TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 23rd December 2023

1. எஃகு மற்றும் அலுமினியம்போன்ற பொருட்களின் இறக்குமதிமீது 2027ஆம் ஆண்டு முதல் ஐக்கிய இராஜ்ஜியம் (UK) செயல்படுத்த திட்டமிட்டுள்ள கரிம வரியின் பெயர் என்ன?

அ. Carbon Border Tax (CBT)

ஆ. Carbon Border Adjustment Mechanism (CBAM)

இ. Global Emissions Import Levy (GEIL)

ஈ. Cross-Border Carbon Surcharge (CBCS)

  • கார்பன்-அடர்த்திமிகுந்த பொருட்களின் இறக்குமதிக்கு 2027ஆம் ஆண்டு முதல் வரி விதிக்க ஐக்கிய இராஜ்ஜியம் (UK) திட்டமிட்டுள்ளது. இந்த வரிக்கு கார்பன் பார்டர் வரி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இரும்பு, எஃகு, அலுமினியம், பீங்கான் பொருட்கள் மற்றும் சிமெண்ட்போன்ற பொருட்களுக்கு இவ்வரி பொருந்தும். இதுபோன்ற பசுமை வரிகளை இந்தியா எதிர்க்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தை அடியொற்றி இங்கிலாந்து இவ்வரியை விதித்துள்ளது.

2. 2023-24 விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டியில் கீழ்காணும் எந்த அணியை தோற்கடித்து ஹரியானா வெற்றிபெற்றது?

அ. இராஜஸ்தான்

ஆ. மகாராஷ்டிரா

இ. பஞ்சாப்

ஈ. குஜராத்

  • நடப்பு டிசம்பரில் நடந்த இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியான விஜய் ஹசாரே கோப்பைக்கான இறுதிப் போட்டியில், இராஜஸ்தானை ஹரியானா தோற்கடித்தது. இந்தப் போட்டி, இராஜ்கோட்டின் சௌராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இந்த வெற்றி இப்போட்டியில் ஹரியானா பெறும் முதல் பட்டத்தைக் குறிக்கிறது. இந்தப் போட்டிகள் முதன்முறையாக 1993-94இல் நடந்தது. 5 முறை கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை தமிழ்நாடு தக்கவைத்துள்ளது.

3. சர்வதேச பாலின சமத்துவப் பரிசை வழங்குகிற நாடு எது?

அ. சுவீடன்

ஆ. பின்லாந்து

இ. நார்வே

ஈ. எஸ்டோனியா

  • 2023-க்கான சர்வதேச பாலின சமத்துவப் பரிசு ஆப்கானிஸ்தான் பெண்கள் திறன்மேம்பாட்டு மையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 2023 டிச.11 அன்று தம்பேரில், அம்மையத்தின் நிர்வாக இயக்குநரான மஹ்பூபா செராஜுக்கு பின்லாந்தின் பிரதமர் பெட்டேரி ஓர்போ €300,000 மதிப்புள்ள விருதை வழங்கினார். பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதிலும் குறிப்பாக ஆப்கானிஸ்தானில், குறிப்பாக சல்லெங்கில் பாலின சமத்துவத்தை மேம்படுத்தியதற்காக இந்த மையத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
  • சர்வதேச பாலின சமத்துவப் பரிசு என்பது பின்லாந்தின் சமூக விவகாரங்கள் மற்றும் சுகாதார அமைச்சகத்தால் நிர்வகிக்கப்பட்டு வழங்கப்படும் ஒரு பரிசாகும். 2017ஆம் ஆண்டு முதல் பரிசின் பங்குதாரராகவும், விருது வழங்கும் விழாவை நடத்தும் நகரமாகவும் தம்பேரே இருந்து வருகிறது.

4. பஞ்சாபின் பல்வேறு மாவட்டங்களில் விளைவிக்கப்பட்ட உருளைக்கிழங்குப்பயிர்களுக்கு கணிசமான சேதத்தை ஏற்படுத்திய உருளைக்கிழங்கு நோயின் பெயரென்ன?

அ. டௌனி பூஞ்சைக்காளான்

ஆ. பின் அழுகல் நோய்

இ நுண்துகள் பூஞ்சைக்காளான்

ஈ. வெர்டிசிலிய வாடல் நோய்

  • பஞ்சாபின் பல்வேறு மாவட்டங்களில் விளைவிக்கப்பட்ட உருளைக்கிழங்குப் பயிர்களை நாசஞ்செய்த உருளைக் கிழங்கு நோய், ‘பின் அழுகல்’ (Late Blight) நோயாகும். இது உருளைக்கிழங்கில் பச்சை நிறத்தினாலான வட்டவடிவ புள்ளிகள் போன்ற வடுக்களை ஏற்படுத்துகிறது. அவை அடர்பழுப்புநிற புண்களாக மாறுகின்றன. மாநிலத்தின் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு சாகுபடி இப்பூஞ்சை தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான ஈரப்பதம் இப் பூஞ்சையின் பெருக்கத்தை ஊக்குவித்து கிழங்கழுகலை ஏற்படுத்துகிறது.

5. யாருடைய நினைவுக்குறிப்புகள், “Four Stars of Destiny” என்ற தலைப்பில் வெளியிடப்படவுள்ளது?

அ. அட்மிரல் கரம்பீர் சிங்

ஆ. ஏர் சீஃப் மார்ஷல் RKS பதௌரியா

இ. ஜெனரல் MM நரவனே

ஈ. லெப்டினன்ட் ஜெனரல் இராஜேந்திர சிங்

  • முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் M M நரவனேவின் வெளியிடப்படவுள்ள நினைவுக்குறிப்பான, “Four Stars of Destiny” ஆனது ‘அக்னிபத்’ இராணுவ ஆட்சேர்ப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது இந்திய ஆயுதப்படைகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்ததாகக் குறிப்பிடுகிறது. ஜெனரல் MM நரவனே தனது இந்த நூலில் தான், ‘டூர் ஆஃப் டூட்டி’ என்ற மாதிரியை (அதாவது குறிப்பிட்ட காலம் பணிசெய்வோர்) போர்வீரர்களின் ஆட்சேர்ப்புக்கு பரிந்துரைத்தாகவும் ஆனால், ‘அக்னிபத்’ கட்டமைப்பு இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைவருக்கும் இந்த வரையறுக்கப்பட்ட மாதிரியை கொண்டுசேர்த்துள்ளதாகவும் (4 ஆண்டுகளுக்கு மட்டும்) எழுதியுள்ளார்.

6. அண்மையில், 2023 – U19 ஆசியக்கோப்பையை வென்ற நாடு எது?

அ. இந்தியா

ஆ. ஐக்கிய அரபு அமீரகம்

இ. பாகிஸ்தான்

ஈ. வங்காளதேசம்

  • 2023 டிச.17 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தை 195 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து 2023 ACC U19 ஆசியக் கோப்பையை வங்காளதேச அணி வென்றது. இது வங்காளதேச அணி வெல்லும் முதல் 19 வயதுக்குட்பட்ட ஆசியக் கோப்பைக்கான பட்டமாகும். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக ஷிப்லி தெரிவானார்.

7. ஐக்கிய நாடுகள் அரபு மொழி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. டிசம்பர் 16

ஆ. டிசம்பர் 18

இ. டிசம்பர் 20

ஈ. டிசம்பர் 19

  • அரபு மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையைக் கொண்டாடும் நோக்கத்தோடு UNESCOஆல் கடந்த 2010ஆம் ஆண்டு நிறுவப்பட்ட உலக அரபு மொழி நாள் ஆண்டுதோறும் டிசம்பர்.18 அன்று அனுசரிக்கப்படுகிறது. சர்வதேச புலம்பெயர்ந்தோர் நாளானது டிச.18 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அதிகரித்து வரும் உலகளாவிய புலம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கையை அங்கீகரிக்கும் நோக்கோடு ஐநா பொது அவையால் கடந்த 2000ஆம் ஆண்டில் இந்த நாள் அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலுள்ள பல்வேறு சிறுபான்மை குழுக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் நாள் டிசம்பர்.18 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
  • பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச நாள் டிச.17 அன்று நினைவுகூரப்படுகிறது. இந்த நாள் முதன் முதலில் கடந்த 2003ஆம் ஆண்டில் கடைப்பிடிக்கப்பட்டது.

8. 2023ஆம் ஆண்டுக்கான மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது பெற்றவர்களில் ஒருவரான சிராக் சந்திரசேகர் ஷெட்டி சார்ந்த விளையாட்டு எது?

அ. சதுரங்கம்

ஆ. பூப்பந்து

இ. டென்னிஸ்

ஈ. ஹாக்கி

  • இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள், 2024 ஜன.09 அன்று குடியரசுத்தலைவர் மாளிகையில் இந்தியக்குடியரசுத் தலைவரால் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பூப்பந்து வீரர்களான சிராக் சந்திரசேகர் ஷெட்டி மற்றும் ரங்கிரெட்டி சாத்விக் சாய் ராஜ் ஆகியோர் நடப்பு 2023ஆம் ஆண்டுக்கான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுடன் கௌரவிக்கப்படுவார்கள். கூடுதலாக, இந்த ஆண்டு 26 பேர் அர்ஜுனா விருதைப் பெறவுள்ளனர்.

9. அண்மையில், பிரம்மபுத்திராபோன்ற பெரிய பின்னிய நீரோட்டங்களை உடைய ஆறுகளின் சிக்கலான நீரோட்ட முறைகளைப் புரிந்துகொள்வதற்காக, ‘பிரம்மா-2D’ என்ற மாதிரியை உருவாக்கியுள்ள ஐஐடி எது?

அ. ஐஐடி மெட்ராஸ்

ஆ. ஐஐடி கான்பூர்

இ. ஐஐடி கௌகாத்தி

ஈ. ஐஐடி பெங்களூரு

  • பிரம்மபுத்திரா போன்ற பெரிய அளவிலான பின்னிய நீரோட்டங்களை உடைய ஆறுகளின் சிக்கலான நீரோட்ட முறைகளைப் புரிந்துகொள்வதற்காக, IIT கௌகாத்தி ஆராய்ச்சியாளர்கள், BRAHMA-2D (Braided River Aid: Hydro-Morphological Analyzer) என்ற பெயரில் உள்நாட்டு ஆற்று மாதிரியை உருவாக்கியுள்ளனர். இது மேம்பட்ட கணித முறைமைகளைக் கொண்டு ஆற்றின் முப்பரிமாண தோற்றத்தை வரைபடமாக்குகிறது. இந்த மாதிரியால் பிரம்ம புத்திரா ஆற்றின் குறுக்கே அணைகரைகள், பாலங்கள்போன்ற நிலையான கட்டமைப்புகளை வடிவமைப்பதற்கான மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்க முடியும். மஜூலி தீவுக்கு அருகில் இது வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

10. ஐக்கிய நாடுகள் அவையானது எதிர்வரும் 2024ஆம் ஆண்டை எதன் சர்வதேச ஆண்டாக அறிவித்துள்ளது?

அ. தினை

ஆ. பருப்பு வகைகள்

இ. செயற்கை நுண்ணறிவு

ஈ. ஒட்டகங்கள்

  • உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்வில் அல்பாகாஸ், பாக்டிரியன் ஒட்டகங்கள், டிரோமெடரிகள், குவானாகோஸ், லாமாக்கள் மற்றும் விக்குனாக்கள்போன்ற ஒட்டகங்களின் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் அவை 2024ஆம் ஆண்டை, ‘சர்வதேச ஒட்டகங்கள் ஆண்டாக’ அறிவித்துள்ளது.
  • இந்த அறிவிப்பின்மூலம் ஒட்டகங்களின் பயன்படுத்தப்படாத திறனைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தப்படும். மேலும், ஒட்டகங்கள் ஈடுபடும் தொழிற்துறைகளில் அதிகரித்த முதலீட்டை ஊக்குவிப்பது, ஆராய்ச்சி, திறன்மேம்பாடு மற்றும் புதுமையான நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்படும்.

11. அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற, ‘Zero Trust Authentication’ என்றால் என்ன?

அ. ஓர் இணையப்பாதுகாப்பு கட்டமைப்பு

ஆ. ஒற்றை உள்நுழைவு தீர்வு

இ. தரவு குறியாக்க முறை

ஈ. ஒரு வைரஸ் தடுப்பு மென்பொருள்

  • இணையவெளிப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, பதினேழு அமைச்சகங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த 10,000 பயனர்களுக்கு பாதுகாப்பான மின்னஞ்சல் முறையை இந்திய அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது. தேசிய தகவல் மையத்தால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, ‘Zero Trust Authentication’ முறையைப் பயன்படுத்துகிறது. இதில் உயிரியளவு அல்லது முக அங்கீகாரத்துடன் கூடிய இரு காரணி அங்கீகாரம் உள்ளது. இது 2022 நவம்பரில் தில்லி AIIMSஇல் நடைபெற்ற சைபர் தாக்குதலை அடுத்து உருவாக்கப்பட்டது.

12. 29ஆவது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான, ‘தங்க இராயல் வங்காளப்புலி’ விருதை வென்ற திரைப்படம் எது?

அ. ஃபெதர் வெயிட்

ஆ. எண்ட்லெஸ் பார்டஸ்

இ. சில்ட்ரன் ஆஃப் நோபடி

ஈ. காந்தாரா

  • 29ஆவது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில், ‘சிறந்த திரைப்படத்திற்கான – தங்க இராயல் வங்காளப் புலி’ விருதை, ‘சில்ட்ரன் ஆஃப் நோபடி’ வென்றது. ‘எண்ட்லெஸ் பார்டஸ்’ மற்றும் ‘காந்தாரா’ போன்ற பிற திரைப்படங்கள் 54ஆவது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் (IFFI) கௌரவிக்கப்பட்டன. கன்னடத் திரையுலகில், ‘காந்தாரா’ வரலாறு படைத்தது. மைக்கேல் டக்ளசுக்கு, ‘சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கப்பட்டது. மேலும், ‘பஞ்சாயத்து சீசன் 2’ சிறந்த இணையத் தொடராக தேர்ந்தெடுக்கப்பட்டது.

13. காப்பீடு பெறுவோர் மற்றும் வழங்குவோருக்கு இடையே மருத்துவக் காப்பீட்டுத் தொகை கோரல் செயல் முறையை எளிதாக மாற்றுவதற்காக தேசிய சுகாதார ஆணையத்தால் உருவாக்கப்பட்ட தளம் எது?

அ. Health Data Exchange (HDX)

. National Health Claims Exchange (HCX)

இ. Medical Insurance Transfer Protocol (MITP)

ஈ. Healthcare Interoperability System (HIS)

  • தேசிய சுகாதார ஆணையமானது National Health Claims Exchange (HCX) என்ற தளத்தை உருவாக்கியுள்ளது. காப்பீடு பெறுவோர் மற்றும் வழங்குவோர்க்கு இடையே மருத்துவக் காப்பீட்டுத் தொகை கோரல் செயல்முறைகளை பாதுகாப்பான முறையில் பரிமாறிக்கொள்வதற்கும், அதற்கான தீர்வுகளை நெறிப்படுத்துவதற்கும் இது உதவுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. குடியரசு நாள் விழா: பிரான்ஸ் அதிபர் மேக்ரான் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு.

குடியரசு நாள் விழாவில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவுள்ளார். ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க உலகத் தலைவர்களுக்கு மத்திய அரசு அழைப்புவிடுத்துவருகிறது. COVID பரவல் காரணமாக 2021, 2022ஆம் ஆண்டுகளில் மட்டும் சிறப்பு விருந்தினர்கள் எவரும் பங்கேற்கவில்லை. நடப்பாண்டு (2023) எகிப்து அதிபர் எல்-சிசி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். குடியரசு நாள் விழாவில் கலந்துகொள்ளும் 6ஆவது பிரான்ஸ் தலைவர் மேக்ரான் என்பது குறிப்பிடத்தக்கது.

2. மத்திய அரசின் வரிப்பகிர்வு: தமிழ்நாட்டுக்கு `2,967 கோடி.

மாநிலங்களுக்கு அளிக்கப்படும் மாதாந்திர வரிப் பகிர்வில் கூடுதல் தவணையாக `72,961 கோடியை மத்திய அரசு பகிர்ந்தளித்துள்ளது. அதில் தமிழ்நாட்டுக்கு `2,967 கோடி வழங்கப்பட்டுள்ளது. நிதி ஆணையத்தின் பரிந்துரையின் படி, மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 41%, ஒரு நிதியாண்டில் 14 தவணைகள்மூலம் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

3. தேசிய அளவில் பத்தாம் வகுப்பு மாணவர் இடைநிற்றல் விகிதம் 21%; தமிழ்நாட்டில் 9%; இடைநிற்றலே இல்லாத மாநிலம் மணிப்பூர்.

மாநில அளவில் பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்து இடைநிற்கும் விகிதத்தைப் பொருத்தவரை 49.9 சதவீதத்துடன் ஒடிஸா மாநிலம் மிகமோசமான நிலையில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் 42.1 சதவீதத்துடன் பிகார் உள்ளது.

10 சதவீதத்துக்கு குறைவான இடைநிற்றல் விகிதமுள்ள முதல் மூன்று மாநிலங்கள்:

1) மத்திய பிரதேசம் (9.8%) 2) உத்தர பிரதேசம் (9.2%) 3) தமிழ்நாடு (9%)

PM ஸ்ரீ பள்ளித்திட்டம்: சேராத தமிழ்நாடு உட்பட ஆறு மாநிலங்கள்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள, “PM ஸ்ரீ” பள்ளிகள் என்ற முன்னேறும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள் திட்டத்தில் தமிழ்நாடு, பிகார், தில்லி, கேரளம், ஒடிஸா மாநிலங்கள் சேராதது தெரியவந்துள்ளது.

4. கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள்.

தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை ஜன.19-31ஆம் தேதி வரை நடத்தவுள்ளன. இந்தப் போட்டிக்கான திருவள்ளுவர் இலச்சினையை, சென்னையில் அமைச்சர் உதயநிதி வெளியிட்டார். இந்தப் போட்டியின் சின்னமாக, வீர மங்கை வேலு நாச்சியாரின் உருவத்தை மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் வெளியிட்டார். விளையாட்டுப் போட்டிக்கான சுடரை ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா மற்றும் ஹாக்கி வீரர் மாரீஸ்வரன் ஆகியோர் அமைச்சர்களிடம் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!