TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 3rd November 2023

1. இந்தியாவானது கீழ்கண்ட எந்த நாட்டிலிருந்து ‘S-400 இரக வான்பாதுகாப்பு ஏவுகணையை வாங்கியுள்ளது?

அ. அமெரிக்கா

ஆ. இஸ்ரேல்

இ. ரஷ்யா 🗹

ஈ. பிரான்ஸ்

  • இந்திய வான்படை அதன் மூன்று எஸ்-400 வான்பாதுகாப்பு ஏவுகணைகளை சீனா மற்றும் பாகிஸ்தானுடனான அதன் எல்லைகளில் வெற்றிகரமாக பணியமர்த்தியுள்ளது. 2018-19ஆம் ஆண்டில், `35,000 கோடி மதிப்பிலான எஸ்-400 ஏவுகணைகளை கொள்முதல் செய்ய ரஷ்யாவிடம் இந்தியா ஒப்பந்தம் செய்தது. வழங்கப்பட வேண்டிய ஐந்து ஏவுகணைகளில், மூன்று வழங்கப்பட்டுள்ளன.

2. கலதன் பன்மாதிரி போக்குவரவுத் திட்டமானது கொல்கத்தா துறைமுகத்தை கீழ்காணும் எந்த நாட்டுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது?

அ. தாய்லாந்து

ஆ. மியான்மர் 🗹

இ. வங்காளதேசம்

ஈ. கம்போடியா

  • கலதன் பன்மாதிரி போக்குவரவுத் திட்டமானது கொல்கத்தா துறைமுகத்தை மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் உள்ள சிட்வே துறைமுகத்துடன் கடல்வழியாக இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சிட்வே முதல் கலதன் ஆறு வரையிலான உள்நாட்டு நீர்ப்போக்குவரத்தும் இதிலடங்கும். தெற்கு மிசோராமின் லாங்ட்லாய் மாவட்டத்தை மியான்மரின் சிட்வே துறைமுகத்துடன் இணைக்கும் கலதன் திட்டத்தின் ஒருபகுதியான எல்லை தாண்டிய சாலை அமைப்பு இந்த ஆண்டு நவம்பருக்குள் முடிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

3. இந்தியாவில் கூட்டுறவு வங்கிகளை ஒழுங்குபடுத்தும் நிறுவனம் எது?

அ. இந்திய ரிசர்வ் வங்கி 🗹

ஆ. NABARD

இ. கூட்டுறவு அமைச்சகம்

ஈ. NITI ஆயோக்

  • இந்திய ரிசர்வ் வங்கியானது அதன் முன்னனுமதியின்றி வருவாய் குறைந்த வங்கிக் கிளைகளை மூடுவதற்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு அதிகாரம் உள்ளது என்று அறிவித்துள்ளது. இருப்பினும், அந்தந்த மாநிலத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகே அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அது கூறியுள்ளது. இந்தியாவில் உள்ள கூட்டுறவு வங்கிகள் கடந்த 2020ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஒழுங்குமுறை கட்டமைப்பின்கீழ் கொண்டுவரப்பட்டன.

4. ‘முழு புல புற ஊதா நிறமாலை பரிசோதனை (Integral Field Ultraviolet Spectroscope Experiment – INFUSE)’ உடன் தொடர்புடைய நாடு எது?

அ. அமெரிக்கா 🗹

ஆ. இங்கிலாந்து

இ. சீனா

ஈ. ஜெர்மனி

  • முழுமையான புல புற ஊதா நிறமாலை பரிசோதனை (Integral Field Ultraviolet Spectroscope Experiment – INFUSE) எனப்படும் ஆய்வு எறிகணையை NASA சமீபத்தில் ஏவியது. சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த மீஒளிர் விண்முகில் எச்சமான சிக்னஸ் லூப்பில் உள்ள ஒரு விண்மீன் நிகழ்வை ஆயும் நோக்கத்துடன் இது நியூ மெக்சிகோவில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது.

5. இந்திய இராணுவத்தைக் கருத்தில்கொண்டால், ‘பிரசாந்த்’ என்பது என்ன?

அ. ஆளில்லா விமானங்கள்

ஆ. இலகுரக போர் ஹெலிகாப்டர் 🗹

இ. கப்பல் எதிர்ப்பு ஏவுகணை

ஈ. நீர்மூழ்கிக் கப்பல்

  • இந்திய இராணுவத்தின் ‘பிரசாந்த்’ என அழைக்கப்படும் இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் 70மிமீ எறிகணை ஏவு பயிற்சிகளை வெற்றிகரமாக நடத்தி குறிப்பிடத்தக்க சாதனையை எட்டியுள்ளது. இந்தப்பயிற்சிகள் அஸ்ஸாமில் உள்ள லிகாபாலிக்கருகில் அமைந்துள்ள ஏவுதளத்தில் பகலிரவாக நடத்தப்பட்டன. இது இலகுரக போர் ஹெலிகாப்டர்களின் திறன்களையும் பல்திறனையும் வெளிப்படுத்தியது.

6. அண்மையில் திறக்கப்பட்ட, ‘புதிய பாண்டு-புதிய சனந்த் பிரிவானது’ கீழ்காணும் எந்தச் சரக்குப் போக்குவரத்து வழித்தடத்தின் ஒருபகுதியாகும்?

அ. மத்திய பிரத்யேக சரக்கு வழித்தடம்

ஆ. மேற்கத்திய பிரத்யேக சரக்கு வழித்தடம் 🗹

இ. தெற்கத்திய பிரத்யேக சரக்கு வழித்தடம்

ஈ. கிழக்கத்திய பிரத்யேக சரக்கு வழித்தடம்

  • அண்மையில், பிரதமர் நரேந்திர மோடி மேற்கத்திய பிரத்யேக சரக்குப் போக்குவரத்து வழித்தடத்தின் 77 கிமீ நீள ‘புதிய பாண்டு-புதிய சனந்த்’ பகுதியை திறந்து வைத்தார். இந்த உட்கட்டமைப்பு மேம்பாடு இப்பகுதியில் உள்ள துறைமுகங்கள் மற்றும் உற்பத்தி மையங்களில் இருந்து சரக்குகளைக் கொண்டுசெல்வதை விரைவுபடுத்தும். இந்த முன்னெடுப்பு, முன்பு பயணிகள் ரயில் வழித்தடங்களை சரக்கு வழித்தடத்திற்காகப் பயன்படுத்தி வந்த 60 சரக்கு ரயில்களுக்கு மாற்றுப் பாதையை அளித்துள்ளது.

7. இந்திய அரசிடமிருந்து 5G ஆய்வகத்தைப் பெற்ற வடகிழக்கு நிறுவனம் எது?

அ. NIT மிசோரம் 🗹

ஆ. வடகிழக்குப் பிராந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்

இ. வடகிழக்கு மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்

ஈ. NIT சிக்கிம்

  • மிசோரத்தில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT) இந்திய அரசிடமிருந்து 5G ஆய்வகத்தைப் பெற்றுள்ளது. NIT மிசோரமில் உள்ள இந்த 5G ஆய்வகத்தின் முதன்மை நோக்கங்கள் திறன்களை மேம்படுத்துவது மற்றும் 5G மற்றும் அதற்கு அப்பால் உள்ள தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது ஆகும். மிசோரம் மாநிலத்திற்கு ஒரு சிறப்பு கவனம் தரப்பட்டு, நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் துளிர் நிறுவனங்களுக்குப் பயனளிப்பதில் இந்த ஆய்வகம் தனது கவனத்தைச் செலுத்தும்.

8. ‘அகர்தலா-அகௌரா எல்லை தாண்டிய ரெயில்வழி இணைப்புத் திட்டமானது’ இந்தியாவை கீழ்க்காணும் எந்த நாட்டோடு இணைக்கிறது?

அ. நேபாளம்

. வங்காளதேசம் 🗹

இ. மியான்மர்

ஈ. தாய்லாந்து

  • இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவும் இணைந்து அகர்தலா-அகௌரா ரயில் இணைப்புத் திட்டத்தை தொடக்கிவைத்தனர். இந்த ரயில் இணைப்பு எல்லை தாண்டிய வர்த்தகத்தை மேம்படுத்தும் மற்றும் டாக்கா வழியாக அகர்தலா மற்றும் கொல்கத்தா இடையே பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

9. ‘இந்தியாவில் சாலை விபத்துக்கள்-2022’ ஆண்டறிக்கையின்படி, சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்புகளை பதிவு செய்துள்ள மாநிலம் எது?

அ. கர்நாடகா

ஆ. மகாராஷ்டிரா

இ. உத்தர பிரதேசம் 🗹

ஈ. கேரளா

  • சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், “இந்தியாவில் சாலை விபத்துக்கள்-2022” என்ற தலைப்பில் அதன் ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. 2022ஆம் ஆண்டில் மொத்தம் 4,61,312 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 1,68,491 பேர் உயிரிழந்துள்ளனர்; 4,43,366 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் (NH) அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துகளை தமிழ்நாடு பதிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலம் உள்ளது. உத்தர பிரதேசத்தில் சாலை விபத்துகளில் அதிக எண்ணிக்கையிலானோர் உயிரிழந்துள்ளனர்.

10. ‘Block Proving by Axle Counter (BPAC)’ என்பதுடன் தொடர்புடைய நிறுவனம் எது?

அ. இந்திய இராணுவம்

ஆ. இந்திய ரெயில்வே 🗹

இ. இந்திய தேர்தல் ஆணையம்

ஈ. இந்திய வான்படை

  • மத்திய ரெயில்வேயானது மும்பை கோட்டத்தின் வசிந்த்-அசங்கான் பிரிவில், “Block Proving by Axle Counter” முறையை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. இந்த BPAC அமைப்பு ரெயில் நடவடிக்கைகளுக்கான மிகவுயர்ந்த பாதுகாப்பை உறுதிசெய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

11. அண்டார்டிகாவில் தனது ஐந்தாவது ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்குவதற்காக புதிய அறிவியல் பயணக் குழுவை அனுப்பியுள்ள நாடு எது?

அ. இந்தியா

ஆ. அமெரிக்கா

இ. சீனா 🗹

ஈ. ரஷ்யா

  • அண்டார்டிகாவில் தனது ஐந்தாவது ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்க சீனா ஒரு புதிய அறிவியல் பயணக் குழுவை அனுப்பியுள்ளது. இந்தப் பயணத்தில் இரண்டு சீன பனிக்கட்டி உடைப்பான் ஆராய்ச்சிக்கப்பல்கள் மற்றும் 460க்கும் மேற்பட்ட பணியாளர்களை ஏற்றிச்செல்லும் சரக்குக் கப்பல் ஆகியவை அடங்கும். இந்தக் குழு காலநிலை மாற்ற ஆய்வுகளை மேற்கொள்வதுடன், நிலையத்தை முழுமையாகக் கட்டுவதற்கு உதவும். இந்த நிலையம் சீனாவின் அறிவியல் ரீதியான துருவ கண்காணிப்பு செயற்கைக்கோள்களுக்கான தகவல்தொடர்புகளை வழங்கும்.

12. அலுவல்பூர்வ தரவுகளின்படி, இந்தியாவில் எத்தனை சதவீத கிராமப்புற வீடுகளுக்கு ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் குடிநீர்க் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன?

அ. 60%

ஆ. 70% 🗹

இ. 85%

ஈ. 95%

  • அலுவல்பூர்வ தரவுகளின்படி, இந்தியாவில் உள்ள 70 சதவீத கிராமப்புற வீடுகளுக்கு ஜல் ஜீவன் இயக்கத்தின்கீழ் குடிநீர்க் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது நாட்டில் உள்ள 19,24,26,914 கிராமப்புற வீடுகளில் 13,47,50,894 குடும்பங்களுக்கு குடிநீர்க் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஜல் ஜீவன் இயக்கம் என்பது இந்திய அரசின் மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின்கீழ் செயலில் இருக்கும் ஒரு முன்னெடுப்பாகும். ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர்க் குழாய் இணைப்புகளை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. `50,000 கோடி அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்த உணவு பதப்படுத்துதல் துறை.

இந்தியாவின் வளர்ந்து வரும் உணவு பதப்படுத்துதல் துறை கடந்த ஒன்பது ஆண்டுகளில் `50,000 கோடி அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது. மேலும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதியின் வளர்ச்சி 150%ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஒன்பதாண்டுகளில் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 13%இலிருந்து 23 சதவீதமாக அதிகரித்துள்ளது. உணவு பதப்படுத்துதல் துறையின் திறனும் 12 இலட்சம் டன் என்ற அளவிலிருந்து 200 இலட்சம் டன் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.

தில்லியில், ‘உலக உணவு இந்தியா-2023’இன் இரண்டாம் பதிப்பு (3 நாள் மாபெரும் இந்திய வகை உணவுக் கண்காட்சி) நிகழ்வு தொடங்கியது. இந்தியாவை ‘உலகின் உணவுக் கூடை’ என்று எடுத்துக்காட்டும் வகையிலும், 2023ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

2. தபால் வழியாக `2,000 நோட்டுகளை மாற்றலாம்: ரிசர்வ் வங்கி.

தபால் வழியாக `2,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்பி நேரடியாக வங்கிக்கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் கைவசமுள்ள `2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளவும் தங்களது வங்கிக்கணக்கில் பற்று வைத்துக்கொள்ளவும் அக்.7 வரை மத்திய அரசு அவகாசம் அளித்தது. அதன்பின்னர் ரிசர்வ் வங்கியின் 19 கிளை அலுவலகங்களில் `2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளவோ அல்லது தங்களுடைய வங்கி சேமிப்புக்கணக்கில் வரவு வைத்துக்கொள்ளவோ ரிசர்வ் வங்கி அனுமதியளித்தது. இதற்கு எவ்வித கால அவகாசமும் தற்போது வரை விதிக்கப்படவில்லை.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி கிளை அலுவலகங்களில் `2,000 நோட்டுகளை மாற்ற மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு, தபால் வழியாக ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்பி, தொகையை தங்களின் வங்கி சேமிப்புக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என RBI அறிவித்துள்ளது.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

Tnpsc Current Affairs 2023 in Tamil & English Monthly Pdf files Download Quiz Online Test

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!