TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 20th December 2023

1. அண்மையில் இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணமாக வந்திருந்த சுல்தான் ஹைதம் பின் தாரிக், கீழ்காணும் எந்த நாட்டின் சுல்தான் மற்றும் பிரதமராவார்?

அ. கத்தார்

ஓமன்

இ. ஏமன்

ஈ. ஈரான்

  • சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவர்கள் 2023 டிசம்பர்.16 அன்று இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணமாக வந்தார். இந்தியாவிற்கும் ஓமனுக்கும் இடையேயான வர்த்தகம் பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ளது. ஓமனில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் இந்தோ-ஓமன் வர்த்தகத்தைக் வெளிப்படுத்தக் கூடிய சுமார் மூன்றாம் நூற்றாண்டைச்சேர்ந்த ஆதாரங்களைக் கொணர்ந்தன. பின்னர், ஓமன் இந்தியர்களுடன் குஜராத் வழியாகவும், மலபார் கடற்கரையில் உள்ள தமிழ்நாட்டுடனும் தொடர்புகொண்டிருந்தது.

2. அண்மையில் தொடங்கப்பட்ட காசி தமிழ்ச்சங்கமம் என்பது எந்த அமைச்சகத்தின் முன்னெடுப்பாகும்?

அ. கலாச்சார அமைச்சகம்

ஆ. கூட்டுறவு அமைச்சகம்

இ. கல்வி அமைச்சகம்

ஈ. சுற்றுலா அமைச்சகம்

  • காசி தமிழ்ச்சங்கமம் என்பது காசிக்கும் (வாரணாசிக்கும்) தமிழ்நாட்டுக்கும் இடையேயுள்ள பண்பாட்டுத் தொடர்பைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்ட இந்திய அரசின் கல்வியமைச்சகத்தின் முன்னெடுப்பாகும். இந்த ஆண்டு டிசம்பர் 17 முதல் 31 வரை நடைபெறும் இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கலாச்சாரக் குழுக்கள் காசியில் பல்வேறு கலை வடிவங்களைக் காட்சிப்படுத்துகின்றன. இரு அறிவு & கலாச்சார மையங்களுக்கிடையில் பழங்கால பிணைப்புகளை புதுப்பித்து, இலக்கியம், தத்துவம், ஆன்மிகம், இசை, நடனம் மற்றும் பலவற்றின் பரிமாற்றத்திற்கான தளத்தை வழங்குவதே இதன் குறிக்கோள்கள். இரு பிராந்தியங்களின் சிறப்பு தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் 27 கடைகளும் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.

3. அண்மையில் UNESCOஇன் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்ட காஸ் பீடபூமி அமைந்துள்ள நாடு எது?

அ. இந்தியா

ஆ. ரஷ்யா

இ. சீனா

ஈ. ஐக்கிய அரபு அமீரகம்

  • காஸ் பீடபூமி மகாராஷ்டிராவில் உள்ள UNESCO ஓர் உலக பாரம்பரிய தளமாகும். அதன் காஸ் மலர் திருவிழாவிற்கு அது மிகுந்த புகழ்பெற்றதாகும். இந்தப் பீடபூமி வளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக கொண்டுள்ளது. மஹாராஷ்டிர மாநிலத்தின், ‘பூக்களின் பள்ளத்தாக்கு’ என்று குறிப்பிடப்படும் காஸ் பீடபூமி, மழைக்காலத்தில் மலர்கள் நிறைந்த சோலையாக காட்சித் தருகிறது. இது மேற்குத்தொடர்ச்சிமலைகளின் சயாத்ரி உபதொகுதியின் கீழ்வருகிறது. இது, 2012இல் UNESCO உலக இயற்கை பாரம்பரிய தளத்தின் ஒரு பகுதியாக மாறியது.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “SWAMIH முதலீட்டு நிதியம்” என்பதுடன் தொடர்புடைய துறை எது?

அ. ஆட்டோமொபைல்

ஆ. ரியல் எஸ்டேட்

இ கல்வி

ஈ. மருந்து

  • Special Window for Affordable and Mid-Income Housing (SWAMIH) முதலீட்டு நிதியம் – I என்பது ஒரு சமூகவிளைவு நிறைந்த ஒரு நிதியாகும். இது மொத்தமாக நிறுத்தப்பட்ட குடியிருப்பு திட்டங்களை நிறைவு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நிதியமைச்சரால் இது அறிவிக்கப்பட்டது. அண்மையில், ரியல் எஸ்டேட் உருவாக்குநர்கள் அமைப்பான NAREDCO தனது பட்ஜெட்டுக்கு முந்தைய சமர்ப்பிப்புகளில் SWAMIH நிதியத்துக்கு மேலும் `50,000 கோடி ஒதுக்கவேண்டும் என்று பரிந்துரைத்தது.

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘பாஷினி’ என்றால் என்ன?

அ. பிளாக்செயின் அடிப்படையிலான தரவுப்பாதுகாப்பு அமைப்பு

ஆ. AI- தலைமையிலான மொழி மொழிபெயர்ப்பு அமைப்பு

இ. மேகக்கணிமை உட்கட்டமைப்பு

ஈ. மெய்நிகர் அடிப்படையிலான விளையாட்டுத் தளம்

  • ‘பாஷினி’ என்பது AI-தலைமையிலான மொழி மொழிபெயர்ப்பு அமைப்பாகும். இது இந்திய நாட்டின் மொழிகளைப் பேசுவொருடன் பேசும்போது அவர்களின் சொந்த மொழியிலேயே பேச உதவுகிறது. இது இந்திய மொழிகளில் குரல் அடிப்படையிலான அணுகலை இணைத்து அவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சமீபத்தில், பிரதமர் மோடி டிச.18ஆம் தேதி வாரணாசியில் நடந்த காசி தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சியில் தனது உரையின்போது ‘பாஷினி’யைப் பயன்படுத்தினார்.

6. தற்போது (2023 டிசம்பர்) ஐக்கிய நாடுகள் அவைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி யார்?

அ. அரிந்தம் பாக்சி

ஆ. இந்திரன் மணி பாண்டே

இ. ருசிரா காம்போஜ்

ஈ. K நந்தினி சிங்லா

  • அண்மையில், ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி, தூதர் ருசிரா காம்போஜ், சிறு ஆயுதங்கள்மீதான UNSC இன் திறந்தநிலை விவாதத்தில், கடத்தப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி செயல்படுத்தப்படும் எல்லைதாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா அவதிப்படுவதை எடுத்துக்காட்டுவதற்காக உரையாற்றினார். பாகிஸ்தான் குறித்து மறைமுகமாக விமர்சனம்செய்த அவர் இத்தகைய சட்டவிரோத ஆயுதக்கடத்தல்களை இனங்காண ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை என வலியுறுத்தினார்.

7. அண்மையில், பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய வைர வணிக மையம் அமைந்துள்ள நகரம் எது?

அ. மும்பை

ஆ. சூரத்

இ. பரோடா

ஈ. புனே

  • 67 இலட்சம் சதுர அடி பரப்பளவில் 4,500 அலுவலகங்களுடன், சர்வதேச வைர வர்த்தகச் சந்தையின் உலகளாவிய மையமாக கருதப்படும் சூரத் வைர வணிக வளாகத்தை குஜராத்தின் சூரத் நகருக்கு அருகில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். சூரத் வைர வணிக மையம், சர்வதேச வைரம் மற்றும் ஆபரண வர்த்தகத்திற்கான உலகின் மிகப்பெரிய, அதி நவீன மையமாக இருக்கும். பட்டைதீட்டப்படாத மற்றும் பட்டைதீட்டப்பட்ட வைரங்கள், ஆபரணங்கள் ஆகிய இரண்டையும் வர்த்தகம் செய்வதற்கான உலகளாவிய மையமாக இது இருக்கும்.

8. அண்மையில் இந்திய விமானப்படையால் சோதிக்கப்பட்ட SAMAR வான் பாதுகாப்பு அமைப்பின் விரிவாக்கம் என்ன?

அ. Strategic Aerial Munition for Adaptive Response

ஆ. Surface-to-Air Missile for Assured Retaliation

இ. Supersonic Airborne Missile for Assertive Repulsion

ஈ. Supersonic Airborne Mechanism for Advanced Repulsion

  • இந்திய விமானப்படையால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள, “Surface-to-Air Missile for Assured Retaliation” (SAMAR) வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. மறுபயன்பாட்டு தன்மைகொண்ட இதன் உட்கட்டமைப்பு, ஈரலங்க ஏவுகணை அமைப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது 2.5 மேக் வேகத்தில் வான்வழி அச்சுறுத்தல்களை நாசம் செய்யும் திறன் கொண்டதாகும்.

9. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற தெம்பு இறைவைப் பாசனத் திட்டம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. கோவா

ஆ. மகாராஷ்டிரா

இ. கர்நாடகா

ஈ. குஜராத்

  • கடந்த 1996ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்டு வரும் தெம்பு இறைவை நீர்ப்பாசனத் திட்டத்தை விரிவாக்க மகாராஷ்டிர மாநில அமைச்சரவை சமீபத்தில் `7,370 கோடி நிதியளித்து ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் கிருஷ்ணா ஆற்று நீர் இப்போது 3 மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளான சாங்கிலி, சதாரா மற்றும் சோலாப்பூர் ஆகிய 1 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவை அடையும்.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற லூனா பெருவாய் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. குஜராத்

ஆ. மகாராஷ்டிரா

இ. ஒடிசா

ஈ. கர்நாடகா

  • குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியிலுள்ள லூனாவின் தொலைதூரப்பகுதி, சுமார் 6,900 ஆண்டுகளுக்கு முந்தைய விண்கல் தாக்கப்பள்ளத்தின் தளம் என கேரள பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உறுதிசெய்துள்ளனர். இது சிந்து சமவெளி நாகரிகத்தின் செழிப்பான கட்டத்துடன் ஒத்துப்போகிறது. சிந்து சமவெளி நாகரிகத்தின் முக்கிய தளமான தோலாவிரா இவ்விடத்திலிருந்து 200 கிமீ தொலைவில் உள்ளது. 1.88 கிமீ விட்டம் கொண்டதாக இந்தப் பள்ளம் உள்ளது. இதில் வீழ்ந்த விண்கல் 200 மீ அகலம் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

11. ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்குப்பிறகு, செங்கடலில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாக்கும் பத்து நாடுகள்கொண்ட இராணுவப் படையை வழிநடத்துகிற நாடு எது?

அ. பிரான்ஸ்

ஆ. இங்கிலாந்து

இ. அமெரிக்கா

ஈ. இத்தாலி

  • ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கப்பல்கள்மீது தாக்குதல் நடத்தியதைத்தொடர்ந்து, செங்கடலில் கப்பல் போக்கு வரத்தைப் பாதுகாப்பதற்காக 10 நாடுகளைக் கொண்ட இராணுவப் படையை அமெரிக்கா அறிவித்தது. பக்ரைன், கனடா, பிரான்ஸ், இத்தாலி, சீஷெல்ஸ், இங்கிலாந்து ஆகியவை இந்த அரசு சாரா பன்னாட்டு பாதுகாப்பு முயற்சியில் சேரும் என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் கூறினார். மேர்ஸ்க் உட்பட குறைந்தது 12 கப்பல் நிறுவனங்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காக செங்கடல் போக்குவரத்தை இடைநிறுத்தியுள்ளன. முப்பது சதவீத கொள்கலன்கள் செங்கடல் வழியாக சென்று சூயஸ் கால்வாய் வழியாக மத்தியதரைக்கடலுடன் இணைகிறது.

12. அண்மையில் நடைபெற்ற தொடக்க இந்திய வியூக மாநாட்டை நடத்திய நகரம் எது?

அ. ஹைதராபாத்

ஆ. பெங்களூரு

இ. சென்னை

ஈ. மும்பை

  • தொடக்க இந்திய வியூக மாநாடு 21ஆம் நூற்றாண்டின் தொழில்களை வடிவமைக்கும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் பற்றி விவாதிக்கும் நோக்கோடு வல்லுநர்களை ஒன்றிணைத்தது. கல்வியாளர்களுக்கும் தொழிற்துறையாளர்க்கும் இடையிலான தொடர்புகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த மாநாடு IIM பெங்களூர், இந்திய தொழிற் துறை CSO மன்றம், IIM ஆமதாபாத் மற்றும் ISB ஹைதராபாத் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
  • இம்மாநாட்டின் முதன்மையான கருப்பொருள்களுள் நிலைத்தன்மை, தொழில்நுட்பம், டிஜிட்டல் சீர்குலைவு மற்றும் உலகளாவிய வாய்ப்புகளைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும். நீண்ட கால திட்டமிடல், நிலைப்புத்தன்மை உறுதிப்பாடுகள், கழிவு மேலாண்மை முயற்சிகள், புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தல் மற்றும் டிஜிட்டல் இடையூறுகளை வழிநடத்துதல் ஆகியவற்றில் இதன் கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தின.

13. அண்மையில், கோவா விடுதலை நாள் டிசம்பர்.19 அன்று அனுசரிக்கப்பட்டது. எத்தனை ஆண்டுகளாக, கோவா போர்ச்சுகலின்கீழ் ஒரு பிரதேசமாக இருந்தது?

அ. 298 ஆண்டுகள்

ஆ. 325 ஆண்டுகள்

இ. 395 ஆண்டுகள்

ஈ. 461 ஆண்டுகள்

  • டிசம்பர்.19, கோவா விடுதலை நாள் ஆகும். இது 1961இல் இந்தியாவின் இராணுவம் கோவாவை 450 ஆண்டுகால போர்த்துகீசிய காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுவித்த நாளைக் குறிப்பிடுகிறது. ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் கோவா விடுதலை நாள், போர்த்துகலின்கீழ் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இந்திய யூனியனுடன் கோவா அதிகாரப்பூர்வமாக ஒருங்கிணைக்கப்பட்டதைக் கொண்டாடுகிறது. இந்த நாளில் இந்தியா கோவா, டாமன் மற்றும் டையூவைக் கைப்பற்றியது, 451 ஆண்டுகால போர்த்துகீசிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தெலங்கானா நெசவாளர்களுடன் குடியரசுத்தலைவர் கலந்துரையாடல்.

யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தின் போச்சம்பள்ளி கிராமத்தில் உள்ள கைத்தறி மற்றும் நூற்பாலைகளை திரௌபதி முர்மு பார்வையிட்டார். போச்சம்பள்ளி கிராமத்தில் நெய்யப்படும் சேலைகள் மிகவும் பிரபலமானவை. அவற்றுக்கு கடந்த 2004இல் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இந்தச்சேலைகள் ‘இகாத்’ எனப்படுகிறது. போச்சம்பள்ளியை சிறந்த சுற்றுலா கிராமமாக ஐநா உலக சுற்றுலா அமைப்பு கடந்த 2021இல் தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!