TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 27th November 2023

1. தேசிய கோபால் இரத்னா விருதுகளுடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ. வேளாண் அமைச்சகம்

ஆ. மீன்பிடி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் 🗹

இ. MSME அமைச்சகம்

ஈ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

  • பால்வளத் துறையில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு வழங்கப்படும், மதிப்புமிக்க தேசிய கோபால் இரத்னா விருதுகள் தேசிய பால் நாளன்று வழங்கப்பட்டது. தேசிய கோபால் இரத்னா விருது கால்நடை மற்றும் பால்வளத் துறையில் மிகவுயர்ந்த தேசிய விருதுகளில் ஒன்றாகும். உள்நாட்டுக் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பால் கூட்டுறவு சங்கங்கள், பால் உற்பத்தியாளர் நிறுவனங்கள், பால் பண்ணையாளர்கள் போன்றோரை அங்கீகரித்து ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த விருது வழங்கப்படுகிறது.

2. ‘சூர்ய கிரண்’ என்பது இந்தியாவுக்கும் எந்நாட்டுக்கும் இடையில் நடைபெறும் கூட்டு இராணுவப் பயிற்சியாகும்?

அ. நேபாளம் 🗹

ஆ. வங்காளதேசம்

இ. இலங்கை

ஈ. பிரான்ஸ்

  • ‘சூர்ய கிரண்’ கூட்டு இராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக 334 பேர்கொண்ட நேபாள ராணுவக்குழு இந்தியா வந்தது. உத்தரகண்ட் மாநிலம் பித்தோர்கரில் நவ.24ஆம் தேதி முதல் டிசம்பர்.07ஆம் தேதி வரை இந்த ஒத்திகைப் பயிற்சி நடைபெறவுள்ளது. இது ஒரு வருடாந்திர நிகழ்வாகும், இது இருநாடுகளிலும் மாறிமாறி நடத்தப்படுகிறது.
  • காடுகளில் போர், மலைப்பிரதேசங்களில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கான ஐநா சாசனத்தின்கீழ் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகியவற்றில் ஒருவருக்கொருவர் உதவிசெய்வதை மேம்படுத்துவதே இப்பயிற்சியின் நோக்கமாகும்.

3. 2024ஆம் ஆண்டிற்கான பன்னாட்டு சர்க்கரை அமைப்பின் (ISO) தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள நாடு எது?

அ. இந்தியா 🗹

ஆ. சீனா

இ. ரஷ்யா

ஈ. அமெரிக்கா

  • லண்டனைச் சார்ந்த பன்னாட்டு சர்க்கரை அமைப்பு அதன் 63ஆவது கூட்டத்தின்போது, 2024ஆம் ஆண்டிற்கான அவ்வமைப்பின் தலைவராக இந்தியாவை அறிவித்தது. கரும்பு சாகுபடி, சர்க்கரை ஆகியவற்றில் மிகவும் நிலையான நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதற்கு உறுப்புநாடுகளை ஒன்றிணைப்பதில் முதன்மை கவனஞ்செலுத்தப்படும். எத்தனால் உற்பத்தி மற்றும் உப தயாரிப்புகளின் பயன்பாட்டை மேம்படுத்துதல் குறித்தும் அப்போது பேசப்பட்டது.

4. குறைக்கடத்திகள் குறித்த ஒரு முறையான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, கீழ்காணும் எந்த அமைப்புடன் இந்தியா மேற்கொண்டுள்ளது?

அ. G20

ஆ. G7

இ. ஐரோப்பிய ஒன்றியம் 🗹

ஈ. ஆசியான்

  • இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் குறைக்கடத்திகள் குறித்த ஒரு முறையான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளன. EU-இந்தியா வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப குழுமத்தின் (TTC) தலைவர்களுக்கு இடையே நடந்த கலந்துரையாடலின்போது இந்த ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக, இரண்டு நிறுவனங்களுக்கிடையில் குறைக்கடத்திகள் துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒத்துழைப்பில் மிகுந்த பங்களிப்பு செய்யப்படும்.

5. இந்தியாவின் முதல் தேன் கரடி மீட்பு மையம் அமைக்கப்பட்டுள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. அஸ்ஸாம்

இ. மேற்கு வங்காளம்

ஈ. கர்நாடகா 🗹

  • கடந்த 2000ஆம் ஆண்டு கர்நாடகாவில் பன்னர்கட்டா தேசிய பூங்காவில் தொடங்கப்பட்ட தேன் கரடி மீட்பு மையம், உலகளவில் இரண்டாவது பெரிய தேன் கரடி மீட்பு மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அது அதன் 18ஆவது ஆண்டு நிறைவை சமீபத்தில் அடைந்தது. தேன்கரடி மீட்பு மையமானது இந்தியாவில் கரடிகளை பராமரிப்பவர்களிடமிருந்து மீட்கப்பட்ட தேன் கரடிகளுக்கான முதல் மையமாகும்.

6. ஏரியன் 6 ஏவுகலத்தை உருவாக்கிய விண்வெளி முகமை எது?

அ. NASA

ஆ. ESA 🗹

இ. JAXA

ஈ. ISRO

  • ‘ஏரியன் 6’ என்பது ஐரோப்பிய விண்வெளி முகமையின் சார்பாக ஏரியன் குழுமத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மீண்டும் பயன்படுத்த இயலாத ஐரோப்பிய ஏவுதள அமைப்பாகும். ஐரோப்பாவால் அண்மையில் உருவாக்கப்பட்ட இந்த ‘ஏரியன் 6’ ஏவுகலம் குறிப்பிடத்தக்க முழு அளவிலான சோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியது. ‘ஏரியன் 6’ ஏவுகலத்தின் வளர்ச்சிக்கு ஏரியன்ஸ்பேஸ், ஐரோப்பிய விண்வெளி முகமை சார்பாக பணிபுரிகிறது.

7. ‘தேசிய அளவிலான மாசு தடுப்புப் பயிற்சியை (NATPOLREX)’ நடத்துகிற அமைப்பு எது?

அ. தேசிய பசுமை தீர்ப்பாயம்

ஆ. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்

இ. இந்திய கடலோரக் காவல்படை 🗹

ஈ. NITI ஆயோக்

  • இந்திய கடலோரக் காவல்படையால் குஜராத் மாநிலத்தின் வாடினாரில் 9ஆவது தேசிய அளவிலான மாசு தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. தேசிய எண்ணெய் கசிவு பேரிடர் தற்செயல் திட்டத்தின் விதிகளைப் பயன்படுத்தி கடலில் எண்ணெய் கசிவைச் சமாளிக்க பல்வேறு வளமுகமைகளுக்கு இடையிலான தயார்நிலை & ஒருங்கிணைப்பின் அளவைச் சோதிக்கும் அதன் நோக்கத்தை இந்தப் பயிற்சி நிறைவேற்றியது.

8. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, ‘பாதுகாப்பான நகர கட்டளை மையம்’ தொடங்கப்பட்ட இந்திய நகரம் எது?

அ. லக்னோ

ஆ. பெங்களூரு 🗹

இ. பாட்னா

ஈ. புது தில்லி

  • ‘பெங்களூரு பாதுகாப்பான நகர கட்டளை மையத்தை’ அண்மையில் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா திறந்து வைத்தார். நிர்பயா யோஜனா திட்டத்தின்கீழ் `660 கோடி செலவில் இக்கட்டளை மையம் கட்டப்பட்டுள்ளது. அதன் திட்ட மதிப்பீட்டில் 60 சதவீதத்தை மத்திய அரசு வழங்கிய நிலையில், மீதம் 40 சதவீதத்தை மாநில அரசு செலவிட்டுள்ளது.

9. கிஷ்த்வார் குங்குமப்பூவுக்கு புவிசார் குறியீடு பெற்ற மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. சிக்கிம்

ஆ. ஜம்மு காஷ்மீர் 🗹

இ. அருணாச்சல பிரதேசம்

ஈ. அஸ்ஸாம்

  • ஜம்மு காஷ்மீரில், மலைப்பகுதி மாவட்டமான கிஷ்த்வார் மாவட்டத்தில் குங்குமப்பூ அதிக பரப்பளவில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது. அண்மையில் இந்தக் குங்குமப்பூவுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் சில பகுதிகளுடன் ஜம்முவின் கிஷ்த்வார் பகுதியின் சில பகுதிகளிலும் இது விளைகிறது. இது கிஷ்த்வாரில் ஒரு முதன்மை பணப்பயிராக பயிரிடப்படுகிறது. கிஷ்த்வாரின் குங்குமப்பூ உற்பத்தி உள்ளூரில் மண்டல் எனப்படுகிறது.

10. 2023 – உலக கழிவறை நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Accelerating Change 🗹

ஆ. Improved sanitation systems

இ. Access to sanitation

ஈ. Access to water

  • கழிவறைகளின் கண்டுபிடிப்பைக் குறிக்கவும், சுகாதார நெருக்கடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவுமாக ஒவ்வோர் ஆண்டும் நவ.19 அன்று உலக கழிவறை நாள் அனுசரிக்கப்படுகிறது. உலக கழிவறை நாளானது ஐநா – நீர் மற்றும் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களின் கூட்டுறவில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு (2023) உலக கழிவறை நாளுக்கானக் கருப்பொருள், ‘Accelerating Change’ என்பதாகும்.

11. எத்தனை இந்தியர்கள், ‘BBC 100 பெண்கள் பட்டியல் – 2023’இல் இடம்பெற்றுள்ளனர்?

அ. 3 🗹

ஆ. 4

இ. 5

ஈ. 7

  • ‘BBC 100 பெண்கள் பட்டியல் – 2023’ ஆனது உலகளவில் பெண்களின் உரிமைகளில் கவனம் செலுத்துகிறது. இந்தப் பட்டியல் மிச்செல் ஒபாமா, அமல் குளூனி மற்றும் டிம்னிட் கெப்ரு போன்ற தன்னார்வலர்கள் மற்றும் பெண் தலைவர்களை உள்ளடக்கியது. ஹிந்தி நடிகை தியா மிர்சா மற்றும் இந்திய தேசிய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி ஹர்மன்ப்ரீத் கௌர், நேஷனல் ஜியோகிராஃபிக்கின் நிழற்படக் கலைஞர் ஆரத்தி குமார்-ராவ் உள்ளிட்ட மூன்று இந்திய பெண்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் ‘ஸ்டார்ட் அப் தமிழா’:

தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையிலும், தொழில்முனைவுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையி -லும் ‘ஸ்டார்ட்அப் தமிழா’ என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியையும், அதற்குப் பதிவு செய்வதற்கான இணைய தளத்தையும் அமைச்சர் தா. மோ. அன்பரசன் சென்னை ஐஐடி வளாகத்தில் தொடக்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் முகமை நிறுவனமான, ‘ஸ்டார்ட்அப் TN’மூலம் மேற்கொள்ளப்படும் ‘ஸ்டார்ட்அப் தமிழா’ திட்டத்தில் பல்வேறு முதலீட்டாளர்கள் `200 கோடி மூதலீடு செய்துள்ளனர். இதன்மூலம் சிறந்த ஐம்பது தொழில்முனைவோர் தேர்ந்தெடு -க்கப்பட்டு முதலீட்டாளர்களின் வழிகாட்டுதலைப் பெறுவர்.

2. சொற்குவையில் 14 இலட்சம் சொற்கள்; 3 இலட்சம் பயனர்கள்: அகரமுதலி இயக்ககம் தகவல்.

தமிழ்நாடு அரசின் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின்கீழ் உருவாக்கப்பட்ட, ‘சொற்குவை’ தளத்தில் பதிவேற்றப்பட்ட கலைச்சொற்களின் எண்ணிக்கை 14 இலட்சத்தைக் கடந்தது. அதேவேளையில், அதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் மூன்று இலட்சத்தைத் தாண்டியுள்ளது. துறைசார்ந்த கலைச்சொற்களை எல்லாம் ஒன்றாகத் திரட்டி, அவற்றுக்கு இணையான தமிழ்க்கலைச் சொற்களை வடிவமைத்து, இணையதளத்தின் வழியாக பொது வெளியில் வெளியிடுவது, தமிழில் உள்ள அகராதிகளில் இடம்பெற்றுள்ள அனைத்துச் சொற்களையும் ஒன்றுதிரட்டி, அவற்றில் மீண்டும் வந்த சொற்களே வராமல் நிரல்படுத்தி, தமிழின் சொல்வளத்தை உலகறியச்செய்வதே அகரமுதலி இயக்கச் சொற்குவை நோக்கமாகும்.

3. ஐநா பருவநிலை மாநாடு.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரத்தில் 28ஆவது ஐநா பருவநிலை மாநாடு, நவம்பர்.30ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில் பாரீஸில் நடைபெற்ற ஐநா பருவநிலை மாநாட்டில், உலக வெப்பமயமாதலை 2 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை எட்டுவதற்கான கூட்டு நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து தற்போதைய மாநாட்டில் மதிப்பீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4. நகரத்தொடங்கிய உலகின் மிகப்பெரிய பனிக்கட்டி.

அன்டார்டிகா கண்டத்தின் எல்லையிலிருந்து கடந்த 1986ஆம் ஆண்டு உடைந்து நகரத்தொடங்கிய ஏ23ஏ பனிக் கட்டி, சிறிது காலத்திலேயே வேடல் கடற்பகுதியில் தரைதட்டி நின்றது. அதன்பிறகு அந்தப் பனிக்கட்டி மிகப்பெரிய பனித்தீவாக திகழ்ந்து வந்தது. சுமார் 4,000 சதுர கிமீ பரப்பளவுகொண்ட அந்தப் பனிக்கட்டி, உலகிலேயே மிகப் பெரியது ஆகும். இது 400 மீட்டர் உயரம் கொண்டதாக உள்ளது.

தெற்கு ஜார்ஜியா பகுதிக்கு அருகே அந்தப் பனிக்கட்டி தரைதட்டினால் அங்குள்ள கடல்வாழ் உயிரினங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இருந்தாலும், இந்தப் பனிக்கட்டி உருகுவதால் அதிலுள்ள கனிமப் பொருள்கள் வெளிவந்து சுற்றுச்சூழலை மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

5. சென்னையில் வி. பி. சிங் சிலை.

விஸ்வநாத் பிரதாப் சிங் (வி. பி. சிங்) 25.6.1931இல் அலாகாபாத்தில் பிறந்தார். காந்திய இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்ட அவர், சர்வோதய சமாஜத்தில் இணைந்து, பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்து தனது நிலங்களை தானமாக வழங்கினார். 1984இல் மத்திய அரசில் நிதியமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆகிய பதவிகளையும் வகித்தார். பின்பு, 1989இல் நாட்டின் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிரதமராக இருந்தபோது தமிழ்நாட்டு மக்களின் வாழ்வதாரப்பிரச்னையான காவிரி நீர் பிரச்னைக்கு தீர்ப்பாயத்தை அமைத்து தந்தார். சென்னையில் அமைந்துள்ள உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராஜர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்துக்கு அண்ணா பெயரையும் சூட்டினார். அம்பேத்கருக்கு, ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிறைவேற்றினார். சமூகரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்துக்கு அரசுப்பணியிடங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பி. பி. மண்டல் தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரையை வி. பி. சிங் செயல்படுத்தினார்.

6. மாற்றுத்திறனாளி கைவினைஞர்களை ஊக்குவிக்கும் திவ்ய கலா மேளா:

மத்திய அரசின், ‘திவ்ய கலா மேளா’மூலம் மாற்றுத்திறனாளி கைவினைர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில், ‘திவ்ய கலா மேளா’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன்மூலம் மாற்றுத் திறனாளி கைவினைகலைஞர்கள், தொழில்முனைவோர் ஆகியோரை பேரளவில் ஊக்குவிப்பதுடன் அவர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்கிறது.

7. ஆயுஷ்மான் பாரத் சுகாதார நல்வாழ்வு மையங்கள் பெயர்மாற்றம்: மத்திய அரசு

ஆயுஷ்மான் பாரத் சுகாதார நல்வாழ்வு மையங்களின் பெயரை, ‘ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர்’ எனப் பெயர்மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. ‘ஆரோக்கியம் பரமம் தனம்’ என்ற வாசகம் இந்த மையங்களில் இடம்பெற வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களுக்கு தாய்-சேய் மருத்துவம், மருத்துவப் பரிசோதனைகள், இலவச மருந்துகள் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்கும் விதமாக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 1.6 இலட்சம் ஆயுஷ்மான் பாரத் சுகாதார நல்வாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டன.

8. இலாபத்தில் இயங்கும் 2 நிதிக்கழகங்களை ஒன்றிணைத்து அரசு ஆணை.

இலாபத்தில் இயங்கக்கூடிய தமிழ்நாடு மின் நிதி, உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தையும், தமிழ்நாடு போக்கு வரத்து வளர்ச்சி நிதிக் கழகத்தையும் ஒன்றிணைத்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு எரிசக்தி துறையின் கீழ் தமிழ்நாடு மின் நிதி, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகமும், தமிழ்நாடு போக்குவரத்துத் துறையின் கீழ் தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதிக் கழகமும் செயல்பட்டு வருகின்றன. இவை இரண்டும் இலாபத்தில் இயங்கக்கூடிய வங்கி அல்லாத நிதிக் கழகங்கள் ஆகும். இந்த இரண்டு நிதிக் கழகங்களையும் ஒன்றிணைத்து, நிதித் துறையின்கீழ் செயல்படும் வகையில் தமிழ்நாடு அரசு நவ.23இல் ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு அரசு 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்கிற இலக்கை நிர்ணயித்துச் செயல்பட்டு வருகிறது. அந்த இலக்கை அடைவதற்கு இந்த நடவடிக்கை உதவும் என அரசு கருதுகிறது.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!