TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 28th & 29th January 2024

1. பண்டைய காலத்தில் சமற்கிருதத்தை எழுதப் பயன்படுத்தப்பட்ட கிரந்த எழுத்துகள் சார்ந்த மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. கர்நாடகா

  • தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தின் காங்கயத்திற்கு அருகேயுள்ள பரஞ்சேர்வழி கிராமத்தில் 11 மற்றும் 16ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த கல்வெட்டுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அக்கல்வெட்டில், ‘கிரந்தம்’ மற்றும் தமிழெழுத்துக்கள் உள்ளன. கிரந்த எழுத்துகள் தென்கிழக்கு ஆசியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் சமற்கிருத மொழியை எழுதப்பயன்பட்ட வரிவடிவங்களாகும். இந்திய மொழியான மலையாளத்தின் எழுத்து முறையும் கிரந்தத்தில் இருந்து தோன்றியது ஆகும். இது பின்னர், ‘ஆரிய எழுத்து’ என்றும் அறியப்பட்டது.

2. தேசிய வாக்காளர் நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. 24 ஜனவரி

ஆ. 25 ஜனவரி

இ. 26 ஜனவரி

ஈ. 15 ஜனவரி

  • இந்திய தேர்தல் ஆணையம் 14ஆவது தேசிய வாக்காளர் நாள் கொண்டாட்டத்துடன் 2024 ஜன.25 அன்று தனது 75ஆவது ஆண்டை நிறைவையும் கொண்டாடியது. 2011ஆம் ஆண்டு முதல், தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குடிமக்களை தேர்தலில் பங்கேற்க ஊக்குவிக்கவுமாக ஆண்டுதோறும் ஜனவரி.25 அன்று தேசிய வாக்காளர் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு நிலைகளில் கொண்டாடப்படும் இந்நிகழ்வு, குறிப்பாக இளம் வாக்காளர்களிடையே வாக்காளர் அட்டை பெறலை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024இன் வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருள், “Nothing Like Voting, I Vote For sure” என்பதாகும்.

3. ‘நோய் X’ உடன் தொடர்புடையது?

அ. எதிர்கால தொற்றுநோய்க்குக் காரணமாக அமையவுள்ள நோய்க்கிருமி

ஆ. பூஞ்சை நோய்

இ. தாவர நோய்

ஈ. மரபணு நோய்

  • 2018ஆம் ஆண்டு முதல் WHOஇன் திட்டவரைப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் அறியப்படாத குணாதிசயங்களைக் கொண்ட புதிய தொற்றுநோயை உலக சுகாதார அமைப்பு (WHO) ‘Disease X’ என எச்சரித்துள்ளது. 25 தீநுண்ம குடும்பங்களில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்த இந்த அனுமான நோய்க்கிருமிக்கு இதுவரை சிகிச்சைகள் எதுவும் அறியப்படவில்லை. இது சமீபத்திய SARS-COVID தீநுண்மத்தைவிட 20 மடங்கு அதிக கொடியதாக உள்ளது.

4. இந்தியக்கடற்படையால் நிறுவப்பட்ட VLF (மிகத்தாழ் அலைவெண்) தகவல் தொடர்பு நிலையத்தின் முதன்மை நோக்கம் என்ன?

அ. அரபிக்கடலில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதல்

ஆ. கடற்படை நடவடிக்கைகளுக்கான தகவல் தொடர்பு திறன்களை வலுப்படுத்துதல்

இ. வங்காள விரிகுடாவில் நில அதிர்வு நடவடிக்கைகளை கண்காணித்தல்

ஈ. இந்தியக் கடற்கரையிலிருந்து விண்வெளி ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளல்

  • இந்தியக் கடற்படையால் நிறுவப்பட்ட மிகத்தாழ் அலைவெண் (Very Low Frequency – VLF) தகவல் தொடர்பு நிலையத்திற்கான முதன்மை நோக்கம் கப்பற்படைத் தொகுதியின் ஒலிபரப்பு மற்றும் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுடன் தொடர்புகொள்வதாகும். நீருக்கடியில் இருக்கும் நீர்மூழ்கிக் கப்பல்களுடன் தொடர்பு கொள்ள VLF ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன.
  • இந்திய கடற்படையானது கடந்த 24 ஆண்டுகளாக VLF வசதியை செயல்படுத்தி வருகிறது. முதல் VLF நிலையம், 1990ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள INS கட்டபொம்மன் ரேடார் நிலையத்தில் நிறுவப்பட்டது. தெலுங்கானாவின் விகாராபாத் மண்டலத்தின் புதூர் அருகேயுள்ள தாமகுடம் வனப்பகுதியில் கடற் படை தற்போது இரண்டாவது VLF நிலையத்தை உருவாக்கி வருகிறது. இந்தப் புதிய நிலையம் 2027இல் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5. 2024 – WTT ஃபீடர் கார்பஸ் கிறிஸ்டியில், முதன்முறையாக உலகளாவிய டேபிள் டென்னிஸ் பட்டத்தை வென்ற வீரர் / வீராங்கனை யார்?

அ. ஸ்ரீஜா அகுலா

ஆ. லில்லி ஜாங்

இ. மனிகா பத்ரா

ஈ. தியா சித்தலே

  • அமெரிக்காவின் டெக்சாஸில் நடந்த 2024 – WTT ஃபீடர் கார்பஸ் கிறிஸ்டி போட்டியில் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை ஸ்ரீஜா அகுலா தனது முதல் சர்வதேச பட்டத்தை வென்றார். 3-0 என்ற கணக்கில் (11-6, 18-16, 11-5) மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் உலகின் 46ஆம் நிலை வீராங்கனையான லில்லி ஜாங்கை தோற்கடித்தார்.

6. ’ஒரே பாரதம் ஒப்பிலா பாரதம்’ என்ற திட்டத்தின்கீழ், ‘யுவ சங்கம்’ நிகழ்ச்சியின் 3ஆம் கட்டத்தை நடத்திய ஐஐடி எது?

அ. ஐஐடி கௌகாத்தி

ஆ. ஐஐடி கான்பூர்

இ. ஐஐடி பம்பாய்

ஈ. ஐஐடி காரக்பூர்

  • கௌகாத்தியில் உள்ள இந்திய தொழினுட்ப நிறுவனத்தில் (ITI) யுவ சங்கம் நிகழ்ச்சியின் 3ஆம் கட்டம் நடைபெற்றது. இந்தத் திட்டம் கல்வியமைச்சகத்தின், “ஒரே பாரதம் ஒப்பிலா பாரதம்” திட்டத்தின்கீழ் வரும் ஒரு முன்னெடுப்பாகும். ‘யுவ சங்கம்’ திட்டம் நாட்டின் இளையோரிடையே தொடர்புகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது, இளையோர்கள் சுற்றுலா, பாரம்பரியங்கள், மேம்பாடு, மக்களிடம் நேரடி தொடர்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய ஐந்து பகுதிகளில் ஆட்படுவார்கள்.

7. உத்தர பிரதேச மாநிலத்தின் எந்த நகரத்தில், அகில இந்திய பேச்சு & கேட்டல் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது?

அ. கான்பூர்

ஆ. லக்னோ

இ. பிரயாக்ராஜ்

ஈ. வாரணாசி

  • சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலத்தின் கான்பூரில் உள்ள GSVM மருத்துவக் கல்லூரியில் பன்னோக்கு உயர் சிறப்பு வளாகத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திறந்து வைத்தார். மேலும் முதல் அதிநவீன அகில இந்திய பேச்சு மற்றும் செவிப்புலன் மையத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இத்தகைய வசதிகளில் வட இந்தியாவில் இது முதலாவதாக உள்ளது.

8. LSAM-19ஐ (யார்டு 129) ஏவிய ஆயுதப்படை எது?

அ. இந்திய இராணுவம்

ஆ. இந்திய வான்படை

இ. இந்தியக் கடற்படை

ஈ. இந்தியக் கடலோரக் காவற்படை

  • 11 x ACTCM படகு திட்டத்தின்கீழ் 5ஆவது படகான, ‘LSAM-19’ஐ இந்திய கடற்படை அறிமுகப்படுத்தியது. தானேவில் உள்ள சூர்யதிப்தா நிறுவனத்தின் MSME கப்பல் கட்டும் தளத்தால் கட்டப்பட்ட இந்தப் பல்துறை படகு கடற்படை திறன்களை மேலும் மேம்படுத்துகிறது. பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் சூர்யதிப்தா திட்டங்களுக்கு இடையே 2021 மார்ச்சில் போடப்பட்ட உடன்படிக்கையின்கீழ் கட்டப்பட்ட இந்தப் படகுகள், கடற்படை விதிமுறைகளைப் பின்பற்றி, இந்தியாவின், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ முன்னெடுப்பின்கீழ் உருவாக்கப்பட்டுள்ளன.

9. ‘அல்வா வைபவத்துடன்’ தொடர்புடையது?

அ. பட்ஜெட்

ஆ. பொருளியல் ஆய்வு

இ. குடியரசு நாள்

ஈ. கட்டுடல் இந்தியா திட்டம்

  • ஆண்டுதோறும் பட்ஜெட் தொடர்பான ஆவணங்கள் அச்சிடத் தொடங்கப் போகும் நிகழ்வைக் குறிக்கும், ‘அல்வா வைபவத்தில்’ மத்திய நிதியமைச்சர் பங்கேற்றார். இந்த வைபவம், ஒரு பெரிய வாணலியில், ‘அல்வா’ தயாரிப்பதை உள்ளடக்கியதாகும். இதற்கான செயல்முறையை நிதி அமைச்சர் தொடங்கி வைக்கிறார். பொதுவாக நாட்டின் பட்ஜெட் ரகசியங்களை பாதுகாக்கும் வகையில் பட்ஜெட் தயாரிப்புப்பணியில் ஈடுபடும் அதிகாரிகள், பணியாளர்களை அறையில் வைத்து பூட்டுகிற, ‘லாக்-இன்’ நடைமுறை தொடங்கும். இதற்கு முன்னதாக, சுவைமிகுந்த, ‘அல்வா’ தயாரித்து அனைவருக்கும் வழங்கப்படும். இது காலந்தோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

10. கௌசல் பவனுடன் தொடர்புடைய அமைச்சகம் எது?

அ. ஜவுளி அமைச்சகம்

ஆ. திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம்

இ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

ஈ. வேளாண் அமைச்சகம்

  • பிரதமரின் திறன் இந்தியா திட்டத்திற்கேற்ப திறன்கள்மூலம் இளைஞர்களை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பைக் குறிக்கும் வகையில், இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கௌசல் பவனைத் திறந்து வைத்தார். திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் இந்த முன்னெடுப்பு இளைஞர்களின் ஆர்வத்தைத் தூண்டி, திறமையான எதிர்காலத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

11. தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பு நல்குவதற்காக கீழ்க்காணும் எந்த நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?

அ. ஓமன்

ஆ எகிப்து

இ. சிங்கப்பூர்

ஈ. தான்சானியா

  • பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் ஓமன் நாட்டின் போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே தகவல் தொழில்நுட்பத் துறை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பரஸ்பர ஆதரவு, தகவல் தொழில்நுட்பத் துறையில் தொழில்நுட்பங்கள், தகவல் மற்றும் முதலீடுகள் மூலம் இருதரப்பினருக்கும் இடையே விரிவான ஒத்துழைப்பை மேம்படுத்துவதை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். தகவல் தொழில்நுட்பத் துறையில் G2G மற்றும் B2B இருதரப்பு ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும்.

12. இந்திய தண்டனைச்சட்டத்தின் (IPC) பிரிவு 420 உடன் தொடர்புடையது எது?

அ. தாக்குதல் மற்றும் கொலை

ஆ. தனியார் துறையில் ஊழல்

இ. பொதுத்துறையில் ஊழல்

ஈ. ஒருவரை ஏமாற்றுதல் மற்றும் அவரை நேர்மையற்ற செயலுக்குத் தூண்டுதல்

  • மோசடி செய்ததற்காக இதச-இன் 420ஆவது பிரிவின்கீழ் ஒருவர்மீது வழக்குத்தொடர, அவர் மேற்கொண்ட வஞ்சகச் செயல்கள் சொத்துப்பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும் செயல்களோடு இணைந்ததா? என்பதை ஆராயவேண்டும் என அண்மைய உச்சநீதிமன்றத்தீர்ப்பு தெளிவுபடுத்தியது. இதச-இன் (IPC) 420ஆம் பிரிவு ஏமாற்றுதல், சொத்துக்களை ஒப்படைக்க தனிநபர்களைத் தூண்டுதல், மதிப்புமிக்க பத்திரங்களை மாற்றுதல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இந்தக் கடுமையான குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படுகிறது. இது பிணையில் ஒருவரை வெளிவர அனுமதிக்காத பிரிவாகும்.

13. தொழுநோய் என்பது பின்வருவனவற்றில் எதனால் ஏற்படும் ஒரு தொற்றுநோயாகும்?

அ. பாக்டீரியா

ஆ. வைரஸ்

இ. பூஞ்சை

ஈ. புரோட்டோசோவா

  • மத்திய அரசு புதிய தொழுநோய் சிகிச்சை முறைக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. இது 2027ஆம் ஆண்டிற்குள் உள் நாட்டளவில் இந்நோய் பரவலை ஒழிப்பதை இலக்காகக் கொண்டது. WHO ஆனது 2015ஆம் ஆண்டில் மும்மருந்து விதிமுறைகளை (டாப்சோன், ரிஃபாம்பிசின், கிளோஃபாசிமைன்) பரிந்துரைத்தது; இது பல்மருந்து சிகிச்சை எனவும் அறியப்பட்டது. ‘Uniform MDT’ என அழைக்கப்படும் இந்த மும்மருந்து பெட்டகம் அனைத்து தொழுநோயாளிகளுக்கும் வழங்கப்படுகிறது. சிகிச்சையானது PB நோயாளிகளுக்கு ஆறு மாதங்களும், MB நோயாளிகளுக்கு 12 மாதங்களும் நீடிக்கும். Mycobacterium leprae என்ற பாக்டீரியத்தால் ஏற்படும் தொழுநோய், தோல் மற்றும் நரம்புகளை பாதிக்கிறது. பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிப் பழக்குவதான்மூலம் இது பரவுகிறது. சிகிச்சையளிக்கப்படாவிட்டால் சாத்தியமான ஊனத்திற்கு இந்நோய் இட்டுச்செல்லும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சாம்பியன் சபலென்கா போபண்ணா-எப்டெனுக்கு இரட்டையர் பட்டம்.

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸின் அர்யனா சபலென்கா சாம்பியன் பட்டம் பெற்றார். ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – ஆஸி. மேத்யூ எப்டென் பட்டத்தை கைப்பற்றினர்.

2. சென்னையில் 12ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு: அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறுகிறது.

12ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 2025ஆம் ஆண்டு மே மாதம் சென்னையில் நடைபெறும் என உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 11ஆவது மாநாடு மலேசியாவில் நடைபெற்றது. “உலக மொழிகளில் தமிழின் ஆளுமையும் தாக்கமும்” என்னும் தலைப்பில் 12ஆவது மாநாடு நடைபெறவுள்ளது.

3. காஞ்சிபுரத்தில் நாட்டிலேயே மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம்.

நாட்டிலேயே மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தை காஞ்சிபுரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணாவின் பெயரால் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியால் கடந்த 1969ஆம் ஆண்டில் அரசு புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவமனை தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே மும்பையில் TATA புற்றுநோய் ஆராய்ச்சி மையம் மிகப்பெரிய ஆராய்ச்சி மையமாக செயல்பட்டு வருகிறது.

4. UPIமூலம் பயணச்சீட்டு பெறும் வசதி: மாநகரப்பேருந்துகளில் சோதனை முறையில் அமல்.

UPI முறையை பயன்படுத்தி சென்னை மாநகரப்பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய கையடக்க கருவிகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. முதற்கட்டமாக சென்னை மாநகரப்போக்குவரத்துக் கழகத்தின் பல்லவபுரம் (பல்லாவரம்) பேருந்து பணிமனையின்கீழ் இயங்கும் பேருந்துகளின் நடத்துநர்களுக்கு UPI மற்றும் அட்டைகள்மூலம் பணம் செலுத்தி பயணச்சீட்டு வழங்கும் வகையிலான புதிய கையடக்கக்கருவிகளை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வழங்கியுள்ளது.

5. சொற்குவையில் 15 இலட்சம் சொற்கள் பதிவேற்றம்: அகரமுதலித் திட்ட இயக்ககம் தகவல்.

தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் உருவாக்கிய, ‘சொற்குவை’ தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட கலைச்சொற்களின் எண்ணிக்கை தற்போது 15 இலட்சம் என்ற இலக்கை எட்டியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு, ‘சொற்குவை’க்கென்று தனியாக வலைதளம் தொடங்கப்பெற்றது.

6. சாமானியர்களுக்கு கெளரவம்! பத்ம விருதுகள்.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 70 வயதான பார்வதி பரூவா எனும் பெண்மணி, கௌரிபூர் ராஜாக்கள் வம்சத்தைச் சேர்ந்தவர். செல்வாக்கான குடும்பப் பின்னணியைக் கொண்டிருந்தாலும் யானைகளின் பராமரிப்புக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். ‘யானைகளின் இராணி’ எனப்படும் இவர்தான் யானை பராமரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முதல் பெண். யானைகள் – மனிதர்களின் மோதலுக்கு தீர்வுகண்டவர். இவரது அறிவியல்பூர்வமான உத்திகள், தொல்லைதரும் காட்டு யானைகளைப் பிடிப்பதற்கு அரசுக்கு உதவுகின்றன.

வேலூரைச் சொந்த ஊராகக்கொண்ட டாக்டர் பிரேமா தன்ராஜ். 72 வயதாகும் இவர் சிறுவயதில் தீவிபத்தில் ஐம்பது சதவீத தீக்காயம் அடைந்தவர். அதன்பிறகு நன்றாகப் படித்து நாட்டின் சிறந்த பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை நிபுணர் -களுள் ஒருவராக உயர்ந்தவர். தற்போது பெங்களூரில் வசித்துவரும் இவர், தீவிபத்தில் காயமடைந்தவர்களின் மறுவாழ்வுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்.

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம் தாசம்பாளையத்தைச் சேர்ந்தவர் பத்ரப்பன். 87 வயதாகும் இவர், ‘வள்ளி கும்மி’ எனப்படும் கலையின் ஆசிரியர். ஆடவர் மட்டுமே பங்கேற்று வந்த வள்ளி கும்மி ஆட்டத்தில், பெண்களுக்கும் பயிற்சியளித்தவர் பத்ரப்பன்.

கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்யநாராயணன் பெலேரி. நெல் விவசாயியான இவர் 650 பாரம்பரிய நெல் இரகங்களைத் தனது பண்ணையில் பாதுகாத்து வருகிறார். மேற்கூறிய அனைவரும் 2024ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!