TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 4th November 2023

1. UNESCO படைப்பாற்றல் நகரங்கள் வலையமைப்பில் இலக்கியப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள இந்திய நகரம் எது?

அ. மதுரை

ஆ. கோழிக்கோடு 🗹

இ. மைசூரு

ஈ. கர்னூல்

  • குவாலியர் மற்றும் கோழிக்கோடு ஆகிய இரண்டு இந்திய நகரங்கள் சமீபத்தில் UNESCO படைப்பாற்றல் நகரங்கள் வலையமைப்பின் ஒரு பகுதியாக மாறியுள்ளன. மத்திய பிரதேசத்தின் குவாலியர், ‘இசை’ பிரிவிலும் கேரளத்தின் கோழிக்கோடு, ‘இலக்கியம்’ பிரிவிலும் இடம்பிடித்துள்ளது. உலகளவில், அக்.31 அன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக நகரங்கள் நாளன்று 55 நகரங்கள் UNESCO படைப்பாற்றல் நகரங்கள் வலையமைப்பில் இணைந்தன.

2. ‘உழவு மற்றும் உணவுப் பாதுகாப்பில் பேரிடரின் தாக்கம்’ என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. NABARD

ஆ. NITI ஆயோக்

இ. FAO 🗹

ஈ. UNEP

  • உணவு மற்றும் உழவு அமைப்பின் (FAO) அறிக்கையின்படி, ‘உழவு மற்றும் உணவுப் பாதுகாப்பு மீதான பேரிடரின் தாக்கம்’, கடந்த ஐம்பதாண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. 1970களில், உலகம் வருடத்திற்கு சுமார் 100 பேரிடர் நிகழ்வுகளை சந்தித்தது. எனினும், கடந்த இருபதாண்டுகளில், அந்த எண்ணிக்கை உலக அளவில் ஆண்டுதோறும் சுமார் 400 பேரிடர்களாக உயர்ந்துள்ளது. இந்தப் போக்கு உலகளவில் விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கு ஏற்படும் வளர்ந்துவரும் சவால்கள் மற்றும் அபாயங்களை எடுத்துக்காட்டுகிறது.

3. சிறந்த வீரருக்கான Ballon d’Or பரிசை வென்ற கால்பந்து வீரர் யார்?

அ. லியோனல் மெஸ்ஸி 🗹

ஆ. எர்லிங் ஹாலண்ட்

இ. கைலியன் எம்பாப்பே

ஈ. கிறிஸ்டியானோ ரொனால்டோ

  • லியோனல் மெஸ்ஸி எட்டாவது முறையாக Ballon d’Or பரிசை வென்றுள்ளார். ஸ்பெயினின் உலகக்கோப்பையை வென்ற ஐடானா பொன்மதி பெண்களுக்கானப் பரிசை வென்றார். 36 வயதான மெஸ்ஸி 2009இல் தனது முதல் Ballon d’Or பரிசை வென்றார். இதன்மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோவைவிட எண்ணிக்கையில் மூன்று பரிசுகளுடன் மெஸ்ஸி முன்னிலையில் உள்ளார். நார்வேயின் எர்லிங் ஹாலண்ட் மற்றும் பிரான்ஸ் கால்பந்து வீரர் கைலியன் எம்பாப்பே ஆகியோர் பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தனர்.

4. 2022ஆம் ஆண்டில் ஏற்றுமதி நடவடிக்கைகளால் இந்திய உழவர்கள் $169 பில்லியன் அளவுக்கு மறைமுக வரியை எதிர்கொண்டதாக அறிக்கையொன்றை வெளியிட்ட அமைப்பு எது?

அ. NABARD

ஆ. OECD 🗹

இ. IMF

ஈ. உலக வங்கி

  • கடந்த 2022ஆம் ஆண்டில், இந்திய உழவர்கள் $169 பில்லியன் மறைமுக வரியைச் செலுத்தியுள்ளனர் என்பதை பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (OECD) எடுத்துக்கூறியுள்ளது. நுகர்வோருக்கு விலையை நிலைப்படுத்தும் முயற்சியில் கோதுமை மற்றும் அரிசி உள்ளிட்ட பல்வேறு பொருட்களின்மீது விதிக்கப்பட்ட ஏற்றுமதி தடைகள், வரிகளின் விளைவாக இவ்வரி உருவாகியுள்ளது. இந்நடவடிக்கைகளின் விளைவாக, கடந்த 2022ஆம் ஆண்டில் உழவர்களுக்கான ஒட்டுமொத்த சந்தை விலை ஆதரவு எதிர்மறையாக மாறியது.

5. தெருநாய்கள் முழுவதற்கும் வெற்றிகரமாக கருத்தடை செய்து தடுப்பூசி செலுத்திய முதல் நாடு எது?

அ. நேபாளம்

ஆ. இந்தோனேசியா

இ. பூடான் 🗹

ஈ. தாய்லாந்து

  • பூடான் தனது நாட்டிலுள்ள அனைத்து தெருநாய்களுக்கும் வெற்றிகரமாக கருத்தடைசெய்து அவற்றுக்கு தடுப்பூசி செலுத்திய உலகின் முதல் நாடாக மாறியுள்ளது. தேசிய நாய்கள் எண்ணிக்கை மேலாண்மை மற்றும் வெறிநாய்க் கடி நோய் கட்டுப்பாட்டுத் திட்டம் என அழைக்கப்படும் 14 வருட நாய் எண்ணிக்கை கட்டுப்பாட்டு முன்னெடுப்பைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது. இது தொடக்கப்பட்டதிலிருந்து மொத்தம் 150,000-க்கும் மேற்பட்ட தெருநாய்கட்கு திறம்பட கருத்தடை செய்து தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

6. லூசி விண்கலமானது கீழ்காணும் எந்த வான்பொருளைக் கண்காணிப்பதற்காக NASAஆல் ஏவப்பட்டுள்ளது?

அ. திங்கள்

ஆ. வியாழன்

இ. சிறுகோள்கள் 🗹

ஈ. விண்கற்கள்

  • லூசி என்பது எட்டு வெவ்வேறு சிறுகோள்களை ஆய்வு செய்வதற்கான NASAஇன் பன்னிரண்டு ஆண்டுகால ஆய்வுத் திட்டமாகும். லூசி விண்கலம் ‘டிங்கினேஷ்’ என்ற சிறிய சிறுகோளுக்கு 430 கிமீட்டருக்கு அருகே வந்தது. 1 கிலோமீட்டருக்கும் குறைவான அகலம் கொண்ட, ‘டிங்கினேஷ்’ பூமியிலிருந்து தொலைநோக்கிகளால் கூட அறிய முடியாத தொலைவில் உள்ளது. லூசி அளித்த முதல் படங்களின் அடிப்படையில், ‘டிங்கினேஷ்’ உண்மையில் ஓர் இருமை இணையாகும். இது அகலத்தில் தோராயமாக 790 மீட்டர் என்றும், உயரத்தில் 220 மீட்டர் அளவு என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

7. கனிமீடு என்பது கீழ்காணும் எந்தக் கோளின் மிகப்பெரிய நிலவாகும்?

அ. வியாழன் 🗹

ஆ. சனி

இ. செவ்வாய்

ஈ. புதன்

  • NASAஇன் ஜூனோ திட்டமானது வியாழனின் மிகப்பெரிய நிலவான கனிமீடின் மேற்பரப்பில் தாது உப்புகள் மற்றும் கரிம சேர்மங்களைக் கண்டறிந்து குறிப்பிடத்தக்க சாதனையை புரிந்துள்ளது. இந்த முக்கியமான தரவு Jovian Infra-Red Auroral Mapper (JIRAM) என்ற நிறமாலையைப் பயன்படுத்தி சேகரிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்புகள் கனிமீடின் தோற்றம் மற்றும் அதன் ஆழமான கடலின் கலவை பற்றிய மிகவும் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கும்.

8. மாநில ஆற்றல் திறன் செயல்திட்டத்தை வெளியிட்ட மாநிலம் எது?

அ. கேரளா 🗹

ஆ. கோவா

இ. மேற்கு வங்காளம்

ஈ. அஸ்ஸாம்

  • கேரள மாநிலத்துக்கான வரைவு மாநில ஆற்றல் திறன் செயல்திட்டம், 2030ஆம் ஆண்டிற்குள் கணிசமான ஆற்றல் சேமிப்பை அடைவதற்கான சாத்தியக்கூறுகளை கேரள மாநிலம் கொண்டுள்ளது என்று தெரிவிக்கிறது. மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பது, பசுமைக் கட்டிடங்களை ஊக்குவிப்பது மற்றும் ஆற்றல் செயல்திறனை அதிகரிப்பதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகள்மூலம் இதை நிறைவேற்ற முடியும் என அது எதிர்ப்பார்க்கிறது.

9. தனியார் துறைக்கான நிகர-சுழிய மாறுதல் சாசனத்தை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. UNEP

ஆ. FAO

இ. COP-28 🗹

ஈ. NITI ஆயோக்

  • COP-28இன் தலைமை ‘நிகர-சுழிய மாறுதல் சாசனம்: தனியார் துறைக்கான பொறுப்புக்கூறல் அணிதிரட்டலை’ அறிமுகப்படுத்தியது. இது காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் தனியார் துறையின் முக்கியப் பங்கை அங்கீகரிக்கிறது. அடுத்த ஏழு ஆண்டுகளில் உமிழ்வை 43% அளவுக்குக் குறைக்க கூட்டு அணுகுமுறைக்கு COP28 தலைமை அழைப்பு விடுத்துள்ளது. COP28 ஆனது நவ.30 முதல் டிச.12 வரை துபாயில் நடைபெறவுள்ளது.

10. கல்விசார் உறவுகளை வலுப்படுத்துவதற்காக கீழ்காணும் எந்த வளைகுடா நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது?

அ. ஓமன்

ஆ. பஹ்ரைன்

இ. ஐக்கிய அரபு அமீரகம் 🗹

ஈ. சவூதி அரேபியா

  • அபுதாபியில், இந்தியாவின் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் தர்மேந்திர பிரதானும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதிநிதியும் ஓர் ஒருங்கிணைந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டனர். இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் இருநாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள கல்வி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதாகும். இது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒன்று திரட்டலை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்மூலம் கல்வித்துறையில் ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும்.

11. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, எந்த நாட்டுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை இந்தியா மீண்டும் தொடங்கியுள்ளது?

அ. இலங்கை 🗹

ஆ. இந்தோனேசியா

இ. சிங்கப்பூர்

ஈ. மலேசியா

  • ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு இந்தியாவும் இலங்கையும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கியுள்ளன. இருநாடுகளுக்குமிடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புதுப்பிக்கப்பட்ட முயற்சிகளை சுட்டிக்காட்டும் வகையில், 12ஆவது சுற்று பேச்சுவார்த்தைகள் அண்மையில் இலங்கையில் நடைபெற்றன.

12. 2023ஆம் ஆண்டில் இந்தியா-அமெரிக்கா 2+2 சந்திப்பு நடைபெறும் நகரம் எது?

அ. புது தில்லி 🗹

ஆ. சென்னை

இ. நியூயார்க்

ஈ. சிகாகோ

  • இந்தியா-அமெரிக்கா 2+2 சந்திப்பானது 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் புது தில்லியில் நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கு எதிரான கனடாவின் குற்றச்சாட்டுகள் குறித்த கருத்துவேறுபாடுகளை இந்தச் சந்திப்பு களையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தியா-அமெரிக்கா 2+2 அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் ஆண்டனி ஜே பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு செயலர் லாயிட் ஜே ஆஸ்டின் ஆகியோர் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளனர். வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் ஆகியோர் வருகை தரும் அமெரிக்க அமைச்சரவை அமைச்சர்களுக்கு விருந்தளிக்கின்றனர்.

13. அண்மையில் வெளியான, ‘பிளெட்ச்லி பிரகடனத்துடன்’ தொடர்புடைய துறை எது?

அ. கிரிப்டோகரன்சி

ஆ. செயற்கை நுண்ணறிவு 🗹

இ. பொருளாதாரம்

ஈ. பருவநிலை மாற்றம்

  • இங்கிலாந்தில் நடந்த கூட்டத்தில் இந்தியாவும் பிற இருபத்தேழு நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு தொடர்பான உலகின் முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவுடன் தொடர்புடைய இடர்களை மதிப்பிடுவதற்கு ஒன்றிணைந்து செயல்பட இது உறுதியளிக்கிறது. பிளெட்ச்லி பூங்காவில் உள்ள இங்கிலாந்தின் இரண்டாம் உலகப்போரின் குறியீட்டு உடைப்பு மையத்தில் இரண்டு நாள் ‘AI பாதுகாப்பு உச்சி மாநாடு 2023’ இன் போது கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் பிளெட்ச்லி பிரகடனம் என்று அழைக்கப்படும் என்று இங்கிலாந்து அரசு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

14. நடப்பு 2023 அக்டோபரில் இந்தியாவின் சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின் (GST) வசூல் எவ்வளவு?

அ. ரூ.1.65 இலட்சம் கோடி

ஆ. ரூ.1.72 இலட்சம் கோடி 🗹

இ. ரூ.1.82 இலட்சம் கோடி

ஈ. ரூ.1.92 இலட்சம் கோடி

  • 2023 அக்டோபரில் இந்தியாவின் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (GST) வசூல் 13.4% அதிகரித்து `1,72,003 கோடியாக வசூளாகியுள்ளது. இறக்குமதியில் ஏற்பட்ட மீள் எழுச்சியால் இந்த வளர்ச்சி காணப்பட்டுள்ளது. 2023 அக்டோபருக்கான GST வருவாய் வசூல், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, 2023 ஏப்ரலுக்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தில் உள்ளது.

15. கேரளம் மற்றும் கர்நாடகாவிற்குப் பிறகு உண்மைச் சரிபார்ப்புப் பிரிவை (Fact-Checking Unit) நிறுவியுள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ. தமிழ்நாடு 🗹

ஆ. ஒடிசா

இ. பஞ்சாப்

ஈ. புது தில்லி

  • தவறான தகவல், வெறுப்புப்பேச்சு மற்றும் போலிச்செய்திகள் பரப்புவதைத் தடுக்கும் நடவடிக்கையாக உண்மைச் சரிபார்ப்புப் பிரிவை நிறுவ தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அரசாங்க உத்தரவின்படி, இந்தப் பிரிவு 80 பணியாளர்களைக் கொண்டிருக்கும். இந்தக் குழுவானது அனைத்து ஊடக தளங்களிலும் தமிழ்நாடு அரசு, அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தொடர்பாக வெளிவரக்கூடிய தவறான மற்றும் போலிச்செய்திகளை கண்டறியும் என இதுகுறித்து வெளியான அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்புக் குழுவின் திட்ட இயக்குநராக ஐயன் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 40% குறைவு!

123 ஆண்டுகளில் 9ஆவது முறையாக அக்டோபரில் வடகிழக்குப்பருவமழை இயல்பைவிட 40% குறைவாகப் பெய்துள்ளது. அக்.1 முதல் நவ.3 வரை மொத்தம் 116.9 மிமீ அதாவது 12 செமீ பதிவாகியுள்ளது. இயல்பு மழையின் அளவு 193.7 (மிமீ) இயல்பிலிருந்து வேறுபாடு 40 சதவீதம் ஆகும்.

2. சுற்றுலாத்துறையில் `20,000 கோடி முதலீட்டை ஈர்க்க நடவடிக்கை.

சுற்றுலாத்துறையில் `20,000 கோடி முதலீட்டை ஈர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சுற்றுலாத்துறை மற்றும் அதன் துணைத் தொழில்கள்மூலம் தமிழ்நாட்டில் 25 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் மேலும், `20,000 கோடி முதலீட்டை ஈர்க்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

Tnpsc Current Affairs 2023 in Tamil & English Monthly Pdf files Download Quiz Online Test

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!