TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 5th October 2023

1. ‘உலகளாவிய புத்தாக்கக் குறியீடு – 2023’இல் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?

அ. 40 🗹

ஆ. 50

இ. 60

ஈ. 80

  • உலக அறிவுசார் சொத்து அமைப்பானது 2023ஆம் ஆண்டுக்கான உலகளாவிய புத்தாக்கக் குறியீட்டை சமீபத்தில் வெளியிட்டது. 132 நாடுகளில் இந்தியா இந்தக் குறியீட்டில் 40ஆவது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் 81ஆவது இடத்திலிருந்த இந்தியா தற்போது 2023ஆம் ஆண்டில் 40ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

2. ‘CRIIIO 4 GOOD தொகுதிகளை’ அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சகம் எது?

அ. MSME அமைச்சகம்

ஆ. கல்வி அமைச்சகம் 🗹

இ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ. வெளியுறவு அமைச்சகம்

  • மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘CRIIIO 4 GOOD’ஐ அறிமுகம் செய்துவைத்தார்; இது பெண்கள் மற்றும் சிறுவர்களிடையே பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய ஆன்லைன் வாழ்க்கை திறன் கற்றல் தொகுதிகளை உள்ளடக்கியதாகும். பன்னாட்டு கிரிக்கெட் அவை, UNICEF மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஆகியவற்றுடன் இணைந்து ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த முன்னெடுப்பு தொடக்கி வைக்கப்பட்டது.

3. “வல்கன் 20-20” எனப்படும் உலகின் மிக ஆற்றல்வாய்ந்த லேசரை உருவாக்கும் திட்டத்தை மேற்கொள்கிற நாடு எது?

அ. இந்தியா

ஆ. ஐக்கிய இராஜ்ஜியம் 🗹

இ. பாரிஸ்

ஈ. ரோம்

  • UK அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் கவுன்சிலின் £85 மில்லியன் முதலீட்டில், “வல்கன் 20-20” என்று அழைக்கப்படும் உலகின் மிகவும் ஆற்றல்வாய்ந்த லேசரை உருவாக்குவதற்கான திட்டத்தை UK மேற்கொண்டு வருகிறது. சூரியனைவிட மில்லியன் பில்லியன் மடங்கு பிரகாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த லேசர், தூய ஆற்றல் மற்றும் புற்றுநோய் சிகிச்சை உட்பட பல்வேறு அறிவியல் துறைகளில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4. பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் (ISS) கட்டுப்படுத்தப்பட்ட தொகுதியை பூமியுடன் மீண்டும் ஒருங்கிணைப் -பதற்கான $1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான திட்டத்தை தொடங்கியுள்ள நாடு எது?

அ. ரஷ்யா

ஆ. சீனா

இ. அமெரிக்கா 🗹

ஈ. இந்தியா

  • பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் கட்டுப்படுத்தப்பட்ட தொகுதியை மீண்டும் பூமியுடன் ஒருங்கிணைப்பதற்கான $1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான திட்டத்தை நாசா அண்மையில் வெளியிட்டது. US Deorbit Vehicle (USDV) எனப்படும் ஒரு சிறப்பு விண்கலத்துடன் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படும்.

5. ‘DXN’ என்பது கீழ்காணும் எந்த இந்திய விமான நிலையத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள குறியீடாகும்?

அ. நொய்டா விமான நிலையம் 🗹

ஆ. புரந்தர் விமான நிலையம்

இ. உட்கேலா விமான நிலையம்

ஈ. மோபா விமான நிலையம்

  • பன்னாட்டு வான் போக்குவரத்து சங்கமானது ஜெவாரில் விரைவில் திறக்கப்படவுள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு சர்வதேச மூன்றெழுத்து குறியீட்டை ‘DXN’ ஒதுக்கியுள்ளது. பயணச்சீட்டு முன்பதிவுகள், நுழைவுச் சீட்டுகள் மற்றும் பிற ஆவணங்களில் இந்தக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. 2024 செப்டம்பர் மாத காலக்கெடுவிற்கு முன்னதாக இவ்விமான நிலையம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6. முன்னேற விழையும் தொகுதிகளுக்காக தொடங்கப்பட்டுள்ள ஒருவாரகால நீண்ட முன்னெடுப்பின் பெயரென்ன?

அ. சங்கல்ப் சப்தா 🗹

ஆ. ஆத்மநிர்பர் சப்தா

இ. விகாஸ் சப்தா

ஈ. பாரத் சப்தா

  • முன்னேற விழையும் தொகுதிகளுக்கான, ‘சங்கல்ப் சப்தா’ என்ற சிறப்பு ஒருவாரகால முயற்சியை பிரதமர் தொடக்கி வைத்தார். ‘சங்கல்ப் சப்தா’ ஆனது நாடு முழுவதும் உள்ள 329 மாவட்டங்களில் அமைந்துள்ள அனைத்து 500 முன்னேற விழையும் தொகுதிகளிலும் கடைப்பிடிக்கப்படும். இந்நிகழ்வின்போது முன்னேற விழையும் மாவட்டங்கள் நிகழ்ச்சித்திட்டத்தின் 5ஆம் ஆண்டு நிகழ்வும் நடைபெற்றது.

7. சரப்ஜோத் சிங், அர்ஜுன் சிங் சீமா மற்றும் ஷிவா நர்வால் ஆகியோருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. குத்துச்சண்டை

ஆ. மல்யுத்தம்

இ. துப்பாக்கிச் சுடுதல் 🗹

ஈ. பூப்பந்து

  • ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 10 மீட்டர் ‘ஏர் பிஸ்டல்’ பிரிவில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. சரப்ஜோத் சிங், அர்ஜுன் சிங் சீமா மற்றும் ஷிவா நர்வால் ஆகியோர் அடங்கிய அணி, சீன அணியை வீழ்த்தி, முதலிடத்தைப் பிடித்தது.

8. கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின்கீழ அதன் 95,767 கிராமங்களிலும் 100% ODF+ என்ற நிலையை அடைந்த மாநிலம் எது?

அ. குஜராத்

ஆ. பீகார்

இ. மேற்கு வங்காளம்

ஈ. உத்தர பிரதேசம் 🗹

  • கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின்கீழ அதன் 95,767 கிராமங்களிலும் 100% ODF என்ற நிலையை உத்தர பிரதே மாநிலம் அடைந்துள்ளது. அதன் 95,767 கிராமங்களும் தற்போது திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை அமைப்புகளை கொண்டு ODF+ தரத்தில் உள்ளன. கடந்த ஒன்பது மாதங்களில் 80,000க்கும் மேற்பட்ட கிராமங்கள் ODF+ தரத்தைப் பெற்றுள்ளன. நாடுதழுவிய, ‘ஸ்வச்சதா ஹி சேவா’ இயக்கத்தில் அம்மாநிலத்தின் 88 லட்சம் மக்கள் பங்கேற்றனர்.

9. எந்த சர்வதேச திரைப்பட விழாவிற்கு, “பட்டுப்பாதையின் முத்து” என்று பெயரிடப்பட்டுள்ளது?

அ. பெர்லின் சர்வதேச திரைப்பட விழா

ஆ. டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா

இ. தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட விழா 🗹

ஈ. வெனிஸ் சர்வதேச திரைப்பட விழா

  • உஸ்பெகிஸ்தானின் தலைநகரமான தாஷ்கண்டில் “Pearl of The Silk Road” என்ற தலைப்பில் தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. இந்த விழா முதன் முதலில் கடந்த 1968ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. TIFFESTஇல் “இந்தியாவின் ஆக்கப்பூர்வமான பொருளாதாரத்தைக் காட்சிப்படுத்தல்” என்ற கருப்பொருளில் இந்தியா பங்கேற்கும்.

10. இந்தியாவில், ‘பசுமைப்புரட்சியின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் யார்?

அ. வர்கீஸ் குரியன்

ஆ. M S சுவாமிநாதன் 🗹

இ. தயான் சந்த்

ஈ. விக்ரம் சாராபாய்

  • புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானி M S சுவாமிநாதன் அண்மையில் காலமானார். அவர் 1967இல் ‘பத்மஸ்ரீ’, 1971இல் சமூகத்தலைமைக்கான ‘இராமன் மகசேசே’, 1972இல் ‘பத்ம பூஷன்’ மற்றும் 1989இல் ‘பத்ம விபூஷன்’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். ‘பசுமைப்புரட்சி’த் திட்டத்தில் அவரது பங்கு அளப்பறியது. வேதி-உயிரியல் தொழில்நுட்பத்தின்மூலம் கோதுமை மற்றும் அரிசி உற்பத்தியில் முன்னேற்றத்தை கொண்டு வந்தார்.

11. இந்திய மொழிகளைக் கொண்டாடும் 75 நாள் நிகழ்ச்சியான ‘பாரதிய பாஷா உத்சவ்’ கீழ்காணும் எந்த நகரத்தில் தொடங்கப்பட்டுள்ளது?

அ. சென்னை

ஆ. லக்னோ 🗹

இ. கொச்சி

ஈ. வாரணாசி

  • லக்னோவில் இந்திய மொழிகளைக் கொண்டாடும் வகையில் 75 நாட்கள் நடைபெறும் ‘பாரதிய பாஷா உத்சவ்’ நிகழ்ச்சி தொடங்கியது. ‘பத்மஸ்ரீ’ விருது பெற்றவர்களும் பல்வேறு இந்திய மொழிகளின் பிரதிநிதிகளும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இவ்விழா செப்.28 முதல் டிசம்பர் 11 வரை கொண்டாடப்படும். புகழ்மிகு தமிழ்க்கவி சுப்பிரமணியம் பாரதியின் பிறந்த நாளான டிசம்பர் 11 இந்திய மொழிகள் நாளாகக் கொண்டாடப்படும்.

12. சமீபத்திய தரவுகளின்படி, வன உரிமைச் சட்டத்தின்கீழ் பழங்குடியினர் சமர்ப்பித்த நில உரிமைகோரல்களில் எத்தனை சதவீதத்தை மாநிலங்கள் நிராகரித்தன?

அ. 10%

ஆ. 20%

இ. 30%

ஈ. 40% 🗹

  • வன உரிமைச் சட்டத்தின்கீழ் பழங்குடியின சமூகத்தினர் சமர்ப்பித்த கிட்டத்தட்ட 40% நில உரிமைகோரல்களை மாநிலங்கள் நிராகரித்துள்ளன. இவற்றில் உத்தரகண்ட், கர்நாடகா, உத்தரபிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை அதிக நிராகரிப்பு விகிதங்களைக் கொண்டுள்ளன. உத்தரகண்ட் 97% பழங்குடியினரின் கோரிக்கைகளுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளது. பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி, மொத்தம் 45,54,603 கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

13. “கால்நடை மற்றும் அரிசி அமைப்புகளில் மீத்தேன் உமிழவுகள்” என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. NABARD

ஆ. FAO 🗹

இ. UNEP

ஈ. UNFCCC

  • “Methane emissions in Livestock and Rice Systems: Sources, Quantification, Mitigation and Metrics” என்ற அறிக்கை அண்மையில் FAOஆல் வெளியிடப்பட்டது. மனித நடவடிக்கைகளால் ஏற்படும் மீத்தேன் உமிழ்வுகளில் தோராயமாக 32%, அசைபோடும் கால்நடைகளின் நுண்ணுயிர் நொதித்தல் மற்றும் உர அமைப்புகளின் நிர்வாகத்தின்போது நிகழும் நுண்ணுயிர் செயல்முறைகளிலிருந்து உருவாகிறது என்பதை அவ்வறிக்கை வெளிப்படுத்தியது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மருத்துவம்: அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு.

கரோனா பாதிப்புக்கு எதிராக திறன்மிக்க ‘mRNA’ தடுப்பூசியை உருவாக்க உதவிய பேராசிரியர் கேத்தலின் கரிக்கோ மற்றும் அவருடன் ஆய்வில் ஈடுபட்ட ட்ரூ வைஸ்மன் ஆகிய இருவர் இவ்வாண்டின் (2023) மருத்துவத் துறைக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர். மருத்துவத்துக்காக நோபல் பரிசு பெறும் 13ஆவது பெண் கேத்தலின் கரிக்கோ என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1901ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டுவரும் நோபல் பரிசை நிறுவியவர் ஸ்வீடனைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல். வேதியியல், பொறியியலில் நிபுணரான இவர், டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்தார். தனது கண்டுபிடிப்பின்மூலம் பெரும் செல்வந்தரான இவர் அறிவியல் கண்டுபிடிப்புகளை கெளரவிக்கும் வகையில் நோபல் பரிசை நிறுவினார். அவரது நினைவுநாளான டிச.10ஆம் தேதி பரிசு வழங்கப்படும்.

2. வாழ்க்கைக்குப் பிறகும்

செப்.23, உறுப்புதான நாளாக தமிழ்நாடு அரசால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உறுப்புதானமளிப்பவரின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்ற மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு செய்தது உறுப்புதானம் பற்றிய விழிப்புணர்வை மேலும் அதிகரிக்கும்.

உலகளாவிய தரவுகளின்படி உறுப்புதானம், உறுப்பு மாற்று சிகிச்சையில் 2022ஆம் ஆண்டின்படி இந்தியா 3ஆவது இடத்தில் இருக்கிறது. இறப்புக்குப் பிந்தைய உறுப்பு தான கொடையாளர்களில் (2022ஆம் ஆண்டு) 194 பேருடன் தெலங்கானா முதலிடத்திலும், 156 பேருடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும், 151 பேருடன் கர்நாடகம் மூன்றாம் இடத்திலும், 148 பேருடன் குஜராத் நான்காம் இடத்திலும், 108 பேருடன் மகாராஷ்டிரம் ஐந்தாம் இடத்திலும் உள்ளன.

உயிருடன் இருக்கும்போது உறுப்புதானம் அளித்த கொடையாளர்களில் 3,422 பேருடன் தில்லி தேசிய தலைநகர் முதலிடத்திலும், 1,690 பேருடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும், 1,423 பேருடன் கேரளம் மூன்றாம் இடத்திலும், 1,222 பேருடன் மகாராஷ்டிரம் நான்காம் இடத்திலும், 1,059 பேருடன் மேற்கு வங்கம் ஐந்தாம் இடத்திலும் உள்ளன. இறப்புக்குப்பின் தானமாகப் பெறப்பட்டு உறுப்புமாற்று சிகிச்சை மேற்கொண்டதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

இதயம், நுரையீரலை தானமாகப் பெறப்பட்ட 4 முதல் 6 மணி நேரத்திலும், கல்லீரலை 24 மணி நேரத்திலும், விழி வெண்படலத்தை 14 நாளிலும் மாற்று அறுவை சிகிச்சைமூலம் பயனாளர்களுக்குப் பொருத்த வேண்டும்.

3. அமெரிக்காவில் மிகவுயரமான அம்பேத்கர் சிலை அக்.14இல் திறப்பு.

இந்தியாவுக்கு வெளியே மிகவுயரமான 19 அடி அம்பேத்கர் சிலை அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் வரும் அக்.14ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. மகாராட்டிர மாநிலத்தில் கடந்த 1891ஆம் ஆண்டு பிறந்த B R அம்பேத்கர், இந்திய அரசியல் நிர்ணய சபையில் வரைவுக் குழுத் தலைவராக இருந்து அரசமைப்பை வடிவமைப்பத்தில் முக்கிய பங்காற்றினார். பண்டித ஜவஹர்லால் நேருவின் முதல் அமைச்சரவையில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

அம்பேத்கரின் நினைவைப் போற்றும் வகையில் அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தின் அக்கோகீக் நகரில் 13 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் அம்பேக்தர் சர்வதேச மையத்தில் ‘சமத்துவத்தின் சிலை’ எனப் பெயரிடப்பட்ட 19 அடி முழுஉருவ அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டுள்ளது. அம்பேத்கர் புத்த மதத்தில் தன்னை இணைத்துக்கொண்ட நாளான அக்.14ஆம் தேதி இச்சிலை திறக்கப்படவுள்ளது. இச்சிலையை பிரபல சிற்பி ராம் சுதார் வடிவமைத்துள்ளார்.

4. இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3% ஆக இருக்கும்: உலக வங்கி கணிப்பு

நடப்பு நிதியாண்டில் (2023-24) இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது. புதிய முதலீடுகள் மற்றும் உள்நாட்டில் பொருள்கள், சேவைகளுக்கான தேவை அதிகரிப்பு ஆகியவற்றின் உதவியுடன் இவ்வளர்ச்சியை இந்தியா எட்டும் என்றும் தெற்காசியாவின் பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக இருக்கும் என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

5. இயற்பியல்: எலெக்ட்ரான் ஆய்வுக்கு புதிய வழிமுறை மூன்று விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்குள் இருக்கும் எலெக்ட்ரான்களின் இயக்கத்தை ஆராய்வதற்காக புதிய வழி முறையை உருவாக்கிய மூன்று அறிவியலாளர்களுக்கு நடப்பாண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஒஹையோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் பியர் அகஸ்டினி, ஜெர்மனியின் மியூனிக் நகரில் உள்ள லுட்விக் மேக்ஸ்மிலன் பல்கலைக்கழகத்தின் ஃபெரென்ஸ் க்ரெளஸ், ஸ்வீடனின் லுண்ட் பல்கலைக்கழகத்தின் ஆன் லூலியேர் ஆகியோர் இப்பரிசை வென்றுள்ளனர். இதில் ஆன் லூலியேர், இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறும் 5ஆவது பெண் ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!