TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 20th March 2024

1. ‘சாகர் பரிக்கிரமா’வின் முதன்மை நோக்கம் என்ன?

அ. கடல் பல்லுயிரியலை ஆராய

. மீனவர்களின் தேவைகளையும் சவால்களையும் புரிந்துகொள்ளுதல்

இ. கடலோரப் பகுதிகளில் சுற்றுலாவை ஊக்குவித்தல்

ஈ. கடல்சார்பாதுகாப்பை மேம்படுத்துதல்

  • குஜராத் மாநிலம் இராஜ்கோட்டில் நடந்த வெளியீட்டு விழாவில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, ‘சாகர் பரிக்கிரமா’ திட்டம் குறித்த நூல் மற்றும் காணொலியை வெளியிட்டார். முன்னரே தீர்மானிக்கப்பட்ட கடல் பாதையில் கடலோர மீனவர்களை ஈடுபடுத்துவதும், அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதும், அரசின் திட்டங்களை ஊக்குவிப்பதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தால் நடத்தப்பட்ட, ‘சாகர் பரிக்ரமா’ யாத்திரையானது 80 கடலோர மாவட்டங்களில் 7,986 கிமீட்டர்களை கடந்து முன்னேற விரும்பும் மீனவர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு PMMSY மற்றும் KCCபோன்ற திட்டங்களின்கீழ் சான்றிதழ்கள் மற்றும் மானியங்களை வழங்கியது.

2. 2024 – உலக நுகர்வோர் உரிமைகள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Fair digital finance

ஆ. Fair and responsible AI for consumers

இ. The Sustainable consumer

ஈ. Empowering consumers through clean energy transitions

  • உலக நுகர்வோர் உரிமைகள் நாளானது ஆண்டுதோறும் மார்ச்.15 அன்று அனுசரிக்கப்படுகிறது. இது உலகளாவிய நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது நுகர்வோர் தேவைகள், உரிமைகள் மற்றும் சந்தை அநீதிகள்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. 2024ஆம் ஆண்டில் வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருள், “Fair & responsible AI for consumers” ஆகும். நுகர்வோர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி சந்தையில் நியாயமான நெறிமுறைகளைப் பின்பற்ற இந்த நாள் ஒரு வாய்ப்பாக அமைகிறது.

3. கழுவேலி நீர்பிடிப்புப் பகுதி அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. கர்நாடகா

ஈ. ஆந்திர பிரதேசம்

  • உலக நினைவுச்சின்னங்கள் நிதியத்தின் கண்காணிப்பு 2025இல் சேர்க்கப்படுவதற்காக, தமிழ்நாட்டின் கழுவேலி நீர்ப்பிடிப்புப்பகுதி பரிந்துரைக்கப்படவுள்ளது. கண்காணிப்பு 2025 திட்டம் என்பது ஒரு பரிந்துரை அடிப்படையிலான திட்டமாகும். இது உள்நாட்டு பாரம்பரியத் தளங்களின் பாதுகாப்பை உலகளாவிய கவன ஈர்ப்பு & நடவடிக்கையுடன் இணைக்கிறது. 1965இல் நிறுவப்பட்ட உலக நினைவுச்சின்னங்கள் நிதியமானது உலகளவில் குறிப்பிடத்தக்க கட்டடக்கலை மற்றும் பாராம்பரிய தளங்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்ட இது, சமூகங்கள், கொடையாளர்கள் மற்றும் அரசாங்கங்களுடன் கூட்டுசேர்ந்து 112 நாடுகளில் செயல்படுகிறது.

4. சங்கலன் செயலியுடன் தொடர்புடையது எது?

அ. சுரங்கம் தொடர்பான சட்டங்கள்

ஆ. புதிய குற்றவியல் சட்டங்கள்

இ. புதிய சுற்றுச்சூழல் சட்டங்கள்

ஈ. சுகாதார விழிப்புணர்வு சட்டங்கள்

  • டிஜிட்டல் குற்றவியல் வழக்கு மேலாண்மை அமைப்பு (CCMS) மற்றும் ‘சங்கலன்’ செயலியை மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான அமித் ஷா அறிமுகம் செய்து வைத்தார். தேசிய புலனாய்வு முகமை (NIA) உருவாக்கிய CCMS, பயங்கரவாதம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வழக்கு ஒருங்கிணைப்பு, நீதி வழங்கலை மேம்படுத்த உதவுகிறது. ‘சங்கலன்’ புதிய குற்றவியல் சட்டங்களுகக்கான வழிகாட்டியாக உள்ளது.

5. பின்வருவனவற்றில் எது, ‘மியாசைட் (Rh17S15)’ பற்றி சிறப்பாக விவரிக்கிறது?

அ. உலகின் மிகப்பெரிய சூரிய மின்னுற்பத்தி நிலையம்

ஆ. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கடல்சார் உயிரினங்கள்

இ உலகின் முதல் வழக்கத்திற்கு மாறான மீ கடத்தி

ஈ. பண்டையகால நீர்ப்பாசன நுட்பம்

  • இயற்கையில் காணப்படும் முதல் வழக்கத்திற்கு மாறான மீ கடத்தியான மியாசைட்டை (Miassite) அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆய்வகத்தில் வளரும்போது மிகைக்கடத்துத்திறனை வெளிப்படுத்தும் நான்கு தாதுக்களில் இதுவும் ஒன்றாகும். மியாசைட் உயர்வெப்பநிலை மீ கடத்திகளுடன் பண்புகளைப் பகிர்ந்துகொள்கிறது. மிகைக் கடத்துத்திறனானது ஆற்றல் இழப்பு இல்லாமல் மின் பரிமாற்றத்தை அனுமதிக்கிறது. லண்டன் ஊடுருவல் ஆழ சோதனையானது மியாசைட்டின் மிகைக்கடத்துத்திறன் வகையைத் தீர்மானித்தது.

6. அண்மையில், 42ஆவது ரஞ்சிக்கோப்பையை வென்ற அணி எது?

அ. தமிழ்நாடு

ஆ. மும்பை

இ. விதர்பா

ஈ. மத்திய பிரதேசம்

  • மும்பையில் உள்ள வாங்கடே மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியின் ஐந்தாவது மற்றும் கடைசிநாளில் விதர்பா அணியை 169 இரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 42ஆவது முறையாக 2024இல் மும்பை அணி ரஞ்சிக் கோப்பையை வென்றது. அஜிங்க்யா ரஹானே, தனுஷ்கோடியான், மற்றும் முஷீர்கான்போன்ற முக்கிய வீரர்களின் ஆதரவுடன் தவால் குல்கர்னியின் சிறப்பான ஆட்டத்தால் மும்பை அணிக்கு இவ்வெற்றி கிடைத்தது.

7. சுற்றுலாவுக்காக காஷ்மீரில் நிலம் வாங்கிய முதல் இந்திய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. மகாராஷ்டிரா

ஈ. மேகாலயா

  • சுற்றுலாப் பயணிகளுக்குத் தங்கும் விடுதி கட்டுவதற்காக காஷ்மீரில் நிலம் வாங்கிய முதல் இந்திய மாநிலமாக மகாராஷ்டிரா ஆனது. `8.16 கோடி மதிப்பிலான இந்நிலப்பரிமாற்ற ஒப்பந்தம், மகாராஷ்டிர மாநிலம் மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கிடையேயான ஒத்துழைப்பைக் குறிக்கிறது. இது சுற்றுலா மற்றும் கலாச்சார பரிமாற்றத்தை மேம்படுத்தும். இது பிணைப்புகளை வலுப்படுத்துவதோடு ஒரு செயலூக்கமான அணுகுமுறையை பிரதிபலிக்கிறது மற்றும் பரஸ்பர வளர்ச்சி மற்றும் புரிதலுக்கான அர்ப்பணிப்பைக் குறிக்கிறது.

8. DHL 2024 – உலகளாவிய தொடர்புடைமை அறிக்கையின்படி, DHL தொடர்புடைமை குறியீட்டில் இந்தியாவின் தரநிலை என்ன?

அ. 61ஆவது

ஆ. 62ஆவது

இ. 63ஆவது

ஈ. 64ஆவது

  • 2024 – DHL உலகளாவிய தொடர்புடைமை அறிக்கையின்படி, DHL தொடர்புடைமை குறியீட்டில், 171 நாடுகளில் இந்தியா 62ஆவது இடத்தில் உள்ளது. முந்தைய ஆண்டைய ஒப்பிடும்போது 67ஆவது இடத்திலிருந்த இந்தியா தற்போது 5 நிலை முன்னேறியுள்ளது. வணிகம், மூலதனம், தகவல் மற்றும் மக்கள் பாய்வுமூலம் உலகத்துடனான தொடர்பின் அடிப்படையில் நாடுகளை இவ்வறிக்கை வரிசைப்படுத்துகிறது. இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் என்றும், வரவிருக்கும் பத்தாண்டுகளில் உலகமயமாக்கலின் வளர்ச்சியில் அது முக்கிய பங்கு வகிக்கும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

9. அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய எரிமலையான நோக்டிஸ் எரிமலை, கீழ்காணும் எந்தக் கோளில் கண்டுபிடிக்கப்பட்டதாகும்?

அ. செவ்வாய்

ஆ. வியாழன்

இ. நெப்டியூன்

ஈ. சனி

  • செவ்வாய்க்கோளில் நோக்டிஸ் எனப்படும் ஒரு மிகப்பெரிய எரிமலையை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது தர்சிஸின் கிழக்கு விளிம்பில் அமைந்துள்ளது. 9,022 மீட்டர் உயரமும் 450 கிமீட்டர் அகலமும் கொண்டதாக உள்ள இந்த எரிமலை எவரெஸ்ட் சிகரத்தைவிட கிட்டத்தட்ட 200 மீ உயரமாக உள்ளது. இது செவ்வாய்க்கோளின் நிலநடுக்கோட்டுக்குத் தெற்கே, கிழக்கு நோக்டிஸ் லாபிரிந்தஸில், வால்ஸ் மரைனெரிஸின் மேற்கே, அக்கோளின் பரந்த பள்ளத்தாக்கு அமைப்பில் அமைந்துள்ளது. நாசாவின் மரைனர் 9, வைக்கிங் ஆர்பிட்டர் 1 மற்றும் 2, மார்ஸ் குளோபல் சர்வேயர், மார்ஸ் ஒடிஸி மற்றும் மார்ஸ் ரீகனைசென்ஸ் மற்றும் ESAஇன் மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் ஆகியவற்றின் தரவுகளைப் பயன்படுத்தி அறிவியலாளர்கள் நோக்டிஸைக் கண்டுபிடித்துள்ளனர்.

10. TRAFFIC மற்றும் WWF-இந்தியாவின் அறிக்கையின்படி, சுறா உடல் உறுப்புகளை சட்டவிரோதமாக வர்த்தகம் செய்வதில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. ஒடிசா

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. மகாராஷ்டிரா

  • TRAFFIC மற்றும் WWF-இந்தியாவின் 2024 பகுப்பாய்வின்படி, இந்தியாவில் சுறா உடல் உறுப்புகளின் சட்டவிரோத வர்த்தகத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. 2010 மற்றும் 2022-க்கு இடையில் பறிமுதல் செய்யப்பட்ட சுறா உடல் உறுப்புகளில் கிட்டத்தட்ட 65% தமிழ்நாட்டிலிருந்தே கைப்பற்றப்பட்டுள்ளது. ஆய்வில் 16,000 கிகிராம் சுறா துடுப்புகள் கைப்பற்றப்பட்டதாக கண்டறியப்பட்டது. இந்தக் காலகட்டத்தில், இது மொத்தத்தில் கிட்டத்தட்ட 80% ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் சிங்கப்பூர், ஹாங்காங் சிறப்பு நிர்வாகப்பகுதி, இலங்கை மற்றும் சீனாவின் பெருநிலப்பகுதிக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன.

11. இந்திய கடற்படை தனது முதல் தன்னிச்சையான தலைமையகத்தை, ‘நௌசேனா பவன்’ என்ற பெயரில் கீழ்காணும் எந்த இடத்தில் நிறுவியுள்ளது?

அ. தில்லி

ஆ. மும்பை

இ. சென்னை

ஈ. ஜெய்ப்பூர்

  • தில்லி இந்திய கண்டோன்மென்டில் புதிதாக கட்டப்பட்ட இந்திய கடற்படையின் தலைமையகமான, ‘நௌசேனா’ பவனை, பாதுகாப்புத் துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். தில்லியில் அதன் முதல் தலைமையகம் திறக்கப்படுவது இந்திய கடற்படைக்கு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது. முன்னதாக, கடற்படை 13 வெவ்வேறு இடங்களிலிருந்து செயல்பட்டது. தற்போது ‘நௌசேனா பவன்’ போன்ற ஒருங்கிணைந்த வளாகமாக கட்டப்பட்டுள்ளது. நௌசேனா பவனின் கட்டடக்கலை வடிவமைப்பு கடுமையான அகில இந்திய போட்டி செயல் முறைமூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இது கட்டடத்தின் செயல்பாடு மற்றும் அழகியல் முறையீட்டை உறுதிசெய்தது. 4 மாடிகளில் மூன்று பிரிவுகளைக் கொண்ட இந்தக் கட்டடம், செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்த புதுமையான கட்டுமானத் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கிறது.

12. 2024 – தேசிய தடுப்பூசி நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Vaccine Prevents the Unwanted

ஆ. Protected Together: Vaccines Work

இ. Vaccines Work for All

ஈ. Close the immunization gap

  • தேசிய தடுப்பூசி நாள், ஆண்டுதோறும் மார்ச்.16 அன்று கொண்டாடப்படுகிறது. இது பொது சுகாதாரத்திற்கான கூட்டு அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. “Vaccines Work for All” என்பது நடப்பு 2024ஆம் ஆண்டில் வரும் தேசிய தடுப்பூசி நாளுக்கானக் கருப்பொருளாகும். தடுப்பூசிமூலம் நோய்களுக்கு எதிரான பாதுகாப்புப்பெறலை இது வலியுறுத்துகிறது. இந்தியாவின் பல்ஸ் போலியோ தடுப்பூசி திட்டத்துடன் 1995இல் உருவான இந்நாள், 1988ஆம் ஆண்டில் WHOஆல் தொடங்கப்பட்ட போலியோ ஒழிப்பு முயற்சியையும் நினைவுகூருகிறது. 1975ஆம் ஆண்டில் பெரியம்மை நோயை மனித சமுதாயம் ஒழித்ததையும் இந்நாள் நினைவுகூருகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கேரள கவிஞர் பிரபா வர்மாவுக்கு, ‘சரஸ்வதி சம்மான்’ விருது அறிவிப்பு.

கேரளத்தைச் சேர்ந்த கவிஞரும் எழுத்தாளருமான பிரபா வர்மாவுக்கு 2023ஆம் ஆண்டுக்கான சரஸ்வதி சம்மான் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இயற்றிய, ‘ரௌத்ர சாத்வீகம்’ என்ற கவிதை நூலுக்காக இந்த விருது வழங்கப்படுவதாக விருதை வழங்கும் KK பிர்லா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இந்த விருது பெறுவோருக்கு `15 இலட்சம் பரிசுத்தொகையுடன் பாராட்டுச்சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசும் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுக்கான (2022) ‘சரஸ்வதி சம்மான்’ விருது தமிழ் எழுத்தாளர் சிவசங்கரிக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2. விசாகப்பட்டினத்தில் இந்தியா-அமெரிக்கா முப்படை பயிற்சி.

‘டைகர் டிரையம்ப்-24’ என்னும் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணத்துக்கானப் பயிற்சியில் இந்திய-அமெரிக்க கடற்படை வீரர்கள் பங்கேற்றனர். இந்தப் பயிற்சி இருநாடுகளுக்கிடையேயான பேரிடர்கால வழிகாட்டு நெறிமுறைகளை பகிர்ந்துகொள்ள உதவுகிறது.

3. முத்துலட்சுமி ரெட்டி திட்டம்: கர்ப்பிணிகளுக்கு இனி மூன்று தவணைகளில் நிதி.

முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் கர்ப்பிணிகளுக்கு 5 தவணைகளாக வழங்கப்பட்டுவரும் நிதியுதவி, இனி மூன்று தவணைகளாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்.01 முதல் இந்தப்புதிய நடைமுறை அமலுக்கு வரவுள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கர்ப்பிணிகள் கருத்தரித்த 12 வாரத்துக்குள் ஆரம்ப சுகாதார செவிலியர்களிடம் ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு எண் விவரங்களைத் தெரிவித்து, பெயரை பதிவுசெய்து, ‘பிக்மி’ எண் பெறவேண்டும்.

பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் நிதிப்பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் அத்திட்டத்தில் தற்போது சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, இதற்கு முன்பு வரை ஐந்து தவணைகளாக வழங்கப்பட்டு வந்த `14,000 நிதியுதவி இனி 3 தவணைகளில் வழங்கப்படவுள்ளது. கர்ப்பகாலத்தின் நான்காவது மாதத்தில் `6,000, குழந்தைபிறந்த நான்காவது மாதத்தில் `6,000, குழந்தை பிறந்த 9ஆவது மாதத்தில் `2,000 வழங்கப்படவுள்ளது. அதேபோன்று பேறுகாலத்தில் மூன்றாவது மற்றும் ஆறாவது மாதங்களில் இருமுறை ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!