ற பெருமையைப் பெற்றார்.

3. NPSஇன்கீழ் ஓய்வூதிய சேமிப்புகளை நிர்வகிப்பதற்காக பதினோராவது நிதி மேலாளராக PFRDAஆல் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனம் எது?

அ. பந்தன் ஓய்வூதிய நிதி மேலாளர்கள்

ஆ. DSP ஓய்வூதிய நிதி மேலாளர்கள் 🗹

இ. ஆதித்யா பிர்லா சன் லைஃப் பென்ஷன் நிதியம்

ஈ. ஆக்ஸிஸ் ஓய்வூதிய நிதியம்

  • ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது (PFRDA) தேசிய ஓய்வூதிய அமைப்பின் (NPS) கீழ் ஓய்வூதிய சேமிப்புகளை நிர்வகிப்பதற்காக அதன் 11வது நிதி மேலாளராக DSP ஓய்வூதிய நிதி மேலாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. PFRDA ஆனது நாட்டு மக்களுக்கு அதன் சேவைகள் எளிதில் சென்றடையும் நோக்கத்தை எட்டுவதற்காக பிராந்திய கிராமப்புற வங்கிகளை நாடுகிறது.

4. சமூகப்பத்திரங்கள்மூலம் `1000 கோடிக்கு மேல் நிதி திரட்டும் நிறுவனம் எது?

அ. NHB

ஆ. NABARD 🗹

இ. RBI

ஈ. SIDBI

  • வேளாண்மை & ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி (NABARD) அதன் முதல் ரூபாய் மதிப்பிலான AAA தரத்திலான சமூகப் பத்திரங்களை `1040.50 கோடி மதிப்பில் வெளியிட்டுள்ளது. தகுதியுள்ள நிறுவன முதலீட்டாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் வழங்கப்படும் இப்பத்திரங்கள், 2023 செப்டம்பர்.29 அன்று மும்பை பங்குச்சந்தையில் (BSE) பட்டியலிடப்படும். ஒவ்வொரு பத்திரத்தின் பார்வை மதிப்பும் `1 லட்சமாகும். அடிப்படை அளவாக `1,000 கோடியைக் கொண்டுள்ள இப்பத்திரத்தை `2000 கோடி வரையிலும் உயர்த்திக்கொள்வதற்கான வசதியும் உள்ளது.

5. 5 ஆண்டுகளில் `20,000 கோடி முதலீடுகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட தனித்தன்மைமிக்க சுற்றுலாக் கொள்கை – 2023’ஐ வெளியிட்டுள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு 🗹

ஆ. குஜராத்

இ. கர்நாடகா

ஈ. மகாராஷ்டிரா

  • தமிழ்நாட்டை ஆசியாவிலேயே மிகவும் ஈர்ப்புமிகுந்த அனுபவிக்கத்தகுந்த இடமாக மாற்றும் நோக்கோடு தமிழ்நாடு அரசு தனது புதிய சுற்றுலாக் கொள்கையை வெளியிட்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில், `20,000 கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்ப்பதும், மூன்று இலட்சம் பேரின் திறன் மேம்பாட்டை வளர்த்தெடுப்பதையும் தமிழ்நாடு அரசு அதன இலக்காகக் கொண்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 12 சதவீதத்தை சுற்றுலாத்துறை பங்களிக்கும் என்றும், மாநிலத்தில் சுற்றுலா மற்றும் அது சார்புடைய தொழில்கள் 25 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

6. இந்தியப்பெருங்கடலில் நுழைந்துள்ள, ‘ஷி யான் 6’ என்பது கீழ்காணும் எந்த நாட்டின் ஆராய்ச்சிக் கப்பலாகும்?

அ. ரஷ்யா

ஆ. சீனா 🗹

இ. வட கொரியா

ஈ. சிங்கப்பூர்

  • சீனக்கப்பலான, ‘ஷி யான் 6’ செப்.23 அன்று மலாக்கா நீர்ச்சந்தி வழியாக இந்தியப்பெருங்கடலுக்குள் நுழைந்தது. செப்.10 அன்று குவாங்சோவில் இருந்து புறப்பட்ட இக்கப்பல் செப்.14 அன்று சிங்கப்பூர் வந்தடைந்தது. இந்தியாவின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு தீவு நாடான இலங்கை, சீனக்கப்பல், ‘ஷி யான் 6’க்கு அனுமதி வழங்கவில்லை. தீவு நாடான இலங்கையின் நிலையான இயக்க நடைமுறைகளுக்கு இணங்கும் பட்சத்தில், கப்பலை நிறுத்த எந்த ஆட்சேபனையும் இருக்காது என்று அந்த நாடு முன்னர் அறிவித்திருந்தது.

7. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்காக வெள்ளி வென்ற நேஹா தாக்கூர் சார்ந்த விளையாட்டு எது?

அ. துப்பாக்கிச் சுடுதல்

ஆ. ஸ்குவாஷ்

இ. பாய்மரப்படகோட்டம் 🗹

ஈ. குத்துச்சண்டை

  • பதினேழு வயதான இந்திய படகோட்டி நேஹா தாக்கூர், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான ILCA-4 பாய்மரப்படகுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். நேஹா பங்கேற்ற ILCA-4 பாய்மரப்படகுப்போட்டி பிரிவில் மொத்தம் 11 பந்தயங்கள் உள்ளன; அதில், 32 புள்ளிகள் பெற்று நேஹா போட்டியை நிறைவு செய்தார். அவரது நிகர மதிப்பெண்ணான 27, தங்கப்பதக்கம் வென்ற தாய்லாந்தின் நோப்பாசோர்ன் குன்பூஞ்சனுக்கு அடுத்து இரண்டாவது இடத்தைப் பெற அவருக்கு உதவியது.

8. சுதிப்தி ஹஜேலா, திவ்யகிருதி சிங், ஹிருதய் சேடா மற்றும் அனுஷ் அகர்வாலா ஆகியோருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. மல்யுத்தம்

ஆ. ஸ்குவாஷ்

இ. சதுரங்கம்

ஈ. குதிரையேற்றம் 🗹

  • சுதிப்தி ஹஜேலா (சின்ஸ்கி), திவ்யகிருதி சிங் (அட்ரினலின் பிர்போட்), ஹிருதய் சேடா (கெம்க்ஸ்ப்ரோ எமரல்) மற்றும் அனுஷ் அகர்வாலா (எட்ரோ) ஆகிய நான்கு குதிரையோட்டிகளும் அவர்களது குதிரைகளும் அண்மையில் குதிரையேற்றத்தில் இந்தியாவிற்கான முதல் தங்கத்தை வென்றன. குதிரையேற்றம் முதன்முதலில் 1982ஆம் ஆண்டில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சேர்க்கப்பட்டது. அப்போது அந்தப் போட்டியை நடத்திய இந்தியா 3 தங்கங்களை வென்றிருந்தது. 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சமீபத்தில் தங்கம் வென்றது.

9. ‘தெற்கு-தெற்கு அறிவுப் பகிர்வுத் தொடரை’ ஏற்பாடு செய்கிற நிறுவனம் எது?

அ. உலக வங்கி 🗹

ஆ. உலக பொருளாதார மன்றம்

இ. பன்னாட்டு செலவாணி நிதியம்

ஈ. NITI ஆயோக்

  • தெற்கு-தெற்கு அறிவுப் பகிர்வுத் தொடர் (South-South Knowledge Sharing Series) என்பது உலக வங்கியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு மெய்நிகர் மாநாடு ஆகும். “Digital Public Infrastructure: The India Story” என்பது இம்மாநாட்டிற்கான கருப்பொருளாகும். மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இம்மெய்நிகர் மாநாட்டில் பங்கேற்றார். இந்தியாவின் DPI சூழலின் சில முக்கிய கூறுகளான ஆதார், அரசாங்க நலத் திட்டங்களுக்கான அணுகலை எளிதாக்குவதாக பேசிய அவர் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்தும் UPI குறித்தும் அப்போது பேசினார்.

10. கீழ்காணும் எந்த நகரத்தில், புதுப்பிக்கப்பட்ட கடல் அருங்காட்சியகத்தை மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்?

அ. கொச்சி

ஆ. பனாஜி

இ. விசாகப்பட்டினம் 🗹

ஈ. மும்பை

  • விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய மீன்வள ஆய்வகத்தில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட கடல்சார் அருங்காட்சியகத்தை மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா திறந்து வைத்தனர். இந்த அருங்காட்சியகத்தில் உள்ள அனைத்து மாதிரிகளும் நவீன தொழில்நுட்பத்துடன் (QR போன்றவை) காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன; இதன்மூலம், முழுமையான தகவல்களை ஒரே சொடுக்கில் பெறமுடியும். மேலும் இது அறிவியல் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

11. ஓர் அண்மைய அறிக்கையின்படி, ஆமைகள் / கடினகள் ஓட்டு ஆமை கடத்தலின் மையமாக உருவெடுத்துள்ள நகரம் எது?

அ. ஆமதாபாத்

ஆ. மும்பை

இ. சென்னை 🗹

ஈ. விசாகப்பட்டினம்

  • மெல்லோட்டு ஆமைகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவிலிருந்து ஆமைகள் அல்லது கடின ஓட்டு ஆமைகள் மிகவும் அதிக அளவில் உலகளாவிய வலையமைப்பில் வர்த்தகம் செய்யப்படுகின்றன என்பதை ஒரு புதிய அறிக்கை கூறுகிறது. மெல்லோட்டு ஆமைகள் வளர்ப்புப் பிராணிகளாகவும், நில ஆமை அல்லது நீராமைகள் இந்தியாவிற்குள் இறைச்சிக்காகவும் பெரும்பான்மையாக வர்த்தகம் செய்யப்படுகின்றன. சட்டவிரோதமாக வர்த்தகம் செய்யப்படும் நில ஆமைகள் அல்லது நீராமைகள் பெரும்பாலும் விமானம்மூலம் கொண்டு செல்லப்படுவது கண்டறியப்பட்டது. இக்கடத்தலின் மையமாக சென்னை பெருநகரம் உருவெடுத்துள்ளதாக இந்த அறிக்கையின் தரவரிசை கூறுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்தியா, வங்கதேச இராணுவங்கள் கூட்டுப் பயிற்சியைத் தொடங்கின.

மேகாலயா மாநிலம் உம்ரோயில் இந்தியா- வங்கதேச இடையே 11ஆம் ஆண்டு கூட்டு இராணுவப் பயிற்சியான ‘சம்ப்ரிதி’, 2023 அக்டோபர் 03ஆம் தேதி தொடங்கியது. சுழற்சி அடிப்படையில் இரண்டு நாடுகளும் ஏற்பாடு செய்யும் இந்தப் பயிற்சி, அடிப்படையில் வலுவான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகளை குறிக்கிறது. 2009ஆம் ஆண்டில் அஸ்ஸாமின் ஜோர்ஹாட்டில் தொடங்கப்பட்ட இந்தப் பயிற்சி 2022ஆம் ஆண்டு வரை 10 வெற்றிகரமான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது.

14 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள, ‘சம்ப்ரிதி-XI’, இருதரப்பிலிருந்தும் சுமார் 350 வீரர்களை ஈடுபடுத்தும். இந்தப் பயிற்சி இரு இராணுவங்களுக்கும் இடையிலான பரஸ்பர செயல்பாட்டை மேம்படுத்துதல், பயிற்சி உத்திகளை பகிர்தல் மற்றும் சிறந்த நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுகிறது. அஸ்ஸாம் மாநிலம் தர்ரங்காவில் உள்ள துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில் 2023 அக்.14, 15 ஆகிய தேதிகளில் நிறைவு பயிற்சி ஒத்திகை நடைபெறவுள்ளது.

2. இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமங்களாக உல்லாடா, வேட்டைக்காரன்புதூர் தேர்வு.

இந்திய அளவில் சிறந்த சுற்றுலா கிராமங்களாக நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் அருகில் அமைந்துள்ள உல்லாடா, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வேட்டைக்காரன்புதூர் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஐ நா அவையின் உலக சுற்றுலா அமைப்பின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை மையமாகக் கொண்டு சுற்றுலாத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டத்தில், “கிராமங்களில் சுற்றுலா” என்ற கருப் பொருளும் கொண்டுவரப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு நாட்டிலிருந்தும் 3 கிராமங்கள் தேர்வுசெய்யப்பட்டன. இதில் சிறந்த சுற்றுலா கிராமம் வரிசையில், இந்தியாவில் மேகாலயா மாநிலத்தில் கோங்தாங், தெலங்கானா மாநிலத்தில் போச்சம்பள்ளி, மத்திய பிரதேச மாநிலத்தில் லாட்புரா காஸ் ஆகியவை இடம்பிடித்தன.

இந்த நிலையில் ஐ நா அவையின் உலக சுற்றுலா அமைப்பு, உலகம் முழுவதும் சுற்றுலா கிராமங்களைத் தேர்வு செய்வதுபோல், மத்திய அரசு இந்தியாவில் சுற்றுலா கிராமங்களைத் தேர்வுசெய்யும் முயற்சியில் ஈடுபட்டது. அதன்படி இந்தியாவில் சிறந்த சுற்றுலா கிராமப்போட்டியை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிவைத்தார். உள்ளூர் கலை, கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்தி, பாதுகாக்கும் கிராமங்களைக் கௌரவிப்பதே இந்தப் போட்டியின் முக்கிய நோக்கமாகும்.

இந்தநிலையில், 2023ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமங்களில் ஒன்றாக தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலத்தை அடுத்த கேத்தி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள உல்லாடா கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த வேட்டைக்காரன்புதூர் என்ற கிராமத்தையும் சிறந்த சுற்றுலா கிராமங்களில் ஒன்றாக மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.

3. தமிழ்நாடு அரசு மாநில பல்லுயிர் வாரியம் மறுசீரமைப்பு.

தமிழ்நாடு மாநில அரசு அண்மையில் தமிழ்நாடு மாநில பல்லுயிர் வாரியத்தை மறுசீரமைப்பு செய்தது. தற்போது தொழிற்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய மூன்று சிறப்பு அழைப்பாளர்களை இந்த வாரியம் உள்ளடக்கும். இந்த வாரியத்தின் தலைவராக வனத்துறை அமைச்சர் இருப்பார். சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர்கள்; ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்; மற்றும் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறைகள், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளர் ஆகியோர் குழுவின் அதிகாரபூர்வ உறுப்பினர்களாக இருப்பார்கள்.

4. சோழர்கால மானம்பாடி கோவில் புத்துயிர் பெறவுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள முதலாம் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட மானம்பாடி நாகநாதசுவாமி திருக்கோவில், அழகிய கற்சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகளுக்குப் பெயர் பெற்ற பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும்.

1,000 ஆண்டுகள் பழமையான இந்த நாகநாதசுவாமி திருக்கோவிலுக்குப் புத்துயிரளிக்கும் வகையில், தமிழ்நாட்டின் தொல்லியல் துறை, அங்கு திருப்பணி மேற்கொள்ளவுள்ளது.

5. இந்தியாவின் முழுமையான பசுமை ஆற்றல் பெற்ற முதல் தொல்லியல் தளம் – மாமல்லபுரம்.

பசுமை பாரம்பரியத் திட்டத்தின் ஒருபகுதியாக Renault Nissan Technology & Business Center India (Renault Nissan Tech) மற்றும் Hand in Hand India (HiH) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் கடற்கரை கோவில் முழுவதும் சூரிய ஆற்றலில் இயங்கும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 10 KW திறன்கொண்ட மூன்று சோலார் அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இதன்மூலம் இந்தியாவின் முழுமையான பசுமை ஆற்றல் பெற்ற முதல் தொல்லியல் தளமாக மாமல்லபுரம் கடற்கரை கோவில் மாறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!