TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 26th October 2023

1. இந்தியாவின் முதல் பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பின் பெயர் என்ன?

அ. சாதாரண் பாரத்

ஆ. நமோ பாரத் 🗹

இ. அந்தியோதய பாரத்

ஈ. கங்கை பாரத்

  • நாட்டின் முதல் பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பான ‘நமோ பாரத்’ திட்டத்தை பிரதமர் கொடியசைத்து தொடக்கிவைத்தார். தில்லி – காசியாபாத் – மீரட் பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பு வழித்தடத்தின் முன்னுரிமைப் பிரிவும் பகுதியும் திறக்கப்பட்டது. பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பு எனப் பெயரிடுவதற்கு முன்பு ‘RapidX’ இரயில் என்று இது அழைக்கப்பட்டு வந்தது. இந்த இரயிலின் வேகம் மணிக்கு 180 கிமீ ஆகும்.

2. 2023-24 நிதியாண்டில் ஏப்ரல்-செப்டம்பர் காலகட்டத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளராக இருந்த நாடு எது?

அ. சீனா

ஆ. இஸ்ரேல்

இ. அமெரிக்கா 🗹

ஈ. ஐக்கிய அரபு அமீரகம்

  • நடப்பு நிதியாண்டில் ஏப்ரல்-செப்டம்பர் மாதங்களில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளராக அமெரிக்கா உருவெடுத்துள்ளது. 2022-23 நிதியாண்டிலும் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளராக அமெரிக்கா (USA) இருந்தது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2023 ஏப்ரல்-செப்டம்பரில், 11.3% சரிந்து $59.67 பில்லியன் டாலராக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வர்த்தகம் $67.28 பில்லியன் டாலராக இருந்தது. இதேபோல், இந்தியா மற்றும் சீனா இடையேயான இருவழி வர்த்தகமும் 3.56 சதவீதம் குறைந்து $58.11 பில்லியன் டாலராக உள்ளது.

3. “ஹரிமௌ சக்தி – 2023” என்ற பயிற்சியானது கீழ்காணும் எவ்விருநாடுகளுக்கு இடையே நடைபெற்றது?

அ. இந்தியா மற்றும் மலேசியா 🗹

ஆ. இந்தியா மற்றும் இலங்கை

இ. இந்தியா மற்றும் மியான்மர்

ஈ. இந்தியா மற்றும் பிரான்ஸ்

  • இந்திய மற்றும் மலேசிய இராணுவத்தினரிடையேயான “ஹரிமௌ சக்தி – 2023” என்ற கூட்டு இருதரப்புப் பயிற்சி இந்தியாவில் உம்ரோய் என்னுமிடத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. மலேசிய இராணுவக் குழுவில் மலேசிய இராணுவத்தின் 5ஆவது இராயல் படைப்பிரிவும், இந்தியப் படையில் இராஜபுதன படைப்பிரிவும் பங்கேற்றன. இந்தப் பயிற்சியின் கடந்த 2022ஆம் ஆண்டு பதிப்பு மலேசியாவில் நடைபெற்றது.

4. பாரத் தேசிய இணையவழி பாதுகாப்புப் பயிற்சி – 2023ஐ நடத்திய நிறுவனம் எது?

அ. NASSCOM

ஆ. தேசிய பாதுகாப்புக் குழுமச் செயலகம் 🗹

இ. NITI ஆயோக்

ஈ. தேசிய தகவலியல் மையம்

  • பாரத் தேசிய இணையவழி பாதுகாப்புப் பயிற்சி – 2023ஐ தேசிய பாதுகாப்புக் குழுமச் செயலகமும் இந்திய அரசும் இராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தின. இந்தப் பயிற்சியின்போது மதிப்புமிக்க பாரத் NCX CISOS மாநாடும் நடத்தப்பட்டது. இதில் இருநூற்றுக்கும் மேற்பட்ட தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகள் (CISOS) கலந்துகொண்டனர்.

5. 2023இல் எதிர்கால முதலீட்டு முன்முயற்சியின் 7ஆவது பதிப்பை நடத்திய நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. ஐக்கிய இராஜ்ஜியம்

இ. சவூதி அரேபியா 🗹

ஈ. இந்தியா

  • மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ரியாத்தில் நடந்த எதிர்கால முதலீட்டு முன் முயற்சியின் (FII) 7ஆவது பதிப்பில் பங்கேற்றார். அவர் இந்த நிகழ்வை வழங்கும் சவூதி அரேபியாவின் பல முக்கிய பிரமுகர்களை அப்போது சந்தித்தார். பியூஷ் கோயல், FIIஇன் 7ஆவது பதிப்பில், “The Coming Investment Mandate” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
  • எதிர்கால முதலீட்டு முன்முயற்சி நிறுவனம் என்பது சவூதி அரேபிய அரசால் 2019ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஓர் உலகளாவிய இலாப-நோக்கற்ற அறக்கட்டளையாகும். செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோடிக்ஸ், கல்வி, சுகாதாரம் மற்றும் நீடித்த தன்மை ஆகிய நான்கு துறைகளில் கவனம் செலுத்துகிறது.

6. இந்திய நாட்டின் அந்நிய செலாவணி நிர்வாகத்துடன் தொடர்புடைய நிறுவனம் எது?

அ. SEBI

ஆ. இந்திய ரிசர்வ் வங்கி 🗹

இ. நிதி அமைச்சகம்

ஈ. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்

  • இந்திய ரிசர்வ் வங்கி அந்நிய செலாவணி மேலாண்மை (கடன் கருவிகள்) ஒழுங்குமுறைகள், 2019இல் திருத்தம் செய்துள்ளது. இந்தத் திருத்தத்தின்கீழ், ரஷ்யா உள்ளிட்ட 21 நாடுகள், தேதியிட்ட அரசுப் பத்திரங்கள் மற்றும் கருவூல இரசீதுகளில் இப்போது ரூபாய் கணக்குமூலம் முதலீடு செய்வியலும். அதிகரித்து வரும் உபரி ரூபாய் சிக்கலால் ரஷ்யா பாதிக்கப்பட்டுள்ளது.

7. ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிவேகமாக 2000 இரன்களை எட்டிய இந்திய கிரிக்கெட் வீரர் யார்?

அ. K L இராகுல்

ஆ. சுப்மன் கில் 🗹

இ. இரவீந்திர ஜடேஜா

ஈ. ருதுராஜ் கெய்க்வாட்

  • நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். கடந்த 2011ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக தனது நாற்பதாவது இன்னிங்சில் அசிம் அம்லா இச்சாதனையை படைத்திருந்தார். சுப்மன் கில் தனது 38ஆவது ஒருநாள் இன்னிங்ஸில் இந்தச் சாதனையை எட்டியுள்ளார்.

8. உலகக்கோப்பை வரலாற்றில் இரண்டு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?

அ. ஜஸ்பிரித் பும்ரா

. முகமது ஷமி 🗹

இ. R அஸ்வின்

ஈ. ஹர்திக் பாண்டியா

  • நியூசிலாந்துக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன்மூலம், ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் இரு முறை ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை முகமது ஷமி பெற்றார். ODI உலகக்கோப்பைகளில் இரண்டு முறை ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய ஒன்பதாவது பந்துவீச்சாளராகவும் அவர் மாறினார். ஷமி, 2019 உலகக்கோப்பையில் இந்தியாவின் இரண்டாவது அதிக விக்கெட் எடுத்தவர் ஆனார்; அதில் அவர் இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் ஐந்து விக்கெட்டுகளை எடுத்தார்.

9. NCEL என்பது கீழ்காணும் எந்த மத்திய அமைச்சகத்தின்கீழ் புதிதாக நிறுவப்பட்ட ஓர் ஏற்றுமதி அமைப்பாகும்?

அ. வணிக அமைச்சகம்

ஆ. MSME அமைச்சகம்

இ. கூட்டுறவு அமைச்சகம் 🗹

ஈ. நிதி அமைச்சகம்

  • தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் (NCEL) என்பது மத்திய கூட்டுறவு அமைச்சகத்தின்கீழ், கூட்டுறவுத்துறையில் ஏற்றுமதிகளை மேற்பார்வையிடும் ஒரு மைய அமைப்பாகும். இந்நிறுவனம் ஏற்கனவே `7,000 கோடி மதிப்பிலான பணிப்புகளைப் பெற்றுள்ளது. மத்திய கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா NCELஇன் இலச்சினை, இணையதளம் மற்றும் சிற்றேட்டை அண்மையில் வெளியிட்டார்.

10. Chroococcidiopsis cubana’ பாக்டீரியாவின் சிறப்புப் பண்பு யாது?

அ. மாசுகளை சுத்தம் செய்வது

ஆ. உயிர்வளியை (O2) உற்பத்தி செய்வது 🗹

இ. மரத்தின் வளர்ச்சியை அதிகரிப்பது

ஈ. சூரியவொளித் தகடுகளில் பயன்படுத்தப்படுவது

  • Chroococcidiopsis cubana’ எனப்படும் ஒரு வகை பாலைவனத்தில் வாழும் பாக்டீரியாவைப் பயன்படுத்தி செவ்வாய்க்கோளில் உயிர்வளியை உற்பத்தி செய்வதற்கான ஒரு புதுமையான அணுகுமுறையை ஆய்வாளர்கள் ஆய்ந்துவருகின்றனர். இந்நுண்ணுயிரிகள் சூரியவொளியைப் பயன்படுத்துவதன்மூலமும், CO2ஐ உறிஞ்சுவதன் மூலமும், அவற்றின் வளர்சிதை மாற்ற செயல்முறைகள்மூலம் O2ஐ உருவாக்குவதன்மூலமும் கடுஞ்சூழலில் செழித்து வளரும் திறனைக் கொண்டுள்ளன.
  • இது எதிர்கால செவ்வாய்க் கோளுக்கான பயணங்கள் மற்றும் மனித காலனித்துவ முயற்சிகளுக்கு நிலையான உயிர்வளி (O2) வழங்கலை உருவாக்குவதற்கான சாத்தியமான தீர்வை வழங்குகிறது.

11. ஓர் அண்மைய ஆய்வின்படி, எந்த வான்பொருளின் வயது குறைந்தது 4.46 பில்லியன் ஆண்டுகள் இருக்கும் என மறுகணக்கீடு செய்யப்பட்டுள்ளது?

அ. ஞாயிறு

ஆ. திங்கள் 🗹

இ. புவி

ஈ. செவ்வாய்

  • ஓர் அண்மைய ஆய்வின்படி, திங்களின் வயது குறைந்தது 4.46 பில்லியன் ஆண்டுகள் இருக்கலாம் என மீண்டும் கணக்கிடப்பட்டுள்ளது. இது அதன் முன்னர் மதிப்பிடப்பட்ட வயதிலிருந்து 40 மில்லியன் ஆண்டுகள் அதிகமாகும். 1972இல் அப்பல்லோ விண்வெளி வீரர்களால் எடுத்துவரப்பட்ட நிலவின் படிகங்களை ஆய்வுசெய்ததன்மூலம் இந்த வயது கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது திங்களின் உருவாக்கக் காலவரிசைபற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது.

12. அரபிக்கடலில் உருவான ‘தேஜ்’ சூறாவளிக்கு பெயரிட்ட நாடு எது?

அ. பாகிஸ்தான்

ஆ. இந்தியா 🗹

இ. நேபாளம்

ஈ. வங்காளதேசம்

  • இந்திய வானிலை ஆய்வுமையம் அரபிக்கடலில், ‘தேஜ்’ என்ற புயல் உருவானது என்றும், வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை ‘ஹாமூன்’ என்ற மற்றொரு புயலை உருவாக்கியது என்றும் தெரிவித்து உள்ளது. 2018ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக இந்தியா இரட்டை சூறாவளிப் புயல்களை சந்திக்கிறது. பாரசீக மொழியில் சதுப்பு நிலங்களைக் குறிக்கும் ‘ஹாமூன்’ என்று ஈரான் பெயரிட்ட நிலையில், ‘தேஜ்’ சூறாவளிக்கு இந்தியா பெயர்சூட்டியுள்ளது.

13. இராம்பூர் வேட்டைநாய், ஹிமாச்சல மேய்ப்பன் நாய், காடி நாய், பாக்கர்வால் மற்றும் திபெத்திய மஸ்தீப் மலை நாய் ஆகியவை கீழ்க்காணும் எந்த விலங்கினத்தின் வகைகளாகும்?

அ. ஆடு

ஆ. நாய் 🗹

இ. குதிரை

ஈ. கால்நடை

  • BSF, CRPF மற்றும் CISF போன்ற மத்திய ஆயுதக் காவல் படைகள், இராம்பூர் வேட்டைநாய் போன்ற இந்திய நாய் இனங்களை காவல் பணிகளில் ஈடுபடுத்த தயாராகி வருகின்றன. இந்திய நாய் இனங்களான இராம்பூர் வேட்டைநாய், ஹிமாச்சல மேய்ப்பன் நாய், காடி நாய், பாக்கர்வால் மற்றும் திபெத்திய மஸ்தீப் மலை நாய் உள்ளிட்ட நாய்கள் விரைவில் பல்வேறு காவல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்தேக நபர்களைக் கண்டறிதல், போதைப்பொருள் மற்றும் வெடிபொருட்களைக் கண்டறிதல் மற்றும் அதிக ஆபத்தில் உள்ள பகுதிகளில் ரோந்து செல்வது ஆகியவை இந்தப் பணிகளில் அடங்கும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஆரோக்கிய நடைப்பயணம் திட்டம்: நவ.4இல் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் ‘Health Walk’ எனப்படும் ஆரோக்கிய நடைப்பயணத் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள் நவ.4ஆம் தேதி தொடங்கிவைக்கவுள்ளார். தமிழ்நாட்டில் ‘மக்களைத்தேடி மருத்துவம்’, ‘இன்னுயிர் காப்போம்’, ‘நம்மை காக்கும் 48’, ‘இதயம் காப்போம்’, ‘சிறுநீரக பாதுகாப்புத் திட்டம்’, ‘கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்’ உள்ளிட்டவை சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

2. CBSE பாடநூல்களில் ‘இந்தியா’வுக்குப் பதில் ‘பாரத்’: NCERT குழு பரிந்துரை.

CBSE (மத்திய இடைநிலைக்கல்வி வாரியம்) உள்ளிட்ட கல்வி வாரியங்கள் பின்பற்றி வரும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (NCERT) பாடநூல்களில் இந்தியாவின் பெயர் ‘பாரத்’ என மாற்றம் செய்யப்படவுள்ளது. இதற்கான பரிந்துரையை NCERT சார்பில் அமைக்கப்பட்ட சமூக அறிவியல் பாடத்துக்கான உயர்நிலைக்குழு அளித்துள்ளது.

3. அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு.

தற்போது 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை ஜூலை.1-ஆம் தேதி முதல் 46 சதவீதமாக உயர்த்தி, அதாவது 4 சதவீதமாக அதிகரித்து வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் 16 இலட்சம் பேர் பயனடைவர்.

4. சுதந்திர பாலஸ்தீனத்துக்கு எப்போதும் ஆதரவு: ஐ.நா. கூட்டத்தில் இந்தியா.

இறையாண்மைகொண்ட சுதந்திரமான பாலஸ்தீனத்துக்கு எப்போதும் ஆதரவளிப்பதாக ஐநா பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தெரிவித்தது. நியூயார்க் நகரத்தில் ஐநா பாதுகாப்பு அவையின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐநா-வுக்கான இந்திய துணைதூதர் இரவீந்திரா பங்கேற்றார்.

5. இந்தியா உள்பட 6 நாடுகளுக்கு கட்டணமிலா விசா: இலங்கை அமைச்சரவை ஒப்புதல்.

இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணியர்க்கு கட்டணமிலா சுற்றுலா விசா வழங்க இலங்கை அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது. முன்னோட்ட நடைமுறையில் இந்தத் திட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச்.31ஆம் தேதி வரை இந்த முன்னோட்டத்திட்டம் நடைமுறையில் இருக்கும். இலங்கைக்குச் சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

6. ஆசிய துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மூன்று பதக்கம்.

தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்கள் கிடைத்தன. இதில், ஸ்கீட் ஆடவர் அணிகள் பிரிவில் அனந்த்ஜீத் சிங் நருகா, குர்ஜோத் காங்குரா, அங்கத்வீர் சிங் பாஜ்வா ஆகியோர் கூட்டணி, இறுதிச்சுற்றில் 358 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. தென் கொரியா, கஜகஸ்தான் அணிகள் முறையே வெள்ளி, வெண்கலம் பெற்றன.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!