TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 2nd & 3rd December 2023

1. மாஹே, மால்வான் மற்றும் மங்ரோல் ஆகியவை அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட எதன் பெயர்களாகும்?

அ. நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க்கப்பல்கள் 🗹

ஆ. ஆளில்லா விமானங்கள்

இ. நீர்மூழ்கிக் கப்பல்கள்

ஈ. கண்டம் விட்டு கண்டம் பாயும் எறிகணைகள்

  • ஆழமற்ற நீர்நிலைகளுக்கான கப்பல்கள் திட்டத்தின் முதல் 3 கப்பல்கள் (மாஹே, மால்வான் மற்றும் மங்ரோல்) அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதுபோன்ற எட்டுக் கப்பல்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கடந்த 2019ஆம் ஆண்டில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தானது.

2. 13ஆவது சீனியர் தேசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. பஞ்சாப் 🗹

இ. இராஜஸ்தான்

ஈ. கேரளா

  • தமிழ்நாட்டின் சென்னையில் நடைபெற்ற சீனியர் ஆடவர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் பஞ்சாப் அணி பெனால்டி ஷூட் ஔட்டில் நடப்பு சாம்பியனான ஹரியானா அணியை வீழ்த்தி பட்டத்தை வென்றது. பஞ்சாப் அணிth தலைவரும் இந்திய வீரருமான ஹர்மன்பிரீத் சிங் பஞ்சாப் அணிக்காக கோலடித்தார். முன்னதாக பெனால்டி ஷூட் ஔட்டில் கர்நாடகாவை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தமிழ்நாடு அணி வெண்கலப்பதக்கத்தை வென்றது.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற MICE தொழிற்துறையுடன் தொடர்புடைய எது?

அ. சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள்

ஆ. கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் 🗹

இ. பால் மற்றும் இறைச்சி

ஈ. மருந்துகள் மற்றும் இரசாயனங்கள்

  • மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், 2023 நவ.30 அன்று புது தில்லியில் MICE (கூட்டங்கள், ஊக்கம், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்) இடமாக இந்தியாவை திகழச்செய்வது குறித்த தொழில்துறை வட்டமேசை மாநாட்டை நடத்தியது. இந்தியாவின் G20 தலைமைத்துவத்தின்போது, நாடு முழுவதும் 56 நகரங்களில் 200க்கும் மேற்பட்ட கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

4. மகளிர் சுய-உதவிக் குழுக்களுக்கு டிரோன்களை வழங்கும் திட்டம் சார்ந்த வகை எது?

அ. மத்திய துறை திட்டம் 🗹

ஆ. முதன்மை திட்டம்

இ. மத்திய நிதியுதவி திட்டம்

ஈ. மாநிலத்திட்டம்

  • பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மகளிர் சுய-உதவிக்குழுக்களுக்கு 2024-25ஆம் ஆண்டு முதல் 2025-26ஆம் ஆண்டு வரை `1261 கோடி மதிப்பீட்டில் டிரோன்கள் வழங்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • இது 2023-24ஆம் ஆண்டு முதல் 2025-2026ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15,000 மகளிர் சுய-உதவிக் குழுக்களுக்கு டிரோன்கள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மகளிர் சுய-உதவிக் குழுக்களுக்கு அதிகாரமளிப்பதையும், வேளாண் துறையில் டிரோன் சேவைகள்மூலம் புதிய தொழில்நுட்பங்களை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது

5. விரைவு சிறப்பு நீதிமன்றம் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?

அ. 2013

ஆ. 2017

இ. 2015

ஈ. 2019 🗹

  • பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக்கூட்டத்தில், 01.04.2023ஆம் ஆண்டு முதல் 31.03.2026 வரை `1952.23 கோடி (மத்திய அரசின் பங்காக `1207.24 கோடி மற்றும் மாநில அரசின் பங்காக `744.99 கோடி) மத்திய அரசின் நிதியுதவித் திட்டமாக விரைவு சிறப்பு நீதிமன்றத்தைத் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது. நிர்பயா நிதியிலிருந்து மத்திய அரசின் பங்கு வழங்கப்படவுள்ளது. இத்திட்டம் 02.10.2019 அன்று தொடங்கப்பட்டது.

6. அண்மையில் தொடங்கப்பட்ட, ‘PM JANMAN’ திட்டத்துடன் தொடர்புடைய மக்கள் யாவர்?

அ. MSME உரிமையாளர்கள்

ஆ. குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள் 🗹

இ. உழவர்கள்

ஈ. வெளிநாடு வாழ் இந்தியர்கள்

  • பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், `24,104 கோடி மதிப்பிலான, ‘குறிப்பாக பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினருக்கான பிரதமரின் மேம்பாட்டுத் திட்டத்திற்கு’ ஒப்புதல் அளிக்கப்பட்டது. பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்டத்தின்கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த `15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 10.45 கோடி பழங்குடியினர் உள்ளனர். இந்தியாவில் 75 சமூகங்கள் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

7. காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பைத் தொடங்கியுள்ள நிறுவனம் எது?

அ. NITI ஆயோக்

ஆ. ILO

இ. NSSO 🗹

ஈ. DPIIT

  • தேசிய மாதிரி ஆய்வு அலுவலகமானது (NSSO) 2023 ஜூலை-செப்டம்பர் இடைப்பட்ட காலத்திற்கான காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, நாட்டின் நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் 2022 ஜூலை-செப்டம்பரிலிருந்த 7.2%இலிருந்து 2023 ஜூலை-செப்டம்பரில் 6.6%ஆகக் குறைந்துள்ளது.

8. அரசியலமைப்புப் பிரிவு 280 (1) ஆனது எதனை நிறுவுவதற்கான வழிமுறைகளைக் குறிப்பிடுகிறது?

அ. தேர்தல் ஆணையம்

ஆ. நிதி ஆணையம் 🗹

இ. திட்டக்குழு

ஈ. NITI ஆயோக்

  • பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக்கூட்டத்தில், 16ஆவது நிதிக்குழுவின் விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 16ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகள், அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், 2026 ஏப்.01 முதல் ஐந்தாண்டு காலத்திற்கு பொருந்தும். அரசியலமைப்புச்சட்டத்தின் 280 (1) பிரிவின்படி, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே வரிகளின் நிகர வருவாயைப் பகிர்ந்தளிப்பது, அந்த வருவாயில் அந்தந்த மாநிலங்களுக்கு இடையே பங்கீடு செய்வது குறித்து பரிந்துரைசெய்ய நிதிக்குழுவை அமைப்பதற்கான வழிமுறைகள் வரையறுக்கப் பட்டுள்ளன. 15ஆவது நிதிக்குழு 2017 நவம்பர்.27 அன்று அமைக்கப்பட்டது. பதினைந்தாவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் 2025-26 நிதியாண்டு வரை செல்லுபடியாகும்.

9. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (BCCI) இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ. இராகுல் டிராவிட் 🗹

ஆ. சச்சின் டெண்டுல்கர்

இ. வாசிம் அக்ரம்

ஈ. முகமது கைஃப்

  • 2024 T20 உலகக்கோப்பை வரை இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இராகுல் டிராவிட் தொடர்வாரென இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. பராஸ் மாம்ப்ரே (பந்துவீச்சு பயிற்சியாளர்), விக்ரம் ரத்தோர் (பேட்டிங் பயிற்சியாளர்) மற்றும் டி. திலீப் (பீல்டிங் பயிற்சியாளர்) ஆகியோரும் அதே பொறுப்பில் தொடர்வாரென என BCCI அறிவித்துள்ளது.

10. சமீப செய்திகளில் இடம்பெற்ற துஷார் ஷெல்கே & சங்கீதா ஆகியோருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. செஸ்

ஆ. வில்வித்தை 🗹

இ. டென்னிஸ்

ஈ. கிரிக்கெட்

  • தேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் துஷார் ஷெல்கே மற்றும் சங்கீதா ஆகியோர் முறையே ஆடவர் மற்றும் மகளிர் பட்டங்களை வென்றனர். பிரதமேஷ் ஜாவ்கர் மற்றும் உலக சாம்பியனான அதிதி ஸ்வாமி ஆகியோர் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் கூட்டுப்பிரிவில் முதலிடம் பிடித்தனர்.

11. சமீப செய்திகளில் இடம்பெற்ற அங்கத்வீர் சிங் பஜ்வா மற்றும் கணேமத் செகோன் ஆகியோருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. செஸ்

ஆ. துப்பாக்கிச்சூடு 🗹

இ. டென்னிஸ்

ஈ. கிரிக்கெட்

  • 66ஆவது தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்பில் அங்கத்வீர் சிங் பஜ்வா மற்றும் கனேமத் செகோன் ஆகியோர் பஞ்சாப் அணிக்காக கலப்பு ஸ்கீட் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றனர். பெண்களுக்கான 50 மீ ரைபிள் முந்நிலைப் போட்டியில், ஆசிய விளையாட்டுச் சாம்பியன் சிஃப்ட் கௌர் சாம்ரா, ஒலிம்பிக் வீராங்கனை அஞ்சும் மௌத்கிலை 1.9 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்கம் வென்றார்.

12. இந்தியாவின் 54ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் வெள்ளி மயில் விருது பெற்ற திரைப்படம் எது?

அ. ஃபெதர் வெயிட்

ஆ. காந்தாரா 🗹

இ. சார்பட்டா பரம்பரை

ஈ. ஏ தர்ஸ்டே

  • இந்தியாவின் 54ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் ரிஷப் செட்டி இயக்கிய, ‘காந்தாரா’ என்ற கன்னட படத்திற்கு நடுவர் குழுவின் சிறப்பு விருது அல்லது வெள்ளிமயில் விருது வழங்கப்பட்டது. அப்பாஸ் அமினி இயக்கிய, ‘எண்ட் லெஸ் பார்டர்ஸ்’ சிறந்த திரைப்படம் அல்லது தங்கமயில் விருதை வென்றது. சிறந்த இயக்குநருக்கான விருது ‘பிளாகா’ஸ் லெசன்ஸ்’ என்ற திரைப்படத்திற்காக ஸ்டீபன் கோமண்டரேவுக்கு கிடைத்தது.

13. சிறப்பு பிரெஞ்சு விருதுகளை வென்ற லலிதாம்பிகா, எதன் முன்னாள் இயக்குநராக இருந்தார்?

அ. DRDO

ஆ. ISRO 🗹

இ. BARC

ஈ. CVC

  • இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர், ISROஇன் மனிதர்களை விண்வெளிக்குக் கொண்டு சென்று திரும்ப பூமிக்கு அழைத்து வரும் திட்டத்தின் இயக்குநரகத்தின் முன்னாள் இயக்குநர் லலிதாம்பிகாவுக்கு, ‘லெஜியன் டி ஹானர்’ என்ற விருது வழங்கி கௌரவித்தார். பிரான்சுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விண்வெளி ஒத்துழைப்பில் ஈடுபட்டதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ISROஇன் முன்னாள் தலைவர் A S கிரண் குமாருக்கு 2019 ஆம் ஆண்டில் இந்த விருது வழங்கப்பட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ‘ககன்யான்’ திட்டத்துக்கு விண்வெளி வீரர்கள் தயார்.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் 2025இல் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்திற்காக 4 விண்வெளி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 3 நாட்கள் விண்ணில் பயணம் மேற்கொள்ளும் வீரர்களை பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

2. போபால் விஷவாயுக் கசிவு: 39ஆவது ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிப்பு.

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் விஷவாயு கசிந்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த சம்பவத்தின் 39ஆவது ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

சம்பவத்தின் பின்னணி: போபாலில் உள்ள டௌ வேதி நிறுவனத்துக்கு சொந்தமான யூனியன் கார்பைட் உரத் தயாரிப்பு தொழிற்சாலையில் கடந்த 1984ஆம் ஆண்டு டிச.02ஆம் தேதி நள்ளிரவில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டது. இதில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். உயிர்தப்பிய பல்லாயிரக்கணக்கானோர் புற்றுநோய், கண் பார்வை இன்மை, மூச்சுத்திணறல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர் அமெரிக்காவைச்சேர்ந்த தொழிலதிபர் வாரன் ஆண்டர்சன் ஆவார்.

3. எய்ட்ஸ் நோய் ஒழிப்பில் தமிழ்நாடு அரசின் பங்கு.

தமிழ்நாட்டில் எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உலக அளவில் 4 கோடி பேரும், இந்தியாவில், 24 இலட்சம் பேரும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 1.24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எய்ட்ஸ் பாதித்தவர்களுக்கு உதவிசெய்வதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ஓர் அறக்கட்டளையை உருவாக்கி அதில் `25 கோடி வைப்புநிதி வைக்கப்பட்டுள்ளது. அதன் வாயிலாக வரும் வட்டியில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோரு -க்கும், அவர்தம் குழந்தைகளுக்கும் கல்வி மற்றும் ஊட்டச்சத்து உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு வட்டியாகப் பெறப்படும் தொகையிலிருந்து ஆண்டுக்கு `1.04 கோடிக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு HIV தொற்று பரவுவதை தடுக்க 2,962 நம்பிக்கை மையங்கள் செயல்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் 34 ஆற்றுப்படுத்துதல் மையங்கள், 55 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள், 64 சிகிச்சை மையங்கள் இயங்குகின்றன.

4. ‘சிம் அட்டை’ வாங்க புதிய விதிகள் அமல்: KYC கட்டாயம்.

கைப்பேசிகளுக்கான சிம் அட்டைகளை வாங்குவதற்கான புதிய விதிகள் டிச.01 முதல் அமலுக்கு வந்தன. இதன்படி எண்ம முறையில் KYC (வாடிக்கையாளர் விவரப்படிவம்) விவரங்கள் அளிக்கப்படுவது கட்டாயமாகும். ஏற்கெனவே உள்ள சிம் அட்டைக்குப் பதிலாக புதிய அட்டை வாங்கினாலும் இந்நடைமுறை பொருந்தும். மேலும், ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் சிம் அட்டைகள் விற்பனை செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்காக மொத்தமாக சிம் அட்டைகளை வாங்கும்போது, அந்த நிறுவனத்தின் பொறுப்பாளர் உரிய படிவத்தில் ஒப்புதல் கையெழுத்திட வேண்டியது அவசியமாகும்.

வங்கிக்கணக்குகள், கடன் அட்டைகளிலிருந்து பணத்தைப் பறிக்கும் மோசடியாளர்கள் கைப்பேசிகள்மூலம் மோசடிகளில் ஈடுபடுவதால் அவர்களின் கைகளில் சிம் அட்டைகள் செல்லாமல் தடுக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒருவர் ஓர் அடையாள ஆவணத்தைப் பயன்படுத்தி 9 சிம் அட்டைகள் வரை வாங்கலாம் என்ற நடைமுறையில் மாற்றம் செய்யப்படவில்லை.

5. டிசம்பர்.03: சர்வதேச மாற்றுத் திறனாளிகள் நாள்.

கருப்பொருள்: “United in Action to Rescue and Achieve the SDGs for, with and by Persons with Disabilities”.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!