TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 9th December 2023

1. எந்த மாநிலம்/யூனியன் பிரதேசத்திற்கான முதல் நகர்ப்புற வெள்ளத்தணிப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது?

அ. தமிழ்நாடு 🗹

ஆ. ஒடிசா

இ. மேற்கு வங்காளம்

ஈ. ஆந்திர பிரதேசம்

  • மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியபடி, சென்னை வடிகால் திட்டத்திற்கான, ‘ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மை’ நடவடிக்கைகளுக்காக `561.29 கோடி மதிப்பிலான முதல் நகர்ப்புற வெள்ளத்தணிப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நகர்ப்புற வெள்ளத்தணிப்பு முயற்சிகளில் இது முதன்மையானது ஆகும். நகர்ப்புற வெள்ள மேலாண்மைக்கான பரந்த கட்டமைப்பை உருவாக்குவதற்கு இது உதவும்.

2. Aerial Delivery Research and Development Establishment (ADRDE) என்பது எதன் கீழ் இயங்கும் ஒரு பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வகமாகும்?

அ. ISRO

ஆ. DRDO 🗹

இ. IISc பெங்களூரு

ஈ. IIT மெட்ராஸ்

  • இந்திய வான்படையின் போக்குவரவு விமானமான C-17, அதிகபட்சமாக 16 டன் எடையைச் சுமக்கும் திறனுடைய உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கனரக தளமான ஆக்ராவில் உள்ள இராணுவ மண்டலத்தில் பொருட்களை தரையிறக்கியது. 16 டன் சுமைதிறன்கொண்ட 24 அடிக்கு எட்டடி பரிமாணம் கொண்ட இத்தளத்தில் இந்திய வான் படையின் விமானமொன்று சரக்குகளைத் தரையிறக்குவது இதுவே முதன்முறையாகும்.
  • இந்திய விமானப் படையின் C17 ஆனது, ADRDEஆல் உருவாக்கப்பட்ட வகை-V தளத்தில் தரையிறங்குவது இது முதல்முறையாகும். Aerial Delivery Research and Development Establishment (ADRDE) என்பது DRDOஇன்கீழ் இயங்கும் ஒரு பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வகமாகும்.

3. ஆஸ்பிரேஷனல் பிளாக்ஸ் திட்டத்தின் முதல் டெல்டா தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த திரியாணி பிளாக் அமைந்துள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. தெலுங்கானா 🗹

இ. ஒடிசா

ஈ. ஜார்கண்ட்

  • தெலுங்கானா மாநிலத்தின் கொமரம் பீம் ஆசிபாபாத் மாவட்டத்தின் திரியாணி தொகுதி NITI ஆயோக் அறிவித்த முன்னேற விழையும் தொகுதிகள் திட்டத்தின் முதல் டெல்டா தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது. இரண்டாவது இடத்தை உத்தரபிரதேச மாநிலத்தின் கௌசாம்பி மாவட்டத்தின் கௌசாம்பி தொகுதி பெற்றது. 2023 ஜூனில், முதன்மை செயல்திறன் குறிகாட்டிகளில் அடைந்த முன்னேற்றம் மற்றும் தொகுதிகளின் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தொகுதிகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

4. அண்மையில், இந்தியாவால் ஏவப்பட்ட குறுகிய தூரம் செல்லும் ஏவுகணையின் பெயர் என்ன?

அ. அக்னி-1 🗹

ஆ. அஸ்ட்ரா-1

இ. அவனி-1

ஈ. அஜ்வா-1

  • ஒடிசா மாநிலத்தின் அப்துல் கலாம் தீவிலிருந்து குறுகிய தூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, ‘அக்னி-1’ வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ‘அக்னி-1’ ஏவுகணை மிகவும் துல்லியமான ஏவுகணையாகும். இது மிகவும் துல்லியமாக இலக்குகளைத் தாக்கும் வல்லமைகொண்டது. இந்தச் சோதனையின்போது அனைத்து செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அளவுருக்கள் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், புதிய தலைமுறை எறிகணையான, ‘அக்னி பிரைம்’ஐ இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.

5. IFCON-2023 என்ற சர்வதேச உணவு மாநாட்டை நடத்தும் நகரம் எது?

அ. சென்னை

ஆ. மைசூரு 🗹

இ. கொல்கத்தா

ஈ. வாரணாசி

  • CSIR-CFTRI மற்றும் உணவு அறிவியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் (இந்தியா) ஆகியவை இணைந்து மூன்று நாட்கள் நடத்தும் 9ஆவது சர்வதேச உணவு மாநாடு, IFCON 2023, மைசூருவில் நடைபெறும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்நிகழ்ச்சியில், மாணவர்கள், தொழிலதிபர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பலர் உட்பட 3,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். சர்வதேச ஆராய்ச்சி மற்றும் மாநாடுகள் வெளிநாடுகளில் நடைபெறும் நிலையில், உணவு மாநாடு இந்தியாவில் நடைபெறுகிறது.

6. ஐநா பாதுகாப்பு அவையில் எத்தனை நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன?

அ. 3

ஆ. 5 🗹

இ. 7

ஈ. 10

  • காசாவில் மனிதாபிமான அடிப்படையில் போரைத் தடுக்க உதவுமாறு ஐநா பாதுகாப்பு அவைத் தலைவரிடம் ஐநா தலைவர் வலியுறுத்தினார். UNSC ஆனது அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்சு, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய ஐந்து நிரந்தர உறுப்பினர்களையும் குறிப்பிட்ட காலத்திற்கு நியமிக்கப்பட்ட 10 நிரந்தரமற்ற உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. சுழற்சி அடிப்படையில், இந்த 15 நாடுகளில் ஒவ்வொன்றும் ஒரு மாதம் அவ்வவையின் தலைமைப் பதவியை வகிக்கின்றன. ஈக்வடார், 2023 டிசம்பருக்கான தலைமைப் பொறுப்பில் உள்ளது. ஐநா சாசனத்தின் 99ஆவது பிரிவு ஐக்கிய நாடுகள் அவையின் ஸ்தாபக ஆவணமாகும். அதன் மூலம் வழங்கப்படும் அதிகாரங்களின் அடிப்படையில், பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு ஐநா தீர்வுகாண்கிறது.

7. ‘இரப்பர் (ஊக்குவிப்பு மற்றும் மேம்பாடு) மசோதா, 2023’ உடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ. MSME அமைச்சகம்

ஆ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் 🗹

இ. பணியாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

ஈ. எரிசக்தி அமைச்சகம்

  • வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் இரப்பர் வாரியத்தை மறுசீரமைப்பதற்காக திருத்தப்பட்ட வரைவு ரப்பர் (ஊக்குவிப்பு மற்றும் மேம்பாடு) மசோதா, 2023ஐ வெளியிட்டது. அரசின் வழிகாட்டுதலின் பேரில், இத்திருத்தப்பட்ட வரைவு குறித்து விவாதிக்க இரப்பர் வாரியம் மூன்று அமர்வுகளை நடத்தவுள்ளது. 1947இன் ரப்பர் சட்டத்தை ரத்து செய்ய முயன்ற மத்திய அரசு-இரப்பர் (ஊக்குவிப்பு மற்றும் மேம்பாடு) மசோதா, 2022 ரப்பர் விவசாயிகளிடையே பரவலான எதிர்ப்புகளைக் கிளப்பியது.

8. ‘சாந்திநிகேதன்’ என்பது எந்த மாநிலம்/யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழக நகரமாகும்?

அ. புதுச்சேரி

ஆ. மேற்கு வங்காளம் 🗹

இ. கோவா

ஈ. ஒடிசா

  • மேற்கு வங்காள மாநிலத்தின் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழக நகரமான, ‘சாந்திநிகேதன்’ சமீபத்தில் UNESCOஇன் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. UNESCOஆல் அங்கீகரிக்கப்பட்ட உலகப் பாரம்பரியச் சின்னமாக சாந்திநிகேதன், அவ்விடத்தில் தேவேந்திரநாத் தாகூரால் நிறுவப்பட்ட விஸ்வபாரதியைக் குறிப்பிடுகிறது. தேவேந்திரநாத் தாகூரால் நிறுவப்பட்ட சாந்திநிகேதன் மற்றும் அவரது மகன் இரவீந்திரநாத் தாகூர் நிறுவிய பல்கலைக்கழகம் ஆகியவை UNESCOஇன் உலக பாரம்பரிய அந்தஸ்தைப் பெற்றுள்ளன.

9. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘சுசித்வா தீரம்’ என்ற திட்டம் தொடங்கப்பட்ட மாநிலம் எது?

அ. ஜார்கண்ட்

ஆ. குஜராத்

இ. ஒடிசா

ஈ. கேரளா 🗹

  • கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளை நெகிழி மற்றும் குப்பைகள் இல்லாத வகையில் வைத்திருக்கும் திட்டமான, ‘சுசித்வா தீரம்’ என்ற திட்டத்தை கோழிக்கோடு மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது. ‘மாலினிய முக்த நவகேரளம்’ என்ற திட்டத்தின்கீழ் உள்ளாட்சி நிர்வாகத் துறையின்கீழ் இந்த, ‘சுசித்வா தீரம்’ என்ற இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கோழிக்கோடு வளாகத்தில் உள்ள தன்னார்வலர்கள், தேசிய சேவைத் திட்டம், ஹரிதகர்மா சேனா மற்றும் குடும்பஸ்ரீ உறுப்பினர்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்பர்.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘Impatiens Karuppusamyi’ என்பது சார்ந்த இனம் எது?

அ. மீன்

ஆ. தாவரம் 🗹

இ. பறவை

ஈ. சிலந்தி

  • தமிழ்நாட்டின் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் ஒரு புதிய தாவர இனத்தை இந்திய தாவரவியல் ஆய்வு நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தத் தாவரத்திற்கு, ‘Impatiens Karuppusamyi’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘Impatiens Bicornis’ என்ற இனத்துடன் இந்த இனம் ஒத்துப்போகிறது; ஆனால் சிறிய இலைகள், ஆறு முதல் எட்டுப்பூக்கள் ஆகியவற்றில் அதிலிருந்து இது வேறுபடுகிறது. உலகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட ‘Impatiens’ இனங்கள் உள்ளன, அவற்றில் 280-க்கும் மேற்பட்டவை இந்தியாவில் காணப்படுகின்றன.

11. ‘QS உலக பல்கலைக்கழகத் தரவரிசை: நிலைத்தன்மை 2024’இன்படி, உலகின் மிகவும் நிலையான பல்கலைக்கழகம் எது?

அ. டொராண்டோ பல்கலைக்கழகம் 🗹

ஆ. IISc பெங்களூரு

இ. ஐஐடி மெட்ராஸ்

ஈ. தில்லி பல்கலைக்கழகம்

  • டொராண்டோ பல்கலைக்கழகம் உலகின் மிகவும் நிலையான பல்கலைக்கழகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் (UCB) இரண்டாவது இடத்திலும் மற்றும் மான்செஸ்டர் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளது. உலக அளவில் 220ஆவது இடத்திலுள்ள தில்லி பல்கலைக்கழகம், ‘QS உலக பல்கலைக்கழகத் தரவரிசை: நிலைத்தன்மை 2024’இல் இந்தியப் பல்கலைக் கழகங்களில் முதலிடத்தில் உள்ளது. பட்டியலின் முதல் 300 இடங்களிலுள்ள ஒரே இந்திய நிறுவனம் இதுவாகும். பம்பாய், மெட்ராஸ், கரக்பூர் மற்றும் ரூர்க்கியை சேர்ந்த ஐஐடிகள் முதல் 400 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சூரியனைப் படம்பிடித்த ஆதித்யா L1 விண்கலம்!

ஆதித்யா L1 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள, ‘சூட்’ என்ற ஆய்வுக்கருவிமூலம் சூரியனின் வெளியடுக்குகளை ஆதித்யா L1 விண்கலம் நிழற்படம் எடுத்துள்ளது. மொத்தம் பதினொரு வடிகட்டிகளை பயன்படுத்தி எடுக்கப்பட்ட 12 நிழற்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ‘சோலார் அலட்ரா வைலட் இமேஜிங் டெலஸ்கோப்’ எனப்படும் ‘சூட்’ கருவி, சூரியனின் முதல் இரு அடுக்குகளான போட்டோஸ்பியர் மற்றும் குரோமோஸ்பியரில் இருந்து வெளிவரும் புற-ஊதா கதிர்கள் குறித்தும், அவற்றின் அருகே ஏற்படும் கதிர்வீச்சு மாறுபாடுகள் குறித்தும் ஆய்வுகளை மேற்கொள்ள அனுப்பப்பட்டுள்ளது.

சூரியனை நிழற்படம் எடுத்த ‘சூட்’ கருவியை புனேவில் உள்ள விண்வெளி ஆய்வு, விண்வெளி இயற்பியலுக்கான மையமானது பிற அமைப்புகளுடன் இணைந்து வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது.

2. செயற்கை நுண்ணறிவு கூட்டாண்மை மாநாடு.

தில்லியில் வரும் 12ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரை உலகளாவிய செயற்கை நுண்ணறிவு கூட்டாண்மை மாநாடு நடைபெறவுள்ளது. 2020இல் தொடங்கப்பட்ட உலகளாவிய செயற்கை நுண்ணறிவு கூட்டாண்மை அமைப்பில் 28 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அந்த அமைப்பின் தற்போதைய தலைமைப்பொறுப்பை இந்தியா வகிப்பது குறிப்பிடத்தக்கது.

3. சென்னை பெருவெள்ளம்: திருப்புகழ் அறிக்கை.

சென்னையில் பெரு வெள்ளத்தைத் தடுப்பதற்காக ஓய்வுபெற்ற இஆப அதிகாரி திருப்புகழ் வழங்கிய பரிந்துரைகளால் சென்னையின் சில பகுதிகள் பலனடைந்துள்ளதாக தலைமைச்செயலகம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஏற்பட்டு வரும் பெருவெள்ளத்தைச் சமாளிக்கவும், திறம்பட எதிர்கொள்ளவும், ஓய்வுபெற்ற இஆப அதிகாரி வெ. திருப்புகழ் தலைமையில் ஆலோசனைக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. இந்தக் குழு தனது அறிக்கையை கடந்த ஆண்டு மே மாதம் அரசுக்கு வழங்கியது. மழைநீர் கால்வாய்களைத் தூர்வாரும் பணியானது ஜெர்மனி நாட்டின் வங்கி நிதியுதவியுடன் நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!